Wednesday 1 January 2014

ராசியின் ஆசை

"









பேப்பரிலிருந்து  தலையை
வெளியே எடுத்த  என் கணவர்," இங்கே பார்...எல்லோரும் புது வருடத் தீர்மானம் எடுக்கிறார்களாம் . நாமும்  சில புது வருடத் தீர்மானம்  எடுத்துக் கொள்வோம் " என்று சொல்ல ,

நான் முந்திக் கொண்டு ," இந்த வருடமாவது  டாக்டரிடம் செக்கப்  செய்து  கொள்ள  மறுப்பு சொல்லாமல்  வர வேண்டும் சரியா ?"  என்று அவருக்கு ஆணையிட்டேன்.
அவரோ  என் முன் ஒரு பெரிய லிஸ்ட்  வைத்தார்.

" சரி .நீ சொல்வதை  நான் செய்கிறேன். நான் சொல்வதை  நீ கேட்டால் " என்று அவர் ஆரம்பிக்க  " இவர்   என்ன பெரிதாக  சொல்லி விடப் போகிறார் " என்ற அலட்சியத்தோடு  கவனிக்க  ஆரம்பித்தேன்.

ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போனார்.

" முதலில் , புடவைக் கடைக்குப்  போனால் ஒரே மணி நேரத்தில்  செலக்ஷன்  முடித்து விட வேண்டும் " ( முடிகிற காரியமா அது?...)

அப்புறம்.... என்றேன்.....

" இனிமேல் லேப்டாப்பை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது  நான் மெயில் செக் செய்ய  என் வசம் வேண்டும்  " ( யோசிப்போம்)

பிறகு......

" இனிமேல் சினிமா, சீரியல்  பார்க்கும் போது  உணர்ச்சி வசப்பட்டு அழுவதை நிறுத்த வேண்டும் " என்று அவர் தொடர   நான் பிரேக் போட்டேன்.

"ஸ்டாப்......ஸ்டாப் .... மீதி  தீர்மானங்களை  2015 இல்  பார்த்துக் கொள்ளலாம் "என்று  சொல்லிவிட்டு டைனிங்  டேபிளிற்கு சென்று  சாப்பிட உட்கார்ந்தோம்.

" இன்றைக்கு நன்றாகவே சமைத்திருக்கிறாய் " என்று சர்டிபிகேட் கொடுக்க , அவருக்குப் பிடித்த  முருங்கைக்காய் சாம்பாரும், வெண்டைக்காய் கறியும் . அதனால் தான் எனக்குப் புகழாரம்  என்று நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட்டு முடித்தவுடன்  நேராக லேப்டாப் பக்கம் வந்தேன்.
" பார்த்தியா.....இப்ப தானே சொன்னேன். நான் எப்பொழுது மெயில் செக்  செய்வது? " என்று அவர்  பிடிவாதம்  பிடிக்க, ' கொஞ்ச நேரம் தான்... ' என்று அவரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு , பிரவுசரைத் திறந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ,

" டிங்..டாங் "

கதவைத் திறந்தேன்.

அரக்குக் கலரில் பச்சை நிற பார்டர்  போட்ட மைசூர் சில்க் சாரியில். ஒரு பெண்மணி, கையில்  ஹேண்ட்பாக்,  காதுகளில்  வைரத்தோடு  மின்ன, கைகளில் பவுன் வளையல்கள்  அடுக்காய்  குலுங்க நின்றிருந்தார். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும்  பணத்தின் ' பள  பள '

" யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? " என்றேன்.

" இங்கே ராஜலக்ஷ்மி பரமசிவம் என்பது........."என்று இழுத்தார் 

" ஏன்? நான் தான் ....." என்றேன்.


" ஓ .......நீங்கள் தான் அரட்டை அடிப்பவரா?" 
" நீங்கள்  யார்?  நான் என்ன அரட்டை அடிக்கிறேன்.........ஒன்றும் புரியவில்லையே  " என்று குழப்பத்தோடு ," உள்ளே வாங்க ...உட்காருங்கள் " 

வரவேற்றேன்.

" நான் ராசி. என் கணவர் பேர் விஷ்ணு  " என்று அந்தப் பெண்மணி சொல்லவும் 
மொத்தமாய்  அதிர்ச்சியில் உறைந்தேன்.
 " இதென்ன கலாட்டா? நான் கற்பனையில் உருவாக்கிய  கதாபாத்திரங்கள் பெயரில்  நிஜமாகவே ஒரு  தம்பதியா?  என் போதாத காலம்  ,என் பதிவை வேறு படித்து விட்டு  சண்டைக்கு வந்தார் போல் தெரிகிறார்.
 
கேஸ் போட்டு விடுவாரோ ? ஓய்வு  காலத்தில் கோர்ட் படியேற வேண்டுமோ?என் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்  அவரிடம்," ரொம்பவும் சூடாக இருக்கிறீர்கள். ஏதாவது ஜூஸ் குடிக்கிறீர்களா?  என்று ஐஸ் வைக்க முயற்சித்தேன்.


அந்தப் பெண்மணியோ  , முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு ," எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்  . உட்காருங்கள் ."
என்று சொல்லவும் எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

வக்கீலுக்குக் கொடுக்கும் ஃ பீஸ், மான  நஷ்ட ஈடு  , எல்லாம்  கன ஜோராய் என் முன்னே நாட்டியமாட, என்ன சொல்லப் போகிறாரோ? கவலையுடன் அமர்ந்தேன்.

" ஆமாம். உங்களுக்கு எழுத ஒன்றுமே கிடைக்கவில்லையா? நானும் என் கணவரும் தான் மாட்டினோமா ?" என்று ஆரம்பித்தார்.

" இல்லையே நான் ராசி--விஷ்ணு பற்றி அவ்வப்போது தானே எழுதுகிறேன். அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் என் கற்பனையே! உங்கள் பெயர்  ராசி என்பது, நீங்கள் இப்ப சொல்லித் தான் எனக்குத் தெரியும் " என்று என் நிலைமையை பக்குவமாக சொல்ல  ஆரம்பித்தேன்.

பெண்மணியோ இடை மறித்து, " நான் நம்ப மாட்டேன். எங்கள் வீட்டிற்கு வந்து நடப்பதைப்  பார்த்து எழுதுவது போல் தெரிகிறது . " என்று உஷ்ணமானார்.

" நான் ஒரு நாள் ஜுரத்தில் படுத்தது கூடத் தெரிந்திருக்கிறதே! அன்று என் கணவர் அதான் விஷ்ணு  அவரே அதிசயமாய் தான் அடுக்களைக்குள் நுழைவார். அவரே என் மேல் பரிதாபப்பட்டு  காபி போட முயற்சித்தால் அதைக் கிண்டல் செய்வது போல் ஒரு பதிவு."
 
" பள்ளி படிக்கும் வயதில் சரித்திரத்தில் நான் வீக் என்று தெரிந்து கொண்டு  நக்கலடிக்கிறீர்கள்."


"நான் ஸ்மார்ட் போன் வாங்கி  அதை உபயோகிக்கத தெரியாமல் விழி 
பிதுங்கியது  எப்படித் தான் உங்களுக்கு எட்டியதோ......உடனே ஒரு பதிவு.
அவரும் நானும் சின்ன செல்ல சண்டை போட்டால் அதை  படம் போட்டுக் கதை சொல்லாதது தான் பாக்கி. "


" இதெல்லாம் கூட  போகட்டும். எனக்குப் பாட்டுப் பாட ஆசை, சந்தர்ப்பம் தான் வாய்க்கவில்லை  என்று அவரிடம் நான்  அங்கலாய்த்துக்  கொண்டிருந்ததை 

சூப்பர் சிங்கராகிறேன் என்ற பெயரில்  தாறுமாறாய்  என்னைப்பற்றி எழுதி எதற்கு அவமானப் படுத்துகிறீர்கள் ? "என்று கண் நிறைய நீருடன் கலங்க , எனக்குப்  பார்க்க பாவமாயிருந்தது. 
"தீபாவளிக்கு மைசூர்பாக் செய்தால் ஒரு கிண்டல், விஷ்ணு  என் பிறந்தநாளை  மறந்தது   உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆயிற்று. அதையும்
 காமெடியாக்கி எழுதிவிட்டீர்களே!"
"அதோடு மட்டுமல்லாமல் எல்லாப் பதிவுகளிலும்  விஷ்ணு பாவமாய் என்னிடம்  மாட்டிக் கொண்டாற்  போல் ஒரு தோற்றம் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்."


" நீங்கள் இப்படி எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் நண்பர்கள் வட்டம் இருக்கிறார்களே  அவர்கள் ஒரு படி மேலே போய் விடுகிறார்கள்." விஷ்ணு பாவம்....விஷ்ணு பாவம்...... என்று எழுதி அவருக்கு ஒரு அனுதாபமன்றமே  ஆரம்பித்து விட்டார்கள்.அது போதாதென்று, ஒருவர் தன்  வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்ட .நான் செய்த மைசூர்பாக் ஒரு லோடு  வேண்டும்  என்று சொல்கிறார். இன்னொருவரோ "பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள் விஷ்ணு " என்று கருத்திடுகிறார். என்ன தான் நீங்களும் உங்கள் வாசகர் வட்டமும் என்னைப்பற்றி  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்  என்று புரியவில்லை. " என்று" படபட 1000வாலா " பட்டாசாக  வெடித்து முடித்தவுடன் எனக்கு ராசியின் விருப்பம் என்ன என்று புரிந்து விட்டது.

" ராசி.... கவலையே படாதீர்கள். உங்கள் வருத்தம் எனக்கு விளங்கி விட்டது. இந்தப் புது வருடத்தில்  உங்களைப்பற்றி நான் எழுதப்போவதைப்  படிப்பவர்கள்., உங்களுக்கு ரசிகர் மன்றம்  ஆரம்பிப்பது உறுதி. கவலையை விடுங்கள்..... "என்று சொல்லும் போதே......

" காபி போடுகிறாயா? " குரல் கேட்டது.
என் கணவர் போலிருக்கிறதே. இவ்வளவு நேரம் எங்கே போனார் என்று யோசிக்கும் போதே யாரோ என்னை அசைப்பதை உணர முடிந்தது. 

ஓ .....விரலை லேப்டாப்பில் வைத்ததுக் கொண்டே  சோபாவில் கண்ணசந்திருக்கிறேன். அதில் ராசி கனவு வேறு.  என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது.

'என்ன சிரிக்கிறாய்? பகலிலேயே தூக்கமா? " என்றவரின் கேள்விக்கு பதிலாக          " ஒன்றுமில்லை "சொல்லிக் கொண்டே   காபி போடப் போனேன் .

(ராசிக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும்  ராசி கனவில் வந்தது புத்தாண்டு பதிவுக்கு ஆச்சே )

             உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 




image courtesy-----google.

33 comments:

  1. நீங்கள் உங்கள் கல்லூரி நாட்களில் நகைச் சுவையாக அரட்டை அடிப்பவராக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் பதிவில் இயல்பாக நகைச்சுவை இழைந்தோடுகிறது. மேலும் பதிவின் பெயரும் ’அரட்டை’.
    நன்றி சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் சார்,
      நான் அப்படியெல்லாம் அரட்டை அடித்தவள் அல்ல . நல்ல obedient மாணவி.
      எழுத்தில் தான் அரட்டை . என் அரட்டையை மிகவும் ரசிக்கிறீர்கள் என்று புரிகிறது. மிக்க நன்றி சார்.

      Delete
  2. எங்களைக் கவர்ந்த ராசி விஷ்ணு தம்பதிகள்
    தங்கள் பிரம்மனைப் பார்க்க வந்ததைப் பகிர்ந்த விதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்

      Delete
  3. கனவைப்பற்றிச் சொல்லி, உங்கள் கணவரின் புத்தாண்டு ஆசைகளைப் புறம் தள்ளி விட்டீர்களே... நியாயமா? :))))))))))))))

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும், சக வாசக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கணவரின் புத்தாண்டு தீர்மானங்கள் எங்கே போய் விடப் போகிறது? அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்.
      உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாழ்க வளமுடன்!..வளர்க நலமுடன்!..
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  6. வருடத்தின் முதல் பதிவே களைகட்டுது. அப்படியே சென்ற ஆண்டின் பதிவுகளை அசைபோட வைத்துவிட்டீர்களே ! சபாஷ் !

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அப்படியே ராசி குடும்பத்திற்கும் இதைச் சொல்லிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா. உங்கள் வாழ்த்துக்களை கண்டிப்பாக ராசியிடம் சொல்கிறேன்.

      Delete
  7. தங்களுக்கும் தங்களின் நண்பர் மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆங்கில வருட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ராஜி! இந்த வருட முதல் பதிவு கலக்கல்! செம காமெடி! (புத்தாண்டு காமெடி என்னை வைத்தா? என்று ராசி திரும்ப வந்துவிட்டால் கஷ்டம். அதனால் மறுபடி தூங்காதீர்கள்! )
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ராசிக்கு ஏற்கனவே ரசிகர் மன்றம் இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரஞ்சனி. . தஊன்காமல் இருக்க வேண்டியது தான் . இல்லையென்றால் இந்தப் பதிவிற்கும் சேர்த்து என்னை கோர்ட் படியேற வைத்து விட்டால் என்ன செய்வது. நீங்கள் சொல்லும் ராசி ரசிகர் மன்ற ஆட்களிடம் அடி வாங்க வேண்டியது தான்.
      நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.

      Delete
  9. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. இனி ராசிக்கே சப்போர்ட் பண்ணிடுவோம்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி ,வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  11. கனவுகளையும் சுவையாகக் கண்டு அதை பதிவிடுட்டு அசத்துகிறீர்கள்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி டாக்டர் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  12. அருமையான பதிவு.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.

      Delete
  13. புத்தாண்டு வாழ்த்துகள். ஹிஹி, புடைவைக்கடைக்குப் போனால் அரை மணி நேரத்தில் செலக்ட் செய்த அனுபவம் நிறையவே உண்டு. :)))) அதோடு கம்பசரியாக மாலை ஏழு மணிக்குள்ளாக லாப்டாப்பை மூடிடுவேன். :))) அப்புறமா ஏதேனும் முக்கிய வேலை இருந்தால் தவிர திறப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாவே வைச்சிருக்கேன். :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா மேடம் உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும். நான் கொஞ்சம் லேட் தான் புடவை செலக்ஷனில் .

      Delete
  14. சினிமா, சீரியல் பார்க்கிறச்சே உணர்ச்சி வசப்பட்டு அழுகை வரும் காட்சிகளில் சிரிக்கும் ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன். :)))) சிவாஜி படம்னா கேட்கவே வேண்டாம். சிப்பு, சிப்பா வரும். :)))))

    ReplyDelete
    Replies
    1. சினிமா , நாடகம் என்றில்லை, டிவியில், யாராவது பரிசு வாங்கினாலோ, கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தாலோ , உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் ஆறாய் பெருகும். இதனால் வீட்டில் செம கிண்டல் செய்வார்கள். அதையெல்லாம் ரசித்து விடுவது வேறு வழி.
      உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  15. ராசி பற்றி எழுதுவதில்லை என்று புத்தாண்டு பிரதிக்ஞை நீங்கள் எடுக்கவில்லையே. அன்றாட நிகழ்வுகளை ராசி விஷ்ணு பெயரில் எழுதும் வாய்ப்பு குறைந்துவிடும். சும்மா, ஒரு தமாஷுக்கு.... என் புத்தாண்டூ வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  16. உங்கள் எழுத்துக்கள் ..... என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடைசி ஓவரில் சரவெடியாய் கிளப்பும் தோனி போன்றவர் நீங்கள்.

    ReplyDelete
  17. நல்ல நகைச்சுவையான கற்பனைக்கனவு. மிகவும் ரஸித்தேன்.

    // ஒருவர் தன் வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்ட நான் செய்த மைசூர்பாக் ஒரு லோடு வேண்டும் என்று சொல்கிறார். //

    இது நம் திருமதி உஷா டீச்சர் [வேலூர்] அவர்கள் எழுதிய கமெண்ட் என்ற ஞாபகம். நான் அன்றே இதைப்படித்ததும் பலக்கச்சிரித்தேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் நனவாக நான் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன் ராஜி மேடம் ;)

    ReplyDelete
  19. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
    Nalla kanavu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  20. புத்தாண்டில் நாளொரு கனவும் ,பொழுதொருபதிவுமாக
    கலகலப்பாக நடைபோட வாழ்த்துகள்..!

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்