Wednesday 2 July 2014

நான் பாஸா........?

 
 
 திருநெல்வேலிக்கே  அல்வா கொடுப்பது போல், டீச்சரிடமே கேள்விகளா? ஆனாலும் கேட்டு விட்டாரே திருமதி கீதா மதிவாணன் . பதில் சொல்லிப் பாஸாக முயற்சிக்கிறேன். எனக்குக் கேள்விகள் கேட்டு மட்டுமே பழக்கம். முதன் முறையாக பதில் எழுதுகிறேன். அதனால் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் ,என்னைப் பாஸாக்குமாறு  வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ' பிட் ' எதுவும் அடிக்கவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
 
இதோ கேள்விகளும், பதில்களும்.
 
 
 1..உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
  நூறாவது பிறந்தாநாளா............ ஆசி வழங்கிக் கொண்டு ,போட்டோவிலிருந்து தான்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
 பாட்டுப் பாடக் கற்றுக் கொண்டு" சிங்கார வேலனே , தேவா " என்கிற பாடலை  நான் பாட வேண்டும்.  என்னுடைய  இசை என்னும் இன்ப  வெள்ளத்தில் மிதக்க என் கணவர் ஓடோடி வர வேண்டும் என்பது என் பேரவா.. ஆனால் என்னவோ  தெரியவில்லை என்னவர் அதற்கு முட்டுக் கட்டைப் போட்டுக் கொண்டேயிருக்கிறார். எதற்கு என்று கேட்டால் பதிலே சொல்வதில்லை. புரியவேயில்லை...........
 
 3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக
எப்பொழுதும்  சிரித்துக் கொண்டே தான் இருக்கிறேன். (பைத்தியமோ என்கிற சந்தேகம் வருகிறதா?) வாழ்க்கை  சிரித்து மகிழ்வதற்கே என்று எண்ணுபவள் நான். அதனால் தான். 

4. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?
 நிமிடத்திற்கு ஒரு முறை வீட்டின் ஒவ்வொரு ஜன்னலிலும்  எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். பக்கத்து வீடுகளிலும் கரண்ட் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளத்தான்.
 
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன
  " விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்  போவதில்லை " என்கிற அறிவுரை தான். பஸ்சில், அலுவலகத்தில் என்று யார்யாரிடமோ அட்ஜஸ்ட் செய்யும் நாம் வாழ்க்கைத் துணையிடமும் அதை  செய்தால் வாழ்க்கை இனிக்கும். என்பதைப் புரிய வைக்க முயற்சிப்பேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 குழந்தைத் தொழிலாளர்கள்  முறை முற்றிலும் நீங்க வேண்டும். அது தான்  தீர்ந்து கொண்டே வருகிறதே  என்று சொல்பவர்களுக்கு,  டிவியில் பார்க்கும் பல விளம்பரங்களில், நிகழ்ச்சிகளில்  நான் இன்னும்  குழந்தைத்  தொழிலாளர்களைப் பார்க்கிறேன்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
உற்ற தோழனாய் இருக்கும் என்னவரிடமிருந்து தான்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 " காய்க்கிற மரம் தான் கல்லடி படும் " என்று  நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளவேண்டியது தான்.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
ஆறுதல் சொல்ல நானா.... நானே அந்தத் துயரத்திலிருந்து மீளப்  பல நாட்களாகும். 
 
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
உலாவ ஆரம்பிக்க வேண்டியது தான் . மொட்டை மடியில் இல்லை......இணையத்தில்.  அதைவிட்டால் வேறு எதுவும் தெரியாதே.
 
 
 
 என்னை எப்படியாவது பாஸாக்கி விடுங்களேன்.....ப்ளீஸ்..........

திருமதி ரஞ்சனி  " எங்கள் ஊர் " பற்றி எழுத அழைத்திருந்தார் . இன்னும் பெண்டிங். விரைவில் எழுதி விடுகிறேன் ரஞ்சனி.

image courtesy----google.

39 comments:

  1. நீங்க PASS செய்து விட்டீர்கள். ;) கவலை வேண்டாம்.

    ReplyDelete
  2. # பதிலே சொல்வதில்லை#
    நீங்கள் அவரை இசை வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்து விடுவீர்கள் என்று பயப்படுகிறாரோ என்னவோ ?
    சும்மா வார்த்தைக்காக சொல்லவில்லை ,வோட்டு போட்டு சொல்கிறேன் ..நீங்கள் பாஸ் !
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. நன்றி பகவான்ஜி என்னை பாஸ் பண்ணியதற்கு மட்டுமல்ல ஓட்டுப் போட்டதற்கும் தான்.

      Delete
  3. எல்லா பதில்களுமே வித்தியாசமாக இருக்கிறது. நான்காவது ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே ஸ்ரீராம் சார். கரண்ட் கட்டானால் நம்மில் பெரும் பாலோர் முதலில் செய்வது பக்கத்து வீட்டிலும் இல்லையே என்பதை உறுதி செய்வது தானே.
      நன்றி ரசித்துப் படித்ததற்கு சார்.

      Delete
  4. சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான பதில்கள்..

    ReplyDelete
  6. இயல்பான நகைச்சுவையுடன் ரசனையான பதில்கள்!.. அருமை!..

    ReplyDelete
  7. நிச்சயம் நீங்க பிட் அடிக்கலை. ஒவ்வொரு பதிலுலயும் உங்க டச் தெரியுதே... 3 மற்றும் 4ம் கேள்பிக்கான பதிலை ரொம்ப ரொம்ப ரசித்தேன். சூப்பர்ப்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ரசித்து படித்ததற்கு மிக்க நன்றி கணேஷ்.

      Delete
  8. என்க்கும் அந்த பரீட்சை எழுதச் சொல்லி இருக்கிறார் திருமதி.கீதா மதிவாணன். ப்ரிபேர் செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் ப்ரிபேர் செய்து பதில் எழுதுங்கள்.

      Delete
  9. ஆத்தா..............!நீங்க பாஸ் ஆயிட்டீங்க,ஆத்தா!///எட்டாவது கேள்விக்கான பதில்.......... காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளவேண்டியது தான்.????????????ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. நானும் பாஸ் செய்து விட்டேன் என்பதில் மிக மிக மகிழ்ச்சி

      Delete
  10. சிறப்பான பதில்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. எல்லா பதில்களுமே வித்தியாசமாக இருக்கிறது first one very smart......
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  12. Please visit 1000 post. about Padmini.
    http://kovaikkavi.wordpress.com/2014/07/01/21-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9/

    ReplyDelete
  13. நல்ல பதில்கள்......

    சந்தேகமில்லாம நீங்க பாஸ் தான்!

    ReplyDelete
  14. டீச்சரின் பதில்களை மதிப்பிட்டு அவர்களை பாஸா, ஃபெயிலானு சொல்ல எனக்கு தகுதி இல்லை.

    அதனால நீங்க பாஸா ஃபெயிலானு "பெரியவங்க"தான் முடிவு செய்யணும். :)

    பதில் 2: எதார்த்த உண்மையும் கலந்த காமடிபோல எனக்கு இருக்கு! வழக்கம்போல உங்களை நீங்களே இறக்கி எங்கள் ம்னதில் உயர்ந்துவிட்டீர்கள்.

    பதில் 10: ஏன் யாருமே இதுக்கு முன்னால் இந்த எதார்த்த உண்மையைச் சொல்லலைனு விளங்கவில்லை! நீங்க லேட்டா சொல்லியிருந்தாலும், லேட்டெஸ்ட்டா சொல்லியிருந்தாலும், 100% எதார்த்த உண்மை இது!

    என்னுடைய தமிழ்மண வாக்கு உங்களை பாஸாக்கினால் மகிழ்ச்சிதான்! :)

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பதில்களை விரிவாக அலசி என்னைப் பாராட்டுவதற்கு நன்றி வருண். உங்கள் தமிழ் மண் வாக்கிற்கும் நன்றி .

      Delete
  15. நான் தங்களது வலைப்பூவிற்க்கு முதன்முதலாக வருகிறேன் சகோதரி, பதில்கள் அனைத்துமே யதார்த்தமாக இருந்தது 9 வது பதில் நெஞ்சை தொட்டது. நானும் இதில் சிக்கி சின்னாபின்னமாகி வந்திருக்கிறேன்... நேரமிருப்பின் பார்க்கவும், நன்றி.
    அன்புடன்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. என் தோழியின் கணவர் இறந்த போது அவளுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அந்த அனுபவம் தான் இந்த பதில்.
      அவசியம் உங்கள் வலைத்தளம் வருகிறேன். உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரரே.

      Delete
  16. சிறப்பான பதில்கள்...
    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  17. டீச்சர அடிச்சிக்க முடியுமா? அனைத்தும் அருமையான பதில்கள். அதனால எல்லா பதில்களுக்கும் முழு மதிப்பெண் கொடுத்து 100/100 போட்டாச்சுங்கோ.

    ஒன்பதாவது கேள்வியில் நம் இருவருக்குமிடையே என்ன ஒற்றுமை பாருங்க. நாலாவது பதிலில் ராசியின் முகம் தெரிகிறது.

    ReplyDelete
  18. அருமை அருமை. கலக்கிட்டீங்க. பாராட்டுகள். என் வேண்டுகோளை ஏற்று கேள்விகளுக்கு அழகாய் நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்து பதில் சொல்லி தொடர்பதிவை சிறப்பித்துவிட்டீர்கள். நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.

    ReplyDelete
  19. 4 - ஹா ஹா... ஆனால் உண்மை...

    /// விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை /// சிறப்பு...

    ReplyDelete
  20. வணக்கம்
    மிக அருமையாக பதில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  21. அருமையான பதில்கள். இரண்டாவது கேள்விக்கு மனம் விட்டு சிரித்தேன்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்