மாலை ஐந்து மணிக்கு ஆபிசிலிருந்து வீடு திரும்பிய விஷ்ணுவிற்கு ஆயாசமாயிருந்தது. வெயிலின் தாக்கம் மிக அதிகம்.
" அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் எப்படி கொளுத்துகிறது வெயில்.
உஸ்........அப்பாடா......கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாயேன் ராசி. " என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியைக் கழட்டி டீபாயின் மேல் வைக்கப் போனார்.
" இதென்ன புல் மாதிரி ஏதோ இருக்கிறதே " என்று எண்ணிக் கொண்டே கழட்டிய கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அதைக் கையில் எடுத்துப் பார்த்தார் விஷ்ணு. புல் மாதிரியும் இல்லையே என்னவாயிருக்கும் என்று யோசிக்கும் போதே தண்ணீருடன் ஆஜரானாள் ராசி.
" அது மூங்கில் செடி " ராசி சொல்ல,
' அதை ஏன் டீபாயின் மேல் வைத்திருக்கிறாய்? வெளியில் அல்லவா மண்ணில் வைக்க வேண்டும் ' என்று விஷ்ணு கேட்க ,
" இல்லை இது வீட்டில் இருந்தால் சுபிட்சம் வரும்." ராசி பதில்சொன்னாள் .
" ஏன் இப்போ சுபிக்ஷத்திற்கு என்ன குறைச்சல்? நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்." என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார் விஷ்ணு.
அதைப் பற்றி பிறகு மறந்தும் போனார் என்றே சொல்ல வேண்டும். அன்று இரவு படுக்கப் போகு முன் கண்ணில் பட்ட மூங்கில் செடியை அலட்சியம் செய்தபடி படுத்தார். ஆழ்ந்த உறக்கம்.
அவர் அலட்சியமாய் பார்த்த மூங்கில் செடிகளெல்லாம் ஒங்கிஉயர்ந்து பெரிய மரங்களாய் , கண்ணிமைக்கும் நேரத்தில் மூங்கில் காடாய் மாறியிருந்தன.உய் .....உய் ....என்று மூங்கில்கள் உராயும் சத்தம் கேட்டது.
ஆமா. ஏன் இந்த மூங்கில் தோப்பு நம் வீட்டிற்குள் இருக்கிறது. டிவியும், டீபாயும், சோபாவும் மூங்கில் காட்டுக்குள் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி இருந்தன . ஏசி குளிர்ச்சியையும் தாண்டி குப்பென்று வியர்த்து முழித்து விட்டார் விஷ்ணு.
ஓ ............ இத்தனையும் கனவா? ஆங்கிலப்படம் Jumanji யில் வருவது போலல்லவா இருக்கிறது. இந்த சின்ன முங்கில் செடிகளா இவ்வளவு பயமுறுத்தியது. ராசியைப் பார்த்தார் விஷ்ணு. சன்னமான குறட்டை சத்தம் வந்தது. எழுந்து போய் ஜில்லென்று ஐஸ் வாட்டர் குடித்து விட்டு வந்து படுத்தார். அயர்ந்து தூங்கியும் விட்டார்.
மறு நாள் மாலையில் சாதரணமாக ராசியை விசாரித்தார் விஷ்ணு," யார் உனக்கு இந்த ஐடியா கொடுத்தார்கள்? "
" எந்த ஐடியா ? "
"அதான் மூங்கில் காடு ஐடியா "
" மூங்கில் செடி தானே. அது எப்போ காடானது? " ராசி திருப்பிக் கேட்க ,
" சரி , காடோ செடியோ ? யாரோட பரிந்துரை? " விஷ்ணு எரிச்சலானார்.
" அதுவா? குக்கர் கேஸ்கட் வாங்கப் போன போது கல்லாவருகில் இதைப் பார்தேன். விசாரித்ததில் கடைக்காரார் தான் சொன்னார். ,இது வைத்தால் அதிர்ஷ்டமாம் .அதற்காகத் தான் வாங்கினேன்." ராசி விஷ்ணுவை சமாதானப் படுத்த முயன்றாள் .
" சரி எவ்வளவு தண்டம் செய்தாய் இதற்கு? " என்று கோபத்தோடு விஷ்ணு கேட்க,
" நான் எதையும் புதிதாக செய்தால் உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விடுகிறதே? நான் என்ன என் நல்லதுக்காகவா செய்தேன் இதை? நம் குடும்பத்தினரின் நல்லதுக்குத் தானே செய்தேன்? "ராசியின் கோபம் அழுகைக்கு மாறும் அபாய விளிம்பில் நின்றதைப் பார்த்து, விஷ்ணு ,
" எவ்வளவு என்று தானே கேட்டேன். சொல்லி விட்டுப் போயேன்.?"என்று மீண்டும் கேட்க,
" இருநூறு ரூபாய் " பட்டென்று பதில் வந்தது ராசியிடமிருந்து .
அன்று இந்த விவாதத்திற்கு அத்துடன் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
ஒரு வாரம் ஆகியிருக்கும். வீட்டின் முன் வாசல் அருகில் டிசைன் போட்ட கண்ணாடி வந்திருந்தது. இதென்ன முகம் பார்க்கும் கண்ணாடி வீட்டின் முன் வாசலில். யோசித்துக் கொண்டே உள்ளே நுழைகையில் ராசியின் குரல் தடுத்தது.
" அதைப் பார்த்து விட்டே உள்ளே வாங்க. " ஆர்டர் போட்டாள் ராசி.
இது வேறேயா....நினைத்துக்கொண்டேவிஷ்ணு," எதற்குவம்பு?பார்த்து விட்டே உள்ளே போவோம்.இல்லையென்றால் அதற்கு வேறு ராசி கண்ணைக் கசக்குவாள் " என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனார் விஷ்ணு.
" கண்ணாடி எதற்கு என்று கேட்க மாட்டீர்களா? " ராசி கேட்க,
"சரி சொல்லு தெரிந்து கொள்கிறேன்." விஷ்ணு சொல்ல, திருமபவும் ராசிக்குக் கோபம் தலைக்கேறியது. எதையோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றாள் ராசி.
இது எங்கோ பெரிய வம்பில் போய் முடியப் போகிறது என்பது மட்டும் விஷ்ணுவிற்குப் புரிந்தது. வரும் போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டிவியில் தேர்தல் செய்திகளில் ஆழ்ந்தார்.
எல்லாம் அமைதியாய் போய்க் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு ராசி ஒரு வாரத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. சமாதானமானார் விஷ்ணு.
மறு நாள் மாலையில் ஆபிசிலிருந்து உள்ளே நுழையும் போது " முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்து விட்டு வாங்க " என்று அவள் சொன்னது நினைவிற்கு வந்து கேலியான புன்சிரிப்பு ஒன்று அவர் முகத்தில் தோன்றி மறைந்தது.
கதவு திறந்தே இருந்தது. உள்ளே வரவேற்பறையில், தூக்க முடியாமல் மூட்டையைத் தூக்கிக் கொண்டு "தக தக"வென , ஒரு குள்ள மனிதன் தங்க நிறத்தில் சிரித்தபடி நின்றிருந்தான். " Money Back Happy Man " ற்கு எவ்வளவு செலவு செய்தாளோ என்று பெரும் கோபத்துடன், " ராசி ராசி " என்று குரல் கொடுக்கவும்.
தொந்தியும் தொப்பையுமாய் ஒரு மனிதன் இவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு வெளியே போய்க் கொண்டிருந்தான். " நான் நாளை உங்களுக்கு போன் செய்கிறேன். பிறகு நீங்கள் மீன் தொட்டியை இங்கே வைக்கலாம். " என்று சொல்லி அந்த ஆளை வழியனுப்பிக் கொண்டிருந்தாள் ராசி..
" யார் இந்த மனிதர்? நீ என்ன செய்கிறாய் ? வாஸ்து பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறாய் ராசி. இதெல்லாம் நல்லதுக்கில்லை."என்று விஷ்ணு அதட்டவும்,
": இவர் வாஸ்து நிபுணர்."என்றாள் ராசி.
" உனக்கு எப்படித் தெரியும் அவரை? " கேட்டார் விஷ்ணு.
" மூங்கில் செடி விற்ற கடைக் காரர் தான் இவர் அட்ரெஸ் சொன்னார். நான் தான் அவரை போன் செய்து வரவழைத்தேன். " என்றாள் ராசி.
கடைக்காரரும். இந்த டுபாக்கூர் வாஸ்து நிபுணரும் ராசியை நன்றாகவே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது விஷ்ணுவிற்கு புரிந்தாலும் , தான் என்ன சொன்னாலும் எடுபடாது என்றும் புரிந்தது.
"நாளை ஃபிஷ் டாங் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். Black Molly fish வீட்டில் நம் கண்ணெதிரில் நீந்திக் கொண்டிருந்தால் நமக்கு நல்லது நடக்குமாம். "
" என்னவோ போ ? நல்லது நடக்காவிட்டாலும், பரவாயில்லை. கெட்டது எதுவும் நடக்காவிட்டால் சரி " என்று அலுத்துக் கொள்ள மட்டுமே முடிந்தது விஷ்ணுவால்.
" நீங்கள் எப்பவுமே இப்படித்தான். நாம் பாசிட்டிவ் ஆகவே நினைத்தால் நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி இருக்கும் " என்று லெக்சர் கொடுத்த ராசியை ஆச்சர்யத்துடன் பார்த்து விஷ்ணு கிண்டலாய் , " அப்புறம் "....என்று சொல்ல ,
" நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்தால் ராஜ களை தெரிகிறது . வீட்டு வாஸ்து சரியில்லை. அதற்கு தான் நிவர்த்திகள் தேவை.. அப்புறம் பாருங்கள் நீங்கள் தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்று வாஸ்து நிபுணர் சொல்லி விட்டு சென்றிருக்கிறார் " என்று ராசி முடிக்க , விஷ்ணுவிற்கு தலை சுற்றியது.
ராசி....... அமெரிக்க ஜனாதிபதியா? இவள் அமெரிக்காவை உலகவரை படத்திலாவது பார்த்திருப்பாளா? இவள் ஆட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற ஆராய்ச்சியில் இறங்கினார் விஷ்ணு.எவ்வளவு செலவாகப் போகிறதோ தெரியவில்லையே என்று தலையில் கை வைத்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்துள்ளார் .
"இன்னும் எவ்வளவு செலவு வைக்கப் போகிறாளோ? இதிலிருந்து எப்படி விடுபடுவது.? "என்கிற பலத்த யோசனையில் விஷ்ணு.
அவருக்கு இப்போது தேவை இதிலிருந்து ராசி விடுபட ஒரு யோசனை.
ராசி மட்டுமா விடுபட வேண்டும். விஷ்ணு பர்சும் கூடத் தான்.
உங்களின் எந்த யோசனையானாலும் விஷ்ணு அதை பரீசிலிக்கும் மனநிலையில் தான் உள்ளார்.
உங்கள் யோசனைகளை தாரளமாக சொல்லுங்கள் விஷ்ணுவைக் காப்பாற்றுங்கள்.
image courtesy---google