Saturday 7 May 2016

நீங்கள் உல்லன் அன்னையா?


தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது. அம்மா மகனைப் பள்ளிக்கு   அழைத்து செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சி. அது மிதமானக் குளிர்கால காலைப்  பொழுது.  மகனுக்கு முதலில்  உல்லன் குல்லாயை  மாட்டி விடுவார் அம்மா.

 பிறகு நடந்துக் கொண்டே   ,",இந்தக் கம்பளி சால்வையை  அணிந்து கொள் " என்று சொல்லி கம்பளி  சால்வையை நீட்டுவார் .இன்னும் சில வினாடிகளில்  அடுத்து  ஸ்வெட்டரைக் கொடுத்து, அணிந்துக் கொள்ள சொல்வார். 

ஆனால் அருகிலயே அவர் மகனின் நண்பன்  எந்த கம்பளி ஆடையும்  இல்லாமல் நடந்து வருவதைப் பார்க்கும் போது, அதிகமானக் குளிரில்லை என்று  புரிகிறது.  

ஆனால் பாசத்தால் , கம்பளியால்  மகனைப் போர்த்திக் கொண்டேயிருக்கும அம்மாவை "உல்லன் அம்மா" என்று  அடையாளப்படுத்தலாம் என்று தோன்றியது.

அந்த விளம்பரத்தில் வரும்  வாசகம் ," உங்கள் மகனை வெயில், குளிர், தூசி என்று எதையும் எதிர் கொள்ளப் பழக்குங்கள். தானாகவே அவர்கள் எதிர்ப்பு சக்தி வளரும்." என்று அறிவுரையும் "  எங்கள் சத்துணவு பானம் அதற்குக் கை கொடுக்கும் ' என்றும் விளம்பரம் முடியும்.

விளம்பர அறிவுரையின் மேலோட்டமான அர்த்தத்தை விட்டு விட்டு சற்றே ஆழமாக யோசித்தால், இந்த விளம்பரம் குழந்தை வளர்ப்பதைப் பற்றி  சொல்வதாகத் தோன்றுகிறது.

 'இப்பொழுது என்ன சொல்ல வருகிறாய்?  நாங்கள் எங்கள் குழந்தைகளை  பத்திரமாக பார்த்துக் கொண்டால் உடனே  உல்லன் அம்மா என்று எங்களுக்குப் பெயர்  சூட்டுகிறாய் . அவ்வளவு தானே!  என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்" என்று அம்மாக்கள் கோபப்படுவது எனக்குத் தெரிகிறது.

எனக்கு ஒன்றைப் புரிய வைப்பீர்களா? உங்களை உங்கள் பெற்றோர் இப்படித் தான் வளர்த்தார்களா?  பெரும்பாலும் கூ ட்டுக் குடும்பப்ப் பின்னணியில் வளர்க்கப்பட்டோம்.  அதனால்  தனியாக எந்த சலுகையும் நமக்குக் கிடைத்ததில்லை எனலாம்.

அதனால் நம் பெற்றோர் நம்மை சரியாக கவனிக்கவில்லை என்றாகி விட்டதா என்ன?  எத்தனை சவால்களை நாம் எதிர் கொள்கிறோம்.  அத்தனையும் வெற்றிகரமாகத் தாண்டித் தானே வருகிறோம். அதற்கான அடித்தளம் போட்டது  நம் பெற்றோர் வளர்ப்பு முறை  தானே.

சரி . நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். நாங்கள் உல்லன்  அம்மாவாகவே இருந்து விட்டுப் போகிறோம் என்று ஒரு சில அம்மாக்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது.

இருந்து விட்டுப் போங்கள்  ஆனால் நீங்கள் ஒரு அபாய விளிம்பில் நிற்கிறீர்கள்  என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

அபாய விளிம்பா ....?

ஆமாம் .உல்லன் அன்னைகள் ஒரு சின்ன  இடறலில்  ஹெலிக்காப்டர்  அம்மாவாகி விடும்  அபாயம் இருக்கிறது . ( இங்கே நான் அரசியல் எதுவும் கலக்கவில்லை என்பதையும்  சொல்லிக் கொள்கிறேன் )


ஹெலிகாப்டர் அம்மா அல்லது சாப்பர்(chopper) அம்மா  என்பவர் எப்பொழுதும் தன்  மகன்/மகளின் தலைக்கு மேலேயே பறந்துக் கொண்டிருப்பார்.  அது பள்ளியோ,  விளையாட்டு அரங்கமோ,வீடோ, நண்பர்களுடன் இருக்கும் போதோ, எங்கும் பறந்து பறந்து  கவனித்துக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு உதவி தேவையோ சட்டென்று  உதவலாமே என்பது தான் அவர்கள் எண்ணம்.அவர்கள் மகன்/ மகள் முடிவுகளை பெரும்பாலும் சாப்பர்(chopper) அம்மாக்களே எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதனால் என்ன ? என்று நீங்கள் கேட்கலாம். நல்லது தானே என்று கூடத் தோன்றலாம்.

இப்படிக் கண்காணிக்கப்படும் மகன், பின்னாளில் தன்னிச்சையான முடிவை எடுக்க நேரிடும் போது  சட்டென்று  குழம்ப நேரிடலாம். தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம். அப்பொழுது அம்மாக்களோ  உதவ முடியாத நிலையில் இருப்பார்கள்.

இந்த சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் மகன்  சிறுவனாக இருக்கும் போதே சற்றே சுதந்திரமாக இருக்க விட வேண்டும்.கண்டிப்பாக சின்ன சங்கடங்கள், தோல்விகள்  என்று அவன் எதிர் கொள்ள நேரிடும்.அவை அவனை  நன்கு செதுக்கி , எந்த சவாலையும் எதிர் கொள்ளும் பக்குவத்தைக்  கொடுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

இதற்குப் பிறகும் நாங்கள் ஹெலிகாப்டராய் பறந்து சாப்பர்(chopper) அம்மாக்களாய் இருந்து விட்டுப் போகிறோம். எங்கள் மகனை  சங்கடங்களிலிருந்துக் காப்பாற்றுவோம். அது போதும் எங்களுக்கு.  என்று சொல்பவர்களுக்கு ..

ஓகே.....அப்படியே  சாப்பராகப்(chopper ) பறந்துக் கொண்டிருங்கள்.அப்படிப் பறக்கும் போது நீங்கள் உயரமான மரங்களின் மேல் பறக்க நேரிடலாம். அங்கு கூடு கட்டி ,குஞ்சு பொறித்திருக்கும்  கழுகைக் காண நேரிடலாம்.  கழுகம்மா, தன்  குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்று 'பராக்'காகத் தான் பாருங்களேன்..

உயரமான மரங்களில் இன விருத்திக்காக கழுகு கூடு கட்டும்.   இலவம் பஞ்சு மெத்தையைப் போலவே இருக்கும் அந்தக் கூடு.  எல்லா அம்மாக்களைப் போலவே, கழுகும்மாவும்  தன்  குழந்தைகளை கண்ணில் வைத்துத் தான் காப்பாற்றும். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுத்து, , எதிரிகள்,மழை, வெயில் என்று  பல சங்கடங்களிலிருந்து தன்  குஞ்சுகளைக் காப்பாற்றும்.

இந்தக் கவனிப்பு எவ்வளவு நாட்களுக்கு?

குழந்தைகள் பறக்கும் காலம் வரும்  போது , கழுகம்மா என்ன செய்கிறது?
முதலில் கூட்டை  , குச்சிகள் எல்லாம் வெளியே நீட்டும்படி லேசாகக் கலைத்துப் போடும்.


கழுகுக் குஞ்சுக் கிறீச்சிடும்,"அம்மா... அம்மா.   படுக்கவே முடியவில்லைம்மா. இந்தப்  படுக்கைக் குத்துகிறது.கொஞ்சம் சரி செய்து விடேன் ." என்று கெஞ்சுகிறது.

கழுகம்மா ," கூடு   சௌகர்யமாக இல்லையென்றால்  வெளியே பறந்து போயேன் "என்று சொல்லும்.

கழுகுக்  குஞ்சு  வெளியே எட்டிப் பார்க்கும். பரந்து விரிந்துக் கிடக்கும் பிரம்மாண்டமான உலகம் கண்டு, பயந்து உள்ளே ஓடி வந்து விடும்..

இப்பொழுது கழுகம்மா , சிறிதும் இரக்கமின்றி, தன் குழந்தையை  கூட்டின் விளிம்பிற்குத் தன இறக்கையாலேயே  தள்ளி விடும். அங்கிருந்து கீழே பார்க்கும் குஞ்சு," ஐயோ...அம்மா.. கீழே தள்ளி விடாதேம்மா . காற்று எப்படி வீசுகிறது பார். என்னால் பறக்க முடியாதே . நான் இனிமேல் எந்த விஷமமும் செய்ய மாட்டேன்.என்னை வீட்டில் இருக்க விடேன் " என்று கெஞ்சும்.

ம்ஹூம்.....கழுகம்மா அசைந்துக் கொடுக்கவில்லையே.  இதோ....இதோ .... தள்ளியே விட்டு விட்டதே கழுகம்மா .  கழுகுக் குஞ்சு," அம்மா.......என்றலறிக் கொண்டே  கீழே விழ ஆரம்பிக்கிறது . தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில்  தன இறக்கையை 'பட பட'வென  சிறகடிக்க முயற்சிக்கும் கழுகுக் குஞ்சு.

முதல் முறையே பறக்க வந்து விடுமா என்ன?  ஒரு சில வினாடிகளில்  வேகமாக கீழே விழ ஆரம்பிக்கும். எங்கிருந்தோ சட்டென்று கழுகம்மா பறந்து  வந்து கீழே விழாமல் பிடித்து,  அதைக் கூட்டிற்குள்   கொண்டு போய் விடும்.

கழுகுக் குஞ்சு , மேல் முச்சு, கீழ் மூச்சு வாங்க, "நான் சொல்ல சொல்ல என்னைத தள்ளி விட்டாயே அம்மா. எனக்குப் பறக்க வராது என்று சொன்னால் நீ நம்பவேயில்லையே. விழப் பார்த்தேன் இல்லையா. இப்பொழுதாவது புரிந்ததா?  நல்ல வேளை  என்னைக் காப்பாற்றினாய் அம்மா. உனக்கு என் மேல் பாசம் அதிகம். " என்று சொல்லி விட்டு 
"ஐ லவ் யூ அம்மா" என்று தன்  அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொள்ள முயலும்.

கழுகம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், ஒரு சில நிமிடங்களில் மீண்டும், அதை வெளியேத்  தள்ளி விடும்.  கழுகுக் குஞ்சு , கீழே விழாமல் இருக்கும்   முயற்சியில், தன சிறகினை 'பட பட'  என்று  அடித்துக் கொண்டு பறக்க முயலும். 

இப்பொழுது சற்றேக்கூடுதல் நேரம் தன்  சிறகை விரித்து பறக்கும். ஆனாலும்  சிறிது நேரத்தில் பறக்க முடியாமல், மீண்டும் கீழே விழ ஆரம்பிக்கும். கழுகம்மா , எங்கிருந்தோ பறந்து வந்து, தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டுப் போய் கூட்டில் வைக்கும். சில மணித் துளிகள் தான்.

திரும்பவும், இந்தப் பயிற்சியைத் தொடங்கி விடும் கழுகம்மா.

ஒரு முறை, இரு முறை இல்லை . பல முறை இந்தப் பயிற்சி நடக்கும்.. கழுகு நன்குப் பறக்கத தெரிந்துக் கொள்ளும் வரை, கழுகம்மா அயராது பயிற்சிக் கொடுப்பார்.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு, "அட......அம்மா ..இதோ நான் உயரப் பறக்கிறேனே !  என்று கழுகுக்  குஞ்சு, உயர உயரப் பறந்து, உற்சாகக் குரல் கொடுக்கும். .

கழுகின் கம்பீரம், அதன் தைரியத்திலும் , கம்பீரத்திலும் தானே  இருக்கிறது. அதை உணர்ந்து தான் கழுகம்மா ,பயிற்றுவிக்கிறது. 

கழுகு மட்டும் தன் குழந்தைகளுக்கு பறக்கும்  பயிற்சியைக் கொடுக்கவில்லையெனில் , இந்தக் கழுகுகள், கூட்டிலேயே அல்லவா அடைபட்டு இறக்க நேரிடும். அதை நன்கு அறிந்து தானே கழுகம்மா நடந்து கொள்கிறது.

கழுகம்மாவிற்குத் தான் என்ன ஒரு தொலை நோக்குப் பார்வை! கழுகம்மாவை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

அட.....இது என்ன? யாரோ ஹெலிக்காப்டரிலிருந்து இறங்குகிறார் போல் தெரிகிறதே !

" ஏன் இறங்குகிறீர்கள்?"

"கழுகிற்கு இருக்கும்  அறிவும், தொலை நோக்குப் பார்வையும்  எனக்குக்  கிடையாதா என்ன? நான் இனி மேல் 'சாப்பர்'(chopper )அம்மா இல்லை." என்று சொல்லி  விட்டு இறங்கினார்.

அவரையே ஆச்சர்யத்துடன் பார்க்கும் என்னை, கண்களால் ஒரு வெட்டு, வெட்டி விட்டு, நகர்ந்து  போனார், அந்த முன்னாள்  'சாப்பர்'(chopper) அம்மா.

அவரை மட்டுமல்ல எல்லா அன்னையரையும் வாழ்த்துவோம்  வாருங்கள்.

   அன்னையர் தின வாழ்த்துக்கள்!      

பி .கு: அன்னையர் தினத்திற்காக என்னுடைய ஆங்கிலப் பதிவான "You Made Me Fly " படித்துப் பார்த்து, அதைப் பற்றியும் உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள் .

image courtesy-google.

20 comments:

  1. 'ஹெலிகாப்டர் மாம்'னா அவ்ளோ பயமா :)))

    அறிவுரைக் கதைகளுடன் கூடிய வாழ்த்து அருமை !
    உங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சித்ரா. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.


      Delete
  2. அருமையான பதிவு , அவசியமான பதிவு.
    குழந்தை வளர்ப்பை சொல்லிக் கொடுக்கும் பதிவு.
    அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ராஜலட்சுமி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கோமதி. உங்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.

      Delete
  3. பதிவின் ஊடாக ஹெலிகாப்டர் அம்மாவையும் நினைவு கூர்ந்த விதம் அழகு!..

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி துரை சார்.

      Delete
  4. அர்த்தமுள்ள சிறப்புப் ப்திவு
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், அருமையான பாராட்டிற்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  5. மிகச்சிறப்பான பதிவு! கழுகு கதையை உதாரணமாக சொன்னது சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  6. அன்னையர் தின வாழ்த்துக்கள்.
    subbu thatha
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு நன்றி சுப்பு ஐயா.

      Delete
  7. வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க இம்ம்யூனிடி குறையும் EAGLES FLY HIGH BECAUSE THEY THINK THEY CAN அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொலவது மிக சரியே பாலு சார். It is alwaays the duty of the mother to motivate their young ones.And eagle moms are no exception.
      உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சார்.

      Delete
  8. யதார்த்தமான விடயம் சொல்லிச் சென்ற விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  9. நல்லதோர் கதையைச் சொல்லி வாழ்த்துச் சொன்ன விதம் நன்று.

    பலர் இப்படி சாப்பர் அம்மாக்களாகத் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருக்கும், பாராட்டிற்கும் நன்றி வெங்கட்ஜி. நீங்கள் சொல்வது போல் சாப்பர் ம்மாக்களின் எண்ணிக்கை சற்றே கூடுதலகத் தான் இருக்கும் என்ருத் தோன்றுகிறது.

      Delete
  10. அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு நன்றி சார்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்