Wednesday 24 August 2016

அம்மாவிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது!

கிருஷ்ணர் கதைகள் கேட்கவும் , சொல்லவும் அலாதி  இன்பம் தான் . கிருஷ்ண ஜெயந்தியாக இருப்பதால் , நான் படித்த கதையை சொல்ல ஒரு வாய்ப்பு அவ்வளவே.

இது நீங்கள்படித்த கதையாய் தான் இருக்கும்.



image courtesy-google.

கோகுலத்தில் நந்த கோபரின் இல்லம். தயிரும் , வெண்ணையுமாய் மணக்கிறது வீடு.  செல்வம் செழித்த  இல்லம். இருக்காதா என்ன? மஹாலஷ்மி கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக இருப்பாளே!

குழந்தைக் கிருஷ்ணன் தன்தோழர்களுடன் வீடு வீடாக சென்று தயிரையும், வெண்ணெயெயையும்  திருடிக் கொண்டிருக்கிறான்.  கோபிகைகளெல்லாம் வந்து," தாயே ! யசோதா " என்று முறையிட்ட போதெல்லாம் , "அதெப்படி என் கிருஷ்ணனை கள்வன் என்று சொல்லாம்?" என்று சண்டைப்பிடித்த யசோதைக்கு, இப்பொழுது பிரச்சினை .

ஆமாம். கள்ளக் கிருஷ்ணனின் சேனையிடமிருந்து தன வீட்டு உறியைக் காப்பாற்ற படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாள்.  அவள் சற்றே அயரும் போது , தடால் என்னும் சத்தம் எழுப்பும் . தயிரும் வெண்ணையும்  கீழே சிதற , திருட்டுக் கூட்டம் நாலா பக்கமும் ஓடும். ஆனால் கண்ணன் மட்டும் கைக்குக் கிடைக்க மாட்டான்.

இதற்கு ஒரு முடிவுக் கட்ட வேண்டுமே! யோசித்தாள்  யசோதா .....
ஆமாம். இப்படித்தான் செய்ய வேண்டும் என்று மனதிற்குள்  திட்டம் போட்டுக் கொண்டு , வெண்ணெய் கடைந்துக் கொண்டிருந்தாள். 

பின்னாலிருந்து இரண்டு பிஞ்சுக் கைகள் அவள் கண்களை மறைக்க, "அம்மா என்னைக் கண்டுபிடிப் பார்க்கலாம்." என்கிற மழலைக் குரல் யசோதையை மயக்கியது.. ஆனாலும் , யசோதை நினைத்துக் கொண்டாள், " இதற்கெல்லாம் நாம் அசரக் கூடாது. நம் திட்டத்தை இன்று நிறைவேற்றி விட வேண்டியது தான்." மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் . 

நண்பகல் . எல்லோரும் மதிய உணவு உண்ட பின்பு , கிருக்ஷ்ணரிடம் , " கிருஷ்ணா, போய் விளையாடு. எங்கேயும் போய் வெண்ணெய் திருடக் கூடாது. சரியா? எல்லோரும் உன்னைத் திருடன், கள்வன் என்று சொல்லும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா?" என்று யசோதை சொல்ல,

கிருஷ்ணன், " இல்லேம்மா , நான் எங்கேயும் போகவில்லை. நம் வீட்டு முற்றத்திலேயே விளையாடுகிறேன். நீ போய்த் தூங்கு." என்று சொல்லி விட்டு ஓடவும், யசோதைத் தன் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினாள்.

தயிர், வெண்ணெய் வைத்திருக்கும்  உறியிலிருந்து,  ஒரு கயிற்றைக்  கட்டி அதன் மறுமுனையை  பக்கத்து அறைக்குக் கொண்டு போய், அதன் நுனியில் ஒரு மணியையும்  கட்டி விட்டாள். பிறகு , உறியை மெதுவாக ஆட்டவும், மணி 'கிணி கிணி ' என்று அடித்தது.

ஆக, வெண்ணெய் திருடும் போது கிருஷ்ணனை இன்றுக் கையும் களவுமாகப் பிடித்து விடலாம் என்று உறுதிப் படுத்திக் கொண்டு,  சற்றே கண்ணயரத் தொடங்கினாள்.

இப்பொழுது உள்ளே ஓடி வந்த கிருஷ்ணன் ,யசோதை தூங்கி விட்டாளா என்று உறுதி செய்து கொண்டான்.  சட்டென்று உறியில் தொங்கும் கயிறு அவன் கண்ணில் பட, அந்தக் கயிற்றைத் தொடர்ந்து சென்று பார்க்க இறுதியில் மணி ஒன்றுக் கட்டப்பட்டிருந்தது..

இது தான் விஷயமா? என்று நினைத்துக் கொண்டு, மணியிடம், " மணியே !மணியே ! " என்று கூப்பிடவும், மணி விழித்துப் பார்த்தது. கூப்பிட்டவன் கிருஷ்ணன் என்று தெரிய அதற்கு ஒரே குஷி தான்.

"மணியே ! எனக்கு ஒரு உதவி செய்வாயா ? "என்று கிருஷ்ணன் கொஞ்சிக் கேட்க,

மணிக்கோ ஒரே சந்தோஷம். "என்ன பாக்கியம் செய்தேன் நான். பரம் பொருளே என்னிடம் உதவி கேட்கிறாரே."  ,
" பரம் பொருளே சொல்லுங்கள்! இல்லை...இல்லை .....ஆணையிடுங்கள். செய்யக் காத்திருக்கிறேன்." என்று மணி சொன்னது.

"நானும் என் நண்பர்களும் வெண்ணெய் திருடும் போது  நீ சப்தம் செய்து  என்னை அம்மாவிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது". என்று கிருஷ்ணன் சொல்லவும், மணி சந்தோஷமாக ஒத்துக் கொண்டது. "வாக்கு மாற மாட்டாயே!"  என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு  , வெளியே நிற்கும் தன் நண்பர்களை , சைகையால் உள்ளே வரவழைத்தான் கண்ணன்.

பின் ஒருவர் மேல் ஒருவர் ஏறி , உறியிலிருந்து , வெண்ணெய் பானையை ஓசைப்படுத்தாமல் கீழே இறக்கினார்கள் .

மணியும் ஓசையே செய்யாமல்  நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது..

பிறகு, வெண்ணெயை உருண்டை உருண்டையாக எடுத்து  தன் நண்பர்களுக்கு வாரி வழங்கினான் கிருஷ்ணன்.எல்லோரும்  கட்டிக் கட்டியாக வெண்ணெயை  முழுங்கினார்கள்.

ஊஹும்.....அப்போதும் மணி மூச்சுக் காட்டவில்லையே.

எல்லோருக்கும் கொடுத்து முடித்தப் பிறகு, தன் பிஞ்சு விரல்களால் வெண்ணெயை அள்ளி, தன் செம்பவழ  இதழில் வைக்கவும்,

 "கிண்  கிணி , கிண்  கிணி " என்று மணியோசை யசோதையை எழுப்பியது.

யசோதை திட்டம்  பலித்து விட்ட மகிழ்ச்சியில் வரவும், கிருஷ்ணன், கை, வாய், குண்டு கன்னம் எல்லாம்  வெண்ணெய் வழிய  எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. யசோதை தாவிப் பிடித்தாள் கிருஷ்ணனை. " கையும் களவுமாக மாட்டிக் கொண்டாயா?. இன்று உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபமாக சொல்லவும்.

"கொஞ்சம் இரும்மா  .இதோ வந்து விடுகிறேன்"என்று சொல்லி விட்டு மணியிடம்  ஓடினான்  கிருஷ்ணன்.

" மணியே! கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனாயே . உன்னை நம்பித் தானே இந்த வேலையில் இறங்கினேன்." என்றுகிருஷ்ணன் கேட்கவும்,

மணி சொல்லியது," பரம் பொருளே ! தாங்கள் உறியைத்த் தொடும்போது சப்தித்தேனாசொல்லுங்கள் பிரபுவே.."

"இல்லை" என்றான் கிருஷ்ணன்.

"உறியிலிருந்து பானையை இறக்கினீர்களே. அப்பொழுதாவது  சப்தம் போட்டேனா ? "

"இல்லை."

"உங்கள் நண்பர்களுக்கு  வெண்ணெயை  பகிர்ந்து கொடுக்கும் போது ஏதாவது சப்தம் செய்தேனா ?"

"இல்லை."

"அவர்கள் உண்ணும் போது கூட , நான் சப்தம் செய்யவில்லை தானே.?"

"ஆமாம். நீ அப்பொழுதும் சப்திக்கவில்லை.. பின் நான் உண்ணும் போது மட்டும்  சரியாக சப்தம் செய்துக் காட்டிக் கொடுத்து விட்டாயே. அது ஏன்?" என்று கோபமாகக் கிருஷ்ணன் கேட்க,

"பரம் பொருளிற்கு நைவேத்தியம் செய்யும் போது, மணியடிக்காமல் இருக்கலாமா? அது என் கடமை அல்லவா? அந்த நினைவில் அடித்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் ." என்று மணி கிருஷ்ணன் திருவடிகளில்  விழுந்து வணங்கியது.

அதற்குள் யசோதை அங்கு ஆஜர்," இன்று உன்னைக் கண்டிப்பாக உரலில் கட்டுகிறேன் பார் என்று கோபமாகக்  கிருஷ்ணனை கையைப் பிடித்துக் கொண்டு செல்ல, ,

கிருஷ்ணனோ,  ஜன்னல் வழியாகத் தன நண்பர்களைப் பார்த்து, கள்ளத் தனமாக சிரிக்கிறான் .

அவனுக்கு மட்டும் தானே  தெரியும் எதற்காக இப்படி உரலுக்குக் கட்டுப்படுகிறான் என்று!


Friday 5 August 2016

நாமும் பணம் படைத்தவர்களே! (அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு- 8).


அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 படிக்க இங்கேகிளிக்கவும்.


image courtesy-http://www.clipartlord.com


ராசி "Tiffany Drive" இல்  தன் மகன் ராஜேஷ் ,பேரன் அர்ஜுனுடனும்,நடந்து  சென்று கொண்டிருந்தாள் . அமெரிக்கா வந்தப்  புதிதில், "பரவாயில்லையே இங்கு வீட்டிற்கு அருகிலேயே ஒரு டிரைவ் இன்  ஹோட்டல் இருக்கிறதே" என்று நினைத்துக் கொண்டிருந்தாள் .

தன் மகனிடம், "என்னடா... இந்தக் குடியிருப்பு வளாகத்திலேயே டிரைவ் இன் ஹோட்டல் இருக்கிறதே" என்று சொல்ல,  முதலில் ராஜேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. Tiffany drive என்கிற பெயர் தான்  அம்மாவைக் குழப்பியிருக்கிறது என்று பின்னர் ராஜேஷிற்குப் புரிய, அது தெருப் பெயர் மட்டுமே என்று  விளக்கி சொன்னான்i

இன்று  Tiffany drive வழியாக, நடந்து போகையில், இது மனதில் ஓடியதில் ராசி முகத்தில்  ஒரு சின்ன புன்னகை வந்தது. சின்னப் புன்னகையுடன்  நடந்தவள் எதிரே 'புசுபுசு' வென்று வெள்ளைப் பந்துருண்டை போலிருந்த நாய்க்குட்டியை, அமெரிக்கப் பெண்மணி ஒருவர், அழைத்துக் கொண்டு போனார்.
ராசியைப்  பார்த்து ஹாய்  சொல்லவும், பதிலுக்கு ராசியும் ஹாய் சொல்ல இப்பொழுது பழகிக் கொண்டிருந்தாள் .

ராஜேஷிடம்   , " அந்த   'டாக் ' நல்ல அழகு , இல்லடா ?" என்று ராசி  கேட்கவும்,
ராஜேஷோ , " கத்திப்  பேசாதேம்மா . நாய் என்று சொல்லக் கூடாது. நீ இங்லிஷீல் வேறு சொல்கிறாய் "

"ஏண்டா  நாயை, நாய் என்று சொல்லாமல் பின்னே எப்படி சொல்வார்கள்.  "

" இது அவர்கள் வீட்டு செல்லப் பிராணி அம்மா. அதற்கென்று ஒரு பெயர் இருக்கும், அதை சொல்லித் தான் கூப்பிடனும்."

"எனக்கு எப்படிடா அவர்கள் வீட்டு நாயின் பேர் தெரியும்?"

"அம்....மா நாய் என்று சொல்லாதே என்றால் எத்தனை தடவை  நாய் என்று சொல்கிறாய்?  தங்கள் வீட்டு செல்லப் பிராணிக்காக கோர்ட்டிற்குப் போகக் கூடத் தயங்க மாட்டார்கள் அமெரிக்கர்கள்."

"போடா நீயும் உன் அமெரிக்காவும். இம்மென்றால் சிறைவாசம்! உம்மென்றால் வனவாசம்! என்பார்கள் போலிருக்கிறது...என்னவோ போ ... நீங்களெல்லாம் எப்படித்தான் இங்கே இருக்கிறீர்களோ புரியவில்லை!"

"இந்தியாவில், எதற்கெடுத்தாலும், டிவிக்களில் " போச்சு... போச்சு .....கருத்து  சுதந்திரம் போச்சு" என்று கூப்பாடு போடுகிறார்கள். அதற்கு அமெரிக்காவும் ஜால்ரா . இங்கே என்ன வாழ்கிறதாம்?. நாயை.... நாய் என்று சொன்னாலே குற்றமாம்."

அப்பொழுது , ராஜேஷ் ," அதை விடு.இங்கே பார்.... இந்த மரத்தில்......"  காட்டிய இடத்தில் படம் ஒன்று ஒட்டி இருந்தது.

ராசி, கண்ணாடியை கழட்டித்  துடைத்து மாட்டிக் கொண்டு,"என்னது அது? நாய் மாதிரி தெரிகிறதே."  சொல்லி விட்டு 'நாய் 'என்று சொன்னதற்காக நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

"என்ன போட்டிருக்கு?"

அதில் பெரிதாக  ," காணவில்லை"   என்று  'நாய்' படம் ஒன்றைப்  போட்டிருந்தார்கள். அதன் பெயர்,உயரம், நீளம், கலர்,  கடைசியாக பார்த்த இடம் நேரம் ...இத்யாதி...... இத்யாதி..... ,
கண்டுப்  பிடித்து கொடுப்பவர்களுக்கு  நல்ல சன்மானம் வழங்கப்படும் என்றும் இருந்தது."

ஆச்சர்யத்தில், திறந்த வாய், மூடவில்லை  ராசி.
அட........ செல்லப் பிராணி தான் என்றாலும்  இப்படியா?

கூந்தல் இருக்கும் சீமாட்டி அமெரிக்கா!  சீவி முடிக்கிறா, சிங்காரிக்கிறா? நமக்கென்ன  வந்தது........ம்க்கும்... என்று பெரிய  பெருமூச்சை விட்டு விட்டு நகர்ந்தாள் ராசி.

அன்று மாலையே ராசிக்கு  இன்னும்  பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது .
மாலை எல்லோருமாக அங்கிருக்கும் சரவண பவனிற்கு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தனர்.

வரும் வழியில் ராஜேஷ் சொன்னான்," அம்மா  'மிஸ்ஸிங் பெட்'  நோட்டீஸ் பார்த்து ஆச்சர்யப்பட்டாயே!. இங்கே ஒன்று காட்டுகிறேன் பார்," என்று சொன்னான்.

"என்னடா ?"

காரை ஓட்டிக் கொண்டே ," இடதுப் பக்கம் பார்." என்றான்.


 " பார்லர் " என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்க  " ஆமாம்! பார்லர் இருக்கு அதற்கு என்ன ?' என்று   ராசி கேட்க

"யாருக்குப் பார்லர்?" என்று நன்றாகப் பார்த்து சொல் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தினான் ராஜேஷ்.

" ஆமாம்டா ' பெட் பார்லர் ' என்று போட்டிருக்கு. இங்கே என்னடா செய்வார்கள்? "என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே  ஒரு பெண்மணி ," வெள்ளை நாய்க்கு அங்கங்கே  பிங்க் கலரில் அதன் ரோமங்களை  கலரடித்துக் கொண்டு , அதன் தலையில் அழகிய' பிங்க் போ'வை சரி செய்து கொண்டே  அதற்கு முத்த மாரி பொழிந்து கெண்டே வந்தார். .

அருகிலிருந்த தன் காருக்கு சென்று," பின் சீட்டைத் திறந்து , அதைக் கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி சீட்டில் விட்டு, பிரியா விடை பெற்று முன் கதவைத் திறந்து,  டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டு காரைக் கிளப்பிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டிருந்த ராசிக்கு, மயக்கம் வரும் போலிருந்தது.

"எல்லாம் பணம் படுத்தும் பாடு!." நினைத்துக் கொண்டாள் ராசி.
இது நடந்தது சில வருடங்களுக்கு முன்பு.

இந்தியாவிலும், இப்பொழுது செல்லப் பிராணிகளுக்கு  பார்லர்கள் அங்கங்கே முளைத்து கொண்டிருக்கின்றனவே.
அப்படி என்றால் ராசியைப் பொறுத்த வரை நாமும் பணம் படைத்தவர்கள் தானே.(LOL)
,

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்