Thursday 16 February 2017

கற்சட்டியில் சமைக்கலாம் வாருங்கள் !

 ஒண்ட வந்த பிடாரியான பிட்சாவும், பர்கரும்,  நம் பாரம்பரிய தின்பண்டங்களான  சீடை , முறுக்கு , அதிரசம்.....போன்றவற்றை  விரட்டியது மட்டுமல்லாமல்,  சாதத்திற்குப் பதிலாக  நாம் பிரெட்  சாப்பிட ஆரம்பித்து விடுவோமோ  என்கிற  அச்சத்தையும்  உண்டு பண்ணி விட்டது. நம் உணவு முறை மாற்றத்தை நம் உடற்கூறு  ஏற்றுக் கொள்ளுமா அல்லது புது உணவு முறை நம்மைக் கொல்லுமா என்கிற மிகப் பெரிய பயம் தோன்றிய நேரத்தில் தான்.....மௌனமாய்  புரட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நம் சமையலறையில்  இப்பொழுது சிறு தானியங்கள்  வருகை புரிந்து நம்மைக் காப்பற்ற உறுதி கொண்டுள்ளன எனலாம்.

ஆரம்பத்தில், அவற்றை எப்படி சமைப்பது என்பது பற்றிய ஒரு சிறு தயக்கம் இருந்தது. ஆனால் இணையம்  அதற்கு பேருதவி  புரிந்தது எனலாம்.

சிறு தானியங்கள் சமைப்பது பற்றிய விடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறு தானிய உணவு  மிகப் பெரிய வரப் பிரசாதம் என்றும் சொல்கிறார்கள் .

சிறு தானிய வகையில், நான் வரகரிசி உபயோகம்  செய்ய ஆரம்பித்தேன்.பொங்கல்  செய்யும் போது நன்றாகவே வந்தது. அதையே சாதமாக சமைப்பது  என் திறமைக்கு சவாலாக இருந்தது.

வரகரிசியை  சாதாரண அரிசி போல் குக்கரில் வைத்தால் வரகரிசி கூழ் கிடைத்தது. பேசாமல் சாதத்தை ஒரு  டம்ளரில் கொடு. நான் அதில் சாம்பாரோ, ரசமோ, மோரோ கலந்து குடித்து விடுவேன் என்று சீரியசாய்  முகத்தை வைத்துக் கொண்டு என்னவர் அடித்த கிண்டலை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நகர்ந்தேன்.

வடித்தால் ஒருவேளை  நன்றாக வரும் என்று நினைத்து மறு நாள் சாதம் வடிப்பது போல்  வடிக்க ........ , அப்படி வடித்தால் கஞ்சி  வடிகட்டப் படுகிறதோ இல்லையோ , வரகரிசி கடுகு சைசில் இருப்பதால்  சாதமே கஞ்சியுடன் சென்று விடுகிறது. என்னவரோ பாத்திரத்திற்குள் எட்டிப் பார்த்து கண்ணிற்கு மேல் கையை அனைவாய்  வைத்து, " கண்ணிற்கு எட்டிய தூரத்தில் தான் சாதம் இருக்கிறது" என்று மீண்டும் என்னை நக்கலடித்தார். அன்று எப்படியோ சமாளித்தேன் .

பிறகு எப்படித்தான் இதை சமைப்பது  என்று யோசித்துக் கொண்டே  நம் கூகுளார்  உதவியை நாடினேன்.

"ஒரு பாத்திரத்தில் அரிசிக்கு வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் அப்படியே வைத்து கொதி வந்தவுடன், இறக்கி வைத்து தட்டால் மூடி, பிறகு இருபத்த்தைந்து நிமிடங்களில் திறந்தால் உதிர் உதிராக வரகரிசி சாதம் கிடைக்கும்." என்கிற செய்முறை கண்ணில் பட்டது.

எவர்சில்வர் பாத்திரத்தில், அப்படி செய்ததில் எனக்கு அப்படியொன்றும்  பெரிய திருப்தி கிடைக்கவில்லை.

மண் பாண்டத்தில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிற உபரி செய்தியையும் இணையம் சொன்னது. மண் பாண்டம் நமக்கு சரிப்படுமா?  "யார் மேலாவது இருக்கும் கோபத்தில்   ' நங்' என்று நீ மேடையில் வைத்தால், மண் பாண்டம் உடைந்து மேடைக்கு அன்னாபிஷேகம் செய்து விடுவாய் . அது தான் நடக்கும். பிறகு நாம் எல்லோரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தான்  " என்று அவர்  எச்சரிக்க ...

அப்பொழுது தான்  சட்டென்று மின்னலாய் உதித்தது......
என் தம்பி மனைவி ஆறு மாதத்திற்கு முன்பாக  எனக்கு ஒரு கற்சட்டி  பரிசளித்திருந்தாள்.

அதை கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நாள் பழக்கி  விட்டு,  வத்தக் குழம்பிற்கு உபயோகித்து  வந்தேன். அதுவும் இரண்டொரு முறை  உபயோகித்தப் பின் கவிழ்த்து வைத்த நான் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்து விட்டேன்.

மண் பாண்டத்திற்குப்  பதிலாக இதை உபயோகித்தால் என்ன.....தோன்றவே  யோசனையை செயல் படுத்தி பார்த்தேன்..இது மட்டும் உடையாதா என்று கேட்பவர்களுக்கு, "மண் பாண்டம் அளவிற்கு சட்டென்று கற்சட்டி உடையாது".

கற்சட்டியில் வரகரிசி சாதம் உதிர் உதிராக வெந்து என்னை அசத்தி விட்டது.எதிர்பார்த்தப் பலன் கிடைத்து ,எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

கற்சட்டிக்காக இந்தப் பதிவா? வரகரிசிக்காக இந்தப் பதிவா என்று கேட்டால் இரண்டுக்கும் தான் ......

இந்தக் கற்சட்டி சமையல் பற்றித் தெரியாதவர்கள் இதைத் தெரிந்து கொள்வார்களே என்று தான் பதிவிட்டேன்.

அது என்ன 'கற்சட்டி' என்பவர்களுக்கு , இது மாக்கல்லால் தயாரிக்கப்பட்டது. நம் பாட்டிக் காலத்தில்  சைஸ் வாரியாக  அடுக்களையில்  உட்கார்ந்திருந்த கற்சட்டிகளைத்   தொலைத்து விட்டு ,'நான் ஸ்டிக்' போன்ற நவநாகரிக பாண்டங்கள் பின்னால் ஓடினோம். அது உடல் நலனிற்குக் கேடு விளைவிக்கும்  என்பது இப்பொழுது புரிய வர ..

மீண்டும் பாரம்பரிய  பாத்திரமான  கற்சட்டியும், மண் பாண்டமும்,   நம் இல்லங்களுக்கு வருகைத் தர ஆரம்பித்திருக்கின்றன.

கற்சட்டியில் வத்தக் குழம்பு  வைத்துப் பாருங்கள். அலாதி சுவையோடு இருக்கும். சமைக்கும் உணவும் அதிக நேரம் சூடாகவே  இருக்கும்.

அதோடு இப்பொழுது 'ஸ்லோ குக்கிங்' ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரவலாக பேசப்படுகிறது. அதற்கும்  கற்சட்டி ஏற்றது தான்.கற்சட்டியில் அரிசியைப் போட்டு , அரிசிக்கு வேண்டிய அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரண்டியால்  அவ்வப்போது கிளறி விட வேண்டும். ஐந்து பத்து நிமிடத்தில் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது  அடுப்பை அணைத்து விட்டு , கீழே  இறக்கி விடவும். ஒரு தட்டால் கற்சட்டியை மூடி விடவும்.

பதினைந்து நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் பொலபொலவென்று சாதம் நம்மைப் பார்த்து சிரிக்கும்.



இத்தனைப் பலன்கள் இருப்பதால் தான் அக்காலத்தில்  இந்தப் பாத்திரங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். நாம் தான் அருமை தெரியாது அதை  எல்லாம் குப்பையில் போட்டு  விட்டோம்.

இனியாவது  அதையெல்லாம்  மீண்டும்  உபயோகிக்க ஆரம்பிப்போம்.
நம் பாரம்பரிய சமையல்  முறைகளை மீட்டெடுப்போம் வாருங்கள்.

அட..... நீங்கள் எங்கே கிளம்பி விட்டீர்கள்? கற்சட்டி வாங்கவா? இல்லை  மண் பாண்டம் வாங்கி வரவா?

அது சரி....கற்சட்டியை எப்படி பழக்குவது என்று யோசிக்கிறிர்களா? இது உதவி....
இந்த வீடியோவைப்  பாருங்கள் புரியும்.



நன்றி !




24 comments:

  1. அருமையான பதிவு
    நாங்களும் வரகரசியில் சமைத்துப் பார்க்க
    அது கூல் போல வர அதை
    உப்புமாவுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறோம்
    தங்கள் பதிவின் மூலம் ஒரு நல்ல
    தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கள்.

      Delete
  2. பலருக்கும் விழிப்புணர்வு தரும் + மிகவும் பயன்படக்கூடிய அனுபவப் பகிர்வு. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையாக இனிக்கக் கூடிய தகவல்களாகக் கொடுத்துள்ளீர்கள். மிகவும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  3. அருமையான பதிவு.
    நகைச்சுவையாக சொன்னீர்கள். வரகுஅரிசி பொங்கல் செய்வேன் நன்றாக இருக்கும்.
    கற்சட்டி வத்தல் குழம்பு , கீரை கடைசல் எல்லாம் நன்றாக இருக்கும். மறுநாள் வத்தல்குழம்பு அரைகீரையை சுண்ட வைத்தால் அந்த சுண்டகுழம்பு அவ்வளவு ருசி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி கோமதி. கீரைக் கடைசல் சுவையாய் இருக்கும் என்பது செய்தி. உங்கள் டிப்சிற்கும், வாழ்த்திற்கும் நன்றி கோமதி.

      Delete
  4. கண்டிப்பாக நம் பாரம்பரிய சமையல் முறைகளை மீட்டெடுக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  5. இராஜலக்ஷ்மி,

    உண்மைதாங்க, இனி கொஞ்சம் கொஞ்சமாக பாத்திரங்களை மாற்றிப் பழக வேண்டும்.

    இங்கு எனக்கும் வரகரிசி, பனி வரகு, குதிரைவாலி, சாமை, தினை என எல்லா சிறு தானியங்களும் கிடைக்கின்றன. பொங்கல், கிச்சடி எல்லாமும் இதில்தான், சமயங்களில் சாதமும் வைப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்சது வரகுதான்.

    ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டால்கூட சாதம் அடியில் ஒட்டாமல் வேகும்.

    கற்சட்டி எங்கு கிடைக்கும் ? தெரிந்தால் ஊருக்கு வரும்போது வாங்கிக்கொண்டு வரலாம் :) மண் சட்டிக்கு எண்ணெய்கூட அதிகம் தேவைப்படாது.

    இங்கும் மண் சட்டி கிடைக்கிறது, ஆனால் ஒரு பத்து பேருக்கு செய்யும் அளவில் பெரியதாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா நீங்கள் சிறுதானியங்கள் உபயோகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
      உங்கள் கடலூர் மாவட்டத்தில் கற்சட்டி கிடைக்கும் என்று நினைக்கிறேன். சென்னையில் 'சுந்தரி சில்க்ஸ் ' கடையில் கிடைக்கிறது.மயிலாப்பூரில் கிடைக்கிறது.
      அடுத்த முறை இந்தியா வரும் போது கண்டிப்பாக வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சித்ரா.

      Delete
  6. கற்சட்டி சமையல் ..சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் என்னைப் பாராட்டுவதற்கும் நன்றி அனு

      Delete
  7. நான் மண்சட்டியில் தான் கடந்த நான்கு வருடங்களாக சாம்பார், கூட்டு, வத்தக்குழம்பு போன்றவற்றை செய்கிறேன். சிறுதானிய அடையும் அடிக்கடி செய்வதுண்டு..பொங்கல், கிச்சடி போன்றவையும் நன்றாக இருக்கும்.கற்சட்டி பற்றி என் மாமியார் நிறைய சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆதி .

      Delete
  8. இது முன்னேற்றமா பின் இறக்கமா. கற்சட்டி என் வீட்டிலும் இருக்கிறது ஆனால் வரகரிசி பெங்களூரில் என்ன பெயரில் இருக்கிறதோ

    ReplyDelete
    Replies
    1. இது நமது பாரம்பரியம் . நாம் அவைகளை விட்டு விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். மீண்டும் அவைகளைத் தேடிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
      பெங்களூரில் 'Big Basket' online shoppingஇல் கிடைக்கிறது. ' varagu' என்று ஆங்கிலத்திலேயே டைப் செய்யலாம். இல்லையென்றால் 'Kodo Millet' என்று டைப் செய்தால் கிடைக்கிறது.
      நன்றி சார்,

      Delete
  9. பலே பலே!
    கல் சட்டியும் பிரமாதம். பதிவும் பிரமாதம்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு க்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  11. புதுசா ஒரு கற்சட்டி கிடைக்க இருக்கே, அதை பழக்கணும் பழக்கனும்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு வலையை வீசிப் பார்த்தேன், வசமா சிக்கினது உங்கள் பதிவு. ஆஹா! டபுள் தமாகா போல கற்சட்டி மகிமையுடன் வரகரிசியை சமைக்கும் விதமும் தெரிஞ்சாச்சு. ஆனா, கற்சட்டியை எப்படிப் பழக்கனும்னு தெரியலையே...அதையும் இங்கே கொஞ்சம் சொல்ல முடியுமா மேடம்?

    ReplyDelete
    Replies
    1. அட.....கற்சட்டி வாங்கிவிடீர்களா? அதை பழக்கலாம் வாருங்கள் ....பெரிய கம்ப சூத்திரம் இல்லை.

      உங்களுக்கு சொல்வதற்கு என்ன? உங்களுக்காக ஒரு வீடியோவே போட்டு விடுகிறேனே. இணைப்பு உங்கள் மெயிலிற்கு அனுப்புகிறேன். அதுவரை என்னுடைய மற்ற வீடியோ பார்த்து உங்கள் மேலானக் கருத்துக்களை சொல்லுங்களேன்.
      sample வீடியோ இணைப்பு இதோ: https://youtu.be/zUGjeav4MqY

      Delete
    2. ஆஹா! சுடச்சுட உடனே பதில்...அதுவும் எனக்காக ஒரு வீடியோ தருவதாக செய்தியுடன்...உங்கள் மெயில் மற்றும் பதிலைப் பார்த்தும் உடனே ரிப்ளை செய்ய முடியாதபடி நடுஇரவா போச்சு...அப்படியும் ஒரு பதிலை போனில் மெனெக்கெட்டும் publish பண்ணுவதற்கு பதில் signout பண்ணி.....:( :(

      உங்கள் லிங்கை பார்த்துட்டேன்....சூப்பர். யூட்யூபில் ஒரு வீடியோதான் பார்த்தேன், இங்கே உங்கள் சமீப போஸ்ட்களில் கோலம் போடுவது, வெந்தய மகிமைன்னு சிலது பார்த்திருக்கேன். As usual, Very Attractive writing style.

      உங்கள் எழுத்து எனக்குப் புதுசே இல்ல தெரியுமா? Infact, நீங்க எனக்கு ஒரு ஆசான்...சுமாரா ரெண்டு வருஷம் முன்ன உங்களோட அப்பாவி விஷ்ணு புத்தகத்தை படிச்சு வயிறு வலிக்க சிரிச்சு (வீடியோக்களின் நடுவே விஷ்ணு சார் வந்து அப்பப்போ ஜோக் கூட அடிக்கறார் போலிருக்கே...)

      அப்புறம் மத்த போஸ்ட்ஸ் எல்லாம் கூட படிச்சிருக்கேன். சிலதுல கமெண்டியும் இருக்கேன்...(உடனே நினைவுக்கு வரதுன்னா அது நீங்க எழுதின கதையிலன்னு நினைக்கறேன்....) ரொம்ப inspire ஆகி அதே சூட்டோட, ஆஹா, நாமளும் பல்பு பல்பா வாங்கியிருக்கொமே, அதையெல்லாம் பதிவு பண்ணுவோம்னு ஒரு பிரபல forum ல் நான் கேக் பேக் செய்து பேக்கான அனுபவங்களை தொடர்ந்து எழுதி பிறகு நிறைய சீரியஸாவே ரெசிபிஸ் கொடுத்து வலையுலகில் வலது இடது ரெண்டு காலையும் எடுத்து வைச்சு தொபுக்....


      இப்போ, சமீபமா ஒரு ப்ளாக் தொடங்கி அதில விளையாட முடியாம, வாலை சுருட்டிண்டு சமத்தா ரெசிபிஸ் மட்டும் தரேன்...

      நம்ம ரசிகைதானேன்னு உங்கள் நேரத்தை கொஞ்சம் அப்படிக்கா வந்து spend பண்ணி மேலான கருத்துக்களை சொன்னா சந்தோஷப் படுவேன்.


      என் ப்ளாக்

      foodstepsinthekitchen.com

      Delete
    3. சித்ரா,

      கல்சட்டி பற்றிய வீடியோ இணைப்பு இதோ

      https://youtu.be/UJkdNCJmNJk

      உங்கள் மேலானக் கருத்துக்களையும், சந்தேகம் இருந்தால் அதையும், வீடியோவிற்குக் கீழே உள்ள கமெண்ட்ஸ் பாக்சில் எழுதினால் மகிழ்வேன். நன்றி.

      வீடியோ இரண்டில் கருத்திட்டுள்ளேன்.உங்கள் சானலிற்கு subscribe செய்து விட்டேன். உங்கள் பதிவிற்கும் வந்து கருத்திடுகிறேன்.

      நீங்கள் என் வீடியோக்களையும், பதிவுகளுக்கும் வருகைத் தருவது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். மிக மிக அருமை. உங்கள் போட்டோக்களில் நீங்கள் காட்டும் சிரத்தை உங்களுக்கு பதிவுகளின் மேல் இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. என்னமாய் வர்ண ஜாலம் புரிந்திருக்கிறீர்கள். ஹெஆடிங் ஒவ்வொன்றையும் தட்டினால் ஒவ்வொன்றும் வேறொரு உலகத்திற்கு இட்டு செல்கிறது. என் அப்பாவி விஷ்ணு மின்னூல் தரவிறக்கி ரசித்துப் படித்து சிரித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்