Tuesday 17 December 2019

கம்பனும், ஆன்லைனும் .(கம்பன் என்ன சொல்கிறான் - 15)



Image Courtesy : Raja Ravi Press (Public Domain)
கம்பனும், கொடியும் படிக்க இங்கே க்ளிக்கவும்.


"பாருங்க நீங்க சொல்ற பூத்தொட்டி ஆன்லைனில் கிடைக்குது. எத்தனை வேணும் நமக்கு?" அவரிடம் கேட்கவும்,
 'ஐந்து வேண்டியிருக்கும் நமக்கு' 

ஆர்டரும்செய்தாச்சு.

பிறகு அந்த ஆர்டர் பற்றி சுத்தமாக மறந்தும் விட்டேன்.

இரண்டு நாள் கழித்து....

"டிங் டாங்"

கதவைத் திறந்தேன்...... டெலிவரி பாய் .

கையில் பார்சல்.

"எங்களுக்கா?" குழப்பத்துடன் கேட்டேன்.

உள்ளேயிருந்து என்னவர்," பூத்தொட்டி ஆர்டர் செய்தோமே. மறந்துட்டியா?" என்ற சொன்னதும் தான் ... நினைவிற்கு வந்தது.

கையெழுத்திட்டு வாங்கினேன்.

"ஆமாம் . நாம் பெரிய தொட்டியல்லவா ஆர்டர் செய்தோம்." என்று சொல்லிக் கொண்டே  பார்சலைப் பிரித்தேன்.

எழுந்து ஹாலுக்கு வந்து கொண்டே ," ஏன் ...கொஞ்சம் சின்ன தொட்டியாக வந்துடுச்சா? " என்னவர் கேட்க..

"கொஞ்சம் சின்னதா?.....
 பேனா ஸ்டாண்டை விடவும் கொஞ்சமே கொஞ்சம் பெரிசு. அவ்வளவு தான்." என்று சொல்லிக் கொண்டே அவரிடம் காட்டினேன். 

ஆர்டர் செய்யும் போது அகல உயரத்தைக் கவனிக்காதது யார் தப்பு? சொல்லுங்கள்..... நாங்கள் தப்பாக கணித்து விட்டு.....?

இந்த மாதிரி தாடகையைத் தப்பாக கணித்து விடப் போறோமே என்று கம்பர் கவலைப்பட்டிருப்பார்  போல் தோன்றுகிறது.

அதனால் பால காண்டத்தில் தாடகையை எப்படி சிரத்தையுடன் வர்ணிக்கிறார் பாருங்கள்.

ராமன்,.. தாடகை என்கிற ஆக்ரோஷ பெண்மணியோடு சண்டைப் போட்டு ஜெயித்தான் என்ற நாம் சாதரணமாக நினைத்து விடக் கூடாதே என்று மெனக்கெடுகிறார்.

அவளுடைய பயங்கர  உருவத்தை எப்படி சித்தரிப்பது என்று ரூம் போட்டு யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். 


அவள் கால்களில் போட்டிருக்கும் சிலம்புகளுக்கிடையில்  பெரிய மலைகள் மாட்டிக் கொண்டு நெறிப் பட்டு நொறுங்கிப் போகின்றனவாம்.

அப்படியென்றால் எவ்வளவு பெரிய சிலம்பு? கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பெரிய சிலம்புகள் போட்டிருக்கும் கால்கள் எப்படியிருக்கும். அப்படியென்றால் தாடகை தோற்றம் எப்படியிருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறதல்லாவா!


மிகப்பெரிய உருவம் என்று சொல்லிக் காட்டி விட்டார். ஓகே! ஆனால் அவள் பலம் வாய்ந்தவள் என்று சொல்ல வேண்டுமானால் அவள் weight எவ்வளவு ?

அவளை 'வெயிட் மெஷினில்' நிற்க சொல்லியா weight பார்க்க முடியும். 

கம்பராச்சே ! அவருக்குத் தெரியாத டெக்னிக்கா?

சொல்கிறார் பாருங்கள்...

அவள் 'டங் டங் ' என்று பூமி அதிர நடக்கும் போது மலைகள் எல்லாம் நெறிப்படுவதுமில்லாமல் சில மலைகள் அவள் சிலம்பில் மாட்டிக் கொண்டு விட்டனவாம்.(கொலுசில் புடைவை மாட்டிக் கொள்வது போல)  அவளோ தர...தர... என்று மலைகளை இழுத்துக் கொண்டு அனாயசமாக நடந்து வருகிறாளாம்.

அது மட்டுமா! அவள் பாதம் வைக்கும் இடமெல்லாம் பெரிய பெரிய குழிகள் உருவாகிறதாம். அப்படி உருவான குழியில் கடல் நீர் ஓடி வந்து ரொம்பி விடுகிறதாம். 

ஆமாம் அயோத்தி அருகில் எங்கே கடல் வந்தது? என்று கம்பருடைய Geography புலமையை யாரும் சந்தேகிக்க வேண்டாம்.

தாடகை கால் வைத்ததால் ஏற்பட்டக் குழி, Sea Level ஐ விடவும் கீழே போய் விட்டிருக்கும்.  
அதனுள் கடல் நீர் ஓடி வர எத்தனை நேரம் பிடிக்கும் சொல்லுங்கள். ? உங்களுக்கு சுனாமி நினைவிற்கு வந்திருக்குமே.(கம்பருடைய கற்பனை கடலை விட ஆழமாக அல்லவா இருக்கிறது!)

அவளைப் பார்த்தாலே யமன் அஞ்சி நடுங்கி குகைக்குள் ஓடி ஒளிந்து கொள்வானாம்.

இப்பேர்பட்ட பயங்கரமான தாடகையை, இளைஞனான ராமன் வதம் செய்யப் போகிறான் என்று சொல்ல வருகிறார் கம்பர்.

தாடகையை விவரிக்கும் கம்பன் வரிகள் இதோ...
பால காண்டம். தாடகை வதைப் படலம். பாடல் எண்  389


சிலம்புகள் சிலம்பு இடை
    செறித்த கழலோடு
நிலம்புக மிதித்தனள்;
    நெளித்த குழி வேலைச்
சலம்புக, அனல் தறுகண்
    அந்தகனும் அஞ்சிப்
பிலம்புக, நிலை கிரிகள்
    பின் தொடர, வந்தாள்.


கால்களில் அணிந்த சிலம்புகளுக்கு இடையே  மலைகளைச் செறியும்படி வைத்த கால்களோடு நிலம் கீழே புகும்படி மிதித்தாள். அதனால் நெளியப் பெற்ற குழியில் கடல் நீர் புகுந்தது. அவளைப் பார்த்து நெருப்பென விழிக்கும் வலிமை மிக்க எமனும் பயந்து, குகைக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, நிலத்திலுள்ள மலைகளெல்லாம் பின்னே தொடர்ந்து  வர, தாடகை நடந்து வந்தாள்.

ராட்சசியான தாடகையை ராமனின் அம்பு எப்படிக்  கொன்றது என்பதைப் பிறகு பார்ப்போமா?

நன்றி.



Tuesday 10 December 2019

கம்பனும், கொடியும். (கம்பன் என்ன சொல்கிறான் - 14)


Image Courtesy : Google.



கம்பனும், கொசுவும்(கம்பன் என்ன சொல்கிறான்-13) படிக்க இங்கே க்ளிக்கவும்.


" அங்கே பாருங்க .  அவள் கூப்பிடறாள் பாருங்க.."


"யாரு?.....யாரை?"

"நம்ம ரெண்டு பேரையும் தான்."

யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று கூட்டத்தின் நடுவில்.. கணவன் துழாவிப் பார்க்கிறான். யாரையும் காணவில்லையே....யாரை சொல்கிறாள் இவள் .

தி.நகர் தீபாவளி நெரிசலில் எளிதில் கண்டு பிடித்து விட முடியுமா என்ன?

"தெரியலையாங்க... அதாங்க  ...... வணக்கம் சொல்லி கூப்பிடுகிறாள் பாருங்க அந்தப் பெண்."

மனைவி யாரைக் காட்டுகிறாள் என்று புரிந்து போனது கனவனுக்கு.

ஜவுளிக் கடை பொம்மை.

அந்த ஜவுளிக் கடைக் கூட்டம் மட்டும் பயமுறுத்தவில்லை.பர்சின் கனமும், கணிசமாய் குறையுமே என்கிற பயம் தான் கணவனுக்கு. 

சாமர்த்தியமாக சமாளித்தான் கணவன்..
" அடி அசடே ! அந்த மெஷின் பொம்மை சொல்றது உனக்குப் புரியல ?

என்ன?

"நன்றி!.. வீட்டுக்குப் பத்திரமா போய் வாருங்கள் " அப்படின்னு சொல்லுது.  போகலாம் வா.. என்று கணவன் சொல்ல...மனைவி "க்கும்...."என்று கழுத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.


மெஷின் பொம்மை "வா" என்று சொல்வதில் என்ன அதிசயம் சொல்லுங்கள். 
மிதிலை நகரக் கொடிகள்  செய்வதைப் பாருங்கள்...

தூரத்தில் விசுவாமித்திரர், ராம லஷ்மணர்களுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  வயதானதால் ஏற்பட்ட அசதியோ என்னவோ... ஒரு சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் போலும்.
அவர் நின்றதும், பின்னால் வந்த தசரத குமாரர்களும் 'பிரேக்' அடித்தாற் போல் நின்று விடுகிறார்கள் .  குருவைத் தாண்டிப் போய் விடக் கூடாதல்லவா? அதோடு விசுவாமித்திரர் கோபம் பிரசித்திப் பெற்றதாயிற்றே. எதற்கு வம்பு ? அவர் வாயில் விழுந்து புறப்பட வேண்டுமா ? என்றும் இவர்கள் நின்றிருக்கலாம்.

சரி. எதற்கோ நின்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அதுவும் மிதிலைக்கு மிக அருகில்....

மிதிலையில் சீதாவின் சுயம்வரத்தை முன்னிட்டு கோலாகலமாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எங்கும் மலர்களாலும், கொடிகளாலும், தோரணங்களாலும்....

ராம லக்‌ஷமணர்கள் வருவதை முதலில் பார்த்தது இந்தக் கொடிகளாய் தான் இருக்கும். உயரத்தில் இருப்பதால்..

ராஜகுமாரி சீதையை மணமுடிக்கப் போகும் ராமன் வருவதைப் பார்த்து கொடிகள் மகிழ்ச்சியில்  ஒன்றொடு ஒன்று கைக் கோர்த்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தன. (தூக்குத் தோரணக் கொடிகள் - அதாவது மாவிலைத் தோரணம் போல் கட்டப்பட்டக் கொடிகள்.)

அவர்கள் பிரேக் போட்டதைப் பார்த்ததும், கொடிகள் ," என்னடா இது? இவர்களுக்கு மிதிலைக்கு வழித் தெரியவில்லையோ? Google Map பார்க்க வேண்டியது தானே." பேசிக் கொண்டனவோ.

"ராமா ..... வாடா.... ராமா...நீ எங்கே left, Right என்று திரும்பிப் பாக்கறே? மிதிலை இங்கே தான் இருக்கு.  உன் கரம் பற்றப் போகும்  சீதை இங்கு தான் இருக்கிறாள். " என்று கத்த வேண்டும் போல் இருந்திருக்கும்.

ஆனால் கொடி ஆயிற்றே! எப்படிக் கத்த முடியும் சொல்லுங்கள். 

அதனால்....master plan செய்து விட்டு கை கோர்த்துக் கொண்டு ரெடியாக காத்துக் கிடந்தன.

ஒரு பெரிய காற்று அடித்தது. தங்கள் பிளானை நிறைவேற்றிக் கொண்டன...எப்படித் தெரியுமா?

எல்லாம் ஒன்றாக காற்றில் மேலே பறந்து ராமனைப் பார்த்து," வா...வா...." என்பது போல் பட..பட...என்று அடித்துக் கொண்டனவாம்.

கம்பனுக்கு மட்டுமே இப்படியொரு கற்பனை உண்டாகும்..

இதை விவரிக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போமா...

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்: என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


காவல் மிக்க அந்த மிதிலை நகரம்," திருமகளானவள் குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து, நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால் என்னிடம் வந்து பிறந்துள்ளாள்" என்று கூறி பெரிய அழகிய கொடிகள் என்கிற தன் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டுவது, தாமரைப் போன்ற கண்களைக் கொண்ட ராமனை விரைவில் வந்து சேர்க என்று அழைப்பதைப் போன்றுள்ளது.

கம்பன் சொல்லும் காட்சி .....வீடியோவாய் உங்களுக்கு விரிந்திருக்குமே! ரசித்துக் கொண்டிருங்கள்....

வேறொரு கம்பனின் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்..
நன்றி.

Monday 2 December 2019

கம்பனும், கொசுவும்(கம்பன் என்ன சொல்கிறான்-13)




பட உதவி ; www.dinakaran.com

கம்பனும், Breaking Newsம் படிக்க இங்கே க்ளிக்கவும். 

'ஙொ....ய் ... 'சத்தம் சன்னமாய் வந்தது.
"காதருகில் 'கிசு கிசு' என்று கொசு என்ன ரகசியம் சொல்கிறது. " கிண்டலாக அவரிடம் கேட்டேன்.

" Please Wait. சீக்கிரமே உன் காதுக்கும் கொசு வழியாகவே அந்த ரகசியம் எட்டும்." அவரும் பதிலுக்குக் கிண்டலடிக்க, 
(கொசு விரட்டிக்கெல்லாம் 'பெப்பே' என்கிறது கொசு.)

கொசுவைப் போல வண்டுகளும் ரீங்காரம் செய்யுமே.

வாங்க...மிதிலைக்குப் போய் அதையும் பார்த்து விடலாம்.

மிதிலாபுரி சொர்க்கபுரியாக காட்சியளிக்கிறதே!
மக்களெல்லாம் என்ன மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஆடுவதும், பாடுவதுமாய்... இருக்காதா பின்னே. திருமகளே அங்கே அவதரித்திருக்கிறாளே! வளத்திற்கு என்ன குறைவு இருக்கப் போகிறது சொல்லுங்கள்.

சரி....விஷயத்திற்கு வருவோம்...வண்டுகளும் கூட்டம் கூட்டமாய் ரீங்காரம் செய்கின்றன.

அப்படி என்ன தான் ரகசியம் பேசுகின்றன? கேட்போமா?

" எதுக்கடி இப்படி கத்தறே..அதுவும் என் காது கிட்ட வந்து?"

" அதுவா... அங்க பார். அந்தப் பெண்ணை ."

" ஏன் அவளுக்கு என்ன?"

அதற்குள் இன்னொரு வண்டு வீல் என்று அலற,

'உனக்கென்ன ஆச்சு?'

'அந்தப் பெண் படும் பாட்டைப் பார். எனக்குப் பயமா இருக்கு.'

கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவு வண்டுகளும் பதட்டத்துடன் பேசிக் கொள்கின்றன.

'எனக்கும் பயமா இருக்குடி. இந்தப் பெண்கள் ஆடும் ஆட்டத்தில் அவர்களின் மெல்லிய இடை வலிக்காதோ? எவ்வளவு மெல்லிய இடை. ஆட்டத்தின் அதிர்ச்சியைத் தாங்குமா?  '

இதைத் தான் அந்த வண்டுகள் பேசுகின்றனவாம்.

அப்படி என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் மிதிலாபுரி பெண்கள்?

ஊஞ்சல் தான்..... வேறொன்றுமில்லை.

எங்கே இருக்கு ஊஞ்சல்?

பாக்கு மரத்தில்.....


சரி... இந்த வண்டுகள் எங்கிருந்து வருகின்றன. வேறெங்கேருந்து? பெண்கள் வேகமாக ஆடும் போது, அதிர்ச்சியினால் அவர்கள் சூடியிருக்கும் பூக்களிலிருந்து தான் மேலே எழும்பியிருக்கின்றன. 

அவை மேலே எழும்பும் போது ஏற்படும் ஆரவாரம், பெண்களின் இடைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதைப் போல் இருந்ததாம் கம்பருக்கு. (கற்பனையில் கம்பருக்கு இணை கம்பரே!)


'மாசுறு பிறவி போல'  ஊஞ்சல் ஆடுவதை வர்ணிக்கிறார்.
 இறைவனடி சேர்வதும், பிறப்பெடுப்பதும் எப்படி மீண்டும் மீண்டும் நடைபெறுகிறதோ அப்படி ஊஞ்சல் முன்னும் பின்னுமாய் ஆடுகிறதாம்.
(கம்பரைத் தவிர யாரால் இப்படி ஊஞ்சல் ஆடுவதற்கு உவமை சொல்ல முடியும், சொல்லுங்கள்.)

ஒரேயடியாக தத்துவத்தில் நம்மை மூழ்கடித்து விடாமல் ' மைந்தர்  சிந்தையொடு உலவ' என்று சட்டென்று ஜனரஞ்சகமாக சொல்லி முடிக்கிறார்.
அதாவது, இடை மெலிந்த அழகான பெண்கள் ஊஞ்சலாடும் போது, அவர்களைப்  பார்க்கும் இளைஞர்கள் மனமும் கூடவே ஆடியதாம்.

இதோ அந்தப் பாடல்.. பால காண்டம் . மிதிலைக் காட்சிப் படலம். பாடல் எண். 573.

பூசலின் எழுந்த வண்டு 
  மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல 

  வருவது போவது ஆகிக்,
காசு அறு பவளச் செங்காய் 

   மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் 

 சிந்தையொடு உலவக் கண்டார்.  

குற்றம் அற்ற பவளம் போல சிவந்த காய்களையுடைய, மரகதம் போல பச்சை நிறப் பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே பெண்கள் ஆடுகிறார்கள். குற்றம் நிறைந்த பிறவி போல (மாறி மாறி) வருவதும், போவதுமாக ஊஞ்சல்  ஆட, (பார்க்கும்)  ஆண்களின் மனமும் கூடவே ஆடுகின்றன. ஆரவாரத்தோடு மேலே எழுந்த வண்டுகள் அவர்கள் இடையின் மென்மைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதையும் (ராம லக்குமணர்) பார்த்தார்கள்.  

ஒரு வீடியோ பதிவைப் போல் இருக்கும் இந்த  வரிகளில் மெய் மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறதே!

இன்னொரு கம்பர் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.

Tuesday 26 November 2019

கம்பனும், Breaking Newsம் (கம்பன் என்ன சொல்கிறான்?-12)


Image Courtesy :https;//bhagwanbhajan.com

"அம்மா! அம்மா!"

"என்னடா....?"காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டே அம்மா கேட்க...

"அம்மா.... "மீண்டும் ரிஷி கெஞ்சும் குரலில் கூப்பிட...

"என்னடா வேணும் உனக்கு?" அம்மா ஸ்ட்ரெயிட் ஆக பாயிண்ட்டிற்கு வ்ந்தாள்.

" அம்மா... காலேஜுக்கு பஸ்ஸில் போக ரொம்பக் கஷ்டமாருக்குமா. "

" ஏண்டா?"

" ஒரே கூட்டம் எப்பவும். எவ்வளவு நாள் தான் ஃபுட்போர்டிலேயே  போவது... சொல்லு."

ரிஷி எதற்கு அடி போடுகிறான் என்று அம்மாவுக்குப் புரிந்து போனது. போன வருஷத்திலிருந்து பைக் வேணும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.

"நான் அப்பாவிடம் பேசி உனக்குப் பைக் வாங்கித் தர சொல்றேண்டா." சொன்னவுடன் ரிஷி சந்தோஷமாக விசில் அடித்தான். 

ரிஷியை சந்தோஷமாக பார்க்க அம்மாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அம்மாக்களே இப்படித் தான்....மகனுக்காக அப்பாவிடம் வக்காலத்து வாங்குவது...

ஆனால் கைகேயி இன்னும் ஒரு படி மேலே போனாள்...
அவளும் பரதனுக்காக அவன் அப்பாவிடம் பேசி வாங்கிக் கொடுக்கிறாளாம். பைக் இல்லிங்க....அரசாங்கத்தையே வாங்கிக் கொடுக்க நினைக்கிறாளாம். அதுவும் பரதன் கேட்காமலே. ஆனால் பரதன் அதை ஏற்றுக் கொள்ளாததோடு, கைகேயியைப் பேய் என்றும் திட்டினான் என்பது வேறு விஷயம்.

எப்படி தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள் என்று பார்ப்போம்.

கைகேயி அழுது புலம்பி, அடம் பிடித்து தன் இரண்டு வரங்களையும் தசரதனிடமிருந்து வாங்குவதில் success ஆகிறாள். தசரதன் மிகுந்த வருத்தத்துடன் தரையில் வீழ்ந்து கிடக்கிறான்.

வரம் வாங்கியாச்சு.. அதை செயல் படுத்தணுமே. காலத்தை வீணடிக்காமல் (கணவனைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல்) ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள் கைகேயி.

உடனே அங்கே ராமனும் ஆஜர்...

அப்பாவை பார்த்து விட்டு ராமன் பதறுகிறான்." என்ன ஆச்சும்மா அப்பாவுக்கு?"

கைகேயி அவனை முதலில் சமாதானப் படுத்துகிறாள்,"உன் அப்பாவுக்கு ஒன்றுமில்லை ராமா. அவர் உன்னிடம் எதையோ சொல்லனும்னு நினைக்கிறார். எப்படி சொல்வது என்கிற தயக்கம் தான். வேறொன்றுமில்லை."

"நீங்கள் சொல்லுங்கள் அம்மா.அப்பா சொன்னால் என்ன? நீங்கள் சொன்னால் என்ன? ரெண்டும் ஒன்று தான். நான் நிறைவேற்றுகிறேன்." ராமன் வாக்குக் கொடுக்கிறான்.

" வாக்குக் கொடுப்பதில் அப்பனை மகன் மிஞ்சி விடுவான் போலிருக்கே" கைகேயி மனதுக்குள் சிரித்துக் கொண்டிருப்பாள்.

ராமனிடம் நைச்சியமாக சொல்ல ஆரம்பிக்கிறாள்.

" அது ஒண்ணுமில்ல ராமா .... நீ புண்ணிய நதிகளில் நீராடி வரணும் ராமா."

"இதென்ன பெரிய விஷயம் அம்மா..இதோ உடனே கிளம்புகிறேன். "

" அட.... இரப்பா ராமா. நான் இன்னும் முடிக்கல.."

"சொல்லுங்கம்மா.."

"அதோடு நீ தவமும் செய்ய வேண்டும் ராமா."
எங்கே தவம் செய்யணும் தெரியுமா? காட்டிற்குப் போய் தவம் செய்யணும்."

"அப்படியே செய்கிறேன் அம்மா."(இதை...இதை.....இதைதான் நானும் எதிர் பார்த்தேன் - நினைத்துக் கொண்டிருப்பாள்  கைகேயி.)

வரிசையாக ஆர்டர் பிறப்பித்துக் கொண்டே வருகிறாள் கைகேயி.
சற்றே குழம்பியிருப்பான் ராமன். என்ன ஆச்சு அப்பாவுக்கு. "நாளையிலிருந்து நீ தாண்டா ராஜா...அப்படின்னு அப்பா ராத்திரி சொன்னார். இப்ப என்னடான்னா கைகேயி அம்மா காட்டுக்குப் போ என்கிறாள். யாரைத் தான் நம்புவதோ ...என்று தோன்றியிருக்குமோ ராமனுக்கு."

Wait Rama! Wait! Here comes 
                     the Breaking News...

கைகேயி தொடர்கிறாள், " ராமா... இன்னும் ஒன்று இருக்கு ராமா....உன் தம்பி பரதனுக்குத் தான் பட்டாபிஷேகம் நடக்கும். அவன் நாட்டை ஆளுவான். நீ ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்த பின் காட்டிலிருந்து திரும்ப வேண்டும்." சொல்லி விட்டு ...
(அவளால் ராமனைக் காட்டுக்குப் போ என்று சொல்ல வாய் வரலையாம். அதனால் ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்து காட்டிலிருந்து வா என்று சொல்கிறாளாம். வளர்த்த பாசம் தடுக்கிறதோ!)

"இதையெல்லாம் நான் சொல்லவில்லை ராமா. இதெல்லாம் உன் அப்பாவான அரசன் ஆணை. உன்னிடம் சொல்ல சொன்னார். "  என்று முடிக்கிறாள் கைகேயி.

என்னா சாமர்த்தியம்! தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு தசரதன் சொன்னானாம்... எப்படியிருக்குக் கதை..

சரி விடுங்கள்...அது தசரதன் தலை வலி.

இதை விளக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போம்...

அயோத்தியா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்.1690

"ஆழி சூழ் உலகம் எல்லாம் 
   பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கித், 
   தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், 
   புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று, 
   இயம்பினன் அரசன்"என்றாள்

கடலால் சூழப் பட்ட உலகம் முழுவதையும், பரதனே முடி சூடி ஆண்டுக் கொண்டிருக்க நீ நாட்டை விட்டுச் சென்று, தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக் கொண்டு, தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறந்த கொடிய காட்டை அடைந்து , புன்னியத் தீர்த்தங்களில் நீராடி,பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வருவாய் என்று  அரசன் சொன்னான் என்றாள்.

இந்தக் கம்பன் பாடல் ரசிச்சாச்சா?மீண்டும் இன்னொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.

Tuesday 19 November 2019

கம்பனும், காதலும்(கம்பன் என்ன சொல்கிறான்?-11)


'ஜானு.....ஜானு ' இது அம்மா கூப்பிடும் குரல்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு,
மீண்டும்,'ஜானு.....' என்று அம்மா குரல் கொடுக்க ஒரு பதிலும் வரவில்லை.

கையில் சாம்பார் கரண்டியுடன், அம்மா ஹாலுக்குள் எட்டிப் பார்க்க, டிவி மட்டும் அனாதையாய் அழுது கொண்டிருந்தது.

'எங்கே தொலைந்தாள் இவள்.' முணுமுணுத்துக் கொண்டே  அம்மா அறையில் எட்டிப் பார்க்க... அங்கே ஜானு கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன் அழகை தானே ரசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா கூப்பிட்டது ஒன்றும் ஜானு காதில் விழுந்தமாதிரி தெரியவில்லை. 'என்னாச்சு இந்த பெண்ணுக்கு?' அம்மா நினைக்கவும்,  படுக்கை மேல் கிடந்த ஜானுவின் போன் இனிமையாய் ஒலிக்கவும் சரியாயிருந்தது.

போன் ஒலியாலும் ஜானுவின் கண்ணாடி தியானத்தைக் கலைக்க முடியவில்லை போலும்.

அம்மாவிற்குப் புரிந்து விட்டது ஜானுவுக்கு  என்னாச்சுன்னு.

உங்களுக்கும் புரிந்திருக்கும்..இனி ஜானுவாச்சு, அவள் அம்மாவாச்சு....

மேலே சொன்னது டீ.வி சீரியல் ஒன்றின் காட்சி.

கம்பராமாயணத்தில் சீதையும் இப்படித்தான் இருக்கிறாளாம்.

எப்போலேருந்து?

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதிலிருந்து தான் இந்த வியாதியாம் சீதைக்கு.


சீதையின் நெருங்கிய தோழிகள்,'நம் ராஜகுமாரிக்கு என்னாச்சு?' ஏன் இப்படி விட்டத்தையே வெறித்துப் பார்ப்பதும், தனக்குள்ளே சிரிப்பதும்......ஒன்றும் சரியில்லையே " சொல்லிக் கொள்கிறர்கள்.

சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை  'சீதை! சீதை! என்று கூப்பிட சீதை எதையோ நினைத்து தனக்குள் புலம்புகிறாள்.

நீலமாலை சீதையின் தோளைப் பிடித்து உலுக்கி," என்னடி ஆச்சு உனக்கு. என்னடி புலம்புகிறாய்?" கேட்க....

'எனக்கென்ன ஆச்சு? ஒன்றும் இல்லையே ! ஒன்றும் இல்லையே!' சீதை அவசர அவசமாக உரைத்தாள்.

'ஆனால் எனக்குப் புரிஞ்சு போச்சுடி' நீலமாலை சொல்லவும், சீதை பொய்க் கோபத்துடன்,' என்னடி உனக்கு இப்ப புரிஞ்சு போச்சு.?' முறைத்தாள்.

'நீயும் நானும் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பலேருந்து தான் நீ இப்படி இருக்கிறாய்.' சொல்லிக் கொண்டே சிந்திக்க ஆரம்பித்த நீலமாலை தொடர்ந்தாள்...
'ஆ....தெரிந்து விட்டதடி. விளையாடும் போது வெளியே நடந்து போகும் ஒருவரை நீ  கவனிப்பதையும், அவர் உன்னை பார்த்ததையும் கவனித்து விட்டேனடி சீதை.'

'போடி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் யாரையும் பார்க்கலை.' சீதை பொய்யாக மறுத்தாள்.

'சரி விடு சீதை. நீ ஒருவரைப் பார்த்தாயே...அவர் எப்படி இருந்தாரடி' நீலமாலை கேட்க...

சீதை , "அவரா! நான் எங்கேடி அவரைப் பார்த்தேன். அவருடைய 'கரு கரு' கூந்தலைத் தானே  நான் பார்த்தேன்." முகத்தில் வருத்ததுடன் சொன்னாள்.

"ஓ....அவரைப் பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா? அவருடைய கருமையான கூந்தலுக்கே உன் மனம் அலை பாயுதோ" கிண்டலடித்தாள் நீலமாலை.

"ஆனால் அவருடைய முகம் எப்படி இருந்தது தெரியுமா? பௌர்ணமி நிலா மாதிரி இருந்ததடி. " சீதை வெட்கத்துடன்  தொடர...

'ம்ம்ம்ம்....அப்புறம் ?' நீல மாலை மற்றத் தோழிகளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.

சீதையோ தன்னை மறந்து, 'அவருக்குத் தான் எத்தனை நீளமான கைகள். முழங்கால் வரை நீண்ட கைகள்.' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு , கண்களில் காதலுடன் சொல்ல....

"அப்புறம் இன்னொன்றை சொல்லனும் நீல மாலை . " 

"என்னடி சொல்லனும்?" நீலமாலை ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு சீதையை கேட்க..

"அவருக்கு....அவருக்கு  பெரிய நீலமணி மலைகள் போன்ற தோள்கள் ." என்று சீதை சொல்லி விட்டு ....தன்னை சுற்றிப் பார்த்தாள் . தோழிகள் எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சீதை, வெட்கத்துடன் கைகளால் தன் முகத்தை மறைக்க ....

நீல மாலை, அவள் கைகளை எடுத்து விட்டு, " ஆக...அவருடைய கூந்தல், சந்திர வதனம், கைகள், தோள்கள் .....இவையெல்லாம் தான் உன்னைக் கவர்ந்ததோடீ? " கேட்கவும்,

சீதை சட்டென்று அவசரமாக மறுத்தாள்.'ம்ஹூம்.... இவையெல்லாம் என்னைக் கவர்வதற்கு முன்பாக....' இழுத்தாள்.

"கவர்வதற்கு முன்பாக.....? சீக்கிரம் சொல்லுடி சீதை" நீலமாலை ஆர்வத்துடன் கேட்கவும்,

"அவருடைய புன் முறுவல் என் உயிரை அவருடனேயே எடுத்து சென்று விட்டதடி." சீதை சொல்லி விட்டு வெட்கத்துடன் அங்கிருந்து ஓடவும்...

தோழிகள் ,கொல்லென்று சிரித்துக் கொண்டே சீதையைத் துரத்தவும்..., 

நீ ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல் சொல்கிறாயே. என்று என்னைக் கேட்கிறீர்களா?

நானாக சொல்லவில்லை. ராமனைப் பற்றி சீதை சொன்னதாக கம்பன் சொன்னது அப்படியே கண் முன் காட்சியாய் விரிந்தது. அவ்வளவே.

நீங்களும் படித்து ரசியுங்களேன்.....
பால காண்டம்.மிதிலைப் படலம். பாடல் எண் 619

இந்திரநீலம் ஒத்துஇருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.

இந்திர நீலம் என்கிற மணிக்கு ஒப்பாக கருத்த முடியும், முழு நிலவு போன்ற முகமும், முழங்கால் வரை தொங்கும் கைகளும், அழகிய நீல மணி மலைகள் போன்ற தோள்களும் என்னும் இவையே அல்ல.  அவ்வாறாயின், பின் யாது என்றால், அந்தப் புன்னகை தான் இவை எல்லாவற்றுக்கும் முற்பட்டு என் உயிரை கவர்ந்தது.

படித்தவுடன் உங்களுக்கும் மனதில் காட்சி விரிந்திருக்குமே. காட்சியை ரசித்துக் கொண்டிருங்கள்.

மற்றொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...
நன்றி.


Sunday 10 November 2019

கம்பனும் 'Cat Walk'கும்.( கம்பன் என்ன சொல்கிறான்?-10)

Image by S. Hermann & F. Richter from Pixabay


திருமதி ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்ததிலிருந்து நம் ஊர் பெண்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.'Make up' போடுவதென்ன? 'Cat Walk' செய்வதென்ன  என்று பாடாய்  படுகிறார்கள்.

"Cat Walk " நமக்கு புதிதே இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்கள்.. 
"ஓ...அது உன் ஆராய்ச்சியின் முடிவா?" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நானாக எதையும் சொல்லலைங்க...
கம்பர் சொல்வதை வைத்து தான் அந்த முடிவிற்கு வந்தேன்...
வாருங்கள் கோசலை நாட்டுக்குப் போனால் புரிந்து விடும்.

Over to Kosalai now...
தூரத்தில் சிவப்பும் வெள்ளையாக தெரிகிறதே... என்னவாயிருக்கும்? கிட்டே போன பின்பு தான் புரிந்தது. சிவந்த கால்களையுடைய அன்னங்களின் கூட்டம்..இவ்வளவு அன்னங்களா? எங்கேருந்து இப்படி படையெடுத்து வந்திருக்கின்றன? வியந்து போனேன்.

'என்ன பாக்குற? ' கோபம் கொப்பளிக்க கேட்டது அன்னம்.
(இதென்ன அன்னம் பேசுதே! வியப்பிற்கு மேல் வியப்பு...)

'ஒண்ணும் இல்ல ...நீங்கள் இப்படி வரிசையாக Cat Walk செய்வது கண் கொள்ளா காட்சியா இருக்கு.' சொன்னேன்

'க்கும்...' தன் அழகிய கழுத்தை இன்னும் ஒய்யாரமாக திருப்பிக் கொண்டது அன்னம்.
'நாங்கள் அழகா நடக்க 'practice' செய்யறோம்.நீ போ அந்த பக்கம்.' என்னை விரட்டியது தலைவி அன்னம்.

திருநெல்வேலிக்கே அல்வாவா? பெண்கள், அன்னத்தின் நடையைப் பழகுவார்கள்-கேள்விப் பட்டிருக்கிறோம்.
ஆனால் அன்னங்களே நடை பழகுமா? ஒரே குழப்பமாயிருந்தது எனக்கு....
'நீங்கள் நடந்தாலே அழகு தான் . அப்புறம் எதற்கு நீங்களே Cat Walk பழக வேண்டும்?' கேட்டேன்..

'நீ தான் சொல்ற எங்க நடை அழகுன்னு. உங்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேற மாதிரில்ல சொல்றாரு..' தலைவி அன்னம் வருத்ததுடன் சொல்ல ...

கம்பர் என்ன சொன்னாரோ தெரியலையே... மீண்டும் எனக்குக் குழப்பம்.. அன்னமே என் குழப்பத்தையும் தெளிவு படுத்தியது..

'கோசலை நாட்டுப் பெண்கள் நடையைப் போல் அன்ன நடை இருக்கு. என்று சொல்கிறார் உங்கள் கவிச்சக்கரவர்த்தி.. அதாவது எங்கள் நடையை விடவும், கோசலை நாட்டுப் பெண்கள் நடை மிக அழகு... என்பது தானே அதற்கு அர்த்தம்? அதைத் தானே கம்பர் சொல்ல வருகிறார்?' அன்னம் மிக்க வருத்ததுடன் கேட்டது.

என்னிடம் பதில் இல்லை... அன்னம் தொடர்ந்தது...' அதற்குத் தான் 'Cat Walk' பழகுறோம் நாங்கள்..உனக்கு இப்ப எல்லாம் புரிஞ்சு போச்சா? '

மண்டையைப் பெரிதாய் ஆட்டி வைத்தேன்... பிறகு கேட்டேன்,'எல்லாம் சரி.....இத்தனை அன்னங்கள் நீங்கள் இங்கே பயிற்சியில் இருந்தால் உங்கள் குழந்தை குட்டிகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?'

வெடுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்த அன்னம்,' உன் கரிசனம் எங்களுக்குத் தேவையேயில்லை. ஆனாலும் சொல்கிறேன், எங்கள் குழந்தைகளை (வயல் சேற்றில் இருக்கும்) தாமரைப்பூ மெத்தையில் படுக்க வைத்திருக்கிறோம்.'

இலவம் பஞ்சு மெத்தைத் தெரியும்.அதென்ன தாமரைப்பூ மெத்தை? மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் கம்பர் மேல் பயங்கர கோபமாக இருக்கும் அன்னத்திடம், மற்றொன்றையும் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தயங்கி, தயங்கி....மெதுவாகக் கேட்டேன்...
'அம்மாக்கள் இங்கே நடைப் பழக...அங்கே குழந்தைகளுக்குப் பசித்தால்.....?

'அதெல்லாம் அங்கிருக்கும் எருமை மாடுகள் எங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி விடும். நீ கவலைப் பட வேண்டாம்.' அன்னம் சொன்னது.

அன்னக் குஞ்சுகளுக்கு எருமைகள் பாலூட்டுமா?(Surprise after Surprise.)
 ஆ...திறந்த வாயை நான் மூடுவதற்குள்..

(Here comes the next shocking surprise...)
'அப்புறம்.... எங்கள் குழந்தைகள் தூங்க...அங்கிருக்கும் தவளைகள் தாலாட்டுப் பாடும். இந்த விவரம் போதுமா? இன்னும் ஏதாவது வேண்டுமா? இப்ப நாங்கள் எங்கள் பயிற்சியைத் தொடரலாமா? ' கோபத்துடன் அன்னம் என்னைப் பார்த்துக் கத்த, நான் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்...

பாவம் கம்பர் இப்படி அன்னங்களை அவமானப் படுத்தியிருக்க வேண்டாம்...

அன்னங்களை வெட்கப்பட வைக்கும் கம்பராமாயணப் பாடல் இதோ...
பால காண்டம். நாட்டுப் படலம்44
சேல் உண்ட ஒண்கணாரில் திரிகின்ற
செங்கால் அன்னம்
மால் உண்டநளினப் பள்ளி, வளர்த்திய
மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் 
 கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை 
  தாலாட்டும் பண்ணை.

மீன் போன்ற கண்களையுடைய கோசலை நாட்டுப் பெண்களைப் போல், திரிகின்ற சிவந்த கால்களையுடைய அன்னங்கள், வயல்களில் இருக்கும், அழகிய தாமரை மலர்களாகிய படுக்கையில் தங்கள் இளம் குஞ்சுகளை கிடத்தியிருக்கின்றன. அவைகளுக்கு, காலில் சேறு ஒட்டிய எருமைகள் (ஊரகத்து உள்ள) தன் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால், தானே சொரியும் பாலை அருந்தும். பச்சை நிறத் தேரைகள் தன் ஒலியால் தாலாட்டுப் பாட அவைகள் உறங்கி விடுமாம்.

கற்பனையில் கம்பனுக்கு இணை கம்பனே!
நன்றி! இன்னொரு கம்பன் பாடலுடன் வருகிறேன்.

Sunday 3 November 2019

கம்பனும், Negotiationம் ( கம்பன் என்ன சொல்கிறான்-9)






கம்பனும் Awardம் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எப்பவும் போல் பிரேக்பாஸ்ட் தயாரிக்க சென்றேன். 

"இன்றைக்கு என்ன?" என்னவர் கேட்க....

"இன்றைக்கு இடியாப்பம் செய்யட்டுமா? இட்லி, தோசை, உப்புமா...என்று எனக்கே போர் அடிக்குது." சொன்னேன்.

"ராஜி ! எனக்கு தோசை போதும். அலட்டிக்காதே! "அவர் சொல்ல 

ஆனால் நான் இடியாப்பம் தான் செய்வது என்கிற முடிவோடு, மாவைப் பிசைந்தேன்.

இடியாப்ப அச்சை நாழியில் போட்டு விட்டு, மாவை உள்ளே வைத்து , இட்லி தட்டில் பிழிய ஆரம்பித்தேன்.

மாவு இறங்கி வர வேண்டுமே! ம்ஹூம் .... மாவு இரக்கம் காட்டாமல் அசையாமல் இருந்தது.

ஏன் மாவு 'தர்ணா' செய்கிறது? 

அச்சில் கண் அடைச்சிருக்கோ? 
செக் செய்தேன்.  அப்படி ஒன்றும் இல்லையே....

" என்ன ரொம்ப நேரமாக சத்தத்தையே காணோம்." சொல்லிக் கொண்டே என்னவர் கிச்சனில் ஆஜர்.

அவர் பங்கிற்கு... அவரும்  முயல... மாவு மனம் இரங்கவேயில்லையே!அன்றைக்கு இடியாப்பம் கேன்சல் ஆனது தான் மிச்சம். 

இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதோ?

ஆனால், சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளத் தெரிந்த தாசரதனுக்கு, பிறகு சமாளிக்க முடியாமல் திணறி, கடைசியில் செத்தே போனான்.


எப்பவோ போர் களத்தில் கைகேயி, தசரதன் வெற்றிக்கு காரணமாயிருக்க...

அப்ப மனைவியின் மகிமையில் உச்சி குளிர்ந்து போய், " உனக்கு நான் ஏதாவது gift தரணுமே அன்பே". சொல்லியிருப்பான்.

அவளோ, "நீங்கள் என் காதல் கணவன். நீங்களே எனக்குப் பெரிய gift. தனியா நீங்க தரணுமா?" அதெல்லாம் வேண்டாம்." சொல்லியிருப்பாள்.

விட வேண்டியது தானே தசரதன். இல்லை ஏதாவது ஒரு சினிமா டிராமான்னு கூட்டிட்டுப் போய் அசத்தியிருக்கலாம். 

அதெல்லாம் ரொம்ப சின்ன கிப்ட்னு  நினச்சா, "  அருமையான ஹில் ஸ்டேஷன் எதுக்காவது டூர் அழைத்துப் போயிருக்கணும்."

இல்லை... அரசன் தானே! வைரத்தாலும், வைடூர்யத்தாலும், பவுனாலும், நகை நட்டு வாங்கிக் குடுத்து முடித்திருக்கலாம்.

அதெல்லாம் விட்டுட்டு , " கைகேயி இந்தா எடுத்துக்கோ ரெண்டு வரம் தரேன்." சொன்னா என்னத்தை சொல்றது.

குடுத்தது தான் குடுத்தானே தசரதன்," அதுக்கு ஒரு டைம் லிமிட்...? ம்ஹூம். " 
Limited Time Offerனு ஒரு catchஆவது  வச்சிருக்கலாம். அதுவும் இல்ல....

அட்லீஸ்ட் "*conditions apply " என்று மிக மிக சிறிய எழுத்துக்களால் எழுதி, குடுத்திருக்கலாம். எல்லாத்தையும் மறந்துட்டு, கைகேயின் மேலுள்ள அளவற்றக் காதலால்.... வரத்தைக் குடுப்பானேன் இப்ப முழி பிதுங்க நிற்பானேன்.

இப்ப சொல்றானாம், " என் கண்ணை வேண்டுமானாலும் எடுத்துக்கோ." அப்படின்னு..

தசரதா! கைகேயி உன் கண்ணை வச்சுகிட்டு என்ன செய்யப் போறா?அவளோட ரெண்டு கண்ணும் நல்லாவே இருக்கு! 

போதாததுக்கு அவளோட கண் அல்லவா உன் சேர் மேல் விழுந்துடுத்து. . 

"Your Highness! Power mongering Kaikeyi needs your chair  & not your eye. " என்று தசரதனைப் பார்த்துக் கத்த வேண்டும் போல் இருக்கு.

இதையும் தாண்டி தசரதன், "என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கோ !" அப்படின்னு சொல்றானாம். 

இல்லை....இல்லை....பயமுறுத்துறானாம்.

கைகேயி " ஹ.....இது பனங்காட்டு நரி..இந்த சலசலப்புக்கு அஞ்சாது." என்று நினைத்திருப்பாளோ.

தசரதனுக்குப் புரிந்தது இவள் மசியவில்லை என்று. 

அடுத்து   negotiation tableற்குக் கூப்பிட்டுப் பார்க்கிறானாம்...

அவளிடம் ," உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஓகே ! பரதன் நாடாளும் வரம்-தந்து விடுகிறேன். இன்னொரு வரம் என்று ஒன்று கேட்டாயே! அதை மட்டும்... ப்ளீஸ்.... விட்டு விடேன் கைகேயி." என்று கெஞ்சுகிறானாம்.

அவனால் 'ராமன் காடு புகும் வரம்' என்று சொல்லக் கூட முடியவில்லை பாருங்கள். 'இன்னொரு வரம் 'என்று மட்டுமே சொல்கிறானாம்.

(என்னைக் கேட்டால் ,'ராமன், சீதை, லக்‌ஷ்மணன் 14 ஆண்டுகள் காட்டில் கஷ்டப்பட்டதற்கு, கைகேயி காரணம் இல்லை தசரதா! நீயும், உன் வரங்களும் தான் காரணம்' என்று சொல்வேன்.)

கம்பன் எவ்வளவு அழகாக இந்த சீனை நாலே வரியில் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்...
 அயோத்யா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்  1611.
'கண்ணே வேண்டும் என்னினும்
ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும்
இன்றே உனது அன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!
பெறுவாயேல்
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
மற' என்றான்

'பெண்னாகப் பிறந்தவளே! வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே! என் கண்களே வேண்டும் என்றாலும் நான் உனக்குக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன். எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை விரும்பினாலும், இப்பொழுதே உன் வசமல்லவா? வரத்தையே பெற விரும்புவாயானால் நாட்டை மட்டும் பெற்றுக் கொள்கொள்வாய். மற்றொரு வரத்தை மட்டும் மறந்து விடு' என்றான்.

ஒரு மன்னன் எவ்வளவு கீழே இறங்கி கெஞ்சுகிறான் பாருங்கள். 

தேவையா தசரதா உனக்கு இது? யோசி....

 நன்றி...வேறொரு கம்பனின் பாடலுடன் சந்திக்கிறேன்.


Monday 28 October 2019

கம்பனும், Award ம் (கம்பன் என்ன சொல்கிறான்?-8)


Image by Ramachandra Madhwa Mahishi, Illustrated by Balasaheb Pandit Pant Pratinidhi [Public domain]

"கம்பனும் தையல் மெஷினும்" படிக்க இங்கே க்ளிக்கவும்.
'டிங் டாங்'

கதவைத் திறந்தேன். கொரியர் வந்திருந்தது.

கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு உள்ளே திரும்பப் போனேன்.

"ஹலோ மாமி" எதிர் வீட்டு விஜய் கையசைக்க நானும் ஒரு ஹலோ சொல்லவும்,

"யார் அது " இவர் கேட்டுக் கொண்டே வந்தார்.

"எதிர் வீட்டு விஜய் தான். ஆபீஸ் போறான் போலிருக்கு. எனக்கும் அப்படியே ஒரு ஹலோ...."
சொல்லி விட்டுத் தொடர்ந்தேன்....

" விஜயை ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரொம்பவும் நல்ல பையன். ஒரு கெட்டப் பழக்கம் இருக்கணுமே .... ம்ஹூம்... அவன் குணத்தில் ஒரு தப்பு சொல்ல முடியுமா பாருங்கள். இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல பையன்! "

 "ராஜி! முதலில் எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்து விட்டு உன் 'விஜய் அவார்ட்' ஃபங்க்‌ஷனை வைத்துக் கொள். ஒரு ஹலோ சொல்லிட்டுப் போய்ட்டானாம். இவளுக்குத் தாங்க முடியல. அவார்ட் ஃபங்க்‌ஷனுக்கு தேதி குறித்து விட்டாள்." கிண்டலடித்தார் .

அந்த வார இறுதியில் 'Forum Mall' போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். சிக்னலில் கார் நிற்க ...ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில்

 "யார் அது? விஜய்யா?" 

அவரும் பார்க்க," ஆமாமாம்... நீஅவார்ட் குடுத்த ரொம்ப நல்ல பையன் தான்"


"ஆனா... உன் அவார்ட்டை அவனுக்குக் குடுக்க முடியுமான்னு தெரியலையே! என்ன செய்கிறான் பார்.."

"என்ன? " கேட்டுக் கொண்டே நான் அவனைப் பார்க்க, அவனோ"புஸ்....புஸ்....புஸ்.." வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

அதற்குள் சிக்னல் விழவும், நாங்கள் நகர்ந்தோம்.   
நான் அமைதியாய் உட்கார்ந்திருக்க,இவர் கண்ணை ரோட்டில் வைத்துக் கொண்டே," என்ன மேடம் அமைதியாகி விட்டீர்கள்? விஜய் அவார்ட் ஃபங்க்‌ஷன்  கேன்சல்ட்டா? " நக்கலாக சிரித்தார்.

"ராஜி ! அவன் ஹாஸ்டலில் படித்தவன் ....  இந்த பழக்கமெல்லாம் அவன் ஃபெரண்ட்ஸ் உபயமாகத் தான் இருக்கும் . அவன் இப்பவும் நல்ல பையன் தான் ராஜி.நீ உன் அவார்டைக் குடுக்கலாம்." இவர் என்னை சமாதானப் படுத்த ...

என்னால் ஒத்துக் கொள்ள் முடியவேயில்லை. "Fair Weatherஇல் Good Peopleஆக!"  இருப்பது என்ன பெரிசு...சொல்லுங்கள்...

ராமாயண கைகேயியும் இந்த ரகம் தான் போலிருக்கு.

ராமனுக்கு முடி சூட்டு விழா தீர்மானித்து விட்டு, கைகேயி மாளிகைக்குத் திரும்புகிறான் தசரதன்.

" கைகேயி...கைகேயி " என்று சந்தோஷமாகக் கூப்பிட்டுக் கொண்டே  நுழைகிறான் தசரதன்.

ஆனால் பேரமைதியாக இருக்கிறது மாளிகை.

என்னமோ தப்பாக இருக்கே! நினைத்துக் கொண்டே  கைகேயியைத் தேடுகிறான் தசரதன். 

படுக்கையறையில் அவனுடைய இனிய ராணி கீழே விழுந்துக் கிடக்கிறாள். உடல் நலக் குறைவோ ...இல்லை யாராவது இவளை அவமதித்திருப்பார்களோ...

பதறிப் போய் கூப்பிட்டுப் பர்க்கிறான்... பதில் வரவில்லை. 

அவள் தான் கை தேர்ந்த நடிகையாச்சே! சொல்லியா தர வேண்டும்... கிட்டே வந்து, தட்டி எழுப்புகிறான். அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும், கிளசரின் போட்டாற் போல் கண்ணீர் மாலை மாலையாக வருகிறது.

அவள் சந்தோஷப் படுவாள் என்று நினைத்து," உன் ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம்" என்று சொல்லவும்...
இன்னும் வேகமாகத் தேம்புகிறாள் கைகேயி...

'எதுக்கு இப்ப அழற...?'   கெஞ்சிப் பார்க்கிறான்.

"மானே! தேனே! கைகேயிக் கண்ணே " கொஞ்சிப் பார்க்கிறான்.

பல கெஞ்சல் , கொஞ்சல்களுக்குப் பிறகுத் தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள் கைகேயி...

எப்படி இருந்திருக்கும் தசரதனுக்கு," இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? "
"ராமா! ராமா! " என்று இவள் கொஞ்சும் ராமனையா காட்டுக்குப் போக வேண்டும் என்று இவளே  சொல்கிறாள்?

"என்ன ஆச்சு இவளுக்கு ?" 

"கைகேயி ! நீ தானே ராமனுக்கு விற் பயிற்சி, போர் பயிற்சி என்று சொல்லிக் குடுத்தவள்.. என் ராமன்! என் ராமன் ! என்று கொண்டாடியவள். நானும், கொசல்யாவும் ராமனிடம் காட்டியப் பாசத்தைப் போல் பன்மடங்கு காட்டியவள் ஆச்சே நீ. நீயா இப்படி சொல்வது? நம்ப முடியவில்லையே!"

கைகேயிற்கு இன்னும் ராமனை வளர்த்தப் பாசம் மேலோங்கி தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ராமன் காடு போக வேண்டும் என்று தானே அவள் வரம் கேட்க வேண்டும். அப்படி அவளால் கேக்க  முடியல. ராமன் காடு போக வேண்டும் என்று சொல்லாமல்  ,"சீதைக் கேள்வன்(சீதையின் கணவன்) " காடு போக வேண்டும் என்று சொல்கிறாளாம்.

கைகேயி கொஞ்சம் சொல்லேன்," நீ நல்லவளா? கெட்டவளா?" 

கைகேயின் பதில் இதுவாகத்தான் இருக்கணும்," நான் 'Fair Weather-Good People' ரகத்தை சேர்ந்தவள் .

கம்பருக்கும் நம்மைப் போலவே கைகேயி மேல் சரியான கோபம் வந்திருக்கும். 
அவரும் "இந்தா உனக்கு ஒரு அவார்ட் "என்று கைகேயிற்கு  கோபத்துடன்  அவார்ட் குடுக்கிறார் பாருங்கள்... 
"தீயவை யாவினும் சிறந்த தீயாள்" என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அவார்ட் .
'கெட்டவளிலேயே சிறந்த கெட்டவள்' விருது. சிம்பிளா சொல்லனும்னா 'சிறந்த வில்லி' அவார்ட்.
(மிக சரியான அவார்ட் தான் கொடுத்திருக்கிறார்.)

கம்பர் எப்படி சொல்கிறார் பார்ப்போமா...
அயோத்தியா காண்டம் . கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண் 1593

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது:சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; எனப் புகன்று நின்றாள்;

தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும் மேம்பட்ட கொடியவளான கைகேயி,"நீ கொடுத்த இரு வரங்களுள், ஒரு வரத்தினால் என் மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும். மற்றொன்றினால் சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்" என்று  சொல்லி மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.

இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தசரதன் எப்படி எதிர் கொண்டான்?
அடுத்தப் பதிவில் பார்ப்போம்...










Friday 18 October 2019

கம்பனும், தையல் மெஷினும்.(கம்பன் என்ன சொல்கிறான் -7)



Image courtesy: Wikkimedia Commons



கம்பனும் Hidden Agendaவும் படிக்க இங்கே க்ளிக்கவும்.


"விநாச காலே விபரீத புத்தி " என்று சும்மாவா சொன்னார்கள்.  கையடக்கமான தையல் மெஷினை, கையடக்கமான விலையில் ஆன்லைனில் வங்கியாச்சு.

உடனே 'கட கட' வென்று போனது வந்தது என்று எல்லாம் தைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப என் புது புடைவை ஓரம் அடிக்கப் போகிறேன்" சொல்லிக் கொண்டே மெஷினில் புடைவையை ஓரம் மடித்து தைக்க ஆரம்பித்தேன்..

சில வினாடிகள் தான்.... சத்தம் ஒரு மாதிரியாக வர..பார்த்தால் தையல் விழவில்லை. பதறிப் போய் என்னவென்று பார்த்ததில்....பாபினில் நூல் காலி.

மெஷினிலும் பாபினில் நூல் சுத்தும் வசதி வைக்கவில்லை என்பது எனக்குப் புரிய ஒரு மணி நேரம் ஆச்சு.

மெஷினை வாங்கும் முன்பு இந்த பாபின் விஷயத்தை நான் கவனித்திருக்க வேண்டாமோ?  விட்டு விட்டேனே.என் மூளைக்குக்கு எட்டவில்லையே! என்னை நானே திட்டிக் கொண்டேன்...

கைகேயியும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டாள் என்பதை மந்தரை எடுத்து சொன்ன பிறகு தான் புரிந்திருக்கிறது அவளுக்கு.

எப்படின்னு பாக்கலாம் வாங்க...

ராமனுக்கு முடி சூட்டு விழா என்று மந்தரை சொன்னது கைகேயிடம் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.மாறாக சந்தோஷப் படுகிறாள். (அவள் தான் ஒரு Hidden Agenda வைத்திருந்தாளே. அது என்ன? என்று கேட்பவர்கள் இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.)

மந்தரைக்கு கைகேயின் மகிழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்தியது. அவளும் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாள்...

பரதன் உனக்கு மகன் தானே! அவன் நலனில் உனக்கு அக்கறை இல்லையா? கௌசல்யாவிற்கு ஏவல் செய்யப் போகிறாயா? 
மூத்தவனுக்குத் தான் மணி முடி என்றால் , தசரதன் இருக்கும் போதே எதற்கு ராமனுக்கு மணி முடி? - இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்து கைகேயியை அசைக்கப் பார்க்கிறாள் மந்தரை.

கைகேயி மசியவில்லையே!

மந்தரைக்குப் புரிந்து விட்டது. இவள் இப்படியெல்லாம் சொன்னால்  மசிய மாட்டாள். என் முதுகைக் காயப்படுத்திய ராமனுக்கு மணி முடியா? எப்படியாவது தடுக்க வேண்டுமே...யோசித்தாள் மந்தரை...

அம்மா வீட்டு sentiment தான் இதற்கு சரியான வழி என்று தீர்மானித்து, " இதைக் கேள் ராணி... இத்தனை நாள் சீதையின் அப்பா ஜனகன் , உன் அப்பா கேகய மன்னனுடன் சண்டைக்குப் போகாமல் இருந்ததுக்கு யார் காரணம். தெரியுமா?"

"உன் ஆம்படையானுக்கு (தசரதனுக்கு) பயந்து தான்."

"ராமன் ராஜாராமன் ஆகி விட்டால்... . ...அவ்ளோதான்......ஜனகனுக்கு நல்லாவே குளிர் விட்டுடும். சொல்லிட்டேன். மாமனார் பின்னாடியே,  ராமனும் வில் அம்புடன் புறப்பட மாட்டான்னு என்ன நிச்சயம் சொல்லு?

ஆக... உன்னாலான உபயத்தை உன் பிறந்த வீட்டுக்கு செய்யப் போறே ! ஓகே! நான் யார் அதைத் தடுக்க.."

இதைக் கேட்டதும், கைகேயி சட்டென்று மந்தரையைப் பார்த்தாள்.

தன் செயலால்  தன் அம்மா வீட்டிற்கு ஒரு துண்பம் என்றால் எந்தப் பெண் தான் அதை செய்வாள்.

இந்த அம்மா வீட்டு செண்டிமெண்ட் 'பசக்' என்று பிடித்துக் கொண்டது .

இது தான் சமயம் என்று இன்னும் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் , " அது மட்டுமா ராணி. இன்னும் கேள்...ராமன் மன்னன் என்றால் லஷ்மணனுக்கு சரிசமமான மரியாதை கிடைக்கும். ஆனால் பரதனுக்கு அது கிடைக்குமா?" என்று கேட்டாள்.

இதை மட்டுமா கேட்டாள்? 

" நாளை ராமனுக்கு குழந்தைகள் பிறந்தால், கௌசிப் பாட்டி...கௌசிப் பாட்டி ன்னு கௌசல்யாவைக் கொண்டாடுமா?உன்னையா? யோசிச்சிக்கோ. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனிமேல் உன் இஷ்டம்." என்று சொல்லியிருப்பாள். 
(கம்பன் சொல்லவில்லை இதை . என் யூகம் இது.)

அதனால் தான் கைகேயி மனம் மாறியிருக்க வேண்டும்.  
" ஆமாம் இல்ல... இதெல்லாம் விட்டு விட்டேனே.என் மூளைக்கு தோணவேயில்லையே! நல்ல வேளை இப்பவாவது மந்தரை சொன்னாளே" என்று மனம் மாறிய கைகேயி

மந்தரையிடமே இதற்குத் தீர்வும் கேட்கிறாள்.
 அதற்கு மந்தரை ," உன்னிடம் தான் தசரதன் குடுத்த இரண்டு வரம் இருக்கே  . அதை இப்ப கேட்காமல் அப்புறம் எப்ப கேட்க போறே ராணி."

"பரதன் நாடாள - ஒரு வரம்..
ராமன் காடு புக  - ரெண்டாம் வரம்.அவ்ளோ தானே.சகல பிரச்சினையும் முடிஞ்சுடும் .இல்லையா ராணி." 

நம்மைப் போலவே கைகேயியும் குழம்பியிருக்க வேண்டும்.

பரதன் நாடாளும் வரம் ஓகே...
ராமன் காடு புகும் வரம்- Why Mantharai? Why?

அங்க தான் மந்தரையின் சூழ்ச்சி தெரிகிறது. ராமன் அயோத்தியிலேயே இருக்க, பரதன் ஆட்சி செய்தால் என்ன ஆகும்?
மக்களின் "Sympathy wave" ராமனுக்குக் கிடைத்து விடுமே.அது பரதனுக்கு ஆபத்தாக முடியலாம்.
ராமன் காட்டிற்குப் போனாலும் 'sympathy wave' இருக்கத் தான் செய்யும். ஆனால் சில நாட்களில் மக்கள் ராமனை  மறந்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். மக்கள் ராமனை சுத்தமாக மறக்க ஓரிரு வருடங்கள் போதாது. நிறைய நாட்கள் தேவைப்படும். கேட்கறதுன்னு ஆச்சு..  பதினான்கு வருடங்கள் ராமனுக்கு வனவாசம் என்றால் சரியாயிருக்கும் என்று நினைத்திருப்பாள் மந்தரை..அதனால் தான் இந்த உபாயம் சொல்கிறாள் என்று நினைக்கிறேன்.
(என்னா வில்லத்தனம்! என்னா வில்லத்தனம்!)

கம்பனின் கவியைப் பார்ப்போமா...
அயோத்யா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம். பாடல் எண்:1577

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் 
பெரு வனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால், செழுநிலம் எல்லாம் 
ஒருவழிப் படும்உன்மகற்கு, உபாயம் ஈது என்றாள் 

அவ்விரண்டு வரங்களுள் ஒரு வரத்தால் அரசாட்சியை உன் மகனதாக ஆக்கிக் கொண்டு, மற்றொன்றினால் ராமன் பெரிய காட்டின் கண் பதினான்கு ஆண்டுகள், அயோத்தியிலிருந்து நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலைய செய்வாயாக. அப்படி செய்தால், உன் மகனாகிய பரதனுக்கு வளப்பமான உலகம் முழுதும் அடங்கி நேர்படும். இதுவே உபாயமாகும்.

இதை கைகேயி எப்படி செயல் படுத்தினாள் என்று கம்பன் சொல்வதை அடுத்தப் பதிவில் பார்ப்போமே...

நன்றி.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்