Tuesday 26 November 2019

கம்பனும், Breaking Newsம் (கம்பன் என்ன சொல்கிறான்?-12)


Image Courtesy :https;//bhagwanbhajan.com

"அம்மா! அம்மா!"

"என்னடா....?"காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டே அம்மா கேட்க...

"அம்மா.... "மீண்டும் ரிஷி கெஞ்சும் குரலில் கூப்பிட...

"என்னடா வேணும் உனக்கு?" அம்மா ஸ்ட்ரெயிட் ஆக பாயிண்ட்டிற்கு வ்ந்தாள்.

" அம்மா... காலேஜுக்கு பஸ்ஸில் போக ரொம்பக் கஷ்டமாருக்குமா. "

" ஏண்டா?"

" ஒரே கூட்டம் எப்பவும். எவ்வளவு நாள் தான் ஃபுட்போர்டிலேயே  போவது... சொல்லு."

ரிஷி எதற்கு அடி போடுகிறான் என்று அம்மாவுக்குப் புரிந்து போனது. போன வருஷத்திலிருந்து பைக் வேணும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.

"நான் அப்பாவிடம் பேசி உனக்குப் பைக் வாங்கித் தர சொல்றேண்டா." சொன்னவுடன் ரிஷி சந்தோஷமாக விசில் அடித்தான். 

ரிஷியை சந்தோஷமாக பார்க்க அம்மாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அம்மாக்களே இப்படித் தான்....மகனுக்காக அப்பாவிடம் வக்காலத்து வாங்குவது...

ஆனால் கைகேயி இன்னும் ஒரு படி மேலே போனாள்...
அவளும் பரதனுக்காக அவன் அப்பாவிடம் பேசி வாங்கிக் கொடுக்கிறாளாம். பைக் இல்லிங்க....அரசாங்கத்தையே வாங்கிக் கொடுக்க நினைக்கிறாளாம். அதுவும் பரதன் கேட்காமலே. ஆனால் பரதன் அதை ஏற்றுக் கொள்ளாததோடு, கைகேயியைப் பேய் என்றும் திட்டினான் என்பது வேறு விஷயம்.

எப்படி தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள் என்று பார்ப்போம்.

கைகேயி அழுது புலம்பி, அடம் பிடித்து தன் இரண்டு வரங்களையும் தசரதனிடமிருந்து வாங்குவதில் success ஆகிறாள். தசரதன் மிகுந்த வருத்தத்துடன் தரையில் வீழ்ந்து கிடக்கிறான்.

வரம் வாங்கியாச்சு.. அதை செயல் படுத்தணுமே. காலத்தை வீணடிக்காமல் (கணவனைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல்) ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள் கைகேயி.

உடனே அங்கே ராமனும் ஆஜர்...

அப்பாவை பார்த்து விட்டு ராமன் பதறுகிறான்." என்ன ஆச்சும்மா அப்பாவுக்கு?"

கைகேயி அவனை முதலில் சமாதானப் படுத்துகிறாள்,"உன் அப்பாவுக்கு ஒன்றுமில்லை ராமா. அவர் உன்னிடம் எதையோ சொல்லனும்னு நினைக்கிறார். எப்படி சொல்வது என்கிற தயக்கம் தான். வேறொன்றுமில்லை."

"நீங்கள் சொல்லுங்கள் அம்மா.அப்பா சொன்னால் என்ன? நீங்கள் சொன்னால் என்ன? ரெண்டும் ஒன்று தான். நான் நிறைவேற்றுகிறேன்." ராமன் வாக்குக் கொடுக்கிறான்.

" வாக்குக் கொடுப்பதில் அப்பனை மகன் மிஞ்சி விடுவான் போலிருக்கே" கைகேயி மனதுக்குள் சிரித்துக் கொண்டிருப்பாள்.

ராமனிடம் நைச்சியமாக சொல்ல ஆரம்பிக்கிறாள்.

" அது ஒண்ணுமில்ல ராமா .... நீ புண்ணிய நதிகளில் நீராடி வரணும் ராமா."

"இதென்ன பெரிய விஷயம் அம்மா..இதோ உடனே கிளம்புகிறேன். "

" அட.... இரப்பா ராமா. நான் இன்னும் முடிக்கல.."

"சொல்லுங்கம்மா.."

"அதோடு நீ தவமும் செய்ய வேண்டும் ராமா."
எங்கே தவம் செய்யணும் தெரியுமா? காட்டிற்குப் போய் தவம் செய்யணும்."

"அப்படியே செய்கிறேன் அம்மா."(இதை...இதை.....இதைதான் நானும் எதிர் பார்த்தேன் - நினைத்துக் கொண்டிருப்பாள்  கைகேயி.)

வரிசையாக ஆர்டர் பிறப்பித்துக் கொண்டே வருகிறாள் கைகேயி.
சற்றே குழம்பியிருப்பான் ராமன். என்ன ஆச்சு அப்பாவுக்கு. "நாளையிலிருந்து நீ தாண்டா ராஜா...அப்படின்னு அப்பா ராத்திரி சொன்னார். இப்ப என்னடான்னா கைகேயி அம்மா காட்டுக்குப் போ என்கிறாள். யாரைத் தான் நம்புவதோ ...என்று தோன்றியிருக்குமோ ராமனுக்கு."

Wait Rama! Wait! Here comes 
                     the Breaking News...

கைகேயி தொடர்கிறாள், " ராமா... இன்னும் ஒன்று இருக்கு ராமா....உன் தம்பி பரதனுக்குத் தான் பட்டாபிஷேகம் நடக்கும். அவன் நாட்டை ஆளுவான். நீ ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்த பின் காட்டிலிருந்து திரும்ப வேண்டும்." சொல்லி விட்டு ...
(அவளால் ராமனைக் காட்டுக்குப் போ என்று சொல்ல வாய் வரலையாம். அதனால் ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்து காட்டிலிருந்து வா என்று சொல்கிறாளாம். வளர்த்த பாசம் தடுக்கிறதோ!)

"இதையெல்லாம் நான் சொல்லவில்லை ராமா. இதெல்லாம் உன் அப்பாவான அரசன் ஆணை. உன்னிடம் சொல்ல சொன்னார். "  என்று முடிக்கிறாள் கைகேயி.

என்னா சாமர்த்தியம்! தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு தசரதன் சொன்னானாம்... எப்படியிருக்குக் கதை..

சரி விடுங்கள்...அது தசரதன் தலை வலி.

இதை விளக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போம்...

அயோத்தியா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்.1690

"ஆழி சூழ் உலகம் எல்லாம் 
   பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கித், 
   தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், 
   புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று, 
   இயம்பினன் அரசன்"என்றாள்

கடலால் சூழப் பட்ட உலகம் முழுவதையும், பரதனே முடி சூடி ஆண்டுக் கொண்டிருக்க நீ நாட்டை விட்டுச் சென்று, தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக் கொண்டு, தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறந்த கொடிய காட்டை அடைந்து , புன்னியத் தீர்த்தங்களில் நீராடி,பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வருவாய் என்று  அரசன் சொன்னான் என்றாள்.

இந்தக் கம்பன் பாடல் ரசிச்சாச்சா?மீண்டும் இன்னொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.

Tuesday 19 November 2019

கம்பனும், காதலும்(கம்பன் என்ன சொல்கிறான்?-11)


'ஜானு.....ஜானு ' இது அம்மா கூப்பிடும் குரல்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு,
மீண்டும்,'ஜானு.....' என்று அம்மா குரல் கொடுக்க ஒரு பதிலும் வரவில்லை.

கையில் சாம்பார் கரண்டியுடன், அம்மா ஹாலுக்குள் எட்டிப் பார்க்க, டிவி மட்டும் அனாதையாய் அழுது கொண்டிருந்தது.

'எங்கே தொலைந்தாள் இவள்.' முணுமுணுத்துக் கொண்டே  அம்மா அறையில் எட்டிப் பார்க்க... அங்கே ஜானு கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன் அழகை தானே ரசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா கூப்பிட்டது ஒன்றும் ஜானு காதில் விழுந்தமாதிரி தெரியவில்லை. 'என்னாச்சு இந்த பெண்ணுக்கு?' அம்மா நினைக்கவும்,  படுக்கை மேல் கிடந்த ஜானுவின் போன் இனிமையாய் ஒலிக்கவும் சரியாயிருந்தது.

போன் ஒலியாலும் ஜானுவின் கண்ணாடி தியானத்தைக் கலைக்க முடியவில்லை போலும்.

அம்மாவிற்குப் புரிந்து விட்டது ஜானுவுக்கு  என்னாச்சுன்னு.

உங்களுக்கும் புரிந்திருக்கும்..இனி ஜானுவாச்சு, அவள் அம்மாவாச்சு....

மேலே சொன்னது டீ.வி சீரியல் ஒன்றின் காட்சி.

கம்பராமாயணத்தில் சீதையும் இப்படித்தான் இருக்கிறாளாம்.

எப்போலேருந்து?

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதிலிருந்து தான் இந்த வியாதியாம் சீதைக்கு.


சீதையின் நெருங்கிய தோழிகள்,'நம் ராஜகுமாரிக்கு என்னாச்சு?' ஏன் இப்படி விட்டத்தையே வெறித்துப் பார்ப்பதும், தனக்குள்ளே சிரிப்பதும்......ஒன்றும் சரியில்லையே " சொல்லிக் கொள்கிறர்கள்.

சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை  'சீதை! சீதை! என்று கூப்பிட சீதை எதையோ நினைத்து தனக்குள் புலம்புகிறாள்.

நீலமாலை சீதையின் தோளைப் பிடித்து உலுக்கி," என்னடி ஆச்சு உனக்கு. என்னடி புலம்புகிறாய்?" கேட்க....

'எனக்கென்ன ஆச்சு? ஒன்றும் இல்லையே ! ஒன்றும் இல்லையே!' சீதை அவசர அவசமாக உரைத்தாள்.

'ஆனால் எனக்குப் புரிஞ்சு போச்சுடி' நீலமாலை சொல்லவும், சீதை பொய்க் கோபத்துடன்,' என்னடி உனக்கு இப்ப புரிஞ்சு போச்சு.?' முறைத்தாள்.

'நீயும் நானும் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பலேருந்து தான் நீ இப்படி இருக்கிறாய்.' சொல்லிக் கொண்டே சிந்திக்க ஆரம்பித்த நீலமாலை தொடர்ந்தாள்...
'ஆ....தெரிந்து விட்டதடி. விளையாடும் போது வெளியே நடந்து போகும் ஒருவரை நீ  கவனிப்பதையும், அவர் உன்னை பார்த்ததையும் கவனித்து விட்டேனடி சீதை.'

'போடி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் யாரையும் பார்க்கலை.' சீதை பொய்யாக மறுத்தாள்.

'சரி விடு சீதை. நீ ஒருவரைப் பார்த்தாயே...அவர் எப்படி இருந்தாரடி' நீலமாலை கேட்க...

சீதை , "அவரா! நான் எங்கேடி அவரைப் பார்த்தேன். அவருடைய 'கரு கரு' கூந்தலைத் தானே  நான் பார்த்தேன்." முகத்தில் வருத்ததுடன் சொன்னாள்.

"ஓ....அவரைப் பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா? அவருடைய கருமையான கூந்தலுக்கே உன் மனம் அலை பாயுதோ" கிண்டலடித்தாள் நீலமாலை.

"ஆனால் அவருடைய முகம் எப்படி இருந்தது தெரியுமா? பௌர்ணமி நிலா மாதிரி இருந்ததடி. " சீதை வெட்கத்துடன்  தொடர...

'ம்ம்ம்ம்....அப்புறம் ?' நீல மாலை மற்றத் தோழிகளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.

சீதையோ தன்னை மறந்து, 'அவருக்குத் தான் எத்தனை நீளமான கைகள். முழங்கால் வரை நீண்ட கைகள்.' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு , கண்களில் காதலுடன் சொல்ல....

"அப்புறம் இன்னொன்றை சொல்லனும் நீல மாலை . " 

"என்னடி சொல்லனும்?" நீலமாலை ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு சீதையை கேட்க..

"அவருக்கு....அவருக்கு  பெரிய நீலமணி மலைகள் போன்ற தோள்கள் ." என்று சீதை சொல்லி விட்டு ....தன்னை சுற்றிப் பார்த்தாள் . தோழிகள் எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சீதை, வெட்கத்துடன் கைகளால் தன் முகத்தை மறைக்க ....

நீல மாலை, அவள் கைகளை எடுத்து விட்டு, " ஆக...அவருடைய கூந்தல், சந்திர வதனம், கைகள், தோள்கள் .....இவையெல்லாம் தான் உன்னைக் கவர்ந்ததோடீ? " கேட்கவும்,

சீதை சட்டென்று அவசரமாக மறுத்தாள்.'ம்ஹூம்.... இவையெல்லாம் என்னைக் கவர்வதற்கு முன்பாக....' இழுத்தாள்.

"கவர்வதற்கு முன்பாக.....? சீக்கிரம் சொல்லுடி சீதை" நீலமாலை ஆர்வத்துடன் கேட்கவும்,

"அவருடைய புன் முறுவல் என் உயிரை அவருடனேயே எடுத்து சென்று விட்டதடி." சீதை சொல்லி விட்டு வெட்கத்துடன் அங்கிருந்து ஓடவும்...

தோழிகள் ,கொல்லென்று சிரித்துக் கொண்டே சீதையைத் துரத்தவும்..., 

நீ ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல் சொல்கிறாயே. என்று என்னைக் கேட்கிறீர்களா?

நானாக சொல்லவில்லை. ராமனைப் பற்றி சீதை சொன்னதாக கம்பன் சொன்னது அப்படியே கண் முன் காட்சியாய் விரிந்தது. அவ்வளவே.

நீங்களும் படித்து ரசியுங்களேன்.....
பால காண்டம்.மிதிலைப் படலம். பாடல் எண் 619

இந்திரநீலம் ஒத்துஇருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.

இந்திர நீலம் என்கிற மணிக்கு ஒப்பாக கருத்த முடியும், முழு நிலவு போன்ற முகமும், முழங்கால் வரை தொங்கும் கைகளும், அழகிய நீல மணி மலைகள் போன்ற தோள்களும் என்னும் இவையே அல்ல.  அவ்வாறாயின், பின் யாது என்றால், அந்தப் புன்னகை தான் இவை எல்லாவற்றுக்கும் முற்பட்டு என் உயிரை கவர்ந்தது.

படித்தவுடன் உங்களுக்கும் மனதில் காட்சி விரிந்திருக்குமே. காட்சியை ரசித்துக் கொண்டிருங்கள்.

மற்றொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...
நன்றி.


Sunday 10 November 2019

கம்பனும் 'Cat Walk'கும்.( கம்பன் என்ன சொல்கிறான்?-10)

Image by S. Hermann & F. Richter from Pixabay


திருமதி ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்ததிலிருந்து நம் ஊர் பெண்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.'Make up' போடுவதென்ன? 'Cat Walk' செய்வதென்ன  என்று பாடாய்  படுகிறார்கள்.

"Cat Walk " நமக்கு புதிதே இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்கள்.. 
"ஓ...அது உன் ஆராய்ச்சியின் முடிவா?" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நானாக எதையும் சொல்லலைங்க...
கம்பர் சொல்வதை வைத்து தான் அந்த முடிவிற்கு வந்தேன்...
வாருங்கள் கோசலை நாட்டுக்குப் போனால் புரிந்து விடும்.

Over to Kosalai now...
தூரத்தில் சிவப்பும் வெள்ளையாக தெரிகிறதே... என்னவாயிருக்கும்? கிட்டே போன பின்பு தான் புரிந்தது. சிவந்த கால்களையுடைய அன்னங்களின் கூட்டம்..இவ்வளவு அன்னங்களா? எங்கேருந்து இப்படி படையெடுத்து வந்திருக்கின்றன? வியந்து போனேன்.

'என்ன பாக்குற? ' கோபம் கொப்பளிக்க கேட்டது அன்னம்.
(இதென்ன அன்னம் பேசுதே! வியப்பிற்கு மேல் வியப்பு...)

'ஒண்ணும் இல்ல ...நீங்கள் இப்படி வரிசையாக Cat Walk செய்வது கண் கொள்ளா காட்சியா இருக்கு.' சொன்னேன்

'க்கும்...' தன் அழகிய கழுத்தை இன்னும் ஒய்யாரமாக திருப்பிக் கொண்டது அன்னம்.
'நாங்கள் அழகா நடக்க 'practice' செய்யறோம்.நீ போ அந்த பக்கம்.' என்னை விரட்டியது தலைவி அன்னம்.

திருநெல்வேலிக்கே அல்வாவா? பெண்கள், அன்னத்தின் நடையைப் பழகுவார்கள்-கேள்விப் பட்டிருக்கிறோம்.
ஆனால் அன்னங்களே நடை பழகுமா? ஒரே குழப்பமாயிருந்தது எனக்கு....
'நீங்கள் நடந்தாலே அழகு தான் . அப்புறம் எதற்கு நீங்களே Cat Walk பழக வேண்டும்?' கேட்டேன்..

'நீ தான் சொல்ற எங்க நடை அழகுன்னு. உங்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேற மாதிரில்ல சொல்றாரு..' தலைவி அன்னம் வருத்ததுடன் சொல்ல ...

கம்பர் என்ன சொன்னாரோ தெரியலையே... மீண்டும் எனக்குக் குழப்பம்.. அன்னமே என் குழப்பத்தையும் தெளிவு படுத்தியது..

'கோசலை நாட்டுப் பெண்கள் நடையைப் போல் அன்ன நடை இருக்கு. என்று சொல்கிறார் உங்கள் கவிச்சக்கரவர்த்தி.. அதாவது எங்கள் நடையை விடவும், கோசலை நாட்டுப் பெண்கள் நடை மிக அழகு... என்பது தானே அதற்கு அர்த்தம்? அதைத் தானே கம்பர் சொல்ல வருகிறார்?' அன்னம் மிக்க வருத்ததுடன் கேட்டது.

என்னிடம் பதில் இல்லை... அன்னம் தொடர்ந்தது...' அதற்குத் தான் 'Cat Walk' பழகுறோம் நாங்கள்..உனக்கு இப்ப எல்லாம் புரிஞ்சு போச்சா? '

மண்டையைப் பெரிதாய் ஆட்டி வைத்தேன்... பிறகு கேட்டேன்,'எல்லாம் சரி.....இத்தனை அன்னங்கள் நீங்கள் இங்கே பயிற்சியில் இருந்தால் உங்கள் குழந்தை குட்டிகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?'

வெடுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்த அன்னம்,' உன் கரிசனம் எங்களுக்குத் தேவையேயில்லை. ஆனாலும் சொல்கிறேன், எங்கள் குழந்தைகளை (வயல் சேற்றில் இருக்கும்) தாமரைப்பூ மெத்தையில் படுக்க வைத்திருக்கிறோம்.'

இலவம் பஞ்சு மெத்தைத் தெரியும்.அதென்ன தாமரைப்பூ மெத்தை? மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் கம்பர் மேல் பயங்கர கோபமாக இருக்கும் அன்னத்திடம், மற்றொன்றையும் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தயங்கி, தயங்கி....மெதுவாகக் கேட்டேன்...
'அம்மாக்கள் இங்கே நடைப் பழக...அங்கே குழந்தைகளுக்குப் பசித்தால்.....?

'அதெல்லாம் அங்கிருக்கும் எருமை மாடுகள் எங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி விடும். நீ கவலைப் பட வேண்டாம்.' அன்னம் சொன்னது.

அன்னக் குஞ்சுகளுக்கு எருமைகள் பாலூட்டுமா?(Surprise after Surprise.)
 ஆ...திறந்த வாயை நான் மூடுவதற்குள்..

(Here comes the next shocking surprise...)
'அப்புறம்.... எங்கள் குழந்தைகள் தூங்க...அங்கிருக்கும் தவளைகள் தாலாட்டுப் பாடும். இந்த விவரம் போதுமா? இன்னும் ஏதாவது வேண்டுமா? இப்ப நாங்கள் எங்கள் பயிற்சியைத் தொடரலாமா? ' கோபத்துடன் அன்னம் என்னைப் பார்த்துக் கத்த, நான் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்...

பாவம் கம்பர் இப்படி அன்னங்களை அவமானப் படுத்தியிருக்க வேண்டாம்...

அன்னங்களை வெட்கப்பட வைக்கும் கம்பராமாயணப் பாடல் இதோ...
பால காண்டம். நாட்டுப் படலம்44
சேல் உண்ட ஒண்கணாரில் திரிகின்ற
செங்கால் அன்னம்
மால் உண்டநளினப் பள்ளி, வளர்த்திய
மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் 
 கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை 
  தாலாட்டும் பண்ணை.

மீன் போன்ற கண்களையுடைய கோசலை நாட்டுப் பெண்களைப் போல், திரிகின்ற சிவந்த கால்களையுடைய அன்னங்கள், வயல்களில் இருக்கும், அழகிய தாமரை மலர்களாகிய படுக்கையில் தங்கள் இளம் குஞ்சுகளை கிடத்தியிருக்கின்றன. அவைகளுக்கு, காலில் சேறு ஒட்டிய எருமைகள் (ஊரகத்து உள்ள) தன் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால், தானே சொரியும் பாலை அருந்தும். பச்சை நிறத் தேரைகள் தன் ஒலியால் தாலாட்டுப் பாட அவைகள் உறங்கி விடுமாம்.

கற்பனையில் கம்பனுக்கு இணை கம்பனே!
நன்றி! இன்னொரு கம்பன் பாடலுடன் வருகிறேன்.

Sunday 3 November 2019

கம்பனும், Negotiationம் ( கம்பன் என்ன சொல்கிறான்-9)






கம்பனும் Awardம் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எப்பவும் போல் பிரேக்பாஸ்ட் தயாரிக்க சென்றேன். 

"இன்றைக்கு என்ன?" என்னவர் கேட்க....

"இன்றைக்கு இடியாப்பம் செய்யட்டுமா? இட்லி, தோசை, உப்புமா...என்று எனக்கே போர் அடிக்குது." சொன்னேன்.

"ராஜி ! எனக்கு தோசை போதும். அலட்டிக்காதே! "அவர் சொல்ல 

ஆனால் நான் இடியாப்பம் தான் செய்வது என்கிற முடிவோடு, மாவைப் பிசைந்தேன்.

இடியாப்ப அச்சை நாழியில் போட்டு விட்டு, மாவை உள்ளே வைத்து , இட்லி தட்டில் பிழிய ஆரம்பித்தேன்.

மாவு இறங்கி வர வேண்டுமே! ம்ஹூம் .... மாவு இரக்கம் காட்டாமல் அசையாமல் இருந்தது.

ஏன் மாவு 'தர்ணா' செய்கிறது? 

அச்சில் கண் அடைச்சிருக்கோ? 
செக் செய்தேன்.  அப்படி ஒன்றும் இல்லையே....

" என்ன ரொம்ப நேரமாக சத்தத்தையே காணோம்." சொல்லிக் கொண்டே என்னவர் கிச்சனில் ஆஜர்.

அவர் பங்கிற்கு... அவரும்  முயல... மாவு மனம் இரங்கவேயில்லையே!அன்றைக்கு இடியாப்பம் கேன்சல் ஆனது தான் மிச்சம். 

இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதோ?

ஆனால், சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளத் தெரிந்த தாசரதனுக்கு, பிறகு சமாளிக்க முடியாமல் திணறி, கடைசியில் செத்தே போனான்.


எப்பவோ போர் களத்தில் கைகேயி, தசரதன் வெற்றிக்கு காரணமாயிருக்க...

அப்ப மனைவியின் மகிமையில் உச்சி குளிர்ந்து போய், " உனக்கு நான் ஏதாவது gift தரணுமே அன்பே". சொல்லியிருப்பான்.

அவளோ, "நீங்கள் என் காதல் கணவன். நீங்களே எனக்குப் பெரிய gift. தனியா நீங்க தரணுமா?" அதெல்லாம் வேண்டாம்." சொல்லியிருப்பாள்.

விட வேண்டியது தானே தசரதன். இல்லை ஏதாவது ஒரு சினிமா டிராமான்னு கூட்டிட்டுப் போய் அசத்தியிருக்கலாம். 

அதெல்லாம் ரொம்ப சின்ன கிப்ட்னு  நினச்சா, "  அருமையான ஹில் ஸ்டேஷன் எதுக்காவது டூர் அழைத்துப் போயிருக்கணும்."

இல்லை... அரசன் தானே! வைரத்தாலும், வைடூர்யத்தாலும், பவுனாலும், நகை நட்டு வாங்கிக் குடுத்து முடித்திருக்கலாம்.

அதெல்லாம் விட்டுட்டு , " கைகேயி இந்தா எடுத்துக்கோ ரெண்டு வரம் தரேன்." சொன்னா என்னத்தை சொல்றது.

குடுத்தது தான் குடுத்தானே தசரதன்," அதுக்கு ஒரு டைம் லிமிட்...? ம்ஹூம். " 
Limited Time Offerனு ஒரு catchஆவது  வச்சிருக்கலாம். அதுவும் இல்ல....

அட்லீஸ்ட் "*conditions apply " என்று மிக மிக சிறிய எழுத்துக்களால் எழுதி, குடுத்திருக்கலாம். எல்லாத்தையும் மறந்துட்டு, கைகேயின் மேலுள்ள அளவற்றக் காதலால்.... வரத்தைக் குடுப்பானேன் இப்ப முழி பிதுங்க நிற்பானேன்.

இப்ப சொல்றானாம், " என் கண்ணை வேண்டுமானாலும் எடுத்துக்கோ." அப்படின்னு..

தசரதா! கைகேயி உன் கண்ணை வச்சுகிட்டு என்ன செய்யப் போறா?அவளோட ரெண்டு கண்ணும் நல்லாவே இருக்கு! 

போதாததுக்கு அவளோட கண் அல்லவா உன் சேர் மேல் விழுந்துடுத்து. . 

"Your Highness! Power mongering Kaikeyi needs your chair  & not your eye. " என்று தசரதனைப் பார்த்துக் கத்த வேண்டும் போல் இருக்கு.

இதையும் தாண்டி தசரதன், "என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கோ !" அப்படின்னு சொல்றானாம். 

இல்லை....இல்லை....பயமுறுத்துறானாம்.

கைகேயி " ஹ.....இது பனங்காட்டு நரி..இந்த சலசலப்புக்கு அஞ்சாது." என்று நினைத்திருப்பாளோ.

தசரதனுக்குப் புரிந்தது இவள் மசியவில்லை என்று. 

அடுத்து   negotiation tableற்குக் கூப்பிட்டுப் பார்க்கிறானாம்...

அவளிடம் ," உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஓகே ! பரதன் நாடாளும் வரம்-தந்து விடுகிறேன். இன்னொரு வரம் என்று ஒன்று கேட்டாயே! அதை மட்டும்... ப்ளீஸ்.... விட்டு விடேன் கைகேயி." என்று கெஞ்சுகிறானாம்.

அவனால் 'ராமன் காடு புகும் வரம்' என்று சொல்லக் கூட முடியவில்லை பாருங்கள். 'இன்னொரு வரம் 'என்று மட்டுமே சொல்கிறானாம்.

(என்னைக் கேட்டால் ,'ராமன், சீதை, லக்‌ஷ்மணன் 14 ஆண்டுகள் காட்டில் கஷ்டப்பட்டதற்கு, கைகேயி காரணம் இல்லை தசரதா! நீயும், உன் வரங்களும் தான் காரணம்' என்று சொல்வேன்.)

கம்பன் எவ்வளவு அழகாக இந்த சீனை நாலே வரியில் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்...
 அயோத்யா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்  1611.
'கண்ணே வேண்டும் என்னினும்
ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும்
இன்றே உனது அன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!
பெறுவாயேல்
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
மற' என்றான்

'பெண்னாகப் பிறந்தவளே! வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே! என் கண்களே வேண்டும் என்றாலும் நான் உனக்குக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன். எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை விரும்பினாலும், இப்பொழுதே உன் வசமல்லவா? வரத்தையே பெற விரும்புவாயானால் நாட்டை மட்டும் பெற்றுக் கொள்கொள்வாய். மற்றொரு வரத்தை மட்டும் மறந்து விடு' என்றான்.

ஒரு மன்னன் எவ்வளவு கீழே இறங்கி கெஞ்சுகிறான் பாருங்கள். 

தேவையா தசரதா உனக்கு இது? யோசி....

 நன்றி...வேறொரு கம்பனின் பாடலுடன் சந்திக்கிறேன்.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்