Monday 9 November 2020

கம்பனும், insecurityம்

தோழி கீதா அலுத்துக் கொண்டாள், " எனக்கு ரொம்ப சலிப்பா இருக்குடி. ஏன் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டேன்னு  தெரியல ."

"ஏண்டி ?"


"பின்ன என்ன சொல்லு? எப்பப் பாரு, மாமியாரும், நாத்தனாரும்  சேர்ந்து கொண்டு என்னைப் பற்றி இல்லாததும்  பொல்லாததும்  அவர் கிட்ட சொல்லி...  என வீட்டுக் காரர்  எப்பவும் என்னிடம்  முறைப்பாகவே  இருக்கிறார். எப்பவும் அவங்க  மூணு பேரும் ஒரு கட்சி. நான் மட்டும் எப்பவுமே குற்றவாளி. எப்பவும் தனி தான். என வீட்டுக் காரர் எப்ப தான் என்னைப் புரிஞ்சுக்குவாரோ ? இல்லை எப்பவுமே நான்  தனிமையிலேயே  இருந்து விடுவேனோன்னு பயமா இருக்குடி?"

"கவலைப் படாதே கீதா ! இதுவும் கடந்து போகும்." ஆறுதல்  மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

இது கீதாவின் பிரசசினை  மட்டுமல்ல நாம் நாட்டில் பல மனைவிகள் இப்படித் தான் மன நெருக்கடியில் இருப்பதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம். 

இந்த மன நெருக்கடி அந்தக் கால சீதையிலிருந்து  ஆரம்பிக்கிறது.

ஸீதைக்கும்  மாமியார், நாத்தனார் கொடுமையோ?

இல்லையா பின்னே ? கைகேயியோனால் தானே  இப்போ  அசோக வனத்தில் இருக்கிறாள்?

தன்னை சுற்றிப் பார்க்கிறாள்....  அரக்கியர் கூட்டம்  பயமுறுத்துகிறது.  இங்கிருந்து தப்பிக்கலாம் என்றால் ...எப்படி  தப்பிப்பது ? வழி தெரியலையே ...

ராமன் வருவாரோ ? இல்லை மாட்டாரோ?  அவர் பாட்டுக்கு அயோத்தி திரும்பியிருப்பயரோ? 

அப்படியெல்லாம் இருக்காது. என்னவர் என்னை அப்படி கைவிட்டுவிட மாட்டார் . மனசாட்சி சொல்லியது. சிறிது  நேரத்திற்கெல்லாம்  அதே மனசாட்சி, "ஒரு வேளை .. என்னைக்  காப்பாற்ற வரலைன்னா ? " நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது.

இங்கேயிருந்து  எப்படித் தப்பிப்பது? எல்லோரும் என்னை சுற்றிப் பயமுறுத்துகிறார்களே ! என்ன தான் செய்வது. 

மகனைப் போல்  நடந்து கொண்ட  லக்ஷ்மணனை , தவறாகப் பேசியதன் விளைவை இப்ப அனுபவிக்கிறேன் . 

மாலை மாலையாக வந்த கண்ணீரை  அடக்க முடியவில்லை சீதையால். 

மனதிற்குள் தோன்றிய  insecurity அவள் முகத்திலும் தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியத் தானே செய்யும்.

அவளைப் பார்த்த அனுமாருக்கு  "தாய் எவ்வளவு insecured ஆக உணர்கிறார் ? என்று தோன்றியது. அவரிடம் போய், "பரம்பொருள்  உங்களுக்காகவே  காத்துக் கிடக்கிறார். நீங்கள் பயப்பட வேண்டாம். மனம் தளறாதீர்கள்  "  சொல்லத் துடிக்கிறார். ஆனால் இது உகந்த  நேரம் அல்ல. இந்த ராட்சசிகள் அம்மாவை சுற்றி சுற்றி  வருகிறார்களே . அவைகள் சற்று கண் அசரட்டும்.  மரத்தின் மேலிருந்து கீழே குதிப்போம் என்று  தகுந்த நேரம் பார்த்து அமர்ந்திருக்கிறார்.

கம்பர் அசோகவனத்து சீதையை எப்படி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்று பார்ப்போமா?

பிராட்டி துயர்நிலைக் கிளவி 5336

 துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்
அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.

பல நாட்கள் துன்புற்ற பிராட்டி, உறங்காத அரக்கிமார்கள்  உறங்குவதைப் பார்த்து, உள்ளத்தால் துன்பத்தை  பொறுக்க முடியாமல், தப்பி  செல்லும் வழி சிறிதும் அறியாமல், மனம் நெகிழ்ந்து, பயமடைந்து,துன்பம் அடைந்தாள் .குறையாத அன்புடன் மனத்துடன் பேசுகிறாள்.


சீதை துயரம் அடைந்தது உண்மை தான். அதெல்லாம் சும்மா ஒரு சில மணித் துளிகளாகத் தான் இருக்கும். இன்றும் பெண்கள் உறுதியுடன் இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக காட்டப் படுவது  சீதை தான். அவளுடைய மன  உறுதிக்கு நிகர் அவளே.


வேறொரு  அருமையான கம்பன் பாடலுடன் மீண்டும் வருகிறேன்.



Friday 16 October 2020

கம்பனும், Confidence Boostingம்



Image Courtesy : Google

அம்மா? உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் அம்மா?

என்னடி?

கௌசல்யா ஏம்மா அப்படி நடந்து கொண்டாள்?

எந்தக் கௌசல்யாடி?

"சாட்சாத் ஸ்ரீராமனைப் பெற்றெடுத்த கௌசல்யாவைத் தான் சொல்றேன்."

அவள் என்னடி செஞ்சாள்?

(அம்மா மகளின் உரையாடல் இப்படிப் போகிறது.)

மகள் தொடர்ந்தாள்....

"ஸ்ரீ ராமனையே  பிள்ளையாப் பெற்றாளே... வளர்த்தாளோ? இல்லையே தூக்கிக் கைகேயிக் கையில் கொடுத்துட்டாளே. அதுக்கு என்ன சொல்ற...?"

அம்மா மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரி. அம்மா. அதை விடு. கைகேயி எவ்வளவு சம்ர்த்தாகக் காயை நகர்த்தி தன் மகன் பரதனை,("Out of Turnல்" ) ராஜாவாக்கிட வேண்டும்னு எவ்வளவு மெனெக்கெடறாள்.ஆனா  கௌசல்யாவைப் பாரு,. கண்ணால் நீர் விட்டு அழ மட்டும் தானே செய்தாள்.  அவள் பிள்ளைக்கு right royalஆக வர வேண்டிய பதவி கை நழுவிப் போவதை அழுதுக் கொண்டு, சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ  ஒரு அம்மா? 

ஆனால் கௌசல்யா இருந்திருக்கிறாளே. அதைத் தான் சொல்கிறேன் ." முடித்தாள் மகள் 

வினாடி நேரம் அம்மா வாயடைத்து நின்றாள். 

பிறகு வரிந்துக் கட்டிக் கொண்டு கிளம்பினாள்.

"எந்தப் பிரச்சினையையும், எடுத்தோம். கவுத்தோம்னு செஞ்சால் என்ன ஆகும்னு கைகேயியைப் பார்த்துத் தெரிஞ்சுச்க்கலாம்டி. பிரியமானப் புருஷனைப் பறிக் கொடுத்துட்டு, பெற்றப் பிள்ளை அவள் தூக்கிக் கொடுத்த அரசாட்சியையும், அவளையும்  உதறித் தள்ளிட்டுப் போக,  அயோத்தி மக்கள் அவளைக் காரித் துப்ப,  இன்றளவும் புராணம் அவளைக் கொடுமையானவளாகத் தானே காட்டுகிறது.

மாறாக கௌசல்யாவைப் பார். அழகாக பிரச்சினையைக் கையாண்டவள் கௌசல்யாதான். சொல்கிறேன் கேள்.

தன் மகன் ராஜாவாக வேண்டும் என்று எந்தத் தாய்க்குத் தான் ஆசையிருக்காது. கௌசல்யாவும் அப்படித் தான்.

பட்டாபிஷேக நாள் காலை.

நொடிக்கொரு தடவை தன் அந்தப்புர வாசலையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறாள் கௌசல்யா. தன் மகன் ராமன் முடி சூடிக் கொண்டு ராஜா ராமனாக வரப் போகும் அழகைக் காண அவள் மனம் துடிக்கிறது.. 

ஒரு இடத்தில் நிலைக் கொள்ளாமல் இங்குமங்கும் அலை பாய்கிறாள்.

சட்டென்று, தூரத்தில் ராமன் வருவதைப் பார்த்து விட்டாள்.  "என் ராமன் ராஜாராமனாக வருகிறான்." மனம் துள்ளிக் குதிக்க , ஆரத்தித் தட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவள் சட்டென்று பிரேக் அடித்து நின்று, வரும் ராமனை மீண்டும் பார்க்கிறாள்.

ராமன் தனியாகல்லவா வருகிறான். வெண்கொற்றக் குடையில்லை. அவனுடைய சிகை பட்டாபிஷேகப் புனித நீரால் நனைந்திருக்கவில்லை. என்னமோ தப்பா இருக்கே. மனம் சஞ்சலப் படுகிறது. 

நிமிட நேரத்தில் அவளுக்குப் புரிந்து விடுகிறது.

" பட்டாபிஷேகம் நடக்கவில்லை". 

காரணம் எதுவாக இருந்தாலும் ராமனை அது பாதிக்க விடக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருக்கிறாள். அவன் தன்னம்பிக்கை இழந்து விடக் கூடாது என்று பெற்ற  மனம் கிடந்து தவியாய் தவிக்கிறது.

ராமன் வந்து நடந்த விஷயங்களை சொல்கிறான். அம்மா மனம் வருத்தப்படக் கூடாது என்று அவன் நினைப்பது அவன் வார்த்தைகளில் வெளிப் படுகிறது. தாயைப் போல் தானே பிள்ளையும்  இருக்கும்.

கௌசல்யாவின் Re- action ஐப் பார்...

"அப்படியாப்பா ராமா. உனக்குப் பட்டாபிஷேகம் என்றல்லவா நினைத்திருந்தேன்.  அத்னால் என்ன ராமா? பரவாயில்லை விடு.. நியாயப்படி  உனக்குத் தான் பட்டம் கிடைத்திருக்க வேண்டும்,  

ஆனால்  ராமன் ஆண்டால் என்ன? பரதன் ஆண்டால் என்ன ராமா?. பரதன் யார்?  உன் தம்பி தானே. மேலும் உன்னை விடவும் மும்மடங்கு நல்லவன் பரதன்..  அவன் கைகளில் தானே அயோத்தி இருக்கப் போகிறது." என்று சொல்லி விட்டுத் திரும்பி நின்று கண்ணில் வரும் நீரை அடக்க முயற்சிக்கிறாள்.

ராமன் முன் புலம்பித் தீர்க்கவில்லை. அழுது புலம்பவில்லை. தசரதனைத் திட்டித் தீர்க்கவில்லை. கைகேயிக்கு, சாபங்களை வாரி வழங்கவில்லை. ராமனின் எதிர்காலத்தை முன்னிட்டு அமைதிக் காத்து, தன் மகனுக்கு, அவனுக்கு யாரும் அநீதி இழைத்து விடவில்லை. இழைத்து விடவும் முடியாது முக்கியமாக "அவன் எதுவும் இழக்கவில்லை." என்று தன் வார்த்தைகளின் மூலம்  message அனுப்புகிறாள்.எதை இழந்தாலும், மீண்டும்  கைப் பற்றலாம் Self Confidence இருந்தால்.  அதனால் தான் ராமன் self confidenceஐ  இழந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறாள் கைகேயி. 

ஆனால் அவள் உடைந்து தான் போயிருப்பாள். சந்தேகமே  வேண் டாம்.

இவளல்லவோ  தாய்.

"கௌசல்யாவிடம், தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இந்த confidence boosting  தான்.  இப்ப புரிஞ்சுதாடி?." முடித்தாள் அம்மா.

இப்ப கம்பன் கவியைப் பார்ப்போமா?

“முறைமை அன்று என்பது
    ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்
    நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்;“ எனக்
    கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்
    வேற்றுமை மாற்றினாள்.


இராமலக்குமண பரத சத்ருக்குனர்களாகிய நால்வரிடத்தும், குற்றமற்ற அ ன்பு செலுத்துவதில் வேறுபாட்டை நீக்கி ஒரே தன்மையளாய் உள்ள கோசலை,"மூத்தவன் இருக்கும் போது இளையவன் அரசாளுவது முறைமை அன்று என்ற ஒரு குறை உண்டு.ஆனால் பரதன் மூன்று மடங்கு எல்லோரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன்.உன்னையும் விட நல்லவன். கல்வி, இளமை, வீரம், குணம் முதலியவற்றில் யாதொரு குறையும் இல்லாதவன் என்று சொன்னாள்.


கம்பன் பெரிய 'சைக்கியாடரிஸ்ட்'  ஆக இருந்திருப்பாரோ ? ஒவ்வொரு பாடலும், ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறதே .

வேறொரு கம்பன் 'மேஜிக்'குடன்  மீண்டும் வருகிறேன்.

நன்றி............................................................................(தொடரும்)



Sunday 6 September 2020

கம்பனும், மைனாவும்( கம்பன் என்ன சொல்கிறான்?-26)


கைகேயியை கம்பன் விவரிப்பதைப் படிக்கும் போது, " இப்படியுமா ஒரு மனைவி இருப்பாள்?" கம்பர் விடுகிற ரீலுக்கு ஒரு அளவேயில்லையோ  என்று தான் தோன்றியது எனக்கு.

ஆனால் கைகேயி செய்த காரியம் அவரை அப்படித் சொல்ல வைத்திருக்கு என்று தான் சொல்ல வேண்டும். தன் காதல் கணவன் என்றும் பார்க்கவில்லை. பதவி மோகம் அவளைப் பிடித்து ஆட்டி வைத்திருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் " ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்று.

அவள் எத்தனைக் கொடூரமானவள் என்பதைப் புரிய வைக்க , கம்பர் ஆளுகின்ற உத்தி நம்மை அசர அடிக்கிறது.

இச்சமயத்தில் ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.
பட்டிமன்றம் ஒன்றில் கேட்டது ....

சிறுவன் ரவிக்குப் பத்து வயது.

மைனா ஒன்றை ஆசை ஆசையாய் வளர்த்து வந்தான். மைனா மேல் உயிராய் இருந்தான்.

ஒரு நாள் இவன் பள்ளிக்கு சென்றிருக்கும் போது, மைனா தண்ணி தொட்டிக்குள் விழுந்து உயிரை விட்டு விட்டது.

மாலை ரவி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அவன் அம்மா தயங்கி....தயங்கி....
"ரவி.... மைனா செத்துப் போச்சுடா."சொன்னாள்.

"போனாப் போகுது. விடு" சொல்லிவிட்டு விளையாடப் போய் விட்டான்.

அவன் அம்மா" அட...என்ன இவ்வளவு சுளுவாக விட்டு விட்டான்." நினைத்துக் கொண்டாள்.

விளையாடி முடித்து விட்டு, உள்ளே வந்தவன், " அம்மா .... மைனாவுக்கு சாப்பாடு குடுத்தாச்சா.?" கேட்டான்.

"ரவி...ஏண்டா சாய்ங்காலமே சொன்னேனேடா....மைனா செத்துப் போச்சுன்னு." கலவரமாக சொல்ல
ஓவென்று அழுது புலம்பினான்..

"நான் தான் அப்பவே சொன்னேனேடா." மீண்டும் அம்மா சொல்ல..

என் காதுலே "'நைனா' செத்துப் போச்சு" அப்படின்னு தான் காதுலே விழுந்தது. 

"இப்பத் தானே புரியுது. என் மைனா தான் செத்துப் போச்சுன்னு"

சொல்லிவிட்டு மைனா கூண்டைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,"மைனா! மைனா!" என்று அழுது புலம்ப...

நகைச்சுவையாக சொல்லப்படும் கதை. 

இதைப் போல் தானே கைகேயியும் ," பரதனிடம் தசரதன் இறந்து விட்டான் " என்று சர்வ சாதரணமாக சொல்கிறாள் பாருங்கள்.

தசரதன் மாண்ட பிறகு, பரதன் அழைத்து வரப்படுகிறான். பரதனுக்கு இன்னும் அயோத்தியில் கைகேயி வீசியப் புயல் பற்றித் தெரியாது. ஆனால் என்னவோ விசித்திரமாக இருக்கு அயோத்தியில் என்பது மட்டும் புரிகிறது. 

கைகேயியைக் காண செல்கிறான்.

பார்த்ததும்," அம்மா! அப்பா எங்கேம்மா?  நலம் தானே அவர்?" கேட்கிறான்.

கைகேயி சர்வ சாதரணமாக சொல்கிறாள்," உன் அப்பா விண்ணுலகு சென்று விட்டார்...." முடிக்க வில்லை.

"என்ன?...என்ன தாயே சொல்கிறீர்கள்? " பரதன் பெருங்குரலில் கத்தி விட்டான்.

முதலில், பரதன் தன் காதில் தவறாக விழுந்து விட்டது என்று தான் நினைத்திருப்பான். அப்பா செத்துப் போய் விட்டார் என்று இப்படி சர்வ சாதரணமாகவா அம்மா சொல்வாள். இவ்வளவு சகஜமாக அம்மா பேசுகிறாள் என்றால் தவறெதுவும் நடந்திருக்காது என்று தான் நினைத்திருப்பான்.

ஆனால் அது உண்மை என்று அவள் தொடர்ந்து பேசியதிலிருந்து புரிகிறது பரதனுக்கு. 
" நீ கவலைப் படாதே" என்று பரதனை தேற்றுகிறாளாம் கைகேயி.

இதை விடவும் கொடுமைக்காரியாக  வேறு யாராலும் கைகேயியை வர்ணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

பரதன் பதறிப் போய் விட்டான். இப்படியும் ஒரு மனைவி இருப்பாளா? தன் தாயை வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறான். சிலையாகி விட்டான். தந்தையை இழந்த துயரத்தைத் தாங்க முடியவில்லை அவனால்.

பிறகு அவளைக் கண்டபடி ஏசுகிறான் பரதன். "தாயா நீ! இல்லவேயில்லை...பேய்". அதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால் கணவன் இறந்த செய்தியை இவ்வளவு சாதரணமாக "நைனா செத்துப் போச்சு" என்கிற மாதிரி கைகேயியை சொல்ல வைக்கிறார் கம்பர். 

அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போமா...

அயோத்தியா காண்டம். பள்ளிப் படைப் படலம்.2234

ஆனவன் உரைசெய, அழிவு இல் சிந்தையாள்,

தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்

தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ,

வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றாள்.


பரதன் வினாவஎதற்கும் கலங்காத திட சித்தம் உடைய கைகேயி,"அசுரரது வலிமை கெடும்படி சேனையை உடைய, தேன் பொருந்திய  மலர்மாலையை அணிந்த  தயரதன்(தமக்கு வாழ்வளித்தவன் வருகின்றான் என்று கருதி) தேவர்கள் கைகூப்பி வணங்க விண்ணுலகத்தை அடைந்தான். நீ துன்புறாதே.


இப்படி கைகேயினால் மட்டுமே இருக்க முடியும் என்பதே உண்மை.


கம்பர் இத்துடன் நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை. வேறொரு பாடலில் அவளுக்கு ஒரு அவார்டே கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 


அதைப் பற்றி நான் எழுதியப் பதிவு இதோ.."கம்பனும் Awardம்"


கம்பரின் பாடலை ரசித்துக் கொண்டிருங்கள். வேறொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.


Monday 24 August 2020

கம்பரும், ஐஸ்வர்யா ராயும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-25)

Image Courtesy:DeviRajaraman.
"கம்பனும், மிளகாயும்" படிக்கலாம் இங்கே..

பக்கத்து வீட்டு ஜானுவின் திருமண வரவேற்பு.

நானும், என்னவரும் ஆஜர்.

மேடையில் பெண்ணும், மாப்பிள்ளையும் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்க நின்று கொண்டிருந்தனர்.

"ஆமாம்.. அது யாரது. ஜானுவின் பக்கத்தில்? தெரிந்த முகமாய் இருக்கு." சட்டென்று நினைவிற்கு வரவில்லை." மனம் குழம்பியது.

சில வினாடிகள் தான். கண்டு பிடித்து விட்டேன்.

ஜானுவின் அம்மா பட்டுப் புடைவை சரசரக்க , என்னருகில் வந்து ," வாங்கோ!" என்று சொன்னவுடன் , சிரித்துக் கொண்டே ,ஜானுவின் அருகில் நிற்பது உங்கள் தங்கை சுபா தானே. அடையாளமே தெரியல " என்றேன்.

சாதரணமாகவே நல்ல அழகு தான் இந்த சுபா. இப்ப மேக்கபின் கை வரிசையில் தேவதையாக ஜொலிக்கிறாள்.

மணப்பெண்ணுக்கு மட்டுமில்ல...இப்ப உறவினர்களுக்கும் பார்லர் பெண்மணி தேவையாயிருக்கு போலிருக்கு. 

இதெல்லாம் உலக அழகி திருமதி ஐஸ்வர்யா ராய் உபயம். காஸ்மெடிக் இண்டஸ்ரிக்கு நல்ல பிஸினஸ் நம் நாட்டில். நினைத்துக் கொண்டேன்.


"மேக்கப் " கலை ஒன்றும் நமக்குப் புதிது இல்லை. ராமாயணக் காலத்திலேயே இருந்திருக்கிறது.
இங்கே நான் சீதையைப் பற்றிப் பேசவில்லை. நான் சொல்வது சூர்ப்பணகைதான்.

சூர்ப்பணகை மேக்கப் போட்டுக் கொண்டேன் என்று உன்னிடம் வந்து சொன்னாளா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார். எப்படி என்று பார்ப்போமா?

காட்டில் ராமனைப் பார்க்கிறாள் சூர்ப்பணகை. ராமனின் அழகில் மதி மயங்கி எப்படியாவது ராமனைத் தன் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறாள். 
"ஆனால்,திருமகளின் வடிவமான சீதையோ ராமனின் பக்கத்திலேயே இருக்கிறாளே.
இவ்வளவு அழகான சீதையை விட்டு விட்டு அரக்கியான என் பக்கம் ராமன் எப்படித் திரும்புவான்." நினைத்துக் கொண்டவள் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறாளாம்.

அரக்க குலத்திற்கு  உருவத்தை மாற்றிக் கொள்வது பெரிய விஷயமா என்ன... நினைத்தவுடன் அழகிய பெண் உருவெடுக்கிறாள் சூர்ப்பணகை. மேக்கப் போட்டுக் கொண்டிருப்பாளோ? 

அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு, எப்படி நடக்கிறாளாம்?

டங்...டங் என்று பூமியே அதிரும்படி அரக்கியாக  நடப்பாளா என்ன?

இல்லையாம். 

மெல்ல...மெல்ல ஒயிலாக நடந்து வருகிறாளாம்.

அவள் நடந்து வருவது, வின்னுலகில் இருந்து இறங்கி வரும் தேவ கண்ணிகைப் போல் (ஒப்பனை செய்து கொண்டு) வருவதைப் போலிருந்தது என்று கம்பர் சொல்கிறார். 

செம்பஞ்சும், தளிரும் நாணும்படி இருந்ததாம் அவள் பாதங்கள். தாமரை மலர் போன்ற பாதங்களை மெல்ல அடியெடுத்து வைத்து, மயில் போல்..அன்னம் போல்... என்று வர்ணித்துக் கொண்டே வந்த கம்பரை யாரோ தடுத்து நிறுத்துவது போல் தெரிகிறது.

"யார் என் சிந்தனையக் கலைப்பது? என்று உற்று கவனிக்கிறார் கம்பர்.

அட.. அவரின் மைண்ட் வாய்ஸ்.

அவரின் மைண்ட் வாய்ஸ், "கம்பரே...ஸ்டாப்...ஸ்டாப்.... கொஞ்சம் ஓவரா சூர்ப்பணகையை வர்ணிக்கிறாப் போல் தெரிகிறதே.  அவள் வில்லி என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா.. இல்லையா?" கேட்டிருக்கும்.

சட்டென்று சுதாரித்துக் கொள்கிறார் கம்பர்.." ஆமாம்...ஆமாம்.. சூர்ப்பணகையை ரொம்பவும் வர்ணித்து வைத்து விடப் போகிறேன். அங்கு ராமன் உட்கார்ந்திருக்கிறான். ராமன் ஏகப் பத்தினி விரதன் ஆயிற்றே.கொஞ்சம் அடக்கி வாசிப்போம்." நினைத்துக் கொண்டார்.

வர்ணிப்பை  off-set செய்ய வேண்டுமே...என்று மனம் நினைத்தவுடன்...அவருக்கு வார்த்தை வந்து விழுகிறது. மனம் நினைப்பதை,எழுத்தாணி கொண்டு செலுத்துகிறது. 

"நஞ்சம்"- என்கிற வார்த்தையைப் போடுகிறார். இத்தனை அழகான சூர்ப்பணகை, கொடுமையான விஷம் போல் வந்தாள் என்று சொல்லி முடித்து விட்டால் போதுமே!  ஆனால் அவர் மனம் ஒப்பவில்லைபோலும். இன்னும் கடுமையாக சூர்ப்பணகையை சாட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

கம்பர் ஆச்சே...

"வஞ்ச மகள் " என்று சொல்லி வஞ்சனை நிறைந்தவளான சூர்ப்பனகை நடந்து வந்தாள் என்று முடிக்கிறார்.


அவரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்.

செம்பஞ்சும், விளங்குகின்ற மிகச் செழித்த தளிர்களும் நாணும்படி, சிறந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள் ஆகி, அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும்,
அன்னம் போலவும்,விளங்குகின்ற வஞ்சிக் கொடி போலவும், கொடிய விடம் போலவும், வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.
அவர் எழுதிய அந்த நான்கு வரிகளையும், சற்றே வாய் விட்டுப் படித்து, சந்த நயத்தை அனுபவியுங்கள்.  ஓசை நயம் சூர்ப்பணகை அடி எடுத்து வைப்பது போலவே இருக்கும்.




சந்தத்தையும், பொருளையும், சூர்ப்பணகை நடந்து வருவதையும் பார்த்துக் கொண்டிருங்கள். வேறொரு கம்பன் காவியப் பாடலுடன் வருகிறேன்.

நன்றி.

Tuesday 4 August 2020

கம்பனும், மிளகாயும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-24)




Image Courtesy : Wikkimedia Commons

ஷாப்பிங் முடித்து விட்டு  நானும், என்னவரும் ஹோட்டலுக்கு சென்றோம்..

"சமூக இடைவெளி கடைப் பிடித்தீர்களா? மாஸ்க் அணிந்து கொண்டீர்களா?" அடுக்கடுக்காக நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது..

"இப்ப எதுக்கு உனக்கு இந்த ஹோட்டல் ஆசையெல்லாம் "என்று  நட்புடன் நீங்கள் கோபித்துக் கொள்வதும் சரியே...

ஆனால், நாங்கள் ஹோட்டல் போனது இப்ப இல்லிங்க..

ஒரு நான்கைந்து, வருடம் முன்பாக இருக்கும். கொரோனா என்கிற பெயர் நம் அகராதியிலேயே இல்லாத (சொர்க்கமான)நாட்கள் அவை.

விஷயத்திற்கு வருகிறேன்...

சர்வரிடம் இட்லியும், காபியும் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தோம்.

இட்லியும், அதற்குக் கம்பெனி கொடுக்க சட்னியையும், சாம்பாரையும், 'டங்'என்று டேபிளில் வைத்து விட்டு  சர்வர் நகர்ந்தார்.

சலவைக்குப் போய் விட்டு வந்த மாதிரி இருந்த இட்லியின் ஒரு விள்ளலை சட்னியில் முக்கி உள்ளே தள்ளி விட்டு, " சர்வர் லேட்டாக கொண்டு வந்தாலும், இட்லியும் சட்னியும் லேட்டஸ்டாகத் தான் இருக்கு. சட்னி சூப்பர் இல்ல?" என்னவரிடம் கேட்க....

பதிலே வரவில்லை அவரிடமிருந்து..

என்னாச்சு என்று அவரைப் பார்க்க... அவரோ," உஸ்...ஆ...என்று சொல்லிக் கொண்டே டம்ளர்,டம்ளராக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தார்.. சர்வரிடம்," இன்னும் கொஞ்சம் தன்னீர் வேணும்." என்று  கேட்க...

"சட்னி ஒன்றும் அப்படியொன்றூம் காரமில்லையே?" இது நான்.

"சட்னி காரம்  இல்லை. சாம்பார் பயங்கரக் காரம்" அவர் சொல்ல...

நானும் சாம்பாருடன் இட்லியை சாப்பிட்டு..." ஆமாம்...கொஞ்சம் காரமாகத் தான் இருக்கு,"  ஆமோதித்தேன்.

அவரோ..." கொஞ்சம்.... காரமா? என்ன சொல்றே?

"கடைகளில் மிளகாய் ஏதாவது மீதம் இன்னும் இருக்குமா? இல்லை ஊரிலிருக்கும் எல்லா மிளகாயையும் ஒன்று விடாமல் சாம்பாரில் பொடியாக்கி போட்டு விட்டார்களோ?"கிண்டலாக கேட்டுக் கொண்டே சட்னியும் இட்லியுமாக சாப்பிடத் தொடங்கினார்.

"நீங்கள் சொல்வது எப்படியிருக்குத் தெரியுமா? இலங்கையில் ராவணன், அனுமனைக் கட்ட... கயிறு தேடினானாம். அது போல் இருக்கு."

"சரி,..சாம்பாருக்கும் ராவணனுக்கும் என்ன சம்பந்தம்?"

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார்.

"அனுமன் சீதா பிராட்டியைக் காண சமுத்திரத்தைத் தாண்டி, இலங்கைக்கு வந்தாரா?"

அப்போ ராவணன், அனுமன் வாலில் தீ வைக்க ஆணையிடுகிறான்.

அதற்கு, முதலில் அனுமனைக் கட்ட வேண்டுமே!

அனுமனைக் கயிற்றால் கட்ட முடியுமா சொல்லுங்கள். ஆனாலும் ராவணன் பணியாளர்கள் கட்ட ஆரம்பிக்கிறார்கள்.

"கயிறு இன்னும் நீளமாக வேண்டும்" 

கயிறு கொண்டுவரப் படுகிறது.

பழைய கயிற்றுடன் இதுவும் சேர்க்கப்படுகிறது. 

இப்ப....கட்ட முடிகிறதா? ம்...ஹூம்.....முடியவில்லையே.

அனுமன் மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார்," என்னை யாரென்று நினைத்தீர்கள்? சாட்சாத் பரந்தாமனின அருள் பெற்ற தூதுவனடா. என்னைக் கயிற்றால் கட்டுகிறார்களாம் இந்த மடையர்கள் ."

"முயன்று பார்க்கட்டும். " மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார் அனுமன்.


ஒரு பக்கம் சில பணியாட்கள் கயிறை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் அனுமனை கயிறுடன் சுற்றி வந்து கட்டப் பார்க்கிறார்கள். அடப் பாவமே ! கயிறு போதவில்லையே. அனுமன் தன் உருவத்தை வளர்த்துக் கொண்டே போவது புரிபடவில்லை அவர்களின் மரமண்டைகளுக்கு.

இன்னும்....இன்னும்...இன்னும்.... என்று அரண்மனையிலிருந்த எல்லா கயிறும் தீர்ந்து போக... எங்கெல்லாம் கயிறு கண்ணில் படுகிறதோ, அங்கேயிருந்தெல்லாம் கயிற்றை உருவி வருகிறார்கள் பணியாட்கள்.

தேரில் கட்டியிருந்த கயிறு, குதிரைகளைக் கட்டியிருந்த கயிறு, யானைகள் கட்ட பயன் படுத்தப்பட்டக் கயிறு, என்று அனைத்துக் கயிறுகளையும் உருவிக் கொண்டாகி விட்டது.

அவ்வளவு ஏன்? பெண்கள்  மரத்தில் ஊஞ்சலாட கட்டி வைத்திருந்த கயிற்றைக் கூட விட்டு வைக்கவில்லையாம். 

அப்படியென்றால் இலங்கையில் கயிற்றுக்குப் பஞ்சம் வந்து விட்ட்தோ?கயிறே இல்லாமல் போய் விட்டதோ?

இல்லை ....இல்லை... கயிறு இருந்ததாம் .  எங்கேயாம்?

கம்பர் குறும்புடன் இதற்குப் பதில் சொல்கிறார்....

இலங்கையில் இருந்த பெண்கள் கழுத்தில் இருந்த "தாலிச் சரடு" என்கிற மஞ்சள் கயிறு மட்டும் தான் மிஞ்சியதாம்.

என்னவொரு குறும்பு! என்னவொரு குசும்பு! கம்பனின் குறும்பானப் பாடல் இதோ...

பிணி வீட்டுப் படலம்.பாடல் எண் 6008
மண்ணில் கண்ட, வானவரை
    வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை
    இகலின் பறித்த, தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில்
    பிணித்த கயிறே இடை பிழித்த;
கண்ணில் கண்டவன் பாசம்
     எல்லாம் இட்டுக் கட்டினர்.

நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும், தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக் கொண்டு வந்த பாசங்களும், வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்,  எண்ண முடியாத மற்றயோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் ஆக தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு  அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள். தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்த பெண்களுக்கு அமைந்த ,திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக் கட்டியிருந்தக் கயிறே, அந்த சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

இதைப் படிக்கும் போது, கம்பர் லேசுப்பட்ட ஆளில்லை, என்றே தோன்றுகிறது.
சிரிக்காமல் நக்கலடிப்பது என்பது இது தானோ!

கம்பனின் நக்கலை ரசித்துக் கொண்டிருங்கள்.. 
வேறொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்..


Tuesday 21 July 2020

கம்பனும், 'சென்னைக்கு மிக மிக அருகே'யும்.(கம்பன் என்ன சொல்கிறான் - 23)

https://commons.wikimedia.org/wiki/File:Waking_up_Kumbhakarna.jpg

" அட.. கீதா  என்னது? அதுக்குள்ள ஆபீஸ் வந்துட்டே?" ஆச்சர்யத்துடன் கேட்டது பவானி. .

"ப்ச்......" இது கீதா.

" என்ன இந்த இடமும் முடியலையா?"

" ஆமாம் .போ..என்னத்த சொல்ல...அதான் ஒரு நாள் லீவை கேன்சல் செய்துட்டு வந்துட்டேன்" நொந்து கொண்டாள் கீதா.

உனக்குப் பிடித்து, கணவர் மாமியார் எல்லோருக்கும் பிடிக்கப் போய் தானே ஆரம்பித்தாய். அப்புறம் என்ன?

"விலை அதிகமோ?"

"விலையை விடு... இடம் எங்கே இருக்குத் தெரியுமா?"

பவானி கீதாவையே பார்க்க கீதா தொடர்ந்தாள்...

"இடம் பார்க்க...வீட்டு புரோக்கர்,  எங்களைக் காரில் தான் அழைத்துக் கொண்டு போனார். "

'ஆனால் கார் போச்சு.....போச்சு....போய் கொண்டேயிருந்தது. சென்னைக்கு மிக அருகில் என்பதை விடவும் , திண்டிவனத்துக்கு அருகில் என்று சொன்னால் சரியாக இருந்திருக்கும் பவானி."

என் மாமியார் ப்ரோக்கரிடம் " என்னப்பா ? பக்கத்துல தான்னு சொன்னே?" எங்கேயோ போயிட்டே  இருக்கோமே." கேட்க...

"அம்மா ... தோ வந்துட்டோம். " சொல்லிக் கொண்டே டிரைவரிடம்.," டிரைவர்... லெப்ட்டில் போ" சொன்னாரா..

" ஆஹா... வந்துட்டோம் போலிருக்கு" நான் நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்று எனக்குப் புரிய சிறிது நேரமானது.

அதற்குப் பிறகு," லெப்ட் எடு...அதோ..அந்த வேப்ப மரம் தெரியுது இல்லையா...அங்க ரைட் எடு."

இப்படியே லெப்ட்..ரைட்... குட்டி சந்து என்று போறோம் போறோம்.....போய்க் கொண்டே இருக்கோம்."

"நிலத்தைப் பார்த்தீர்களா இல்லையா? "  பவானி கேட்க...

பார்த்தோம்.. பார்த்தோம்.... கும்பகர்ணனை எழுப்ப இராவணனை எழுப்பக் குதிரைகளை இலக்கில்லாமல் அவன் மார்பில் ஓட விட்டானாமே . அது போல் தான் நாங்களும் காரில் இலக்கில்லாமல் போய் ஒருவழியாய் பார்த்த்தோம்.

அது என்ன கும்பகர்ணன், குதிரை என்று என்ன தான் சொல்ல வருகிறாய்?  என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார்...

போர் புரிய, ஆறு மாதமாய் தூங்கும் கும்பகர்ணனை எழுப்ப இராவணன்  ஆட் படைகளை அனுப்புகிறானாம்.

தாரைத் தப்பட்டை எல்லாம் பெருத்த ஒலி செய்தும், அவன் உறக்கம் கலையவில்லையாம். அப்படியொரு தூக்கம் தூங்குகிறானாம் கும்பகர்ணன்.

என்ன செய்யலாம்? என்று ராவணன் யோசித்து...

குதிரைப் படை ஒன்றை அனுப்பி ...அவன் கும்பகர்ணன் மார்பின் மேல் ஓட விடுகிறானாம் ராவணன்.

குதிரைப் படை அவன் மார்பின் மேல் நாலு கால் பாய்ச்சலில் ஓட வேண்டுமென்றால் ...எத்தனைப் பெரிய உருவமாய் கும்பகர்ணன் இருந்திருக்க வேண்டும். 

அதுவும் எத்தனை குதிரைகள் என்கிறீர்கள்? ஆயிரம் குதிரைகளை அவன் மேல் ஓட விட்டானாம்.

கம்பன் கற்பனைக்கு அளவேயில்லையோ?  அப்படி ஆயிரம் குதிரைகளை  ஓட  விட்டும், கும்பகர்ணன் எழுந்திருக்கவில்லையாம்.

அப்பவும் எழுந்திருக்கலையா? குதிரை ஓடினால் வலிக்காதோ?

"வலிக்கவில்லையாம். அவனுக்கு உடம்பைப் பிடித்து விட்டாற் போல் இருந்ததாம்..அதனால் அவன் உறக்கம் அதிகமாயிற்றாம்." கம்பனின் கற்பனையை யாரால் மிஞ்ச் முடியும்.?..சொல்லுங்கள்.

என்னது குதிரை அவன் மேல் ஓடுவது அவனுக்கு உணக்கையாக இருக்கிறதோ ?

எனக்கும் அதேதான் சந்தேகம். ஆனால் கம்பர் அடித்து சொல்கிறாரே.. அவருடைய பாடலை ரசிப்போமா.....

கும்பகருணன் வதைப் படலம் 7324


கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான்தன் மார்பிடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான்.

இராவணன் ஆணைப் பெற்ற வீரர்கள் அளவு மீறி அதிகமாக உறங்குபவனான கும்பகருணனது மார்பில், ஓராயிரம் கடிவாளம் பூட்டப் பெற்ற விரைவாகச் செல்லும் குதிரைகளுடன் விரைந்து வந்து, அவற்றை மார்பில் நடத்தி ஓட்டி, அவனுடைய மார்புக்கு மாலை போல விரைவாக சுற்றி வந்தார்கள். அவ்வாறு அவர்கள் செய்த செயலால் துடையைத் தட்டுவது போல அவன் பெருந்துயில் கொள்ளலானான்.

கம்பன் கற்பனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா? 
வியப்பில் இருந்து வெளி வருவதற்குள் , கம்பன் கடலில் இருந்து வேறொரு முத்துடன் உங்களை சந்திக்கிறேன். 

நன்றி.










Monday 29 June 2020

கம்பனும், கொரோனாவும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-22)


Image Courtesy ; Google.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது, கண்ணிற்குத் தெரியாத ஒரு எதிரி. 
ஆமாங்க... கொரோனா தான். 
நம்பிக்கையுடன் தக்கப் பாதுகாப்புடன் இருப்போம். 
இதுவும் கடந்து போகும்.

அதே சமயம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவைகள் நம்மைக் காப்பாற்றும்.

இப்பல்லாம் வீட்டுக்குள்ளே வரும் போது, முதலில் மாஸ்க்கைக் கழட்டி எறிந்த பின், கையுறை கழட்டி, ஸ்பெக்ஸ், செல் போன் எல்லாவற்றையும்  sanitiserல் குளிப்பாட்டி விட்டு,..." வெறுங்கையுடன் வீட்டுக்குள் நுழைகிறோம் 

ராவணனும் இதையே தான் செய்தானாம். (கொரோனாவுக்காக நாம் செய்வது போல்)

எப்படி? எங்கே? 

போர்க்களத்தில் ராமன்," இன்று போய் நாளை வா" என்று ராவணனிடம் சொல்லவும், ராவணன் இலங்கைத் திரும்பிய காட்சியை கம்பர் படமெடுத்திருக்கிறார் பாருங்கள்..


அரசச் சின்னமான மணிமுடி பத்து, சிவபெருமான் கொடுத்த வாள், எப்பொழுதும், அவனுடனேயே இருந்த வெற்றித் திருமகள், வீரத் திருமகள் என்று அனைவரையும் விட்டு விட்டு வெறுங்கையுடன் இலங்கைத் திரும்பினான் இலங்கை வேந்தன். என்று சொல்கிறார் கம்பர்.

அவர் வடித்த வரிகள் இதோ...

கும்பகர்ணன் வதைப் படலம். பாடல் எண் 7272


வாரணம் பொருத மார்பும்,
    வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
    நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
    சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
    வெறும் கையோடு இலங்கை புக்கான்

திசை யானைகளின் எதிர் சென்று போரிட்டுத் தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாய மலையை அள்ளி எடுத்த வலிமிகு தோளும், நாரத முனி பாராட்டி ஏற்குமாறு, சாமவேதத்தை இசை நயத்தோடு பாடிய நாவும்,பத்துத் தலைகளில் அணிந்திருந்த அரசச் சின்னமான மணிமுடி பத்தும், தவ ஆற்றல் கண்டு சிவபெருமான் கொடுத்த வாளும், தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும், போர்க்களத்திலே போட்டு விட்டு,தன்னிடமிருந்த பொருட்கள், உறுப்புகள், ஆகியவற்றை இழந்து, வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டும் போனான்.

இதைப் படிக்கும்போது "நாம் இந்தக் கொரோனா காலத்தில் வீட்டுக்குள் நுழைவதைப் போல் அல்லவா ராவணன் இலங்கைக்குத் திரும்பியிருக்கிறான்." என்று நீங்கள் நினைப்பது மிகவும் சரியே.

படித்துக் கொண்டிருங்கள்...

மீண்டும் வேறொரு கம்பன் பாடலுடன் வருகிறேன்.


Tuesday 23 June 2020

குலசேகராழ்வாரும், Total Surrenderம்


குலசேகராழ்வார் கேட்டப் பிறவிகளை எல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்து விட்டு  வருவோமா?

கொக்கு, மீன், பொன் வட்டில், பாரிஜாதம், மலை, சுழித்து ஓடும் ஆறு, நடக்கும் பாதை, என்று ஒன்று மாற்றி ஒன்று கேட்டுக் கொண்டே வந்தவர், "படியாய் கிடந்து பவள வாய் காண்பேனே" என்று கேட்கவும்,

வேங்கடவனும் ," இதை விட ஒரு நல்ல பிறவி இருக்க முடியுமா. குல சேகரனும் என்னருகில் இருப்பான். நானும் அவனருகில் இருப்பேன்." என்று பெருமாள் பெருமூச்சு விடுவதற்குள்....

குலசேகராழ்வார் மீண்டும் மறுதலித்து விடுகிறார்.
ஏன் ?
படியாய் கிடக்கலாம். ஆனால், யாராவது தங்க முலாம், வெள்ளி முலாம் பூசுகிறேன் பேர்வழியென்று செய்து விட்டால்.... அப்புறம் நான் எப்படி பெருமானது செம்பவள வாயைக் காண்பது? என்று யோசித்து அப்பிறவியும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.

"பிறகு என்ன பிறவி தான் இந்த குலசேகரான் கேட்கப் போகிறான்?" வேங்கடவன் புதிருடன் ஆழ்வாரைப் பார்க்க....

ஆழ்வார், வரம் என்று எதுவும் கேட்காமல், " வேங்கடவா! பெருமாளே! எனக்கு திருமலையில் ஏதாவது ஒரு பிறவி கொடுத்து விடேன். உனக்குத் தெரியாதா  எனக்கு எது நல்லது என்று."

பெருமாள் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு," குலசேகரா! இப்பொழுது நீ total surrender செய்து விட்டே இல்லையா? இனி நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு எது நல்லதோ அதை நானே செய்கிறேன்." என்று அருள் செய்திருப்பார்.

உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே


ஒரு கொற்றக் குடையின் நிழலிலே அரசாண்டு, அழகிய ஊர்வசியையே அடையப் பெறினும்,அதனை நான் விரும்ப மாட்டேன்.சிவந்த பழம் போன்ற வாயையுடைய எனது அப்பனுடைய திருவேங்கடமென்கிற அழகிய திருமலையின் மேல் ஏதேனும் ஒன்றாகப் பிறக்கக் கடவேன்.

நாமும் பெருமாளிடம் total surrender செய்து கொண்டால், தீர்ந்தது பிரச்சினை. நமக்கு எது நல்லதோ அதை வேங்கடவனே செய்து விடுகிறான். கோவிந்தா!கோவிந்தா!

இறுதிப் பாசுரம் இதோ:

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

கூர்மையான வேலாயுதத்தையுடைய  குலசேகராழ்வார், நிலைப் பெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வட வேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பெருமானது, பொன் போன்ற சிறந்த சிவந்த திருவடிகளை சேவிப்பதற்கு ஆசைப் பட்டு வணங்கி, அருளிச் செய்த தமிழ் பதிகத்தை கற்று வல்லவர் அப்பெருமானது திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்.

இத்தொடருடன் பயணித்த/பயணிக்காத  அனைவரும், எல்லா நலங்களும், வளங்களும் பெற திருவேங்கடவனை வேண்டுகிறேன்.



Sunday 7 June 2020

குலசேகராழ்வாரும், குலசேகரப்படியும்.














திருமலையிலேயே சுழித்து ஓடும் ஆறாய்ப் பிறந்தால் வேங்கடவன் பாதத்த்தின் அடியிலேயே கிடக்கலாம் என்று நினைத்தவர் அதிலும் குறை கண்டு.....

என்ன குறை கண்டிருப்பார் என்று தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்கவும்.

 வேறென்ன பிறவி கேட்கலாம்? யோசிக்கிறார் ஆழ்வார்.


"நான் இத்திருமலையில் ஒரு பாதையாகக் கிடந்து விடுகிறேனே. உன் பக்தர்கள் உன்னைத் தரிசிக்க நடந்து வருகின்ற போது, அவர்களுடைய பாதம் படும் பாக்கியத்தையும் , உன் அருகில் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றவனாவேன் . " வேங்கடவனிடம் வேண்டிக் கொள்கிறார்.

அப்பாடி..... "2 in 1" வேண்டுதலை  முடித்து விட்டோம்  என்று பெருமூச்சும் விட்டிருப்பார்.

பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே.

இளம் பிறையை உடைய ஜடா முடியைக் கொண்ட சிவனும், பிரமனும், இந்திரனும், செய்கின்ற யாகங்களின் பயனாக, அவர்களின் கோரிக்கையை தீர்த்து வைப்பவனும், வேதங்களில் பரம்பொருளாய் கூறப் படுகின்ற எம்பெருமானுடைய , திருவேங்கட மலை மேல் (போகிற) வழியாய் கிடக்கின்ற நிலையை உடையவனாகக் கடவேன்.

ஆனால் இந்த 2 in 1  வேண்டுதலும் அவருக்குத் திருப்தி தரவில்லை போலும்.

"வேண்டாம்! வேண்டாம்!  பெருமாளே ஒருவேளை உன் பக்தர்கள் தாங்கள் நடந்து வரும் பாதையை மாற்றிக் கொள்ளலாம். அல்லது, அரசாங்கத்தார் பாதையையே அடைத்து விடக் கூடும்.. அப்பொழுது நான் உன்னை விட்டுப் பிரிய நேரிடுமே பெருமாளே. அதனால் இப்பிறவியும் வேண்டாம் ."

என்று யோசிக்கிறார்.யோசித்து ஒரு முடிவுக்கும் வந்து விடுகிறார்.

பக்தர்கள் கால் படும் படி கிடக்க வேண்டுமென்றால் ஏன் மலை மேல் இருக்க வேண்டும் ? வேங்கடவன் அருகிலேயே இருந்து விட்டுப் போகிறேன். .  தேவர்களும், ஞானியர்களும், ரிஷிகளும் , பக்தர்களும் , "கோவிந்தா! கோவிந்தா!" என்று கோஷமிட்டுக் கொண்டே மிதிக்கும்,உன் சன்னிதியின் உள் வாயிற் படியாய் கிடந்து விடுகிறேனே. பக்தர்கள் பாதங்கள் படும் பாக்கியமும் கிடைக்கும். உன் செம்பவள அதரத்தை தரிசித்துக் கொண்டேயிருக்கும்  பாக்கியமும் எனக்குக் கிடைத்து விடும் என்கிற நோக்கில்...

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

செடி போல் அடர்ந்து மண்டிக் கிடக்கின்ற பாவங்களைப் போக்கும் திருமாலே, பெரியோனே, வேங்கடவா! உன் கோயிலின் உள் வாசற்படியில், பக்தர்களும், தேவர்களும், அப்ஸரஸ் போன்ற ஸ்திரீகளும், இடைவிடாது சஞ்சரிக்கப் பெற்ற படியாய் பொருந்தி உன் செம்பவழம் போன்ற அதரத்தைக் காண்பேனாகக் கடவேன். 

ஆனால், இந்த வேண்டுதலிலும் அவருக்குத் திருப்தியாகவில்லை என்று அவருக்கே புரிய வர," வேண்டாமப்பா...வேண்டாம்" என்று சொல்லி விடுகிறார்.

ஏனாம்?

"அதான் உபயதாரர்கள் ரெடியாக இருப்பார்களே. வாசற்படிக்கு பொன் முலாம் , வெள்ளி முலாம் பூசுகிறேன் பேர்வழியென்று படியை மூடி விட்டால்...நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறதே! அருகில் இருந்தும் உன் தரிசனம் கிடைக்காமல் போய் விடுமே. அதனால் எனக்கு இதுவும் வேண்டாம்."

(நல்ல வேளை.அவர் சந்தேகப்பட்டது போல் எதுவும் நடந்து விடவில்லை. பெருமாள் கோவில்களில் முலாம் பூசப்படாத 'குலசேகரப்படி'யை இன்றும் காணலாம். திருமலையிலோ 'குலசேகர துவாரம்' என்கிற நாமத்துடன் ஒரு வாயில் விளங்குகிறது.)

பெருமாளுக்கும் சலிக்கவேயில்லை போலும். நீயாச்சு உன் வேண்டுதலுமாச்சு என்று சலித்துக் கொள்ளாமல் பொறுமையாய் மாறாப் புன் முறுவலுடன் சேவை சாதிக்கிறார்.

அடுத்து என்ன?                                                        (தொடரும்)


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்