Tuesday 17 December 2013

களி நடனம் கண்டதுண்டா?





அது என்ன களி நடனம்?
 எம்பெருமான் சிவன்  ஆடிய நாட்டியம் தெரியும்.
அதைத் தான் களி நடனம் ,என்று சொல்கிறேனா  என்று  பார்க்கிறீர்களா ?
இல்லை...இல்லை.....

தொடர்ந்து படியுங்கள்......

திருமணமான வருடம். டெல்லி வாசம் . திருவாதிரைத் திருநாள் வந்தது.
ரொம்பவும் ஆர்வத்துடன் இருந்தேன். திருமணத்திற்குப்  பின் , தனியாக ,முதல் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறேன்.  திருவாதிரை  வந்ததோ ஞாயிற்றுக் கிழமை.அதனால்  என்னவருக்கும்  லீவு. தமிழ் நண்பர் ஒருவர் காலை  டிபனிற்கு வருவதாக சொல்ல   முதல் நாளே நான் "களி" செய்ய   ரெடியானேன்.

" இங்கு தினசரி சமையலே ஆட்டம் தான். இதில் களி வேறு செய்யப் போகிறாயா ? "என்று கேட்ட  மனசாட்சியை  " சும்மா இரு  .எல்லாம் எனக்குத் தெரியும் " என்று அடக்கி விட்டு  அரிசி ,பருப்பு வறுத்து பொடித்து வைத்தேன்.

மறு  நாள் டிசெம்பர் மாத டெல்லி குளிரில் , அதிகாலை எழுந்து குளித்து , 'வெடவெட'வென்று  ,நடுங்கிக் கொண்டே  ஸ்டவ்வில்  பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி ,  கொதிக்க வைத்து , அதன் பின்  பொடித்த மாவைக் கொட்டி  கிளறி விட்டு விட்டு ,ஸ்டவ்வைக் குறைத்து விட்டு , மூடி  வைத்தேன்.

இன்னொரு ஸ்டவ்வில்  தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஃபில்டரில்  காபித் தூள்  போட்டு  ,தண்ணீரை அதன் தலையில் கொட்டி விட்டு, என் கணவரை ,
எழுப்பினேன்.பால் வாங்கி வரத் தான். அருகிலேயே  தான்  'Mother Dairy' பூத்.

அவரோ ," இன்றைக்கு  ஞாயிற்றுக் கிழைமை. அதுவும் இந்தக் குளிரில்  என்னால் இத்தனை  சீக்கிரமாக எழுந்திருக்க முடியாது ." என்று சொல்லி விட்டு மீண்டம் ரஜாய்க்குள்  ஒளிந்து கொண்டார்.

முதல் நாள் பாலில்  காபிப் போட்டுக் குடித்தேன். பின், களியை ஒரு கிளறு கிளறலாம்  என்று  போனேன். கிளறப் போனால் லேசில் அதைக் கிளற முடியவில்லை. தொட்டுப் பார்த்தேன். வெந்திருந்த மாதிரி தான் இருந்தது. பின், வெல்லம் போட்டுக்  கிளறி  விட்டு, கொஞ்சம் இறுகியவுடன். , இறக்கி வைத்தேன். அதற்கு அலங்காரமெல்லாம் சரியாகத்  தான் செய்தேன். அதான் ஏலக்காய், முந்திரி..... எல்லாம் போட்டேன்.

அதற்குள் என்னவர் எழுந்து  பால் வாங்கக் கிளம்பினார். போகும் போதே," அட, களி  வாசனைத்  தூக்குகிறதே !"  என்று சொல்ல , எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

வந்து அவரும் குளித்தபின் , பூஜை செய்தோம் .பின்  களியை  எடுத்து  அவரிடம் ஒரு கின்னத்தில்  கொடுக்க அவரும் ஆசையாய்  ஸ்பூனால்  சாப்பிட ஆரம்பிக்க, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு விட்டு, நன்றாகத் தானிருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் வேக வேண்டும்  என்று சொல்ல நானும் வாயில் போட  அத்தனையும்  பாதி தான் வெந்திருந்தது. என்ன செய்வது?

அதற்குள்  "டிங் டாங்"

நண்பர் வந்து விட்டாரே!  அவருக்கு இதைக் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து ,களி  சாப்பிட்ட  ,செய்த , தடயத்தைஎல்லாம் அவசரமாக மறைத்தேன்.

நண்பருக்காக  தோசையும் சட்னியும்  செய்து , சாப்பிடச்  சொன்னோம்.
சாப்பிட்டுக் கொண்டே  , " என்ன மேடம் ? நானும் வரும் வரும் என்று பார்க்கிறேன். களி வாசனை   அடிக்கிறது. ஆனால்  கண்ணில் காண்பிக்க மாட்டேனேன் கிறீர்களே!"என்று  சொல்ல  நான் திரு திரு ........தான் .

அதற்குள்  இவர் (நமக்கு விரோதி வெளியில் இல்லை . புரிந்தது)," களி  கல் மாதிரி இருக்கிறது. உனக்கெதற்கு   அந்தத் தண்டனை. எனக்கு மட்டும் போதும் ." என்று கிண்டலடித்தார்.  அத்தோடு நிறுத்தியிருந்தால்  பரவாயில்லை.
" களி   சாப்பிட வேண்டுமென்றால்  , என் அம்மா செய்து சாப்பிட வேண்டும்.
ஆருத்ரா தரிசனம் என்றால் எங்கள் ஊர்  லால்குடியில் காண வேண்டும்" என்று  இவர் புராணம் ஆரம்பிக்க . அந்த டெல்லிக் குளிரில் ,எழுந்து செய்த ,எனக்கு எப்படி இருந்திருக்கும்  பாருங்கள்.

அன்றே தீர்மானித்து விட்டேன். போர் கால அடிப்படையில்  களி  செய்யக்  கற்றுக் கொள்வதென்று.

சென்னைப் பக்கம் வரும்போது    , ஒரு முறை  களியை  அம்மா வீட்டில் கிண்டிப் பார்த்து  தெரிந்து கொண்டு விட்டேன்.

அதற்குப் பிறகு,  நான் எத்தனை சிரத்தையுடன் செய்தாலும் ,ஒவ்வொரு வருடமும்  " என் அம்மா  செய்யும் களி  போல்  இல்லை " என்று அவர் சொல்வது வாடிக்கையானது.

டெல்லியிலிருந்து கணவருக்கு மாற்றல்.  இப்பொழுது ஊடகங்களில்  ஆலோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறதே,  'Muzaffarnagar'  அதற்கு  அருகிலிருக்கும்  Modinagar என்கிற  சிறிய  ஊர்.

அந்த  வருடம் என் மாமியாரும் ,திருவாதிரை சமயம் அங்கு இருக்க ,அவர் எப்படித் தான் செய்கிறார்  பார்க்கலாம்  என்று காத்திருந்தேன். அப்பொழுது எனக்கு   இரு குழந்தைகள் . இரண்டும் ரெட்டை வால் .

அப்பொழுது என் பெண்ணிற்கு ,நான்கு வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.
பக்கத்து வீட்டில்  ஒரு சர்தார்ஜி குடும்பத்தினர்  இருந்தார்கள்.  வயதான தம்பதியினர்.  என் இரு  குழந்தைகளையும் ' ஆஜா  ஆஜா ' என்று  கூப்பிட்டு அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில்  விளையாட  விட்டு  சந்தோஷப்படுவார்கள்.

திருவாதிரையும் வந்தது. நானும்  ,என் மாமியாரும் ,காலையில்  களியைக்  கிண்ட  ஆரம்பிக்க  , என் பையன் அப்பொழுது மழலையில், " தீதி  தீதி " என்று எதையோ சொல்ல முயற்சிக்க நான் அவனை அடக்கி ,  " தீதியுடன்  போய் விளையாடு " என்று சொல்லி அவன் கையில் ஒரு பிஸ்கெட்டைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

ஐந்து நிமிடத்திற்கெல்லாம்  மீண்டும்  வந்தான் .மீண்டும்  " தீதி  தீதி " என்று உளர  ,என் மாமியாரும் " என்ன என்று தான் பாரேன் " என்று சொல்ல அவன்  என்னை அழைத்துக் கொண்டு போய்   பக்கத்து சர்தார்ஜி வீட்டைக் காட்டி " தீதி தீதி "சொல்ல முயற்சிக்க  , சட்டென்று தோன்றியது. 'பாப்பா எங்கே?'  , உள்ளே திரும்பி  ' பாப்பா பாப்பா  ' என்று
கூப்பிட , உள்ளேயிருந்து ஒரு பதிலைக் காணோம்.

ரஜாயிக்குள்,  ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்து படுக்கையறைக்கு சென்றால்  , அங்குமில்லை.என் கணவரிடம்   'பாப்பாவைக்  காணோம் ". என்று பதறினேன்.  அவரும், மாமியாரும் ,வீடு முழுக்க தேடி விட்டு , அவர் மாடியில் பார்க்கிறேன் என்று படியை நோக்கி ஓட , நானோ ஒன்றும் புரியாத பதட்டத்தில் , என் பையனோ கீறல் விழுந்த ரெக்கார்டாய்  " தீதி தீதி " என்று சொல்லிக் கொண்டிருக்க ,

"அம்மா  அம்மா" என்ற என் பெண்ணின் குரல் , காதுகளில் தேனாய் பாய்ந்தது..

பக்கத்து வீட்டிலிருந்து  , வாய் நிறைய கேக்குடன்  அவர்கள் வீட்டு சமையல் செய்யும் பெண்ணுடன் ,எங்கள் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தாள்  எங்கள் சீமந்த புத்திரி .
பஞ்சாபியில் அந்தப் பெண்  ஏதோ  சொல்ல,எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
வெளி கேட்  திறந்திருக்க  , இவள் பக்கத்து வீட்டிற்கு ஓடிப் போயிருக்க வேண்டும் என்று யூகித்தோம்.
ஆனாலும் ,அந்த ஒரு சில நிமிட பதட்டம் , இன்றும்  நினைத்தால்  பதறும்.

பதட்டம் தீர்ந்ததும் , "களி  அடுப்பிலிருக்கிறதே! மறந்து விட்டோமே "என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினேன்.  போய் பார்த்தால்   களி கருப்பாகி, தீய்ந்து எங்களைப் பார்த்து சிரித்தது.

என் களி  ராசி ,என் மாமியாரிடமும்  ஒட்டிக் கொண்டது போல் ஆனது அந்த வருடம்.

ஒவ்வொரு வருடமும், எப்படியாவது  களி என் கண்ணைக் கட்டி விளையாட்டுக் காட்டும். ஆனானப்பட்ட  லட்டும், மைசூர்பாகும்  நான் சொன்னபடி கேட்கும்.இந்தக் களி  தான்......

நாளைத் திருவாதிரை!  பஞ்சாங்கம் சொல்கிறது. சிவன் ஆடுகிறாரோ இல்லையோ, எங்கள் வீட்டில் களி  ஆட்டம்  நிச்சயம் .

image courtesy---google.




47 comments:

  1. களியாட்ட வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

      Delete
  2. இந்த வருட (உங்க வீட்டு) களி நடனம் எப்படி வந்ததுன்னு பார்க்க ஆசை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  3. ருசியாகவும் பக்குவமாகவும் களிசெய்து களிப்புடனும் களிநடனத்துடனும் கொண்டாட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி வைகோ சார்.

      Delete
  4. இந்த வருடம் களி எப்படி இருந்ததென்று மறவாமல் சொல்லுங்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சொல்கிறேன் தமிழ்முகில் . வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழி.

      Delete
  5. கடவுள் புண்ணியத்தால் இந்த முறையாவது களி சிறப்பாகச்
    செய்வதற்கு வாழ்த்துக்கள் :)))).எப்போதும் ஆண்களுக்குத் தங்கள்
    அம்மாவை விட்டுக் கொடுக்க மனம் வராது உங்க கஸ்ர காலம்
    மாமியார் வந்தும் களி கேள்விக் குறியாகி விட்டது :)) இந்தத்
    திருவாதிரையை மகிழ்வாய்க் கொண்டாடவும் வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழி.

      Delete
  6. களி நடன திருவாதிரைச் சிறப்புப் பதிவு
    படித்து களி மிகக் கொண்டேன்
    மிகச் சுவாரஸ்யமான நிகழ்வை
    சுவாரஸ்யமாகச் சொல்லிப்போனவிதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் .

      Delete
  7. களிவரலாறு ஜோராய் இருந்தது. கூடவே கூட்டுக் கதையும் சொல்லியிருக்கலாமோ! :)))

    ReplyDelete
    Replies
    1. என் இம்சையை சகித்துக் கொண்டு ,படிக்கிறேன் என்று சொல்லும் போது , எனக்கென்ன கூட்டுக் கதையையும் எழுதிவிடுகிறேன்.
      நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  8. சிவன் ஆடுகிறாரோ இல்லையோ, எங்கள் வீட்டில் களி ஆட்டம் நிச்சயம் .// நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்லாவே இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா.

      Delete
  9. உண்மையில் களியாட்டம் தான்!...

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  10. இந்த வருடன் திருவாதிரை களி செய்த படலத்தை இன்னொரு பதிவாக போடுஙக்ள்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் இந்த வருடக் கதையை பதிவாகப் போடுகிறேன் ஸாதிகா.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  11. அதென்ன திருவாதிரை அன்றுதான் களி செய்ய வேண்டுமா.?எங்கள் பக்கம் திருவாதிரைக் களியுடன் காவத்துக் கிழங்கு கறியும் செய்ய வேண்டும். அதென்ன காம்பினேஷனோ, களி + காவத்துக் கிழங்கு.? நகைச்சுவையோடு சொன்ன விதம் ரசிக்க வைத்தது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் களியுடன் கூட்டு செய்வோம்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி GMB சார்.

      Delete
  12. இந்த வருடம் எப்படியாவது வெற்றியடைய வாழ்த்துக்கள்... நல்லா இருந்துச்சின்னா எனக்கும் பார்சல்... !

    ReplyDelete
    Replies
    1. களி எப்படியிருந்தாலும் கண்டிப்பாக உங்களுக்கு பார்சல் அனுப்புகிறேன் உஷா .
      நன்றி உஷா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். .

      Delete
  13. இன்றைக்கு நன்றாக வந்ததா? நன்றாக வந்த களியை சாப்பிட்டுவிட்டு களி நடனம் புரிந்தீர்களா? அறிய ஆவல்!

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொறுத்தவரைக்கும், களி நன்றாகவே இருந்தது. அவரிடம் கேட்டால்
      களி, களி மாதிரி இல்லை என்று அதற்கு வேறு பெயர் சொல்கிறார். அதையும் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொண்டு விட்டேன் ரஞ்சனி. நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  14. நல்லது...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  15. களி ஆட்டம் ஜோராக இருந்தது... நானும் டெல்லிக் குளிரில் களி கிண்டியதை தான் இன்று நினைத்துக் கொண்டேன்...:)))

    இன்று எந்தன் களி ஆட்டம்... பதிவிட்டிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஆதி.

      Delete
  16. இந்த வருடமாவது நல்லா வந்திருக்கா திருவாதிரை களி

    ReplyDelete
    Replies
    1. சுமாராக இருந்தது ராஜி களி. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜி.

      Delete
  17. களி செய்வது வெகு எளிது. ஒரு கிண்ணம் அரிசி மாவுக்கு முக்கால் கிண்ணம் வெல்லம் தூள் செய்து கொள்ளவும். மாவு ரொம்பவே நைசாக அரைக்கக் கூடாது. கொஞ்சம் கொரகொரப்பாகவே இருந்தால் நல்லது. நான் மெஷினில் எல்லாம் அரைக்க மாட்டேன். வீட்டிலேயே மிக்சியில் பொடித்துக் கொள்வது தான். இரண்டு கிண்ணம் ஜலம் வைத்துக் கொதிக்க ஆரம்பித்ததும், வெல்லத்தூளைச் சேர்க்கவும். வெல்ல வாசனை போகக் கொதிக்கையில் மாவை மெதுவாகக் கொட்டிக் கிளற ஆரம்பிக்கவும். விரைவில் மாவு வெந்து விடும். பாத்திரத்தில் ஒட்டும் போலிருந்தால் அடியில் நீரைக் கொதிக்க வைக்கும் முன்னரே ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றிப் பின் நீரை விட்டுக் கொதிக்க விடவும். மாவு வெந்தது பதம் தெரிந்ததும், அடுப்புச் சூட்டோடு மூடி வைக்கவும். இன்னொரு பக்கம் இன்னொரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல் போட்டு நன்கு வறுத்துக் களியில் சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும். களிக்குப் பருப்புப் போட வேண்டுமெனில் து.பருப்பு அல்லது க.பருப்பு அவரவர் வீட்டு வழக்கப்படி ஊற வைத்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும். வெந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. கீதா மேடம் , உங்கள் ரெசிபிக்கு மிக்க நன்றி மேடம். நான் மாவை முதலில் வேக வைத்து விட்டு , அப்புறம் தான் வெல்லம் போடுவேன். நீங்கள் சொன்ன மாதிரி அடுத்த முறை செய்கிறேன் .நன்றி மேடம் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  18. களி நன்கு செய்து களி நடனம் செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள் களி நன்றாக வர.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      Delete
  19. களி செய்ய வரவில்லை என்று கூறுவது ஆச்சரியம்!! அருமையாகவே கிளறியிருக்கிறீர்கள்! மணம் தூக்கலாகவே இருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. களி எனக்குப் புரிந்த வரையில் நன்றாகவெ செய்வேன். என் கணவருக்குத் தான் பிரச்சினையே! அதையும் இப்பொழுதெல்லாம் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.
      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  20. அவர் அவரோட அம்மா செய்த லால்குடி களி புகழ் பாடினார். நீங்கள் உங்கள் அம்மாவிடம் களி செய்யக் கற்றுக் கொண்டால் எப்படி? கலவரப் படுத்திய கிளைமாக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் சார் உங்கள் வருகைக்கும், கிளைமாக்சை ரசித்ததற்கும்.

      Delete
  21. களியின் களிநடனம் அழகாக இருந்தது. டெல்லி குளிருல பண்ணின களிதான் ரி ப்ளாக் பண்ணி போட்டேன். படம்போட களி பண்ணேன். படம் பிடித்தேன். கம்யுட்டர் தகராரு பண்ணிவிட்டது. தரிசனம் அன்று செய்யும் களிதான் ருசியாக வரும். முன்னாடி பண்ணதால் ஸ்ட்ரைக். இந்தவருட களி களிப்பாக வந்ததா? லால் குடி களியும்,
    டெல்லி களியும் ஒன்றுதான். களி---ஸந்தோஷமாக இரு. அவ்வளவுதான். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வ்ருகைக்க்ம், கார்டுக்கும் மிக்க நன்றி காமாக்ஷி அம்மா. உங்களின் ஆசீர்வாதத்திற்கு வணக்கத்துடன் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
      உணல் களிப் பதிவை பார்க்கப் போய் கொண்டிருக்கிறேன்.
      நன்றி

      Delete
  22. அன்பின் ராஜ லக்‌ஷ்மி பரமசிவம் - களியின் களி நடனம் அருமை - போகப் போக டில்லி குளிரிலும் களி களி நடனம் ஆடி மகிழ்விக்க வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  23. இனிக்கும் களி சாப்பிட என்றுமே பிடிக்கும்
    உங்கள் 'களிநடனம்' பதிவு சுவையோ சுவை

    ReplyDelete
  24. களி நடனம் சுவையான நடனம்.

    தில்லியில் குளிர் இப்போதெல்லாம் ரொம்பவே குறைந்து விட்டது!

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்