Tuesday 20 December 2016

இட்லியும் இரண்டாயிரம் ரூபாயும் .


"தோசை மாவு இல்லாத நாட்கள் எல்லாம் சோதனை மிகுந்த நாட்கள்" என்கிற உண்மையை பல இல்லத்தரசிகள்  உணர்வார்கள்..  ஆனால் தினம் இட்லி தோசை என்றாலும் ....குடும்பத்தினர்,  முகத்தைத்  திருப்பிக் கொள்கிறார்கள்.




எங்கள் வீட்டில் இட்லி, தோசை  இரண்டும், இரண்டாயிரம் ருபாய்  நோட்டு போல் ,ஆகிவிட்டது.  அது இல்லாமலும்  இருக்க முடியவில்லை. இருந்தாலும் செலவழிக்க முடியவில்லை.

இட்லி, தோசை, இல்லாம வேறென்ன  செய்யலாம் என்று யோசித்து, யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டது தான் மிச்சம்.

அடை  செய்யலாமா?  வேண்டாம் இப்ப தான் அடை சாப்பிட்டோமே .சரி அப்படிஎன்றால் இடியாப்பம் செய்வோமா ? யோசித்தேன்....

அவசரத்திற்கு ஆகாது , முன்பு போல் சிக்கிக் கொண்டால் ....(சிக்கிக் கொண்டாயா? அது எங்கே ? எப்போ? என்று கேட்பவர்கள் இங்கே படியுங்கள்).......என்ன செய்வது?
ஆக இடியாப்பம் வேண்டாம்.

இப்படி, அப்படி என்று  பெரிய ஆராய்ச்சியில் இறங்கி, கடைசியில் உப்புமா செய்ய  தீர்மானித்தேன்.

ஆனால், ஐநூ று, ஆயிரம் ரூபாய்  நோட்டுக்கள் போல் செல்லாத காசாய் உப்புமா டைனிங்  டேபிள் மேல் கேட்பாறற்றுக் கிடந்தது. .

" யாராவது என்னை சாப்பிட வாங்களேன் என்று உப்புமாவே கதறினாலும்  கிட்ட போக மாட்டேன் என்கிறார்கள்.. "

அதனால் நேற்று  ஒரு ஐடியா செய்தேன். இன்றைக்கு இட்லி.... இல்லையென்றால்,  உப்புமா..... என்று இரண்டே சாய்ஸ் கொடுத்தேன் பாருங்கள்.

ஐயோ ! உப்புமாவா......அதற்கு இட்லியே  தேவலாம்  என்கிற சாதகமான பதில் கிடைத்தது.  வெயிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.

பெருத்த நிம்மதியுடன் இட்லியும் சட்னியும் செய்து விட்டு நிமிர்ந்தேன்.

ஆனால் இவர்களை நம்பி இட்லி  செய்து வைத்ததில், இவர்களெல்லாம் கொத்றிதது போக நிறைய  மீந்து போய் விட்டது.......இரண்டாயிரம்  ரூபாய் நோட்டு போல் செலவழிக்க முடியாமல்  இருக்கிறதே ..என்ன செய்வது.......அதை உதிர்த்து உப்புமா செய்தால்...?

ஆனால்..... உப்புமாவா?  என்று முகம் சுளிக்கும்  குடும்பத்தினருக்கு  என்ன பதில் சொல்வது? நாங்கள்  சாப்பிட மாட்டோம் என்று மறியலில்  ஈடுடுபட்டு  விட்டால்  ........ போலீசையா  கூப்பிட முடியும்......சொல்லுங்கள்..

பிரச்சினையை சுமுகமாக தீர்க்க  வழி  இருக்கிறதா என்று யோசித்தேன்...

இட்லி ஃபிரை செய்து பார்த்தால் என்ன? என்று தீர்மானித்து செய்தே விட்டேன்..ஹோட்டலில் செய்யும் இட்லி ஃபிரை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் கம்பெனி பொறுப்பில்லை.

ஆனால் மிகப் பிரமாதமாக  அமைந்து விட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.   டைனிங் டேபிளில் இருந்த இட்லி  ஃபிரை வைத்திருந்த பாத்திரம்    தற்போதைய  வங்கி ATM மெஷின் மாதிரி  ஒரு சில நிமிடங்களில்  காலியாகி விட்டது  என்று சொன்னால் நம்புவீர்களா?

அதை எப்படி செய்தேன் என்று சொல்கிறேன் கேளுங்கள்.....


பெரிய வெங்காயம் -2 அல்லது 3  நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வெங்காய  சட்னி யை......

இருங்கள்.....இருங்கள்.......படித்து செய்வதை விடவும்,   வீடியோவில்  பார்த்து தெரிந்து கொள்வது நல்லதாயிற்றே ...

இதோ வீடியோ.....



வங்கியில்  பணம் எடுக்கக் கால் கடுக்க நின்று விட்டு , வரும் உங்களவருக்கு இதை சாப்பிடக் கொடுங்கள்.. 

சாப்பிட்டு விட்டு  அடுத்து ATM க்யூவில்   நிற்க ரெடியாகி விடுகிறாரா ,இல்லையா பாருங்கள்.

பி.கு : " இட்லியும் இரண்டாயிரமும் " வெறும் ஜாலிப் பதிவு. இதில் அரசியல் எதுவும் இல்லை . 'துன்பம் வருங்கால் நகுக'  என்று படித்த பின் நகைத்து விட்டு கருத்திடுங்கள். 
தொலை  நோக்கு லாபத்தைப் பார்த்தால் இப்போதையத் துன்பம், மிக மிக சொற்பமே. அதுவும் தற்காலிகமே!

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்