Tuesday 1 April 2014

ராசியின் வேட்டை.













அன்று இரவு ராசி நல்ல உறக்கத்திலிருந்தாள் . கணவர் விஷ்ணு,   டிவியில்  திரு.அர்னப் கோஸ்வாமி , வீட்டிற்குப் போய்  விட்டாரா என்பதை உறுதி செய்து கொண்டு   விட்டுப் படுத்தார். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார் .

ராசிக்குத் தீடீரென்று  முழிப்பு வந்தது. கணுக்காலில் ஏதோ  அரிப்பது போலிருக்க,  ராசி, கொசு கடிக்கிறது என்று நினைத்துக் கொண்டு காலை இழுத்து, போர்வைக்குள் பத்திரமாக  வைத்துக் கொள்ள முயற்சிக்க, 'குறு குறு 'வென்று  ஊர்வது ராசிக்குப்  புரிந்தது. சட்டென்று எழுந்து, லைட்டைப் போடவும், கரப்பான் பூச்சி ஒன்று  அவசரமாக  கட்டிலடியில் ஓடி ஒளிந்து கொண்டது.அதை ராசிப் பார்த்து விட்டாள் . ராசிக்கு  உடம்பெல்லாம் நடுங்கியது. கரப்பான் பூச்சி என்றால் அவ்வளவு பயம் அவளுக்கு. கார்கிலிற்கு போகச் சொன்னால்  கூடப்  போய்    போரிட ரெடி.. ஆனால் இந்தக் கரப்பான் பூச்சி , அவளை  நடுங்க வைத்து விடும்.

விஷ்ணுவைப் பார்த்தாள் ராசி. அயர்ந்த உறக்கத்திலிருந்தார் விஷ்ணு. இந்த கரப்பான் பூச்சியை  அடித்து நொறுக்கா விட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வரப் போவதில்லை  ராசிக்கு. என்ன செய்வது? அறையின் கதவிற்குப் பின்னால் சாத்தியிருந்த துடைப்பம் கண்ணில் பட அதை எடுத்து  கட்டிலடியில் விட்டு ,"மடார்,மடார் " என்று அடித்ததில், கட்டிலின்   தூக்கத்திலிருந்த விஷ்ணு முழித்துக் கொண்டார். அவர் கண் விழித்துப் பார்க்கவும், ராசி கையில் ,துடைப்பத்தை செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழவும் சரியாக இருந்தது.

விஷ்ணுவிற்கு இந்தக் காட்சி பிடிபடவில்லை. அதுவும் சற்று நேரத்திற்கு முன்பாகத் தான் டிவியில் தேர்தல் செய்திகள் பார்த்திருந்தார். அதனால் ஒருவேளை தேர்தல் சின்னத்துடன் யாரோ ஓட்டு சேகரிக்க வந்திருக்கிறார்கள் என்று தான் முதலில் நினைத்தார். நன்கு கண்ணைக் முழித்துப் பார்க்கும் போது தான் புரிந்தது  ராசி தான் இப்படி துடைப்பமும் , கையுமாக நிற்கிறாள் என்பது.

"எதற்கு, இந்த நேரத்தில் பெருக்குகிராய். காலையில் பார்த்துக் கொள்ளலாமே "
என்று விஷ்ணு சொல்ல,

" உங்களுக்கு என்னைப்  பார்த்தால்,கிண்டலாக இருக்கிறதா? இந்த நேரத்தில் பெருக்க நான் என்ன பைத்தியமா? கரப்பான் பூச்சியை அடிக்கிறேன் ." என்று ராசி எரிச்சலாகச் சொன்னாள் .

" அப்படியா " என்று கேட்டு விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டே விஷ்ணு ," அதான் அடிச்சாச்சு இல்லையா ?  படுத்துத்  தூங்கு  "   என்று அசால்டாக சொல்ல ராசி  கோபத்தையடக்கிக் கொண்டு கட்டிலடியில் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் . எதுவும் வெளியே தலை நீட்டவில்லை.சரி.செத்துத் தொலைந்திருக்கும்  என்று நினைத்துக் கொண்டு லைட்டை அனைத்து விட்டுப் படுத்தாள் . கண்ணயரத் தொடங்கினாள் ராசி. எதற்கு வம்பு என்று தலையோடு கால் வரைப் போர்த்திக் கொண்டிருந்தாள்  ராசி.

" விர் " என்று சத்தம் வந்தது.மெதுவாகப்  போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள் ராசி. நைட் லேம்ப்  வெளிச்சத்தில் ஒன்றும் புரியவில்லை  அவளுக்கு. திரும்பவும் உறங்கத் தொடங்கினாள் . திரும்பவும் " விர் "  சத்தம். ஃபேன்  சத்தத்தைத் தாண்டிக் கேட்டது.

இன்றைக்கு நம் தூக்கம் போச்சு  என்று நினை த்துக் கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தாள்  ராசி. இப்பொழுது  எந்த சத்தமும் கேட்கவில்லை ராசிக்கு. லைட்டை அணைக்க  சுவிட்ச்  அருகே கையைக் கொண்டு போகும்போது தான் பார்த்தாள் ராசி, தான் அடித்துக் கொன்றதாக நினைத்த கரப்பான் பூச்சி கரெக்டாக சுவிட்ச் மேல் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இவள்  " ஆ "வென்று அலற  விஷ்ணு அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.

" இப்ப என்ன ஆச்சு " விஷ்ணு கேட்க,

"க ,,,,,க,,,,,,,கரப்பான் .நான் அடித்தது ,சாகவில்லை . இதோ இருக்கு " என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சுவிட்ச் போர்டைக் காட்டினாள்  ராசி.

" அதே கரப்பு  என்று உனக்குத் தெரியுமா? " விஷ்ணு விசாரிக்க, ராசிக்கு வந்ததே கோபம்.

" ரொம்ப முக்கியம் இந்த ஆராய்ச்சி இப்ப " என்று கடுகடுத்தாள்  ராசி.

" நான் அதற்கு சொல்லவில்லை. அதோ பார் அங்கே "என்று சுவற்றில்  மாட்டியிருந்த, இவர்களுடைய  போட்டோவைக் காட்ட , அங்கே இன்னொரு கரப்பான் பூச்சி  அட்டகாசமாய் அமர்ந்திருக்க, அதை அடிக்க வேகமாய் துடைப்பத்தை  எடுக்க ராசி நகர , 'போட்டோ கரப்பான் பூச்சி'  விமானம் போல் சர்ரென்று  " டேக் ஆப் " ஆனது. அதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ ,அதனுடைய சகாவும்  தன்  இறக்கையை விரித்துக் கொண்டு,  கிளம்பியது.

ராசி அப்படியே தரையோடு தரையாக ( குண்டு ஏதோ விழப் போவது மாதிரி நினைத்துக் கொண்டு ) அமர, கரப்பான்களும்,  அவளை எப்படி "கேரோ " செய்யலாம் என்று மாநாடு போடுவது போல்  தரையில் அவளருகில்  அமர்ந்தது. கிடு கிடு என்று கரப்பான்  கூட்டம்  சேர்ந்தது.  இரண்டு, நான்கு , எட்டு,   என்று  பெருகிக் கொண்டே  போனது.  ராசி  பயந்தது போதும் , பொங்கி எழுவோம்  என்று நினைத்தாளோ  என்னவோ தைரியம் எல்லாம் திரட்டிக் கொண்டு ,  கையில் கிடைக்கும் தினசரிகள் , புக், டிவி ரிமோட், என்று எல்லாம் வைத்து அவள் அடிக்க ஆரம்பிக்கவும், இப்பொழுது எல்லா  கரப்பான்களும்,   பட படவென்று பட்டம்  போல் பறக்க ஆரம்பித்தன. செய்வதறியாது, ராசி, விஷ்ணு இருவரும் திகைத்து, இருவரும் கையில் கிடைத்தைஎல்லாம் வைத்துக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்று கூட  இவர்களுடைய அடிக்குக் கிடைக்காமல்  இவர்களுக்குப் போக்குக் காட்டி தப்பித்துக்  கொண்டிருந்தன.

அடுத்து என்ன செய்யலாம் என்று போர் வியூகம் அமைப்பது மாதிரி, தலையில் கை வைத்துக் கொண்டு  குனிந்தபடியே ராசி அமர்ந்திருக்க , விஷ்ணுவோ , நின்ற இடத்திலேயே ,  கையில் அன்றைய தினசரியை நீளமாய் சுருட்டிக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார். தீடீரென்று ராசி தலையில்  இடியாய் விழுந்தது ஒரு அடி. விஷ்ணு தான் பேப்பரால் தான் அடித்தார். ராசி கோபத்துடன் சட்டென்று நிமிரவும் , அவள் தலையிலிருந்து செத்த கரப்பான்  ஒன்று நச்சென்று விழுந்தது.   " என்னா அடி! " என்று புலம்பினாள் .


இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல். இருவரும் அறையை விட்டு ஹாலுக்கு வந்து , ஆளுக்கு ஒரு சோபாவில் படுத்துக் கொண்டனர். நீங்கள் இங்கே வந்தால் விட்டு விடுவோமா என்பது போல் இங்கே  சில கரப்பான்கள் காத்திருந்தன. இவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக இவர்களை நோக்கி நகர , விஷ்ணு ஒரு அற்புதக் காரியம் செய்தார்.  சமையலறைக்கு சென்று கையில் கிடைக்கும், கின்னம், டப்பா, டம்ளர் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து ஒவ்வொரு கரப்பானையும் தனித்தனியாக சிறைப் பிடித்தார். கவுத்து ,கவுத்து  வைத்து  விட்டு அப்படியே தூங்கிப்  போனார்.ராசி தான் பாவம் இமையோடு, இமை மூடவில்லை. பாவம் பயத்தில் உறைந்து  விட்டாள் .

பொழுது விடிந்தது. இவர் கவிழ்த்து வைத்திருந்த  ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்து எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்வது பெரிய காரியமாக  இருந்தது விஷ்ணுவுக்கு.. டிவி ஸ்டான்ட் அடியில், சோபாவிற்குப் ப் பின்னால் என்று ஓடி ,ஓடி ஒளிந்து கொண்ட கரப்பான்களை , தேடி தேடிப் பிடித்து அசந்து தான் போனார்.

ராசியோ இந்த டம்ளர், கிண்ணம், தப்பா எல்லாவறையும், டெட்டால் போட்டு அலம்பி வைத்துக் கொண்டிருந்தாள் . அறையில் இருந்த கரப்பான்களும்  காணமல் போய் விட்டன. எல்லாம் ஒழிந்தது என்று இருவரும் தீர்மானித்து ,
இரவு படுக்கப் போனார்கள்.லைட்டை அனைத்ததும், திரும்பவும்  எல்லா கரப்பான்களும், நைட் டூட்டி க்கு வருவது போல் வந்து சேர்ந்தன. திரும்பவும் எல்லா ஆக்ஷன்க்ளும் ரிபீட் . இரண்டு நாட்களாக ராசிக்கு சரியான உறக்கமில்லை.

தீடீரென்று எங்கிருந்து இவ்வளவு கரப்பான்கள் படையெடுக்கின்றன. இவ்வளவு நாட்களாக இல்லையே ! என்று இருவரும் குழம்பித் தவித்தார்கள்.

மறு நாள் விடிந்ததும், ஹிட் , ரோச்  ஜெல், லக்ஸ்மன் ரேகா  என்று விதம் விதமாக மருந்துகள் வீட்டில் வந்து குவித்தார் விஷ்ணு . அவருக்கும் ராசியைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது.. பயப்படாமல்  தூங்கு என்று அவர் சொன்னாலும், அவள் தூங்குவதாயில்லை.

இந்தக் கரப்பான்களும் , விஷ்ணுவின் மருந்துக்கு எல்லாம் அசையவேயில்லை.  நீ என்னவேனாலும் செய்து கொள் என்று இறக்கையை தூக்கி, மீசையை  ஆட்டிப்  பயமுறுத்திக் கொண்டிருந்தன. மறு நாள் எதேச்சையாய்  , கீழ் வீ ட்டில்  புதிதாக வந்திருப்பவர்களை  மாடிப்படிகளில் கையில் குப்பைக்  கூடையுடன்   பார்த்து சிநேகமாய் சிரித்து வைத்தாள்  ராசி. குப்பைக் கூடையில் அதென்ன  குவியலாய். "அய்யய்யோ  கரப்பான் பூச்சி யல்லவா இது.". இவர்கள் தான் நம் வீட்டிற்கும் கரப்பான பூச்சி சப்ளை செய்பவர்களா? ராசிக்குப் புரிந்தது. இவர்கள் சாமானுடன் சாமானாக வந்திருக்கின்றன.ஆனால் இவ்வளவா இருக்கும்? .....

யோசித்துக் கொண்டே மாடி ஏறினாள்  ராசி. விஷ்ணுவிடமும் சொன்னாள் . யார் சப்ளை செய்தால் என்ன  ? அதை எப்படி விரட்டுவது? அதைச்  சொல் என்றபடி  , " பெஸ்ட் கன்ட்ரோலிற்கு "  போன் செய்யத் தீர்மானித்தார்கள். " எவ்வளவு செலவாகுமோ தெரியவில்லையே "என்று நொந்து கொண்டாள் ராசி.அதோடு எப்போது அவர்கள் வருவது , நம் தொல்லை தீர்வது......அலுப்பாக இருந்தது ராசிக்கு.

தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என்று  போன் செய்து, கரப்பான்களை ஒழிக்க யோசனை கேட்டுக் கொண்டிருந்தாள் .

என்னிடம் கேட்டிருந்தால் ...............................................................................
அருமையாய் ஒரு உபாயம் சொல்லியிருப்பேன்.
உங்களுக்கும்  சொல்கிறேன் கேளுங்கள்.

பார்மசியில் " Boric Acid powder " என்று கேளுங்கள். , கேரம் போர்டுக்குப் போடுவோமே அதே  boring powder தான் . அதை ஒரு 10அல்லது 20 கிராம் எடுத்துக் கொண்டு ஒருகைப்பிடியளவு கோதுமை மாவுடன் சப்பாத்தி மாவு போல் பிசைந்து ,எங்கெல்லாம் கரப்பான் பூச்சி வரும் என்று நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் சின்ன சின்னதாய் சீடை   மாதிரி உருட்டிப்  போட்டு வையுங்கள். பாருங்கள் அந்த மேஜிக்கை. உங்கள் வீட்டிலிருந்து  அத்தனை கரப்புகளும் ஓடி விடும். அப்புறம் பக்கத்து வீட்டைத்தான்  அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும் கரப்பான்கள்.. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆறு மாதம் ஒரு வருடம் வரை தாங்கும் அதற்குப் பிறகு திரும்பவும் புதிதாக இந்த சீடையை செய்து கொள்ளுங்கள். நல்ல பலன்.ஆனால் வீட்டில் குழந்தைகள்  இருந்தால்  ஜாக்கிரதையாக உபயோகிக்கவும்.

நான் சொன்னால் கேட்பாளா ராசி.
 " உனக்கு ரொம்பத் தெரியும்போ "என்று சலித்துக் கொள்வாள்  செலவு செய்தே கரப்பான்  பூச்சியை  விரட்டட்டும். நமக்கென்ன ......

image courtesy---google.

35 comments:

  1. மிகவும் அருமையான நகைச்சுவை விருந்து.

    கடைசியில் பயனுள்ள எளிமையான தீர்வு.

    பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  2. ஆஹா அருமையான நகைச்சுவை கலந்த கதை என்று படித்து வந்தால் கடைசியில் பயனுள்ள குறிப்பு வேறு... அருமை... பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார் சார்.

      Delete
  3. நகைச்சுவையாய்க் கொண்டு சென்றாலும் கடைசியில் நல்ல ஒரு தீர்வும் சொல்லியிருக்கிறீர்களே...

    விழித்து எழும் விஷ்ணுவுக்கு பிடிபடாத காட்சி, துடைப்பத்துடன் ராசி நிமிர்வது! அதை தான் தூங்குமுன் கண்ட தேர்தலுடன் சம்பந்தப் படுத்திப் பார்ப்பதும் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  4. haahaahaahaa எப்போ எங்க வீட்டுக்கு வந்து இதெல்லாம் பார்த்தீங்க?? அப்படியே எழுதி இருக்கீங்களே! :))))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் கரப்பான் பயமா கீதா மேடம்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  5. அருமையான நகைச்சுவை கதை, கரப்பானை ஒழிக்க பயனுள்ள குறிப்பு என்று பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    கிண்ணத்தை போட்டு மூடுவது நானும் செய்வேன்.காலையில் கவனமாய் முறத்தில் தள்ளி வெளியில் போடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி கோமதி.

      Delete
  6. விடாது கரப்பு... ஹா... ஹா.. ஹா..! நல்லாப் பயந்தாங்கம்மா ராசி. அதென்னமோ தெரியலை... பெரும்பாலான வீடுகள்ல கணவன்மார்கள் பயப்படறது மனைவிக்கு, மனைவிமார்கள் பயப்படறது க.பூச்சிக்குன்றதுதான் நிஜம். அதனாலயே கணவர்களுக்கு க.பூச்சின்னா பிடிக்கும்னு மைல்டா ஒரு யூகம். எப்பூடி..! அழகா கலகலன்னு பகிர்வைப் படிச்சுட்டு வந்தப்ப கடைசியில எல்லாருக்கும் பயன்படற மாதிரி ஒரு டிப்ஸ் தந்தீங்க பாருங்க... எதிர்பாராத சர்ப்ரைஸ். அங்கதான் நிக்கறீங்க நீங்க!

    ReplyDelete
    Replies
    1. கணவனுக்கு கரப்பான் என்றால் பிடிக்குமா? அப்படிஎன்றால் மனைவி கரப்பான் வம்சத்தையே அழித்து விட்டுத் தான் ஓய்வாள் கணேஷ் சார். உங்கள் வருகைக்கும், மிகவும் ரசித்துப் படித்துப் பாராட்டியதற்கும் நன்றி சார்.

      Delete
  7. இதுவல்லவோ உபாயம்...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார், நான் அனுபவத்தில் கண்ட உண்மை அந்த கரப்பான் ஒழிப்புக் குறிப்பு.உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  8. கரப்பான் பூச்சிக்கு சீடை அருமையான தீர்வு..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ராஜராஜேஸ்வரி.

      Delete
  9. தூக்கக் கலக்கத்தில் விஷ்ணு முழித்துப் பார்த்தால் - எதிரில் ராசி!..
    அவள் கையில் விளக்குமாறு!..

    பாவம்.. - விஷ்ணு!..

    அது சரி..
    ராசியும் விஷ்ணுவும் - சீதாப்பாட்டி அப்புசாமி தாத்தாவுக்கு சொந்தக்காரங்களா!...

    ReplyDelete
    Replies
    1. ராசியும், விஷ்ணுவும், எத்தனை எட்டினாலும் அப்புசாமி சீதாப்பாட்டித் தம்பதியை தொடக் கூட முடியாது. என் பதிவை ரசித்தப் படித்துப் பாராட்டியதற்கு நன்றி துரை சார்.

      Delete
  10. நாங்கள் ஒரு முறை இதே போல் கஷ்டப்பட்டு பின் PCI (PESTCONTROL OF INDIA) அழைத்து அத்தனையையும் வீட்டை விட்டு துரத்தினோம்.. அருமையான யோசனை கூறி இருக்கிறீர்கள் ராஜி மேடம் :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி மஹா.

      Delete
  11. நகைச்சுவையோடு கரப்பானை விரட்ட சூப்பர் டிப்ஸ் ஒண்ணும் கொடுத்திட்டீங்க. ரைட்டு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ராஜி.

      Delete
  12. நீண்ட நாட்களுக்குப் பிறகு கலகல ராசியின் வருகை .......... இன்று விஷ்ணுவுடன் சேர்ந்து மாட்டியது கரப்பான் பூச்சியா ! போய்ட்டு போவுது, உபாயத்தை ராசிக்கும் கொஞ்சம் சொல்லிடுங்க. தேர்தல் சின்னம் __ நல்ல யோசனை.

    Boring powder யோசனை நல்லாருக்குங்க. ஆனா என்ன ஒண்ணு, இதுவரைக்கும் எனக்கே நான் சீடை பிடிச்சதில்ல, இதுல கரப்பானுக்கு வேற பிடிக்கணுமா என்றுதான் யோசனையாயிருக்கு !

    ReplyDelete
    Replies
    1. ராசியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்ததற்கு நன்றி சித்ரா. உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அதகளம் பண்ணி விட்டால் என்றே நினைக்கிறேன்.

      உங்கள தளத்தில் பலவகை ருசியான சமையல் குறிப்புகளைப் பார்க்கிறேன். சீடை உங்களுக்கு பெரிய விஷயமா என்ன? சீடை செய்து அதையும் தளத்தில் பதிவிடுங்களேன். பிறகு கர்ப்பானுக்குப் பார்த்துக் கொள்ளலாம்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete
  13. நீங்க பாட்டுக்கு கரப்புக்கு சீடை பண்ணி வைக்கச் சொல்றீங்க, இனிமே சீடையைப் பார்த்தால்,,,,அய்யய்யோ! கரப்பு நினைவு வருமே! ஆ! காப்பாத்துங்க!


    ராசி AAP யா? கையில் விளக்கமாறுடன் காட்சி கொடுத்திருக்கிறாளே! (சும்மா தமாஷ்!)
    நகைச்சுவை விருந்துடன், கடைசியில் ஒரு நல்ல தீர்வையும் அளித்திருக்கிறீர்கள்.
    எங்க வீட்டுல மாதாமாதம் ஒருவர் வந்து இதேபோல உருட்டி உருட்டி வைத்துவிட்டுப் போவார். கரப்பு, பல்லி எல்லாம் போயேபோச்!

    நீங்க சொல்லியிருப்பதைப் பார்த்தால் நானே இப்படி செய்து பெரிய தொழிலதிபர் ஆகியிருக்கலாம் போலிருக்கே!

    நகைச்சுவை தூள்!

    ReplyDelete
    Replies
    1. ராஜி!!!!! நகைச்சுவை நாயகியே!
      கரப்பு என்பதை கற்பு ஆக்கிவிட்டீர்களே!

      Delete
    2. சீடையையும், கரப்பானையும் ரொம்பவும் தொடர்பு படுத்தி விட்டேனா?
      நீங்கள் தொழிலதிபர் ஆக நான் விட்டு விடுவேனா? உங்களுக்கு எதிரே என் போரிங் சீடை கடையைப் போட்டு விடுவேன். அதற்கு முன்பு "பேடன்ட் ரைட் "வாங்கி விட வண்டும்.உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரஞ்சனி

      2 April 2014 22:32

      Delete
  14. தங்கள் சிறந்த வழிகாட்டல் நிறைந்த கதையை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  15. கரப்பான் என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் தான்! ராசியின் கரப்பான் வேட்டை கலகலக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உப்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ் சார்.

      Delete
  16. சென்னையில் 1965-ல் வீட்டில் கரப்பான் பூச்சிகளை பல்லி சுவாஹா செய்வதைப் பார்த்திருக்கிறேன் . வீட்டில் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஏன் பல்லிகளை வளர்க்கக் கூடாது.? ஹி ஹி ஹி. !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி பாலு சார்.

      Delete
  17. சீடை கரப்பான்பூச்சிக்கும் பிடிக்கும்! :) நல்ல யோசனை!

    நகைச்சுவையாக சொன்னாலும், கரப்புடன் போராடும் பெண்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வெங்கட்ஜி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்