Monday 7 April 2014

நாங்களும் இந்தியர்கள் தானே!




டிவி சேனலைத் திறந்தால்  தேர்தல்,  பேப்பரைத் திறந்தால்  தேர்தல்,  இந்தக் கட்சியின்  அலை வீசுகிறது,  அந்தக் கட்சியின் அலை வீசுகிறது என்று சுனாமி வருவது போல்  உரையாடுகிறார்களே என்று   என்னவரிடம்  "எதுக்கு இப்படியெல்லாம் வாதாடுகிறார்கள் . என்ன விஷயம்? " என்று கேட்க,
அவரோ,"  அதான் தேர்தல் வருகிறதே , அதற்காகத் தான் ." என்று  அசட்டையாய் சொல்லி விட்டு , தினசரி நாளிதழுக்குள் நுழைந்து கொண்டார் .

" எங்கே எலெக்ஷன் " இது நான்.

சற்றே எரிச்சலுடன் ," இப்ப நிறுத்தப் போறியா இல்லையா? ஒண்ணுமே தெரியாத மாதிரி  நீயும் கேக்கற, நானும் சொல்றேன்." என்று அவர் சொன்னால்,......... நான் விட்டு விடுவேனா என்ன?

திரும்பவும், "இது ஸ்டேட் எலெக்ஷனா, பார்லிமென்ட் எலெக்ஷனா ?" என்று அடுத்த கேள்வி  கேட்டேன்.

இப்ப அவருக்கு சரியானக் கோபம் வந்தே விட்டது.  படித்துக் கொண்டிருந்த நியுஸ் பேப்பரை  நாலாய் மடித்து வைத்து விட்டு என்னைப் பார்த்து ," உன்னுடைய பிரச்சினை தான் என்ன ? எதுக்கு என்னைப் படிக்க விடாமல்  கேள்வி கேட்கிறாய்?. " என்று கோபப் பட்டார்.

" டிவியில் , ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் சொல்லி,  அவரவர் பெறப் போகும் சீட்டைப் பற்றிய கருத்துக் கணிப்பு வருகிறது . தினசரிகள் பார்த்தால் அதிலும் அதுவே தான் வருகிறது. முக நூலைத் திறந்தால் அங்கும்  கோப முகத்துடன் இருக்கும் தலைவர்கள், வெற்றிக் களிப்பில் மிதக்கும் அரசியல் தலைவர்கள் என்று  போட்டு அசத்துகிறார்கள்."

 "ஆனால்............. யாருங்க ஓட்டுப் போடப் போவது? "என்று திரும்பக் கேட்டேன். நான்.

நான் கேட்டதில் என்ன தப்பு சொல்லுங்கள்?
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து  விட்டு அவர்," வெயில் ஜாஸ்தியானதில் உனக்கு ஒன்றும் ஆகவில்லையே "   என்று கேட்கிறார். வெயிலின் தாக்கத்தில் எனக்கு எதுவும்  ஆகிவிட்டதாக நீங்களும் தப்புக் கணக்குப் போட வேண்டாம்.

தேர்தலைப் பற்றி நான் கேட்டதற்கு  காரணம் இருக்கிறது.. சொல்கிறேன்......

இன்னும் சுமார்   இரண்டு  வாரத்தில் ஓ ட்டுப் போடப் போகிறோம் தானே! ஆனால் எங்கள் தொகுதி வேட்பாளர்கள்   யாரென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒரு ஊர்வலம் போக வேண்டுமே......... எங்கள் தெரு வழியாக.  ......இல்லையே! லவுட் ஸ்பீக்கரில் சினிமா பாட்டு ராகத்தில்  வேட்பாளர்களைப் பற்றிய பாட்டு அலறுமே.  அதுவும் இல்லை. பேப்பரில் இடையே வைத்து  பிட் நோட்டீஸ்  அனுப்புவார்களே. அது கூட இல்லையென்றால் எனக்கு வருத்தமாக இருக்காதா.


வீ டு வீடாக ஓட்டுக் கேட்க வருவார்களே . அப்படி யாரும் எங்கள் தெரு வழியாக வரவே காணோம்/.  அவர்கள் நமக்கு இப்ப தானே வணக்கம் எல்லாம் சொல்வார்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த திருவிழாவெல்லாம் நடக்கும். இந்த  முறை ஏனோ  எங்கள்  தெருவை வேட்பாளர்கள் புறக்கணித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது?

ஏன் ! நாங்களும் இந்தியர்கள் தானே! எங்களுக்கும் இந்தத் தேர்தல் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் உரிமை உண்டா இல்லையா சொல்லுங்கள். தெரு மயான அமைதியில் இருக்கிறது. பிறகு இந்தக் கொண்டாட்டங்களெல்லாம் பார்ப்பதற்கு மினிமம் இன்னும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டுமே! அது தான் என் கவலை .

அதனால் இதைப் படிப்பவர்கள்  யாராக இருந்தாலும், தயவு செய்து , உங்கள் ஏரியாவிற்கு வரும்  ஊர்வலங்களை எங்கள்  தெருவிற்கும் அனுப்பி வையுங்கள். நான் உங்களுக்கு நன்றியுடைவளாய் இருப்பேன்.எங்கள் தெருவாசிகள், கட்சிப்  பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும், பதில் வணக்கமும்  செய்வார்கள். அதற்கு நான் கியாரண்டி.


(அரசியல் பதிவெல்லாம் பெண் பதிவர்கள போடுவதில்லை என்கிறக் குறை
வேண்டாமே என்று தான் இந்தப் பதிவு.)

image courtesy----google.

36 comments:

  1. //அவர்கள் நமக்கு இப்ப தானே வணக்கம் எல்லாம் சொல்வார்கள்.//

    அதானே.....! :))))

    தெருவில் ஆட்டோ, ஸ்பீக்கர் சப்தங்கள் இல்லாமல், வாண்டுகள் உட்பட நடையாய் நடந்து 'போடுங்கம்மா வோட்டு.... -------- யைப் பார்த்து" பாட்டு கோஷம் இல்லாமல், ஒரு தேர்தல்! தூ... வெட்கக் கேடு! ஹிஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார், நீங்கள் சொல்வது தான் என் வருத்தமும் .
      என் கருத்தோடு உங்கள் கருத்தும் அமைந்து விட்டதே சார். நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. மிகச் சரியான கேள்வி. பலருக்கும் இந்தத்தேர்தலைப்பற்றி பல விஷயங்கள் தெரிவதே இல்லை தான்.

    தங்களைப்போன்று தவியாய்த் தவிப்பவர்களும் மிக எளிமையாக எல்லாவற்றையும் பற்றி புரிந்துகொள்ளும் விதமாக ஓர் பதிவினை வரும் வெள்ளிக்கிழமையன்று நான் வெளியிடுவதாக உள்ளேன். அதை என் ஜனநாயகக் கடமையாகவே கருதி வெளியிட உள்ளேன்.

    அதை பேரெழுச்சியுடன் பொறுமையாகப் படியுங்கோ, சிரியுங்கோ, மறக்காமல் விமர்சனமும் எழுதி அனுப்புங்கோ. பரிசு பெற்று மகிழுங்கோ. எல்லாமே சுத்தமாகப் புரிந்து போகும்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. அட...உங்களுடைய பதிவைப் படிக்க ஆவலாயிருக்கிறேன். என் தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி கோபு சார்.

      Delete
  3. போட்டீங்களே ஒரு போடு!
    நீங்கள் எழுதியதைப் படித்ததும் அந்தக்கால நினைவுகள் ஏகத்துக்கும் வந்தன. (வயதானால் இது ஒரு கஷ்டம் - அப்பப்போ மலரும் நினைவுகளுக்குள் போய்விடுவோம்!)
    எங்கள் தெரு முக்கில் தான் எல்லா கட்சிகளும் மீட்டிங் போடுவார்கள் - திருவல்லிக்கேணியில். 'ஆள்வதற்கு காங்கிரசே லாயக்கேயில்லை' என்ற பாடல் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது இந்தப் பாட்டைப் பாடியது யார் தெரியுமோ? எல்.ஆர். ஈஸ்வரி! (இப்போதும் இந்தப் பாட்டு அர்த்தம் பொதிந்ததாகவே இருக்கிறது, இல்லை? காங்கிரஸ் அபிமானிகள் கோபித்துக் கொள்வதற்குள் மீ எஸ்கேப்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் அந்தக் காலத்தில் இத்தனை விஞ்ஞான வளர்ச்சியில்லை. அதுவே நமக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறேன்.
      நீங்கள் சொல்லியிருக்கும் எல். ஆர். ஈஸ்வரி பாட்டைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. புரியும்படி நீங்கள் சொன்னாலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று தான் நான் சொல்வேன். நானும் எஸ்கேப் ..........ஹா....ஹா....
      நன்றி ரஞ்சனி உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு.

      Delete
  4. செறிவான கருத்துஜள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி மேடம் உங்கள் கருத்துக்கு.

      Delete
  5. // ஏன் ! நாங்களும் இந்தியர்கள் தானே! //
    அதானே..
    தங்கள் கேள்வி நியாயம் தான்!.. நியாயமே தான்!. ஆனாலும்..
    ஐயா - செய்தித் தாளை நான்காக மடித்து வைத்ததும்
    நியாயமாகத் தான் படுகிறது!?..

    ReplyDelete
    Replies
    1. துரை சார். நன்றாயிருக்கிறதே நியாயம் என் கேள்விக்கு என் கணவர் பதிலளிக்காமல் கோபிப்பது எப்படி நியாமாகும்.
      ஆனாலும் உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி சார்.

      Delete
  6. பதிவு நகைச்சுவையுடன் எழுதப் பட்டாலும் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்களெங்கோ யாருக்கோ பேட்டி கொடுக்கிறார்கள் அல்லது அவரது கட்சித்தலைவரின் பின்னாலோ முந்தானையிலோ இருக்கிறார்கள். இரவு பத்து மணிக்கு மேல் இரைச்சல் இல்லாதிருப்பது ஒன்றுதான் நல்ல சமாச்சாரம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலு சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  7. //இன்னும் சுமார் இரண்டு வாரத்தில் ஓ ட்டுப் போடப் போகிறோம் தானே! ஆனால் எங்கள் தொகுதி வேட்பாளர்கள் யாரென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒரு ஊர்வலம் போக வேண்டுமே......... எங்கள் தெரு வழியாக. ......இல்லையே! லவுட் ஸ்பீக்கரில் சினிமா பாட்டு ராகத்தில் வேட்பாளர்களைப் பற்றிய பாட்டு அலறுமே. அதுவும் இல்லை. பேப்பரில் இடையே வைத்து பிட் நோட்டீஸ் அனுப்புவார்களே. அது கூட இல்லையென்றால் எனக்கு வருத்தமாக இருக்காதா.//

    அதே, அதே ராஜலக்ஷ்மி, எனக்கும் இதே தான் வருத்தம், எங்கள் தொகுதியில் யார் நிக்கிறாங்கன்னே எங்களுக்குத் தெரியலைனா பார்த்துக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. எங்கே போய் நம் வருத்தத்தை சொல்வது கீதா மேடம். நீங்களும் என் நிலைமை தானா? என்னமோ போங்க.......
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  8. ம்ம்ம் எங்களுக்கும் தொலைக்காட்சி, பேப்பர் பார்த்துத் தான் தேர்தல்னு ஒண்ணு நடக்கிறதுனே தெரியும். :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் . அதே தான் என் நிலையும். நீங்களும் என் நிலை தான் என்கிற போது கொஞ்சம் திருப்தியாக இருக்கிறது . உங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  9. எங்க ஊரிலும் இன்னும் யாரும் ஓட்டு கேட்க உருப்படியாக வரவில்லை! வந்த ஒரு வேட்பாளரையும் திட்டி அனுப்பிட்டாங்க!

    ReplyDelete
    Replies
    1. வேட்பாளர்களை திட்டாதீர்கள். அப்புறம் யாரும் வர மாட்டார்கள். சொல்லிட்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி சுரேஷ்.

      Delete
  10. பெண்பதிவர்கள் அரசியல் பதிவுகள்
    எழுதுவதில்லை என்கிற குறையை
    வித்தியாசமான பதிவின் மூலம் தீர்த்துவைத்ததை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. நம்ம ஊரில் தேர்தல் களம் களைகட்டும்போது ஒரு மாதம் திருவிழாக் கோலம்தான். அது நம்ம கலாச்சாரத்தில் மட்டும்தான் உண்டு. அதையும் ஒரு திருவிழா போல ரசிக்கும் உங்க "ரசனை உள்ளம்" பாராட்டுக்குரியதுதான், மிஸஸ் ராஜி. :-)

    ReplyDelete
    Replies
    1. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் நடக்கப் போகிறது , அதில் ஓட்டளிக்கப் போகிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது . உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வருன்சார்.

      Delete
  12. வெளிநாடுகளில் தேர்தல் எனில் பிரச்சாரம் தொலைக்காட்சி மூலம் மட்டும்தான் என்று நான் கேள்விப்பட்டதுண்டு. நம் நாடும் அப்படி முன்னேறி வருகிறது என்று சந்தோஷம் பட்டுக் கொள்ளுங்கள் டீச்சர். அரசியல் எழுதிய முதல் பெண் பதிவர் என்ற வகையில் ‘அரசியலரசி’ என்கிற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன் யான்.

    ReplyDelete
    Replies
    1. //நம் நாடும் அப்படி முன்னேறி வருகிறது// பிறந்த வீட்டுப் பெருமையை சகோதர, சகோதரிகளே பகிர்ந்து பெருமைபட்டுக் கொள்வோம். பெருமைகளை சொல்லி மகிழ்ந்ததற்கும் எனக்கு" அரசியலரசி " என்கிற பட்டம் கொடுத்ததற்கு நன்றி கணேஷ் சார்.

      இப்படிக்கு,
      அரசியலரசி ராஜலக்ஷ்மி பரமசிவம்
      ( பட்டத்துடன் பெயரை சொல்லிப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது)

      Delete
  13. என் பதிவை ரசித்துப் படித்தமைக்கும், தமிழ் மண வாக்குக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  14. ஹா... ஹா... இங்கு இந்த தொல்லைகள் குறைவு (உண்மையிலேயே...!)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  15. அரசியல் பதிவு அருமையான பகிர்வு....
    பள்ளியில் படிக்கும் காலத்தில் துண்டுச் சீட்டுடன் போடுங்கம்மா ஓட்டு என்று கத்திச் சென்றதெல்லாம் இப்போது இல்லை... ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்வதிலேயே காலம் கழிகிறது.
    இவர்கள் வென்று நம்மை வாழ வைப்பார்களா என்ன?

    ReplyDelete
  16. பாராளுமன்றத் தேர்தலின்போது இப்படித்தான் வேட்பாளர்களைப் பார்க்காமலே ஓட்டு போடுவோம். நமக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சட்டமன்றத் தேர்தலும், அதைவிட பஞ்சாயத்துத் தேர்தலும் எனக்கு ரொம்பவேப் பிடிக்கும்.

    தேர்தல் திருவிழாவைப் பார்த்து பல வருடங்களாச்சே ...... உங்களையெல்லாம் நினைத்துப் பொறாமையில் புழுங்கினேன். நல்லவேளை இதில் நீங்களும் பாதிக்கப்பட்டிருப்பதில் ஒரு சந்தோஷம்.

    "லவுட் ஸ்பீக்கரில் சினிமா பாட்டு ராகத்தில் வேட்பாளர்களைப் பற்றிய பாட்டு அலறுமே. அதுவும் இல்லை" _______________ ஒருவேளை திருந்திட்டாங்களோ !!

    ReplyDelete
  17. இப்போதெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை பல இடங்களில்....

    தில்லியில் சில ஊர்வலங்கள் இருந்தாலும் பெரும்பாலும் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்கு கேட்கிறார்கள் - ஏற்கனவே வரும் குறுஞ்செய்திகள் போதாதென! :(

    தில்லியில் பொதுவாகவே தேர்தல்கள் அவ்வளவு சுவாரஸ்யம் இருந்ததில்லை!

    ReplyDelete
  18. ஒரு சந்தேகம்.
    உங்க தெருவில பணம் வாங்கிட்டு மானாவாரியா மாத்தி ஓட்டுப் போடுறவங்க நிறைய இருக்கீங்களோ?
    #கேட்டு வைப்போம்!

    ReplyDelete
  19. அருமையான பதிவு! செமத்தியான கிண்டல்! இங்கும் ஒரு நாள் வெடியும் வேட்டுமாக அமர்க்களப்பட்டது! வேட்பாளர் ஓட்டு சேகரிக்க வருகிறார் என்றார்கள். ஆனால் எங்கள் வீட்டுப்பக்கம் வரவேயில்லை. அப்புறம் தான் தெரிந்தது, சின்ன சின்னத் தெருவுக்குள் எல்லாம் புகுந்து வரமாட்டார்களாம்!! நம் ஓட்டெல்லாம் தேவையில்லை போலிருக்கிறது!!

    ReplyDelete
  20. வணக்கம் அம்மா !
    இத்தனை நாளும் தங்களின் தளத்தில் இணைய முயன்றும் முடியாமல் போனது
    இன்று தான் என் ஆசை நிறைவேறியது .சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்களும்
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளும் .மிக்க நன்றி அம்மா பகிர்வுகளுக்கு .இனிய பகிர்வுகளை இனி இனிதே தொடர்வேன் ..

    ReplyDelete
  21. இனிய ஜய வருட வாழ்த்துகள் ராஜி!

    ReplyDelete
  22. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  23. சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  24. தேர்தல் சமயம் கோவையில் இருந்தேன். எங்கள் தொகுதியில் எல்லோரும் வீடு வீடாய் வந்து வணங்கி உங்கள் பொன்னான வாக்கை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
    ஓட்டுப்போட எங்கள் ஊருக்கு ஓடி வந்தால் எங்களுக்கு ஓட்டு இல்லை.
    என்ன சொல்ல.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்