Monday 29 February 2016

கீரை வாங்கப் போய் திட்டு வாங்கி வந்த கதை

image courtesy-publicdomainvectors.org

அன்று  காய்கறிக்  கடையில்  நின்று வெண்டைக்காய் பொறுக்கிக் கொண்டிருந்தேன்.  பெங்களூரில்  உள்ள காய்கறி மார்க்கெட்டில்   தான்.

வாங்கிக் கொண்டிருக்கையில் , இளம் ஜோடி ஒன்று "நாட்டி !"  என்று  பேசிக் கொண்டே என்னைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அட.....இந்தக் காதலர்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போ ய் விட்டது.  பொது இடங்களில் எல்லோர் காதுகளிலும் விழுவது போல் அன்னியோன்யமாகப்   பேசுவது தான் இப்போதைய நாகரீகம் போலிருக்கிறது. என்ன தான் காஸ்மாபாலிடன் நகரம்  என்றாலும்..... இப்படியா? நினைத்துக் கொண்டே காய் கறிகளைத்   துணிப்பைக்குள் வைத்துக் கொண்டே நகர்ந்தேன்.

அப்பொழுது  ஸ்கூட்டரில் இருந்து ஒரு  இளம் பெண் இறங்கினார். கண் இரண்டு மட்டுமே தெரியும்படியாக  போர்த்திக் கொண்டு, தன் கவச குண்டலங்களை (ஹெல்மெட், கிளவுஸ் ...இத்யாதி ...இத்யாதி )  ஒவ்வொன்றாக கழட்டி, இரு சக்கர வாகனத்தின் உள்ளேதிணித்து விட்டு , காதில் தொங்கும் ஒயருடனும், பேசிக்கொண்டும் , சென்றுக் கொண்டிருந்தார்.

என்னைத் தாண்டி சென்றவர், நான் கொத்தமல்லி  வாங்கிக் கொண்டிருந்த கிழவரிடம் , எதையோ கன்னடத்தில் சொல்லி விட்டு  "  நாட்டி ! " என்று சொல்லவும் , திரும்பவும்  எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
பெங்களுரில்...... ஆனாலும் ரொம்பத் தான் ஆங்கிலம் சர்வ சாதரணமாக எல்லோர் வாயிலும் விழுந்து புரண்டுக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இவ்வளவு வயதான மனிதரிடமா  இந்தப் பெண்..........ஏன் ......இப்படி.   புரியாமல் குழம்பினேன்.  வயதானவர் முகத்தைப் பார்த்தேன் . அவர் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல்  எனக்கு காய்கறி நிறுத்துக் கொண்டிருந்தார்.

எல்லாம் காலத்தின் கோலம் என்று சற்றுக்  கோபத்துடன் நகர்ந்தேன்.

 நாட்டி என்கிற வார்த்தை சரளமாக வருகிறதே . இதற்கு வேறு அர்த்தம் இருக்கும் என்பது என் மரமண்டைக்கு எட்டவேயில்லை.

அட... முருங்கைக் கீரை இருக்கிறதே  என்று கீரை வாங்கப் போனேன். கீரை விற்கும் பெண்மணியிடம்  நடுத்தர வயது மனிதர் ஒருவர் ,மீண்டும் நாட்டி என்று சொல்லவும் , கீரை விற்கும் பெண்மணியைப் பார்த்து இப்படி சொல்கிறாரே! இப்பொழுது பெரிய சண்டை இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே , கீரை வாங்க மறந்து , வழக்கம் போல் பராக்குப்  பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்தபடி நல்ல சண்டை வந்ததே! 'திட்டு திட்டெ'ன்று திட்டித் தீர்த்து விட்டார் அந்தப் பெண்மணி  . 'நாட்டி' சொன்ன மகானுபவரை திட்டவில்லை.   என்னைத் தான்.

கீரைக் கூடை அருகே நின்றுக் கொண்டிருந்த என்னிடம்,  முதலில் கன்னடத்தில் எதையோ கோபமாக சொல்லவும். என்னிடம் ஏன் கோபப்படுகிறார் என்று புரியாமல்  "கன்னடம் கொத்தில்லா " என்று நான் சொன்னது தான் தாமதம்.( அர்ச்சனைத் தமிழில் இருந்தால் புரியும் இல்லையா )

தொடங்கி விட்டார். நல்ல சென்னைத் தமிழில், அங்கங்கே கன்னடம் தூவி , வசை மாறிப் பொழிந்தார் . " நானும் ஜாஸ்தி நேரமாய் உன்னை கவனித்துக் கொண்டே  இருக்கிறேன். இந்த மார்க்கெட்டில் அங்கங்கே எல்லோரையும் நோட்டம்  பார்க்கிறாய். இப்ப என் கீரைக்  கூடை கிட்டே நில்சி  என்ன மாடுறே ?( என் கீரைக் கூடை கிட்டே நின்று கொண்டு என்ன செய்கிறாய்?)

ஒண்ணா வாங்கணும், இல்லைனா நகரணும். எதுக்குப் பக்கத்திலேயே நின்னுகிணு  .....  நான் அசந்து மறந்தா.... திருடலாம் அணுகொண்டு( நினைத்துக் கொண்டு ).... ஹோகம்மா ( போம்மா ) என்று திட்டி விட்டு ,.

நாட்டி என்று சொன்னாரே அந்த மனிதருக்கு மரியாதையுடன்  கீரை கொடுத்துக் கொண்டிருந்தாள் .

( இப்படிக் கூடவா யாராவது  இருப்பார்கள் ? யாராவது திட்டும் போது "கன்னடம் கொத்தில்லா" என்றா சொல்வார்கள் . கன்னடத்தில் திட்டினால் புரியவில்லை என்று தமிழில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மையில் நான் அதைத்தான் செய்திருக்கிறேன்))


அந்த மனிதரோ என்னை பாவமாய் பார்த்துக் கொண்டே நகர , இனியும் மார்கெட்டில் நின்றால்  வம்பில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு ,
யாரோ  யாரையோ  'நாட்டி' என்று செல்லம் கொஞ்சி விட்டுப் போகட்டும் .நமக்கென்ன,
என்று விடு விடுவென்று வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.

ஆனால் கீரைப் பெண்மணியிடம் வாங்கிய திட்டு , அவமானமாய் என் முகத்தில் ஒட்டிக்   கொண்டது .
உள்ளே நுழைந்தவுடன் , என் மகன்," ஏன்  ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?" என்று கேட்க, " ஒன்றுமில்லை " சொல்லி விட்டு ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் குடித்து அவமானத்தை முழுங்கப் பார்த்தேன்.

அப்படியெல்லாம் முழுங்க விட்டு விடுவேனா என்பது போல்அங்கே ஆஜரானாள் என் மருமகள்.
" மாமி என்ன காய் வாங்கி வந்தீர்கள்? " என்று பையை விட்டு முதலில் கொத்தமல்லியை  எடுத்து வெளியே வைத்தாள் . பிறகு என்னிடம் , " ஏன் பேயறைந்தாற் போலிருக்கிறதே உங்கள் முகம் " என்று கேட்டது  , எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலிருந்தது ,

" ஏன்  நாட்டி  உங்களுக்குக் கிடைக்கவில்லையா?  ' என்று மேலும் கேட்டு எரிகிற நெருப்பில் இப்போது  பெட்ரோலையே  ஊற்றினாள்.

 " இப்படி  உட்கார். முதலில்  இந்த நாட்டி என்றால் என்ன என்று சொல். ஒரு பெரிய வம்பில் மாட்டிக் கொள்ள இருந்தேன் " என்று  நடந்த அத்தனையும் விலாவாரியாக சொல்ல ,

அவளுக்குப் புரிந்து விட்டது 'நாட்டி' என்பதை நான்  எப்படிப் புரிந்துக் கொண்டேன் என்பதை.

அதனால், "மாமி. நாட்டி என்கிற வார்த்தை ஆங்கில 'நாட்டி'  இல்லை. 
'நாட்டி' என்பது  நாட்டுக் கத்திரிக்காய், நாட்டுக் கொத்தமல்லி..... என்பது போல். நம் ஊரில் நாட்டுக் காய் என்று சொல்வோமே அது தான் மாமி இங்கே  நாட்டி என்பது. நாட்டி காய் விலை சற்று அதிகம் ஏனென்றால் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கை உரம் போட்டு விளைவித்தது என்று சொல்லிக் கொண்டே போனாள். 

'நாட்டி'யைப் பற்றிய உண்மைப் புரிய இப்பொழுது என் மேல் எனக்கே  கோபம் வந்தது. எனக்குத் தெரிந்ததை  வைத்துக் கொண்டு தவறாக  மற்றவர்களை எடை போட்டு  விட்டேனே.

மறு நாள் பொழுது விடிந்தது. " கீரை வாங்கி வாயேன் ராஜி " என்று என்னவர் என்னைப் பார்த்துக் கிண்டலாய்  சொல்ல ,.

நானோ, காபி ஆற்றுவது, ராக்கெட் சயின்ஸ் என்பது போல்  எதையும் காதில் வாங்காமல் ,காபியையே பார்த்து சர்வ ஜாக்கிரதையாக   ஆற்றிக் கொண்டிருந்தேன்.

Sunday 7 February 2016

ராசி வீட்டில் ரத்த ஆறு.


google image


 டிவி நிகழ்ச்சி ஒன்றில் லயித்துப் போயிருந்தாள்  ராசி.  மணி இரவு பத்தை  நெருங்கிக் கொண்டிருந்தது.  ஆப்பிள்  நறுக்கி சாப்பிட்டு விட்டு படுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ராசி.

"இந்த முறையாவது  புளிக்காத நல்ல ஆப்பிளை வாங்கி வந்தீர்களா?" என்று விஷ்ணுவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே, ஆப்பிள், கத்தி , தட்டு என்று சகல உபகரணங்களுடனும்   வந்தமர்ந்தாள்  ராசி.

" உனக்கு என்னிடம்  குற்றம் கண்டு பிடிக்காவிட்டால்  இன்றிரவுத் தூக்கம் வராதே ." என்று விஷ்ணு சொல்ல

" ஆமாம் எனக்கு உங்களைக் குற்றம் சொல்லணும் என்று  எப்பவும் ஆசை பாருங்கள். நீங்களே சொல்லுங்கள். போன  முறை வாங்கி வந்த ஆப்பிளை வாயில் வைக்க முடிந்ததா.? மாங்காயா ? ஆப்பிளா ? என்று சந்தேகத்துடன் சாபிட்டது  நீங்கள் தானே ."

" அதைக் கேட்டால்....... ராசி பொல்லாதவள். " கழுத்தை நொடித்தாள் ராசி.

" சரி. ஆப்பிளைப் பார்த்து  வெட்டு. கத்தி வேறு புதுசு. ஜாக்கிரதை." என்று விஷ்ணு சொல்ல

இடது கையில் ஆப்பிளை எடுத்து வாகாய் வைத்துக் கொண்டு " இந்த அக்கரைக்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை." என்று சொல்லிக் கொண்டே கத்தியை சரக்கென்று  ஆப்பிளில்  சொருக  ,

ஆப்பிளை வெட்டியதோடு நில்லாமல்  கொஞ்சமே கொஞ்சம்  விலகி  ராசியின் சுண்டு விரலையும்   பதம் பார்த்தது கத்தி.

" உஸ்.....ஆ......" என்று சன்னமாக ராசி குரலெழுப்ப  , விஷ்ணு "என்ன ஆச்சு " என்று கேட்டார்.

விடுதலையான மகிழ்ச்சியில்  ராசியின் விரலிருந்து ரத்தம் வெளியே  வர ஆரம்பித்தது.

ஓடிப்போய்  , வாஷ் பேசினில் சுண்டு  விரலை  நீட்டினாள்  ராசி. சட்டென்று  நின்றது ரத்தம்.  வாஷ்பேசின் குழாயை மூடி விட்டு  மீண்டும் வந்தமர்ந்தாள் ராசி. ஆப்பிளைக் கையில் எடுத்து வாயில் வைக்கப் போனவள் , இடது உள்ளங்கையில் ஜில்லென்று  என்னவோ  பட, பார்த்தால்  ரத்தம் நின்றது போல் பாவ்லா காட்டி விட்டு மீண்டும் வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால்  வலி எதுவும் இல்லை ராசிக்கு.

மீண்டும் குழாயில் விரலை நீட்டவும், ரத்தம் நின்று விட்டது.

திரும்பவும் ராசி ஹாலிற்கு வரவும், மீண்டும் ரத்தம் முட்டிக் கொண்டு வந்தது. வெட்டுக்  காயம் ரொம்பவும் பெரிதில்லை தான் .ஆனால் ரத்தமோ  விடாமல்  வந்து கொண்டு இருந்தது.

இப்பொழுது  விஷ்ணுவிற்கு மனதின் ஓரத்தில் கடுகத்தனைப் பயம்  விருட்டென்று முளைத்தது. "ரத்தம் நிற்கவில்லையே " நினைத்துக் கொண்டே பிரிஜ்ஜிலிருந்த ஐஸ் கட்டியை எடுத்து விரலில் வைத்துப் பார்த்தார் விஷ்ணு. ரத்தம் நின்றது.. .

"அப்பாடி ......இருவரும் பெருமூச்சு விட்டனர் . " ஐஸ் கட்டிக் கரையும் வரை அப்படியே பிடித்துக் கொண்டிரு . ரத்தம் நின்று விடும். "  என்று விஷ்ணு அறிவுறுத்தினார்.

 சொல்லி விட்டு ," இப்பொழுது  உன்னை யார் ஆப்பிளை வெட்ட சொன்னார்கள்.? என்று விஷ்ணு கோபமாக ஆப்பிளையும் கத்தியையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

மணி அதற்குள் பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ராசி  ஐஸ் கட்டியை கெட்டியாக வெட்டுப்பட்ட சுண்டு விரலில் அழுத்திப் பிடித்துக் கொண்டிந்தாள் .

"நீ ஐஸ் கட்டியை வைத்து அணை கட்டினால்...........   நான் வர மாட்டேனா ?" என்று கேட்பது போல்  ஐஸ் கட்டி மெதுவாக கலர் மாறி சிவப்பு நிறமாக மாறிக்   கொண்டிருந்தது.  ஐஸ் கட்டி முழுதும் கரையும் தருவாயில் சின்ன  ரத்த ஐஸ் கட்டியாக மாறிக்கொண்டிருந்தது. விரல்  உறைந்துப் போனது தான் மிச்சம், ரத்தம் மட்டும் உறையவேயில்லை."

பயம் சற்று கூடுதலாக உணரத் தொடங்கினார் விஷ்ணு. இந்த அகால வேளையில் யாரைப் போய் எழுப்புவது?  ரத்தமோ நிற்பதாகத் தெரியவில்லை.  துணியால் கட்டிப் பார்த்தாள்  ராசி.

ம்ஹூம்.... ஒரு  பிரயோஜனமுமில்லை.  ரத்த ஆறு ஓடவில்லை தான். ஆனால்  விடாமல் இப்படியே ,  இரவுப் பூராவும் ரத்தம் வந்துக் கொண்டிருந்தால்....... பயம்  ராசியின் மனதிலும் மேலெழும்பிக் கொண்டிருந்தது.

ஆனால் ரத்தம் ஏன் இப்படி  நிற்காமல் வருகிறது என்பது மட்டும் புரியவில்லை ராசிக்கு . இது ரொம்பப் பெரிய வெட்டுக்  காயமுமில்லை. இதை விடப் பெரிய காயம் எல்லாம் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் வராத தொல்லை இப்பொழுது மட்டும்  ஏன் ?வயதானால் ரத்தம்  உறையாதோ என்கிற சந்தேகமும் வந்தது ராசிக்கு.

அதற்குள் விஷ்ணு  என்ன செய்யலாம் என்கிற யோசனையில் ஆழ்ந்தார்.
மகளையோ, மகனையோ போன் செய்து வரவழைக்கலாம் என்றால்  இந்த நேரத்தில் ..........போன்  செய்தால்.............வேண்டாம் ...வேண்டாம்..... இருவருமே பதறி ......  வேண்டாம் ....பதட்டத்தில்  வண்டி எடுக்க வேண்டாம் .சிறிது நேரம் பார்க்கலாம். ரத்தம் நின்றாலும் நின்று விடும். இல்லையென்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று போன் செய்யும் முடிவை ஒத்திப் போட்டார் விஷ்ணு.

சட்டென்று google நினைவு வந்தது விஷ்ணுவிற்கு. உடனே டாக்டர் கூகுளார்  துணையினை நாடினார் விஷ்ணு. ராசி அதற்குள் துணி மேல் துணி வைத்துக் கட்டி ரத்தத்தை நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் போராட்டம் எல்லாம் வீண் .

விஷ்ணு கூகுளில்  தேடியதும் பல உபாயங்கள் கிடைத்தன. பலர் இது போல் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியே மனதில் ஒரு பெரிய தைரியத்தை வரவழைத்தது விஷ்ணுவிற்கு.,

ஒவ்வொருவரும் என்னதான் தீர்வுக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தார் விஷ்ணு. தோசைமாவு, காபிப் பொடி, படிகாரம்  என்று பல கைவைத்தியங்கள் கிடைத்தன. எல்லாவற்றிலும் நடை முறை சிக்கல் இருந்ததால்  எதுவும் உபயோகமில்லை..
.
ஆனால் ஒரு யோசனை  நடைமுறைபடுத்தக் கூடியதாக இருந்தது.

"கையை சற்றே தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டிருங்கள். நிற்க வாய்ப்பிருக்கிறது" என்பது தான் அது..  விஷ்ணுவே ராசியின் கையை பிடித்து அவள் தலைக்கு மேல் உயர்த்தி வைத்தார். " அப்படியே கொஞ்ச நேரம் வைத்திரு ." இப்பவும் நிற்கலைன்னா  டாக்டர் வீடு தான் என்று சொல்லி விட்டு ராசியின் சுண்டு விரலையே பார்த்துக் கொண்டிருர்ந்தார் விஷ்ணு.

முதலில்  நின்றது  போல் இருந்த ரத்தம் ,  இரண்டு நிமிடங்களில், ராசி கையை கீழே இறக்கவும், மீண்டும்  'குபுக்'கென்று  புதிய வேகத்துடன் வெளியே வரத் தொடங்கியது.

பார்த்தார் விஷ்ணு. இதற்கு மேல் காத்திருப்பதில் புண்ணியமில்லை. என்று , " ராசி நீ கொஞ்ச நேரத்திற்குக் கையை மேலேயே  தூக்கிப் பிடித்துக் கொள். நான் நம்ம டாக்டர் மயில் வாகனனை  போனில் கூப்பிடுகிறேன் '

இரண்டி ரிங்கிற்குப் பிறகு டாக்டர் லைனில் வந்ததும் , "சாரி டாக்டர்.உங்களை இந்த நேரத்தில்  தொந்திரவு பண்ண ."

"அதான் பண்ணி விட்டீர்களே  சொல்லுங்கள்  விஷ்ணு."
மேலும் "சும்மா விளையாட்டிற்கு சொன்னேன்.என்ன விஷயம்? " என்று சமய சந்தர்ப்பில்லாமல் ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்.

டாக்டர், " ராசிக்குக் கையில் வெட்டுக் காயம். ரத்தம் நிற்காமல் வந்துக் கொண்டேயிருக்கிறது."

இப்பொழுது டாக்டர் சற்று சீரியசாக," எவ்வளவுப் பெரிய காயம்? நான் உங்கள் மனைவியை சற்று ஜாக்கிரதையாக இருக்க சொல்லியிருக்கிறேனே. ரத்தம் லேசில் நிற்காதே."

"ஏன் டாக்டர்?  ஆனால் காயம் சின்னது தான்."

" என்ன ஏன்  என்று கேள்வி கேட்கிறீர்கள் ?.சின்னதோ பெரிதோ  ராசி இதய நோயாளி அல்லவா.  அதற்கான anticoagulant tablets சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா ? அது ரத்தம்  உறைவதைத் தடுக்கும் மாத்திரை . சரி . இன்னும் வந்து கொண்டே தான் இருக்கிறதா. ?

"ஆமாம் டாக்டர். கையை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தால் நிற்கிறது.இல்லையென்றால் உடனே வந்து விடுகிறது."

" நல்ல வேலை செய்தீர்கள். அப்படியே கையை கீழே இறக்காமல்  விரலை மடிக்காமல் , நிமிர்த்தி வைத்துக் கொண்டு , ஒரு  நல்ல துணியால்  அழுத்திக் கட்டுங்கள்.   சில  நிமிடங்களில் நிற்கிறதா பாருங்கள். இல்லையென்றால் இங்கே  கிளினிக்கிற்கு அழைத்து வாருங்கள். "
என்று டாக்டர்  போனில் முதலுதவி சொல்லவும்.  விஷ்ணு அதை அப்படியே கடைபிடிக்க, ராசிக்கு உத்தரவுப் போட்டார்.

ராசியும் பயந்து போய் விஷ்ணுவையே பார்க்க, விஷ்ணு கேட்டார் " என்ன ஆச்சு? "
" இல்லை உங்களைத் தனியே விட்டு விட்டு போய் விடுவேனோ ?" ராசிக்குத்  துக்கம் தொண்டையடைத்தது.

" என்ன இந்த சின்ன வெட்டுக் காயத்திலா? "

"சரி , நீ ரொம்பவும் பயந்து போயிருக்கிறாய். உனக்குக் காபிப் போட்டுத் தருகிறேன்". என்று சொல்லவும் விஷ்ணு போட்ட காபி ராசியின் நினைவிற்கு வர  ," ஐயோ வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன் " என்று அவசரமாக மறுத்தாள் .

பத்து நிமிடம் ஓடியது.  ரத்தம் முழுசுமாக நின்று விட்டது.ஆனாலும் ராசிக் கையைக் கீழே இறக்குவதாயில்லை.  மீண்டும் ரத்த  ஆறு ஓடுவதைத் தவிர்க்கத் தான்.

விஷ்ணு சொன்னார்," மணி பதினொன்றரை ஆச்சு. ரத்தம் இனிமேல் வராது.  பேசாமல் படுத்துத் தூங்கு." 

ம்ஹூம்  ...ராசி கேட்பதாயில்லை. அவள் பயம் அவளுக்கு.

பார்த்தார் விஷ்ணு,  சுவற்றில் மாட்டியிருந்த கோவர்த்தனகிரி பெருமாளைப் பார்த்து,"கிருஷ்ண பரமாத்மா ! உன் சுண்டு விரலிற்கு கொஞ்ச நேரத்திற்கு   விடுதலை கொடுக்க நினைக்கிறாள் ராசி என்று நினைக்கிறேன்.நீ சுண்டு விரல் மீது தூக்கி வைத்திருக்கும் கோவர்த்தன மலையை ராசியின் சுண்டு விரல் மேல் வைத்து விட்டு நீ சற்று ரிலாக்ஸ் செய்து கொள். ராசியும் அதே போஸில்  தானே  கையை வைத்திருக்கிறாள் . அதற்காக சொன்னேன். " என்று விஷ்ணு சொன்னதை ராசி சட்டை செயவேயில்லையே.

ராசிக்குப்  புரிந்தது, "மனிதர் என் ரத்தத்தைப் பார்த்துக் கொஞ்சம் ஆடித் தான் போய் விட்டார் போலிருக்கிறது . இப்பொழுது தான் சகஜ நிலைக்குத் திரும்பியிருக்கிறார்."

ராசி எப்பொழுது தூங்கினாளோ  தெரியாது.

விடிந்தது. ராசிக்குப்  பூரண  குணம். காபிக் குடித்து விட்டு சமைக்க ஆரம்பித்து விட்டாள் . ஆனால் விஷ்ணு கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர்.

ஆனந்தக் கண்ணீர்  என்று நீங்கள் நினைத்தால் விஷ்ணு பொறுப்பில்லை.

வெங்காயம் நறுக்கிக் கொண்டிருகிறார். அவ்வளவு தான்..
இன்னும் சில நாட்களுக்கு  விஷ்ணு காய்கறி நறுக்கினால் தான் அவருக்கு சாப்பாடு கிடைக்கும்.

பி.கு :  நண்பர் இல்லத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியைஅடிப்படையாகக்  கொண்டது இப்பதிவு. 
 ராசி விஷ்ணு தம்பதியினரை வைத்து சற்று  ஜாலியாக விவரிக்க முயற்சித்திருக்கிறேன்.

Anti Coagulant tablets சாப்பிடும் இதய நோயாளிகளுக்கு இப்படி ஒரு தொல்லையா? கவனமாக  இருந்து கொள்ளுங்கள் மக்களே!  

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்