Monday 29 February 2016

கீரை வாங்கப் போய் திட்டு வாங்கி வந்த கதை

image courtesy-publicdomainvectors.org

அன்று  காய்கறிக்  கடையில்  நின்று வெண்டைக்காய் பொறுக்கிக் கொண்டிருந்தேன்.  பெங்களூரில்  உள்ள காய்கறி மார்க்கெட்டில்   தான்.

வாங்கிக் கொண்டிருக்கையில் , இளம் ஜோடி ஒன்று "நாட்டி !"  என்று  பேசிக் கொண்டே என்னைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அட.....இந்தக் காதலர்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போ ய் விட்டது.  பொது இடங்களில் எல்லோர் காதுகளிலும் விழுவது போல் அன்னியோன்யமாகப்   பேசுவது தான் இப்போதைய நாகரீகம் போலிருக்கிறது. என்ன தான் காஸ்மாபாலிடன் நகரம்  என்றாலும்..... இப்படியா? நினைத்துக் கொண்டே காய் கறிகளைத்   துணிப்பைக்குள் வைத்துக் கொண்டே நகர்ந்தேன்.

அப்பொழுது  ஸ்கூட்டரில் இருந்து ஒரு  இளம் பெண் இறங்கினார். கண் இரண்டு மட்டுமே தெரியும்படியாக  போர்த்திக் கொண்டு, தன் கவச குண்டலங்களை (ஹெல்மெட், கிளவுஸ் ...இத்யாதி ...இத்யாதி )  ஒவ்வொன்றாக கழட்டி, இரு சக்கர வாகனத்தின் உள்ளேதிணித்து விட்டு , காதில் தொங்கும் ஒயருடனும், பேசிக்கொண்டும் , சென்றுக் கொண்டிருந்தார்.

என்னைத் தாண்டி சென்றவர், நான் கொத்தமல்லி  வாங்கிக் கொண்டிருந்த கிழவரிடம் , எதையோ கன்னடத்தில் சொல்லி விட்டு  "  நாட்டி ! " என்று சொல்லவும் , திரும்பவும்  எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
பெங்களுரில்...... ஆனாலும் ரொம்பத் தான் ஆங்கிலம் சர்வ சாதரணமாக எல்லோர் வாயிலும் விழுந்து புரண்டுக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இவ்வளவு வயதான மனிதரிடமா  இந்தப் பெண்..........ஏன் ......இப்படி.   புரியாமல் குழம்பினேன்.  வயதானவர் முகத்தைப் பார்த்தேன் . அவர் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல்  எனக்கு காய்கறி நிறுத்துக் கொண்டிருந்தார்.

எல்லாம் காலத்தின் கோலம் என்று சற்றுக்  கோபத்துடன் நகர்ந்தேன்.

 நாட்டி என்கிற வார்த்தை சரளமாக வருகிறதே . இதற்கு வேறு அர்த்தம் இருக்கும் என்பது என் மரமண்டைக்கு எட்டவேயில்லை.

அட... முருங்கைக் கீரை இருக்கிறதே  என்று கீரை வாங்கப் போனேன். கீரை விற்கும் பெண்மணியிடம்  நடுத்தர வயது மனிதர் ஒருவர் ,மீண்டும் நாட்டி என்று சொல்லவும் , கீரை விற்கும் பெண்மணியைப் பார்த்து இப்படி சொல்கிறாரே! இப்பொழுது பெரிய சண்டை இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே , கீரை வாங்க மறந்து , வழக்கம் போல் பராக்குப்  பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்தபடி நல்ல சண்டை வந்ததே! 'திட்டு திட்டெ'ன்று திட்டித் தீர்த்து விட்டார் அந்தப் பெண்மணி  . 'நாட்டி' சொன்ன மகானுபவரை திட்டவில்லை.   என்னைத் தான்.

கீரைக் கூடை அருகே நின்றுக் கொண்டிருந்த என்னிடம்,  முதலில் கன்னடத்தில் எதையோ கோபமாக சொல்லவும். என்னிடம் ஏன் கோபப்படுகிறார் என்று புரியாமல்  "கன்னடம் கொத்தில்லா " என்று நான் சொன்னது தான் தாமதம்.( அர்ச்சனைத் தமிழில் இருந்தால் புரியும் இல்லையா )

தொடங்கி விட்டார். நல்ல சென்னைத் தமிழில், அங்கங்கே கன்னடம் தூவி , வசை மாறிப் பொழிந்தார் . " நானும் ஜாஸ்தி நேரமாய் உன்னை கவனித்துக் கொண்டே  இருக்கிறேன். இந்த மார்க்கெட்டில் அங்கங்கே எல்லோரையும் நோட்டம்  பார்க்கிறாய். இப்ப என் கீரைக்  கூடை கிட்டே நில்சி  என்ன மாடுறே ?( என் கீரைக் கூடை கிட்டே நின்று கொண்டு என்ன செய்கிறாய்?)

ஒண்ணா வாங்கணும், இல்லைனா நகரணும். எதுக்குப் பக்கத்திலேயே நின்னுகிணு  .....  நான் அசந்து மறந்தா.... திருடலாம் அணுகொண்டு( நினைத்துக் கொண்டு ).... ஹோகம்மா ( போம்மா ) என்று திட்டி விட்டு ,.

நாட்டி என்று சொன்னாரே அந்த மனிதருக்கு மரியாதையுடன்  கீரை கொடுத்துக் கொண்டிருந்தாள் .

( இப்படிக் கூடவா யாராவது  இருப்பார்கள் ? யாராவது திட்டும் போது "கன்னடம் கொத்தில்லா" என்றா சொல்வார்கள் . கன்னடத்தில் திட்டினால் புரியவில்லை என்று தமிழில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மையில் நான் அதைத்தான் செய்திருக்கிறேன்))


அந்த மனிதரோ என்னை பாவமாய் பார்த்துக் கொண்டே நகர , இனியும் மார்கெட்டில் நின்றால்  வம்பில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு ,
யாரோ  யாரையோ  'நாட்டி' என்று செல்லம் கொஞ்சி விட்டுப் போகட்டும் .நமக்கென்ன,
என்று விடு விடுவென்று வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.

ஆனால் கீரைப் பெண்மணியிடம் வாங்கிய திட்டு , அவமானமாய் என் முகத்தில் ஒட்டிக்   கொண்டது .
உள்ளே நுழைந்தவுடன் , என் மகன்," ஏன்  ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?" என்று கேட்க, " ஒன்றுமில்லை " சொல்லி விட்டு ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் குடித்து அவமானத்தை முழுங்கப் பார்த்தேன்.

அப்படியெல்லாம் முழுங்க விட்டு விடுவேனா என்பது போல்அங்கே ஆஜரானாள் என் மருமகள்.
" மாமி என்ன காய் வாங்கி வந்தீர்கள்? " என்று பையை விட்டு முதலில் கொத்தமல்லியை  எடுத்து வெளியே வைத்தாள் . பிறகு என்னிடம் , " ஏன் பேயறைந்தாற் போலிருக்கிறதே உங்கள் முகம் " என்று கேட்டது  , எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலிருந்தது ,

" ஏன்  நாட்டி  உங்களுக்குக் கிடைக்கவில்லையா?  ' என்று மேலும் கேட்டு எரிகிற நெருப்பில் இப்போது  பெட்ரோலையே  ஊற்றினாள்.

 " இப்படி  உட்கார். முதலில்  இந்த நாட்டி என்றால் என்ன என்று சொல். ஒரு பெரிய வம்பில் மாட்டிக் கொள்ள இருந்தேன் " என்று  நடந்த அத்தனையும் விலாவாரியாக சொல்ல ,

அவளுக்குப் புரிந்து விட்டது 'நாட்டி' என்பதை நான்  எப்படிப் புரிந்துக் கொண்டேன் என்பதை.

அதனால், "மாமி. நாட்டி என்கிற வார்த்தை ஆங்கில 'நாட்டி'  இல்லை. 
'நாட்டி' என்பது  நாட்டுக் கத்திரிக்காய், நாட்டுக் கொத்தமல்லி..... என்பது போல். நம் ஊரில் நாட்டுக் காய் என்று சொல்வோமே அது தான் மாமி இங்கே  நாட்டி என்பது. நாட்டி காய் விலை சற்று அதிகம் ஏனென்றால் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கை உரம் போட்டு விளைவித்தது என்று சொல்லிக் கொண்டே போனாள். 

'நாட்டி'யைப் பற்றிய உண்மைப் புரிய இப்பொழுது என் மேல் எனக்கே  கோபம் வந்தது. எனக்குத் தெரிந்ததை  வைத்துக் கொண்டு தவறாக  மற்றவர்களை எடை போட்டு  விட்டேனே.

மறு நாள் பொழுது விடிந்தது. " கீரை வாங்கி வாயேன் ராஜி " என்று என்னவர் என்னைப் பார்த்துக் கிண்டலாய்  சொல்ல ,.

நானோ, காபி ஆற்றுவது, ராக்கெட் சயின்ஸ் என்பது போல்  எதையும் காதில் வாங்காமல் ,காபியையே பார்த்து சர்வ ஜாக்கிரதையாக   ஆற்றிக் கொண்டிருந்தேன்.

24 comments:

  1. நல்ல சுவையான பதிவு. நாட்டி என்று இனி யார் சொன்னாலும் இது நினைவில் வரும். :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  2. ஹா ஹா நல்ல பதிவு.. நாட்டிக்கு என்னனு எனக்கு இப்பொழுது தெரிந்தது.. நானும் இந்த வார்த்தையை சகஜமாக கேள்வி பட்டிருக்கேன்.. எனக்கு இங்கே ஊரில் கன்னடம் பேசுபவர்கள் அதிகம்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அபி

      Delete
  3. நல்ல நகைச்சுவைதான். மொழி மாற்றங்களால் ஒருசில வார்த்தைகளுக்கு பல மாநிலங்களில் இதுபோல அர்த்தம் அனர்த்தம் ஆகி ஒருசில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //இதுபோல அர்த்தம் அனர்த்தம் ஆகி ஒருசில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது.// உங்களுக்கும் இது போன்ற மொழி அனுபவங்கள் இருக்கிறது போல் தெரிகிறதே. பதிவாக்குங்கள் கோபு சார்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.

      Delete
    2. //உங்களுக்கும் இது போன்ற மொழி அனுபவங்கள் இருக்கிறது போல் தெரிகிறதே.//

      பிறருக்கு என் எதிரில் நேர்ந்துள்ள இதுபோன்ற உண்மை அனுபவக்கதைகள் என்னிடம் நிறையவே உள்ளன.

      //பதிவாக்குங்கள் கோபு சார்.//

      அதில்தான் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக சல்வார் மேல் போடும் துப்பட்டாவை புனே பக்கம் வேறு மாதிரி சொல்லி வருகிறார்கள். நாம் வெற்றிலையுடன் போடும் ‘பாக்கு’ என்பதை ஆந்திராவில் வேறு மாதிரி சொல்லுகிறார்கள்.

      இது போன்று மலையாளம், தெலுங்கு, மராட்டி, குஜராத்தி போன்ற பலமொழிகள் பேசுபவர்களுடன், ஒன்றாக சேர்ந்து ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துள்ள எனக்கு, இவர்களுக்கு ஒவ்வொன்றையும் தமிழில் புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

      இவர்கள் இங்குள்ள தமிழ் பேசும் கடைக்காரர்களிடம் தனியாகச்சென்று ஏதாவது கேட்கப்போய் மிகப் பெரிய தகராறுகள் ஏற்பட்டுள்ளன.

      Delete
  4. தோனியின் சிக்சரும் உங்களது பதிவும் ஒன்று.
    தாமதப்பட்ட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருக்கைக்கும், பாராட்டிற்கும் நன்றி பாண்டியன். உங்கள் முக நூலிலும் இந்தப் பதிவைப் பகிர்ந்து என்னைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.நன்றி பாண்டியன்

      Delete
  5. ஹா.ஹா.... செம!

    மொழி தெரியாவிடில் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறோம்! :)

    உங்கள் மூலம் நானும் நாட்டி பற்றி தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
  6. அட நாட்டி நா இப்படி ஒரு அர்த்தமா. ராஜி. நல்லா மாட்டினீர்கள்.
    அருமையான பதிவு. இன்று ஒரு வார்த்தை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வல்லி மேடம்.

      Delete
  7. Replies
    1. உங்கள் வருகைக்கும், ரசித்து சிரிப்பதற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  8. ஹா ஹா ஹா :)))) சூப்பர் !

    கீரைதான் 'நாட்டி'யோ என நினைத்துவிட்டேன். எனக்கும் ஒரு கன்னட வார்த்தை தெரிந்துவிட்டது :)

    ReplyDelete
    Replies
    1. பலருக்கும் நாட்டி என்றால் தெரியவில்லை போல் தெரிகிறது. பேசாமல் கன்னட கிளாஸ் ஆரம்பித்து விடலாம் என்று தோன்றுகிறது.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete
  9. ஆகா..நாட்டி சொப்பு ..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அனு.

      Delete
  10. :) பல நாட்களுக்குப்பிறகு வாய் விட்டு சிரிக்க ஒரு சூப்பர் பதிவு! :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி மகி.

      Delete
  11. நகைச்சுவை நடையில் ஒரு யதார்த்த பதிவு !

    மொழி மாற்றத்தில் சில வார்த்தைகள் இப்படி மாறி சில சங்கடங்களை உண்டு பண்ணிவிடுவதுண்டு !

    நான் பிரான்ஸ் வந்த புதிதில் இப்படியான சங்கடங்களில் மாட்டி அசடு வழிந்ததுண்டு !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி






    ReplyDelete
    Replies
    1. வருகிக்கும்,பாராட்டிற்கும் நன்றி சாம்.

      Delete
  12. நகைச்சுவையான பதிவு..மிகவும் ரசித்தேன், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துப் பாராட்டுவதற்கு நன்றி அருள் !

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்