Monday 7 December 2015

மாமழை விட்டுச் சென்ற செய்தி!

google image 
சென்னை வெள்ளத்தில் ,மக்கள் படும் துயரங்கள், அவர்கள்  கண்களில் தெரிந்த அதீத பயம் , பதைபதைக்க செய்தது .  இயற்கை நம்மை வஞ்சம் தீர்த்துக் கொண்டது என்றே சொல்லலாம்.

" என்னோடு விளையாடுகிறாயா ? என்ன செய்கிறேன் பார்  உன்னை ." என்கிற பெரும் ஆக்ரோஷத்துடன்  சீறிப் பாய்ந்து தான் ராட்சதக்  கைகளால்  நம்மை உள்ளே   இழுத்துக் கொள்ள முயற்சித்தப்  போது செய்வதறியாது முதலில் திகைத்துத் தான் போனோம். தண்ணீர் ஒவ்வொரு அடியாக மேலே ஏறிக்  கொண்டேயிருக்க ,  கண்களோ  வானத்தைப் பார்த்து  இம்மழை  நிற்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இயற்கை மனம் இரங்கவில்லை. .
இயற்கை நம்மிடம் தயைக் காட்ட மறுத்து விட்டது என்பதை உணர்ந்த வினாடியிலிருந்து  மீட்புப் பணிகள் தொடங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும்.

தன்னார்வத் தொண்டர்கள் , அரசாங்கம், மற்ற மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் பாகுபாடு இல்லாமல்,  ராணுவம், NDRF, போலீஸ், திரையுலகத்தினர்
, விளையாட்டு  வீரர்கள்  என்றே பல இடங்களிலிருந்தும் உதவிக் கரம் நீட்டப் பட்டது.
 இவர்கள் படகில், ஹெலிகாப்டரில்  என்று  விரைந்து வந்து  வீர   தீர செயல்கள் புரிந்து  காப்பாற்றியதை எத்தனைப் பாராட்டினாலும்  போதாது.எவ்வளவு நன்றிகள் சொன்னாலும்  பத்தாது.

நம் முதல்வரும், நாட்டின் பிரதமரும் நம்பிக்கைத் தரும் விதமாக பேசியது ஆறுதலான செய்தி.

தண்ணீரில் குதித்துத் தன்  சக  மனிதரைக் காப்பாற்றத் துணிந்த  இளைஞர்கள் பாராட்டிற்கு உரியவர்கள் .  இவர்கள் கையில் இருந்ததோ வெறும் நைந்துப் போகத் தயாராயிருந்தக்  கயிறு மட்டுமே. , அதை நீளப் பிடித்து , ஒரு கரையிலிருந்து, மறு கரைக்கு  எல்லோரையும் பத்திரமாக கொண்டு சேர்த்தவர்களை என்னவென்று சொல்வது. கழுத்தளவு நீரில் நீந்திச்  சென்று காப்பாற்றியவர்கள்,  படகுகள் மூலம் காப்பாற்றியவர்கள், படகு கிடைக்காத இடங்களில்,  மரக்கட்டைகள்,  இவற்றை படகாக மாற்றிக் காப்பாற்றியவர்கள் என்று  அடுக்கிக் கொண்டே போகலாம்....... பக்கம் பத்தாது.  அவர்களுக்கு 'நன்றி' என்கிற ஒற்றை சொல்லை சொல்லி விட்டு நடையைக் கட்ட மனம் ஒப்பாது.

உயிர் காப்பற்றப்பட்ட பிறகு, வயிறு சும்மாயிருக்குமா? பசியும் தன்  பங்கிற்கு உபத்திரவம் கொடுக்க, உடனே, 'ஜீபூம்பா'  சொல்லியது போல் , கொட்டத் தொடங்கி விட்டன உணவுப் பொட்டலங்கள் .
இவையெல்லாம் யார் தயாரித்தது? -- தெரியாது.
எந்த மதத்தைச் சேர்ந்தவர் சமைத்தது--தெரியாது.
இதை நம்மிடம் கொண்டு வந்து  கொடுப்பவர் யார் என்றாவது தெரியுமா--தெரியாது. ஆனால் வயிறு நிரம்பியது . அவர்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று புரியவில்லை.

தாகம் வாட்டாமல் இருக்குமா என்ன ? சுற்றிலும் தண்ணீர். ஆனால் குடிக்க ஒரு துளியில்லை.  அதற்கும் பாட்டில் பாட்டிலாக வந்து சேர்ந்தது குடிநீர்.
இருக்க மேலே ஒரு கூரை  வேண்டுமே. கோயில், மசூதி, சர்ச் எல்லாமே மத பாகுபாடு இல்லாமல்  எல்லோரையும் இரு கரம் நீட்டி வரவேற்றுக் கொண்டிருந்தது.  அவர்களுக்கும் நாம் நன்றி சொல்லியேயாக வேண்டும்.

உங்களுக்கு சளைத்தவர்கள்  இல்லை நாங்கள் என்று தனி மனிதனும் , என் வீட்டிற்கு ஐந்து பேரை அனுப்புங்கள், என் வீட்டில் பத்து பேர் இருக்கலாம், இங்கே ஐம்பது பேர் , அங்கே  ஆயிரம் பேர் ...... என்று முக நூல் பக்கங்களில் கூவிக் கூவி  சொல்லிக் கொண்டிருந்தார்கள் . எல்லோரும் எல்லோருக்கும் அடைக்கலம் கொடுக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பை என்னவென்றுசொல்வது!

முக நூல் பக்கங்கள் எல்லாம் உதவிக் கேட்டோ, உதவிகரம் நீட்டுபவர் பற்றிய செய்திகளால் மட்டுமே நிரம்பி வழிந்துக்  கொண்டிருந்தது.. அங்கெல்லாம் பொழுது போக்கு  விவாதங்கள் இல்லை, வெட்டி அரட்டைகள் இல்லை. வாட்ஸ் அப்பிலும்   தேவையற்ற உரையாடல்கள் இல்லை.  தொழில் நுட்பம் இவ்வளவு உதவியாக இருக்குமென்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. எல்லோரிடமும், முக்கியமாக  வயதானோர்களின்   கண்டனத்திற்குள்ளாயிருந்த  தொழில் நுட்பம் ,சுயமரியாதையை  தேடிக் கொண்ட நேரம் இது என்றால்  அது மிகையில்லை.

மாமழை  குப்பையை மட்டும் நம்மிடம் விட்டு , விட்டுப் போகவில்லை. சில   ரகசியங்களையும் அம்பலமாக்கி விட்டுப் போயிருக்கிறது.

 அவற்றில் சில

  • இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். இயற்கையை எதிர்த்து  அல்ல என்கிற பேருண்மை வெளிப்பட்டது.
  •  நமக்கேத் தெரியாமல் நம்மிடையே  அடி மனதில் மூழ்கிப் போயிருந்த   மானுடத்தை  மேலே கொண்டு வந்து மிதக்க வைத்திருக்கிறது. 
  •  மதம் நம்மைப் பிரிக்க முடியாது  என்கிற மாபெரும்  செய்தியை உணர வைத்தது.
  • உதவும் மனப்பாண்மை  தீயைப் போல் வேகமாகப் பரவக் கூடியது. சூழ்ந்திருந்த வெள்ளத்தாலும்  அந்தத் தீயை அணைக்க முடியாது  என்று புரிய வைத்திருக்கிறது.
  • வன்முறையை விட  வேகமாகப் பரவக்கூடியது அன்பு   என்று சொல்ல வைத்தது.
  • "எப்பொழுதும் போனைக் கையில் வைத்துக் கொண்டு என்ன தான் செய்கிறாயோ?" என்று வசவுகளை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த இளைய சமுதாயத்தினர்  சட்டென்று  ஹீரோவாகிப் போனார்கள். உண்மையும் அதுவே. 
  • இளையத் தலைமுறையினர் மீது அளவற்ற நம்பிக்கையைக் கொண்டு வந்து சேர்த்தது.
  •  பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறக்கடிக்கப் பட்டன .
  •  உதவி என்பது அரசாங்கம் மட்டுமே தரவேண்டும் என்கிற நியதி உடைந்தது.
  • நமக்கு  உதவித் தேவைப் பட்ட முக்கியமான நேரத்தில், இந்தியா முழுதும் வியாபித்திருந்த  ஆங்கிலச்  சேனல்கள் சென்னை வெள்ளத்தைப் புறக்கணித்தன  என்கிற கசப்பான உண்மை புரிய வந்தது.. பின்னர் வந்து சேர்ந்துக் கொண்டார்கள்  என்பது வேறு  செய்தி.
  •  ஆனால் சோஷியல் நெட்வர்க்கிங் மீடியா  பெரிதாய் உதவியது.முக நூலிற்கும், வாட்ஸ் அப்பிற்கும், டிவிட்டருக்கும்  நன்றி.

இதிலும் அரசியல் செய்தவர்கள்  எத்தனையோ பேர் இருக்கலாம். அவர்களை விட்டுத் தள்ளுங்கள். அவர்களெல்லாம் எப்பவுமே அப்படித் தான்.

கடைசியாக , ஒன்று....
  இந்தியர்களா ... அவர்களுக்குள் எப்பவும் ஏதோவொரு சண்டை இருக்கும் என்று சொல்பவர்களுக்கு ,
நம்மிடையே கருத்து வேறு பாடுகள் உண்டு . ஒத்துக் கொள்கிறேன். ஆனால்  எங்கேயில்லை, யாரிடமில்லை  கருத்து வேறுபாடுகள்? சொல்லுங்கள்.
ஆனால்...... " கார்கில் போர்" ஆனாலும்,, "கரை புரளும் வெள்ளமா"னாலும்   எதிர் கொள்ள ,  அதையெல்லாம் கடந்து,  நாங்கள்   ஒன்று சேர்ந்து கொள்வோம்.

                                                       இது தான் இந்தியா!!

சென்னை வெள்ளத்தில் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்