Sunday 22 December 2013

விஷ்ணுவின் கணக்கு







விஷ்ணு  காபி  போட்டது  படித்திருப்பீர்கள்.
கணக்குப் போட்டது தெரியுமா?
படியுங்கள்........

" இந்த வருடம் எப்படியாவது  ராசியின் பிறந்தநாளை நினைவில்  வைத்து, அவளுக்கு நல்ல பரிசுப் பொருள்  ஒன்றைக் கொடுத்து ,அசத்தி விட வேண்டியது தான் "  என்று நினைத்துக் கொண்டார்  விஷ்ணு.

ஆமாம். இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நினைத்துக் கொள்வார் விஷ்ணு.
ஆனால்  கரெக்டாக மறந்து விடுவது, சகஜமாகிப் போனது விஷ்ணுவிற்கு.
முதலில் எல்லாம் ராசிக்கு ஏமாற்றமாய் இருந்தது.  போகப் போக  பழகி விட்டது.

ஒரு மாதம் முன்பிருந்தே  தனக்குத் தானே நினைவு  படுத்திக் கொண்டேயிருந்தார்.
என்ன வாங்குவது? யோசித்து  யோசித்து மண்டை குழம்பியது  தான் மிச்சம். 
சரி, அதற்குத் தான்  இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே என்று எப்பொழுதும் போல்  நினைத்துக் கொண்டார்.

அந்த நாளும் வந்தது.
காலை  எழுந்ததும் சொல்ல வேண்டாம். மாலை வரை  சஸ்பென்ஸை  நீட்டித்து விட்டு  , பிறகு அவள் எதிர்பாராத சமயத்தில்  சொல்லலாம், என்று  சஸ்பென்ஸ் வைத்தார்.

காலை எழுந்ததும் ,அவருக்கு  வாழ்த்து சொல்ல வேண்டும் போல் தானிருந்தது. ஆனாலும்  அடக்கிக் கொண்டார்.  வேண்டாம் ,அவளை அவள் விரும்பும்  சேலையை  வாங்கிக் கொடுத்து விட்டு ,சொல்லலாம் என்று அமைதி கொண்டார்.

"காலை எழுந்ததிலிருந்து பார்க்கிறேன்.  ஒரே சிந்தனையில் இருக்கிறீர்களே! "
என்றாள்  ராசி.

" அதெல்லாம் ஒன்றுமில்லை,........... ஒன்றுமில்லை "  விஷ்ணு பதட்டமானார்.. 

அவரை  பார்த்து ," என்ன என்றைக்குமில்லாமல் ஒரு மாதிரி பதட்டத்துடன்  இருக்கிறார் போல் தெரிகிறார். " நினைத்துக் கொண்டு,

" உடம்பிற்கு ஒன்றுமில்லையே! " கேட்டாள்  ராசி.

" நான் நன்றாகத்தான் இருக்கிறேன் " என்று சொல்லியும்  சற்றே நம்பிக்கையில்லாமலே தான் , கவலயுடன் , தன்  வேலைகளை  பார்க்கச்  சென்றாள்  ராசி.

" அவருக்கு BP  செக் செய்து நாளாகி விட்டதே.டாக்டரிடம், செக் அப்பிற்கு போக வேண்டுமோ ?" சின்ன வருத்தம் எட்டிப் பார்த்தது ராசி மனதில். 

" சிறிது நேரத்திற்கெல்லாம்  ஆபிஸ் கிளம்பினார்  விஷ்ணு. போகும் போது 
," இன்று மாலை  நான்  சீக்கிரம்  வந்து விடுகிறேன்.  மாலை வடபழனி  போய் வருவோம். " என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

"சரி , என்ன திடீர் கரிசனம் இவருக்கு. ? எவ்வளவு நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  இன்றைக்குப் போகலாம் என்கிறாரே!" 
எப்படியோ  இன்றைக்காவது  போகலாம் என்கிறாரே. முருகன் தரிசனம் கிட்டப் போகிறது  நமக்கு என்று மகிழ்ந்து  கொண்டாள் ராசி.

மத்தியானம்  ஒரு மணியிருக்கும். போன்  அலறி ,ராசியின் மதியத் தூக்கத்தைக்  கெடுத்தது.

போனை   காதருகில் கொண்டு போனதும்  "ஹலோ" என்றார் விஷ்ணு.

" இவர் ஏன்  இந்த நேரத்தில் பொன் செய்கிறார்.நானே போன்  செய்தால் கூட  ஆபீஸ் நேரத்தில்  ஏன்  தொல்லை செய்கிறாய்  " என்று தானே எரிந்து விழுவார்.
என்று சற்றே  ஆச்சர்யபட்டாள்  ராசி.

" இன்றைக்கு ஏதாவது உனக்குப் பிடித்த ஸ்வீட் செய்யேன் " என்று விஷ்ணு கேட்க , நன்றாகவே குழம்பினாள்  ராசி.

"என்ன ஆச்சு  இவருக்கு? சென்ற வாரம்  நான்   டாக்டரிடம் " ஹெல்த் செக் " செய்தேனே.அதில் ஏதாவது வில்லங்கமோ? 
எனக்கு ஏதாவது  வியாதி  வந்து முற்றி விட்டதோ? அது தான்  என் மேல் கரிசனமாய் பேசுகிறாரோ?.  எனக்குப் பிடித்த ஸ்வீட் செய் என்கிறாரே. எல்லாமே நார்மல் என்று  டாக்டர் சொன்னதாய் தான் நினைவு. 
என்னையே தானே ஸ்வீட் செய்ய சொல்கிறார். நாம் நினைப்பது போலெல்லாம் இருக்காது" என்று சமாதானபடுத்திக் கொண்டாலும்,
தன்  மேல் சுய பச்சாதாபம் , மேலோங்கியது ராசிக்கு.திரும்பவும் எல்லா மெடிக்கல் ரிபோர்ட்ஸ்  எல்லாம்  எடுத்துப் பார்த்ததில் ,  எல்லாமே  நார்மல் என்று தான் சொல்லியது  ரிப்போர்ட் .

மாலை  ஆறு மனிக்கு ,. " கோவிலுக்கு  போக  ஏன்  கிளம்பவில்லை ?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் விஷ்ணு.

பதிலே சொல்லாமல்  உட்கார்ந்திருந்தாள்  ராசி.
"என்ன யோசனை? கிளம்பி வாயேன் . எத்தனை நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். போய்  முருகனிடம்  நீ வேண்டுமென்கிற நேரம் , பேரம்  பேசி, வேண்டி ,விண்ணப்பித்து விட்டு வா.  நான் உன்னை அவசரப்படுத்தவே  மாட்டேன் .ஆமாம். உன்னை ஸ்வீட் செய்ய சொன்னேனே ? என்ன ஆச்சு ? "என்று விஷ்ணு கேட்க.
(விஷ்ணுவிற்கு மனதில் நம் 'டேமேஜ்' ஆன   பெயர் இன்று  'ரிப்பேர்' செய்யப்பட்டு விட்டது  என்கிற பெருமிதம் தோன்றியது.)

"இல்லை ஒன்றும் செய்ய வில்லை.  அலுப்பாக இருந்தது . அதனால் தான் செய்யவில்லை." ராசி.சொல்ல.

" சரி வா, முருகனை  நீ பேட்டி கண்டு விட்டு  வா. நாம் அப்படியே சரவண பவனில்  சாப்பிட்டு விட்டு  வருவோம்." என்று ராசியை கிளப் பி அழைத்துக் கொண்டு போனார். 

காரில்  ,எப்பொழுதும்  வீணை  காயத்ரியின்   " raga waves '  அலை அடித்துக் கொண்டிருக்கும்.இன்றோ  ராசிக்கு மிகவும் பிடித்தமான  சூலமங்கல  சகோதரிகள்  " காக்க காக்க  " என்று பாடிக் கொண்டிருக்க , ராசிக்கு தன்  ஆரோக்கியத்தின் மேல்  சந்தேகம் வலுத்தது.கோவிலுக்குப் போய்  அர்ச்சனைத்   தட்டு வாங்கிக் கொண்டு , 
இருவரும் உள்ளே சென்றனர். .

"இன்றைக்கு அர்ச்சனை உன் பேரில் தான் " இது விஷ்ணு.

" ஏன் ? என் பெயருக்கு? " குரல் நடுங்கக் ராசி கேட்கவும்,  விஷ்ணு  ,
"நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.எப்பவும் போலவேயில்லையே நீ. 
என் மேல் கோபமோ? உன் பிறந்தநாளை மறந்து விட்டேன் என்று தானே! உனக்கு சஸ்பென்சாக  இருக்கட்டுமே என்று தான்  காலையிலிருந்து வாழ்த்த்து சொல்லவில்லை.. இப்பொழுது சொல்கிறேன்," பிறந்தநாள் வாழ்த்துக்கள் "
என்று சொன்னவுடன், தன்னுடைய  பயம் பொய்யான திருப்தியில், 'கலகல'வென்று  சில்லறையைக் கொட்டியது போல் சிரித்தாள் ராசி. 

" பார்த்தியா  இந்த வருடம்  கரெக்டாக நினைவில் வைத்து உன்னை வாழ்த்திவிட்டேனே . அது மட்டுமில்லை. உனக்குப் பிடித்த புடைவை வேண்டுமானாலும்  வாங்கிக் கொள் ,இன்று" என்று சொல்லவும்.

தெரு என்பதையும் மறந்து ,சிரிப்பை அடக்க மாட்டாமல்,  ராசி சிரிக்க  விஷ்ணு குழம்பினார்.

"என்ன ஆச்சு சொல்?  எதற்கு சிரிக்கிறாய்?" விஷ்ணு கேட்க,

"சிரிக்காமல்  என்ன செய்ய?  மனைவியின் பிறந்த நாளை கரெக்டாக ஒரு மாதம் கழித்துக்  கொண்டாடுகிற கணவர் நீங்களாகத் தான் இருக்க முடியும் . என் பிறந்த நாள் ,போன மாதம் இதே தேதி.. .(என் அர்த்தமற்ற பயம் பொய்  ஆனது ஒரு பெரிய சந்தோசம் என்று  மனதில் நினைத்துக் கொண்டு),  நீங்கள்  இன்று தான் என் பிறந்தநாள் என்று சொல்வதும் எனக்கு சந்தோஷமே! ஏன்  சொல்லுங்கள் பார்க்கலாம்?" ராசி வினவ  ,

விஷ்ணு முகத்தில் லிட்டர் கணக்கில்  அசடு வழிய, தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்க,  ராசியே சொன்னாள் ,
" இன்று கணித மேதை  ராமானுஜம் பிறந்த  நாள்.  அவருடையதைப்போல் என் பிறந்த நாளும் இன்றே   என்று சொன்னதற்காகத் தான் " என்று சொல்லிக் கொண்டே  , ராஜ அலங்காரத்தில்  கம்பீரமாய்  வேலுடன் நின்ற வடிவேலனை  பார்த்து ,இனம் புரியாத நிம்மதியுடன் ,கன்னத்தில் போட்டுக் கொண்டாள் ராசி.

ஆக ,விஷ்ணுவின் கணக்கு  இந்த வருடமும் தப்பு தான்.
ராசிக்கோ, தன்  கணக்கு தப்பானதில்   பெரு மகிழ்ச்சியே!

சரி, ராசிக்கு "Belated Wishes" சொல்லி விட்டு  அந்தத் தம்பதியை , தனிமையில் விட்டு விட்டு  நாமும் நகர்வோம்.

image courtesy--google.

Tuesday 17 December 2013

களி நடனம் கண்டதுண்டா?





அது என்ன களி நடனம்?
 எம்பெருமான் சிவன்  ஆடிய நாட்டியம் தெரியும்.
அதைத் தான் களி நடனம் ,என்று சொல்கிறேனா  என்று  பார்க்கிறீர்களா ?
இல்லை...இல்லை.....

தொடர்ந்து படியுங்கள்......

திருமணமான வருடம். டெல்லி வாசம் . திருவாதிரைத் திருநாள் வந்தது.
ரொம்பவும் ஆர்வத்துடன் இருந்தேன். திருமணத்திற்குப்  பின் , தனியாக ,முதல் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறேன்.  திருவாதிரை  வந்ததோ ஞாயிற்றுக் கிழமை.அதனால்  என்னவருக்கும்  லீவு. தமிழ் நண்பர் ஒருவர் காலை  டிபனிற்கு வருவதாக சொல்ல   முதல் நாளே நான் "களி" செய்ய   ரெடியானேன்.

" இங்கு தினசரி சமையலே ஆட்டம் தான். இதில் களி வேறு செய்யப் போகிறாயா ? "என்று கேட்ட  மனசாட்சியை  " சும்மா இரு  .எல்லாம் எனக்குத் தெரியும் " என்று அடக்கி விட்டு  அரிசி ,பருப்பு வறுத்து பொடித்து வைத்தேன்.

மறு  நாள் டிசெம்பர் மாத டெல்லி குளிரில் , அதிகாலை எழுந்து குளித்து , 'வெடவெட'வென்று  ,நடுங்கிக் கொண்டே  ஸ்டவ்வில்  பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி ,  கொதிக்க வைத்து , அதன் பின்  பொடித்த மாவைக் கொட்டி  கிளறி விட்டு விட்டு ,ஸ்டவ்வைக் குறைத்து விட்டு , மூடி  வைத்தேன்.

இன்னொரு ஸ்டவ்வில்  தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஃபில்டரில்  காபித் தூள்  போட்டு  ,தண்ணீரை அதன் தலையில் கொட்டி விட்டு, என் கணவரை ,
எழுப்பினேன்.பால் வாங்கி வரத் தான். அருகிலேயே  தான்  'Mother Dairy' பூத்.

அவரோ ," இன்றைக்கு  ஞாயிற்றுக் கிழைமை. அதுவும் இந்தக் குளிரில்  என்னால் இத்தனை  சீக்கிரமாக எழுந்திருக்க முடியாது ." என்று சொல்லி விட்டு மீண்டம் ரஜாய்க்குள்  ஒளிந்து கொண்டார்.

முதல் நாள் பாலில்  காபிப் போட்டுக் குடித்தேன். பின், களியை ஒரு கிளறு கிளறலாம்  என்று  போனேன். கிளறப் போனால் லேசில் அதைக் கிளற முடியவில்லை. தொட்டுப் பார்த்தேன். வெந்திருந்த மாதிரி தான் இருந்தது. பின், வெல்லம் போட்டுக்  கிளறி  விட்டு, கொஞ்சம் இறுகியவுடன். , இறக்கி வைத்தேன். அதற்கு அலங்காரமெல்லாம் சரியாகத்  தான் செய்தேன். அதான் ஏலக்காய், முந்திரி..... எல்லாம் போட்டேன்.

அதற்குள் என்னவர் எழுந்து  பால் வாங்கக் கிளம்பினார். போகும் போதே," அட, களி  வாசனைத்  தூக்குகிறதே !"  என்று சொல்ல , எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

வந்து அவரும் குளித்தபின் , பூஜை செய்தோம் .பின்  களியை  எடுத்து  அவரிடம் ஒரு கின்னத்தில்  கொடுக்க அவரும் ஆசையாய்  ஸ்பூனால்  சாப்பிட ஆரம்பிக்க, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு விட்டு, நன்றாகத் தானிருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் வேக வேண்டும்  என்று சொல்ல நானும் வாயில் போட  அத்தனையும்  பாதி தான் வெந்திருந்தது. என்ன செய்வது?

அதற்குள்  "டிங் டாங்"

நண்பர் வந்து விட்டாரே!  அவருக்கு இதைக் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து ,களி  சாப்பிட்ட  ,செய்த , தடயத்தைஎல்லாம் அவசரமாக மறைத்தேன்.

நண்பருக்காக  தோசையும் சட்னியும்  செய்து , சாப்பிடச்  சொன்னோம்.
சாப்பிட்டுக் கொண்டே  , " என்ன மேடம் ? நானும் வரும் வரும் என்று பார்க்கிறேன். களி வாசனை   அடிக்கிறது. ஆனால்  கண்ணில் காண்பிக்க மாட்டேனேன் கிறீர்களே!"என்று  சொல்ல  நான் திரு திரு ........தான் .

அதற்குள்  இவர் (நமக்கு விரோதி வெளியில் இல்லை . புரிந்தது)," களி  கல் மாதிரி இருக்கிறது. உனக்கெதற்கு   அந்தத் தண்டனை. எனக்கு மட்டும் போதும் ." என்று கிண்டலடித்தார்.  அத்தோடு நிறுத்தியிருந்தால்  பரவாயில்லை.
" களி   சாப்பிட வேண்டுமென்றால்  , என் அம்மா செய்து சாப்பிட வேண்டும்.
ஆருத்ரா தரிசனம் என்றால் எங்கள் ஊர்  லால்குடியில் காண வேண்டும்" என்று  இவர் புராணம் ஆரம்பிக்க . அந்த டெல்லிக் குளிரில் ,எழுந்து செய்த ,எனக்கு எப்படி இருந்திருக்கும்  பாருங்கள்.

அன்றே தீர்மானித்து விட்டேன். போர் கால அடிப்படையில்  களி  செய்யக்  கற்றுக் கொள்வதென்று.

சென்னைப் பக்கம் வரும்போது    , ஒரு முறை  களியை  அம்மா வீட்டில் கிண்டிப் பார்த்து  தெரிந்து கொண்டு விட்டேன்.

அதற்குப் பிறகு,  நான் எத்தனை சிரத்தையுடன் செய்தாலும் ,ஒவ்வொரு வருடமும்  " என் அம்மா  செய்யும் களி  போல்  இல்லை " என்று அவர் சொல்வது வாடிக்கையானது.

டெல்லியிலிருந்து கணவருக்கு மாற்றல்.  இப்பொழுது ஊடகங்களில்  ஆலோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறதே,  'Muzaffarnagar'  அதற்கு  அருகிலிருக்கும்  Modinagar என்கிற  சிறிய  ஊர்.

அந்த  வருடம் என் மாமியாரும் ,திருவாதிரை சமயம் அங்கு இருக்க ,அவர் எப்படித் தான் செய்கிறார்  பார்க்கலாம்  என்று காத்திருந்தேன். அப்பொழுது எனக்கு   இரு குழந்தைகள் . இரண்டும் ரெட்டை வால் .

அப்பொழுது என் பெண்ணிற்கு ,நான்கு வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.
பக்கத்து வீட்டில்  ஒரு சர்தார்ஜி குடும்பத்தினர்  இருந்தார்கள்.  வயதான தம்பதியினர்.  என் இரு  குழந்தைகளையும் ' ஆஜா  ஆஜா ' என்று  கூப்பிட்டு அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில்  விளையாட  விட்டு  சந்தோஷப்படுவார்கள்.

திருவாதிரையும் வந்தது. நானும்  ,என் மாமியாரும் ,காலையில்  களியைக்  கிண்ட  ஆரம்பிக்க  , என் பையன் அப்பொழுது மழலையில், " தீதி  தீதி " என்று எதையோ சொல்ல முயற்சிக்க நான் அவனை அடக்கி ,  " தீதியுடன்  போய் விளையாடு " என்று சொல்லி அவன் கையில் ஒரு பிஸ்கெட்டைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

ஐந்து நிமிடத்திற்கெல்லாம்  மீண்டும்  வந்தான் .மீண்டும்  " தீதி  தீதி " என்று உளர  ,என் மாமியாரும் " என்ன என்று தான் பாரேன் " என்று சொல்ல அவன்  என்னை அழைத்துக் கொண்டு போய்   பக்கத்து சர்தார்ஜி வீட்டைக் காட்டி " தீதி தீதி "சொல்ல முயற்சிக்க  , சட்டென்று தோன்றியது. 'பாப்பா எங்கே?'  , உள்ளே திரும்பி  ' பாப்பா பாப்பா  ' என்று
கூப்பிட , உள்ளேயிருந்து ஒரு பதிலைக் காணோம்.

ரஜாயிக்குள்,  ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்து படுக்கையறைக்கு சென்றால்  , அங்குமில்லை.என் கணவரிடம்   'பாப்பாவைக்  காணோம் ". என்று பதறினேன்.  அவரும், மாமியாரும் ,வீடு முழுக்க தேடி விட்டு , அவர் மாடியில் பார்க்கிறேன் என்று படியை நோக்கி ஓட , நானோ ஒன்றும் புரியாத பதட்டத்தில் , என் பையனோ கீறல் விழுந்த ரெக்கார்டாய்  " தீதி தீதி " என்று சொல்லிக் கொண்டிருக்க ,

"அம்மா  அம்மா" என்ற என் பெண்ணின் குரல் , காதுகளில் தேனாய் பாய்ந்தது..

பக்கத்து வீட்டிலிருந்து  , வாய் நிறைய கேக்குடன்  அவர்கள் வீட்டு சமையல் செய்யும் பெண்ணுடன் ,எங்கள் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தாள்  எங்கள் சீமந்த புத்திரி .
பஞ்சாபியில் அந்தப் பெண்  ஏதோ  சொல்ல,எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
வெளி கேட்  திறந்திருக்க  , இவள் பக்கத்து வீட்டிற்கு ஓடிப் போயிருக்க வேண்டும் என்று யூகித்தோம்.
ஆனாலும் ,அந்த ஒரு சில நிமிட பதட்டம் , இன்றும்  நினைத்தால்  பதறும்.

பதட்டம் தீர்ந்ததும் , "களி  அடுப்பிலிருக்கிறதே! மறந்து விட்டோமே "என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினேன்.  போய் பார்த்தால்   களி கருப்பாகி, தீய்ந்து எங்களைப் பார்த்து சிரித்தது.

என் களி  ராசி ,என் மாமியாரிடமும்  ஒட்டிக் கொண்டது போல் ஆனது அந்த வருடம்.

ஒவ்வொரு வருடமும், எப்படியாவது  களி என் கண்ணைக் கட்டி விளையாட்டுக் காட்டும். ஆனானப்பட்ட  லட்டும், மைசூர்பாகும்  நான் சொன்னபடி கேட்கும்.இந்தக் களி  தான்......

நாளைத் திருவாதிரை!  பஞ்சாங்கம் சொல்கிறது. சிவன் ஆடுகிறாரோ இல்லையோ, எங்கள் வீட்டில் களி  ஆட்டம்  நிச்சயம் .

image courtesy---google.




Tuesday 10 December 2013

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

e c



" ராஜி எழுந்திரு  எழுந்திரு " என்னவர் என்னை எழுப்பினார்.

கண்ணை கசக்கிக் கொண்டு மணியைப் பார்த்தேன்.

சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் காலை மணி 7.30 ஆகிவிட்டது  என்பதை  சொல்லியபடி  தொங்கிக்  கொண்டிருந்தது.

அவசரமாக எழுந்து  வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

சூடான பாலில் ,மணக்க மணக்க  டிகாக்ஷன்  விடவும் ,அவர்  டேபிளிற்கு காலை நியுஸ்  பேப்பருடன் வரவும் சரியாக இருந்தது.

" இன்றைக்கு என்ன ஸ்பெஷல் நியுஸ் ? "  கேட்டபடி  இரண்டு டம்ளர் காபியுடன்  அமர்ந்தேன்.

காபியை டபராவில் ஆற்றிக் கொண்டே   "இதைக் கேளேன். உன்னைப் போன்ற  இரவில்  லேசில் தூக்கம் வராத  ஆட்கள்  தான் இதைப் படிக்க வேண்டும் .  " அவர் கூறினார்.

பேப்பரை எட்டிப் பார்த்தேன்.

ஜெர்மனியில்  நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுதியிருந்தது.

ஜெர்மனியில் ஒரு வங்கியில் கிளார்க் ஒருவர்  பணப் பரிமாற்றம்  செய்யும் பணியில் இருந்திருக்கிறார்.

ஒருவர் கணக்கில் இருந்து , இன்னொருவர் கணக்கிற்கு , பணத்தை  மாற்றும்  போது ,அவருக்கு என்ன அலுப்போ தெரியவில்லை.கை 2 என்ற கீயில் இருக்கும் பொது  கொஞ்சம் கண்ணசந்து விட்டார்.

விளைவு  2222222222222222222222222 மில்லியன் யூரோ க்கள்  ஒய்வூதியதாரர் ஒருவருக்கு மாற்றப்பட்டு விட்டது.

அவருடைய உயரதிகாரி கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு  இந்தப்  பணம் ஒய்வூதியதாரர் கணக்கில் போய் உட்கார்ந்து கொண்டது.

எப்படி ஒரு அதிர்ஷ்டம் பாருங்கள் அந்த ஒய்வூதியகாரருக்கு..

ஆனால் அவருடைய அதிர்ஷ்டம்  ரொம்பநேரம்  இல்லை.


வங்கியிலேயே வேறொருவர் இந்தத் தவறைக் கண்டுபிடித்து சரி செய்து  விட்டார்கள்.

ஆனால் அவருடைய மேலதிகாரிக்கு  என்ன துரதிர்ஷ்டமோ?  அந்தத் தவறை கண்டுபிடிக்கத் தவறியதால் அவரை வேலையிலிருந்து தூக்கி விட்டது  .

உயரதிகாரி கோர்ட்டிற்கு சென்று விட்டார். அந்த கேசைப் பற்றிய விவரங்களை  சொல்லியது செய்தி.
 கொஞ்சம் கண்ணசந்ததற்கே , மில்லியன் கணக்கில் , வங்கி தொலைக்க இருந்தது.

ஆனால் ஏன் இப்படி வேலை நேரத்தில் தூங்கினார்?பாவம் இரவுத் தூக்கம்  சரியில்லையோ என்னவோ?


நான் இரவு  தூங்காமல் ,லேட்டாய் எழுந்ததன் விளைவு ,எல்லா வேலையும் லேட்டாகி ,  அன்று மாலை வரை  ,நேரம் இல்லாமல் திண்டாடினேன். அன்றைக்கென்று, ஒரு கெஸ்ட்  வேறு .எல்லா வேலையும்  முடித்து விட்டு படுக்க செல்லும் போது மணி பத்தரையைத் தாண்டி விட்டது.

படுத்ததும்  தூக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டிருந்தேன்.  
அடிக்கடி நினைத்துக் கொள்வேன் ,ஏதாவது  பரீட்சைக்கு  பணம் கட்டிவிட்டு , கையில் பரீட்சைக்கான  புஸ்தகமும் இருந்தால் , ஆனந்தமாய்  தூக்கம் வரும் என்று.

மனம் போன வாரத்திற்கு  ஓடிப் போனது.

சென்ற வாரம் ,பஸ்சில்  மாயவரம் செல்லும் போது ,என்னருகில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார்.  
அமர்ந்தவுடன்  என்னைப் பார்த்து சிநேகமாய் ஒரு புன்னகை. 
பஸ்ஸும்  கிளம்பியது.  
தன மொபைலை  காதருகில்  கொண்டு போய் ," நீ சாப்பிட்டாச்சா?"

"நான் இப்ப தான் கிளம்பி இருக்கிறேன்,"  "அலமாரியின் மேல் தட்டில்  வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொள்." என்று விதம்விதமாய்,  பலரிடம் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டே வந்தார்.  ஒரு சமயத்தில் எனக்குத் தலைவலியே வந்து விடும்  போலிருந்தது.

தீடீரென்று அமைதியானது . என்னவென்று பார்த்தால் 
கொர் .......கொர்  என்ற சன்னமான சத்தம் வந்தது .தூங்க ஆரம்பித்து விட்டார்.. 
அப்பாடி........ஏகாந்தத்தை அனுபவிப்போம் என்று  சாய்ந்து உட்கார்ந்தேன்.
(பிரயாணத்தில் ஏகாந்தம் எனக்கு  பிடித்தமானது)
சரசரவென்று  பின்னோக்கி ஓடி  மறையும்  மரங்களை  ரசித்துக் கொண்டிருக்கும் போது , 
தோளில் ஒரு  பெரிய இடி. 
பக்கத்து சீட் பெண்மணி தான்.
என் தோளை , ஒரு "ஸ்டாண்ட் " ஆக்கி  என் மேல் சாய ஆரம்பித்தார். 
மெதுவாக நகர்ந்தேன்.
 நகர்ந்தால்................... ,அவரும் கூடவே  சாய்ந்தார்.  

இது என்னடா தொல்லை.
மெதுவாக "மாமி "என்று 

எழுப்பி நகரும்படி  சொல்லி விட்டேன். 

" உங்கள் மேல் விழுந்து விட்டேனா ? சாரி "என்றார்.

ஆனாலும்  ஒரு பிரயோசனமும் இல்லை. 

மீண்டும்  ஈசி  சேரானது என் தோள் .ஒன்றும் செய்வதற்கில்லை  என்று விதியை நொந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து ,அவருக்கே என்ன தோன்றியதோ தெரியவில்லை தன்  இரு கைகளை அணை கொடுத்துத்  தூங்க ஆரம்பித்தார். நான்   மீண்டும்  ஏகாந்தத்தை  அனுபவிக்க ஆரம்பித்தேன்.

 " மடார் "  என்றொரு சத்தம். 

நான் மட்டுமில்லை ,முன் சீட்டில் இருந்தவரும் ,திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க என்னருகே இருந்த பெண்மணி தான் தூங்கி முன் சீட்டில் போய் மடார் ,என்று மோதியதோடு இல்லாமல் , தலை  கீழாக வேறு விழ இருந்தார். 

என்னால் சிரிப்பைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சிரிப்பதைப் பார்த்து, என்னை கோபமாய் அந்தப் பெண்மணி முறைக்க , நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். 
இது நினைவில்  வந்து மோதி  என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

தூங்கக் கூடாத நேரத்திலும், இடத்திலும் தூங்கினாலே  வம்பு தான்.நினைத்துக் கொண்டேன்.

எதற்கு இந்த தூக்க ஆராய்ச்சி என்கிறீர்களா?

எனக்குத் தூக்கம்  வருவது , என்பது குதிரைக்கொம்பு ஆனது கொஞ்ச நாளாய்.

பக்கத்து வீட்டு மாமி சொன்னாற்  போல் , ஏலக்காய் போட்டுப் பால்,  தேன் விட்டுப் பால்,   எல்லாம் முயற்சி செய்கிறேன்.

1,2,3, என்று எண்ணுவது,  படுக்கும் முன் குளியல்...... என்று பல வகையில் முயன்றும் , நித்திராதேவி என்னை ஆட்கொள்ள மறுக்கிறாள்.

கந்த சஷ்டிக் கவசம் சொல்லிப் பார்த்தேன்.  அது முடிந்து ,கந்த குரு கவசமும் முடிந்து விடும். தூக்கம் மட்டும்  என் கண்களைத் தழுவுவதில்லை.

என்ன  செய்வது ....................யோசிக்க ஆரம்பிக்க்க......

ஆ.........வ் .........  கொட்டவியாய்   வந்தது.

நான் தூங்கிடறேங்க........இல்லையென்றால்  விடிந்து தூங்க நேரிடும்.
ஓ !நீங்களும் தூங்கப்  போகிறீர்களா. ? அதற்கு முன்பாக ஒரேயொரு பின்னூட்டம் ...ப்ளீஸ்.......
                                        Good Night!
image courtesy----google.

Monday 2 December 2013

' லொக்... லொக்.... லொக்.... '

இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். அப்பொழுது தான், லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, படுத்துக் கண் அசந்திருப்பேன்.

'லொக் , லொக் ' இருமலில் முழித்தேன்.
கொஞ்சம், இளம் சூடாக வெந்நீர் குடித்து விட்டுப் படுத்தேன்.
ஒரு வாரமாக  இந்த உபத்திரவம் .

தூக்கம் லேசில் வருவதாக இல்லை. எங்கெங்கோ ,உலா போன எண்ணங்களை இழுத்து வந்து , கந்த சஷ்டிக் கவசம் சொல்ல வைத்து....... ,' காக்க காக்க ' என்று சொன்னது நினைவிலுள்ளது. அதற்கு மேல் கண்ணை இழுத்து சொருகி கொண்டு போனது.

திரும்பவும் 'லொக் ,லொக் ' வந்து தூக்கத்தைக் கெடுக்கச் சுத்தமாய்த் தூக்கம் தொலைந்தது, எனக்கு மட்டுமல்ல ,வீட்டில் எல்லோருக்கும் தான்.

உட்கார்ந்தால் இருமல் இல்லை , படுத்தால் வந்தது இருமல்.

சரி, நாளை காலை எட்டு மணிக்கே சென்று Dr.Sathya வைப் பார்ப்பது என்று
வீட்டின் பொதுக்குழு, அந்த அகால நேரத்தில் கூடி தீர்மானம் நிறைவேற்றியது..

காலை  எட்டு மணிக்கு ,டானென்று டாக்டர் வீட்டில் நாங்கள் ஆஜர்.
டாகடர் வந்தவுடன் ,என் இருமல் பற்றிச் சொன்னேன்.

"நீங்கள் இங்கு என்னுடன் பேசும் போது ஒரு முறை கூட இருமவில்லையே !"என்று டாக்டர் கேட்க ,

"படுத்தால் தான் வருகிறது "-- இது நான்.

" போன வாரம் உங்களுக்கு வைரல் ஜுரம் வந்ததினால், இருமல்  இருக்கலாம். நான் கொடுத்த cough syrupஐக்  குடித்துப் பாருங்கள். ஒரு வேளைக் குறையலாம். இல்லையென்றால் ஒரு X-Ray எடுத்து விடுங்களேன் "  என்று சொல்ல, டாக்டர் சொன்ன cough syrup விஷயத்தைக் காற்றோடு, பறக்கவிட்டுவிட்டு, எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்து  விடுவோம் என்று Scan World ற்குத்  தம்பதி சமேதராய் ஆஜரானோம்..(பெயர் தான் ஸ்கேன் வேர்ல்ட், எல்லா டெஸ்டும் செய்வார்கள்)

அரைமணி காத்திருந்தோம் .எக்ஸ்ரே எடுக்க ஒரு பெண்மணி வந்து அழைத்துப் போனார்.. எடுத்தும் முடித்தாயிற்று. ஒரு பத்து நிமிடத்தில் ரிப்போர்ட்  கொடுக்கிறோம். இருந்து வாங்கிக் கொண்டு ,செல்லுங்கள் என்று சொல்லக் காத்திருந்தோம்.

காத்திருந்த வேளையில் ,X-Ray அறையிலிருந்து ,வெள்ளைக் கோட்டை ,சரி செய்தபடியே ஒரு பெண் வந்து , பெயர் சொல்லிக் கூப்பிட்டு ,
" என்ன பிராப்ளம் உங்களுக்கு?
எதற்கு எக்ஸ்ரே எடுக்க வந்தீர்கள் ?"
என்று கேட்க ,

"இருமலுக்காக "என்று நான்  சொல்ல, அடுத்து அந்தப் பெண் சரமாரியாய்

 "ஜுரம் இருக்கா? "

"சளி?"

" நடந்தால் நெஞ்சு வலிக்கிறதா?"

 " மூச்சு வாங்குகிறதா ? "

இண்டர்வியு மாதிரி கேள்விகளால் துளைத்தார்.

எல்லாவற்றிற்கும் இல்லை என்று பதில் சொல்லும் போதே  "எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுக் கொண்டு போய் டைப் அடித்து ரிப்போர்ட் என்று கொடுக்கப் போகிறார்களோ "   நினைத்தேன்.

கொஞ்ச நேரத்தில் ரிப்போர்ட் வந்தது .
ரிப்போர்ட்  என்ன தான் எழுதியிருக்கிறது என்று பார்த்தேன் .
ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்கு வந்து மதியத்திற்காக வடைப் போட்டு மோர்குழம்பும், உசிலியையும் செய்து வைத்து விட்டு, லேப்டாப்பும், ரிபோர்ட்டுமாக உட்கார்ந்தேன்.

ரிப்போர்ட்டில் எழுதியிருந்ததை அப்படியே எழுத்துப் பிசகாமல் googleஇல் டைப் அடித்து search பட்டனை அமுக்கினேன்.

ஒரு பெரிய லிஸ்ட் என் முன்னே.
அதில் ஏதோ ஒன்றைக் கிளிக் செய்ய ," symptoms, treatment, life span ," என்று என்னென்னமோ சொல்ல, கொஞ்சமாய்ப் பீதி கிளம்பியது.

Life Span ஆ................பயத்தில் உறைந்தேன்.
சரி ,இந்த சைட், வேண்டாம் என்று வேறு பல சைட்டுகளையும் போய் பார்த்ததில், முதலில் கிடைத்த தகவல் தான், எல்லாவற்றிலும் இருக்க உடைந்து போனேன். அழுகை எட்டிப் பார்த்தது. சமாளித்தேன்.

மெதுவாக ,என்னைத் தேற்றிக் கொண்டு , மாலை டாக்டரிடமே கேட்டுக் கொள்ளலாம் ,என்று சமாதானமாக முயன்று ,தோற்றுப் போனேன்.

என் அழுகை ,கணவருக்குத் தெரியாமல் இருக்க , படாத பாடு பட்டேன்.

சாப்பிட உட்கார்ந்தோம்.

" ஓ ,இன்றைக்கு உனக்குப் பிடித்த மெனுவா? "

"ம் " ஒற்றை எழுத்தில் பதில் சொன்னேன்.

"மோர் குழம்பில் ஒரு உப்பு குறைச்சலாக இருக்கிறது "

' ஆமாம் '
(இன்னும் எத்தனை நாளைக்கு உங்களுக்குச் சமைக்கப் போகிறேனோ நினைத்தேன்.)

ஒன்றும் இருக்காது. சாப்பிட்ட பின் திரும்பவும் செக் செய்வோம் என்று நினைத்துக் கொண்டே,மோர்குழம்புக் கரண்டியை எடுக்க ,அது கைதவறிக் கீழே விழ அப்பொழுது தான் என்னை என் கணவர் கவனிக்க ,
"என்ன இது கண்ணில் நீர்? அழுகிறயா?" என்று கேட்டது தான்  தாமதம் ,ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன். அவருக்கும்  ஒன்றும்  புரியவில்லை.

மெதுவாக என் அச்சத்தைச் சொல்ல. அவரும் ,முதலில் மிரண்டு தான் போனார். பிறகு மாலை டாக்டரிடம்  கேட்டுக் கொள்ளலாம் என்று சொன்னதோடு , முதல் வேலையாக ,  லேப்டாப்பை எடுத்து அவர் கஸ்டடியில் வைத்துக் கொண்டார்.

மாலை ஐந்து மணி . திரும்பவும் டாக்டர் வீட்டில் ஆஜர். டாகடர் எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் படித்து விட்டு , "நல்ல வேளை . ஒன்றுமில்லை " ஒரு மருந்தும் வேண்டாம் என்று சொல்ல நான் ஆச்சர்யப் பட்டு , Googleஇல் பார்த்ததைச் சொல்ல ,' நீங்கள் சொல்வது போல் இந்த ரிப்போர்ட்டில் ஒன்றுமில்லை. இதிலுள்ள டெக்னிகல் வார்த்தையை Google செய்து பார்த்திருக்கிறீர்கள். நிறைய பேருக்கு இந்த மாதிரி இருப்பது  சகஜம். ஆனால் அதனால் பெரிய பாதிப்பெல்லாம்  இல்லை.அதைப்  பற்றி  நீங்கள் மறந்து விடலாம் "என்று அழுத்தமாக  சொல்லியும், நான் சமாதானமாகாமல் தயங்கி நின்றேன்.

"உங்களுக்குத் திருப்தியாகவில்லைஎன்றால்" ஒரு chest specialist பெயரைச் சொல்லி "அவரிடம் expert opinion வாங்கிவிடுங்களேன்" என்று சொல்ல
அடுத்து ,அவர் கிளினிக் வாசலில் தேவுடு காத்தோம்.

வயதான அந்த டாக்டர் , பொறுமையாக என் கதையெல்லாம் கேட்டு விட்டு ,
"உங்களை யார்  இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னது? கூகுளில் மெடிக்கல் விஷயங்களை , டாகடர்கள் படித்தாலே குழம்புகிறோம். உங்களைப் போன்றவர்கள் சும்மா இல்லாமல் முதலில் Dr. Googleஐ பார்த்து விட்டுத் தான்
எங்களிடமே வருகிறீர்கள்" என்று ஆதங்கப் பட்டுக் கொண்டே  என்னை செக் செய்தார். ,"எனக்கும் உங்கள் எக்ஸ்ரே ரிபோர்டில் ஒன்றும் தவறாக இல்லை. நீங்கள் இவ்வளவு பயப்படுவதாக இருப்பதால் ஒரு ஸ்கேன் செய்து பார்த்தால் நீங்கள் திருப்தியாகி விடுவீர்கள்" என்று சொல்ல

மறு நாள் மீண்டும் ஸ்கேன் செண்டர் , நீல கலர் டிரெஸ்ஸைப்  போட்டு விட்டு   ஒரு பெரிய வளைவுக்குள் அனுப்பி வெளியே இழுத்து விட்டார்கள்.
மீண்டும் ரிப்போர்ட் .அதைத்  திறந்து பார்ப்பதில்லை என்கிற உறுதியுடன் ,
நெருப்பின் மேல் நின்ற வண்ணமாய் ,மாலை வரை இருந்து ,பிறகு டாக்டரிடம் போனால்,

"என்ன google செய்தாகி விட்டதா? என்ன வியாதி என்று உங்கள் Dr.Google சொல்கிறார்?" என்று சிரித்துக் கொண்டே ரிப்போர்டை வாங்கிப் படித்து விட்டு
ரிப்போர்ட்டில்  Impression  ---- Normal  ,என்பதை ,என்னிடம் காட்ட , எனக்கு
'அப்பாடா.........' என்றிருக்க ,என் கணவர்  முகத்தில் தெரிந்த நிம்மதியை  வார்த்தைகளால்  சொல்ல முடியாது.

" ஆமாம். முந்தாநாள் இருமல் இருந்தது. இப்ப இரண்டு நாட்களாய் ......? " என்று டாக்டர்  கேட்க......

" இரண்டு நாட்களாய் நான் எங்கே தூங்கினேன். மரண பயத்திலல்லவா இருந்தேன் " என்று நான் சொல்ல .

(ஆனாலும் ஜாஸ்தி இருமவில்லையே ......மனதில் ஓடியது." ஷார்ட் விஸிட் "செய்திருந்த வைரல்  ஜுரம் தான் காரணமோ? )

" எதற்கும் இந்த cough syrup எழுதுகிறேன். தேவைப்பட்டால் இரவு படுக்கும் முன் இரண்டு ஸ்பூன் குடியுங்கள் "என்று அட்வைஸ் செய்ய ,

ஐம்பது ரூபாய்க்கு அந்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினோம்.
நாளை  அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சனை  செய்து விடுவது என்று தீர்மானித்தோம்.

"இன்டர்நெட் தான் நம் விரல் நுனியில் இருக்கிறதே !  "என்கிற காரணத்தாலேயே கண்டதையும் ,படித்துக் குழம்பித் தவித்து , எட்டாயிரம் வரை செலவழித்த பின் தான்  .  "இனிமேல் எந்த ரிப்போர்ட்டையும் , அது என் பேரன் பேத்தி "பிராக்ரஸ் ரிப்போர்ட்டாகவே  "இருந்தாலும் நான் படிக்கப் போவதில்லை.  அப்படியே  எதையாவது படித்துத்  தொலைத்தாலும் , அதைப் பற்றிய விசாரணையை  கூகுளிடம்  ஆரம்பிக்கப் போவதில்லை " என்கிற ஞானம் உதித்தது.

போதும் இந்த அவஸ்தை .
பெரிய நிம்மதியுடன் விஜய் டிவி மகா பாரதத்தை  பார்க்க உட்கார்ந்தேன்.

"எல்லாம் சரி. உன் இருமல் என்னதான் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?"
இருமல் ,அதற்குப் பிறகு ,படிப்படியாய் குறைந்து போய் ,இப்பொழுது ஒன்றுமேயில்லை . வாங்கின cough syrup சீல் கூட உடைபடாமல்,  அலமாரியிலிருந்து ,என்னைப் பார்த்து ,சிரித்துக் கொண்டிருக்கிறது.

image courtesy---google...

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்