Tuesday 25 November 2014

ஹள்ளி மனேயும், டைப்ரைட்டரும்.

சென்ற முறை பெங்களூர்  சென்ற போது , நண்பரைப் பார்க்க நேர்ந்தது. அவருடன் பேசிக்கொண்டே  நடந்தோம். பரஸ்பர நல விசாரணை.. நான் சற்றுப் பின்னால் நடந்து கொண்டிருக்க கணவரும்,நண்பரும் முன்னால் பேசிக்கொண்டே  நடத்து கொண்டிருந்தார்கள்.

சட்டென்று நண்பர்," வருகிறீர்களா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்  " என்று சொல்லவும்,  எங்களுக்கும் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்ற

 நன்பரிடமே " இங்கே  நல்ல ஹோட்டல்  ஒன்றிற்குப் போகலாமே " என்று  சொல்லவும்.

நண்பர்," ஹள்ளி  மனே " போகலாமா ? "


picture courtesy--google.


" ஏதோ ஒன்று போகலாம் வா " என் கணவர் சொல்ல

" ஏதோ ஒன்று இல்லை . மிகவும் அருமையாக இருக்கும். கிராமத்து  செட்டப்பில்  இருக்கும் "  என்று ஹைப் கொடுத்தார் நண்பர்.

 "அதென்ன கிராமத்து செட்டப் ? " நான் வினவ

"வாங்க மேடம், வந்துப் பாருங்க " என்று சொல்லிக் கொண்டே " ஹள்ளி மனே"க்குள் அழைத்துச் சென்றார்.

" அட... கிராமத்து  வீடு போலிருக்கிறதே "  என்று நான் சொல்லவும்,

"அதே தான் மேடம், "ஹள்ளி மனே " என்றால் கிராமத்து வீடு "என்றார்.

அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள்  தாங்கிப் பிடிக்கும் கூரை,  உடகார்ந்து சாப்பிட  பென்ச் ,. வாழையிலையில்    சாப்பாடு என்று  கிராமத்து  வீட்டை  நினைவுப்படுத்தத்  தவறவில்லை.

" எரடு  கா...............பி..... " என்று சர்வர் கத்தி ஆர்டர்  கொடுக்காதது தான் பாக்கி.

யோசித்துப் பார்த்தேன். கிராமம் விட்டு நகரம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாய்  தாவிக்கொண்டிருக்க, நகருக்குள், கிராமத்தைக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.  ஓடு வேய்ந்தக்  கூரை, அங்கங்கே கோலம்,  சுவற்றின் பெயிண்ட் கலர், எல்லாமே  மனதைக் கொள்ளையடித்தது.

இவ்வளவு அருமையான இந்த ஹோட்டலில் , விலையும் சற்றே  அதிகம் என்று சொன்னார் நண்பர். ஆனால் கூட்டம்  அலை மோதுகிறது.

வேடிக்கை தான்  இது. கிராமம் விட்டு ஆசை , ஆசையாய் நகரத்திற்குக் குடிப் பெயர்ந்து   வந்து ,  மீண்டும்  கிராமத்து  விருந்தை  அதிகப் பணம் கொடுத்து,உண்கிறோம். ஆக இதல்லாம் பழைய விஷயங்கள் என்று எதையும் நாம்  ஒதுக்கி வைக்க முடியாது. எல்லோரும் மறந்திருக்கும் போது யாரோ ஒருவர் அதையே மீண்டும் புதுப் பொலிவோடு கொண்டு வந்து விடுகிறார்.  " Old is Gold " தானே.

நிறைய விஷயங்கள் இப்படித்தான் . சாதத்தை  வடித்துக்  கொண்டிருந்த நம்மை குக்கரில் சாதம் வைக்க சொன்னார்கள் . திரும்பவும் இப்பொழுது சாதம் வடிப்பது தான் நல்லது என்கிறார்கள்.

உணவு விஷயத்தில் தான் இப்படியென்றால், கம்ப்யுட்டர் படுத்தும் பாடு இருக்கிறதே........  மெயில் என்று ஒன்று வந்தாலும் வந்தது , அலுவலகக் கடிதங்கள், எல்லாமே மெயிலில் சென்றுக் கொண்டிருக்கின்றன.
என்ன வேகம்! என்னத் துல்லியம்! தவறுகள் இல்லாதக் கடிதங்கள் அசத்துகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குக்  கொள்ளைக் காரர்களும்  மிக அதிகம். மெயிலைக் கொள்ளையடித்து ( Hackers ) சென்று கொண்டிருக்கிறார்கள். அலுவலகக் கடிதங்களில் இருக்கும் ரகசியத் தன்மை பெருமளவில்  பாதிக்கப் பட்டிருப்பதை யாருமே மறுக்க மடியாது.

அப்படியானால் ,  கடு மந்தண  ( Strictly Confidential )அலுவலகக் கடிதங்களை  என்ன செய்யலாம் என்கிறாய்? மீண்டும் கையால் எழுத வேண்டும் என்கிறாயா என்று கேட்காதீர்கள். வேண்டாமே...... டைப்ரைட்டரைத் தூசித்  தட்டினால் போதுமே.

மீண்டும் டைப்ரைட்டரா....... இதென்ன கம்ப்யுட்டருக்கு வந்த சோதனை என்கிறீர்களா?

தினசரியில் வந்த செய்தி  இதைத் தான் சொல்கிறது. ரஷ்யா, ஜெர்மனி  ஆகிய நாடுகளில், மீண்டும்  அலுவலகங்களில், confidential கடிதங்களை  டைப் அடிக்க டைப்ரைட்டரைக்  கொண்டு வரலாமா என்று யோசிக்கிறார்களாம் . அமெரிக்காவில்  அந்தக் கஷ்டம் கூட இல்லை. அவர்கள் டைப்ரைட்டரை மொத்தமாக  ஒழித்துக் கட்டவில்லையாம். ஒரு ஓரமாக  கவர் போட்டு மூடி வைத்திருக்கிரர்களாம் .
 தூசித்  தட்டி உபயோகப்படுத்த ஆரம்பித்தது விடுவார்கள்.




எல்லாம் சரி..... இந்தியாவில் தான் டைப்ரைட்டர் மெஷின் தயாரிப்பே பரவலாக நின்று விட்டது போல்  தெரிகிறதே. நாம்  என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அலுவலகங்கள் இதைப் பற்றி யோசிக்கும் முன் .......வாருங்கள்.  OLX இல்  பார்த்துக் கொண்டிருப்போம். பழைய மெஷின் கிடைத்தால் வாங்கி வைப்போம்.
 யாரும் மெஷின் தயாரிப்பை ஆரம்பிப்பதற்கு முன்,  மெஷினை விற்று லாபம் பெறுவோம்..

" Old is Gold " ஹள்ளி மனேக்கு மட்டும் தானா  என்ன ?டைப்ரைட்டருக்கும் தான்.




Sunday 16 November 2014

பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லாருக்கே !

நாங்கள் டெல்லியில் இருந்த சமயத்தில்  , வருடத்திற்கு ஒரு முறை சென்னை வருவது வழக்கம். அதுவும் பதினைந்து நாள் அல்லது இருபது நாட்கள் விடுமுறையிலேயே   வருவோம். அப்பொழுது  ஒரு வருடத்தில் விட்டுப் போன  சுக, துக்க விசாரணைகள் , உறவினர், நண்பர்கள் வீடு என்று  மூச்சு முட்ட சுற்றிக் கொண்டிருப்போம். பதினைந்து நாளில்  ஒரு சுற்று எல்லோரையும் பார்க்க வேண்டுமென்றால் ........ஃபிளாஷ்  விசிட்டாகத் தான் இருக்கும்.

அந்த மாதிரி ஒரு சென்னை விஜயத்தின்  போது  , நண்பர் சுந்தர் வீட்டிற்கு போக நேர்ந்தது. மாலை  நான்கு மணிக்கு சென்றிருப்போம்.  சுந்தரின் வீட்டிற்குப் போகாமல்  நாங்கள் டெல்லித் திரும்பவே மாட்டோம். கணவரின் ஆப்த நண்பர் ஆதலால், எங்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் அவர் வீட்டிற்கு செல்வோம்.ஒரேயொரு குறை அவரிடம், என்னவென்றால், அவரும் சரி, அவர் மனைவியும் சரி, பேச ஆரம்பித்தால்  ஓயவே மாட்டார்கள். இவர்களுக்கு என்று  எங்கிருந்து தான்  விஷயம் கிடைக்குமோ தெரியாது. அவ்வளவு  பேசுவார்கள். நாம் உம்  ...உம்..... என்று சொல்ல மட்டுமே அனுமதி கிடைக்கும். மற்றபடி மிகவும் நல்லவர்கள் .


விஷயத்திற்கு வருகிறேன். மாலை  அவர் வீட்டிற்கு நானும் என்கணவரும் சென்ற வேளையில்  சுந்தர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம். உள்ளே பார்த்து, "  பாலா யார் வந்திருக்கிறார்கள் பார் "  என்று சொல்லவும் , சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அவர் மனைவி பாலா,கையை டவலில் துடைத்துக் கொண்டே " அடடே ......நீங்களா  வாங்க... வாங்க,  எப்படியிருக்கீங்க " என்று கேட்டுக் கொண்டே வந்தமர்ந்தார்.

முதலில் பரஸ்பரம் குசல விசாரிப்புகள்.எங்கள் குழந்தைகள் பற்றி அவர்களும்  விசாரித்தனர். பிறகு அவர்கள் பெண், பிள்ளை எங்கே என்று கேட்டது தான் தாமதம் , அவர்கள் இருவரும் மாறி மாறி பெண், பிள்ளைப் புராணங்கள், சுந்தருக்கு வந்த உடல் நலக் குறைவு, பாலாவின்  முதுகு வலி என்று தொடர்ந்து ,அல்லோபதி டாக்டர், சித்தா, ஆயுர்வேதம்  என்று தொடர் ஓட்டமாக அவர்கள் இருவரின் பேச்சும் ஓடிக்............... கொண்டே இருந்தது.

பாலாவிற்குத் திடீரென்று நினைவிற்கு வந்தது, வந்ததிலிருந்து எங்களுக்கு சாப்பிட ஒன்றுமே கொடுக்கவில்லை என்பது.  " இருங்கள் உங்களுக்கு டிபன் எடுத்து வருகிறேன் " என்று சொல்லி விட்டு  வேக வேகமாக  உள்ளே சென்று ,இரண்டுத் தட்டுகளில் டிபன்  எடுத்துக் கொண்டு வந்தார் .  கருப்பாக ,கேசரி பதத்தில் தட்டில்  இருக்க, நான் இது என்ன என்று கேட்கவும் கேழ்வரகு அல்வா என்றுப் பெருமையாக பதில் வந்தது பாலாவிடமிருந்து.

"ராகி உடம்பிற்கு நல்லது என்று நான் அடிக்கடி செய்யும் ஸ்வீட் இது "  என்று பாலா மேலும் 'ஹைப்' கொடுக்க

மெதுவாக ஒருஸ்பூனால் எடுத்து வாயில் வைத்தேன்.அல்வாவும் இல்லை. ஒன்றும் இல்லை , ராகியும் வெல்லமும் சேர்ந்த களி  என்பது புரிந்தது.  வாயிலிருந்து உள்ளே  இறங்க மறுத்த  அல்வாவை (அப்படித் தானே பாலா சொன்னார் )   மெதுவாக உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

அப்போழுதுப் பார்த்து  என் கணவர் கேட்டார்,' " மிகவும் அருமையாக இருக்கிறது. எப்படி செய்தீர்கள் " என்றுக் கேட்கவும் பாலா  செய்முறையை சொன்னதோடு இல்லாமல் இன்னும் ஒரு கரண்டி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு  போதும், போதும் என்றும் கேட்காமல் பரிமாறவும், கணவரைப் பார்த்து  முறைத்தேன். பாவம் அவர் மேலும் ஒரு கரண்டி  களி.....இல்லையில்லை, அல்வாவை,   எதிர்பார்க்கவில்லை என்பதுப் புரிந்தது. சும்மா நண்பரின் முகதாக்ஷண்யத்திற்கு  சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார். என்னையும் மாட்டி விட்டு விட்டார் .
கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தோம்.

அப்பாடி ....... தண்டனை ஒருவழியாய் முடிந்தது என்றுப் பெருமூச்சு விட்டேன்.
டம்ளர் தண்ணீரைக் குடித்து விட்டு கிளம்ப , சேரை விட்டு எழுந்தேன். பாலா அதற்குள், " இதென்ன , டிபன் சாப்பிட்டு விட்டு ஒன்றும் குடிக்காமல்  போவார்களா?. இருங்கள்  ராகி மால்ட் போட்டுக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லவும்,   வேறு வழியில்லாமல்  மீண்டும் சோபாவில் கணவரருகே வந்தமர்ந்தேன்.அடுத்தத் தண்டணையை எதிர்பார்த்து .

பாலா இரண்டு தம்ளர்களில் ஆவிப் பறக்க ஆரஞ்சு கலரில்  பானம் கொண்டு வந்தார்.  ராகி மால்ட்டை  வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. ராகிக் களி  வேறு  வயிற்றை  என்னவோ செய்துக் கொண்டிருக்க, அதற்கு மேலேயே ராகி மால்ட்டா . சரி. விதியை வெல்ல முடியாதே .குடித்து வைப்போம் என்று ஆற்ற ஆரம்பித்தேன். வேறென்னவெல்லாம் ராகியில் இவர் செய்வாரோ என்று யோசித்தபடி .

பால் சேர்க்காமல் ராகி மால்ட் கலந்திருக்கிறார்  போலிருக்கிறது. ராகி மால்ட் வாசனையே பிடிக்கவில்லை. பால் வேறில்லை. இதை எப்படிக் குடிப்பது  ...யோசித்துக் கொண்டே மெதுவாக ஆற்றினேன். நல்ல கொதிக்கும் வெந்நீரில் சர்க்கரையைத் தாராளமாகப் போட்டு , ஆரஞ்சு கலரில் வாசனைப் பொடி போட்டு எங்களிடம் நீட்டி விட்டு ,  பாலா விட்ட இடத்திலிருந்து மகளின் வீணை  வாசிப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் .

" காற்றினிலே வரும் கீதம் எங்கள் கீதா வாசித்தால் போதும், நிஜமாகவே மயக்கும்" என்று பிரதாபத்தை ஆரம்பிக்கவும்....

 நான் மெதுவாக ஆரஞ்சு ராகி மால்ட்டை  டம்ளரில் ஊற்றி  குடித்துக் கொண்டே ,உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன் .

இருவரும் என்னைப் பார்த்தே  பேசிக் கொண்டிருக்க, இவரோ , ஜாலியாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டே  ராகி மால்ட்டை ஆற்றிக் கொண்டிருந்தார்.(அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்) மெதுவாக அரை டம்ளர் உள்ளே போய் விட்டது. இன்னும் அரை டம்ளர் தானே  என்று நினைத்துக் கொண்டே டபராவைப் பார்த்தால்  ராகி மால்ட் குறைந்த மாதிரியே தெரியவில்லை. டபரா தளும்ப தளும்ப  ராகி மால்ட்  என்னைப் பார்த்து  சிரித்துக் கொண்டிருந்தது.

இது எப்படி......? அட்சயப் பாத்திரம் மாதிரி  வந்துக் கொண்டேயிருக்கிறது.
ஒரு வேளை  டம்ளர் பெரிசோ........ என்கிற சந்தேகம் வர, டம்ளரைப் பார்த்தேன். ரொம்ப உயரம் ஒன்றுமில்லை. அப்படிஎன்றால்.......

காற்றினிலே வரும் கீதம் பற்றிய பிரசங்கத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கும்  போது என் கணவர் செய்த வேலை இது என்று அவர் முகத்தைப் பார்த்ததும் புரிந்தது.

நான் டம்ளரில் ஊற்றிக் குடிக்க, குடிக்க இவர் தன்  ராகி மால்ட்டை என் டபராவில்  நிரப்பிக் கொண்டே வந்திருக்கிறார். அது எனக்குப் புரிபட, உடனே,  டபராவை  என் கையிலேயே வைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பிறகும் அசரவில்லையே என்னவர். கையில் வைத்திருந்தால்.......... என்னால் ஒன்றும் செய்ய முடியாதா? என்பது போல்  திரும்பவும் பாலாவும், சுந்தரும், கவனம் சிதறிய நேரத்தில் என் டபராவை  நிறைத்து விட்டார்.முழி பிதுங்க இரண்டு டம்ளர் ராகி மால்ட்டை  வயிற்றில் ஊற்றி வைத்தேன். தண்ணீர் டாங்க்  போல்  வயிறு  இருந்தது . எந்த நேரத்திலும்  வாந்தி வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.

அவர் டம்ளரோ காலி. ஒரே ஒரு வாய் தான்  குடித்திருப்பார் என்று நினைக்கிறேன். இல்லை அதுவும் இல்லையோ.........

" சீக்கிரம் குடி . கிளம்பு வேண்டும் " என்று  என்னை வேறு அவசரப்படுத்தினார் . விளக்கெண்ணெய்  குடிப்பது போல் குடித்து விட்டு , " தப்பித்தோம், பிழைத்தோம்"  என்று  விடைப் பெற்றோம்.

வருவேன், வருவேன் என்று பயம் காட்டிக் கொண்டிருந்த வாந்தி, அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பிய ஐந்தாவது  நிமிடத்தில்  பஸ் ஸ்டாண்டில்  வெளியே  வந்து விட்டது.

பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர்," 'பிள்ளைதாச்சியா? அதான் வாந்தி எடுக்கிறாரா ?பார்த்து அழைத்துக் கொண்டு போங்கள்."  என்று கணவருக்கு, அறிவுரை ஒன்றை இலவசமாக வழங்கவும் , இவர் என்ன சொல்கிறார் என்று அவரைப் பார்த்தேன். அவரோ பொங்கி வரும் சிரிப்பை அடக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டு விட்டார்.

மெதுவாக வீடு வந்து சேர்ந்து , நல்ல சுடச்சுட வெந்நீர் குடித்து விட்டு  படுத்தேன். காலை உடம்பு சரியாகி விட்டது.

இது நடந்து இருபது வருடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றுக் காலை எப்பொழுதும் போல் சுடச்சுட  காபியை டேபிளில் வைத்து விட்டு நகர்ந்தேன்.  அவரோ,  பேப்பரில் சுவாரஸ்யமாக ஆழ்ந்து விட்டதில் , காபி ஆறி  அவலானது . நான்  " காபியை இன்னும் குடிக்கவில்லையா ? என்று நினைவுப்படுத்தவும்  , காபியை கையில் எடுத்துக் கொண்டு , என்னிடம் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி.

 " இதற்குப் பேர் காபியா?" என்று.

"ஓ.....உங்களுக்கு என் காபிப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. பரவாயில்லை..
காபி நன்றாக இல்லையென்றால்  குடிக்க வேண்டாம். இனி மேல் உங்களுக்கு ராகி மால்ட்  தருகிறேன். ".

" ராகி மால்ட்டா ? ... " அவர் புரியாமல் விழிக்க

" ஆமாம் .. அன்றோரு நாள்.......  ஒரு மாலை வேளையில்........... பாலா போட்ட ராகி மால்ட் மாதிரி....  நினைவிற்கு வந்து விட்டதா "என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட சொன்னேன்.

" அய்யய்யோ ....  ராகிமால்ட் வேண்டவே வேண்டாம்.  உன் காபிப்  போல் வேறு ஒரு ஒரு பானம் உண்டா ?" என்று புகழ ஆரம்பிக்க

 நான் கேட்டேன்," திரும்ப சொல்லுங்கள்.........  என் காபி எப்படி இருக்கிறது?"

 தலையை பலமாக ஆட்டியபடி," பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு " என்று சொன்னார்.

ஆனாலும் எப்படியாவது இவரை ஒரு டம்ளர்  ராகி மால்ட்டை குடிக்க வைக்க, சபதமே போட்டிருக்கிறேன்.
அது நடக்குமா..........

என் சபதத்தில்  வெற்றி பெற  வாழ்த்தி விட்டுப் போங்களேன்.

image courtesy--google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்