அன்று நல்ல தூக்கத்திலிருந்தேன்.........,யாரோ கதவைத் தட்டுவது போல் சத்தம் கேட்க, உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம் ..........பிராண்டுவது போலிருந்தது . ரஜாய்க்குள்ளிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி , கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 6 ஐத் தாண்டி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தது கடிகார முள். விடிந்து விட்டதே கட்டிலை விட்டு இறங்க, செருப்பைத் துழாவினேன்.போட்டுக் கொண்டேன். "பிப்ரவரியிலும் இப்படிக் குளிருகிறதே .காலைக் கீழே வைக்க முடியவில்லையே." நினைத்துக் கொண்டேன்.
அப்பொழுது நாங்கள் இருந்தது 'மோதி நகரில்'. பிரதம் வேட்பாளர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் , நாங்கள் இருந்த மோதி நகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது "மீரட்' நகர் அருகிலிருக்கும் ஊர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் , திரு.ஆர்னப் கோஸ்வாமி போன்ற டிவி மக்கள் வாயில் விழுந்து புரளும் முசாபர் நகர் அருகிலிருக்கும் ஊர்.
விஷயத்திற்கு வருகிறேன்.
ஸ்வெட்டரை சரி செய்து கொண்டே கதவருகில் போவதற்குள் திரும்பவும் யாரோ பிராண்டுவது போலிருக்க, இப்பொழுது இன்னும் பலமாக , கோபமாக கதவை உடைப்பது போல் சத்தம் வர,தாழ்ப்பாள் உடைத்துப் பிய்த்துக் கொண்டு வர " கோன் ஹை " கேட்டுக் கொண்டே வர, கதவுத் தானாகத் திறக்கவும், என் மாமியாரும்" யாரு "என்று கேட்டுக் கொண்டே வரவும் சரியாயிருந்தது.
கதவுத் திறந்தவுடன், முதலில் ஒரு நாற்றத்தை உணர்ந்தேன். பார்த்தால் வரி வரியாக கோடுகளுடன் புலி ஒன்று நின்றுகொண்டிருக்க .
நான் , புலி .........புலி .... ஆ..................என்று கத்த ஆரம்பிக்க, கத்தல் பாதியிலேயே தொண்டையுள் மாட்டிக் கொள்ள , என் மாமியாரோ அதிர்ச்சியில் அருகிலிருக்கும் சேரில் மயக்கமாய் விழ, என்ன செய்வது என்று நான் முழிக்க, புலி சுதாரித்துக் கொண்டு உள்ளே சர சரவென்று தன் வாலை ஸ்டைலாக ஆட்டியவாறு உள்ளே நுழைந்தது. உறுமல் சத்தம் இல்லாமல் பூனை போல் நுழைந்தது.
தூக்கம் இன்னும் முழுதுமாக கலையாமல் , என் கணவர் ' அங்கே கிச்சனில் என்ன செய்கிறாய்? என்ன சத்தம்? என்னமோ வாசனை அடிக்குதே! ' என்று சொல்ல, நானோ புலியைப் பார்த்த அதிர்ச்சியில் சிலையாய்..............
திரும்பவும் பதட்டத்துடன் அவர் " ராஜி ராஜி " என்று குரல் கொடுக்க , உடனே புலி என்னமோ அவர் ,அதைத் தான் கூப்பிட்டது போல், குரல் வந்த திசையை நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்தது.
அதற்குள் LKG படித்துக் கொண்டிருந்த என் பையன் குதித்தெழுந்து , " தீதி தீதி டைகர் பாரு " என்று குரல் கொடுக்க UKG படிக்கும் என் பெண்ணும் " ஹையா , டைகர் நம்மைப் பார்க்க வந்திருக்குடா" என்று குதிக்க எனக்கு சகலமும் அடங்கிப் போனது.என் பெண்ணும், பையனும் பேசுவதைக் கேட்டு , அவரும் ரஜாயை விட்டுத் தலையை நீட்டிப் பார்க்க , செய்வதறியாமல் முழிக்க , எனக்கோ இந்தக் குழந்தைகள் இருவரும் கீழே இறங்கி விடப் போகிறதே என்று பதைபதைப்பு.
புலி இரண்டு குழந்தைகளையும் பார்த்து விட்டு, டைனிங் டேபிளை நோக்கி அசைந்தது. என்னவர் அதற்குள் இந்த இரண்டு குழந்தைகளையும், இழுத்து ரஜாய்க்குள் திணித்து விட்டார். நான் சுவரோடு சுவராக, என் மாமியாரோ மயக்கமாய் சேரில்.புலியோ டைனிங் டேபிளில் குதித்து ஏறியது. நேற்றிரவு சாப்பிட்டு விட்டு மிச்சமிருந்த சப்பாத்தி , கொஞ்சமாய் ராஜ்மா எல்லாவற்றையும் கீழே தள்ளி விட்டு மெதுவாக முகர்ந்து பார்த்து விட்டு என்னை நோக்கி ஒரு பார்வைப் பார்த்தது.(இதெல்லாம் ஒரு சமையலா? என்பது போல் தான்.)
பின் மெதுவாக ஹாலில் நின்றிருந்த என் பக்கம் பார்வை ஓட்டிக் கொண்டே , என்னை நோக்கி அடியெடுத்து வைத்ததது.ஒரு உறுமல் உறுமியது பாருங்கள்.இப்ப நினைத்தாலும் உடம்பல்லாம் நடுங்குகிறது.
பின்வீட்டில் இருப்பவர்கள் இப்பொழுது தான் எட்டிப் பார்த்தார்கள்." பாக்....பாக்..." என்று அவர்கள் கத்த எனக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. அவர்கள் போலீசுக்கு சொல்லி விடுவார்கள் என்கிற ஆறுதல் தான்.செல்போன், இல்லாத நாட்கள் அவை. சாதரன லேண்ட்லைன் போன் கூட கிடையாது அந்தக் காலத்தில். எங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் வெளியாட்கள் யாராவது மனம் வைத்தால் தான் முடியும்.
உறுமலுடன் வந்தப் புலி வாயைத் திறந்து தன் பற்கள் எல்லாம் சிங்கப் பல்(?) உட்பட ஒரு முறைக் காட்டி பயமுறுத்தி விட்டு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தது. அப்பாடி.... வெளியே போய் விடும் என்று மெதுவாக மூச்சு விட ஆரம்பித்தேன். என் நினைப்பில் ஒரு வண்டி மண். நேராக போய் வாயிற்படியில், வாசற்படியின் குறுக்காக, ஏதோ எங்கள் வளர்ப்பு நாய் போல் ,குறுக்கே படுத்துக் கொண்டு தலையை சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டது.இப்போதைக்கு இங்கிருந்து நான் நகரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது.
எங்கள் வீட்டின் முன் கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் நல்ல தூரத்தில் நின்று கொண்டு பார்ப்பதோடு இல்லாமல், அதை பூர்... பூர்... என்று சீண்ட வேறு ஆரம்பித்து விட்டார்கள். எப்படி இதை விரட்டுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், குழந்தைகள் மெதுவாக எட்டிப் பார்க்க , நானோ புலியின் கைக்கெட்டிய தூரத்தில்., சுவரோடு சுவராக..
என் கணவர் ,என்னை அசையாமலிருக்க சைகை செய்து பூனை மாதிரி நடந்து சென்று கிச்சனில் கீழே வைத்திருந்த பக்கெட் அடுப்பு. ( வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கரியடுப்பு) பற்ற வைத்திருப்பது, புகை வாசனையில் புரிய ஆரம்பித்தது. கிச்சனில் இருக்கும் புகைபோக்கி க்கருகில் அதை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நேரம் வீடு முழுவதும் புகையாயிருக்குமெ. " ஏன் ஸ்டவ் என்னாயிற்று? " என்று கேட்காதீர்கள். கெரொசின் தட்டுப் பாடு காலம் அது. கொய்லா அடுப்பு தான் சமையலுக்கு.. கொஞ்ச நேரத்தில் அடுப்பு பிடிக்க ஆரம்பித்து கரியெல்லாம் ' கண கண ' வென்று நல்ல சிவப்பாக ஜொலிக்க , அந்த பக்கெட்டை எடுத்து வந்து மெதுவாக(இருக்கும் தைரியத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு) புலியின் முன் வைக்க , அது எழுந்து ஒரே ஓட்டமாய் , வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று பேரை ஒரு தள்ளு தள்ளி விட்டு ஓடிப் போய்விட்டது. நாலு கால் பாய்ச்சல் என்பதைக் கன்கூடாகப் பார்த்தேன்.நெருப்பைக் கண்டால் மிருகங்களுக்கு பயம் என்கிற உபாயத்தின் மூலம் உயிர் பிழைத்தோம். இங்கே பிடித்த ஓடடத்தை "மீரட்"டில் தான் போய் திரும்பிப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன்.(அரை மணி நேரப் பிரயாண தூரம் தான்).
அட...... பாருங்கள் அந்தப் புலி மீரட்டில் தான் மிரட்டிக் கொண்டிருக்கிறதாம்.
நேற்றைய செய்தித் தாளில் செய்தி வந்திருக்கிறது பாருங்கள்.....
செய்தியைப படித்தவுடன் ," மீரட் "டிற்கு வெகு அருகாமையில் ஒரு காலத்தில் வசித்திருக்கிறோமே என்று நினைத்துப் பார்த்தேன். கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு புலியை விருந்தினராக்கி மகிழ்ந்தேன். அவ்வளவே!
SAVE OUR TIGERS. SAVE OUR NATION'S PRIDE
image courtesy---google.