Sunday 30 June 2013

காபி with விஷ்ணு






சமையலா......என் கணவருக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாது. நான் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. என்று பெருமை பட சொல்லும்
 மனைவிகள் நிறைய.


இப்படி தான் ராசியும்  அடிக்கடி சொல்வாள். "என்னவருக்கு சமையலறைக்கு  எந்தப் பக்கம் போக வேண்டும் என்று கூடத் தெரியாது " என்று பெருமையடிப்பாள் .


இத்தனை நாள்  ,'மேடம் 'இப்படியே பெருமையில் ஓட்டிக் கொண்டிருந்தாள் .

விஷ்ணு ,ஒருமுறை காபி போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது .
அவர் பட்ட பாடு  இருக்கிறதே ..........படியுங்கள்.....

படிக்க  படிக்க காபி போடுவதில்  இருக்கும் சிரமங்கள் எல்லாம் உங்களுக்குப்  புரியும்..

ஒரு நாள் காலையில்  எழுந்திருக்கும் போது லேசான தலைவலியாயிருந்தது ராசிக்கு. அந்த வலியுடனே காபி ,டிபன், மத்தியான  சாப்பாடு எல்லாம் விஷ்ணுவிற்கு கொடுத்தனுப்பி விட்டு, இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டுப்  போய் படுத்தவள் தான்  . மாலை மணி ஐந்திற்கு விஷ்ணு ஆபிஸிலிருந்து வரும் போது தான் எழுந்தாள் .
ஊரெல்லாம் பரவியிருக்கும்  ஃளு  ஜுரம்   ராசியையும்  ' விஸிட் 'அடிக்க  வந்திருப்பது.., அவள்  முகத்திலே  தெரிந்தது .

" காலை ஓரளவு உடம்பு சரியாகிவிடும் "என்ற நினைப்பில்  ஒரு லாரி  மண்ணையள்ளிப் போட்டது,  இறங்காத ஜுரம்.

காலை  மணி 7.30 க்கு  தான் முழிப்பே வந்தது ராசிக்கு.
" இவர் என்ன செய்கிறார் '"  பார்த்தாள்  ராசி.

நியுஸ் பேப்பரில்  தலை அமுங்கியிருந்தது.

" கொஞ்சம் காபி குடித்தால் தேவலாம் " முனகினாள் ராசி.
( அவள் நாவில் சனி  "டென்ட் ' அடித்திருந்தார்  போலிருக்கிறது)

' காபி கேட்கிறாளே " நினைத்தார் விஷ்ணு.

காபி போடுவது  என்ன பெரிய  விஷயம்.  (இது............இது தான்...இந்த நினைப்பு  தான்   அவர்  காபிக்கு உலையாய் வந்தது. )    " இதோ போட்டுக் கொண்டு வருகிறேன்." என்று  சொல்லிக் கொண்டே  லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு  போர் வீரனைப் போல் சென்றார்.,அடுக்களைக்குள்.
எங்கிருந்து ஆரம்பிப்பது..............?
ஸ்டார்டிங்  ட்ரபிள் .

முதலில் எது ?
டிகாக்ஷன் போடுவதா? பால் காய்ச்சுவதா?
மாபெரும் சந்தேகம்.
ஆரம்பமே  இப்படி  தன்னம்பிக்கையில்லாமல் இருந்தால்  எப்படி....யோசித்துக் கொண்டே,  டிகாக்ஷனில் ஆரம்பிப்போம் என்ற மிக முக்கியமான  முடிவையெடுத்தார்.

முதலில் அதற்குத் தேவையான சாமான்களை எடுத்தார்.
தண்ணீர் ஒரு பாத்திரத்தில்..
காபிபொடி .....எங்கே ...? தேட ஆரம்பித்தார்.
" எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறாள்  ராட்சசி "   செல்லமாக திட்டிக் கொண்டே தேடினார்.

அப்பாடி..........சாம்பார்  பொடி பாட்டிலுக்குப் பின்னே ஒளிந்து கொண்டிருந்த காபிப் பொடி பாட்டிலை ஒரு வழியாய்   கண்டு பிடித்தார்.

3 ஸ்பூனா?..... 4 ஸ்பூனா ?......
 யோசித்து  ஒரு வழியாக  " குன்ஸா "வாக போடத் தீர்மானித்தார்.
அவசரத்திற்கு ஸ்பூன் கிடைக்காததால்  ஒரு கரண்டியை " சிங்க் "லிருந்து  அரை குறையாய் கழுவி  பாட்டிலுக்குள்  ஒரு ஈராக் ....இல்லை ...இல்லை....ஈரக்  கரண்டியால்   எடுத்தார்.
எடுத்தபின் தான் எங்கே போடுவது  என்ற நினைப்பு வந்தது.

கீழே குனிந்து காபி பில்டரை எடுக்கப் போனார்.

இதென்ன? கும்பகோணம் அடுக்கு கேள்விப் பட்டிருக்கிறோம் . காபி பில்டரில் கூடவா
எடுக்கப் போனவர் கையில் பட்டு எல்லாம் உருண்டோடியது. காபி பில்டரின் டாப்பும், பாட்டமும்  உறவு முறித்துக் கொண்டன.

காபி பில்டரை ஜோடி சேர்ப்பதற்குள்  இவர் ஜோடி   குரல் கொடுத்தாள்.
" இன்னுமா காபி போடலை? "

"இதோ....  இரண்டு நிமிஷம்....... கொண்டு வருகிறேன்."  என்றார் விஷ்ணு.

ஒரு வழியாக ஜோடி சேர்த்த பில்டரில் காபி பொடியைப்  போட்டு தண்ணீரை எடுத்து கேசில் வைத்து  தண்ணீர்  கொதிக்க காத்துக்  கொண்டிருந்தார்.

"ட்ரிங்,..... ட்ரிங் "

மீண்டும்  "ட்ரிங்,.... ட்ரிங்".
சமையலறையிலிருந்து  வேகமாகப்  போய் போனை எடுத்தார். போனில் அவர் நண்பர் அப்பாசாமி.

 "இன்னைக்கு நியுஸ்  படித்தீர்களா விஷ்ணு?"
தேர்தல் கூட்டணி  பக்கம்  பேச்சுத் திரும்பியது.

சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது உரையாடல்.

சமயலறையிலிருந்து ஒரே கமறும் வாசனை . விஷ்ணுவிற்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது ' கேஸ் 'ல் தண்ணீர் வைத்தது. விழுந்தடித்து ஓடினார்.

அதற்குள் எல்லாமே கைமீறிப் போய்விட்டது  தெரிந்தது.பாத்திரம் தீய்ந்து போயிருந்தது.

அடுக்களையில் ஏதோ  ஏ .பி. நாகராஜன்  பட ஷூட்டிங்க்   நடப்பது போலிருந்தது . ஒரே புகை மண்டலம்.

சாவித்திரி ,"கோமாதா......எங்கள் குலமாதா......என்ற பாட்டு பாடிக் கொண்டே வருவார்   போலிருந்தது  .

அதற்குள் ராசி வேறு ," ஒரு காபி போடுவதற்குள்  என்ன பாடு இது? " என்ற புலம்பல்.

ஜன்னலைத் திறந்து எல்லா புகையையும் விரட்டு ,விரட்டு. என்று விரட்டி விட்டு.
மீண்டும் " கேசில் "வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு
மணியை நிமிர்ந்து பார்த்தார் விஷ்ணு.
 மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தண்ணீரை பில்டரில்  ஊற்றி விட்டு  ஹாலிற்கு வந்து ஆபிசிற்கு போன் செய்து ,   அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டார்.

பின்னே.... காபி போட வேண்டாமா? அதற்குத் தான்.

டிகாக்ஷண்  இறங்கியிருக்கும். அதை வைத்து காபி கலந்து விட்டு,  குளிக்கப் போகலாம் என்று அடுக்களைக்கு சென்றார்.

டிகாக்ஷன் இறங்கியிருந்தது. ஆனால் சமையல் மேடையில் தான்.  இவர் பில்டரை சரியாக ஃ பிட்  செய்யவில்லையா? இல்லை ஜோடி மாற்றம் செய்து விட்டாரா என்பது  புலனாகவில்லை.

சரி, முதலில் டிகாக்ஷ்ணாய் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கு(?) அணைகட்ட தீர்மானித்து, பிடி துணியை தேடினார்.
கண்டு பிடித்தார் .
போட்டு துடைத்தார்.

பிடிதுணி என்று தாம் போட்டது"ராசியின்  பிளவுஸ்" என்பது பிறகு தான் அவருக்குப் புரிந்தது.

" இருக்கு தனக்கு மண்டகப்படி "என்று புரிந்தது விஷ்ணுவிற்கு. " என் பிளவுஸ் உங்களுக்குப்   பிடி துணியா " என்று பொசுக்கி விடுவாள். என்ன செய்வது?  சட்டென்று அந்தத் துணியை அழகாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு   குப்பைத் தொட்டியில் போட்டார்.
(" கொலைக்கான  துப்பை"  மறைப்பது போல்).

சரி.'  காபி என்னாச்சு"
மீண்டும் ராசியின் கேள்வி .அவளால் முடியவில்லை. இல்லையென்றால்
இவ்வளவு நேரம் சமயலறையில் ஆஜர் ஆகியிருப்பாள்.

"இருக்கும் டிகாக்ஷனில் முதலில் ராசியின்  வாயை அடைத்து விடுவோம்" என்று பிரிட்ஜில் இருந்த பாலைஎடுத்து காய்ச்ச அது  விஷ்ணுவை அன்னப் பறவை என்று நினைத்ததோ என்னவோ , தண்ணீரும் பாலுமாய்  கட்டி கட்டியாக பிரிந்து போனது.

இப்ப என்ன செய்வது? யோசித்தார்.
அதற்குள்
" டிங் டாங் "

போய் கதவைத் திறந்தார் விஷ்ணு.

'வாசலில் கொரியர். கையெழுத்து போட்டு வாங்கிவிட்டு  கதவை மூடப் போன விஷ்ணுவின் கண்களில் பட்டது   பால் பை.
ஓ .........இன்றைய பாலை எடுக்கவேயில்லையோ?பிரிந்தது பழைய பாலா ..... நினைத்துக் கொண்டே ,
புது பாலை  காய்ச்சி  டிகாக்ஷனை எடுத்து  ஊற்றப் போனார். மெதுவாக சாய்த்தார்..........இன்னும் கொஞ்சம்..இன்னும் கொஞ்சம்.... என்று கவிழ்த்தே விட்டார்.
ம்ஹூம்.......ஒன்றுமே  வரவில்லை . எல்லாம் தான் மேடையில்
ஆறாகப் பிரவாகமெடுத்து ஓடி விட்டதே !

இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை.

சூடான பாலில் பூஸ்ட்  கலந்து  ராசிக்கு கொடுத்து விட்டு , குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் " உனக்கு உடம்பிற்கு நல்லது என்று  பூஸ்ட் போட்டிருக்கிறேன் "என்று கூறினார்.

ராசி குடித்து விட்டு , அவர் தடுத்தும் கேட்காமல் " இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நானே  போய்  மற்ற வேலைகளை  பார்க்கிறேன்  " என்று போனாள்  ராசி."

வெகுநேரமாகியும் வரவில்லை ராசி. (மயங்கி விழுந்து விட்டாளோ ?)
பின்னே குருக்ஷேற்ற யுத்தம் நடந்த ரண பூமி போலல்லவா இருக்கிறது   சமையல் மேடை?

"காபி  போடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை" புரிந்தது விஷ்ணுவிற்கு .
ராசியின் காபியை  என்னவெல்லாம் பேர் சொல்லி கிண்டலடித்திருக்கிறோம்.
சுடு தண்ணீர், கழனித் தண்ணீர் , பானகம்......என்றெல்லாம் சொல்லியிருக்கிறோமே.

"அதற்கு சரியான தண்டனை  தான்."  நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

ஒன்றை விஷ்ணு மட்டுமல்ல,   நாமெல்லோரும் கூட  மறந்து விட்டோமே?
ஆனால் ,ராசி.........தேடிக் கொண்டிருக்கிறாள்  அவளுடைய   மயில் கழுத்து கலர் பட்டுப்புடவைக்கான பிளவுசை.

ராசியிடம் நான் சொல்ல மாட்டேன் அவள் பிளவுஸ் பிடிதுணியான ரகசியத்தை.
உஷ்..........நீங்களும் யாரும் சொல்லி விடாதீர்கள்.
குடும்பத்தில் நம்மால் குழப்பம் வர வேண்டாம். .





image courtesy---google.


Sunday 23 June 2013

தயிர் புராணம்.







" உங்கள்  சாம்பார் மட்டும் எப்படி இவ்வளவு  சுவையாக வாசனையாக
இருக்கிறது. உங்கள் சாம்பார் பொடி ரகசியத்தை சொல்வீர்களா? "

"உங்கள் ரசத்திற்காகவே இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடப்

போகிறேன் "

இவையெல்லாம் என் தோழிகளும்,  உறவினர்களும்  என்

சமையலைப் பற்றிப் புகழ்ந்து  கூறும் வார்த்தைகள்.
Note: 
வீட்டிலுள்ளவர்கள்  என் சமையலை  இப்படிப் புகழ்வதில்லை.
வெளியில் இருப்பவர்கள் கண்களுக்கு  சமையலில்  
புலியாகத தெரியும் நான்  வீட்டில் இருப்பவர்களுக்கு எலியாகக் கூட
தெரியவில்லை என்பது தான் உண்மை.

அதிலும் என் கணவரிடம் கேட்டால் ,"ராஜி மிகவும் நன்றாக

வெந்நீரும், தயிரும்  செய்வாள் " என்று  நக்கலடிப்பார்.

ஆனால் நான் நிஜமாகவே தயிர் உறைய வைப்பதற்கு  திண்டாடின கதை

இருக்கிறதே  .......அது பெரிய ராமாயணம்.அவருக்கு  நிஜமாகவே
தயிரை கண்ணில் காட்டாமல்  திண்டாட விட்டிருக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பு.

ஸ்டாப்..... ஸ்டாப் .... பல வருடங்கள் என்று தான் சொன்னேன். உடனே

A.D. யா  B.C யா என்று கேட்காதீர்கள்.
இளம் தம்பதிகள் நாங்கள்.

இப்பொழுது தான் சமீபத்தில்  மணமானவர்கள்.

எங்களுக்குத் திருமணமாகி ஒரு முப்பத்தாறு வருடம் தான் ஆகிறது.
இளமையின் வாயிற்படியில் பேத்தி பேரன்களுடன்  நிற்கிறோம்.

சரி. தயிர் விஷயத்திற்கு வருகிறேன்.

எங்களுக்குத் திருமணமான புதிது.
டில்லி வாசம்.

புதுக் குடித்தனம்.சமையல், வீட்டிற்கு சாமான்கள் வாங்குவது என்று 

எல்லாவற்றிலும் trial and error தான்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

ஒரு முறை மாதாந்திர சாமான் லிஸ்ட் எழுதும்போது , பாயசத்திற்கு சேமியா கால் கிலோ, ஏலக்காய் கால் கிலோ(தவறுதலாக எல்லாம் இல்லை) என்று லிஸ்ட் எழுதி கடையில் கொடுத்து விட்டேன்.
மளிகைக் கடைக்காரரே  அதை " எடிட் "  செய்து இரண்டு ருபாய்க்கு
ஏலக்காய் போதும் என்று  கொடுத்தார் என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன் .

இப்படித் தப்பும் தவறுமாகத தான் போய் கொண்டிருந்தது எல்லாம்...

ஆனாலும், அது ஒரு கனாக்காலம் தான்
இந்த ரேஞ்சில் போய்கொண்டிருந்த குடித்தனத்திற்கு, குளிர்  காலம்
வந்து  இன்னும் கொஞ்சம்  குழப்பியது.

முதல் மழை போல் ,முதல் குளிர் எங்களுக்கு டெல்லியில்.


எல்லோரும்  ஸ்வெட்டர் ,ஷால் எல்லாம் போட்டுக் கொண்டு  " ரோஜா "

படத்தில் வரும் தீவிரவாதி போல்  நடமாடிக் கொண்டிருந்ததை
பார்த்து அதிசயத்தேன். 
ம்ம்ம்......நானும்  அப்படி த்தான் .

அந்தக் குளிரில் எதை சமைத்தாலும்  சட்டெனக் குளிர்ந்து போய்
விடும்.
ஒரு நாள் எப்பொழுதும் போல் சாதத்திற்கு தயிர் போட்டுக்
கொள்ளலாம் என்று எடுத்தால் ,....பாலாகவே இருந்தது.  முதல்
நாளிரவு உறை ஊற்றின ஞாபகம்  இருந்தது.உறை  ஊற்றினேனா  இல்லையா .....
என்கிற சந்தேகம்......

அடுத்த நாளும் இப்படியே ஆயிற்று. அதற்கு அடுத்த நாளும் அப்படியே....
ஊரே பிரிட்ஜ் மாதிரி இருக்கிறதே, அது தான் காரணமோ என்று குழம்பினேன்.

என்னவரோ ," தயிராவாது சரியாக செய்வாய் என்று எதிர் பார்த்தேன்.

அதுவம் இல்லையா..." என்று உதட்டை பிதுக்க..

எனக்கு மானப் பிரச்சினையானது. எப்படியாவது தயிர்  செய்யக்

கற்றுக் கொள்ளத் தீர்மானித்தேன். அதுவும் போர்க்கால அடிப்படையில்.

தயிர் செய்யக்.... கற்றுக் கொள்ள வேண்டுமா .. என்ன? 
 நினைப்பீர்கள் எல்லோரும்.
 தொடர்ந்து படியுங்கள் .தயிர் செய்வது எவ்வளவு
கஷ்டம் என்று உங்களுக்கே புரியும்.

என் தயிர்  பாடம்  இதோ .....

எதிர் வீட்டில் இருந்த பஞ்சாபி  அம்மாவிடம் ஆரம்பித்தேன்.

உடைந்த ஹிந்தியில் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அவரும் ," ஆமாம் குளிரில் தயிர் உறைவது கொஞ்சம் கஷ்டம் தான் ."

(" Note this point என்னவரே  " என்று சொல்லியாயிற்று. ஆனால்
அவர் காதில் வாங்கினால்  தானே.....'எனக்குத் தெரியாது 'என்று நினைக்கும் என் வாழ்க்கை துணைவரிடம் ....என்னத்தை சொல்ல ...)

அந்த அம்மா சொன்ன மாதிரி மறு நாள் உறை ஊற்றி , ஸ்டவ்

மேலேயே  வைத்து விட்டேன்.

மறு நாள் ஆசையாக எடுத்தால் ," நீ ஸ்டவ் மேல் வைத்து

விட்டால்....நான் தயிராகி விடுவேனா  என்ன? " என்று என்னைப்
பார்த்து  சிரித்தது  பால்.

வேறு என்ன வழி? யோசனை பலமானது.

இப்பொழுது போல் போன்  வசதியில்லையே,சென்னையிலிருக்கும் அம்மாவைத் தொடர்பு கொள்ள. கடிதப்போக்குவரத்தோ  ஒரு வாரத்திற்கு மேல் ஓடி விடும்.
என்று யோசித்துக் கொண்டே , அஜ்மல்கான் ரோடில் நடக்கும் போது கண்ணில் தென்பட்டது  ஸ்வீட் கடை.

நாவில் நீர் ஊறியது .  ஸ்வீட்டைப் பார்த்து அல்ல .கல்லாவிற்கருகில்

பெரிய மண் சட்டியில்  இருந்த ,கட்டித் தயிரைப் பார்த்து தான்.

அட.....தயிர் ....என்று  காணாததைக் கண்டது மாதிரி (உண்மையில்
காணாது தானே) கத்தினேன்.

கத்தியால் வெட்டும் போல் இருந்த தயிரை  வாங்கும் போது    வேறு ஒரு யோசனை  தோன்றியது. 


ஒரு வேளை  ,மண் சட்டியில் உறை 
ஊற்றினால் தயிர் கட்டியாக உறையுமோ  என்று சின்ன ஆசை வந்தது.

அதை நடைமுறைப் படுத்த  மண் சட்டியைத் தேடிப் பிடித்து வாங்கிக்

கொடுத்தார் என் கணவர்.

வாங்கிய அன்றே ,பாலைக் காய்ச்சி உறை ஊற்றின பின்,  ஆடாமல்

அசையாமல்  (இது என் கணவருக்கு , அவர்  ஆபிசில் கிடைத்த டிப்ஸ்)
சர்வ ஜாக்கிரதியாக , மெதுவாக ,கீழே வைத்தேன். தயிர் உறைந்தால்,
பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு
படுத்தேன்.

மறு நாள் காலை முதல் வேலையாக ,மண் சட்டி மூடியைத் திறந்து,

மெதுவாக.... ஒரு ஸ்புனால்  தொட்டேன். தயிரை  டிஸ்டர்ப் செய்யக்
கூடாதல்லவா?

" லொடக் " என்று ஸ்பூன்  உள்ளே போனது. " நான் இன்னும்

பாலாகத் தான் இருக்கிறேன் " என்று சொல்லாமல் சொல்லியது
பால்.

சரி. இதற்கு மேல் என்ன செய்வது? வெறுத்து தான் போனேன்.


அப்படி,இப்படி, கடையில் தயிர் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தோம்.

இப்போழுது போல், sealed packet இல்  தயிர் கிடைக்காது.

அதனால் தான் வீட்டில் தயிருக்காக பிரம்மப் பிரயத்தனம்  எடுத்துக்

கொண்டேன்.

அப்பொழுது ஒரு நாள் இவர் நண்பர் வீட்டிற்கு  சாப்பிடக் கூப்பிட,

அங்கு சென்றோம். ஆசையாய் காத்திருந்தேன்.... தயிருக்காக.

வந்தது அந்த நொடியும்.

என் தட்டில் கட்டித் தயிர்.ஆசையாய் சாப்பிட்டுக் கொண்டே.....
என் கேள்விகள் ஸ்டார்ட்....

என்ன பால் வாங்குகிறீர்கள்?

இது வாங்கிய தயிரா? இல்லை வீட்டிலேயே உறை ஊற்றியதா?
கண்டிப்பாக அந்தம்மா குழம்பிபோயிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு
தயிர் டிப்ஸ் கிடைத்தது.

அந்தம்மா சொன்னபடி  பாலை உறை ஊற்றி கோதுமைமாவு டின்னிற்குள் 
டைட்டாக  மூடி வைத்தேன்.

ம்க்கும்.....அதுவும் எனக்கு வேலை செய்யவில்லை.

என்னை சுற்றி எல்லோருமே வேண்டுமென்றே  நான் தயிர்
சாப்பிடக் கூடாதென்று  சதி வலை பின்னுகிறார்களோ? அதுதான் தயிர் ரகசியத்தை யாருமே சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் போல் என் கணவரோ

"கவலையே பாடாதே  . இனிமேல் தயிர் என்று பேப்பரில் எழுதிக்
கொடு பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடுகிறேன் "  என்று சொன்ன
போது அழுகை வராதது தான் குறை..

யார் என்ன சொன்னாலும் அந்த  யோசனையை நடைமுறைப் படுத்த

தவறியதேயில்லை.
ஆனால் எதுவும் சரியாக வரவில்லை.
கடைகாரர் அருளினால் தான் தயிர்  சாப்பிட்டோம்.

இந்த தயிர் கூத்தும ஒரு நாள் முடிவிற்கு வந்தது.

ஆமாம் .ஒரு நாள் தயிர் உறைந்தே விட்டது.(ஒருபக்கம் ஆச்சர்யம்.ஒரு பக்கம் அளவிட முடியாத சந்தோஷம்  எனக்கு)
காரணம் குளிர் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.
அன்று நான் தயிருக்கு விழா எடுக்காதது தான்  பாக்கி.

இப்பொழுது உங்களுக்குப் புரிந்ததா? தயிர் செய்வது எவ்வளவு
கஷ்டம்  என்று .....ஒத்துக் கொள்கிறீர்கள் தானே!

இப்பொழுது  மூன்று வருடத்திற்கு முன்பாக மீண்டும் டில்லி வாசம் .

மீண்டும் "தயிர் புராணமா"? என்று சலித்துக் கொள்ள வேண்டாம்.

Nestle,Amul,Mother Dairy என்று பலரின் உதவியுடன்  தயிர்
சாப்பிட்டோம்.
வாழ்க்கைமுறை எவ்வளவு  சுலபமானது பார்த்தீர்களா?

image courtesy--google.

Sunday 16 June 2013

தாயுமானவன்




கடவுளால்   எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் தான்  தாயைப் படைத்தார் என்று சொல்வதுண்டு.
ஆனால் தந்தையை மறந்து விடுகிறோம் நாம் சில சமயங்களில்.

" unsung heroes " மாதிரி  ஆகிவிடுகிரார்களோ ? பல வீடுகளில் .

ஒரு குழந்தை பிறக்கும் போது  தான்  தாயும் பிறக்கிறாள். 
ஆனால்  மனைவி கர்ப்பமானதுமே  இளம் கணவன் தந்தை பொறுப்பை ஆசையாய் ஏற்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

அங்கே ஆரம்பிக்கிறது ஒரு தந்தையின் கடமை. தன மனைவியை குழந்தை போல் பாவித்து , பேணிப் பாதுகாத்து அவள் விருப்பங்களை  நிறைவேற்றுவதில் ஆரம்பிக்கிறது அவன் கடமை.

சுமப்பதை ஒரு இன்பமகவே கருதுகிறான் . குழந்தை பிறந்த பிறகு ,தாய்க்கோ
ஒரே  சீராட்டலும்,கவனிப்பும்  தான் ஆனால் தந்தையை யாருமே கண்டு கொள்வதில்லை. ஆனால் அதற்காக அவன் தன்  கடமைகளிலிருந்து  பின்வாங்குவதில்லை..

குழந்தை வளர வளர அவனுடைய  பொறுப்பும் அதிகமாகிறது.
சான்றோனாக்கும்  கடமையை    நிறைவேற்ற  ஒரு அப்பா படும் கஷ்டம் இருக்கிறதே.........

LKG அப்ளிகேஷன் வாங்குவதற்கே  நடு இரவில் "Q" வில் நிற்பதில்  ஆரபிக்கிறது.அங்கிருந்து  ,கராத்தே கிளாஸ் ,பாட்டு கிளாஸ் , கம்ப் யுட்டர் கிளாஸ் .......  கல்லூரி ,என்று தொடரும்  பணி .
தாயுடன் கூடவே  பயணிக்கிறான் .
தன மகனின்/மகளின்  வெற்றியில் .....ஆஹா.....அவன்கொள்ளும் பெருமிதம் இருக்கிறதே........சொல்லி  மாளாது  .
 மகன்/மகள் ஒரு வேளையில் அமரும் வரை தொடர்ந்து ,பின் திருமணத்தில்  முடிவது போல் தோன்றும்......

இந்தப் பொருளாதாரத் தேவைகளுக்காக  தன்னையே மெழுகுவத்தியாக்கும்
தந்தைகள்  ஹீரோக்கள் தான்.

ஆனால் தன மகனிற்கு மட்டும் அவன் ஹீரோ அல்ல பெரும்பாலான வீடுகளில்.
உண்மை தானே.........

தாயில்லாத வீடுகளில் அவன் வேலை இரட்டிப்பாகி  பருவ வயதில் நிற்கும்  மகளை  கட்டிக் காப்பாற்றி  மண  முடிக்கும்  மாபெரும்  பொறுப்பைத் தனியொருவனாக  செய்து  தாயுமாகிறான் 


எல்லா கடமைகளையும் முடித்து  விட்டு ...அப்பாடி......என்று அப்பா திரும்பிப் பார்க்கும் போது,தலை மட்டும் வெள்ளை ஆவதில்லை, கண்ணிலும் வெள்ளெழுத்து விழுந்து விடுகிறது.

எத்தனை  கடமைகள் ...........
சுமப்பதே சுகம்  என்று  குடும்பத்திற்காக மெழுகாய் உருகும்  தாயுமானவனாய்
இருக்கும்  அப்பாக்களுக்கு  என் நன்றி கலந்த வணக்கம்.

தந்தையர் தின வழ்த்துக்கள் !!!!!!!!! 

image courtesy----google




Monday 10 June 2013

பிரிந்தோம் .......சந்தித்தோம்.

என்  ஆருயிர்  தோழியை பிரிய நேர்ந்ததில்  மிகவும் வருந்தினேன்.எப்போதடா திரும்பவும் பார்க்கப் போகிறேன் என்றிருந்தது. ஒரு பத்து பதினைந்து  நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் ஒன்று சேர்ந்தோம்.

நீ பிரிந்தால் எனக்கென்ன ?  சேர்ந்தால் எனக்கென்ன?  என்று முணுமுணுப்பது கேட்கிறது.

நாங்கள் சேர்ந்தால் தானே , பதிவுலகம் வாயிலாக நான்  உங்களை எல்லாம் இம்சிக்க முடியும் !

இப்பொழுது  புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

நீங்கள் ஊகித்தது  சரியே.பிரிந்தது  என்  கரிய நிற  தோழி  மடிக்கணினி   தான்.

" இவ்வளவு  சாமான்களையும்  எடுத்த செல்ல வேண்டுமென்றால் உனக்கென தனி விமானம் விட வேண்டியது தான் "

" உக்கும் ......"
 சரி , என்னை சொல்வது  இருக்கட்டும். உங்கள் மருந்துகளை எதில் வச்சிருக்கீங்க ? "

" ஸ்ரீ கிருஷ்ணா மைசூர்   பாகு   நாளை வாங்கி  இந்த  ஹேன்ட்  லக்கேஜில் வைத்துக் கொள்ளலாம் ம்".  

" சரி சரி  இப்போது  எனக்கு ஒரு காபி கிடைக்குமா ? "
காபி குடித்து விட்டு  பேக் செய்ய வேண்டுமே தவிர  லேப்டாப்  பக்கம் போனாயானால் தெரியும் சேதி என்று " மிரட்டிய கணவரை  ஒரு முறை முறைத்துக்  கொண்டே  பாலை எடுக்க பிரிட்ஜைத் திறந்தேன்."

மேலே  இருப்பது  எனக்கும் என்னவருக்கும்  ஒரு வாரம் முன்பு நடந்த உரையாடல்.

நியு ஜெர்சியில் இருக்கும் பெண் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.

சரி, பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்தாயிற்று.  பேரன் பேத்தியெல்லாம் கொஞ்சி மகிழ்ந்து கொண்டே பதிவு எழுதலாம் என்றால் நேரம் காலம் புரியாத தூக்கம் .


கும்பகர்ணனின்  ஆதிக்கத்திலிருந்து இப்பொழுது தான் கொஞ்சம் விடுபட்டிருக்கிறேன். மெதுவாக  பதிவுலகம்  பக்கம் வந்தால். படித்து பின்னூட்டமிட  வேண்டியவை ஏராளமாய்  மலை போல் குவிந்திருக்கின்றன.

அதனால்  என் பதிவுலக நட்புகளிடம்  நான் கேட்பதெல்லாம்  ,

" ப்ளீஸ்  கொஞ்சம் அவகாசம் கொடுங்களேன்!  முடிந்தவரை  படித் து  பின்னூட்டமிட்டு  , நண்பர்களுடன்  அரட்டை அடிக்க வந்து விடுகிறேன்."

நன்றி  என்னை  புரிந்து கொள்ளும்  உங்களுக்கு.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்