சென்ற வருடத்தில் ஒரு நாள் ," இந்தப் புத்தகத்தைப் பார் ராஜி." என்று என் கணவர் சொல்ல , நான் சுரத்தே இல்லாமல் ,அவர் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன்.
தோழி, சினேகிதி, அவள் , இதில் எதுவென்று நினைவில் இல்லை.ஒரு பக்கத்தைத் திருப்பிச் சின்னக் கட்டத்தில் இருக்கும் செய்தியைப் படிக்கச் சொல்ல நானும் படித்தேன்.
"அதுக்கென்ன இப்போ ?" என்றது நான்.
"என்னவா? நீ தானே 'என்னவோ எழுதிக் கிழிப்பேன் ' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே. அதற்காகத் தான் கொடுத்தேன். அலட்சியமாகப் பேசுகிறாயே! வேண்டாமென்றால் போ " என்று அவர் திரும்ப ,
"ஆமாம் ....... "சட்டென்று உரைத்தது எனக்கு.
இரண்டொரு தடவை, பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்பினேன்.
இன்று வரை என்னவாயிற்று, என்றே தெரியவில்லை. அந்த அலுப்பில் எழுதியனுப்புவதை விட்டு விட்டேன். ஆனால் எழுதவேண்டும் என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை.
அதற்குத் தான் என்னவர் அந்தச் செய்தியைக் காட்டினார்.
செய்தி ,செய்தி என்று சொல்லிப் படுத்துகிறாயே. அதிலென்ன தான் இருந்தது என்று கேட்கிறீர்களா?
பிரபல பதிவர்கள் ,திருமதி ரஞ்சனி நாராயணன் , திருமதி காமாட்சி அவர்களின் வலைப்பூ பற்றி ஒரு சிறிய குறிப்பு.
இவர்கள் இன்டர்நெட்டில் எழுதுகிறார்கள் என்பது மட்டுமே எனக்குப் புரிந்தது.
நாமும்.................... எழுதலாமா ? வேண்டாமா? பட்டிமன்றம் ஓடியது மனதில்.
முதலில் ,அவர்களின் வலை URL வைத்து ,அவர்கள் வலைப்பூவைத் திறந்து பார்ப்போமே ,என்று பார்த்தால் அற்புத மாளிகைக்குள் நுழைவது போன்ற பிரமிப்பு உண்டாயிற்று. இவர்களெல்லாம் எப்படி எழுதுகிறார்கள், எவ்வளவு எழுதுகிறார்கள் ,மலைத்துப் போனேன்.
நமக்குத் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதாலேயே ..... நாமும் எழுதுவதா?......
ஒரு சின்னச் சந்தேகம்.
ஆனால், ஆர்வம் , சந்தேகத்தை ஒரு தள்ளு தள்ளி விட்டு எழுது என்று ஆணையிட என் கிறுக்கல்களை ஆரம்பிக்கத் தீர்மானித்தேன்.
சரி எப்படி ஆரம்பிப்பது ? எங்கு ஆரம்பிப்பது, எதைப் பற்றி எழுதுவது.? மீண்டும் ஒரு பிரேக் .
கணினி பொறியியல் வல்லுனராய் இருக்கும் என் தங்கை பையன் ,சதீஷ் வந்திருக்கும் போது,
என் ஆசையைச் சொன்னேன்.
"இவ்வளவு தானே பெரியம்மா "என்று சொல்லி விட்டு சட்டென்று,
Word Press இல் ,ப்ளாக் ஒன்று ஆரம்பித்துக் கொடுத்தான்.
நீங்கள், எதை வேண்டுமானாலும் ,எழுதிக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் எனக்கு ஆர்வம் தாங்கவில்லை.
நீ ஆரம்பித்துக் கொடுத்து விட்டாய். நான் எழுதினால் யார் படிப்பார்கள் ?என்று மறு கேள்வி கேட்க
அது நீங்கள் எழுதுவதில் அடங்கியிருக்கிறது என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.
அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு WordPress ஐயே, சுற்றி, சுற்றி வந்தேன்.
ஒன்றும் சரியாகப் புலப்படவில்லை. எதைப் பற்றியோ எழுதினேன். ஆனால் சேமிக்கவில்லை போலிருக்கிறது. கரெண்ட் போய் விட்டது.
கரண்ட் வந்தபின் திறந்தால் ஒன்றுமேயில்லை. கண்ணில் நீர் வராத குறை தான்.
மீண்டும், திருமதி ரஞ்சனி நாராயணன் வலைப் பக்கம் , விஸிட். வேறு யாரைப் பற்றியோ வலையுலகம் பற்றியோ எதுவும் தெரியாதாதால் ரஞ்சனியின் வலை என்னிடம் பட்ட பாடு இருக்கிறதே.................நான் பார்த்ததிலேயே அன்று நூறு ஹிட்ஸ் வந்திருக்கும் அவர்களுக்கு.
ஆனாலும் 'வேர்ட் பிரஸ்' ஒரு மர்ம மாளிகை போலவே இருந்தது.
எங்கெல்லாம் ,திருமதி ரஞ்சனியின் வலையில் ,லிங்க் இருந்ததோ அங்கெல்லாம் போய் க்ளிக்கினேன்.
comments என்ற வார்த்தையைக் கிளிக்கினால் சுருட்டி வைத்திருந்த கேலண்டர் பிரிந்தது போல் சர்ரென்று மிக நீளமாய் கீழே இறங்கியது. அதில் நிறையப் பேர் பதிவைப் பற்றிக் கருத்திட்டிருந்ததைப் பார்த்தேன் .
அங்கே எங்காவது லிங்க் வருகிறதா என்று பார்த்தால் என்னிடம் மாட்டியது திரு வை. கோபாலகிருஷ்ணனின் வலை. அவருடைய வலைப் பக்கம் போனால் டிசைன், எழுத்துரு , எல்லாமே வித்தியாசமாக, இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. URL பார்த்து Blogspot என்பதைத் தெரிந்து கொண்டேன்.
உடனே இன்னுமொரு ஜன்னலைத் திறந்தேன். ஹால் ஜன்னலா என்று கேட்காதீர்கள். பிரவுசர் விண்டோ தான். கூகிலிற்குப் போய்ப் பிளாக் ஸ்பாட் என்று டைப்பினேன். உடனே பிளாக் ஸ்பாட் கதவு arattai காகத் திறந்தது.பிளாக் ஸ்பாட் புரிபடுவது கொஞ்சம் எளிமையாகப் பட்டது எனக்கு.
உடனே என் குடித்தனத்தை வேர்ட்பிரஸ் இலிருந்து ,பிளாக் ஸ்பாட்டிற்கு
மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டேன்.
அப்புறமென்ன ....எழுத ஆரம்பித்தேன்.
நான் எழுத ஆரம்பித்த சமயத்தில், தீபாவளி ஜவுளி எடுக்கச் சென்று வந்த சமயம். என் பேரன் ,அபினவ் 'ஆச்சா, ஆச்சா 'என்று எங்களைப் பாடாய் படுத்தியதை 'தீபாவளி ஆச்சா ' என்று பதிவிட்டேன்.
அதற்குப் பிறகு தான் காமெடி. பதிவிட்டதை publish என்று அழுத்தாமல் விட்டிருக்கிறேன். அப்பபோ போய் யாராவது பார்த்தார்களா என்று பார்த்தால்
(அதெல்லாம் புரிந்தது stats போய் க்ளிக்க வேண்டுமென்று.) ஒரு ஈ ,காக்காய் வரவேண்டுமே. "பப்ளிஷே "ஆகவில்லை . அப்புறம் யார் வந்து படிப்பார்கள்? ஒரு மாதிரி நானே கண்டு பிடித்துப் பப்ளிஷ் செய்தேன்.
அதற்குப் பிறகும் இரண்டு நாள் ,நான் மட்டுமே படித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரேயொரு முறை என் கணவர் படித்தார்.ஊரிலிருந்த வந்திருந்த, என் நாத்தனாரை விட்டுப் படிக்கச் சொன்னேன். ஆக மொத்தம் மூன்று பேர் தான் படித்திருந்தோம்.
என் நிலைப் பார்த்து ,பரிதாப்பட்டு ,என் கணவரே கமெண்ட்ஸ் எழுதினார். ஒரு கருத்து வந்து விட்டது ,என்று மகிழலாமென்றால் அந்த நினைப்பிலும் மண்.
கமெண்டைப் பார்த்தால் rajalakshmi commented என்றேயிருக்க ,நொந்து போனேன
என் கணவரோ ஹா...ஹா... என்று ,வெடிச் சிரிப்பு, சிரிக்க ,நான் அசடு வழிய ... என்ன தவறு செய்தேன் என்று புரிந்தது.
திரு வைகோ சார் வலைக்குச் சென்று அவரை என் தளத்திற்கு வரவேற்றேன். தவறாமல் உடனடி வருகைப் புரிந்தார்.அது மட்டுமில்லாமல்
எனக்கு ஆலோசனைகளை ,அழகாய், அள்ளி வழங்கியிருக்கிறார்.அதையெல்லாம் ஓரளவிற்கு கடைபிடித்து வருகிறேன் என்றே சொல்ல வேண்டும்.
அதைப் படிக்க இங்கே' க்ளிக் 'செய்யவும்.
என்னுடைய maiden venture பதிவிற்கு மூன்று பேர் வருகை புரிந்தார்கள்.
வலையுலகம் என்கிற அற்புத உலகம், மெல்ல மெல்ல , புரிய ஆரம்பித்தது. என் வலையில் நிறைய நண்பர்களும் தோழிகளும் மாட்டிக் கொண்டார்கள். இவர்கள் எல்லாம் நான் தேங்காமல் இருக்க உதவுவார்கள் என்று புரிந்தது.
இதற்காக நான் arattai க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன
"ஊக்குவிப்பார் இருந்தால் ஊக்கு விற்பவன் கூடத் தேக்கு விற்பான்" என்று கவிஞர் வாலி சொன்னது நினைவிற்கு வருகிறது.
இந்த ஒரு வருடத்தில் எனக்குப் பின்னூட்டம் என்கிற டானிக் கொடுத்தவர்கள் லிஸ்ட் மிக மிகப் பெரியது. அவர்கள் யார்யார் என்று சொல்லாமல் போனால் நான் நன்றி மறந்தவளாவேன்.
திருமதிகள் ரஞ்சனினாராயணன், சித்ராசுந்தர் ,கோமதி அரசு ,ராஜராஜேஸ்வரி,மகி,மஹாலக்ஷ்மி ,மனோசாமிநாதன் , தமிழ்முகில்,சாதிகா,
உஷாஅன்பரசு, ராஜி,மலர்பாலன்,மஞ்சுபாஷினிசம்பத்குமார் , ஜலீலா, கவிநயா,சமீரா,காமாக்ஷி, சந்திரகௌரி ,துளசிகோபால்,தமிழ்செல்வி, கீதாசாம்பசிவம் ,லக்ஷ்மி,விஜிபார்த்திபன்,கிரேஸ் ,அருணா செல்வம், அமைதிச் சாரல்,அனுஸ்ரீனி,ரத்னாபீட்டர்ஸ்
மற்றும்
திருவாளர்கள் .வை .கோபாலகிருஷ்ணன்,திண்டுக்கல் தனபாலன்,ரமணி, ஸ்ரீராம்,சுப்புத்தாத்தா,தமிழ்இளங்கோ,ஸ்கூல்பையன்,ஜோக்காளி,வெங்கட்ஜி,GMB,Chellappa Yagyaswamy,MTG,பாலகனேஷ்,கவியாழி கண்ணதாசன்,வருண் ,நம்பள்கி,சுரேஷ்,துரை செல்வராஜ் ,Arumugam Eswar,செம்மலை ஆகாஷ்,ஜெயதேவ் ,கடைசிபெஞ்ச் ,ரூபன் ,பாலசுப்ரமணியன், கவிஞர் பாரதிதாசன்.அட்வகேட் ஜெயராஜன் ,சென்னைப் பித்தன்,விமலன், விஜயன்,அப்பாதுரை,முனைவர். குணசீலன்,
ஆகியோர் என் பதிவுகளைப் பொறுமையாய் படித்து என்னை ஊக்குவித்தவர்கள்.
அவர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி .இவர்கள் எல்லாம் என் நினைவிற்கு வந்தவர்கள். வேறு யார் பெயரும் விட்டிருந்தால் அவர்களுக்கும் என் நன்றி.
அலை போல், திரண்டு வந்து என்பதிவுகளைப் படித்து எக்கச்சக்கமாய் ' ஹிட்ஸ் ' கொடுக்கும் வாசக அன்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.
பதிவுகள் எழுத ஆரம்பித்த பொழுது தான் உணர்ந்தேன் ,வலையுலகம் என்பது ,கட்டுபாடுகளற்ற சுதந்திரமான வெட்டவெளி. அதில் எழுத்துப் பயணம், என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் தவறினாலும், கத்தி நம்மைப் பதம் பார்த்து விடும்.நான் சர்வ ஜாக்கிரதையாக நடப்பதற்கு உதவுவது என்னவர் , என் பதிவுகளின் எடிட்டர். அவர் எடிட் செய்யவில்லை,என்றால் பல சமயங்களில், நான் வம்பில் மாட்டியிருப்பேன். அதனால் அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி .
Arattai யின் ஓராண்டு நிறைவிற்கு உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் வழங்குங்களேன். ................ப்ளீஸ் .
image courtesy----google
Arattai யின் ஓராண்டு நிறைவிற்கு உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் வழங்குங்களேன். ................ப்ளீஸ் .
image courtesy----google