Monday 20 October 2014

ராசி போட்ட முடிச்சு.



" அதோ அங்கே இரண்டாவதாக இருக்கும் . பச்சைக் கலர் புடைவையை எடுத்துப் போடுங்கள் "
அதைப் பார்த்து  விட்டு, " இல்லை இது வேண்டாம் . அந்த ப்ளு  நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன். அதை எடுத்துக் காட்டுங்கள் " ராசி புடைவை  அடுக்கைக் காட்டி  சொல்லவும், சேல்ஸ்மேன் எடுத்துப் போட்டார்.

" ஓ இதில்  ஜரிகை அடையாக இருக்கிறதே. . கொஞ்சம் கம்மியாக இருக்கட்டும். " என்று சொல்லவும்  வேறு சின்ன ஜரிகைப் போட்டப் புடைவையை சேல்ஸ்மேன்   எடுத்துக் காட்டவும் , ஜரிகை  எனக்குத் தேவலாம் தான். ஆனால் கலர் தான்  பச்சைக்கும், ப்ளுவிற்கும் நடுவில் வேணும் ."

பச்சைக்கும், ப்ளுவிற்கும் நடுவில் என்ன கலராயிருக்கும் என்று விஷ்ணு யோசித்துக் கொண்டே , இந்தப் புடைவை  செலக்ஷனை  முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்து  அவரே ஒரு புடைவை  எடுத்துக் காட்ட சொன்னார். ஆனால் ராசி அதைக் கடைக்கண்ணால் கூடப்  பார்க்கவில்லை 
 " இந்தக் கலரெல்லாம் என்னிடம் ஏற்கனவே இருக்கு."  என்று சர்வ அலட்சியமாய் சொல்லி விட்டு, அடுத்த புடைவையை எடுத்துப் போட சொன்னாள் .

பேசாமல் அருகிலிருக்கும் ஸ்டூலில் அமர்ந்து கொண்டார் விஷ்ணு. வேறென்ன செய்வார்....பாவம்....

ராசியோ  சேல்ஸ்மேனை பெண்டு கழட்டிக் கொண்டிருந்தாள்.
 சேல்ஸ்மேன் படும்பாட்டைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது விஷ்ணுவிற்கு. பச்சையாகவும் இருக்கக் கூடாது, ப்ளூவாகவும் இருக்கக் கூடாது. பார்டர் அகலமும் கூடாது, குறைவாகவும்  இருக்கக் கூடாது. ப்ளெயினாவும் இருக்கக் கூடாது. புட்டாவும் இருக்க வேண்டும் ஆனால் மிக அதிகமும் வேண்டாம்.  என்று எத்தனை கண்டிஷன்கள. ராசி புடைவை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை சாட்சாத் அந்தப் பிரம்மா கேட்டால் , நல்லவேளை  இரண்யன்  வரம் கேட்கும் போது  இத்தனைக் கண்டிஷன்கள் போட்டு நம்மை திண்டாடவிடவில்லையே   என்று நினைத்து திருப்பதியடைவார்.

 ஒவ்வொரு புடைவையாக ராசி "நல்லருக்கா"  என்று கேட்பதும் , எல்லாவற்றிற்கும் இவரோ "ரொம்ப நல்லாருக்கு" (சில சமயம் செல்போனை விட்டு  தலையைத் தூக்காமலே) என்று சொல்வதுமாக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி  நேரமாக  இந்தப் போராட்டம் போய்க் கொண்டிருந்தது. 
நடுவில் விஷ்ணு ஆபிசிலிருந்து வந்த போனிற்குப் பதில் சொல்லி முடிக்கும்  போது  ," இந்தப் புடைவையை  பில்லிற்கு அனுப்புங்கள் "  ராசியின் குரல்  தேனாகப்  பாய்ந்தது   விஷ்ணுவின்  காதுகளில்.  விஷ்ணு  அவசரமாகப்  பில்லைப் பார்த்துப் பணம் கட்டக் கிளம்பினார். சீக்கிரமாக  புடைவையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட அவசரப்பட்டார். அவருக்குத் தானே தெரியும் அவர் கஷ்டம்.
அவசரவசரமாக  பில்லைக் கட்டி விட்டுப் புடைவை  வாங்கிக் கொண்டு " போகலாமா ராசி ?" என்று கேட்கவும் ,
ராசி,, " கொஞ்சம் இருங்கள் . முடிச்சுப் போட்டுக் கொண்டு வருகிறேன்? "

" என்ன முடிச்சு? "  கேட்டார்  விஷ்ணு.

" புடைவைத் தலைப்பை  முடிச்சுப் போட வேண்டுமே " ராசி சொல்வதைக் கேட்ட கடை சூப்பர்வைசர்  அவளிடமிருந்து புடைவையை வாங்கிக் கொண்டு போய் வேறு ஒருவரிடம் கொடுக்கவும், ராசி அங்கிருக்கும் ஸ்டுலில் அமர்ந்துக் கொண்டாள்.

விஷ்ணுவும் வேறு வழியில்லாமல் வேறு ஒரு ஸ்டுலில்  அமர்ந்துக் கொண்டு  தன்னைப் போல் மாட்டிக் கொண்டு விழிக்கும் கணவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். " என் வேலை முடிந்து விட்டது ." என்கிறத் திருப்தி அப்பட்டமாய் தெரிந்தது அவர் முகத்தில்.

" அப்படியெல்லாம் உன்  வேலை முடிந்து விடவில்லை " என்று சொல்வது போல் கோபமாய் ராசி வந்து கொண்டிருந்தாள்,கையில்  புதுப் புடைவையுடன்.

" என்ன வேலை முடிந்ததா? " என்கிற விஷ்ணுவின் கேள்விக்கு, ராசி கோபமாக ," நானே போட்டுக் கொள்ளப் போகிறேன். ஆறாயிரம் கொடுத்து  வாங்கியிருக்கிறோம்.  ஒரு மரியாதை இல்லை. அடுத்து வந்தவர்களுக்கெல்லாம்  போட்டுக் கொண்டிருக்கிறார்கள் " என்று சொல்லவும்.

" எதையோ செய்துத் தொலை " என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே வீட்டிற்கு  வந்தார்.

ஒரு வாரம் ஆகியிருக்கும். ஞாயிற்றுக் கிழமை விஷ்ணு பேப்பரில் மூழ்கியிருந்த வேளையில் ராசி புதுப் புடைவையுடன், கையில் கத்திரியுடன் வந்து அமர்ந்தாள்.

" என்ன செய்யப் போகிறாய்? " விஷ்ணு கேட்கவும்.
ராசி "புடைவைத் தலைப்பை  சரி செய்யப் போகிறேன் " என்று சொன்னாள் .

என்ன தான் செய்யப் போகிறாள் ராசி என்று பார்த்தார் விஷ்ணு . 
முதலில்  கத்திரி வைத்து சிறிது கட் செய்து விட்டு  நூலைப் பிடித்து  இழுக்க ஆரம்பித்தாள் .  சர்ரென்று ஒரு இழை வந்தது. பெருமையாக இருந்தது விஷ்ணுவிற்கு . என்னவெல்லாம் தெரிகிறது தன்  மனைவிக்கு என்று பெருமிதத்துடன் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்தார் விஷ்ணு.

அதற்குள் போன் மணியடிக்கவும், ராசி  போனை  எடுத்து அவள் தோழியுடன்  அளவளாவி விட்டு வந்து திரும்பவும் தொடர்ந்தாள் .. இப்பொழுது ஒருபக்கம இழை இழுக்கும் போது , புடைவைத் தலைப்பு வேறு பக்கமாய் இழுத்துக் கொண்டது.  இந்தப்பக்கம் இழுத்தால் அந்தப்பக்கம் இழுத்துக் கொண்டு புடைவை சுருங்கிக் கொண்டது, அந்தப் பக்கம் இழுத்தால் இந்தப் பக்கமும், இந்தப் பக்கம் இழுத்தால் ,அந்தப் பக்கமும் சுருங்கியது, புடைவை. முதல் இழை வந்தது போல் வரவில்லை. புடவைக்கு வலிப்பு  வந்தது போல் காணப்பட்டது.

ராசிக்கு வியர்வை ஆறாய்ப் பெருக சரி செய்ய பிரம்மப் பிரயத்தனப்பட்டாள் . திரும்பக் கத்திரியை வைத்து கட் செய்தாள் . பிறகு இழை எடுக்க முயற்சித்தாள் . ம்ஹூம் .... வந்தால் தானே . இப்படியே இழுப்பதும், கட் செய்வதும், குரங்கு-அப்பம் கதையாய்  போய்க் கொண்டிருந்தது.

கட் செய்ததில்  புடைவையின் நீளம்  குறைய செய்தது. ஒரு ஸ்டேஜில் ராசி  இழை  எடுப்பதைஅப்படியே நிறுத்தி விட்டு , தையல் மெஷினை எடுத்து, தலைப்பின் ஓரத்தை மடித்து வைத்துத்  தைத்து விட்டாள்  ராசி.  விஷ்ணுவிற்கு புடைவை பற்றி அதிகம் தெரியாது  ஆனாலும்  பட்டுப் புடைவை ஓரம் அடித்து, ராசி  உடுத்திக் கொண்டதில்லையே என்று யோசித்தார்.

அன்று மாலையே  அவர் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. ராசியின்  அத்தை பெண் மாதுரி  வந்திருந்தாள் . ராசியும் அவளுமாக  ரிசப்ஷனிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.  ராசி  புதுப் புடைவை  உடுத்திக் கொண்டு மாதுரியிடம் காண்பிக்கவும் , அவளும்  பார்த்து " ஆஹா........  அழகானக்  கலர் அக்கா ! இந்தக்  கலரில் தான் நானும் புடைவைத் தேடிக் கொண்டிருக்கிறேன் . தலைப்பில்  என்ன டிசைன்? ....பார்க்கலாம்... " என்று பார்த்தாள் .

" அக்கா பாரேன்  பட்டு மாதிரியே இருக்கிறது  இந்தப் புடைவை. . தலைப்பில் ஓரம் அடித்திருப்பதை வைத்துத் தான் இது பட்டு இல்லை என்பது தெரிகிறது. "என்று மாதுரி  சொன்னதும், ராசி முகம் போன போக்கைப் பார்த்து விஷ்ணுவிற்கு  வந்த சிரிப்பையடக்க முடியவில்லை.

மாதுரி  அவளால் ஆன உபகாரம் செய்து விட்டாள் . அதன் விளைவு ......

திரும்பவும் பட்டுப்புடைவை வாங்க ராசியுடன் போக வேண்டும் . க்ரெடிட்  கார்டு பில்லும் அவர் தான் கட்ட வேண்டும்  என்பதை மறந்து விஷ்ணு  சிரித்துக்  கொண்டிருக்கிறார். இது தான் இடுக்கண் வருங்கால் நகுக  போலிருக்கிறது..

  அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


image courtesy--google.

Saturday 4 October 2014

குப்பைக் கூடையில் அம்புகள்.


சில நாட்களுக்கு முன்பு திரு. தமிழ் இளங்கோ அவர்கள் அந்தக் காலத்தில் " அட்டெஸ்டேஷன் " வாங்கும் சிரமம் பற்றி எழுதியிருந்தார். அந்தப் பதிவு படித்ததும் என் மனமும்  மலரும் நினைவுகளின்  வட்டத்துக்குள் நுழைந்தது.


அப்பொழுது என்னுடைய  எஸ்.எஸ்.எல்.சி  பரீட்சை  முடிவுகள் வெளியாகியிருந்தன. பேப்பரில் நம்பர் பார்த்து , எல்லோருக்கும், தெரிந்தவர், தெரியாதவர் என்று எலோருக்கும்  சாக்லேட் கொடுத்து   என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.அடுத்து, கல்லூரிகளுக்கு அப்ளிகேஷனுடன் படையெடுக்க வேண்டும். அதற்கும் முன்பாக  மதிப்பெண் சான்றிதழ் வர  வேண்டுமே.


மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க  இரண்டு நாட்கள் ஆனது. இப்பொழுது போல்  உடனே நம் மதிப்பெண்கள் தெரிந்து விடாது. பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பள்ளிக்கு  இரண்டு நாட்கள் கழிந்த பிறகே வந்து சேரும்.


பள்ளிக்கு சென்று மதிப்பெண்  சான்றிதழ் பார்த்ததும், தலை  கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்..  அதிக மதிப்பெண்களை பெறுவேன்  என்கிற தன்னம்பிக்கையுடன் தான் தேர்வை எதிர் கொண்டேன். இருந்தாலும், முயற்சியின் பலனை மார்க்காக பார்க்கும் போது  ஏற்படும் மகிழ்ச்சி  எல்லையில்லாதது  ஆயிற்றே!


ஆக, கல்லூரியில்  பி.யு.சி. சேர பெரிதாகக் கவலைப்பட வேண்டாம் என்பதில் வீட்டில் எல்லோருக்கும் நிம்மதி . ஆனால் அதற்கு முன்னால் முதலில் மார்க் எல்லாவற்றையும்  " ஜாப்  டைப்பிங் "கில் கொடுத்து , டைப் செய்ய வேண்டும். ( இப்பொழுது போல் ஜெராக்ஸ்  எல்லாம் கிடையாதே!)


ஜாப் டைப்பிங் காரர்களுக்கும் டிமாண்ட்  அதிகம். அதுவும் தப்பில்லாமல்  டைப்படிக்கிறவர்களுக்கு டிமாண்ட் மிக அதிகம் . அதற்குப் பிறகு டைப் அடித்ததை எடுத்துக் கொண்டு  ஒரிஜினல் மார்க் ஷீட்டையும் எடுத்துக் கொண்டு அட்டெஸ்டேஷணிற்கு  அலைய ஆரம்பிக்க வேண்டும். பச்சை இங்கால்  கையெழுத்திடுபவர்கள்  அதிகமாக அப்பொழுதெல்லாம் தென்பட மாட்டார்கள் . அப்படியே இருந்தாலும் அவர்கள்  ஏக பிகு செய்து கொள்வார்கள். அவர்களை சொல்லியும் தப்பில்லை. டைப் அடித்ததை சரி பார்த்துக்  கையெழுத்திட வேண்டும்.  அந்த சிரமத்திற்கு பயந்து நிறைய பேர்  அதை தவிர்த்து விடுவார்கள்.


மதிப்பெண் சான்றிதழ் வந்ததும்., ஜாப் டைப்பிங்கில் மர்க்கை எல்லாம் டைப் செய்து வாங்கி விட்டு  அட்டெஸ்டேஷணிற்கு  எங்கே செல்லலாம் என்பதற்கு வீட்டில் ஒரு குட்டி மீட்டிங்கே நடந்தது . பிறகு எங்களுக்குத் தெரிந்த  மருத்துவரிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்த பின்,  என் சித்தப்பாவுடன் மருத்துவரைப் பார்க்க சென்றிருந்தேன்.


கிளினிக்  வாசலில் கூட்டம்  என்றெல்லாம் நினைத்து  விடாதீர்கள். அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று  பேர் தான் இருப்பார்கள். நாங்கள் போன அன்று நான்கு பேர் இருந்தனர்.   எல்லா வியாதிக்காரர்களும் போன பிறகு , நானும் சித்தப்பாவும் உள்ளே நுழைந்தோம். அவர் எங்களுக்குத் தெரிந்தவர் ஆதலால்,  சித்தப்பாவிடம் அப்பொழுது நடந்த பரபரப்பான நிகழ்ச்சியைப் பற்றி  உரையாடிகே கொண்டே இருந்தார்.

எனக்கோ என் மார்க் மேல் ஒரே பெருமை. மார்க்கை எப்பொழுது கேட்பார் , பெருமையாய் சொல்லலாம் என்று பார்த்தால் , அரட்டை அடித்துக் கொண்டேயிருந்தார். ஐந்து நிமிடம் கழித்து, அனிச்சையாக என்னிடம் கையை நீட்டி டைப் அடிக்கப் பட்டிருந்த மார்க் லிஸ்டை  வாங்கினார் டாக்டர்.


நான் கொடுக்கவும், அப்பொழுது தான் அவருக்கு நாங்கள்  எதற்காக வந்திருக்கிறோம் என்பது புரிய ,


" இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி  யா நீ? "


பவ்யமாக  " ஆமாம் " சொன்னேன்.


" என்ன பாஸ் செய்து விட்டாயா ?" டாக்டர் கேட்கவும்,


அபத்தமாகக் கேள்வி கேட்கிறாரே. பாஸ் செய்யவில்லை என்றால் இவரிடம் எதற்குக் கையெழுத்து வாங்க நிற்கிறேன்  என்று நினைத்தேன் சொல்லவில்லை.( மனதிற்குள்  என் மார்க்கைப் பார்  அப்ப தெரியும்." பாஸா"  என்றா கேட்கிறாய் என்று நினைத்துக் கொண்டேன்,)


ஆனால் ,"ஆமாம். பாஸ் செய்து விட்டேன் "என்று சொன்னேன் மீண்டும் பவ்யமாகக் காட்டிக் கொண்டு .


பிறகு " எவ்வளவு மார்க் ?  "  என்று கேட்டார் டாக்டர்.


அவர் கையில் தான் இருக்கிறது மார்க் ஷீட்.  ( ஆனாலும் இவர் எப்ப கேட்பார் என்று தானே இவ்வளவு நேரமும்  ஏங்கிக் கொண்டிருந்தேன்.)

நான் வாங்கியிருந்த மார்க் என்னைத் தரையில் நிற்க விடவில்லையே . மேலே பறந்துக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தப் பெருமை என் குரலில் தொனிக்க  என் மார்க்கை சொன்னேன்.


" அட்டகாசமான மார்க் ஆச்சே " ( இன்னும் மேலே ...... மேலே உயரேப்  போனேன் என்  மனதில். )


" நிஜமாவா " டாக்டர் என்னைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.


அப்பொழுதே மேலேயிருந்து  டாக்டர் ,லேசாக  என்னை கீழே  தள்ளியது போலுணர்ந்தேன்.


அடுத்து டாக்டர் சொன்னதைக் கேட்டதும்.  நான் கீழே இறங்கவில்லை. அதலபாதாளத்தில் விழுந்தேன் என்று தான் சொல்ல  வேண்டும். அப்படி என்ன சொன்னார் என்று தானே கேட்கிறீர்கள்.


" நம்பவே முடியவில்லை. நீயா இவ்வளவு மார்க்  வாங்கியிருக்கிறாய்? " கேட்டாரே பார்க்கலாம்.  அழுகை  முட்டிக் கொண்டு வெளியே வரத் தயாரானது சமாளித்து, அட்டஸ்டேஷணிற்கு  நன்றி சொல்லி விடை பெற்றோம். 


மனதிற்குள்,


சொக்கா ! சொக்கா! என்ன இப்படிக் கேட்டு விட்டாரே  டாக்டர். 

நான் என்ன தருமியா? இல்லை...... பரீட்சை தான் மண்டபத்தில் நடந்ததா   எனக்குப் பதிலாக சொக்கன்  வந்து எழுதியிருப்பதற்கு. வருடம் முழுக்க நான் செய்த கடின உழைப்பைப்  பாராட்டாவிட்டாலும்  போகிறது. இப்படி என்னை மட்டமாக எடை போடாமல் இருந்தாலே போதும் என்று தோன்றியது எனக்கு.

இவருக்கு என் படிப்பைப் பற்றி என்னத்  தெரியும். இவர் எனக்கு ஆசிரியரா ? இல்லையே !

டாக்டர் தானே.


ஆனாலும் ,பின்னாளில் எதிர்மறைக் கருத்துக்கள் ,  சொல்லம்புகளாய் என்னைத் தாக்க வரும்போது , அப்படியே அதை குப்பைக் கூடையை நோக்கித் திசை  திருப்பலாம் என்கிற  பாடத்தின் அரிச்சுவடியை அன்றே   கற்றுக் கொடுத்தற்கு   நன்றி டாக்டர்.

image courtesy--google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்