Tuesday 2 April 2013

சரித்திரம் படைத்த ராசி



ராசியின் வரலாறு  என்றதும்  ஏதோ  மீன ராசி அன்பர்களுக்கும், மேஷ ராசி நேயர்களுக்குமான  ராசியை பற்றி சொல்லப் போகிறேன்  என்று  நினைக்கிறிர்களா?

அவசரப் படாதீர்கள்.


இந்த ராசி என்   பள்ளி நாட்களிலிருந்து  எனக்கு  ஆருயிர்த்தோழி .இப்பொழுது திருமணமாகி சென்னையில்  தான் குப்பை கொட்டிக் கொண்டு  இருக்கிறாள் .

அவ்வப்போது சந்திப்பது வழக்கம்.

அப்படித்தான்  அன்று அவள் வீட்டிற்கு சென்ற போது அவளும், அவள் மூன்று வயதுப் பேரனும்  National Geographic  சேனலில்  பிங்குவோடு பிங்குவாக ஒன்றிப்  போயிருந்தார்கள்.

 " அட, உனக்கு  எப்போதிலிருந்து இந்த ஆர்வம்.? "  இது நான்.

" இதில் ஆர்வம் இப்பொழுதான் வந்தது போல் கேட்கிறாய்? "  என்றாள்   ராசி.

" திருநெல்வேலிக்கே அல்வாவா? என்னிடமே உன்  பூகோள  சரித்திர ஆர்வத்தை பற்றி சொல்கிறாயே " என்றதும் சிரித்து விட்டு " இப்ப எதுக்கு அதெல்லாம் "  என்றாள் .

பள்ளியில் நாங்கள்  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் நெருங்கிய தோழிகளானோம்.  ராசி அப்படி ஒன்றும் படிப்பு வராதவள் இல்லை.
கணிதமும்,   அறிவியலும் அவளுக்குத் தண்ணி பட்ட பாடு தான்.

இந்த பூகோளமும் , சரித்திரமும் இருக்கிறதே , அது தான் அவளை பாடாய் படுத்தும் .புற முதுகிட்டு ஓடும். இவளும் விரட்டி விரட்டி தான் பி(ப)டிப்பாள்.அனால்  இரண்டும் அவளை டபாய்க்கும்.
கௌசல்யா டீச்சரும்  எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்தார். ஒன்றும் பலனில்லை.

கௌசல்யா டீச்சர் கிளாசில்  இவள் முக்கால் வாசி நாட்கள்  "கொர் ,கொர் " தான்.அப்புறம் எப்படி  இவளுக்கு அசோகச் சக்கரவர்த்தியைப் பற்றித் தெரியப்போகிறது?
" எப்படி உனக்கு மட்டும்  இப்படி தூக்கம் வருகிறது  கௌசல்யா டீச்சர் கிளாசில் " என்று கேட்டால் "  நான் என்னடி செய்யட்டும் ?     டீச்சர் கிளாஸ் எடுத்தால்  எனக்கு கண்களை  கட்டுதே. " என்பாள் .

பரிட்சை சமயத்தில்,"அசோகர்  மரங்கள் நட்டார்.குளங்கள் வெட்டினார். " என்று உருப் போட்டுக் கொண்டு இருப்பாள் .
மனதில் பதிந்தால் தானே! 
அதில் எரிச்சலாகி," இந்த அசோகரை   யாரடி  மரங்கள் வைத்து  குளம் வெட்டச் சொன்னது? " என்று புலம்புவாள் .அசோகர் அவளுடைய சோகக்கதையைக்  கேட்டால் அவரே  தான் வைத்த மரத்தை வெட்டிதள்ளி விட்டு " இது போதுமா? இன்னும் கொஞ்சம் வெட்டணுமா? " என்று கேட்பார் என்றே தோன்றும் .


கௌசல்யா  டீச்சர்  எப்படியாவது   இவளை  வரலாற்றுப் பேராசிரியையாய்   ஆக்க வேண்டும்  என்று  கங்கணம்  கட்டிக் கொண்டது  போல் அப்ப, அப்ப  கேள்விகள் கேட்டு அவளைப்  படிக்க வைத்து விடலாம் என்று மனப்பால் குடித்தார்.

ஒரு நாள்  அவர்  ஒரு உலக வரைபடத்தை   ஆணியில் மாட்டி விட்டு .
" ராசி இங்கே வந்து  அசோகர்  சாம்ராஜ்யத்தை  இந்த ஸ்கேலால்  தோராயமாக காட்டு "  என்றார்.

உடனே  ராசி " கிடு கிடு " வென்று படம் அருகில் போனாள் . போன வேகத்தில்   ஸ்கேலை எடுத்து  கரெக்டாக சீனாவில் ஒரு முட்டை வடிவம் போட்டு விட்டு திரும்பினாள் .

சீனாவுக்கு  மட்டும் இது தெரிந்தால்  இவ்வளவு நேரம் நம்முடன் ஒரு போரே  உண்டாகியிருக்கும்.பின்னே? அசோகர் சாம்ராஜ்யத்தை சீனாவில் உருவாக்கியது  மட்டுமல்லாது  அங்கே ஒரு முட்டை வேறு, இவள் வரலாற்றுப் பாடத்தில் வாங்குவது போல்.

வந்த கோபத்தில்  ராசியை வகுப்புக்கு  வெளியே  நிற்க வைத்து விட்டார்.
நிற்க வைத்ததில்  அவருக்கே வந்தது கேடு. அந்த சமயம் பார்த்து  தலைமை ஆசிரியர்  அந்த பக்கம் வர ,ராசியைப் பார்த்து ," என் வெளியே நிற்கிறாய்" என்று கேட்க அவள்   வெறும்" திரு திரு ".

கௌசல்யா டீச்சர் வெளியே வந்து விவரத்தைக் கூற ,டீச்சரை தலைமை  ஆசிரியர் கடிந்து கொண்டு "இன்றைய வகுப்பையும் மிஸ் செய்தாள்  என்றால்
என்னாவது என்று கேட்க "  வேறு வழியில்லாமல்  டீச்சர் ராசியை உள்ளே அமர செய்தார்.

இதற்கெல்லாம் ராசி ஒன்றும் அசரவில்லை. அதென்னவோ அவளுக்கு வரலாறும் பூகோளமும்  எட்டிக்காய் தான்.சுட்டுப்  போட்டாலும்  வராது  அவளுக்கு.
குப்தர்கள், மௌரியர்கள், எல்லோருக்கும் ஒருவர் பாக்கியில்லாமல்     சஹஸ்ரனாம  அர்ச்சனை செய்வாள்  ராசி.

அவர்கள் எல்லோரும் பாவம் அவர்கள் போர்களில்  வாங்கிய விழுப்புண்களை விட  அதிகம்  இவளிடம் திட்டு வாங்கியது.

அவளுக்கு  கிழக்கிந்திய கம்பெனி மீது  தான் தாங்கொணா கோபம் ..வாயை மூடிக் கொண்டு இங்கிலாந்திலேயே இருக்க வேண்டியது தானே? யார் இங்கே வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிட்டார்கள் ?

அதனால் தானே இந்திய சுதந்திரப் போராட்டம் வந்தது. அது வரலாற்றுப் புத்தகத்தில் பாதியை அடைத்துக் கொண்டு விட்டதே. அதோடு இந்த வருடங்களை யார் நினைவில்  வைத்துக் கொள்வது? சொல்லுங்கள் .

வட்ட  மேசை மாநாடு  ஒன்றா, இரண்டா. எத்தனை இருக்கிறது?
எந்த எந்த வருடங்கள் ? ஏதோ மேசையில் அமர்ந்தோம், சாப்பிட்டோம் என்று போகாமல் எதையோ  பேசி .வைத்து என் உயிரை வாங்குகிறார்கள்  என்று புலம்புவாள்.

இது மட்டுமா? பானிபட் யுத்தத்தோடு  இவளுக்கும் யுத்தம் தான்.
முதலாம் பானிபட் , இரண்டாம் பானிபட்  வருடங்களை   நினைவில்   வைத்துக் கொள்ள அவள் எவ்வளவோ முயற்சித்தும்  பாவம் தோற்றுத்தான் போனாள் .இதில் சமாதான உடன்படிக்கைகள்  வேறு அவளை குழப்பும்.

மகாத்மா காந்தி கூட  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக  இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டார் என்றே தோன்றும் ,இவள்  நம் இந்திய சுதந்திரப் போராட்ட  வரலாற்றை    படிப்பதைப்  பார்த்தால் .

கௌசல்யா டீச்சர் ஒரு முடிவுக்கு வந்தாற்   போல்   இருந்தார்  அன்று. 
" ராசி   உனக்கு என் மேல் என்ன கோபம். ஏன்  வரலாறு மட்டும்  வரமாட்டேன் என்கிறது?  மற்ற  பாடங்களை  நன்றாகவே படிக்கிறாய். எப்படியாவது பாஸ் செய்து விடு . " என்று பாவமாய்  கெஞ்சினார்.

"நான் என்ன டீச்சர் செய்யட்டும் . நானும்  கசப்பான  வல்லாரை கீரையை  கூட சாப்பிட்டு தான் வைக்கிறேன்.  ஆனாலும்  ........"என்று  கண்களில் நீர் முட்ட , குரல் உடைந்து பேசினாள் .

தேர்வு நெருங்க நெருங்க  ராசியை விட, அவள் பெற்றோர் ,எல்லாரைவிடவும் கௌசல்யா  டீச்சர்   தான்  ஒரே டென்ஷனில் இருந்தார் என்று சொல்ல வேண்டும்.  

தேர்வு முடிவு வந்தது .
ராசிக்கு  தன கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை.
அவள் நம்பர் பேப்பரில் வந்து விட்டது.அப்படிஎன்றால்   சரித்திரத்திலும்  அவள் பாஸ் தானே!

கௌசல்யா டீச்சர்   சொன்னது தான்  பன்ச்  "  ராசி,   நீ வரலாறு பாஸ்  செய்து   சரித்திரம் படைத்து   விட்டாய்  " என்று.

image courtesy---google.


40 comments:

  1. ராசியின் வரலாறை நகைச்சுவையாய் சொல்லி விட்டீர்கள்.. ம்..ம்.. இவ்வளவு அமர்க்களமா?

    ReplyDelete
    Replies
    1. ராசிக்கு புவியியல், வரலாறு இரண்டுமே வேப்பங்காய் தான். அப்புறம் எப்படி மண்டையில் ஏறும் உஷா? அதான் இத்தனை அமர்க்களம்.
      நன்றி உஷா உங்கள் கருத்துக்கு.

      Delete
  2. //கௌசல்யா டீச்சர் சொன்னது தான் பன்ச் " ராசி, நீ வரலாறு பாஸ் செய்து சரித்திரம் படைத்து விட்டாய் " என்று.//

    அருமையான நிகழ்வுகளை அற்புதமாக நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    [எனக்கும் இந்த வரலாறு பாடத்தைக்கண்டாலே பிடிக்காது. எனினும் ஞாபகத்தில் ஏற்றிக்கொண்டு நல்லாத்தேர்வு எழுதி ஓரளவு நல்ல மார்க்கும் பெற்று விடுவேன். மற்ற பாடங்களுடன் ஒப்பிடும்போது இதில் எனக்கு சற்றே மதிப்பெண்கள் குறைவது உண்டு.]

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார்,
      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      உங்கள் சிறு வயது நினைவுகள் உங்களுக்கு வந்தது போல் தெரிகிறது.
      இந்த பதிவால் உங்கள் மார்க்குகள் கூட உங்களுக்கு நினைவு வருவது குறித்து மகிழ்ச்சி சார்.

      நன்றி

      Delete
    2. //நன்றி வைகோ சார், உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      உங்கள் சிறு வயது நினைவுகள் உங்களுக்கு வந்தது போல் தெரிகிறது.
      இந்த பதிவால் உங்கள் மார்க்குகள் கூட உங்களுக்கு நினைவு வருவது குறித்து மகிழ்ச்சி சார். நன்றி//

      எனக்கு எதுவுமே அவ்வளவு எளிதில் மறக்கவே மறக்காது.

      என் ஞாபகசக்திக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நான் எழுதியுள்ள “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற மிகவும் விறுவிறுப்பான, பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டப்பதிவினைப்போய் பார்க்க வேண்டும்..

      முடிந்தால் படித்துப்பார்த்து விட்டு கருத்துச் சொல்லுங்கள்.

      இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2012/03/1.html

      Delete
    3. கண்டிப்பாக படித்துக் கருத்திடுகிறேன் சார்.

      Delete
  3. கௌசல்யா டீச்சர் சொன்னது தான் பன்ச் " ராசி, நீ வரலாறு பாஸ் செய்து சரித்திரம் படைத்து விட்டாய் " என்று.

    நல்ல வேளை ...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை பாஸ் செய்தாள் ராசி.
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  4. ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. எனக்கெல்லாம் கணக்கும் இயர்பியலும்தான் ரொம்பப் படுத்தியது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      வரலாற்றுடன் வரலாறு காணாத வகையில் கஷ்டப்பட்டு விட்டாள்.
      அதெல்லாம் பழைய கதை.

      Delete


  5. சரித்திரம் ரொம்பவே டிமான்டிங். இந்த ஈவன்ட்ஸ் எல்லாம் நடந்த காலத்தை நினைவு வச்சுக்கற எல்லாம் முடியாத விசயம்.

    எனக்கு பள்ளியிலே நடந்தது ஒன்று மட்டும் நினைவு இருக்கிறது. 1953/4ல் நடந்தது.

    என்னுடன் ஒரு மராட்டி பையன் எனது க்ளாசில் இருந்தான். பெயர் கிருஷ்ணாஜி பட். வகுப்பு நடத்தும்போது அவன் நீங்க
    சொன்ன ராசி மாதிரி தான். சாதாரணமா , லஞ்ச் முடிஞ்ச பின்னே தான் சரித்திர க்ளாஸ். இவனோ
    தூங்கித் தூங்கி என் மேல் விழுவான்.

    எக்ஸாமுக்கு முன்னே ரிவிஷன் டைம். சரித்திர ஆசிரியர் ( அவர் மிஸ். ஸார் இல்லை) ஒவ்வொரு
    கேள்வியாய் கேட்டு வகுப்பில் அட் ரான்டம் ஏதேனும் ஒருவரை கேட்பார்.

    அன்று அவன் அதிருஷ்டம் பாருங்கள். அவனை சடார் என்று எழுந்திருக்கச்சொல்லி கேட்டார்.

    ராணி லக்ஷ்மி பாய் யாரோடு சண்டை போட்டார்?

    முதல்லே ஒண்ணுமே சொல்லாம நின்று கொண்டிருந்தான்.

    மிஸ் : "சொல்லுடா. யாரோட லக்ஷ்மி பாய் சண்டை போட்டார்?"

    என்னோட ஃப்ரன்டு அதிர்ந்து போய்விட்டான்.

    அழுதுகொண்டே " எங்க அப்பாவோட தான் மிஸ்... " என்றான்.

    என்னது ? என்ன கிண்டல் பண்றாய் ? என்று வெகுண்டு கேட்டார். பிரம்பாலே சட் என்று ஒரு அடி போட்டார்.சாதாரணமா அவர் அடிக்கவே மாட்டார். பிரம்பு மட்டும் வச்சு இருப்பார்.

    பக்கத்து சீட் பையன் தான் துணைக்கு வந்தான். " மிஸ் அவனை அடிக்காதீங்க மிஸ்... "
    "
    "ஏனட...அவனுக்கு நீ சப்போர்ட் பண்றே ? "என்றாள் மிஸ்.

    "கோவிச்சுகாதீங்க மிஸ் அவனோட அம்மா பேரு லக்ஷ்மி பாய் மிஸ்" என்றான் என் நண்பன்.

    not joking. really happened sometime around 1953 or 54 when I was studying in IV Form.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in



    ReplyDelete
    Replies
    1. சுப்பு தத்தா அவர்களுக்கு,

      உங்கள் பின்னூட்டம் நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
      நன்றாகவே ரசித்து படித்திருக்கிறீர்கள். நன்றி.
      Truth is stranger than fiction என்பது இதுதானோ?
      நன்றி உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  6. ராசியில்லாமல் இருந்த வரலாறு ராசிக்கு ராசியாய் போன ரகசியம் என்ன இனியும் திட்டுவிழும் என்று வரலாறு பயந்துவிட்டதோ

    ReplyDelete
    Replies
    1. ஒரே வார்த்தை விளையாட்டாய் இருக்கிறதே மலர் உங்கள் கருத்து.

      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete

  7. on hindsight எல்லாமே நகைச்சுவையாகத் தெரியும். ஆனால் சம்பவங்கள் நடந்தபோது.....? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் GMB சார் . நிறைய விஷயங்கள் பின்னாளில் நகைச்சுவையாய் இருக்கும். ஆனால் நிகழ்ச்சி நடக்கும் போது....?
      பெரிய தலைவலி தான்.
      நன்றி உங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  8. Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும்,ரசித்து படித்ததற்கும்.

      Delete
  9. மிகவும் ரசித்துப் படித்தேன்
    முடிவு பஞ்ச் ரொம்ப ரொம்ப அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், வருகைக்கும், வாழ்த்துக்கும். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சொல்ல மிஸ் பண்ணி விட்டேன்.இப்பொழுது தான் பார்த்தேன். ரொம்பவே லேட்டாகி விட்டது நன்றி சொல்ல.
      அதனால் நன்றி! நன்றி!(double)

      Delete
  10. கிட்டே வாருங்கள்... ஒரு ரகசியம் சொல்றேன்... நானும் கூட உங்க தோழி ராசியைப்போல ஆங்கிலேயரையும், மெளரிய-குப்தர்களையும் திட்டிக் கொண்டிருந்தவன்தான். அதிலயும் வருஷங்களை நினைவு வெச்சுக்க பெரும் போராட்டமே நடத்துவேன். பின்னாள்ல சாண்டில்யன் கல்கி மாதிரியானவங்க கதையப் படிக்கறப்ப வரலாறு மேல இருந்த வெறுப்பு காணாமப் போய்டுச்சு. உங்கள் எழுத்து இயல்பான நகைச்சுவை உணர்வோடு இருப்பதால் ரொம்பவே ரசிக்க முடிகிறது என்னால்! கெளசி டீச்சரின் கடைசி பன்ச் - சூப்பர்ப்!

    ReplyDelete
    Replies
    1. வருஷங்களை நினைவில் வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.சாண்டில்யன், கல்கி நாவல்களில் கதையில் கூட வருடம் எல்லாம் எழுதி அதற்கு சான்றுகள் வேறு கொடுத்திருப்பார்கள் .
      ஆச்சர்யமாய் இருக்கும்.ஆனால் அது தான் கதையை உயிரோட்டமாக்கும் என்பது புரிகிறது.

      நன்றி பால கணேஷ் சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
    2. கரெக்ட் மேடம்! சரித்திரக் கதைகளிலும் வருடங்கள் எல்லாம் வரும். ஆனால் அதை நினைவில் வைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் கதைகள் மூலம் படிக்க இனிக்கும்தானே! மனப்பாடம் செய்யும் நமது பாட முறையை மாற்ற வேண்டும் என நான் விரும்புவது இந்த ஒரு விஷயத்திற்காகத்தான்!

      Delete
    3. மீண்டும் வந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி சார்.

      Delete
  11. உங்கள் தலைமையாசிரியரின் 'இன்னிக்கு வகுப்பையும் மிஸ் பண்ணினால் என்ன ஆவது?' என்ற கேள்வி ரொம்பப் பிடித்திருந்தது.

    வரலாற்றில் சரித்திரம் படைத்த ராசிக்கு எங்கள் பாராட்டுக்களையும் சொல்லுங்கள்.

    உங்கள் நகைச்சுவையை ரொம்பவும் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. எங்கள் தலைமை ஆசிரியரின் கேள்வி உங்களுக்குப் பிடித்திருக்கிறது.
      ஆனால் அன்றைக்கு கௌசல்யா டீச்சரின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே!

      ராசியிடம் உங்கள் பாராட்டுக்களை தெரிவித்து விடுகிறேன்.

      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ரஞ்சனி.

      Delete
  12. வரலாற்றுப் பாடத்தில் படித்த போர்களின் எண்ணிக்கையைவிட ராசி அதன்மேல் கொண்ட போர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறதே.பதிவு முழுவதும் ஒரே கலகலப்பு.நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றாகவே ரசித்திருக்கிறீர்கள் சித்ரா.
      நன்றி உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  13. கௌசல்யா டீச்சர் சொன்னது தான் பன்ச் " ராசி, நீ வரலாறு பாஸ் செய்து சரித்திரம் படைத்து விட்டாய் " என்று.//

    அருமையான நகைச்சுவை பதிவு எழுத ராசி உதவினார்.
    எனக்கு சரித்திரப் படம் மிக பிடித்த பாடம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பப் பாடம் வரலாறு என்பது ராசிக்குத் தெரிந்தால் அவள் கோமதிக்கு கோவில் கட்டி விடுவோம் என்பாள்.
      நன்றி கோமதி உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  14. இந்த வரலாறு நமக்கும் தகராறு பிடிச்ச விஷயம் தான்.... பிடிக்கவே பிடிக்காது.

    என் வரலாறு ஒன்றினை ஒரு முறை எழுதி இருக்கிறேன் - http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post_25.html இங்கே பாருங்க!

    எனது நினைவுகளையும் மீட்டெடுத்தது உங்கள் நகைச்சுவை பகிர்வு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி உங்கள் பாராட்டிற்கு.
      உங்கள் வரலாறினை படித்து கருத்திடுகிறேன்.

      Delete
  15. :) nice one Raji madam! :) I never slept in history class, in fact I like it a lot! Once I slept in chemistry class though! ;) yaar kittavum sollidaatheenga, this is a secret! :)

    I can imagine your friend's position in the school. Good that she has improved now! :)

    ReplyDelete
    Replies
    1. Rasi faced difficulty with Social studies. But not anymore. She is telling History stories to her grandchildren sothat they don't face the same problem which she faced.

      thanks for your appreciative comments.

      Delete
  16. ஆஹா, ஆஹா,அற்புதம் அமர்க்ளப்படுத்தி விட்டீர்கள்! யாருங்க அந்த திருமதி ராசி, கொஞ்ச கண்ணுல காட்டுங்களேன்! நான் அவங்க fan ஆகிட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ராசியின் fab club இல் மெம்பர் ஆகிவிட்டீர்களா? சந்தோசம்.
      ராசியைப் பார்க்க வேண்டுமா? கொஞ்ச நாள் பொறுங்கள்.இரண்டு வருடம் தான்.
      அப்புறம் சூப்பர் சிங்கரில் பார்க்கலாம். பாடுவதைக் கேட்டால் மயங்கி விடுவீர்கள் மஹா.
      உங்கள் வருகைக்கும், அருமையான பாராட்டிற்கும் மிக்க நன்றி மஹா.

      Delete
  17. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள். சென்று பாரவையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_13.html?showComment=1386903488180#c7173699904790276264

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ரூபன் சார்.

      Delete
  18. பாவங்க அவங்க வேதனை நமக்கெல்லாம் சிரிப்பாய் இருக்குது... எப்படியோ பாஸாயிட்டாங்களே...

    ReplyDelete


  19. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)
    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr
    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    (இன்றைய எனது பதிவு
    "இந்திய குடியரசு தினம்" கவிதை
    காண வாருங்களேன்)

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்