Sunday 31 August 2014

ராசிக்கு வந்த சோதனை












ராசி  காலை  எழுந்ததும் அன்று ஒரே பரபரப்பாக இருந்தாள் . காலை எழுந்ததும்  தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தாள் . பக்கத்து வீட்டிலிருந்து மாமி ," ராசி......என்ன ஆச்சு ருக்குவிற்கு ? இன்றைக்கு . வரவில்லையா? " என்று கேட்கவும், சோகமாக " இல்லை மாமி :" என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் .

உள்ளே நுழைந்ததும் விஷ்ணு எதிர்பட்டார். " என்ன ஆச்சு ? நீ கோலம் போடுகிறாய்? ருக்கு  வரவில்லையா ? "  என்று கேட்கவும்  இ....ல்....லை......என்று சலிப்பாகப் பதில் வந்தது ராசியிடமிருந்து .

" அதற்கு ஏன்  இப்படி சலித்துக் கொள்கிறாய். ? ஒரு நாள் தானே.....நாளை வந்து விடுவாள். முடிந்த வேலைகளை செய். இல்லையெனில் விட்டு விடு. நாளை அவளே வந்து செய்யட்டும் ." என்று விஷ்ணு சொல்லவும்,

" இல்லை... இனி அவள் வரவே மாட்டாள் " என்று ராசி சொல்லவும் திடுக் என்று தூக்கி வாரிப் போட்டது விஷ்ணுவிற்கு.

" நேற்றுக் கூட  நல்லாத் தானே இருந்தாள் .....  வீடு பெருக்கினாளே. என்ன உடம்பு வந்தது அவளுக்கு ? " என்று விஷ்ணு கேட்கவும் .

ராசி அவரைப் பார்த்து, " அவள்  இப்பவும் சௌக்கியமாகத் தான் இருக்கிறாள்.
நம் வீட்டிற்குத் தான் இனிமேல் வரமாட்டாள் என்று சொன்னேன்." என்று எரிந்து விழுந்தாள்.

" ஏன் ?  அவளுக்கு புது டிகாக்ஷனில் காபிப் போட்டுக் கொடுப்பதென்ன, இருவருமாக டிவி சீரியல் பற்றிய சந்தேகங்களை  தீர்த்துக் கொள்வதென்ன? கடைக்கு அவளைத் துணைக்கு  அழைத்துப் போவதென்ன .... என்று ஓருயிரும் ஈருடலும் போலல்லவா  இருந்தீர்கள். என்ன சண்டை உங்களுக்குள் ? " என்று கேட்கவும்  பயங்கரக் கோபம் ராசிக்கு.

" என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறதா உங்களுக்கு.....'சிங்க்' பாத்திரமாகப்  பொங்கி வழிகிறது . அத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூட நின்ற படியே செய்து விடலாம். ஆனால் வீடு பெருக்கித் துடைப்பது என்பது.....ஹப்பா....உதவி செய்யா விட்டாலும் இந்தக் கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை."என்று ராசி கோபப் பார்வை வீசவும் ...விஷ்ணு  அவளை சமாதானப் படுத்த முயன்றார்.

" சரி, இவள் போனால் என்ன?  வேறு யாரையாவது பிடி. பக்கத்து பிளாட்டிற்கு வருபவளைக் கேட்டுப் பார்ப்பது தானே. "

"அவள் வர மாட்டாளாம்."

" ஏன்? " விஷ்ணு ஆச்சர்யமாய் பார்க்கவும் ,

" என் கணவன் என் தோழன்" பார்ப்பியாஅப்படின்னு என்னை அவள் கேட்டதற்கு , நான் பார்ப்பதில்லை என்று சொன்னதும். அப்படின்னா என்னால் வேலைப் பார்க்க முடியாது என்று பட்டென்று சொல்லி விட்டாள் ," என்று ராசி சொல்லவும்.....

இப்படியெல்லாம் கூடவா கண்டிஷன் போடுவார்கள். நான் கூட ஆபிசில்  எனக்கு  ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்தால் தான் வேலை பார்க்க வரும் என்று சொல்லலாமோ ... நினைத்துக் கொண்டே ஆபீஸ்  போனார்.

அன்று மாலை வரும் போதே ராசியைப் பார்க்க பாவமாயிருந்தது.  " வேறு ஒருவரும் உதவிக்குக் கிடைக்கவில்லையா " என்று கேட்டுக் கொண்டே காபிக் குடித்தார்.

" எதிர்  வீட்டிலிருப்பவர்களுக்கு வேலை செய்யும் சாந்தி, நாளைக் காலை ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாக சொல்லியிருக்கிறாள் ." என்று ராசி நம்பிக்கையுடன் சொல்வதைப் பார்த்த விஷ்ணுவிற்கு,  நாளையாவது  ராசிக்கு உதவி  கிடைக்கட்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டார்.

மறு நாள் காலை  விஷ்ணு, காபிக் குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ,

"டிங் டாங் " வாசல் மணி இசைத்தது.

விஷ்ணு தான் போய் கதவைத் திறந்தார். இரண்டு பெண்மணிகள் நின்றிருந்தார்கள்.

" அம்மா இல்லையா ? " என்றார்கள்.

" ராசி...... " குரல் கொடுத்தார் விஷ்ணு.
"யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள் " சொல்லி விட்டு ஹாலில் உடகார்ந்து,  பேப்பரை விட்ட இடத்திலிருந்து  தொடர்ந்தார்.

ராசி வந்தவர்களுடன் உரையாடுவது காதில்விழுந்தது.

"அம்மா.... நீங்கள் வேலைக்கு  ஆள் வேணும் என்று கேட்டிருந்தீர்களே. இவங்க பேர்  கவிதா . இனிமே நீங்க  பேசிக்குங்க அம்மா. நான் போறேன் ."  என்று சொல்லி விட்டு நகரவும்.
ராசி எப்படி இன்டர்வியு  செய்கிறாள் என்பதை ஆர்வத்துடன் கவனிக்கலானார் விஷ்ணு.

" கவிதா தானே உன் பேரு ....நல்லாருக்கு பேரு " ஐஸ் வைக்க ஆரம்பித்தாள்  ராசி.
அதற்குள் கவிதா பேச ஆரம்பித்தாள் .

"நீங்கள் எத்தனை பேர் வீட்டில் ?"  சென்சஸ் எடுப்பவர் மாதிரி கேட்டாள்  கவிதா.

"இரண்டு பேர் தான் கவிதா " பதில் சொன்னாள்  ராசி.

" டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்  எல்லாம் இருக்கா? " அடுத்தக் கேள்வி வந்து விழுந்தது.

" இருக்கே. நான் சீரியல் எல்லாம் கூட பார்ப்பேன்." என்று முந்திக் கொண்டாள்  ராசி.

" பாத்திரம் எவ்வளவு  போடுவீர்கள்? "

" ஜாஸ்தி இல்லை "

" காலையில் என்ன டிபன் தினமும். ? "

" இட்லி, தோசை  பூரி,......" இழுத்தாள்  ராசி.

அடுத்தக் கேள்வி....
" கெசட்  உண்டா ? "

புரியவில்லை ராசிக்கு. விஷ்ணுவிற்கும் தான்.

என்ன கேசட் ? ஒருவேளை டிவிடி எல்லாம் போட்டுக் காட்ட வேண்டுமோ. என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

" அதாம்மா   விருந்தாளிகள் அதிகம் வருவார்களா ? ஓ ...கெஸ்ட்  என்பதைத் தான் அப்படி கேட்டிருக்கிறாள்  என்று நினைத்துக் கொண்டாள் ராசி.

"அதிகம் எல்லாமில்லை. எப்பவாவது தான்  வருவார்கள் " சமாளித்தாள் ராசி.

அப்பவே விஷ்ணுவிற்குப் புரிந்துப்  போனது ," இவள்  சரிப்பட மாட்டாள் " என்று. அவள் சம்பள விவர எல்லையைத் தொடுவதற்குள் .....

கேட் சத்தம் பெரிசாக  கேட்டது. வந்தது  எங்கள் வீட்டுப் பழைய உதவிப்பெண்மணி   ருக்கு ......

இதென்ன இவள் இத்தனை ஆக்ரோஷமாக வருகிறாள் என்று ஜன்னல் வழியே பார்த்தவாறு இருந்தார் விஷ்ணு.

வந்தவள் முதலில் கவிதாவைப் பார்த்துக் கத்தினாள் ," த.....எந்திரி. நான் வேலை செய்ற ஊட்டுலே உனக்கென்ன   வேலை. ஒரு வாரம் அவசரமாய் ஊருக்குப் போனால்  நீ உடனே என் வயிக்கு வருவியா. உன்னை .,....என்ன செய்யறேன் பார். வூட்டாண்ட  வந்து உன்னை கவனிச்சிக்குறேன்....." என்று மிரட்டவும். பதிலுக்கு கவிதா ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும்,

" வாயை மூடிக்கினு, கம்முனு போ .." என்று மிரட்டி அனுப்பி வைத்தாள் ருக்கு.

இப்ப ராசியைப் பார்த்து, "  ஒரு வாரம் லீவு போட்டால் உடனே ஆளை மாத்திடுவாயா? அவசரமா ஊருக்குப் போக வேண்டியிருந்தது. மூத்தாருக்கு கை கால் உயிந்துருச்சுன்னு  ஓரகத்தி  போன்ல ஓன்னு அய்வுது . தாங்க முடியாம போய் கண்டுகினு வந்தேன்.. அதுக்குள்ள.....இன்னா கலாட்டா பண்ணிகினே நீய .  அய்ய......                இன்னா ? " என்றதும் தான் ராசிக்கு மூச்சே  வந்தது.

"ஒரு வாரம் முன்னாடி நீ தானே கோச்சுகிட்டு  நான் வந்தேன்னா என் பேரு ருக்கு இல்லன்னு  சொல்லிட்டுப் போனே. அதுக்குப் பிறகு வரவேயில்லையே . அதனால் தான் ..."தடுமாறினாள் ராசி.

"அன்னைக்கு இன்னாவோ கோபம். அதுக்காவ  வராமலே நான் இருந்தா
உட்டுடுவியா. வூட்டாண்ட வந்து என் தல மேல நாலுப் போட்டு என்னை நீ இஸ்துகினு வரதாவல ....இன்னா ஐயா நான் சொல்றது " என்று விஷ்னுவைப் பார்த்துக் கேட்க.....

விஷ்ணுவோ , " நீயாச்சு....... உன் அம்மாவாச்சு " என்று பிரச்சினை தீர்ந்த 
நிம்மதியில்  குளிக்கக் கிளம்பினார்.

ராசிக்கும், விஷ்ணுவிற்கும் ஒன்று நன்றாகப் புரிந்தது. உதவிக்கு ஆள் கிடைப்பதுக் கஷ்டம் என்று . நல்ல ஆட்களாக கிடைப்பது  அதை விடவும் கஷ்டம்.

மீண்டும் பாசமான ருக்கு வந்தாளோ  பிழைத்தாள் ராசி ........கவிதா மாதிரி ஆட்களை உதவிக்கு வைத்துக் கொண்டால் ., ராசி தான் கவிதாவிற்கு உதவ வேண்டியிருந்திருக்கும்.

image courtesy---google.

28 comments:

  1. //" என் கணவன் என் தோழன்" பார்ப்பியாஅப்படின்னு என்னை அவள் கேட்டதற்கு , நான் பார்ப்பதில்லை என்று சொன்னதும். அப்படின்னா என்னால் வேலைப் பார்க்க முடியாது என்று பட்டென்று சொல்லி விட்டாள் ,"//

    :)))))

    நல்லதொரு நகைச்சுவை விருந்து. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், நகைச்சுவையை ரசித்து[ப் படித்ததற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  2. உண்மைதான் அம்மா வீட்டு வேலைக்கு நாம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது
    என்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை அப்படியும் ஒருவர் கிடைத்த
    நிலையில் சின்னச் சின்ன மனஸ்த்தாபங்கள் வந்து ஒருவர் வெளியேற
    இன்னொருவர் வந்தாலும் முன்பு வேலை செய்தவர்கள் போல் இவர்கள்
    இருப்பார்கள் என்பதில் என்ன நிட்சயம் !ருக்குவின் வருகையானது நிட்சயம்
    இந்தத் தம்பதியினர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்வையே தந்திருக்கும் .சிறப்பான
    கதை !முடிவும் மனதைத் தொட்டுக்கொண்டது .இலகுவான உரைநடையில் தாங்கள்
    எழுதிய ஆக்கம் மிகவும் சுவாரச்சியமாக இருந்தது .உங்களுக்கு என்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பூரண நலம் அடைந்திருப்பீர்கள் ன்று நம்புகிறேன். உங்களின் சிரமத்துக்கிடையில் என் தளத்திற்கு வருகைத் தந்து ருக்குவின் வருகையை வெகுவாக சிலாகித்துப் பாராட்டியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது,
      உங்களின் வருகைக்கும், பாராட்டுரைக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      Delete
  3. .ஹா..ஹா... ஹா...

    உண்மைதான். இதே அனுபவத்தை நான் கூட ஒரு கதையாக எழுதி இருந்தேன். படித்திருப்பீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்திருக்கிறேன் ஸ்ரீராம் சார். அதீதம் இதழில் வந்ததைத் தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  4. ஹும்... நல்ல வேலைக்காரர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னுதான் பாடணும் போலருக்கு... பாருங்களேன்... ராசி என்ன பாடு பட்டுட்டாங்கன்னு... (ராசிக்குத் தான் பாடு.... நமக்குச் சிரிப்பில்ல..?)

    ReplyDelete
    Replies
    1. வருகைப் புரிந்து , ரசித்துப் படித்து சிரித்ததற்கு நன்றி கணேஷ் சார்.

      Delete
  5. வழக்கம் போலவே இதுவும் சிக்ஸர்!
    :-)
    பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டுரைக்கும் நன்றி பாண்டியன்.

      Delete
  6. என்னோட சுபாவத்துக்கு வேலைக்கு ஆட்களை வைத்துக் கொண்டாலே சரிப்பட்டு வரதில்லை. :))) ஆகவே இந்த எதிர்பார்ப்பே என்னிடம் இல்லை. முடிஞ்சவரை செய்யலாம்; இல்லைனா பார்த்துக்கலாம் தான். கையில் தீப்புண் வந்தப்போ பாத்திரம் மட்டும் தேய்க்க எதிர்வீட்டில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து வைத்துக் கொண்டேன். அந்தப் பெண்ணை அப்புறமா கை சரியானதும் நிறுத்தும்போது நான் தொடர்ந்து வேலை செய்வேன் எனப் பிடிவாதம் பிடித்தாள். நான் தான் இப்போ வேண்டாம்; தேவைனா கூப்பிடறேன்னு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன். //

    போயிருக்கானு தெரியலை, அதான் மறுபடி அனுப்பறேன். 2,3 இருந்தால் ஒண்ணை மட்டும் வைச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுங்க. :)))

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் அவர்களின் வருகை, உதவிக்குப் பதிலாக உபத்திரவத்தைக் கொடுக்கும் அனுபவங்கள் உண்டு. ஆனாலும், அவர்கள் இல்லாமல் வேலை நடப்பதில்லை. ராசி மட்டும் விதிவிலக்கா.......
      உங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  7. அன்றாடக்காட்சிகளை சுவாரஸ்யமான பகிர்வாக்கியமைக்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  8. எங்க வீட்லயும் இப்படி ஒருவர் இருக்கிறார்... ஆனால் அவரின் இஷ்டம் தான் வருவதும் லீவு எடுப்பதும்.... ஏதேனும் ஒரு நாள் ரெகுலராக செய்யும் வேலைகளின் கூடவே வலிய நிறைய வேலைகள் செய்தாரானால் அவர் லீவு எடுக்கப் போகிறார்னு தெரிஞ்சிக்குவேன்....

    ReplyDelete
    Replies
    1. ஓ......உங்கள் வீட்டிலும் ருக்கு உண்டா. அவர்களை சமாளிப்பதே ஒரு கலை தான். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று ஒரு பதிவு எழுதுங்களேன்....

      என் பதிவிற்கு வருகை புரிந்து கருத்திட்டதற்கு நன்றி எழில்.

      Delete
  9. நல்லவேளை - ராசி பிழைத்தாள்.. கூடவே - நாங்களும் தான்!...

    பின்னே - ருக்கு வராமல் போய் -
    வேலைச் சுமையால் ராசி கஷ்டப்பட்டு - கண்ணீர் விட்டால்!?..

    அப்பப்பா... பெண் பாவம் பொல்லாதது!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு, நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி துரை சார்.

      Delete
  10. மிக அருமையான நடையில் அப்பட்டமான உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் ப்வீட்டில் நிலைமை எப்படி இருக்கிறதுன்னு போய்தான் பார்க்கணும். உதவிக்குத்தான் வருகிறார்கள் .நாமும் முடிந்த அளவு உயர்ந்த சம்பளமே கொடுக்கிறோம். இருந்தாலும் உதவி பாதி.பாதிப்பு பாதி என்று இருக்கத்தான் செய்கிறது,. நல்ல நகைச் சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள் ராஜி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி வள்ளி மேடம். நீங்கள் சொல்வது போல் உதவி பாதி தான் கிடைக்கிறது. ஆனாலும் என்ன செய்வது......

      Delete
  11. வீட்டு வேலை செய்கிறவருக்கும் அந்த வீட்டம்மாவுக்கும் நல்ல புரிதல் வேண்டும். எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்கள் எல்லோரும் லக்கிலி ரொம்ப நல்லவர்கள்,

    ReplyDelete
    Replies
    1. பால் கணேஷ் சார் சொல்வது போல் அவர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.
      வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி சார்.

      Delete
  12. வேலைக்கு சேரும்போது இப்படியெல்லாம் கேள்வி கேட்பாங்களா ?

    ReplyDelete
    Replies
    1. இதோ கேட்டிருக்காளே. சில சமயங்களில் , உண்மை கதையை விடவும் சுவாரஸ்யம் நிறைந்தது என்று சொல்வது போல் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  13. அத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூட நின்ற படியே செய்து விடலாம். ஆனால் வீடு பெருக்கித் துடைப்பது என்பது.....ஹப்பா//

    உண்மை பாத்திரம் தேய்த்து விடுகிறேன் இந்த பெருக்கித் துடைப்பதுதான் பெரிய விஷயம். மெட்ராஸ் பாஸையில் வேலையாள் உரையாடல் மிக அருமை.
    பாசமான ருக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. இரண்டு நாட்கள் முன்பு நான் பட்டபாட்டைப் பார்த்துவிட்டு எழுதினாற்போல இருக்கிறது, ராஜி. ருக்குவைப்போலவே என் மீனம்மாவும் திரும்பி விட்டாள். நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு அதிகம் பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடுகள் தான் தேவையாக இருக்கிறது. ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்!

    ReplyDelete
  15. விஷ்ணுவை உண்டு இல்லை என்று பண்ணும் ராசி ருக்குவின் முன்னால் பேசுவதற்கே தடுமாறியதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

    வேலையாட்களை வைத்துக்கொண்டு படும்பாட்டை ராசியின் மூலம் நகைச் சுவையாக சொல்லியுள்ளது ரசிக்கும்படியாக உள்ளது.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்