Monday 19 May 2014

அழைப்பு தந்த வெகுமதி


















பிரபல பதிவர் திரு.வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால்  நடத்தப்படும்  கதை விமரிசனப் போட்டி  யாவரும் அறிந்ததே .  அனைத்து வாரமும் அந்த்ப போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடிவதில்லை என்றாலும் சில கதைகளுக்கு விமரிசனம் எழுதி வருகிறேன்.அதில்  'அழைப்பு ' என்கிற அவருடைய சிறுகதைக்கு  நான் எழுதியுள்ள விமரிசனம்  முதல் பரிசைத் தட்டிச்  சென்றுள்ளது.மகிழ்ச்சியடைந்தேன். முதல் பரிசினை என்னுடன் திரு. ரவிஜியும் வென்றுள்ளார்   என்பது கூடுதல்  மகிழ்ச்சியே!

பரிசு பெற வாய்ப்பளித்த கோபு  சாருக்கும், என் விமரிசனத்தைப்  பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்த நடுவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.


பரிசு பெற்ற என்னுடைய விமரிசனம் இதோ:

மங்களகரமான  திருமண அழைப்பிதழ் பற்றி  எழுதியிருப்பதைப்   படிக்கும் போது , வாசகர்கள் பலரும்  அவரவர் வீட்டில் நடந்த திருமண சம்பவங்களின்
தொகுப்பை  நினைவடுக்குகளிலிருந்து  உருவி எடுத்திருப்பார்கள்  என்பதில்
சந்தேகமேயில்லை. வாசகர்களை மகிழ்ச்சியான மன நிலைக்குக் கொண்டு போகும்  ஆசிரியருக்கு முதலிலேயே ஒரு பெரிய ' சபாஷ் '.

அனுபவங்கள்  தான் கதையாய்  மலர்கின்றன போலும்.. " அழைப்பு " படிக்கும்
போது இந்த என் எண்ணம் மேலும் வலுப்பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
அழைப்பிதழ் நாமே அச்சிட்டு  வினியோகிக்கும்  போது, அதற்குக் கொடுக்கும்
மரியாதையும், அதுவே நாம் அந்த அழைப்பிதழை பிறரிடமிருந்து பெறும் போது அதற்குக் கொடுக்கும்  முக்கியத்துவமும்  வேறு படும். .அதை நாம் இல்லை  என்று மறுக்க முடியாது. அதையே ஆசிரியரும் அழகியக் கதையாய்
பின்னியிருக்கிறார்.

ஆசிரியர் சொல்வது போல் , திருமணத்திற்கான வேலைகளை செய்வதற்கு,
காண்ட்ராக்டர்கள் இருக்கலாம். ஆனால் அழைப்பிதழ் கொடுக்க வேண்டியது நாம் தானே. நண்பர் சந்திக்கும் கஷ்டங்கள் மிக அழகாக,  யதார்த்தமாக  எடுத்து சொல்லியிருக்கும் விதமே அலாதி தான்.அவர் சொல்வது போல்  வெளியூரில் இருப்பவர்களுக்கு தபாலில்  அனுப்பி விடலாம். அருகிலிருப்பவர்களுக்கு, நெருங்கிய உறவினர்களுக்கு என்று நேரில் அழைப்புக் கொடுக்க செல்லும்  போது  ஏற்படும்  சங்கடங்களை, அழகாய் நேரே பார்ப்பது போல் எழுதியிருப்பதற்குப்  பாராட்டியே ஆக வேண்டும்.

பட்டுப்புடைவை நகை நட்டுடன் மனைவியை  அழைத்துக் கொண்டு போய் எல்லோரையும் அழைக்க மனம் விரும்பினாலும்,வயது, டிவி நிகழ்ச்சிகள், என்று பல தடைகளைத் தாண்டி ,நண்பர் அழைப்பு கொடுக்கப் போகும்  நிகழ்ச்சி விவரிப்பு படு யதார்த்தம்.மாடி, பிளாட், என்று லிப்ட் இல்லாத வீடுகளுக்கு  செல்லும் போது படும் அவதிகள் , வீட்டில் இருப்பவர்கள், கதவைத் திறக்க
தாமதாக்குவது, அப்படியே உடனேயே திறந்தாலும், டிவியில் ஒரு கண் வைத்துக் கொண்டே,  விளம்பர இடைவேளையில்  நம்மிடம் திருமணத்தைப் பற்றி  விசாரிப்பது , அப்படியே அவர்கள் வீட்டு பெண் அல்லது பிள்ளை கல்யாணத்திற்கு அஸ்திவாரம் போடுவது  என்று  உலக நடப்பை  அப்படியே கண் முன் நிறுத்தி விட்டார் ஆசிரியர்.ஆனால்  சங்கடங்களுக்குப் பின்னாடி ஒரு சந்தோஷம் இழையோடுவதை வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுதியதற்குப்   பாராட்டுக்கள்!.

 முன்னொரு சமயம் கடை நிலை ஊழியராயிருந்த ஒருவர் வீட்டிற்கு சென்ற போது தனக்குக் கிடைத்த வரவேற்பைப்  பற்றியும், அவர் கொடுத்த அழைப்பிதழை எப்படி உபயோகித்தார் என்பது பற்றியும் ஆசிரியர் உணர்வுபுர்வமாக எழுதியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பல வீடுகளில் அழைப்பிதழ்கள் படும்  அவதிகளை  வார்த்தைகளால் சொல்லி மாளாது. அதை உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறார் ஆசிரியர். அழைப்பிதழ்களுக்கு வாய் இருந்தால் புலம்பித் தீர்த்திருக்கும். அழைப்பிதழ்களின் உள்ளக் கிடைக்கையை வெளியிட்டதற்கு நன்றிகள் பல.

அழைப்பிதழுக்கு நடுவில் ஒரு சின்ன வம்பும் வைத்திருக்கிறார் ஆசிரியர்.
அழைப்பிதழ் கொடுக்கப் போன இடத்தில்  , போனோமோ, அழைத்தோமா என்றில்லாமல் அதுவும் வீட்டிற்கு உரியவர்கள் இல்லாத நேரத்தில், நண்பர் செய்கிற ஆராய்ச்சி நல்ல நகைச்சுவை. முதல் மனைவியா, இரண்டாவது மனைவியா......என்று ஆராய்வது............ ம்........ மனித மனத்தின் இயல்பை  பிட்டு பிட்டு வைத்து விட்டார் ஆசிரியர் என்றே சொல்ல வேண்டும்.

எத்தனை  சங்கடங்கள் வந்தாலும்,   அதை எல்லாம் சுகமான சுமைகளாக  எண்ணி மகிழ்ச்சியுடன் அழைப்பு கொடுக்கிறார் நண்பர் என்று சொல்லும் போது ஆசிரியரின் மகிழ்ச்சியும் அங்கே வெளிப்படத் தவறவில்லை.
திருமண நாளன்று , நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அனுபவத்தை  மிக சுவையாக ஒரு ஓவியமாக, வண்ணமாய் தீட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும்,

முகப்பில் செண்ட் அடிப்பதில் ஆரம்பித்து, வணக்கம் என்று தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் என்று எல்லோரும் சொல்வது, ..என்று நம்மையும் கல்யாண
மண்டபத்திற்குள் அழைத்து சென்று விட்டார் ஆசிரியர். கல்யாண மண்டபத்திற்குப் போய்  விட்டோம். சரி. யாராவது நம்மை சாப்பிடக்
கூப்பிடுவார்களா என்று பார்த்தால். ம்ஹூம்......யாரையுமே  யாரும்
கூப்பிடக் காணோமே. அவரவர்களாகவே சென்று சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில்  நம் விருந்தோம்பல் கலாசாரம் மெது மெதுவாக  மறைந்து வருவதை, ஆசிரியர் சாடுவதாகவே தோன்றுகிறது  எனக்கு.

அதற்குப் பிறகு நடப்பது  ஒரு சின்ன , ஆனால் செல்லமான சண்டை என்றே சொல்ல வேண்டும். மைத்துனர்களிடையே  நடக்கும் சண்டையை, செல்லச் சண்டை என்று சொல்ல வைத்தது ஆசிரியரின் சாமர்த்தியம். வீடு என்றால் சண்டை வம்பு எல்லாமே உண்டு .அன்பு இருக்கும் இடத்தில்  தானே உரிமை எடுத்துக் கொள்ளலாம்.அங்கே தான்  கோபப்படவும் முடியும். அப்படித் தான் சண்டை சம்பவத்தைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். சின்ன சின்ன உரசல்கள் சகஜமே என்பதைத்தான் ஆசிரியர் சொல்ல விழைகிறார். " குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை " என்பதை   இந்த சம்பவத்தின் மூலமாக ஆசிரியர் வலியுறுத்துகிறார் என்றே நான்  நினைக்கிறேன். .  இரு பக்கத்திற்கும் சேதாரம் இல்லாமல் தீர்ப்பும் சொல்கிறார் ஆசிரியர்.

ஆனால் தன நண்பருக்காக காலில் விழுந்து  மன்னிப்பு கேட்பது  தான் கொஞ்சம் இடிக்கிறது எனக்கு.இந்தக் காலத்தில் இப்படி நடக்குமா? சந்தேகமே..... ஆனால் ஔவையார்  தன நண்பன்  பாரி வள்ளலுக்காக , பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்ய உதவியது ஏனோ  என்
நினைவிற்கு  வருகிறது.

எப்படியோ திருமணம் பெரிய  சச்சரவில்லாமல்  முடிந்தது திருப்தியே.
அதற்குப் பிறகு வருவது தான்  ஆசிரியர் கொடுத்திருக்கும் பன்ச்.
வளைக்காப்பிற்காக திருமபவும் அழைப்புக் கொடுக்க  வேண்டிய  சூழ்நிலைக்குத்  தள்ளப்படப் போகிறார் என்பது  நண்பர்களுக்கு மட்டுமல்லாமல், படிக்கும் வாசகர்களுக்கும் மகிழ்ச்சித் தருவதாய் அமைகிறது.

மேலும் பல  மங்கள  அழைப்புகள் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்
கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் , படிக்கும் வாசகர்களுக்கும்  வளர
வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பாராட்டுக்கள் கோபு சார்.

இப்படிக்கு,
RajalakshmiParamasivam.
http://rajalakshmiparamasivam.blogspot.com

10 comments:

  1. அழைப்பு தந்த வெகுமதியை அழகாகத் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    முதல் பரிசினை வென்றதற்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய வாழ்த்துகள்.

    மேலும் மேலும் பல்வேறு பரிசுகளும் பெருமைகளும் தங்களுக்குத் தொடர்ந்து கிடைக்க அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  2. அன்புடையீர்..
    மேலும் பல பரிசுகளை அடைவதற்கு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.

    முதல் பரிசு பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல பரிசுகள் உங்களுக்குக் கிடைத்திடட்டும்...

    ReplyDelete
  4. முதல் பரிசினை வென்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. சிறந்த படைப்பின் சான்றே பரிசு!
    தொடர்ந்தும் சிறந்த படைப்புகளை ஆக்க
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அருமையான கதை! அதற்கான சிறப்பான விமர்சனம்! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ராஜலக்ஷ்மி. அங்கேயும் பார்த்தேன்.

    ReplyDelete
  10. விமர்சனப் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றதற்கு பாராட்டுக்கள். மேலும் பல பரிசுகளையும் பெற்றுக் குவித்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்