Saturday 30 December 2017

ராசியின் வேட்டை !

இது ஒரு மீள் பதிவு.(பதிவு மட்டுமே மீண்டது.)


அன்று இரவு ராசி நல்ல உறக்கத்திலிருந்தாள் . கணவர் விஷ்ணு,   டிவியில்  திரு.அர்னப் கோஸ்வாமி , வீட்டிற்குப் போய்  விட்டாரா என்பதை உறுதி செய்து கொண்டு   விட்டுப் படுத்தார். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார் .

ராசிக்குத் தீடீரென்று  முழிப்பு வந்தது. கணுக்காலில் ஏதோ  அரிப்பது போலிருக்க,  ராசி, கொசு கடிக்கிறது என்று நினைத்துக் கொண்டு காலை இழுத்து, போர்வைக்குள் பத்திரமாக  வைத்துக் கொள்ள முயற்சிக்க, 'குறு குறு 'வென்று  ஊர்வது ராசிக்குப்  புரிந்தது. சட்டென்று எழுந்து, லைட்டைப் போடவும், கரப்பான் பூச்சி ஒன்று  அவசரமாக  கட்டிலடியில் ஓடி ஒளிந்து கொண்டது.அதை ராசிப் பார்த்து விட்டாள் . ராசிக்கு  உடம்பெல்லாம் நடுங்கியது. கரப்பான் பூச்சி என்றால் அவ்வளவு பயம் அவளுக்கு. கார்கிலிற்கு போகச் சொன்னால்  கூடப்  போய்    போரிட ரெடி.. ஆனால் இந்தக் கரப்பான் பூச்சி , அவளை  நடுங்க வைத்து விடும்.

விஷ்ணுவைப் பார்த்தாள் ராசி. அயர்ந்த உறக்கத்திலிருந்தார் விஷ்ணு. இந்த கரப்பான் பூச்சியை  அடித்து நொறுக்கா விட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வரப் போவதில்லை  ராசிக்கு. என்ன செய்வது? அறையின் கதவிற்குப் பின்னால் சாத்தியிருந்த துடைப்பம் கண்ணில் பட அதை எடுத்து  கட்டிலடியில் விட்டு ,"மடார்,மடார் " என்று அடித்ததில், கட்டிலின்   தூக்கத்திலிருந்த விஷ்ணு முழித்துக் கொண்டார். அவர் கண் விழித்துப் பார்க்கவும், ராசி கையில் ,துடைப்பத்தை செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழவும் சரியாக இருந்தது.

விஷ்ணுவிற்கு இந்தக் காட்சி பிடிபடவில்லை. அதுவும் சற்று நேரத்திற்கு முன்பாகத் தான் டிவியில் தேர்தல் செய்திகள் பார்த்திருந்தார். அதனால் ஒருவேளை தேர்தல் சின்னத்துடன் யாரோ ஓட்டு சேகரிக்க வந்திருக்கிறார்கள் என்று தான் முதலில் நினைத்தார். நன்கு கண்ணைக் முழித்துப் பார்க்கும் போது தான் புரிந்தது  ராசி தான் இப்படி துடைப்பமும் , கையுமாக நிற்கிறாள் என்பது.

"எதற்கு, இந்த நேரத்தில் பெருக்குகிராய். காலையில் பார்த்துக் கொள்ளலாமே "
என்று விஷ்ணு சொல்ல,

" உங்களுக்கு என்னைப்  பார்த்தால்,கிண்டலாக இருக்கிறதா? இந்த நேரத்தில் பெருக்க நான் என்ன பைத்தியமா? கரப்பான் பூச்சியை அடிக்கிறேன் ." என்று ராசி எரிச்சலாகச் சொன்னாள் .

" அப்படியா " என்று கேட்டு விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டே விஷ்ணு ," அதான் அடிச்சாச்சு இல்லையா ?  படுத்துத்  தூங்கு  "   என்று அசால்டாக சொல்ல ராசி  கோபத்தையடக்கிக் கொண்டு கட்டிலடியில் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் . எதுவும் வெளியே தலை நீட்டவில்லை.சரி.செத்துத் தொலைந்திருக்கும்  என்று நினைத்துக் கொண்டு லைட்டை அனைத்து விட்டுப் படுத்தாள் . கண்ணயரத் தொடங்கினாள் ராசி. எதற்கு வம்பு என்று தலையோடு கால் வரைப் போர்த்திக் கொண்டிருந்தாள்  ராசி.

" விர் " என்று சத்தம் வந்தது.மெதுவாகப்  போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள் ராசி. நைட் லேம்ப்  வெளிச்சத்தில் ஒன்றும் புரியவில்லை  அவளுக்கு. திரும்பவும் உறங்கத் தொடங்கினாள் . திரும்பவும் " விர் "  சத்தம். ஃபேன்  சத்தத்தைத் தாண்டிக் கேட்டது.

இன்றைக்கு நம் தூக்கம் போச்சு  என்று நினை த்துக் கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தாள்  ராசி. இப்பொழுது  எந்த சத்தமும் கேட்கவில்லை ராசிக்கு. லைட்டை அணைக்க  சுவிட்ச்  அருகே கையைக் கொண்டு போகும்போது தான் பார்த்தாள் ராசி, தான் அடித்துக் கொன்றதாக நினைத்த கரப்பான் பூச்சி கரெக்டாக சுவிட்ச் மேல் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இவள்  " ஆ "வென்று அலற  விஷ்ணு அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.

" இப்ப என்ன ஆச்சு " விஷ்ணு கேட்க,

"க ,,,,,க,,,,,,,கரப்பான் .நான் அடித்தது ,சாகவில்லை . இதோ இருக்கு " என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சுவிட்ச் போர்டைக் காட்டினாள்  ராசி.

" அதே கரப்பு  என்று உனக்குத் தெரியுமா? " விஷ்ணு விசாரிக்க, ராசிக்கு வந்ததே கோபம்.

" ரொம்ப முக்கியம் இந்த ஆராய்ச்சி இப்ப " என்று கடுகடுத்தாள்  ராசி.

" நான் அதற்கு சொல்லவில்லை. அதோ பார் அங்கே "என்று சுவற்றில்  மாட்டியிருந்த, இவர்களுடைய  போட்டோவைக் காட்ட , அங்கே இன்னொரு கரப்பான் பூச்சி  அட்டகாசமாய் அமர்ந்திருக்க, அதை அடிக்க வேகமாய் துடைப்பத்தை  எடுக்க ராசி நகர , 'போட்டோ கரப்பான் பூச்சி'  விமானம் போல் சர்ரென்று  " டேக் ஆப் " ஆனது. அதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ ,அதனுடைய சகாவும்  தன்  இறக்கையை விரித்துக் கொண்டு,  கிளம்பியது.

ராசி அப்படியே தரையோடு தரையாக ( குண்டு ஏதோ விழப் போவது மாதிரி நினைத்துக் கொண்டு ) அமர, கரப்பான்களும்,  அவளை எப்படி "கேரோ " செய்யலாம் என்று மாநாடு போடுவது போல்  தரையில் அவளருகில்  அமர்ந்தது. கிடு கிடு என்று கரப்பான்  கூட்டம்  சேர்ந்தது.  இரண்டு, நான்கு , எட்டு,   என்று  பெருகிக் கொண்டே  போனது.  ராசி  பயந்தது போதும் , பொங்கி எழுவோம்  என்று நினைத்தாளோ  என்னவோ தைரியம் எல்லாம் திரட்டிக் கொண்டு ,  கையில் கிடைக்கும் தினசரிகள் , புக், டிவி ரிமோட், என்று எல்லாம் வைத்து அவள் அடிக்க ஆரம்பிக்கவும், இப்பொழுது எல்லா  கரப்பான்களும்,   பட படவென்று பட்டம்  போல் பறக்க ஆரம்பித்தன. செய்வதறியாது, ராசி, விஷ்ணு இருவரும் திகைத்து, இருவரும் கையில் கிடைத்தைஎல்லாம் வைத்துக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்று கூட  இவர்களுடைய அடிக்குக் கிடைக்காமல்  இவர்களுக்குப் போக்குக் காட்டி தப்பித்துக்  கொண்டிருந்தன.

அடுத்து என்ன செய்யலாம் என்று போர் வியூகம் அமைப்பது மாதிரி, தலையில் கை வைத்துக் கொண்டு  குனிந்தபடியே ராசி அமர்ந்திருக்க , விஷ்ணுவோ , நின்ற இடத்திலேயே ,  கையில் அன்றைய தினசரியை நீளமாய் சுருட்டிக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார். தீடீரென்று ராசி தலையில்  இடியாய் விழுந்தது ஒரு அடி. விஷ்ணு தான் பேப்பரால் தான் அடித்தார். ராசி கோபத்துடன் சட்டென்று நிமிரவும் , அவள் தலையிலிருந்து செத்த கரப்பான்  ஒன்று நச்சென்று விழுந்தது.   " என்னா அடி! " என்று புலம்பினாள் .


இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல். இருவரும் அறையை விட்டு ஹாலுக்கு வந்து , ஆளுக்கு ஒரு சோபாவில் படுத்துக் கொண்டனர். நீங்கள் இங்கே வந்தால் விட்டு விடுவோமா என்பது போல் இங்கே  சில கரப்பான்கள் காத்திருந்தன. இவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக இவர்களை நோக்கி நகர , விஷ்ணு ஒரு அற்புதக் காரியம் செய்தார்.  சமையலறைக்கு சென்று கையில் கிடைக்கும், கின்னம், டப்பா, டம்ளர் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து ஒவ்வொரு கரப்பானையும் தனித்தனியாக சிறைப் பிடித்தார். கவுத்து ,கவுத்து  வைத்து  விட்டு அப்படியே தூங்கிப்  போனார்.ராசி தான் பாவம் இமையோடு, இமை மூடவில்லை. பாவம் பயத்தில் உறைந்து  விட்டாள் .

பொழுது விடிந்தது. இவர் கவிழ்த்து வைத்திருந்த  ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்து எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்வது பெரிய காரியமாக  இருந்தது விஷ்ணுவுக்கு.. டிவி ஸ்டான்ட் அடியில், சோபாவிற்குப் ப் பின்னால் என்று ஓடி ,ஓடி ஒளிந்து கொண்ட கரப்பான்களை , தேடி தேடிப் பிடித்து அசந்து தான் போனார்.

ராசியோ இந்த டம்ளர், கிண்ணம், தப்பா எல்லாவறையும், டெட்டால் போட்டு அலம்பி வைத்துக் கொண்டிருந்தாள் . அறையில் இருந்த கரப்பான்களும்  காணமல் போய் விட்டன. எல்லாம் ஒழிந்தது என்று இருவரும் தீர்மானித்து ,
இரவு படுக்கப் போனார்கள்.லைட்டை அனைத்ததும், திரும்பவும்  எல்லா கரப்பான்களும், நைட் டூட்டி க்கு வருவது போல் வந்து சேர்ந்தன. திரும்பவும் எல்லா ஆக்ஷன்க்ளும் ரிபீட் . இரண்டு நாட்களாக ராசிக்கு சரியான உறக்கமில்லை.

தீடீரென்று எங்கிருந்து இவ்வளவு கரப்பான்கள் படையெடுக்கின்றன. இவ்வளவு நாட்களாக இல்லையே ! என்று இருவரும் குழம்பித் தவித்தார்கள்.

மறு நாள் விடிந்ததும், ஹிட் , ரோச்  ஜெல், லக்ஸ்மன் ரேகா  என்று விதம் விதமாக மருந்துகள் வீட்டில் வந்து குவித்தார் விஷ்ணு . அவருக்கும் ராசியைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது.. பயப்படாமல்  தூங்கு என்று அவர் சொன்னாலும், அவள் தூங்குவதாயில்லை.

இந்தக் கரப்பான்களும் , விஷ்ணுவின் மருந்துக்கு எல்லாம் அசையவேயில்லை.  நீ என்னவேனாலும் செய்து கொள் என்று இறக்கையை தூக்கி, மீசையை  ஆட்டிப்  பயமுறுத்திக் கொண்டிருந்தன. மறு நாள் எதேச்சையாய்  , கீழ் வீ ட்டில்  புதிதாக வந்திருப்பவர்களை  மாடிப்படிகளில் கையில் குப்பைக்  கூடையுடன்   பார்த்து சிநேகமாய் சிரித்து வைத்தாள்  ராசி. குப்பைக் கூடையில் அதென்ன  குவியலாய். "அய்யய்யோ  கரப்பான் பூச்சி யல்லவா இது.". இவர்கள் தான் நம் வீட்டிற்கும் கரப்பான பூச்சி சப்ளை செய்பவர்களா? ராசிக்குப் புரிந்தது. இவர்கள் சாமானுடன் சாமானாக வந்திருக்கின்றன.ஆனால் இவ்வளவா இருக்கும்? .....

யோசித்துக் கொண்டே மாடி ஏறினாள்  ராசி. விஷ்ணுவிடமும் சொன்னாள் . யார் சப்ளை செய்தால் என்ன  ? அதை எப்படி விரட்டுவது? அதைச்  சொல் என்றபடி  , " பெஸ்ட் கன்ட்ரோலிற்கு "  போன் செய்யத் தீர்மானித்தார்கள். " எவ்வளவு செலவாகுமோ தெரியவில்லையே "என்று நொந்து கொண்டாள் ராசி.அதோடு எப்போது அவர்கள் வருவது , நம் தொல்லை தீர்வது......அலுப்பாக இருந்தது ராசிக்கு.

தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என்று  போன் செய்து, கரப்பான்களை ஒழிக்க யோசனை கேட்டுக் கொண்டிருந்தாள் ராசி.

நான்   வீடியோவில்  சொல்லிய  சின்ன ட்ரிக்கை  ராசி செயல்படுத்தியிருந்தால்,  இப்படித் தூக்கம்  இல்லாமல்  அவள் சிரமப்பட்டிருக்க் வேண்டாம்!

என்ன ட்ரிக்? ....எங்கேயிருக்கு  வீடியோ?.... என்கிறீர்களா?

பதிவின் ஆரம்பத்தில் இணைத்திருக்கிறேனே!

அடக்கடவுளே! வீடியோ பார்க்க திரும்ப்பப் பதிவின் ஆரம்பித்திற்குப் போக வேண்டுமா? .....என்று சலித்துக் கொள்ள வேண்டாம்.

உங்கள் சௌகர்யத்திற்காக  இதோ மீண்டும் இணைக்கிறேன்.

                                    


 நன்றி !நன்றி!

5 comments:

  1. operation cockroach! இத்தனை கரப்பு என்றால் கஷ்டம் தான்.

    ReplyDelete
  2. எப்படியோ கரப்பான்கள் ஒழிந்து
    ராசி - ராசியாக இருக்க வேண்டும்..

    ReplyDelete
  3. ராசியும் விஷ்ணும்சூப்பர் புனைவு சகோ ரசித்தேன் சிரித்தேன் ஐயோ நிஜமாவே கார்கிலில் கூட போயி கலந்துக்கலாம் கரம் பூச்சி கூட மல்லு கட்ட முடியாது சொலுஷன் வீடியோ பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. கருப்பு ஹிட் ஒரு கரப்பான்கூட தப்பிக்காது வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்

    ReplyDelete
  5. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்