அன்று அதிகாலை எழுந்திருக்கும் போதே உடம்பு மிகவும் அசதியாக இருந்தது ஜானகிக்கு. காலை எழுந்தவுடன் டிபனை மட்டும் செய்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
முதுகை யாரோ அமுக்குவது போன்ற வலி . கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு படுத்தாள் ...........
ஜானகி மெல்ல யோசித்துப் பார்த்தாள் . தன மகள் கவிதாவை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது.
அன்று காலை எழுந்து வாசல் தெளித்து , வாசலை அடைத்துக் கோலம் போட்டு, செம்மண் இட்டு...........
காபி போட்டு தானும் குடித்து, வீட்டில் மாமனார், மாமியார், எல்லோருக்கும் போட்டு கொடுத்து விட்டு, குளித்து , பரபரவென்று சமையலை முடித்து தனக்கும், கணவனுக்கும், டிபன் பாக்ஸ் ரெடி செய்து , எல்லோருக்கும் சுட சுட டிபன் ரெடி பண்ணி , மாமியாரிடம்
இன்று மாலை வாங்கி வர வேண்டிய மருந்து பிரிஸ்க்ரிபஷன் வாங்கிக் கொண்டு, மொட மொடப்பான காட்டன் புடவை மடிப்பை சரி பார்த்தாள் .
பின் மொபெட் சாவியை விரலில் சுற்றிய படியே வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் .
கருநாகமாய் நீண்டு இங்குமங்கும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் நீள ஜடை , தாழம்பு நிறம், உயரம், உயரத்திற்கேற்ற பருமன், வாழைத்தண்டாய் கைகள், என்று எவ்வளவு அழகு என் மனைவி என்று பெருமையுடன் பார்த்தான் அர்ஜுன் .
அழகுக்கு போட்டிப் போட்டுக் கொண்டல்லவா இருக்கிறது, இவள் அறிவும் சாமர்த்தியமும்.
டிகிரி முடித்த கையோடு பேங்க் வேலையில் அமர்ந்து கொண்டு
முதுநிலை பட்டப் படிப்பு முடித்ததோடு.....C A I I B எல்லாம் பாஸ் செய்து கட கடவென்று பிரமோஷனில் இன்று வங்கி மேலாளராகி இருக்கிறாள்.
ஆனால் அந்தப் பதவியின் கர்வம் எதுவும் இல்லாமல், வீட்டில் இவளால் எப்படி வளைய வர முடிகிறது என்று ஆச்சர்யமாக இருக்கும் அர்ஜுணிற்கு,.
அவனும் ' பச்சை இங்'கில் கையொப்பமிடும் ஒரு அரசு அதிகாரி.
இருவருக்கும் கை நிறைய சம்பளம்.
கணவன் அர்ஜுன் வைத்த கண் வாங்காமல் தன் மனைவி கவிதாவை பெருமையோடு பார்த்தான்.
கவிதாவோ, " என்ன அப்படி பாக்கிறீங்க? எனக்கு பேங்க் கிற்கு லேட்டாகுது. கொஞ்சம் வழி விடுங்கள் . நீங்கள் என்ன ஆபிசிற்கு
கிளம்பு வில்லையா? " என்று கேட்டுக் கொண்டே ஒரு சின்ன துள்ளலுடன் படிகளில் இறங்கி மொபெட்டை ஸ்டார்ட் செய்து கேட்டை மூடி விட்டுப் போனாள் .
மாலை 6, 6.30 மணியளவில் கவிதா வீடு திரும்புவாள்.
வீடு திரும்பியவுடன் இரவு உணவை தயார் செய்து விட்டு தன மாமனார் மாமியாரிடம் சிறிது நேரம் அளவளாவிவிட்டு அர்ஜுன் வந்தவுடன் உணவருந்திவிட்டு படுப்பது வழக்கம்.
திருமணமான இந்த ஒரு வருடத்தில்
மாதத்தில் ஒரு முறை தன பெற்றோரையும் வந்து பார்க்கத் தவறியதில்லை.
திடீரென்று ஒரு குரல் ," ஜானகி ,ஜானகி, இங்கே பார் உன் குழந்தையை. சுவர்ண விக்ரகமாய் இருக்கிறாள் பார் உன் பெண் " என்று யாரோ சொல்வது கேட்டு ஜானகி கண் விழித்துத் தன் குழந்தையை ஆவலோடு வாங்கிக் கொண்டாள்.
நமக்கு குழந்தை பிறந்து விட்டதா என்ன ? என்று நினைக்கும் போதே
லேடி டாக்டர் அங்கு வந்தார்.
டாக்டர் "ஜானகி முதல் பிரசவமாயிருந்தும் கூட நல்ல ஒத்துழைப்பு தந்தாய் . அதனால் தான் சிக்கலில்லாமல் முடிந்தது உன் பிரசவம் "
என்றுக் கூறி விட்டுச் சென்றார்.
ஜானகி நன்றியுடன் தன தாயைப் பார்த்தால் . அவள் அம்மா டெலிவரி நாள் கிட்ட நெருங்க நெருங்க ," வலி எடுக்கும் போது அதையே நினைத்துக் கொண்டிராமல் உனக்குப் பிடித்த எதையாவது நினைத்துக் கொள் " என்று கூறியிருந்தார் .
அந்த உபாயத்தை தான் கடைபிடித்தாள் . நல்ல வலி எடுக்கும் வரை தனக்குப் பெண் பிறந்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கவிதா என்று பெயர் கூட சூட்டியிருந்தாள் .
தன்னால் படிக்க முடியாத படிப்பு, போக முடியாத அலுவலகம் ,
தான் ஓட்டாத மொபெட் எல்லாவற்றையும் தன் பெண்ணிற்கு கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தது நினைவு இருக்கிறது.
அதற்குப் பிறகு நினைவில்லை......
ஜானகியின் கணவனும் மாமியாரும் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார்கள். ஜானகியின் கணவனி ற்கும் , மாமியாருக்கும் பெண்ணைப் பெற்று விட்டாளே என்ற வருத்தம்.
"ம்க்கும் " என்று முகத்தை தோளில் இடித்துக் கொண்ட மாமியாரையும் , தன் அம்மாவிற்கு ஆமாம் சாமி போடும் கணவனையும் சமாளித்து தன பெண்ணைப் படிக்க வைத்து ஆளாக்கி....................
அதற்கு தன்னைத் தயார் செய்துக் கொண்டாள் ஜானகி.ஆனால் கண்டிப்பாக செய்து முடிப்பாள்.
இது போல் நிறைய ஜானகிக்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதற்கு இப்பொழுது ஸ்கூட்டி யில், காரில், அலுவலகம் பறக்கும் பெண்கள் ,
வெளிநாட்டு விமான நிலையங்களில் கேட்கும் கொலுசு சத்தம் எல்லாமே சாட்சி .
image courtesy--- google