Showing posts with label குதிரை கம்பராமாயணம். Show all posts
Showing posts with label குதிரை கம்பராமாயணம். Show all posts

Tuesday, 4 August 2020

கம்பனும், மிளகாயும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-24)




Image Courtesy : Wikkimedia Commons

ஷாப்பிங் முடித்து விட்டு  நானும், என்னவரும் ஹோட்டலுக்கு சென்றோம்..

"சமூக இடைவெளி கடைப் பிடித்தீர்களா? மாஸ்க் அணிந்து கொண்டீர்களா?" அடுக்கடுக்காக நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது..

"இப்ப எதுக்கு உனக்கு இந்த ஹோட்டல் ஆசையெல்லாம் "என்று  நட்புடன் நீங்கள் கோபித்துக் கொள்வதும் சரியே...

ஆனால், நாங்கள் ஹோட்டல் போனது இப்ப இல்லிங்க..

ஒரு நான்கைந்து, வருடம் முன்பாக இருக்கும். கொரோனா என்கிற பெயர் நம் அகராதியிலேயே இல்லாத (சொர்க்கமான)நாட்கள் அவை.

விஷயத்திற்கு வருகிறேன்...

சர்வரிடம் இட்லியும், காபியும் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தோம்.

இட்லியும், அதற்குக் கம்பெனி கொடுக்க சட்னியையும், சாம்பாரையும், 'டங்'என்று டேபிளில் வைத்து விட்டு  சர்வர் நகர்ந்தார்.

சலவைக்குப் போய் விட்டு வந்த மாதிரி இருந்த இட்லியின் ஒரு விள்ளலை சட்னியில் முக்கி உள்ளே தள்ளி விட்டு, " சர்வர் லேட்டாக கொண்டு வந்தாலும், இட்லியும் சட்னியும் லேட்டஸ்டாகத் தான் இருக்கு. சட்னி சூப்பர் இல்ல?" என்னவரிடம் கேட்க....

பதிலே வரவில்லை அவரிடமிருந்து..

என்னாச்சு என்று அவரைப் பார்க்க... அவரோ," உஸ்...ஆ...என்று சொல்லிக் கொண்டே டம்ளர்,டம்ளராக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தார்.. சர்வரிடம்," இன்னும் கொஞ்சம் தன்னீர் வேணும்." என்று  கேட்க...

"சட்னி ஒன்றும் அப்படியொன்றூம் காரமில்லையே?" இது நான்.

"சட்னி காரம்  இல்லை. சாம்பார் பயங்கரக் காரம்" அவர் சொல்ல...

நானும் சாம்பாருடன் இட்லியை சாப்பிட்டு..." ஆமாம்...கொஞ்சம் காரமாகத் தான் இருக்கு,"  ஆமோதித்தேன்.

அவரோ..." கொஞ்சம்.... காரமா? என்ன சொல்றே?

"கடைகளில் மிளகாய் ஏதாவது மீதம் இன்னும் இருக்குமா? இல்லை ஊரிலிருக்கும் எல்லா மிளகாயையும் ஒன்று விடாமல் சாம்பாரில் பொடியாக்கி போட்டு விட்டார்களோ?"கிண்டலாக கேட்டுக் கொண்டே சட்னியும் இட்லியுமாக சாப்பிடத் தொடங்கினார்.

"நீங்கள் சொல்வது எப்படியிருக்குத் தெரியுமா? இலங்கையில் ராவணன், அனுமனைக் கட்ட... கயிறு தேடினானாம். அது போல் இருக்கு."

"சரி,..சாம்பாருக்கும் ராவணனுக்கும் என்ன சம்பந்தம்?"

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார்.

"அனுமன் சீதா பிராட்டியைக் காண சமுத்திரத்தைத் தாண்டி, இலங்கைக்கு வந்தாரா?"

அப்போ ராவணன், அனுமன் வாலில் தீ வைக்க ஆணையிடுகிறான்.

அதற்கு, முதலில் அனுமனைக் கட்ட வேண்டுமே!

அனுமனைக் கயிற்றால் கட்ட முடியுமா சொல்லுங்கள். ஆனாலும் ராவணன் பணியாளர்கள் கட்ட ஆரம்பிக்கிறார்கள்.

"கயிறு இன்னும் நீளமாக வேண்டும்" 

கயிறு கொண்டுவரப் படுகிறது.

பழைய கயிற்றுடன் இதுவும் சேர்க்கப்படுகிறது. 

இப்ப....கட்ட முடிகிறதா? ம்...ஹூம்.....முடியவில்லையே.

அனுமன் மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார்," என்னை யாரென்று நினைத்தீர்கள்? சாட்சாத் பரந்தாமனின அருள் பெற்ற தூதுவனடா. என்னைக் கயிற்றால் கட்டுகிறார்களாம் இந்த மடையர்கள் ."

"முயன்று பார்க்கட்டும். " மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார் அனுமன்.


ஒரு பக்கம் சில பணியாட்கள் கயிறை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் அனுமனை கயிறுடன் சுற்றி வந்து கட்டப் பார்க்கிறார்கள். அடப் பாவமே ! கயிறு போதவில்லையே. அனுமன் தன் உருவத்தை வளர்த்துக் கொண்டே போவது புரிபடவில்லை அவர்களின் மரமண்டைகளுக்கு.

இன்னும்....இன்னும்...இன்னும்.... என்று அரண்மனையிலிருந்த எல்லா கயிறும் தீர்ந்து போக... எங்கெல்லாம் கயிறு கண்ணில் படுகிறதோ, அங்கேயிருந்தெல்லாம் கயிற்றை உருவி வருகிறார்கள் பணியாட்கள்.

தேரில் கட்டியிருந்த கயிறு, குதிரைகளைக் கட்டியிருந்த கயிறு, யானைகள் கட்ட பயன் படுத்தப்பட்டக் கயிறு, என்று அனைத்துக் கயிறுகளையும் உருவிக் கொண்டாகி விட்டது.

அவ்வளவு ஏன்? பெண்கள்  மரத்தில் ஊஞ்சலாட கட்டி வைத்திருந்த கயிற்றைக் கூட விட்டு வைக்கவில்லையாம். 

அப்படியென்றால் இலங்கையில் கயிற்றுக்குப் பஞ்சம் வந்து விட்ட்தோ?கயிறே இல்லாமல் போய் விட்டதோ?

இல்லை ....இல்லை... கயிறு இருந்ததாம் .  எங்கேயாம்?

கம்பர் குறும்புடன் இதற்குப் பதில் சொல்கிறார்....

இலங்கையில் இருந்த பெண்கள் கழுத்தில் இருந்த "தாலிச் சரடு" என்கிற மஞ்சள் கயிறு மட்டும் தான் மிஞ்சியதாம்.

என்னவொரு குறும்பு! என்னவொரு குசும்பு! கம்பனின் குறும்பானப் பாடல் இதோ...

பிணி வீட்டுப் படலம்.பாடல் எண் 6008
மண்ணில் கண்ட, வானவரை
    வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை
    இகலின் பறித்த, தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில்
    பிணித்த கயிறே இடை பிழித்த;
கண்ணில் கண்டவன் பாசம்
     எல்லாம் இட்டுக் கட்டினர்.

நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும், தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக் கொண்டு வந்த பாசங்களும், வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்,  எண்ண முடியாத மற்றயோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் ஆக தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு  அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள். தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்த பெண்களுக்கு அமைந்த ,திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக் கட்டியிருந்தக் கயிறே, அந்த சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

இதைப் படிக்கும் போது, கம்பர் லேசுப்பட்ட ஆளில்லை, என்றே தோன்றுகிறது.
சிரிக்காமல் நக்கலடிப்பது என்பது இது தானோ!

கம்பனின் நக்கலை ரசித்துக் கொண்டிருங்கள்.. 
வேறொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்..


Tuesday, 21 July 2020

கம்பனும், 'சென்னைக்கு மிக மிக அருகே'யும்.(கம்பன் என்ன சொல்கிறான் - 23)

https://commons.wikimedia.org/wiki/File:Waking_up_Kumbhakarna.jpg

" அட.. கீதா  என்னது? அதுக்குள்ள ஆபீஸ் வந்துட்டே?" ஆச்சர்யத்துடன் கேட்டது பவானி. .

"ப்ச்......" இது கீதா.

" என்ன இந்த இடமும் முடியலையா?"

" ஆமாம் .போ..என்னத்த சொல்ல...அதான் ஒரு நாள் லீவை கேன்சல் செய்துட்டு வந்துட்டேன்" நொந்து கொண்டாள் கீதா.

உனக்குப் பிடித்து, கணவர் மாமியார் எல்லோருக்கும் பிடிக்கப் போய் தானே ஆரம்பித்தாய். அப்புறம் என்ன?

"விலை அதிகமோ?"

"விலையை விடு... இடம் எங்கே இருக்குத் தெரியுமா?"

பவானி கீதாவையே பார்க்க கீதா தொடர்ந்தாள்...

"இடம் பார்க்க...வீட்டு புரோக்கர்,  எங்களைக் காரில் தான் அழைத்துக் கொண்டு போனார். "

'ஆனால் கார் போச்சு.....போச்சு....போய் கொண்டேயிருந்தது. சென்னைக்கு மிக அருகில் என்பதை விடவும் , திண்டிவனத்துக்கு அருகில் என்று சொன்னால் சரியாக இருந்திருக்கும் பவானி."

என் மாமியார் ப்ரோக்கரிடம் " என்னப்பா ? பக்கத்துல தான்னு சொன்னே?" எங்கேயோ போயிட்டே  இருக்கோமே." கேட்க...

"அம்மா ... தோ வந்துட்டோம். " சொல்லிக் கொண்டே டிரைவரிடம்.," டிரைவர்... லெப்ட்டில் போ" சொன்னாரா..

" ஆஹா... வந்துட்டோம் போலிருக்கு" நான் நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்று எனக்குப் புரிய சிறிது நேரமானது.

அதற்குப் பிறகு," லெப்ட் எடு...அதோ..அந்த வேப்ப மரம் தெரியுது இல்லையா...அங்க ரைட் எடு."

இப்படியே லெப்ட்..ரைட்... குட்டி சந்து என்று போறோம் போறோம்.....போய்க் கொண்டே இருக்கோம்."

"நிலத்தைப் பார்த்தீர்களா இல்லையா? "  பவானி கேட்க...

பார்த்தோம்.. பார்த்தோம்.... கும்பகர்ணனை எழுப்ப இராவணனை எழுப்பக் குதிரைகளை இலக்கில்லாமல் அவன் மார்பில் ஓட விட்டானாமே . அது போல் தான் நாங்களும் காரில் இலக்கில்லாமல் போய் ஒருவழியாய் பார்த்த்தோம்.

அது என்ன கும்பகர்ணன், குதிரை என்று என்ன தான் சொல்ல வருகிறாய்?  என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார்...

போர் புரிய, ஆறு மாதமாய் தூங்கும் கும்பகர்ணனை எழுப்ப இராவணன்  ஆட் படைகளை அனுப்புகிறானாம்.

தாரைத் தப்பட்டை எல்லாம் பெருத்த ஒலி செய்தும், அவன் உறக்கம் கலையவில்லையாம். அப்படியொரு தூக்கம் தூங்குகிறானாம் கும்பகர்ணன்.

என்ன செய்யலாம்? என்று ராவணன் யோசித்து...

குதிரைப் படை ஒன்றை அனுப்பி ...அவன் கும்பகர்ணன் மார்பின் மேல் ஓட விடுகிறானாம் ராவணன்.

குதிரைப் படை அவன் மார்பின் மேல் நாலு கால் பாய்ச்சலில் ஓட வேண்டுமென்றால் ...எத்தனைப் பெரிய உருவமாய் கும்பகர்ணன் இருந்திருக்க வேண்டும். 

அதுவும் எத்தனை குதிரைகள் என்கிறீர்கள்? ஆயிரம் குதிரைகளை அவன் மேல் ஓட விட்டானாம்.

கம்பன் கற்பனைக்கு அளவேயில்லையோ?  அப்படி ஆயிரம் குதிரைகளை  ஓட  விட்டும், கும்பகர்ணன் எழுந்திருக்கவில்லையாம்.

அப்பவும் எழுந்திருக்கலையா? குதிரை ஓடினால் வலிக்காதோ?

"வலிக்கவில்லையாம். அவனுக்கு உடம்பைப் பிடித்து விட்டாற் போல் இருந்ததாம்..அதனால் அவன் உறக்கம் அதிகமாயிற்றாம்." கம்பனின் கற்பனையை யாரால் மிஞ்ச் முடியும்.?..சொல்லுங்கள்.

என்னது குதிரை அவன் மேல் ஓடுவது அவனுக்கு உணக்கையாக இருக்கிறதோ ?

எனக்கும் அதேதான் சந்தேகம். ஆனால் கம்பர் அடித்து சொல்கிறாரே.. அவருடைய பாடலை ரசிப்போமா.....

கும்பகருணன் வதைப் படலம் 7324


கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான்தன் மார்பிடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான்.

இராவணன் ஆணைப் பெற்ற வீரர்கள் அளவு மீறி அதிகமாக உறங்குபவனான கும்பகருணனது மார்பில், ஓராயிரம் கடிவாளம் பூட்டப் பெற்ற விரைவாகச் செல்லும் குதிரைகளுடன் விரைந்து வந்து, அவற்றை மார்பில் நடத்தி ஓட்டி, அவனுடைய மார்புக்கு மாலை போல விரைவாக சுற்றி வந்தார்கள். அவ்வாறு அவர்கள் செய்த செயலால் துடையைத் தட்டுவது போல அவன் பெருந்துயில் கொள்ளலானான்.

கம்பன் கற்பனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா? 
வியப்பில் இருந்து வெளி வருவதற்குள் , கம்பன் கடலில் இருந்து வேறொரு முத்துடன் உங்களை சந்திக்கிறேன். 

நன்றி.










உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்