Monday 17 March 2014

குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?(வல்லமையில் என் கட்டுரை)

வல்லமை  மின்னிதழில்  இன்று மார்ச் 17 வெளியாகியிருக்கும் என் கட்டுரை 

                              
                         குழந்தைகள்  பத்திரமாக இருக்கிறார்களா?


"என் பிரென்ட்  நாளை சர்க்கஸ் போகிறாள். நீ எப்பொழுது என்னை அழைத்துப் போகிறாய்? "

"எனக்கு அந்த பொம்மை வேணும்."
நீங்கள்  யூகித்தது சரியே.  இது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின்  சிறிய ஆசைகள்.


எத்தனை அழகான சந்தோஷமான   உலகம் இந்தக் குழந்தைகளுடையது. பேராசைகள் அற்ற, கள்ளம் கபடமில்லாத, பொறாமைகள் இல்லாத உலகம் அவர்களுடையது.

அவர்களுடைய ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான். நாம் அதையெல்லாம் நிறைவேற்றி  வைக்கிறோமா என்பது கேள்விக்குறியே . ஆசைகள் நிறைவேற்றுவதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.அவர்களைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்று தோன்ற வைக்கிறது இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் எல்லாம். 

ஆசிரியரே, தன மாணவியிடம், தவறாக நடந்து கொள்வது,  சில சமயங்களில்,  அப்பாவே தன பெண்ணிடம்  முறை தவறி நடப்பது , என்று அவ்வப்பொழுது கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது  என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை  மறுக்க முடியாது.பெரும்பாலும்  பெண் குழந்தைகள் தான் இதில் பலியாகிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆண் குழந்தைகளும் இப்படி பாதிக்கப் படுவதுண்டு. அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும்  பாதிக்கப் படுகிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் இந்த சமுதாயத்தை திருத்த முடியுமா? எல்லோருக்கும் நம்மால் பாடம் எடுக்க முடியுமா என்ன? அதெல்லாம் நடவாதக்  காரியம் தான்.ஆனால் நம் வீட்டுக் குழந்தைகளைக்  காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு எது நல்லது என்பதை எவ்வளவுக்கெவ்வளவு  ஜாக்கிரதையாக தேர்வு  செய்கிறோமோ ,அதைவிடவும் அதி ஜாக்கிரதையாக  அவர்களுக்கு எது கெடுதல் விளைவிக்கக் டியது என்பதை ஆய்ந்தறிந்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது  மிக மிக  அவசியம்.

அந்தக் காலத்தில், பெண்பிள்ளைகளும், ஆண்களும் தனித்தனியாக  படித்து வந்தகாலம். இப்பொழுது காலம் மாறி விட்டது எனலாம்.ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது  என்பது காலத்தின் கட்டாயம்.  பல சமயங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களை தாக்க வரும் மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை நாம் தானே அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியது என்று சொல்லலாம். அதே சமயத்தில், ஆசிரியர்களின் பங்கும்  முக்கியமானதே! இருவரும், ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை நிறுத்திவிட்டு   தங்கள் கடமையை சரிவர  செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.

இதென்ன பிரமாதம் என்று தோன்றலாம்."  குட் டச் "  "பேட்  டச் " என்று சொல்லிக் கொடுத்து விட்டால் ஆச்சு. அது எவ்வளவு கடினம் என்பது பல பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். 

அந்தக் கால்த்தில்,  நம் பாட்டிகள் சொல்வதுண்டு,  சொந்த சகோதரனேயானாலும்  பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன்  சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.
ஆனால் அதையெல்லாம்  எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.

பெற்றோர்களும்  இப்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கிற பெயரில்  அவர்களை  பலவித ஆபத்துகளில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது. தன தோழியின்  வீட்டிற்குப்  போய் விளையாடிவிட்டு அங்கேயே  தோழியுடன்  இரவைக் கழித்து விட்டு வரும்(Sleep Over), ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணை , தோழியின் தந்தையே  சீரழித்து கர்ப்பமாக்கி விட்டது நினைவிற்கு வந்து வேதனைப் படுத்துகிறது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை என்று பெரு  மூச்சு விடலாம் . ஆனால்  அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்காது. இந்த sleep over மேற்கத்தியக் கலாசாரம் நம் நாட்டிலும் இப்போது   புகுந்து விட்டது என்பது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  குழந்தைகள் பேசுவதிலிருந்துத் தெரிய வருகிறது. எதைத்தான் மேலை நாட்டிலிருந்து காப்பியடிப்பது என்கிற விவஸ்தை வேண்டாமா? இதைப் பெற்றோர்கள் முளையிலேயே கிள்ளி  எரிந்து விட்டால் நலம்.

"good touch, bad touch   ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதில் இருக்கும்  சங்கடங்கள்  ஏராளம் . குழந்தைகள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி மாளாது. ஆனாலும் நாசுக்காக சொல்லித் தான் தீர வேண்டும்.

பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  உதவுவதற்காக  உங்களுடன் ஒரு காணொளியைப் பகிர்கிறேன். இதைத் தைரியமாக குழந்தைகளுக்கு  போட்டுக் காட்டலாம். எந்த சங்கடமான  காட்சிகளும்  இல்லாதப் படம். குழந்தைகள், அவர்களின் பெற்றோர்   ஆகியோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.
Child Line India வெளியிட்டுள்ள  காணொளி இது.

உங்கள் நண்பர்களுடனும், உறவுனர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.




27 comments:

  1. இன்றைய சூழ்நிலையில் நம் குழந்தைகளை பலவித ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கின்றன, ராஜி. நாம் தான் அவர்களிடம் இதமாகப் பேசி பத்திரமாகக் காத்துக்கொள்ள சொல்லித் தரவேண்டும்.
    பெற்றோர்கள் எத்தனை பேரால் குழந்தைகளிடம் பாலுணர்வு பற்றி பேச முடிகிறது? இந்தக் காலத்தில் எல்லாமே தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் காட்டும் கொச்சையான பாலுணர்வு வெளிப்பாடுகளை குழந்தைகள் பார்க்கிறார்கள். அது தவறு என்று ஏன் நம்மால் நம் குழந்தைகளிடம் சொல்ல முடிவதில்லை? பெற்றோர்கள் இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டும்.

    வல்லமையில் உங்கள் கட்டுரை வெளியாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். வல்லமை குழுமத்தில் இருக்கிறீர்களா? நிறைய விஷயங்கள் படிக்கலாம்; பகிர்ந்து கொள்ளலாம். அவசியம் சேர்ந்துவிடுங்கள்.

    ReplyDelete
    Replies

    1. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்தக் கட்டுரை என் நெடுநாளைய ஆதங்கம். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி .ரஞ்சனி.

      Delete
  2. காணொளி அருமை..
    பயனுள்ள பகிர்வுகள்..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி மேடம்.

      Delete
  3. //நமது கடமையை சரிவர செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.//

    பொன்னான வரிகள்..

    நல்ல சிந்தனையுடன் - இந்த காலகட்டத்துக்கு அவசியம் தேவையான செய்திகளை உள்ளடக்கிய பதிவு.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. உணல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி துரை சார்.

      Delete
  4. அருமையான அனைவரும்
    அவசியம் காணவேண்டிய காணொளி
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி ரமணி சார்.

      Delete
  5. நல்ல கட்டுரை.....

    குழந்தைகளுக்கு good touch, bad touch சொல்லித் தருவது நல்லது...

    காணொளியை நானும் முன்னர் ஒரு பக்கத்தில் பார்த்தேன்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வெங்கட்ஜி.

      Delete
  6. வாழ்க்கையின் மதிப்புகள் ( values) பலவும் போதித்து வருவதல்ல. பார்த்து பின் ப்ற்றப் படுபவை. ஆகவே சிறந்த முன்னோடிகளாகப் பெற்றோர்கள் இருப்பது அவசியம். டிவி பார்க்கக் கூடாதென்று அவர்களிடம் சொல்லும் நாம் என்ன செய்கிறோம். பல விஷயங்கள் வீட்டின் அறையிலேயே உலகம்வந்து விட்டதால்கட்டுப்படுத்துவதும் சிரமம் பெற்றோர்களின் ஆதங்கம் உங்கள் கட்டுரையில் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. இது என் நெடுநாளைய ஆதங்கம் .கட்டுரையாக வெளியிட்டு விட்டேன். நீங்கள் சொல்வது போல் குழநதைகளின் முதல் ஆசான் அவர்கள் பெற்றோர்களே! அதை அவர்கள் உணர்ந்து நடந்து கொண்டால் நலம்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  7. முன்னர் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு இதை எல்லாம் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். இப்போதைய தனித்தனிக் குடும்ப அமைப்புகளில் குழந்தைகளிடம் பேசக் கூட ஆளில்லை, நேரமில்லை.

    இந்தக் காணொளி தமிழ்ப் படுத்தப் பட்டு பகிரலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மை ஸ்ரீராம் சார். முன்பெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொலத் தயங்கும் ஆனால் சொல்லியே ஆகா வேண்டும் என்கிற ச்தர்ப்பங்களில், அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி என்று ஒரு பெரிய கூட்டமே இருக்கும். இப்பொழுது தான் நாம் பிரைவேசி என்கிற பெயரில் தனித் தீவு ஆகி விட்டோமே. அதனால் வரும் வினைகளில் இதுவும் ஒன்று.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  8. காணொளி மிகவும் அருமை... சொல்லப்பட்ட கருத்துக்கள் அதை விட...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  9. மிகவும் பயனுள்ள பகிர்வு. காணொளி அருமை. பாராட்டுக்கள்.

    வல்லமை மின்னிதழ் வெளியீட்டுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  10. உங்கள் கட்டுரை வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள். கட்டுரையின் கருத்தும் தெளிவாக, விளக்கமாக இருக்கிரது. நீங்க சொல்வதைப்போல் அனுபவமுள்ள பெரியவர்கள் சொல்வதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்கிறது என்பதை நாம் நம்ப வேண்டும்.

    வெளி நாட்டில் மீடியாவின் வலிமையினால் இது மாதிரியான சம்பவங்கள் வெளியே வந்துவிடுகிறது. அதை அவர்கள் வெளியே சொல்லவும் தயங்குவதில்லை. ஆனால் நம் ஊரில் மூடி மறைக்கப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி சித்ரா.
      நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வதை கேட்கும் மனோபாவம் குறைந்து கொண்டே வந்தாது இங்கு வந்து முடிந்திருக்கிறது.

      Delete
  11. வல்லமையில் இக் கட்டுரை இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    கட்டுரை மிக அருமை.

    கணொளி பகிர்வுக்கு நன்றி இக்காலகட்டத்திற்கு தேவையான காணொளி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும்.

      Delete
  12. அருமையான, சிந்திக்க தூண்டும் பகிர்வு! வாழ்த்துக்கள் ராஜி மேடம் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஹா....உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  13. நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை. வல்லமை இதழில் தங்களது இக்கட்டுரை கண்டேன். நீங்களாக இருக்குமோ என்றொரு சந்தேகம். அது இன்று நிவர்த்தியாகி விட்டது.
    வல்லமையில் வெளியானமைக்கு வாழ்த்துகள் தோழி.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. //சொந்த சகோதரனேயானாலும் பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன் சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.
    ஆனால் அதையெல்லாம் எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.//

    பெற்ற தந்தை கூடப் பெற்ற மகளைத் தொட்டுப் பேசியது என்பது மிகக் குறைவே. மனது சலனமும் சபலமும் நிறைந்தது என்பதால் இப்படி எல்லாம் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினார்கள். இன்றைய சூழ்நிலைகளில் இதை எல்லாம் சொன்னாலே கட்டுப்பெட்டி என்னும் பட்டம் தான் கிடைக்கும். :(

    ReplyDelete
  15. கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு குழந்தைக் கலாசாரத்தில் அத்தை, மாமன், சித்தி, சித்தப்பா என்ற உறவுக்கெல்லாம் யாரைக் காட்டுவது? :(

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்