Showing posts with label ரயில். Show all posts
Showing posts with label ரயில். Show all posts

Saturday, 28 November 2015

கொத்தங்குடியின் வில் வண்டி--1

google image 
பள்ளிக்கு லீவு விட்டாச்சு என்றால் எங்களுக்கு ஜாலி தான். பின்னே .....எங்கள்  தாத்தா  ஊருக்கு செல்வோமே !  வருடம் முழுக்க  பரபரப்பு நிறைந்த சென்னை  நகர வாழ்க்கையும், படிப்பின் சுமையும் இந்த கிராமத்து வாழ்க்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். வருடத்தில் சில நாட்கள் மட்டும் தான் இந்த விடுதலை என்கிற போதிலும்,  நினைவுகள் இன்னும் மனதில் பசுமை குறையாமலே   இருக்கிறது

தாத்தா ஊர் எங்கே என்று சொல்லவில்லையே! அழகிய சிறு கிராமம். மாயவரம் வரை  ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து கோமல் வரை பஸ் பயணம். பிறகு அங்கிருந்து மாட்டு வண்டியில் பயணித்தால் அரை மணிநேரத்தில்  கொத்தங்குடி  என்கிற மிக சிறிய கிராமத்தை அடையலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த   தேரழந்தூரிலிருந்து  பதினைந்து நிமிட பயணத்தில் கொத்தங்குடி   சென்றடையலாம்.

ரயில் பயணம் என்று நினைத்தால்  இப்பொழுதும், இந்த வயதிலும் எனக்கு  மிகவும் விருப்பமான ஒன்று. சிறு வயதில் சொல்லவா வேண்டும். அந்தக் கால  ரயில் பயணம்  சில சங்கடங்கள் இருந்தாலும், மிகவும்  ரசிக்கத்தக்கதாய் இருக்கும்.

இரவு கிளம்பினால்  மறு நாள் காலை மாயவரம் போய் சேரும் ரயில் வண்டி. .
அப்பொழுதெல்லாம் டீசல் வண்டி தான். அது போல் ஏசி  பெட்டி எல்லாம் கிடையாது.  அதனால் தனித்தனி தீவுகளாய் திரை சீலைக்குள் பயணிக்கும் பரிதாபம் கிடையாது.

ரயில் பயணம் என்றாலே எல்லோர் கையிலும், ஒரு தோல் பெட்டி, ஒரு டிரங்க் பெட்டி, ஹோல்டால், எல்லாம் உண்டு. கையில் கூஜா மிக மிக அவசியம். ரயிலில் குடி தண்ணீர் கிடைக்காது. ஸ்டேஷனில் இறங்கி இறங்கி கூஜாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

ரயிலில் கேட்டரிங் வேன் எதுவும் இருக்காது.அதனால் கையில் எல்லோருமே  சாப்பாடு கொண்டு வந்து விடுவார்கள். எதிர் சீட்டில் சாப்பிடும் புளியோதரை  நம் நாவில் நீர் வரவழைக்கும். நமக்கும் தாராளமாகக் கிடைக்கும் .நாமும் அச்சமின்றி  சாப்பிடலாம். அந்த நாளில் பிஸ்கட் திருடர்கள் கிடையாதே!
  
 சக பயணிகள் எல்லோருமே வாயாரப் பேசிக் கொண்டு , உறவினர் போல் ஒருவர் மேல் ஒருவர் அன்போடும், அக்கறையோடும் பயணிப்பார்கள். இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை  இது போல் இனிமையான சம்பவங்களினால் தான் ரயில் பயணம் என்றதும் மனம் துள்ளலாட்டம் போடுகிறதோ !

ஆமாம் ! அந்த  அன்பைக்  கலந்து செய்த ரயில் பெட்டிகள் எல்லாம் எங்கே போச்சு ! காணாமல் போய் விட்டதோ!
கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு  தக்க சன்மானம் வழங்கப் படும்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  இந்த இனிமையான  ரயில் பயணத்தில், எனக்கும் என் தம்பிக்கும் அந்த ஜன்னலோர சீட்டிற்கு அடிதடியே நடக்கும்.

எதிர் சீட்டுப் பயணி," ஏம்மா இப்படி ரெண்டு பெரும் சண்டை போடுகிறீர்கள். இந்த இருட்டில்  என்ன தெரியப் போகிறது.  கண்ணில் கரி விழும். அது தான் நடக்கும்.' என்று சொன்னாலும் நாங்கள் கேட்கப் போவதில்லை.

வரும் ஸ்டேஷனில் எல்லாம்  கண் கொட்ட கொட்டப் பார்த்துக் கொண்டு நீராவி எஞ்சின் புகையில் கலந்து  வந்து , கண்ணில் விழும் கரித் துகளை தேய்த்து விட்டுக் கொண்டே  பயணிப்போம்., அதிகாலையில் மாயவரத்தில் எங்களை இறக்கி விடும் ரயிலுக்கு பிரியாவிடை கொடுக்கத் தவற மாட்டோம்..

அதற்குப் பிறகு பஸ்  பயணம் அத்தனை சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது . குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டில்  போகும் பஸ் போகும் போது , நம் இதயம்  குதித்து , குதித்து வாய்க்குள் வந்து விடும் அபாயம் உண்டு.

கோமலில்  பஸ் எங்களை  இறக்கி விட்டவுடன், அடுத்து நாங்கள் மிகவும் ஆவலாய் எதிர் பார்த்திருந்த போக்குவரத்து  மாட்டு வண்டி.
அதை வில்வண்டி என்று கிராமத்தில் சொல்லும் வழக்கம் உண்டு. வில்லைப் போன்று வளைந்து  மூடியிருப்பதால்  இந்தப் பெயரா தெரியவில்லை. கிராமத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் பயணிப்பதற்கு ஒரு வண்டியும், மற்ற விவசாய  பணிகளுக்கு வேறு  வண்டியும்  இருக்கும். சட்டென்று அடையாளமாக சொல்வதற்கு இந்தப் பெயரை  உபயோகித்தார்களா தெரியவில்லை.

இந்த வில் வண்டி பயணம்  முடியம் போது , அங்கு எங்களுக்கு முன்பாக எங்கள் சித்தியின்  பெண், பிள்ளை, மாமா வீட்டுப் பெண் பிள்ளை என்று பலரக வயதில்  காத்திருக்கப் போகிறார்கள்.

ஆகா ஒரு பெரிய கூட்டம் கொட்டமடிக்கக்  காத்திருக்கிறது.

இதோ  அந்த வண்டி ஓட்டுபவர் எங்கள் பெட்டி, பைகள் எல்லாம் உள்ளே அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.  வில் வண்டியில் நாங்கள் ஏறி   உட்கார்ந்தால்  அந்த இரட்டை மாட்டு வண்டி  "ஜல் ஜல்" என்று கிளம்பப் போகிறது ....

வண்டி ஓட்டுபவர்  மாடுகளை  அவிழ்க்கப் போயிருக்கிறார்.
அந்த "ஜல், ஜல்" மாட்டு வண்டிப் பயணத்திற்கு  சற்றே காத்திருப்போம்........

Tuesday, 7 May 2013

மாடியில் ........பயணம்.....


 



 " அம்மா  எனக்கு அந்த அங்கிள் தலையில் இருக்கும்  பிஸ்கெட்  வேணும் "    ஒரு சின்னப் பெண் குரல் .
"தலையில் பிஸ்கெட்டா? "
சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.

பார்த்தால் ரயில்வே  பிளாட்பார்மில்  ஒருவர் பிஸ்கெட் விற்றுக் கொண்டிருந்தார்.

நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் பிஸ்கெட் விற்பவர் தலையில் வைத்திருக்கும்  அட்டைபெட்டியில் இருக்கும்  அத்தனை பிஸ்கெட்டும் தெரிந்தது .

உட்கார்ந்திருப்பது மாடி ரயில் அல்லவா? 
அதாங்க  double decker.

முன் சீட் குழ்ந்தை சொன்னது போல்  பிளாட்பார்மில் செல்லும் எல்லோரின் உச்சி மண்டை எல்லாம் தெரிந்தது. 

double decker  ஓட  ஆரம்பித்தாயிற்று என்று டிவியில் பார்த்துடனேயே பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸில் சென்னை  திரும்ப வேண்டும் என்ற என் எண்ணத்தை  உடனடியாக மாற்றிக் கொண்டு MAS Double Decker இல்  டிக்கெட்டை புக் செய்தேன்.

lower deck, middledeck , upper deck என்று மூன்று  தளங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது ரயில் . 
middle  deck  சும்மா பேருக்கு பன்னிரெண்டே  சீட்.

மற்ற இரண்டு தளங்களில் தான்  பெரும்பாலான பயணிகள். 

உயரத்தில் உட்கார்ந்து பயணிப்பது ஒரு புது அனுபவம்  தான்.
நன்றாகவும் இருந்தது. 

" திரிசங்கு சொர்க்கம் " இப்படித்தான் இருந்திருக்குமோ? ஆகாயத்திலும் இல்லை. தரையிலும் இல்லை.

மீண்டும் அந்தக் குழந்தையின் குரல்."அம்மா ஏசி  வேண்டாம் குளிருதே " என்று நச்சரிக்க ஆரம்பித்தாள் .

அவளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் கூடத்தான்.

ஒருமுறை lower deck  போய்  பார்ப்போமே  என்று ஒரு  ரவுண்டு சென்று வந்தேன்.

மாடியில் ஒரே குளிர் என்றால் கீழ் தளத்தில்  புழுக்கம் அதிகம்..

ஆனால் இதெல்லாம்  ஆரம்பகால  சிறு சிறு  சங்கடங்கள். போகப்போக சரிசெய்தி விடுவார்கள்.

ஒரு காலத்தில் toilet  வசதி கூட இல்லாமல் தான் நம் ரயில்  இருந்திருக்கிறது.
உண்மை !நம்புங்கள். !

அதாவது 1909 முன்பு நம்மூர் ரயில்களில்  toilet  வசதி இல்லை.

இதை நான் சொல்லவில்லை. 

டில்லியில் இருக்கும் ரயில்வே மியுசியத்தில்  திரு  Okil  Chandra  Sen  என்பவர் எழுதியிருக்கும் கடிதம் சொல்கிறது. 

அவருடைய கடிதத்திற்கு  அந்த காலத்தில்  மரியாதை  கொடுத்து  கழிவறை  வசதியை பிரிட்டிஷ்  காரர்கள் உடனடியாக செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எப்படி மிரட்டுகிறார் நீங்களே பாருங்கள்.


ஆங்கில இலக்கணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை போலும் அவருக்கு. இல்லை,  ரயில்களில்  ஒரு toilet  வசதி செய்து கொடு  முதலில் . அப்புறம் நான் கற்கிறேன் உன்  ஆங்கிலத்தை, என்று நினைத்துக் கொண்டு எழுதியது போல் தெரிகிறது இல்லையா?

இக்கடித்தத்தின் சாராம்சம் என்னவெனில் 

திரு Ohil   அஹமெட்பூர்  ஸ்டேஷனில் Toilet உபயோகிக்க இறங்கியிருக்கிறார். அவர் திரும்ப ஏறுவதற்குள்   ரயில் கிளம்பி விடுகிறது. 
அவசரமாக ஏற  முயலும் போது  அலங்கோலமாக கீழே  விழுந்து ரயிலை தவற  விடுகிறார். 

வந்த ஆத்திரத்தில் ரயில் நிர்வாகத்திற்கு  எழுதப்பட்ட கடிதம் தான் இது.

இக்கடிதத்திற்கு  உடனடியாக பலனும் கிடைத்து விட்டதே !
அதைச் சொல்லுங்கள். 

நம்முடைய அடிப்படைத் தேவையை ஒரு கடிதத்தின் மூலமாகப் பெற்றுத் தந்த  திரு.Okhil  Chandra  Sen  அவர்களுக்கு  நன்றியைக் கூறிக் கொண்டு நம் ரயில்வேத்  துறை  மேன்மேலும் முன்னேறும் என்று நம்புவோம்.

image courtesy ---google


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்