Showing posts with label வடை. Show all posts
Showing posts with label வடை. Show all posts

Monday, 24 April 2017

கள்ளன் எங்கே?

எனக்குத் திருமணமான புதிது.அப்போது எனக்கு சமையல்  அரையும் குறையுமாய்  தான் தெரியும்.

அப்போது ஒரு நாள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். என் கணவருக்கு   சகோதரி முறையாக வேண்டும் அவர்.

குசல விசாரிப்பெல்லாம் முடிந்த பின், காபி போட உள்ளே சென்றவரை நானும் தொடர்ந்தேன்.  டைனிங் டேபிளின் மேல்  வாழைப்பூ  ஒன்று பாதி ஆய்ந்த நிலையில் இருந்தது. காபி போட்ட பின்பு  வாழைப்பூவை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தார் அக்கா.

அப்பொழுது அவருக்கு பக்கத்து வீட்டில் இருந்து அழைப்பு வரவே  எழுந்து போய் விட, நான் அரிவாள் மனையை எடுத்து வாழைப்பூவை  நறுக்கி  நீரில் போட்டுக் கொண்டிருந்தேன்."சகோதரன் மனைவி கை வேலையில் கெட்டிக்காரி" என்று நல்ல பெயர் எனக்கு வராதா  என்கிற ஆசையில் நறுக்கஆரம்பித்தேன்.

எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. சட்டென்று நறுக்க முடியாமல் திணறினேன் 'என்னவோ நறுக்க விடாமல் தடுக்கிறதே ' ....ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நறுக்க முயற்சிக்கும் போது  ," அடடா .... கள்ளனை எடுத்து விட்டு நறுக்கி வை ராஜி " சொல்லிக் கொண்டே வந்தார்  அக்கா. .

இவர் என்ன சொல்கிறார்?
 " கள்ளனா ?"  எங்கே என்று சுற்று முற்றும் பார்த்தேன்.

ஒன்றும் புரியாதவளாய், மீண்டும் நறுக்க முயற்சிக்கவும்,அக்கா , " ராஜி...ராஜி... கள்ளனை எடுக்க சொன்னது  வாழைப்பூவிலிருந்து. நீயோ சுற்று முற்றும்  தேடுகிறாய். உன் உள்ளம் கவர்ந்த கள்வனை சொன்னேன் என்று நினைத்து விட்டாயோ " என்று என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டினார்..

இன்று சட்டென்று அந்த சம்பவம் நினைவில் வந்து மோதியது. என் " Rajisivams Kitchen"channel இல் வாழைப்பூ  வடை செய்முறை சொல்லும் போது நானும் கள்ளனைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.  சேனல் டைரக்டராயிருக்கும் என்னவர், " எல்லாம்  நேரம் ராஜி.  நீ கள்ளனைத் தேடியது எனக்கல்லாவா தெரியும்." என்றார்.

இதோ வீடியோ உங்கள் பார்வைக்கு.



இதை ' Like', 'Share' & 'Subscribe'  செய்ய மறக்க வேண்டாமே ....ப்ளீஸ் ...
                                                          நன்றி !

Tuesday, 3 March 2015

காக்காக் கூட்டத்தைப் பாருங்க.........




அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க....

இந்தப்  பதிவைப் படித்து முடிக்கும் போது  உங்கள் மனதிலும்  மேற்கண்ட  கேள்வி  எழாமல் போகாது.

நான்கைந்து நாட்களுக்கு முன்பாக  முக நூலில்  காக்கையைப் பற்றிய ஒரு குட்டி விவாதம்  படிக்க நேர்ந்தது.
காகம்  ஏமாற்றுமா ?......... இல்லை  ஏமாறுமா  என்பதைப் பற்றித் தான் அந்த விவாதம் .

சின்ன வயதில் நாம் கேட்ட காக்கா கதையில் பாட்டியை  ஏமாற்றி விட்டு வடையைத்  திருடிய காக்கை , நரியிடம் ஏமாந்து விடுகிறது.  அதன் குணம் என்ன? ஏமாற்றுமா?....இல்லை ...... ஏமாறுமா? இதில் சற்றுக் குழம்பினேன் . இருக்கவே இருக்கிறாரே  நம் கூகுள் ...அவரிடம் கேட்போம் என்று பஞ்சாயத்திற்கு  அவரிடம் சென்று கேட்டதில்  எனக்குப் பதில் கிடைத்தது. ஆனால் அதைவிட  ஆச்சர்யங்கள் நிறைந்ததாய் இருந்தது நான் படித்த காகத்தின் உலகம். ஏழெட்டு வருடங்களே வாழும் காகங்கள்  எத்தனை புத்திசாலிகள்  என்பது வியக்க வைக்கும் விஷயம்.

காகத்தைப் பற்றி நான் அறிந்து அதிசயித்த சில விவரங்கள் இதோ :
எங்களுக்குத் தெரியாததா நீ எழுதி விடப் போகிறாய்  என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது. ஆனாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. அதனால் பொறுத்தருளுங்கள்.


  • நம்முடைய இயற்கை அலாரம் டைம்பீஸ்  காக்கை தான் என்பதை எல்லோரும்  ஒத்துக் கொள்வீர்கள் தானே.
  • அதே போல் காலை  எழுந்தவுடன் அவசியம் ஒரு குளியலும் போட்டு விடும் காக்கை என்பது ஆராய்ச்சியாளரின்  கருத்து. காகமே, காக்காய்    குளியல் தான் குளிக்கும்  என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  • மூளை, உடல் விகிதாசாரம்  பறவையினங்களிலேயே காகத்திற்குத் தான் அதிகமாம்.  என்ன தான் சொல்ல  வருகிறாய்? கொஞ்சம் புரியும்படியாக சொன்னால் தான் என்ன  என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது. காகத்தின் மூளையின் அளவு மற்ற எல்லாப் பறவையைக் காட்டிலும் சற்றே பெரிது  என்று தான் சொல்ல வருகிறேன்.
  • பன்றி இறைச்சியை விடவும் காகத்தின் இறைச்சி ஆரோக்கியமான உணவாகும். ( பலருக்கும் விவேக்கின் ஜோக் நினைவிற்கு வரலாம்.)
  • காகத்தின்  கரைதலுக்கு  அர்த்தம் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சில  மனிதர்களைப் பார்க்கும் போது  நம்மைக்  கண்டுக்கொண்டதற்கு அடையாளமாக    தனித் தன்மையுடன்  கா....கா..... என்று கரைகிறது என்று  சொல்வது சற்றே வியப்பளிக்கும்  விஷயமாகும் .
  • காக்கை மற்ற விலங்குகளின்  உடம்பில் இருக்கும் அழுக்கை நீக்கும் என்பதுத் தெரியும்.  அது  பேன்  போன்ற ஒட்டுண்ணிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள  என்ன செய்கிறது தெரியுமா? எறும்புகளைத் தன்  காலால் தேய்த்துக்  கொன்று, அதைத்  தன்  உடம்பு முழுதும்  சென்ட்டைப் போல் பூசிக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்கின்றன. .  
  • .ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் காகங்கள்  மிகவும் அருமையாய் கடைப் படிக்கின்றன  என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.  விதி விலக்குகள் இருக்கலாம் .ஆனால் அது சொற்பமே. ஆக, அங்கே விவாகமும் இல்லை, விவாகரத்தும் இல்லை. குடும்ப நல நீதிமன்றங்கள் இல்லை. குழந்தைகள்  அனாதைகளாக ஆக்கப்படுவதில்லை. அத்தனை உன்னதமான ஒழுங்குக்குள் அவை வாழ்கின்றன.  குடும்ப ஒற்றுமை நம்மிடையே   சீர்குலைந்திருக்கும் இத்தருணத்தில் கண்டிப்பாக நாம் காகத்தைப் பார்த்துக்  கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று இது.  
  • அதே போல்  கருணைக் கொலைகளும் அவைகளிடையே சர்வ சகஜம் . என்ன ஒன்று.......... அது ஒரு கருணைக் கொலை என்று நமக்குப் புரிவதில்லை. அவ்வளவே. ஒரு காகம் அடிபட்டோ , அல்லது மரணிக்கும்  தருவாயில் இருக்கும் போதோ  நூற்றுக் கணக்கில் காகங்கள் அங்கே சூழ்ந்துக் கொள்வதைப் பார்த்திருப்போம். முதலில் காப்பாற்றவே முயல்கின்றன.  காப்பாற்ற முடியாத சமயத்தில், மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகத்தை மற்றக் காகங்கள் சேர்ந்து அலகாலேயே குத்திக் கொன்று சீக்கிரமே வைகுண்டத்திற்கு அனுப்பி  வைக்கின்றன.கருணைக் கொலைக்கு எந்த நீதிமன்றத்திலும் அவைகள் அனுமதி வாங்க வேண்டியதில்லை.

காகம் பானைக்குள் கல்லைப் போட்டு  நீர் மேலேழும்பியதும் தன் தாகம் தீர்த்துக் கொண்டக் கதை நமக்குத் தெரியும். 
இதை ஆராய்ச்சி செய்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் காகத்திற்குத்   தண்ணீர்,  புழு , கல் எல்லாம் கொடுத்து  என்ன செய்கிறது என்பதை  வீடியோ எடுத்திருக்கிறார்கள். என்ன தான் செய்கிறது என்று பாருங்களேன். 




இந்த வீடியோவைப் பார்த்ததும்  என்   மனதில் தோன்றிய  கேள்வி,
" அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க? "


image &video courtesy--google 

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்