வெள்ளிகிழமை அன்று கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். அமைதியாய் என் கைப்பிடிக்குள் இருந்த மொபைல் " உயிரே .....
உயிரே.......என்று பாடத் தொடங்கியது.
அவசரமாய் எடுத்து பார்த்தால் " Rasi Calling ".
" சொல்லுடி ".
" நான் பேசுவது கேட்கிறதா ? "
" கேக்குதே " என்றேன் .
" நல்லா கேக்குதா "
" இது என்னடா தொல்லை? ம்.. ரொம்ப நல்லா கேக்குது " என்று நான் சலித்துக் கொள்ள
அவளோ ." என் பையன் அன்னையர் தினத்திற்கு எனக்கு புது போன் வாங்கிக் கொடுத்திருக்கிறான் "
நான் நாளைக்கு வீட்டிற்கு வந்து காட்டுகிறேன். " என்று முடித்தாள் ராசி.
மறு நாள் மாலை வந்தாள் samsung போனுடன்.
" ஓ ....ஸ்மார்ட் டச் போனா? " கேட்டேன்.
"ஆமாமடி , என்னைப் போலவே என் போனும் ஸ்மார்ட் " பெருமையடித்துக் கொண்டாள்.
"எனக்குத் தெரியாதா நீ எவ்வளவு ஸ்மார்ட் ?"
(மனதிற்குள் சரித்திரம் படைத்த ராசி பதிவு வரி , வரியாக ஓடியது.)
சட்டென்று அவள் போன் "கிணிங் கினிங் "என்று இனிமையாய் இசைக்க
ராசியோ அதையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் .
" ஏய் போனை எடுத்துப் பேசு, யார் போனில்? "என்றது நான்.
ஒரு பதிலும் இல்லை.
எட்டிப் பார்த்தேன்." Husband calling , Husband calling " என்று அலறுவது போல் ப்ளாஷ் அடித்தது.
" என்ன ஆயிற்று? ஏன் போனை எடுக்கவில்லை? " என்றேன்.
" அதுவா....... எப்படி எடுப்பது என்பது மறந்து விட்டது "என்றாளே பார்க்கலாம் .
"என்ன மறந்து விட்டதா?......."
" சரி , இப்ப என்ன செய்வதாக உத்தேசம் ? விஷ்ணுவிற்கு அவசரமாக ஏதாவது
சொல்ல வேண்டுமென்றால்............"முடிக்கவில்லை நான் .
சட்டென்று கைப்பைக்குள் இருந்த பழைய போனை எடுத்து கணவருடன் பேச ஆரம்பித்து விட்டாள் . " பக் " என்று சிரித்து விட்டேன்.சிரிப்பை அடக்க முடியவில்லை.
( இதில் இவளும் இவளுடைய போனும் " ஸ்மார்ட்டாம் ஸ்மார்ட்.")
"சரி . contact list எல்லாம் யார் லோட் செய்தது "என்று கேட்டதற்கு எல்லாம் தன் மகன் செய்து தந்து விட்டான் என்றாள் கர்வமாக .
(" இதிலொன்றும் குறைச்சலில்லை " நினைத்துக் கொண்டேன்.)
" சரி அவனிடமே கேளேன் எப்படி போனை எடுப்பது " என்றேன்.
" இரு என்னை தொந்திரவு செய்யாதே "என்று எரிச்சல் பட்டுக் கொண்டு சிறிது நேரம் யோசித்து பின் ,
"ஞாபகம்.... வந்திருச்சு....... " என்று கமலஹாசன் மாதிரி ராகம் பாடினாள் .
"என்ன?" என்றேன்
" கால் வந்தால் swipe செய்ய வேண்டும் ," என்று சொல்லிக் கொண்டே ,
அப்பொழுது பார்த்து வந்த போனிற்கு பதிலுரைத்தாள்.
யார் என்றதற்கு "ஒரு பொண்ணு கிரெடிட் கார்ட் வாங்கிக்கிறையா" என்று கேட்டார் என்றாள் .
"இதை சரியாக எடு. கணவர் கூப்பிட்டால் கோட்டை விடு "நினைத்துக் கொண்டேன்.
" உன் நம்பரிலிருந்து கால் செய்யேன் எனக்கு ". என்று சொன்னேன்
(எனக்கும் இந்த ஸ்மார்ட் போனை உபயோகித்துப் பார்க்க ஆசை வந்தது)
என் நம்பரை தன் விரல்களால் தொட்டாள் .
நானும் என் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ம்ஹூஉம்.........
என்ன ஆச்சு என்று எட்டிப் பார்த்தால், " you dont have an internet connection to connect to vonage "
என்றிருந்தது.
"இது என்ன? "
என் பையன் தான் சொன்னான் ." நீ பைசா செலவில்லாமல் இன்டர்நெட் மூலமாக பேசலாம் "
" ஆனால் என்னுடன் நேற்றெல்லாம் பேசினாயே internet இல்லாமலே "
" அது தான் எனக்கும் புரியவில்லை "குழம்பினாள் ராசி.
நானும் போனை வாங்கி எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு கால் கூ ட செய்ய முடியவில்லை.என் விரல் பற்றி எரிந்தது தான் மிச்சம். நான் என் தோல்வியை ஒப்புக் கொண்டு அவளிடமே அவள் ஸ்மார்ட் போனை கொடுத்தேன்.
என்ன செய்வது ? சரி வா சூடாக தோசையாவது சாப்பிடலாம் வா என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனேன்.
" டிங் டாங் "
காலிங் பெல் ஒலித்தது.
கதவைத் திறந்தால் ,
கீழ வீட்டு மகேஷ்., சாப்ட்வேர் இஞ்சினியர் . "ஆண்டி, அம்மா சாவி கொடுத்தார்களா? என்றான்.
இல்லையே !
" சரி, அம்மா வரும் வரை உட்காரு " என்று சொல்லி விட்டு உள்ளே போனேன்.
அவன் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க , ராசியோ புது போனைப் பற்றிப் புலம்பி தீர்த்தாள் .
பாவமாய் இருந்தது அவளைப் பார்க்க .
மகேஷிடம் கேட்டுப் பார்க்க முடிவு செய்து அவனிடம் இந்தப் போனைக் கொடுத்தோம்.
அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டு "எனக்குத் தெரியவில்லை . samsung service centre ற்கு கொண்டு போனால் சரியாவதற்கு சான்ஸ் இருக்கு " என்றான், டாக்டர் "பேஷண்டை அட்மிட் செய்யுங்கள் சரியாகி விடும் " என்பது போல்.
அதற்குள் அவன் அம்மா வர ,அவன் சென்றான்.
இதுவும் தோல்வியா?
அதற்குள் ராசி," இந்த சின்னப் போனை சரி செய்ய முடியல இவனெல்லாம் என்ன ஸாப்ட் வேர் இன்ஜினியர் ? " என்று அர்ச்சித்து விட்டு சுடசுட காபியைக் குடித்தாள் .
போய்விட்டு வருகிறேன் என்று விடை பெறும் சமயத்தில் மீண்டும்
"டிங் டாங்"
மீண்டும் மகேஷ்.
" ஆண்டி , இப்பொழுது தான் என் நண்பனிடம் உங்கள் போனைப் பற்றிய தகவலை சொன்னேன்.அவன் எப்படி சரி செய்வது என்று சொன்னான்".
"நான் மீண்டும் முயற்சி செய்யட்டுமா ? "என்று பவ்யமாய் கேட்க , எனக்கு ராசியின் அர்ச்சனை நினவு வந்தது.
"உங்கள் போனை கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி ஒரு ஐந்து நிமிடம் இங்கேயும் அங்கேயுமாக கைகளால் ஸ்வைப் செய்து, சரி செய்தான் .
ஒரு கால் வேறு செய்து சரியாகி விட்டது என்றன்.
" ரொம்ப தாங்க்ஸ் " என்று பல தடவை மகேஷிற்கு நன்றி சொல்லத் தவறவில்லை ராசி .
பிறகு தன் கணவரை போனில் கூப்பிட்டு சொன்னாளே பார்க்கலாம் , .
" அப்பாடி ஒரு வழியாக சரி செய்து விட்டேன். நான் ஸ்மார்ட் தானே " என்றாளே பார்க்கலாம் .
என்ன......நீ சரி செய்தாயா ........அசந்து போனேன்.
நிஜமாகவே நீ ஸ்மார்ட் தான்.(பேசுவதில்)......
image courtesy--google.