Thursday 3 October 2013

நானும் டென்னிஸும்


அன்று காலை எப்பொழுதும் போல் காலை டிபனிற்கு இட்லியும், கொத்தமல்லி சட்னியும் செய்து டேபிளில் வைக்கும் போது , 
" அடடா சட்னி தாளிக்கவில்லையே! " கவனித்தேன்.

கேஸில்,  இருப்புக் கரண்டி ,போட்டு விட்டு  ,கடுகு பாட்டிலை அலமாரியிலிருந்து எடுக்க கையை உயர்த்த  வலது முழங்கையில்  ' பளிச் ' வலி.

கண்ணை மூடி வலியைப் பொறுத்துக் கொண்டேன்.
' எங்கேயாவது இடித்துக் கொண்டோமோ ' நினைத்துப் பார்த்ததில் ஒன்றும் புலப்படவில்லை.

அன்றைய பொழுது கழிந்தது. ஆனால் வலி அதிகமாகிக் கொண்டே போனது மட்டும் புரிந்தது. இரவு படுக்கும் முன் ஒரு  வலி நிவாரணி மாத்திரை முழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டேன்.

காலை எழுந்ததும் ,பல் விளக்கும் போதே முழங்கை வலி,"நீ  வலி நிவாரணி சாப்பிட்டால்.......நான் போய் விடுவேனா  என்ன  " என்பது போல்  , அதிகமாயிருந்தது.

சரி, இனிமேல் சும்மா இருப்பது  சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமம் ,என்பதை  உணர்ந்து எங்கள் குடும்ப நல மருத்துவரை
அணுகினேன்.
இதில்  நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவரிடம் என்னை அனுப்பினார்.

போனில் மாலை  ஏழு  மணிக்கு அப்பாயின்ட்மென்ட்  வாங்கிக் கொண்டு சென்றேன்.
டாணென்று ஆறேமுக்காலுக்கு  அவருடைய கிளினிக்கிற்குப் போனால்  மிகப் பெரிய கும்பல். 
இது என்னதிது?  கிளினிக் தானே. இதென்ன  இவ்வளவுக் கும்பல்.

சரி. நமக்கென்ன நாம் தான்  அப்பாயின்ட்மென்ட் எல்லாம் வாங்கியிருக்கோமே! இவர்களெல்லாம் வாங்காமல் வந்திருப்பார்கள் என்று சவுடாலாக நினைத்துக் கொண்டு  ரிசப்ஷனிஸ்ட்  அருகே போய் நான் வந்திருப்பதை சொல்லி  ஏழு மணிக்கு  அப்பாயிண்ட்மென்ட்  என்று சொன்னவுடன்.

ரிஷப்ஷனிஸ்ட்  கடுகடுவென்று  ." இவங்களைப் பாருங்கள்  இவங்களுக்கு மாலை 3  மணி  அப்பாயின்ட்மென்ட்  . இன்னும் டாக்டரைப் பார்க்கவில்லை என்றதும் கொஞ்சம் மலைத்துப் போனேன்.

அந்தக் கும்பலில் நானும் ஐக்கியமானேன். நான் டாக்டரைப் பார்க்கும் போது மணி ஒன்பது.

நல்ல சிரித்த முகத்துடன், 'என்ன பிராப்ளம் " என்றார்.

நான் என் வலது முழங்கையில் வலியிருப்பதை  சொன்னதும்.

அருகில் வைத்திருந்த  ஸ்டீல் சுத்தி போல் இருந்த ஒன்றை  எடுத்து மெதுவாக  என் கை விரல்களைத் தட்ட ஆரம்பித்தார்.

" டாக்டர், எனக்கு  முழங்கையில் தான் வலி " என்று  சத்தமாக சொன்னதும் ,

தட்டுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார்.

" நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா ? " என்பது போல் இருந்தது பார்வை.

முழங்கை  வலி என்று வந்தால் இவர் விரலையும் உடைத்து விடுவார் போல் தெரிகிறதே என்று நினைத்தேன்.

எத்தனை மாணவிகளுக்கு  இம்போசிஷன் கொடுத்தேனோ !
தெரியவில்லையே. அந்தப் பாவம் தான் டாக்டர் ரூபத்தில் வந்து பழி தீர்த்துக் கொள்கிறதோ  என்று  தோன்றியது
ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. பத்திரமாக நம் கையையும் விரல்களையும்  விடுவித்துக் கொண்டு சென்று விடுவோம்.என்று முடிவெடுத்தேன்.

எல்லா விரல்களையும் தட்டிப் பார்த்து சப்த ஸ்வரங்கள் கேட்கிறதா  என்று பார்க்கிறாரோ  என்று  நினைத்தேன்.

(இதைத் தான்"  இடுக்கண் வருங்கால் நகுக " "என்று வள்ளுவர் சொன்னாரோ!)

ஒருவழியாக சுத்தியலை கீழே வைத்து விட்டு  மருந்து எழுத  ஆரம்பித்தார்.

நான் டாக்டருக்குப் படிக்கவில்லை . ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அதுக்காக என் கைவலியைப் பற்றி  கொஞ்சமாவது என்னிடம் சொல்ல மாட்டேனேன்கிறாரே என்று யோசிக்கும் போது  டாக்டர்  திருவாய் மலர்ந்தார்.

"" உங்கள் வலி வந்து............. "

 " ஆயர்பாடி மாளிகையில்........" செல்போன் இடை மறித்தது.

போனிற்கு  முதலுரிமை., காதருகில் கொண்டு போய்  . ஹலோ  என்று சொல்லிக் கொண்டே ..என்னைப் பார்த்து " Denniss ........" என்று சொல்ல 

Deniss என்பவர் பேசுகிறார் போலிருக்கிறது என்று நான் நினைக்கும் போதே.

போனை கைகளால் மூடிக் கொண்டே  . என்னைப் பார்த்து  அழுத்தந்திருத்தமாக  இது " டென்னிஸ்  எல்போ "என்று சொல்லி விட்டு போனில் பேசத்தொடங்க  நான் குழம்பினேன்.

அது என்ன" டென்னிஸ் எல்போ ?"

டென்னிஸ்  விளையாட சொல்கிறாரோ  என்று தான் முதலில் நினைத்தேன்.

இந்த  வயதிற்கு மேல் டென்னிஸ்  ஆட முடியுமா? இது என்ன தொல்லை  என்று நினைக்கும் போதே  அவர் அவ்ருடைய லெட்டர்  பேடில்  எதையோ எழுதிக் கொடுத்து  போனை விட்டுக் கொடுக்காமலே  வேறு ஒரு அறையைக் காட்டி சைகையாலேயே போகச் சொன்னார்.

கொஞ்சம் என்னிடம்  விளக்கமாக சொன்னால் தான் என்ன என்று ஒரு சின்ன கோபம் வந்தது டாக்டர் மேல்..

சரி. உரலுக்குள் தலையை விட்டாகி விட்டது. ரொம்பவும் இடிபடாமல்  எடுத்துக் கொண்டு போய் விடுவோம் என்றெண்ணி  அடுத்த அறைக்கு சென்றேன்.

அங்கே ஒரு இளம்பெண்  வெள்ளைக் கோட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். என் பேப்பரை கையில் வாங்கிப் பார்த்து விட்டு ,

ஒரு கனத்தத் துப்பாக்கி  வடிவில் ஒன்றை எடுத்து அதில்  பேஸ்ட் போல் எதுவோ ஒன்றை  அப்பி  என் கையில் வைத்து சர் சர் என்று சுத்தி  மசாஜ் செய்ய வலி கொஞ்சம் குறைந்தது.

மெதுவாக அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன்.

" இந்த வலி  எனக்கு எதனால் வந்தது?"

" இதற்குப் பெயர் டென்னிஸ்  எல்போ" .

"அப்படின்னா....... "இது நான்.

"டென்னிஸ்  வீரர்களுக்கு  வரும் வலி."

" டென்னிஸ்  வீரரா...    நானா..........."( நினைக்கும் போதே சிரிப்பு வந்தது)

"நான் ஒன்றும் டென்னிஸ் விளையாடுவதில்லையே  ."

"டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல,  இப்பொழுது நிறைய பேருக்கு வருகிறது "என்று சொல்லி விட்டு  தன வேலையைத் தொடர்ந்தார்.

நான் விடுவேனா? 

"இது எதனால் வருகிறது? " மீண்டும் நான்.

நல்ல வேளை அந்தப் பெண்ணிற்கு கோபம் எதுவும் வரவில்லை.

முழங்கைக்கு  அதிக  பளு கொடுத்தாலும் வரும். " நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் " என்று அவள் கேட்க.

நான் என்ன செய்கிறேன்?

" எல்லோரும்செய்வது தான். வீட்டில் எல்லோருக்கும்  சமைப்பது , காபி போடுவது........மிச்ச நேரத்தில்   நெட் வலம் வருவது ."

"அதனால் கூட   வந்திருக்கும்."

" எதனால்   ...."ஆர்வமானேன்.

"உங்கள்  கம்ப்யுட்டரை  சரியான உயரத்தில் , கைக்கும்  சௌகர்யமான இடத்தில்  இல்லையானால் கூட வரும்" என்று அவர் சொல்ல புரிந்தது.

சமைக்கும் நேரம் தவிர,  மற்ற நேரம் பூராவும்  லேப்டாப்பும் கையுமாக அலைந்தால்  இப்படித் தான்  வலிக்கும் போலிருக்கிறது  என்று தோன்றியது.

வீட்டிற்கு வந்து, இனிமேல்  நம் வலை  உலாவை  கொஞ்சம்  குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

முடியுமா  ? 

சாப்பிடாமல்  கூட இருந்து விடலாம்.
இன்டர்நெட் வலையில்  மாட்டிக்  கொண்ட  நான் அதிலிருந்து விடுபடுவது மிகவும்   கஷ்டமாச்சே  !
ஆனந்த விகடனில் படித்தது  நினைவில்  மோதியது.

சென்ற மாதத்தில்  ஒரு வாரம் ஜப்பானில் " நெட்  ஃபாஸ்டிங்  " என்று செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது இளம் தலைமுறையினர்  இணையத்தை விட்டு வெளியே வந்து  ,நண்பர்கள் உறவினர்கள் என்று பழக வேண்டும் என்பதற்காக.

நம்மால் முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. 
நண்பர்களை சந்தித்து உரையாடுவதே  வலையில் தானே. 

அதெல்லாம்  சரி. கைவலிக்கு என்னதான் தீர்வு என்கிறீர்களா? தினம் சிறிது நேரம் கணினியைத் தனிமையில் இனிமை காண  விடுவது தான். 

என்னால் அப்படி விட  முடியுமா? 

முயன்று பார்க்க வேண்டும்.  

image courtesy----google.

36 comments:

  1. ஆஹா, சானியா மிர்சாவிற்கு போட்டியாக ஒரு வீராங்கனையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க! வாங்க! முதல் முறையாக வந்ததற்கும் ,முதலாக வந்ததற்கும், சாநியாமிர்சாவிற்கு இணையாக நினைத்துப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.
      மீண்டும், மீண்டும் வருக!

      Delete

  2. ஹாஸ்யமாகச் சொல்லிப்போனாலும்
    ஒரு எச்சரிக்கைப் பதிவாகத்தான் இதை
    எடுத்துக் கொள்கிறேன்.
    நானும் ஃபாஸ்டிங் இருக்கப் பழகணும்

    ReplyDelete
    Replies
    1. அவசியம் எல்லோரும் இந்த ஃபாஸ்டிங் அவசியம் இருக்க வேண்டியது தான்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  3. அருமையாக எழுதியுள்ளீர்கள். நகைச்சுவையுடன் இருக்கு. ரஸித்துப்படித்தேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி வைகோ சார்.

      Delete
  4. //நம்மால் முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது.
    நண்பர்களை சந்தித்து உரையாடுவதே வலையில் தானே. //

    ஆமாம். இதெல்லாம் முடியவே முடியாது. நானும் பலமுறை முயன்று பார்த்தேன். கடைசியில் தோல்வி தான். பிரசவ வைராக்யம், ஸ்மசான வைராக்யம் போலவே தான் இன்று இந்த கணினிபக்கமே இனி போக மாட்டேன் என நாம் முடிவெடுப்பதும்.

    >>>>>

    ReplyDelete
  5. ஆஸ்பத்தரி சிகிச்சைகள் அனுபவங்கள் எல்லாமே இப்படித்தான் இருக்கும்.

    அதைப்பற்றி நான் ஒரு குட்டியூண்டு கதையும் எழுதியுள்ளேன்.

    முடிந்தால் படியுங்கோ, சிரியுங்கோ, கருத்துச்சொல்லுங்கோ. இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

    தலைப்பு: வாய்விட்டுச்சிரித்தால் ... ! ;)

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய மீள் வருகைகளுக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி வைகோ சார்.
      உங்கள் வாய் விட்டு சிரித்தாள் கண்டிப்பாக படித்து கருத்திடுகிறேன்.
      மீண்டும் நன்றி வைகோ சார்.

      Delete
  6. சாப்பிடாமல் கூட இருந்து விடலாம்.
    இன்டர்நெட் வலையில் மாட்டிக் கொண்ட நான் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கஷ்டமாச்சே !

    " நெட் ஃபாஸ்டிங் " அருமையான யோசனை..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.

      Delete
  7. முயன்றால்.. முடியாத்து என்று எதுவும் இல்லை!.. கையில் உள்ள வலி தீர்ந்து நலம் எய்த நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், நான் நலம் பெற வாழ்த்தும் உங்கள் சகோதர அக்கறைக்கும் , உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி துரை சார்.

      Delete
  8. ஒரு வேளை லாப்டாப்பில் உழலுவதால் டென்னிஸ் எல்போ வரலாம் என்றுதானே சொன்னார்கள். நிச்சயமாக எதுவும் சொல்லவில்லையே. இந்த டாக்டர்களே இப்படித்தான். அவர்கள் சொல்வது எல்லாம் நமக்குத் தெரியும் என்று நினைப்பார்கள். இல்லையென்றால் ஒன்றுமே தெரியாதவர்கள் என்று நினைத்து எதுவுமே சொல்ல மாட்டார்கள். வலி தேவலையா.?

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது கைவலி பூரணமாக குணமடைந்து விட்டது. உங்கள் நலம் விசாரிப்பிற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி GMB சார்.

      Delete
  9. ஹா... ஹா... ரசித்துப் படித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இடுக்கண் வருங்கால் நகுக என்பது உண்மை தானே. அதான் வழியையும் கொஞ்சம் சிரித்து குனமாக்குவோம் என்று ஒரு சிறு முயற்சி.........
      அதை ரசித்துப் படித்து வாழ்த்தியதற்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  10. சென்ற மாதத்தில் ஒரு வாரம் ஜப்பானில் சென்ற மாதத்தில் ஒரு வாரம் ஜப்பானில் " நெட் ஃபாஸ்டிங் " என்று செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது இளம் தலைமுறையினர் இணையத்தை விட்டு வெளியே வந்து ,நண்பர்கள் உறவினர்கள் என்று பழக வேண்டும் என்பதற்காக. என்று செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது இளம் தலைமுறையினர் இணையத்தை விட்டு வெளியே வந்து ,நண்பர்கள் உறவினர்கள் என்று பழக வேண்டும் என்பதற்காக.//

    நன்றாக இருக்கே!

    தினம் கொஞ்ச நேரம் இப்படி நெட் ஃபாஸ்டிங் செய்தால் கை வலி சீக்கிரம் குணமாகி விடும். விரைவில் குணமாக வாழ்த்துக்கள்.
    எனக்கு தோள்பட்டைவலியும், கைவலியும் இருந்த போது இப்படிதான் மசாஜ் செய்தார்கள். சரியாகி விட்டது.
    நல்ல நகைச்சுவை பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஓ.....என்னைப் போலவே நீங்களும் அவதிப் பட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது
      எனக்கும் இப்ப கொஞ்சம் குணமாகிவிட்டது.
      உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி கோமதி.

      Delete
    2. Mam what treatment u had?pls tell me.i m suffering a lot

      Delete
  11. //எத்தனை மாணவிகளுக்கு இம்போசிஷன் கொடுத்தேனோ?// ஹா...ஹா...
    உண்மையில் இடுக்கண் வருங்கால் நிறைய நீங்களும் நகைத்து எங்களையும் நகைக்க வைத்துவிட்டீர்கள், ராஜி!
    தினமும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கணணியிடமிருந்து தள்ளி இருங்கள்.
    உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எல்லோருடைய அக்கறையும், சகோதர அன்பிலும் நான் திக்கு முக்காடித்தான் போய்விட்டேன்.
      உங்கள் வருகைக்கும், நலவிசாரிப்பிற்கும் மிக்க நன்றி ரஞ்சனி.

      Delete
  12. நான் கூட டென்னிஸ் விளையாட போய்விட்டீர்களோ என்று நினைத்துவிட்டேன்! சுவாரஸ்யமாக ஒரு விழிப்புணர்வு பதிவு ! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நான்....... டென்னிசா?....... ஹா......ஹா.......ஹா.......
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ் சார்.

      Delete
  13. எதுக்கும்ஒரு டென்னிஸ் பேட் வாங்கி நெட் பிராக்டிஸ்பண்ணிப் பாருங்கள் ...வலி வந்த வழியா போகலாம் !

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி என் பதிவிலும் வந்து ஜோக் அடிக்கிறாரே! நன்றி உங்கள் வ்ருகைக்கும், ஜோக்கிற்கும்.

      Delete
  14. ஒருநாளைக்கு ஒருமணிநேரம் மட்டும் என்று குறைத்துக் கொள்ளலாம். கணினியின் இருப்பிடத்தை அந்த ஒரு மணி நேரத்துக்கும் கூட சரியான உயரத்தில், அளவில் வைத்து உபயோகிக்கலாம். தினமும் தேவையான அளவு பிசியோதெரபி செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், நீங்கள் சொல்லியிருக்கும் யோசனைகளுக்கும். அதில் சிலவற்றை நான் நடைமுறைப் படுத்தி வருகிறேன் சார்.

      Delete
  15. பாட்டு, டான்ஸ் எல்லாம் முடிந்து இப்போ டென்னிஸா!

    நான்கூட இங்கு வந்து பேரப்பிள்ளைகளுடன் ஜாலியா டென்னிஸ் விளையாடிட்டு ஊருக்குப் போனதும் திடீர்னு விளையாடுவதை விட்டதால வலி வந்திருக்கலாம் என நினைத்து, 'தொடர்ந்து விளையாடி கொஞ்சம்கொஞ்சமா விட்டால்தான் வலி இருக்காது'ன்னு அட்வைஸ் கொடுக்கலாம்னு வந்தால், இது வேற டென்னிஸ் வலியா இருக்கே.

    பதிவு நகைச்சுவையா இருந்தாலும் வலி உண்மையானதுதான்.முயன்றால் நமக்குத்தான் நல்லது.முயற்சிப்போமா?

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      கொஞ்சம் கணினியுடன் டூ.... விடப் பழகிக் கொண்டிருக்கிறேன்.
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், நகைச்சுவையான கருத்துக்கும்.

      பி.கு.......நம்புங்கள் ப்ளீஸ்.............ராசி கற்பனையே!

      Delete
  16. கணினி பயன்படுத்தும் பலருக்கு இந்த டென்னிஸ் விளையாட்டு வந்துவிட்டது.....

    நெட் ஃபாஸ்டிங்.... முயற்சித்துப் பார்க்கலாம்! ஏற்கனவே அலுவலகத்திலும் வீட்டிலும் தொடர்ந்து கணினி முன் இருக்கும் என்னைப் போன்றவர்களும் முயற்சி செய்ய வேண்டிய விஷயம்.

    ஆனால் எங்கே!

    வலியையும் விளையாட்டாக/நகைச்சுவையாக சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் இந்த உபவாசம் பழகிக் கொள்ளுங்கள் வெங்கட்ஜி.
      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்ஹ்டுக்கும்.

      Delete
  17. take care Raji madam!

    நமக்கே தெரியாமல் இந்த இணையச்சுழலில் மாட்டிக்கொள்கிறோம். இப்படியான அதிர்ச்சி வைத்தியங்கள் தந்து நமது உடல் சுழலிலிருந்து வெளியே இழுக்கப் பார்க்கிறது என்றும் தோன்றுகிறது. உபவாசம் இருந்தாலும் ஒரேயடியா சாப்பிடாம இருக்கக் கூடாது, அளவா சாப்பிட்டு :) ஆரோக்கியமா இருங்க. நேரம் கிடைக்கியில் சுருக்கமான பதிவுகளாவது எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஹி, உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.உங்கள் அக்கறைக்கு special thanks.

      Delete
  18. " நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா ? " என்பது போல் இருந்தது பார்வை."
    "Deniss என்பவர் பேசுகிறார் போலிருக்கிறது என்று நான் நினைக்கும் போதே."
    இடுக்கண் வருங்கால் எழுதிய பதிவும் கலகலப்பாகவே இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ' துன்பம் வந்து நேர்கையில், பாம்பு வந்து கடிக்கையில்....." வரவழைத்துக் கொள்ள வேண்டியது தானே சிரிப்பு. அதனால் சிறிதே சிறிது முயன்று பார்த்தேன். அவ்வளவு தான் பாண்டியன்.
      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்