Friday 11 October 2013

' பிங்க் ' மாதம்







இப்பொழுது ,நம் வாழ்நாட்களை  மருத்துவம்  நீட்டித்து வைத்திருக்கிறது. மகிழச்சியான விஷயம் தான். முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  அதனால் வியாதிகளே  இல்லையென்றோ , எல்லா வியாதிகளையும்,மருத்துவம் சரி செய்து விடுமோ , என்றால்........  இல்லை, முற்றிலும் சரி செய்து விட முடியாத வியாதிகள்,  இன்னும் இருக்கத் தான் செய்கின்றன.

மருத்துவம் மண்டியிடும்  வியாதிகளில், ஒன்று புற்று நோய். குணப்படுத்தவே முடியாது  என்று பரவலாக  பேசப்படுவது அறிந்தது தான். ஆனால் ஆரம்ப காலக் கட்டத்தில்,  நாம்  சிகிச்சைக்கு சென்றோமானால் பூரணமாக குணமடைந்து விடலாம் என்பதையும் மறுக்க முடியாது.


ஆனால் நம்மில் பெரும்பாலோர்  சொல்வது ," ஓ ....கேன்சரா.......நமக்கெல்லாம் வராது " என்பது தான்.


வராவிட்டால் நல்லது தான். 

ஆனால் வந்து விட்டால் நாம் செய்ய வேண்டியது  முதலில் ஒரு கண நேரமும் வீணாக்காமல்  சிகிச்சையை  ஆரம்பிக்க வேண்டும் என்பது தான்.

சென்னை கேன்சர்  ஹாஸ்பிடலில்  நம்மை வரவேற்கும்  பதாகையும்   ,

இதைத் தான் சொல்கிறது,
" புற்று நோயைப்  பார்த்து பயப்பட வேண்டாம். ஆரம்ப காலக் கட்டத்தில் வந்தால்  முற்றிலும் குணப்படுத்த முடியும்  " என்ற செய்தி  பெரும் ஆறுதலளிக்கும் விஷயமல்லவா?

பல  வருடங்களுக்கு  முன்பாக இது சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் இப்பொழுது நிலைமை மாறி விட்டது.புற்று நோயிலிருந்து மீண்டவர்கள்  எண்ணிக்கை அதிகமாகிக்  கொண்டே இருக்கிறது  என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியல்லவா.


நம் நாட்டில் பெண்களை அதிகம் பாதிக்கும்  புற்று நோய் எதுவென்று பார்த்தால்  மார்பகப்புற்று நோய்,,சினைப்பை  புற்று நோய், கர்ப்பப்பை  வாய் புற்று நோய்  என்று  புள்ளி விவரம் சொல்கிறது.


இது யாரை எல்லாம் பாதிக்கும் என்று பார்த்தால்  , புற்று நோய் ஜாதி மதம், ஏழை\, பணக்காரன்,  என்று  எந்த  வித்தியாசத்தையும்  பார்ப்பதில்லை.


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை.



அதுவும் இந்த மார்பகப் புற்று  நோய்  மிகவும் வேகமாக பரவி வருவதாக பத்திரிகை செய்தி ஒன்று சொல்கிறது.


இருபது வருடத்திற்கு முன்பாக 70%  மார்பக புற்று நோயாளிகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட  பெண்கள். ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழ்.

50%  மார்பக புற்று நோயாளிகள்  ஐம்பதை எட்டிப் பிடிக்காத பெண்கள்  தான்,
அதிர்ச்சி தரும் விஷயமாய் இருக்கிறது.

இதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்று பார்த்தால்  மாறி  வரும்  வாழ்க்கை  முறை , உணவுப் பழக்கங்களில் மாற்றம், உடல் பருமன், முதல் குழந்தையை  தள்ளிப் போடுதல், மாசுபட்டுள்ள  சுற்றுசூழல் , அதிகமான  பூச்சி மருந்துகளை உபயோகித்தல்........ என்று அடுக்கிக்  கொண்டே போகலாம்.


ஆனால் மருத்துவர்களும், சேவை நிறுவனங்களும் புற்று  நோய் விழிப்புணர்வு  முகாம்  நடத்துகிறார்கள். ஆனால் எத்தனைப் பெண்கள்  பரிசோதித்துக் கொள்ள  முன் வருகிறார்கள்? நூறு பெண்கள் இருக்குமிடத்தில்  ,இருபத்தைந்து பெண்கள்  பரிசோதனை செய்து கொண்டாலே  பெரிய  விஷயமாக சொல்லலாம் என்று  அடையாறு கேன்சர்  மையத்தின்  " வருமுன் தடுப்போம் "  துறையின் பொறுப்பாளர் வருத்தத்துடன் சொல்கிறார்.


பரிசோதனை செய்து  ,புற்று நோய் இருக்கிறது என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான்  இதற்குக்  காரணம்  என்று சொல்லலாம்.

எத்தனையோ வழிகளில்  மார்பகப் பரிசோதனை  வலியுறுத்தப் படுகிறது.

டிவியில் , ஒரு ஸ்கேன்  நிறுவனத்தினரால்  ஒரு விளம்பரம் காட்டப் படுகிறது. திருமதி ராதிகா , மேமோகிராம் பற்றி  சொல்கிறார்.

அது விளம்பரம் தான் இருந்தாலும் , இதையே நமக்கு சொல்லும் அறிவுரையாக  நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.?

அவர் டிவி தொடரில்,  உபயோகிக்கும் புடைவை, நகை, கைப்பை, செருப்பு என்று பார்த்து   அதைப்போலவே வாங்கி உபயோகிக்க  விரும்பும்  நாம் ,  " மேமோகிராம் செய்து கொள்ளுங்கள் "என்று சொல்வதையும் ஏன் கேட்கக் கூடாது. ?அருகிலிருக்கும் ஸ்கேன்  சென்டருக்கு சென்று  செய்து கொள்ளலாமே!.


சரி, வந்தே விட்டது ,புற்று என்னும் அரக்கன் எனறால் பயப்பட வேண்டாம்.

ஆரம்பக் கட்டத்திலிருந்தால் முற்றிலும் குன்மாக்கப்படக் கூடியதே!

நான் சொல்லவில்லை.....

கேன்சரால்  பாதிக்கப் பட்டு  அதிலிருந்து மீண்ட சிலர்  சொல்வது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.அக்டோபர் 9ந்தேதி   'ஹிந்து ' பத்திரிகையில்  வந்திருக்கும்
" WE CAN SURVIVE " என்ற  செய்திக்குறிப்பில்
திருமதி ஜெயசித்ரா,திருமதி கிரேசி  வர்கீஸ் ,திருமதி அருள்மொழி குமார்
மூவரும்  சொல்வது எவ்வளவு நம்பிக்கை தருகிறது பாருங்கள்.
இவர்கள் மூவரும்  புற்று நோயிலிருந்து  மீண்டவர்கள் . அதிலிருந்து மீண்டு பல வருடங்களாகி விட்டது. ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

இவர்  C. ஜெயசித்ரா , வயது 44

(' " I Listen " என்ற பேட்ஜூடன்  கும்பலான அடையாறு கேன்சர்  ஹாஸ்பிடலின்  அறையில் , அவரிடம்  கேட்கப்படும் கேள்விகளுக்கு,   பொறுமையாக ,ஆனால் நம்பிக்கைத் தரும்விதமாக பதில் சொல்கிறார்..அவர் சொல்வதை அங்கிருக்கும் நோயாளிகள், அவர்களுடைய  உறவினர்கள்  எல்லோரும் ஆவலுடன்  கேட்கிறார்கள்.
அவர் என்ன சொல்கிறார் நாமும் அவர் வாயிலாகவே கேட்போம்.

"2006இல் எனக்கு மார்பகப் புற்று நோய் என்று தெரிய வந்தபோது, நான் நொறுங்கிப்போனது உண்மை. என் குடும்பத்தினருக்கே கூட  நான்  பலமணி நேரம் கழித்தே தான் சொன்னேன் .   இந்த செய்தியை நானும் என் குடும்பத்தினரும்  ஜீரணிப்பதற்குள்

, நோய் என் எலும்புகளையும்  உருக்க ஆரம்பித்து விட்டது . 
இது என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது..

ஆனால், கீமோ தேரபியிலும், ஆபரேஷனிலும்  நான் முழுமையாக குணமடைந்தேன்..

ஆரம்பத்தில்  என் தோற்றத்தில் நோயின் பாதிப்பும், சிகிச்சையின் பாதிப்பும் தெரியத் தான் செய்தது. என் தலை முடி மொத்தத்தையும்  நான் இழக்க நேர்ந்தது.
ஆனால் இப்பொழுது பாருங்கள். என் உடல் நிலை பழைய நிலையை அடைந்துள்ளது. .நான் தினமும் இங்கே வந்து நோயாளிகளுடன் உரையாடி  அவர்கள் இழந்த  நம்பிக்கையைத் திருமபப்   பெற உதவுகிறேன்."

இப்போழுது அவர் சல்வார்  டிசைன்  செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.


தற்பொழுது 55 வயதாகும்  திருமதி கிரேசி  வர்கீஸ்  2002 ம் ஆண்டு ,அதாவது 

அவர்  44 வயதிலிருக்கும் போது மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.  முதலில் இந்த  செய்தியை அவர் மனம் நம்ப மறுத்திருக்கிறது. எனக்கா......கேன்சரா  என்பது தான்  முதலில் வந்த நினைப்பு.

அதனால் சில நாட்களை  வீணடித்து விட்டார். அதற்குள்   நோய்  இரண்டாம்  கட்டத்திற்கு  வந்து விட்டது. ஆனால் அதற்குப் பிறகு தீவிரமாக  சிகிச்சையை மேற்கொண்டார்.  பிறகு உடல் நலமடைந்து ஆரோக்கியமாக தன பணியினைத் தொடர்ந்து செய்து கொண்டு  வருகிறார். 


அவர்  சொல்வது,"  நம்மில் பெரும் பாலோர்  கேன்சர் என்பது, ஒரு மரணதண்டனை என்கிற  மனோபாவத்துடன்  எதிர் கொள்கிறோம். அந்த மனநிலையிலிருந்து  நாம் விடுபட்டு  சிகிச்சையை ஆரம்பிப்பதற்குள்  சில சமயங்களில்  கால விரயமாகி விடுகிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள். 

புற்று நோய் என்று தெரிந்தவுடன் சிகிச்சையை  ஆரம்பித்திருந்தால் என் ஒரு மார்பகத்தை  இழந்திருக்க மாட்டேன். அதனால் யாரும்  காலம் கடத்தாதீர்கள்"  என்பது தான் இவர் கூறும் அறிவுரை.

திருமதி அருள்மொழி குமாரும் இதே போன்று நம்பிக்கை தரும்படி பேசுகிறார். அவருக்கு நோய் வந்தபோது அவர் வயது 38 . சிகிச்சை எடுத்துக் கொண்டதால் ,51 வயதில்  ஆரோக்கியமாக இருக்கிறார். 


இவர்களைப் போன்று  சிகிச்சை மேற்கொண்டு  ஆரோக்கியமாக இருப்பவர்கள்  நம்க்கெல்லாம் பெரும் நம்பிக்கை அளிப்பவர்கள் தானே.


நாமும்  ஒரு சின்ன  அடி எடுத்து வைப்போமா. இனிமேல் நம் தோழியையோ ,

உறவுப் பெண்மனியையோ  நலம் விசாரிக்கும் பொது,
நலமா  என்கிற கேள்வியுடன். இந்த வருடத்து " மேமோகிராம் " மற்றும் " பேப் ஸ்மீயர்  " டெஸ்ட்  எல்லாம் செய்தாகி விட்டதா என்கிற ஒரு கேள்வியையும் கேட்டு , நம்மால் முடிந்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவோம்., ராமருக்கு  அணில் உதவியது போல்.!!

image courtesy----google.



25 comments:

  1. வணக்கம்
    தரவுகளின் அடிப்படையில் நன்றாக ஆய்வு செய்து பதிவு வெளியிட்டமைக்கு .வாழ்த்துக்கள் பதிவு அருமை இந்த பதிவு அனைவருக்கு சென்றடைய வேண்டும் என்றால் Facebook.கில் லிங் கொடுத்தால் நன்று இது என்னுடை கருத்து......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.. உங்கள் உடனடி வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி. , facebook லும்
      பகிர்ந்து கொண்டேன்.
      நன்றி ரூபன்.

      Delete
  2. நல்ல இடுகை; என் + 1 வோட்டு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  3. மிகவும் பயனுள்ள அவசியமான விழிப்புணர்வுப் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  4. " புற்று நோயைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஆரம்ப காலக் கட்டத்தில் வந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் "/உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் கருத்துக்கு.

      Delete
  5. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  6. மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு கட்டுரை. படிக்கும் போது புற்று நோயால் இறந்த எனது உறவினர்கள், நண்பர்கள் முகங்கள் நிழலாடின. கட்டுரையில் நிறைய தகவல்கள். எப்போதும் மருத்துவம் சம்பந்தப்பட்ட் கட்டுரைகளை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஆய்வு மையங்களைப் பற்றியும் குறிப்பிடுங்கள்.

    மக்கள் மத்தியில் இன்னும் விழிப்புணர்ச்சி வரவில்லை. குடும்பக் கட்டுப்பாடு, சொட்டு மருந்து பற்றி அரசாங்கம் செய்த விழிப்புணர்வு விளம்பரங்கள் போன்று புற்று நோய்க்கும் செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் சார். நான் எழுத மறந்த விஷயத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார்., இந்த விஷயத்தை குறித்துக் கொண்டேன். இந்த மாதிரி பதிவு எழுதும் போது பதிவில் சொல்லியிருக்கும் தகவல்களின் உண்மைத் தன்மை பற்றி குறிப்பிட வேண்டும் என்பது புரிகிறது. உங்கள் வருகைக்கும், , பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  7. முழுமையாக குணப்படுத்த இயலும் கான்சர் ஒன்றே ஒன்று தான் அது மார்பக புற்று நோய். அதுவும் மிக ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் முற்றிலும் கான்சர் பரவு வதை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.

    அண்மையில் கான்சர் நோய் பரவும் விதங்களைப் பற்றி புதிய ஆய்வுகள் வெளி ஆகியிருக்கின்ன்றன. ஒரு சிலவற்றை எனது வலையில் இட்டு இருக்கிறேன்.


    சுப்பு தாத்தா.
    www.Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சுப்பு ஐயா.
      நீங்கள் எத்தனை ப்ளாக் தான் எழுதுவீர்கள். ! உங்கள் திறமை ஆச்சர்யபட்ட வைக்கிறது.
      அவசியம் நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்கு சென்று படிக்கிறேன்.

      Delete
  8. பிங்க் மாதம் என்ற தலைப்பு புற்று நோய் விழிப்புணர்வு பற்றிய பதிவாயிருக்கும் என்று எண்ணவில்லை. பிங்க் ஸ்லிப் என்று வேலையில் இருந்து சீட்டு கிழிப்பதை குறிப்பிடுவார்கள்.நல்ல கட்டுரை. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி GMB சார்.

      Delete
  9. விழிப்புணர்வு வேண்டி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை பதிவிட்டமைக்கு நன்றி!.. இனி எவருக்கும் அந்த நோய் வாராதிருக்க அம்பாளை வேண்டிக்கொள்வோம்!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நீங்கள் சொல்வது போல் அந்த அம்பாள் தான் நம்மோடு துணை நிற்கவேண்டும் , நம்மைக் காப்பாற்றியருள வேண்டும்.
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்றி துரை சார்.

      Delete
  10. நல்லதோர் விழிப்புணர்வு கட்டுரை. பலருக்கு இதை கேட்ட உடனேயே பயம். ஆரம்ப காலத்தில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை ஆரம்பித்து விட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  11. நம்பிக்கையும் தெளிவையும்
    தந்து போகும் விரிவான
    அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், கவித்துவமான வாழ்த்துக்கும்.

      Delete
  12. //வந்து விட்டால் நாம் செய்ய வேண்டியது முதலில் ஒரு கண நேரமும் வீணாக்காமல் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான்.//

    நல்ல விழிப்புணர்வு கட்டுரை.
    நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்வதுடன் முடிந்து விடவில்லை ,இந்த நோயிலிருந்து விடுபடுவோம் என்ற மன உறுதியும் நம்பிக்கையும் முதலில் வேண்டும். அப்போது தான் நோயிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.
    நம்பிக்கை தரும் அழகிய கட்டுரை.
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் கோமதி .நீங்கள் சொல்வது போல் நம்பிக்கை வரவேண்டும். நம்பிக்கை இருந்தால் உடனே சிகிச்சை ஆரம்பித்து விடுவார்கள். அது இல்லாததால் தான் விழிப்புணர்வு தேவையாயிருக்கிறது.

      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  13. நான் பார்த்தவரை இப்போது இந்த விழிப்புணர்வு அதிகம் பேருக்கு இருப்பதாகத்தான் தெரிகிறது

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்