Wednesday 26 February 2014

புலியும் நானும்


.
அன்று நல்ல தூக்கத்திலிருந்தேன்.........,யாரோ  கதவைத் தட்டுவது போல் சத்தம்  கேட்க, உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம் ..........பிராண்டுவது போலிருந்தது . ரஜாய்க்குள்ளிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி , கடிகாரத்தைப் பார்த்தேன்.  மணி  6 ஐத் தாண்டி விறுவிறுப்பாக  ஓடிக் கொண்டிருந்தது கடிகார முள்.   விடிந்து விட்டதே கட்டிலை விட்டு இறங்க, செருப்பைத் துழாவினேன்.போட்டுக் கொண்டேன். "பிப்ரவரியிலும் இப்படிக் குளிருகிறதே  .காலைக் கீழே வைக்க முடியவில்லையே." நினைத்துக் கொண்டேன்.

அப்பொழுது நாங்கள் இருந்தது 'மோதி நகரில்'. பிரதம் வேட்பாளர் திரு. நரேந்திர மோடி  அவர்களுக்கும் , நாங்கள் இருந்த மோதி நகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது "மீரட்' நகர்  அருகிலிருக்கும் ஊர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் , திரு.ஆர்னப்  கோஸ்வாமி போன்ற டிவி மக்கள்  வாயில் விழுந்து புரளும் முசாபர் நகர் அருகிலிருக்கும் ஊர்.

விஷயத்திற்கு வருகிறேன்.

ஸ்வெட்டரை சரி செய்து கொண்டே   கதவருகில் போவதற்குள் திரும்பவும் யாரோ பிராண்டுவது போலிருக்க, இப்பொழுது இன்னும் பலமாக  , கோபமாக கதவை உடைப்பது போல் சத்தம் வர,தாழ்ப்பாள் உடைத்துப் பிய்த்துக் கொண்டு வர  " கோன் ஹை " கேட்டுக் கொண்டே வர,  கதவுத்   தானாகத்   திறக்கவும், என் மாமியாரும்" யாரு "என்று கேட்டுக் கொண்டே வரவும் சரியாயிருந்தது.

கதவுத் திறந்தவுடன், முதலில் ஒரு நாற்றத்தை உணர்ந்தேன். பார்த்தால் வரி வரியாக கோடுகளுடன் புலி ஒன்று நின்றுகொண்டிருக்க .
நான் ,    புலி .........புலி ....   ஆ..................என்று கத்த  ஆரம்பிக்க,  கத்தல் பாதியிலேயே  தொண்டையுள் மாட்டிக் கொள்ள , என் மாமியாரோ அதிர்ச்சியில் அருகிலிருக்கும்  சேரில் மயக்கமாய் விழ, என்ன செய்வது என்று நான் முழிக்க, புலி சுதாரித்துக் கொண்டு உள்ளே சர சரவென்று தன் வாலை ஸ்டைலாக ஆட்டியவாறு உள்ளே நுழைந்தது.  உறுமல் சத்தம் இல்லாமல் பூனை போல் நுழைந்தது.

தூக்கம்  இன்னும் முழுதுமாக கலையாமல் , என் கணவர் ' அங்கே கிச்சனில் என்ன செய்கிறாய்? என்ன சத்தம்?  என்னமோ வாசனை  அடிக்குதே! ' என்று சொல்ல, நானோ புலியைப் பார்த்த அதிர்ச்சியில்  சிலையாய்..............

திரும்பவும் பதட்டத்துடன்  அவர் " ராஜி ராஜி "  என்று குரல் கொடுக்க , உடனே புலி  என்னமோ அவர் ,அதைத் தான் கூப்பிட்டது போல்,  குரல் வந்த திசையை நோக்கி  மெதுவாக நகர ஆரம்பித்தது.

அதற்குள்  LKG  படித்துக் கொண்டிருந்த என் பையன்  குதித்தெழுந்து , " தீதி தீதி  டைகர் பாரு " என்று குரல் கொடுக்க UKG படிக்கும் என்   பெண்ணும்   " ஹையா  , டைகர்  நம்மைப் பார்க்க வந்திருக்குடா"  என்று குதிக்க  எனக்கு  சகலமும் அடங்கிப் போனது.என் பெண்ணும், பையனும் பேசுவதைக் கேட்டு , அவரும் ரஜாயை  விட்டுத் தலையை நீட்டிப் பார்க்க , செய்வதறியாமல்  முழிக்க , எனக்கோ இந்தக் குழந்தைகள்  இருவரும்  கீழே இறங்கி விடப் போகிறதே என்று பதைபதைப்பு.

புலி இரண்டு  குழந்தைகளையும்  பார்த்து விட்டு, டைனிங் டேபிளை  நோக்கி  அசைந்தது. என்னவர் அதற்குள் இந்த  இரண்டு குழந்தைகளையும், இழுத்து ரஜாய்க்குள் திணித்து விட்டார். நான் சுவரோடு சுவராக, என் மாமியாரோ மயக்கமாய் சேரில்.புலியோ  டைனிங் டேபிளில் குதித்து ஏறியது.  நேற்றிரவு சாப்பிட்டு விட்டு  மிச்சமிருந்த சப்பாத்தி , கொஞ்சமாய் ராஜ்மா  எல்லாவற்றையும்   கீழே தள்ளி விட்டு  மெதுவாக முகர்ந்து பார்த்து விட்டு  என்னை நோக்கி ஒரு பார்வைப் பார்த்தது.(இதெல்லாம் ஒரு சமையலா? என்பது போல் தான்.)

பின் மெதுவாக  ஹாலில்  நின்றிருந்த என் பக்கம்  பார்வை ஓட்டிக் கொண்டே , என்னை  நோக்கி அடியெடுத்து வைத்ததது.ஒரு உறுமல் உறுமியது பாருங்கள்.இப்ப நினைத்தாலும் உடம்பல்லாம் நடுங்குகிறது.
பின்வீட்டில்  இருப்பவர்கள் இப்பொழுது தான்  எட்டிப் பார்த்தார்கள்."  பாக்....பாக்..." என்று அவர்கள் கத்த எனக்குக் கொஞ்சம்  ஆறுதலாயிருந்தது. அவர்கள் போலீசுக்கு சொல்லி விடுவார்கள் என்கிற ஆறுதல் தான்.செல்போன், இல்லாத நாட்கள் அவை. சாதரன லேண்ட்லைன் போன்  கூட கிடையாது அந்தக் காலத்தில். எங்களைக் காப்பாற்ற வேண்டுமானால்  வெளியாட்கள் யாராவது மனம் வைத்தால் தான் முடியும்.

உறுமலுடன் வந்தப் புலி வாயைத் திறந்து தன் பற்கள் எல்லாம் சிங்கப் பல்(?) உட்பட  ஒரு முறைக் காட்டி பயமுறுத்தி விட்டு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தது. அப்பாடி.... வெளியே போய் விடும் என்று மெதுவாக மூச்சு விட ஆரம்பித்தேன்.  என் நினைப்பில் ஒரு வண்டி மண். நேராக போய் வாயிற்படியில், வாசற்படியின்  குறுக்காக, ஏதோ எங்கள் வளர்ப்பு நாய் போல் ,குறுக்கே படுத்துக் கொண்டு  தலையை சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டது.இப்போதைக்கு இங்கிருந்து நான் நகரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது.


எங்கள் வீட்டின் முன் கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் நல்ல தூரத்தில் நின்று கொண்டு பார்ப்பதோடு  இல்லாமல், அதை பூர்... பூர்... என்று சீண்ட வேறு ஆரம்பித்து விட்டார்கள்.  எப்படி இதை விரட்டுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், குழந்தைகள் மெதுவாக எட்டிப் பார்க்க , நானோ புலியின் கைக்கெட்டிய தூரத்தில்., சுவரோடு சுவராக..

என் கணவர் ,என்னை அசையாமலிருக்க சைகை செய்து  பூனை  மாதிரி நடந்து சென்று கிச்சனில் கீழே வைத்திருந்த பக்கெட் அடுப்பு. ( வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கரியடுப்பு)  பற்ற வைத்திருப்பது, புகை வாசனையில் புரிய ஆரம்பித்தது. கிச்சனில் இருக்கும் புகைபோக்கி க்கருகில்  அதை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நேரம்  வீடு முழுவதும்  புகையாயிருக்குமெ. " ஏன் ஸ்டவ் என்னாயிற்று? " என்று கேட்காதீர்கள். கெரொசின் தட்டுப் பாடு காலம் அது. கொய்லா அடுப்பு தான்  சமையலுக்கு.. கொஞ்ச நேரத்தில் அடுப்பு பிடிக்க ஆரம்பித்து கரியெல்லாம் ' கண கண ' வென்று நல்ல சிவப்பாக  ஜொலிக்க , அந்த பக்கெட்டை எடுத்து வந்து மெதுவாக(இருக்கும் தைரியத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு)  புலியின் முன் வைக்க , அது  எழுந்து ஒரே ஓட்டமாய் , வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று பேரை ஒரு தள்ளு தள்ளி விட்டு  ஓடிப் போய்விட்டது. நாலு கால் பாய்ச்சல் என்பதைக் கன்கூடாகப் பார்த்தேன்.நெருப்பைக் கண்டால் மிருகங்களுக்கு பயம் என்கிற  உபாயத்தின் மூலம்  உயிர் பிழைத்தோம்.  இங்கே பிடித்த ஓடடத்தை "மீரட்"டில் தான் போய்  திரும்பிப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன்.(அரை மணி நேரப் பிரயாண தூரம் தான்).

அட...... பாருங்கள் அந்தப் புலி மீரட்டில் தான்  மிரட்டிக் கொண்டிருக்கிறதாம்.
நேற்றைய செய்தித் தாளில்  செய்தி வந்திருக்கிறது பாருங்கள்.....


செய்தியைப படித்தவுடன் ," மீரட் "டிற்கு வெகு அருகாமையில்  ஒரு காலத்தில் வசித்திருக்கிறோமே என்று நினைத்துப் பார்த்தேன்.  கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு  புலியை  விருந்தினராக்கி மகிழ்ந்தேன். அவ்வளவே!

      SAVE OUR TIGERS. SAVE OUR NATION'S PRIDE

image courtesy---google.


36 comments:

  1. எழுத்துப்புலியின் கைவண்ணத்தில் விருந்தினராக வந்த
    சிறுத்தைப்புலிக்கு நல்ல சூடான வரவேற்பு அளித்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், எழுத்துப் புலி என்று என்னைப் பாராட்டியதற்கும் நன்றி ராஜராஜேஸ்வரி

      Delete
  2. வணக்கம்
    அம்மா.

    தொடக்கம் முதல் முடிவு வரை கதை மிக அருமையாக உள்ளது..
    கற்பனை வளம் நன்று... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரூபன் .

      Delete
  3. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தமிழ்மண வாக்கிற்கு நன்றி ரூபன்.

      Delete
  4. //கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு புலியை விருந்தினராக்கி மகிழ்ந்தேன். அவ்வளவே!//

    கற்பனைக்குதிரை ....... புலியின் வேகத்தில் ..... புறப்பட்டதுடன் ..... மேலே அவர்கள் சொல்லியுள்ளது போல .... அதிலும் சூடான வரவேற்பு. ;))))) சுவையாக உள்ளது, படிக்க..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வைகோ சார்.

      Delete
  5. கற்பனையா? நிஜமா? என்று தெரியாத அளவிற்கு பிரமாதமாக எழுதியிருகிறீர்கள், ராஜி! புலிக்கு ஹிந்தியில் 'ஷேர்' ஆ? ஷேர் என்றால் சிங்கம் இல்லையோ? புலிக்கு சிங்கப்பல்! இது போன்றவைகள் தான் நீங்கள் எழுதியது கற்பனை என்று புரிய வைத்தது.

    எங்கள் காதில் நன்றாகப் பூ வைத்துவிட்டீர்கள், நகைச்சுவை ராணி!
    புலி உங்கள் சமையலை மோந்து பார்த்து விட்டு 'இதெல்லாம் ஒரு சமையலா?' என்றதை படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
    நகைச்சுவையில் எங்களை மூழ்க அடித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி,
      உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி ரஞ்சனி.புலிக்கு " பாக்" என்று சொல்வதே சரி. ஆனால் சிங்கம், புலி இரண்டையும் ஷேர் என்று சொல்வதும் வழக்கமாக இருக்கிறது என்று நெட்டில் பார்த்தேன். மேலும்,ஷேர் என்பது பிரபலமான வார்த்தை என்பதாலேயே அதையே பயன்படுத்தினேன்.

      என் பதிவை ரசித்துப் பாராட்டி, எனக்கு நகைச்சுவை ராணி என்று பட்டம் கொடுத்தத்தற்கு மிக்க நன்றி ரஞ்சனி.

      Delete
  6. சுவாரஸ்யம்... ஆனால் கடைசி வரை கற்பனைக் குதிரை பயமுறுத்தத்தான் செய்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  7. சாதுர்யமான நகைச்சுவை!..
    ஆரம்பத்தில் சில பாரா வரையில் நானும் திகைத்துத் தான் போனேன்.
    இருந்தாலும் - இதெல்லாம் ஒரு சமையலா!? - என்று கேலியாகப் பார்த்த புலியை சும்மா விட்டது தப்பு!.. பெரிய தப்பு!..

    ReplyDelete
    Replies
    1. வரட்டும் அந்தப் புலி. வந்து தானே ஆக வேண்டும். நாம் தான் அவர்களின் இருப்பிடங்களைஎல்லாம் திருடிக் கொண்டு இருக்கிறோமே. கண்டிப்பாகத் திரும்பி வரும். அப்ப இருக்குப் புலிக்கு தண்டனை.புலியை என் சமையலை சாப்பிடாமல் விட்டு விட மாட்டேன் துரை சார்.கவலயே வேண்டாம் .என் குடும்பத்தினர் எல்லாம் வாய் திறக்காமல் சாப்பிடுகிறார்கள்.புலி மட்டும் சாப்பிடாமல் தப்புவவாவது. விட மாட்டேன்.

      உங்கள் வருகைக்கும், நகைச்சுவையான கருத்துப் பகிர்விற்கும் நன்றி சார்.

      Delete
  8. அவ்வ்வ்வ், என் பயத்தை கடைசியில இப்படி அநியாயமா ஒன்னுமே இல்லாம பண்ணிட்டீங்களே ! ஏதோ புலியுடன் ஒப்பந்தம் போட்ட மாதிரியே (கதை)போகுதேன்னு ஆரம்பத்திலேயே நினைத்தேன்.

    கதையுடன், ராஜராஜேஸ்வரி அவர்களின் பின்னூட்டத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. புலியுடன் ஒப்பந்தமா? இது நல்லாருக்கே! அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக ஒப்பந்தம் போட்டு விட வேண்டியது தான்.
      உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்து பாராட்டியதற்கும் நன்றி சித்ரா.

      Delete
  9. ***கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு புலியை விருந்தினராக்கி மகிழ்ந்தேன். அவ்வளவே!***

    கற்பனைப் புலிதானே அது? கற்பனைக் குதிரைனு சொல்றீங்க? :)

    அது ஏன் கற்பனைக் குதிரைனு சொல்றாங்கனு சொல்லுங்களேன்? குதிரைதான் "அந்தப் பழமொழி" உருவானபோது நாமறிந்த மிகவும் வேகமாக ஓடும் விலங்கா இருந்து இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. வருண்,
      எனக்கும் தெரியவில்லையே!
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வருண்.

      Delete
  10. RR மேடம் கமெண்ட் மற்றும் ரஞ்சனி நாராயணன் கமெண்ட் அருமை. 'ஷேர் என்றால் சிங்கம் இல்லையோ' என்றுதான் எனக்கும் தோன்றியது. பாதியிலேயே ஏதோ கற்பனை சமாச்சாரம் என்று தெரிந்து விட்டாலும் வெகு சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார்,
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார். ராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் , ரஞ்சனிக்கும் ஸ்பெஷல் நன்றிகள் சொல்ல வேண்டும் . இருவரும் என்பதிவின் சுவையை அவர்கள் பின்னூட்டம், அதிகமாக்கி விட்டார்கள்.

      Delete
  11. முதலில் கனவென்று நினைத்தேன், உண்மைச் சம்பவம் என்றதும் பயந்தேன்... கற்பனை என்றதும் நிம்மதி அடைந்தேன்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்பை.

      Delete
  12. நிஜமாவே நம்பிட்டேன்.
    கடைசியிலே தான் இது கதை கற்பனை என்று தெரிந்தது.
    அப்பாடா
    //என்னை நோக்கி ஒரு பார்வைப் பார்த்தது.(இதெல்லாம் ஒரு சமையலா? என்பது போல் தான்.)//


    தப்பு அப்படின்னு தெரிஞ்சாலும் வாயைத் திறக்க முடியுமோ ?
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சுப்பு ஐயா,
      //தப்பு அப்படின்னு தெரிஞ்சாலும் வாயைத் திறக்க முடியுமோ ?//
      தப்பு என்ன என்பதை தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள் ஐயா. தப்பைத் திருத்திக் கொள்ளுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்களேன்.

      Delete
  13. நிஜமாவே நம்பிட்டேன்.
    கடைசியிலே தான் இது கதை கற்பனை என்று தெரிந்தது.
    அப்பாடா

    சுப்பு தாத்தா.

    தப்பு அப்படின்னு தெரிஞ்சாலும் வாயைத் திறக்க முடியுமோ ?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் நன்றி சுப்பு ஐயா.

      Delete
  14. இப்படியெல்லாம் கற்பனை செய்யும் உங்களுக்கு மீதிக்கதை ஒரு பொருட்டா என்ன.? கதையை எதிர் நோக்கி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  15. கற்பனையா!!! இப்படி பண்ணிட்டீங்களே....:))

    எழுத்து நடை த்ரில்லிங்காகவே இருந்தது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துப் பாராட்டியதற்கு நன்றி ஆதி.

      Delete
  16. அப்பப்போ உண்மையோ , அப்பப்போ கதை தானோ என நினைக்க வைத்த கதை....

    ReplyDelete
  17. காகாகாகா புலியார் விஜயம் கற்பனைனு ஆரம்பத்திலேயே புரிஞ்சாலும், மாமியார் வருகையோடு சேர்த்து எழுதினீங்க பாருங்க. அங்கே தான் நீங்க நிக்கிறீங்க. பின்னே? புலி போறவரைக்கும் நின்னுட்டுத் தானே இருந்திருக்கீங்க! :))))) நல்லா கோர்வையான க்ற்பனைத் திறன். :)))

    ReplyDelete
  18. ஆனால் பாருங்க, நாங்கல்லாம் பாம்பார், எலியாரோட எல்லாம் குடித்தனம் நடத்தி அனுபவம். அதிலும் பாம்பார் (சுப்புக்குட்டினு செல்லப் பெயர் கூட வைச்சிருக்கோம் அவங்களுக்கு,) கூட 2011 வரையில் அலுக்காமல் சலிக்காமல் குடித்தனம் பண்ணினோம்.:)

    ReplyDelete
  19. எழுத்தில் இருக்கும் வேகத்தைப் பார்த்தபோது ஜிம்கார்பெட்டின் உண்மையான அனுபவம் போன்றே இருந்தது. கடைசியில் காகிதப் புலி! படிக்க சுவாரஸ்யம்!

    ReplyDelete
  20. அட கற்பனையா.....

    ரசித்துப் படித்தேன்.....

    ReplyDelete
  21. போங்க ராஜி மேடம்! ஒரு நிமிடம் பதை பதைக்க வைத்து விட்டீர்கள்.. பார்த்து செய்தி தாளில் வந்த சிறுத்தை புலி நிஜமாகவே ராசி மாதிரி வந்து கதவை தட்டி விட போகிறது :)

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்