Tuesday 18 December 2012

தாமதத்திற்கு மன்னிக்கவும்

  

சென்ற வாரம் பெங்களூரிலிருந்து சென்னை திரும்ப   ட்ரெயின்  டிக்கெட்  எல்லாம்   ஃபுல்.

தட்கலில்  புக்  செய்யலாம்  என்றால்  கிடைத்தால்  தானே!

பெண்ணிற்கு  ' மாப்பிள்ளை '   கூட  கிடைத்து   விடுவார். ஆனால்  ரயிலில்  டிக்கெட்  கிடைப்பதில்லை.

என்னவரோ  பஸ் பயணத்திற்கு  மறுக்க,  விமானத்திற்கு  புக் செய்தோம்.

பெங்களூரை விட்டு  மிக............வும்  தள்ளி   இருக்கிறது  ஏர்போர்ட்.

' கோரமங்களா ' விலிருந்து   டாக்சியில்  ஏர்போர்ட்டிற்கு   வந்த நேரம்       சென்னைக்கு   பயணித்திருந்தால் ,  சென்னைக்கு  செல்லும் தூரத்தில் கால் பாகம் கடந்திருக்கலாமே என்பது  என் அம்மாவின் அங்கலாய்ப்பு.

டாக்சியை  விட்டு  இறங்கும்  போது  தான்  மீட்டரைப்  பார்த்தோம். தலை  சுற்றி  மயக்கம்  வரும்  போலிருந்தது.  விமான  பயண  டிக்கெட்டின்  விலையில்   பாதியை   டாக்சி  கட்டணமாகக்   கொடுத்தோம்.

ஒரு  வழியாக  ஏர்போர்ட்  வந்தோம்.

போர்டிங்   பாஸ்  வாங்க கவுண்டருக்கு  சென்றோம்.

தூக்கிப்  போட்ட கொண்டை,  லிப்ஸ்டிக்  சகிதம்   இளம்  பெண்  ஒருவர்    எங்கள்   டிக்கெட்டை  வாங்கிக்  கொண்டார்.

பட்டாம்பூச்சியாய்  படபடக்கும்   கண்களால்   எங்களையும்,   கணினியையும்
மாறி,  மாறிப்  பார்த்தார்.  அழகிய  புன் சிரிப்புடன்   "ஃப்ளைட்  டிலேட்   பை  ஒன் ஹவர் .  ஸாரி  ஃபார் த டிலே "  என்றார்.

(எங்கேயிருந்து  இவ்வளவு  அழகழகான  பெண்களை   வேலைக்கு  அமர்த்துகிறார்களோ   தெரியவில்லை.)

ஒரு   மணி  தானே என்றெண்ணி   அங்கேயுள்ள   'கேப்டேரியா' வில்     மூவரும் ஆளுக்கு   ஒரு சமோசாவும்   காபியும்   குடித்தோம். 

பில் பணத்தை(கொஞ்சம்  அதிகம்  தான்)   கொடுத்து  விட்டு ,  லவுஞ்சில்  அமர்ந்தோம்.  இப்படி,  அப்படி    பார்வையை    ஓட்டினேன்.

குதிகால்  உயர்ந்த   செருப்பணிந்த  ஃபுல்  மேக்கப்புடன்   அலையும்   மேல்தட்டு  குடும்பத்தை   சேர்ந்த   பெண்கள்,   ஃபுல்   சூட்டில்     அலையும்   சில   பணக்கார   ஆண்கள்,    கேப்டேரியாவில்  உண்ணும்   கொழுகொழு  பணக்காரக்   குழந்தைகள் , வாக்கி  டாக்கியுடன்   அலையும்   விமான   நிலைய ஊழியர்கள் ,    மோப்ப  நாய்களுடன்   அலையும்   போலீஸ்  காரர்கள்   எல்லோரையும்   பார்த்துக்   கொண்டிருந்தேன்.

'டிஜிடல்  டிஸ்ப்ளே 'யை   பார்த்துக்  கொண்டிருந்த  என் கணவர்   என்னிடம்  " இன்னும்   கொஞ்ச நேரம்   கூட ' பராக்கு '  பார்த்துக்   கொண்டிரு.  நம்முடைய   ஃப்ளைட்   இரவு    பத்து  மணிக்கு   தானாம்"  என்றார்.

சென்னைக்கு   நடந்தே  சென்று  விடலாமா  என்று  அலுப்பு  தட்டியது..

நாங்கள்  உட்கார்ந்திருந்த   இடத்திலிருந்து  பார்த்தால்  "பார்"  தெரிந்தது.

கவுண்டரில்  சில   பேர்.   வெளிநாட்டினர்   மட்டுமல்ல ,  நம்நாட்டினரும்  ஏன்  நம்மூர்   பெண்களும்  கூட  "சிப்" பிக்  கொண்டிருந்தார்கள்.  எங்கே  போய்   கொண்டிருக்கிறோம்  நாம்   என்று   நினைக்காமல்  இருக்க  முடியவில்லை.

மீண்டும்  எங்கள்  ' ஃப்ளைட்  டிலேட்.  ஸாரி .'  என்று விசாரனை  பிரிவில்  கூற,

 ஒருவழியாக  பதினோரு மணிக்கு  விமானத்திற்கு   ஆயத்தங்கள்  ஆரம்பமாயின.

வரிசையாக  விமானத்தின்  உள்ளே  அனுப்பிக்  கொண்டிருந்தார்கள்.
எங்கள் முறை  வந்தது.

எங்கள்   மூவரையும்  ஒரு ஓரமாக  விமான  வாயிலிலேயே நிற்க வைத்து விட்டார்.  கேட்டால் " சீட்  டூப்ளிகேஷன் .  ஸாரி "என்றார்.

எல்லாவற்றையும்   கம்ப்யூட்டிரிலேயே   செய்தால்   இப்படித்தான்   ஆகும்  என்று  என்  அம்மாவின்   புலம்பல்.

வரிசையாக  எல்லோரும்  உள்ளே   சென்று  கொண்டிருந்தனர் , எங்களை  ஒரு மாதிரி  பார்த்துக்   கொண்டே.

ஒரு பெண்  எட்டு வயதிருக்கும்.  எங்களை  திரும்பி  திரும்பி   பார்த்துக்   கொண்டே   சென்றாள்.

ஹோம் வொர்க்  செய்யவில்லையோ  என நினைத்தாள்  போலும்.

ஒரு வயதானவர்   ஒரு படி  மேலே  போய்   அருகே நிற்கும்   விமான  ஊழியரிடம்   "எனி  ப்ராப்ளம்"?   என்று  எங்களைப்   பார்த்து  கொண்டே  கேட்டார்.

தீவிரவாதிகள்  என்று  நினைத்திருப்பாரோ?(அவரவர்  பயம்  அவரவர்க்கு)

கொஞ்ச நேரம்  பாவமாக   நின்று  கொண்டிருந்தோம்.   ஒரு  வழியாக   சீட்  நம்பரைச்  சொல்லிவிட்டு ' ஸாரி  ஃபார் த  டிலே' என்று  சொல்லி   உள்ளே அனுமதித்தார்.

உள்ளே  சென்று   பார்த்தால்   பாதி  சீட்  காலி.

இதற்கா  எங்களை   தண்டனை   பெற்ற   மாணவனை  போல்  நிற்க   வைத்தார்கள்.

அரை  மணியில்  சென்னை   வந்து சேர்ந்தோம்.

கிளம்பியதிலிருந்து   நிறைய  பேர்   தாமதத்திற்கு  வருந்தினார்கள்.
ஆனால்  எல்லோருக்கும் ' ஸாரி' சொல்லும்  அந்த  அரை  நொடி  தான்  வருத்தம்.

எங்களுக்கோ   ஐந்து  மணி  நேர  வருத்தம்!!!!!












26 comments:

  1. மிகவும் அருமையான அனுபவப்பகிர்வு.

    உங்களின் வருத்தத்தை முற்றிலும் என்னால் உணர முடிகிறது.

    நானும் இதுபோல பெங்களூர் விமான நிலையங்கள் {புதியது / பழையது] இரண்டிலும் இதுபோன்ற பல அனுபவங்களை சந்தித்திருக்கிறேன்.

    >>>>>>

    ReplyDelete
  2. மிகவும் ரஸித்த வரிகள்:

    //விமான பயண டிக்கெட்டின் விலையில் பாதியை டாக்சி கட்டணமாகக் கொடுத்தோம். //

    //அழகிய புன் சிரிப்புடன் "ஃப்ளைட் டிலேட் பை ஒன் ஹவர். ஸாரி ஃபார் த டிலே " என்றார்.//

    //நம்முடைய ஃப்ளைட் இரவு பத்து மணிக்கு தானாம்" என்றார்.//

    //சென்னைக்கு நடந்தே சென்று விடலாமா என்று அலுப்பு தட்டியது..//

    //ஒருவழியாக பதினோரு மணிக்கு விமானத்திற்கு ஆயத்தங்கள் ஆரம்பமாயின.//

    //தீவிரவாதிகள் என்று நினைத்திருப்பாரோ?(அவரவர் பயம் அவரவர்க்கு)//

    //எங்களுக்கோ ஐந்து மணி நேர வருத்தம்!!!!!
    //

    >>>>>>

    ReplyDelete
  3. //(எங்கேயிருந்து இவ்வளவு அழகழகான பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்களோ தெரியவில்லை.)//

    ஏற்கனவே எரிச்சல் ஆன பயணிகளுக்கு, மேலும் எரிச்சலாகாமல் தடுக்கவே, மிகவும் அழகழகான பெண்களை, கஷ்டப்பட்டு வலைவீசிக் கண்டு பிடித்து வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

    நல்ல டெக்னிக் இது.

    வேலைக்கு இதுபோன்றவர்களைத் தேர்ந்தெடுத்து அமர்த்துவதே கஷ்டமான வேலை தெரியுமோ? ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.நீங்கள் ரசித்த வரிகள் என்று போட்டிருப்பது என்னை மகிழ்விக்கிறது.
      உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்கள் தான் என்னைப் போன்றவர்களை நானும் எழுதலாம் என்று தைரியம் கொடுக்கின்றன. அடுத்த பதிவை இன்னும் செம்மையாக்க ஊக்கம் அளிக்கின்றது.

      மிக்க நன்றி.
      ராஜி

      Delete
  4. என்ன கொடுமை இது எவ்வளவு நேரம்தான் காக்க வைப்பார்கள், ஆனாலும் அங்கே உங்கள் பார்வையில் கண்டதை சொன்னவிதமும், பதிவை எழுதிய எழுத்துநடையும் அற்புதம்தான் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆகாஷ்.
      நீங்களே சொல்லுங்கள். அரை மணி நேரப் பயணத்திற்கு ஐந்து மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள்.கொடுமை தான்.

      உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      ராஜி

      Delete
    2. படிப்பவர்களும் உணரும்படியாக சுவாரஸ்யமாக
      (அலுப்பைத் தந்த விஷயத்தைக் கூட )
      சொல்லிப் போனவிதம் மனம் கவர்ந்தது
      எழுத்து நடை மிக மிகச் சிறப்பு
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    3. ரமணி சார்,

      வணக்கம். வாருங்கள்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்,
      வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நன்றி,
      ராஜி

      Delete
  5. பெண்ணிற்கு ' மாப்பிள்ளை ' கூட கிடைத்து விடுவார். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை.///

    அரை மணி நேரப்பய்ணத்திற்கு ஐந்து மணிநேரக்காத்திருப்பு ...கஷ்ட்டம் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க இராஜராஜேஸ்வரி.
      என் அங்கலாய்ப்பு உண்மை தானே.
      உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      ராஜி

      Delete
  6. முதல்முறையாக பெங்களூருக்கு விமானத்தில் வந்தபோது விமானம் ஏறியது தெரியும் இறங்கியது தெரியும் - எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர் என்பது போல!

    அந்தப் பிரயாணத்திற்கு 5 மணி நேரக் காத்திருப்பு கொஞ்சம் ஓவர் தான்!

    'ஹோம் ஒர்க் செய்யவில்லையோ', 'தீவிர வாதிகளோ' என்று அவரவர் ரீதியில் நினைத்திருப்பார்கள் என்று நீங்கள்எழுதியிருப்பது புன்னகையை வரவழைத்தது.

    எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கிறது ராஜி!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி,

      நீங்கள் சொல்வது போல் விமானம் ஏறியது தெரிந்தது,உடனே இறங்கியதும் தெரிந்தது.உண்மை தான்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      ராஜி

      Delete
  7. ராஜி,

    தாமதமான பதிவுக்கு மன்னிப்போ! என நினைத்துப் படித்தால் நல்ல நகைச்சுவையான (எங்களுக்கு) பதிவு.ஒவ்வொரு வரியிலும் அது இழையோடுகிறது.புலம்பித் தீர்க்க வேண்டியதை அழகான பதிவாக்கிக் கொடுத்ததற்கு நன்றி.மேலும்மேலும் இதுமாதிரியான பதிவுகளைக் கொடுக்க வாழ்த்துக்கள்.(இவ்வளவு நகைச்சுவையாக எழுதும் உங்களையெல்லாம் பார்த்தால் கொஞ்ஜம் பொறாமையாக உள்ளது).

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
      நகைச்சுவையாக எழுதுவது, உங்களைப் போன்றவர்களின் ப்ளாக் ஐ படித்துக் கற்றுக் கொண்டது தான்.
      நன்றி.
      ராஜி.

      Delete
  8. //பெண்ணிற்கு ' மாப்பிள்ளை ' கூட கிடைத்து விடுவார். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை.//

    சரியா சொன்னீங்க போங்க...

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      சொன்னது அனைத்தும் உண்மை தானே!

      நன்றி
      ராஜி

      Delete
  9. //' கோரமங்களா ' விலிருந்து டாக்சியில் ஏர்போர்ட்டிற்கு வந்த நேரம் சென்னைக்கு பயணித்திருந்தால் , சென்னைக்கு செல்லும் தூரத்தில் கால் பாகம் கடந்திருக்கலாமே என்பது என் அம்மாவின் அங்கலாய்ப்பு.//

    இது ரொம்ப யதார்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தானே!

      வருகைக்கும்,கருத்துக்கும் மீண்டும் நன்றி.

      ராஜி

      Delete
  10. //(எங்கேயிருந்து இவ்வளவு அழகழகான பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்களோ தெரியவில்லை.//

    அப்போ இதுக்காகவே பிளைட்டில் போகலாம் போல...

    ReplyDelete
  11. //சென்னைக்கு நடந்தே சென்று விடலாமா என்று அலுப்பு தட்டியது..//

    அட தெய்வமே..!!

    ReplyDelete
    Replies
    1. நிஜமாகவே அப்படித்தான் தோன்றியது.

      நன்றி

      ராஜி

      Delete
  12. //கவுண்டரில் சில பேர். வெளிநாட்டினர் மட்டுமல்ல , நம்நாட்டினரும் ஏன் நம்மூர் பெண்களும் கூட "சிப்" பிக் கொண்டிருந்தார்கள். எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.//

    இது கொஞ்சம் சீரியசான விசயம்தான்.

    ReplyDelete
  13. //எங்களுக்கோ ஐந்து மணி நேர வருத்தம்!!!!!//

    உங்கள் ஜனரஞ்சகமான எழுத்துக்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. பல முறை பின்னூட்டமிட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

      ராஜி

      Delete
  14. 'டிஜிடல் டிஸ்ப்ளே 'யை பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் என்னிடம் " இன்னும் கொஞ்ச நேரம் கூட ' பராக்கு ' பார்த்துக் கொண்டிரு. நம்முடைய ஃப்ளைட் இரவு பத்து மணிக்கு தானாம்" என்றார்.//

    நன்றாக சொன்னார் உங்கள் கணவர்.
    காத்து இருந்த நேரத்தில் அனுபவங்களை அழகாய் எங்களுடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி!!

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
      கொஞ்ச நேரமா, காக்க வைத்தார்கள்? ஐந்து மணி நேரம் அல்லவா?

      நன்றி,
      ராஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்