Showing posts with label கைகேயி. Show all posts
Showing posts with label கைகேயி. Show all posts

Sunday, 6 September 2020

கம்பனும், மைனாவும்( கம்பன் என்ன சொல்கிறான்?-26)


கைகேயியை கம்பன் விவரிப்பதைப் படிக்கும் போது, " இப்படியுமா ஒரு மனைவி இருப்பாள்?" கம்பர் விடுகிற ரீலுக்கு ஒரு அளவேயில்லையோ  என்று தான் தோன்றியது எனக்கு.

ஆனால் கைகேயி செய்த காரியம் அவரை அப்படித் சொல்ல வைத்திருக்கு என்று தான் சொல்ல வேண்டும். தன் காதல் கணவன் என்றும் பார்க்கவில்லை. பதவி மோகம் அவளைப் பிடித்து ஆட்டி வைத்திருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் " ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்று.

அவள் எத்தனைக் கொடூரமானவள் என்பதைப் புரிய வைக்க , கம்பர் ஆளுகின்ற உத்தி நம்மை அசர அடிக்கிறது.

இச்சமயத்தில் ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.
பட்டிமன்றம் ஒன்றில் கேட்டது ....

சிறுவன் ரவிக்குப் பத்து வயது.

மைனா ஒன்றை ஆசை ஆசையாய் வளர்த்து வந்தான். மைனா மேல் உயிராய் இருந்தான்.

ஒரு நாள் இவன் பள்ளிக்கு சென்றிருக்கும் போது, மைனா தண்ணி தொட்டிக்குள் விழுந்து உயிரை விட்டு விட்டது.

மாலை ரவி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அவன் அம்மா தயங்கி....தயங்கி....
"ரவி.... மைனா செத்துப் போச்சுடா."சொன்னாள்.

"போனாப் போகுது. விடு" சொல்லிவிட்டு விளையாடப் போய் விட்டான்.

அவன் அம்மா" அட...என்ன இவ்வளவு சுளுவாக விட்டு விட்டான்." நினைத்துக் கொண்டாள்.

விளையாடி முடித்து விட்டு, உள்ளே வந்தவன், " அம்மா .... மைனாவுக்கு சாப்பாடு குடுத்தாச்சா.?" கேட்டான்.

"ரவி...ஏண்டா சாய்ங்காலமே சொன்னேனேடா....மைனா செத்துப் போச்சுன்னு." கலவரமாக சொல்ல
ஓவென்று அழுது புலம்பினான்..

"நான் தான் அப்பவே சொன்னேனேடா." மீண்டும் அம்மா சொல்ல..

என் காதுலே "'நைனா' செத்துப் போச்சு" அப்படின்னு தான் காதுலே விழுந்தது. 

"இப்பத் தானே புரியுது. என் மைனா தான் செத்துப் போச்சுன்னு"

சொல்லிவிட்டு மைனா கூண்டைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,"மைனா! மைனா!" என்று அழுது புலம்ப...

நகைச்சுவையாக சொல்லப்படும் கதை. 

இதைப் போல் தானே கைகேயியும் ," பரதனிடம் தசரதன் இறந்து விட்டான் " என்று சர்வ சாதரணமாக சொல்கிறாள் பாருங்கள்.

தசரதன் மாண்ட பிறகு, பரதன் அழைத்து வரப்படுகிறான். பரதனுக்கு இன்னும் அயோத்தியில் கைகேயி வீசியப் புயல் பற்றித் தெரியாது. ஆனால் என்னவோ விசித்திரமாக இருக்கு அயோத்தியில் என்பது மட்டும் புரிகிறது. 

கைகேயியைக் காண செல்கிறான்.

பார்த்ததும்," அம்மா! அப்பா எங்கேம்மா?  நலம் தானே அவர்?" கேட்கிறான்.

கைகேயி சர்வ சாதரணமாக சொல்கிறாள்," உன் அப்பா விண்ணுலகு சென்று விட்டார்...." முடிக்க வில்லை.

"என்ன?...என்ன தாயே சொல்கிறீர்கள்? " பரதன் பெருங்குரலில் கத்தி விட்டான்.

முதலில், பரதன் தன் காதில் தவறாக விழுந்து விட்டது என்று தான் நினைத்திருப்பான். அப்பா செத்துப் போய் விட்டார் என்று இப்படி சர்வ சாதரணமாகவா அம்மா சொல்வாள். இவ்வளவு சகஜமாக அம்மா பேசுகிறாள் என்றால் தவறெதுவும் நடந்திருக்காது என்று தான் நினைத்திருப்பான்.

ஆனால் அது உண்மை என்று அவள் தொடர்ந்து பேசியதிலிருந்து புரிகிறது பரதனுக்கு. 
" நீ கவலைப் படாதே" என்று பரதனை தேற்றுகிறாளாம் கைகேயி.

இதை விடவும் கொடுமைக்காரியாக  வேறு யாராலும் கைகேயியை வர்ணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

பரதன் பதறிப் போய் விட்டான். இப்படியும் ஒரு மனைவி இருப்பாளா? தன் தாயை வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறான். சிலையாகி விட்டான். தந்தையை இழந்த துயரத்தைத் தாங்க முடியவில்லை அவனால்.

பிறகு அவளைக் கண்டபடி ஏசுகிறான் பரதன். "தாயா நீ! இல்லவேயில்லை...பேய்". அதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால் கணவன் இறந்த செய்தியை இவ்வளவு சாதரணமாக "நைனா செத்துப் போச்சு" என்கிற மாதிரி கைகேயியை சொல்ல வைக்கிறார் கம்பர். 

அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போமா...

அயோத்தியா காண்டம். பள்ளிப் படைப் படலம்.2234

ஆனவன் உரைசெய, அழிவு இல் சிந்தையாள்,

தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்

தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ,

வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றாள்.


பரதன் வினாவஎதற்கும் கலங்காத திட சித்தம் உடைய கைகேயி,"அசுரரது வலிமை கெடும்படி சேனையை உடைய, தேன் பொருந்திய  மலர்மாலையை அணிந்த  தயரதன்(தமக்கு வாழ்வளித்தவன் வருகின்றான் என்று கருதி) தேவர்கள் கைகூப்பி வணங்க விண்ணுலகத்தை அடைந்தான். நீ துன்புறாதே.


இப்படி கைகேயினால் மட்டுமே இருக்க முடியும் என்பதே உண்மை.


கம்பர் இத்துடன் நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை. வேறொரு பாடலில் அவளுக்கு ஒரு அவார்டே கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 


அதைப் பற்றி நான் எழுதியப் பதிவு இதோ.."கம்பனும் Awardம்"


கம்பரின் பாடலை ரசித்துக் கொண்டிருங்கள். வேறொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.


Friday, 13 March 2020

கம்பனும், நழுவிய கோப்பையும். ( கம்பன் என்ன சொல்கிறான்?-20)




கம்பனுக்கும் சண்டைக்கும் என்ன சம்பந்தம்? இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

ஹாலில் டிவி உச்சஸ்தாயில் அலறிக் கொண்டிருந்தது.

நாலு ballல் , இரண்டு run எடுத்தால் வெற்றிக் கோப்பை 'விராட்' கையில் இருக்கும் என்கிற நிலையில் , இந்தியாவே டிவிக்குள் மூழ்கிக் கிடந்திருந்தது.

 'விராட்' பதட்ட நிலையில் பெவிலியனில் நின்றுக் கொண்டிருந்தார்.

இப்ப...2 balls 2 runs.
இந்தியாவே மயான அமைதி.


Bowler வேகமாக ஓடி வந்து பந்தை வீசவும்,  அது நேராக 'மிடில் ஸ்டம்ப்'ஐ  இடித்துத் தள்ளி விட்டு, விக்கெட் கீப்பர் கையில் சமர்த்தாய் போய் செட்டில் ஆனது.

போச்சு... 

இப்ப 1 பால், 2 ரன்..

கடைசி ball.
புது பேட்ஸ்மேன்.
இரண்டு ரன். 

எல்லோரும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்க bowler ம் மேலே வானத்தை ஒரு முறை பார்த்து (கடவுளிடம் வேண்டிக் கொண்டு)  பந்து வீசவும், பந்தை அடிப்பதாய் நினைத்துக் கொண்டு, பேட்ஸ்மேன் காற்றைக் கிழிக்கவும், பால் இப்ப லெஃப்ட் ஸ்டம்பை பேர்த்து வீசி எறிந்தது.

போச்சு... 'கப்' போயே போச்.....

இப்படியா கடைசி நிமிடத்தில் வெற்றிக் கோப்பைக் கை நழுவும்?

There is many a slip between the cup and the lip  என்று சும்மாவா சொன்னார்கள்.

ராமாயணக் கைகேயியும் இது போன்ற ஒரு தருணத்தை எதிர் கொண்டாள்.

அது அவளை அவள் மைந்தனிடம் இருந்தே பிரித்து விட்டது எனலாம்.

வாருங்கள்  கைகேயி மாளிகைக்கு செல்வோம்...(கற்பனையில்)

கைகேயியும் மந்தரையும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

" மந்தரை! நீ சொன்னபடி ராமனைக் காட்டுக்கு அனுப்பியாகி விட்டது. இனிமேல் சிம்மாசனம் பரதனுக்குத் தான். ஆனால்..."

'ஆனால்...என்ன ராணி?'

" என் ஆருயிர்க் கணவன் மறைந்து விட்டாரே! கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்தார் போல் கொட்ட ஆரம்பித்தது."

" அழுவதை நிறுத்துங்கள் ராணி.இப்ப என்ன ஆச்சு? நீங்களா அவரைக் கொன்றீர்கள்?  கொடுத்த வரத்தை கேட்டதால் உயிரை விட்டு  விட்டார். ஊர் என்ன வேண்டுமானாலும் பேசும். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். உங்கள் மகனுக்காக நீங்கள் செய்த மிகப் பெரிய தியாகம் இது. நீங்கள் தான் இனிமேல் ராஜ மாதா." மந்தரை சொல்லி முடிப்பதற்குள்..

" ராஜகுமாரர்கள் பரத, சத்ருக்ணர்கள் வந்து விட்டார்கள்" செய்தி வந்து சேர்ந்தது. 

"மந்தரை! பரதன் வரவில்லையடி. சிம்மாசனமே என்னை நோக்கி வருகிறது. என் வார்த்தையே இனி கட்டளை. என் கட்டளையே சாசனம்." புளகாங்கிததுடன் பேசுகிறாள் கைகேயி.(தசரதன் இறப்பை மறந்து விட்டு)

"ஜாக்கிரதை மஹாராணி ! ஜாக்கிரதையாக பரதனிடம் பேசுங்கள்." என்று மந்தரை எச்சரிக்கவும்....

புயலெனப் பரதன் உள்ளே நுழையவும் சரியாயிருந்தது.

வந்து தாயை வணங்கிய பின்னர், "அயோத்தி நகரம் எதையோ இழந்தாற் போல் தோன்றுகிறது தாயே."

கைகேயி அமைதிக் காக்க...
பரதன் தொடர்ந்தான்," தாயே! தந்தையும், தனயனும் கண்ணில் தென்படவில்லையே!! அவர்களையும் போய் நான் வணங்க வேண்டுமே!" 

கைகேயி இப்பொழுது தான் வாய் திறந்தாள்."இருவரும் இங்கில்லை மகனே!"

"அப்படியென்றால்....."

"உன் தந்தை வானுலகம் சென்று விட்டார்."

அதிர்ச்சியில் உறைந்தான் பரதன்.

அந்த அதிர்ச்சியிலிருந்து பரதன் மீள்வதற்குள் அடுத்த குண்டை போடுகிறாள் கைகேயி.

"உன் தமையன் ராமன் வனத்திற்கு சென்று விட்டான். அவனுடன் சீதையும், இலக்குவனும் சென்று விட்டார்கள்."

"ஏன் இப்படி அடுக்கடுக்கான துன்பம் ஏற்பட்டது? " பரதன் குரல் உடைந்து கேட்க...

"தானாக ஏற்படவில்லை . நான் தான் ஏற்படுத்தினேன்." வெற்றிக் களிப்புடன் சொல்கிறாள்  கைகேயி.

"என்ன? நீங்கள் காரணமா?"

"ஆமாம் . அதுவும் ..உனக்காகவே செய்தேன்.
 உன் தந்தை எனக்குக் கொடுத்த இரண்டு வரங்களை உனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டேன். 
ஒரு வரம்- நீ நாடாள
இன்னொன்று - ராமன் காடாள..
உன் தந்தை வானுலகம் சென்றது நம் துர்பாக்கியம்."

கைகேயி என்ன செய்திருக்கிறாள் என்பது புரிய பரதனுக்கு , கோபம் தலைக்கேறியது . கோபத்தின் டிகிரி உச்சத்தை எட்டியது.

கைகேயியைப் பார்த்து, பரதன் கண்ணும், முகமும் கோபத்தில் ஜிவு... ஜிவுக்க,  " தந்தை வான் புக... தமையன் வனம் புக.... உன் மகன் பரதன் நாடாளுவான்  என்று கனவு கண்டாயோ? " 

"நீ செய்த அநியாயங்களுக்கு நான் துனை வருவேன் என்று எப்படி உன்னால் நினைக்க முடிந்தது? கெடுதல் எல்லாம் செய்து விட்டு, அதைப் பெருமையாக சொல்லும் உன் வாயைக் கிழிக்க விடாமல் என்னை எது தடுக்கிறது என்று தெரியவில்லையே " தன்னையே நொந்து கொள்கிறான்.

தாய் என்றும் பாராமல் அவளைத் திட்டி விட்டு ,"நான் கோசலைத் தாயைப் பார்த்து வணங்கி, மன்னிப்புக் கேட்கப் போகிறேன். பிறகு நான் வனம் சென்று ராமன் அண்ணாவை பார்த்து வணங்கி, அவர் திருவடிகளை பணிந்து அழைத்து வரப் போகிறேன். உன்னால் நின்ற ராம பட்டாபிஷேகம், என்னால் நிறைவு பெறப் போகிறது. " கோபத்தில் சொல்லி விட்டு வேகமாக கோசலை மாளிகையை நோக்கி சென்றான்.

யோசித்துப் பாருங்கள் ....கைகேயிற்கும், மந்தரைக்கும் எப்படி இருந்திருக்கும். கைகேயி கண்ட ராஜமாதா கனவு என்ன? நிமிட நேரத்தில் அந்தக் கனவு தகர்ந்து பொடிப் பொடியாய் உதிர்ந்து போயிற்றே. 

A slip between the cup & lip. Absolutely True.

நம் எல்லோருக்குமே கைகேயி மேல் கோபம் கொஞ்சமில்லை, நஞ்சமில்லை. கம்பர் தன் கோபம் எல்லாவற்றையும், பரதன் வழியாக தீர்த்துக் கொள்கிறார் பாருங்கள்.

பரதன் தாயைத் திட்டுவதாக நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்றை இப்ப பார்ப்போமா?

நோயீர் அல்லீர்; நும் கணவன்தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே!



 உம் கணவனது உயிரைக் குடித்தீர். நோய் போன்று நின்று நிதானமாக உயிரைப் போக்கவில்லை. சட்டென்று தந்தையின் உயிரை வாங்கி விட்டீர். ஆகையால் நீர் பேய் போன்றவரே.  இத்தகைய நீர்கணவன் இறந்த பிறகும் இன்னமும் உயிருடன் வாழ்வதற்குரியவர் ஆவீரோ? (உரியரல்லீர்). இறந்து போக மாட்டீரோ.குழந்தையாய் இருந்தபொழுது பால் கொடுத்து வளர்த்தீர். ஆகையால் நீர் என் தாயார்தான். இளைஞனாய் இருக்கின்றேன். இப்பொழுது, அழியாத கொடும்பழி கொடுத்து என்னைக் கெடுத்தீர். எதிர்காலத்தில் என்னவெல்லாம்  தரப்போகின்றீரோ?’

நாம் கைகேயியை என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைக் கம்பன் செய்கிறார் பாருங்கள்.

பரதனின் Character நம்மை அசர அடிக்கிறது அல்லவா? 
அதனால் தான், கம்பர் வேறொர் சமயத்தில் அவனைக் கோடி ராமர்க்கு நிகர் என்று சொல்கிறார்..

வேறொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.
நன்றி.


Tuesday, 26 November 2019

கம்பனும், Breaking Newsம் (கம்பன் என்ன சொல்கிறான்?-12)


Image Courtesy :https;//bhagwanbhajan.com

"அம்மா! அம்மா!"

"என்னடா....?"காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டே அம்மா கேட்க...

"அம்மா.... "மீண்டும் ரிஷி கெஞ்சும் குரலில் கூப்பிட...

"என்னடா வேணும் உனக்கு?" அம்மா ஸ்ட்ரெயிட் ஆக பாயிண்ட்டிற்கு வ்ந்தாள்.

" அம்மா... காலேஜுக்கு பஸ்ஸில் போக ரொம்பக் கஷ்டமாருக்குமா. "

" ஏண்டா?"

" ஒரே கூட்டம் எப்பவும். எவ்வளவு நாள் தான் ஃபுட்போர்டிலேயே  போவது... சொல்லு."

ரிஷி எதற்கு அடி போடுகிறான் என்று அம்மாவுக்குப் புரிந்து போனது. போன வருஷத்திலிருந்து பைக் வேணும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.

"நான் அப்பாவிடம் பேசி உனக்குப் பைக் வாங்கித் தர சொல்றேண்டா." சொன்னவுடன் ரிஷி சந்தோஷமாக விசில் அடித்தான். 

ரிஷியை சந்தோஷமாக பார்க்க அம்மாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அம்மாக்களே இப்படித் தான்....மகனுக்காக அப்பாவிடம் வக்காலத்து வாங்குவது...

ஆனால் கைகேயி இன்னும் ஒரு படி மேலே போனாள்...
அவளும் பரதனுக்காக அவன் அப்பாவிடம் பேசி வாங்கிக் கொடுக்கிறாளாம். பைக் இல்லிங்க....அரசாங்கத்தையே வாங்கிக் கொடுக்க நினைக்கிறாளாம். அதுவும் பரதன் கேட்காமலே. ஆனால் பரதன் அதை ஏற்றுக் கொள்ளாததோடு, கைகேயியைப் பேய் என்றும் திட்டினான் என்பது வேறு விஷயம்.

எப்படி தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள் என்று பார்ப்போம்.

கைகேயி அழுது புலம்பி, அடம் பிடித்து தன் இரண்டு வரங்களையும் தசரதனிடமிருந்து வாங்குவதில் success ஆகிறாள். தசரதன் மிகுந்த வருத்தத்துடன் தரையில் வீழ்ந்து கிடக்கிறான்.

வரம் வாங்கியாச்சு.. அதை செயல் படுத்தணுமே. காலத்தை வீணடிக்காமல் (கணவனைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல்) ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள் கைகேயி.

உடனே அங்கே ராமனும் ஆஜர்...

அப்பாவை பார்த்து விட்டு ராமன் பதறுகிறான்." என்ன ஆச்சும்மா அப்பாவுக்கு?"

கைகேயி அவனை முதலில் சமாதானப் படுத்துகிறாள்,"உன் அப்பாவுக்கு ஒன்றுமில்லை ராமா. அவர் உன்னிடம் எதையோ சொல்லனும்னு நினைக்கிறார். எப்படி சொல்வது என்கிற தயக்கம் தான். வேறொன்றுமில்லை."

"நீங்கள் சொல்லுங்கள் அம்மா.அப்பா சொன்னால் என்ன? நீங்கள் சொன்னால் என்ன? ரெண்டும் ஒன்று தான். நான் நிறைவேற்றுகிறேன்." ராமன் வாக்குக் கொடுக்கிறான்.

" வாக்குக் கொடுப்பதில் அப்பனை மகன் மிஞ்சி விடுவான் போலிருக்கே" கைகேயி மனதுக்குள் சிரித்துக் கொண்டிருப்பாள்.

ராமனிடம் நைச்சியமாக சொல்ல ஆரம்பிக்கிறாள்.

" அது ஒண்ணுமில்ல ராமா .... நீ புண்ணிய நதிகளில் நீராடி வரணும் ராமா."

"இதென்ன பெரிய விஷயம் அம்மா..இதோ உடனே கிளம்புகிறேன். "

" அட.... இரப்பா ராமா. நான் இன்னும் முடிக்கல.."

"சொல்லுங்கம்மா.."

"அதோடு நீ தவமும் செய்ய வேண்டும் ராமா."
எங்கே தவம் செய்யணும் தெரியுமா? காட்டிற்குப் போய் தவம் செய்யணும்."

"அப்படியே செய்கிறேன் அம்மா."(இதை...இதை.....இதைதான் நானும் எதிர் பார்த்தேன் - நினைத்துக் கொண்டிருப்பாள்  கைகேயி.)

வரிசையாக ஆர்டர் பிறப்பித்துக் கொண்டே வருகிறாள் கைகேயி.
சற்றே குழம்பியிருப்பான் ராமன். என்ன ஆச்சு அப்பாவுக்கு. "நாளையிலிருந்து நீ தாண்டா ராஜா...அப்படின்னு அப்பா ராத்திரி சொன்னார். இப்ப என்னடான்னா கைகேயி அம்மா காட்டுக்குப் போ என்கிறாள். யாரைத் தான் நம்புவதோ ...என்று தோன்றியிருக்குமோ ராமனுக்கு."

Wait Rama! Wait! Here comes 
                     the Breaking News...

கைகேயி தொடர்கிறாள், " ராமா... இன்னும் ஒன்று இருக்கு ராமா....உன் தம்பி பரதனுக்குத் தான் பட்டாபிஷேகம் நடக்கும். அவன் நாட்டை ஆளுவான். நீ ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்த பின் காட்டிலிருந்து திரும்ப வேண்டும்." சொல்லி விட்டு ...
(அவளால் ராமனைக் காட்டுக்குப் போ என்று சொல்ல வாய் வரலையாம். அதனால் ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்து காட்டிலிருந்து வா என்று சொல்கிறாளாம். வளர்த்த பாசம் தடுக்கிறதோ!)

"இதையெல்லாம் நான் சொல்லவில்லை ராமா. இதெல்லாம் உன் அப்பாவான அரசன் ஆணை. உன்னிடம் சொல்ல சொன்னார். "  என்று முடிக்கிறாள் கைகேயி.

என்னா சாமர்த்தியம்! தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு தசரதன் சொன்னானாம்... எப்படியிருக்குக் கதை..

சரி விடுங்கள்...அது தசரதன் தலை வலி.

இதை விளக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போம்...

அயோத்தியா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்.1690

"ஆழி சூழ் உலகம் எல்லாம் 
   பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கித், 
   தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், 
   புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று, 
   இயம்பினன் அரசன்"என்றாள்

கடலால் சூழப் பட்ட உலகம் முழுவதையும், பரதனே முடி சூடி ஆண்டுக் கொண்டிருக்க நீ நாட்டை விட்டுச் சென்று, தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக் கொண்டு, தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறந்த கொடிய காட்டை அடைந்து , புன்னியத் தீர்த்தங்களில் நீராடி,பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வருவாய் என்று  அரசன் சொன்னான் என்றாள்.

இந்தக் கம்பன் பாடல் ரசிச்சாச்சா?மீண்டும் இன்னொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.

Sunday, 3 November 2019

கம்பனும், Negotiationம் ( கம்பன் என்ன சொல்கிறான்-9)






கம்பனும் Awardம் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எப்பவும் போல் பிரேக்பாஸ்ட் தயாரிக்க சென்றேன். 

"இன்றைக்கு என்ன?" என்னவர் கேட்க....

"இன்றைக்கு இடியாப்பம் செய்யட்டுமா? இட்லி, தோசை, உப்புமா...என்று எனக்கே போர் அடிக்குது." சொன்னேன்.

"ராஜி ! எனக்கு தோசை போதும். அலட்டிக்காதே! "அவர் சொல்ல 

ஆனால் நான் இடியாப்பம் தான் செய்வது என்கிற முடிவோடு, மாவைப் பிசைந்தேன்.

இடியாப்ப அச்சை நாழியில் போட்டு விட்டு, மாவை உள்ளே வைத்து , இட்லி தட்டில் பிழிய ஆரம்பித்தேன்.

மாவு இறங்கி வர வேண்டுமே! ம்ஹூம் .... மாவு இரக்கம் காட்டாமல் அசையாமல் இருந்தது.

ஏன் மாவு 'தர்ணா' செய்கிறது? 

அச்சில் கண் அடைச்சிருக்கோ? 
செக் செய்தேன்.  அப்படி ஒன்றும் இல்லையே....

" என்ன ரொம்ப நேரமாக சத்தத்தையே காணோம்." சொல்லிக் கொண்டே என்னவர் கிச்சனில் ஆஜர்.

அவர் பங்கிற்கு... அவரும்  முயல... மாவு மனம் இரங்கவேயில்லையே!அன்றைக்கு இடியாப்பம் கேன்சல் ஆனது தான் மிச்சம். 

இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதோ?

ஆனால், சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளத் தெரிந்த தாசரதனுக்கு, பிறகு சமாளிக்க முடியாமல் திணறி, கடைசியில் செத்தே போனான்.


எப்பவோ போர் களத்தில் கைகேயி, தசரதன் வெற்றிக்கு காரணமாயிருக்க...

அப்ப மனைவியின் மகிமையில் உச்சி குளிர்ந்து போய், " உனக்கு நான் ஏதாவது gift தரணுமே அன்பே". சொல்லியிருப்பான்.

அவளோ, "நீங்கள் என் காதல் கணவன். நீங்களே எனக்குப் பெரிய gift. தனியா நீங்க தரணுமா?" அதெல்லாம் வேண்டாம்." சொல்லியிருப்பாள்.

விட வேண்டியது தானே தசரதன். இல்லை ஏதாவது ஒரு சினிமா டிராமான்னு கூட்டிட்டுப் போய் அசத்தியிருக்கலாம். 

அதெல்லாம் ரொம்ப சின்ன கிப்ட்னு  நினச்சா, "  அருமையான ஹில் ஸ்டேஷன் எதுக்காவது டூர் அழைத்துப் போயிருக்கணும்."

இல்லை... அரசன் தானே! வைரத்தாலும், வைடூர்யத்தாலும், பவுனாலும், நகை நட்டு வாங்கிக் குடுத்து முடித்திருக்கலாம்.

அதெல்லாம் விட்டுட்டு , " கைகேயி இந்தா எடுத்துக்கோ ரெண்டு வரம் தரேன்." சொன்னா என்னத்தை சொல்றது.

குடுத்தது தான் குடுத்தானே தசரதன்," அதுக்கு ஒரு டைம் லிமிட்...? ம்ஹூம். " 
Limited Time Offerனு ஒரு catchஆவது  வச்சிருக்கலாம். அதுவும் இல்ல....

அட்லீஸ்ட் "*conditions apply " என்று மிக மிக சிறிய எழுத்துக்களால் எழுதி, குடுத்திருக்கலாம். எல்லாத்தையும் மறந்துட்டு, கைகேயின் மேலுள்ள அளவற்றக் காதலால்.... வரத்தைக் குடுப்பானேன் இப்ப முழி பிதுங்க நிற்பானேன்.

இப்ப சொல்றானாம், " என் கண்ணை வேண்டுமானாலும் எடுத்துக்கோ." அப்படின்னு..

தசரதா! கைகேயி உன் கண்ணை வச்சுகிட்டு என்ன செய்யப் போறா?அவளோட ரெண்டு கண்ணும் நல்லாவே இருக்கு! 

போதாததுக்கு அவளோட கண் அல்லவா உன் சேர் மேல் விழுந்துடுத்து. . 

"Your Highness! Power mongering Kaikeyi needs your chair  & not your eye. " என்று தசரதனைப் பார்த்துக் கத்த வேண்டும் போல் இருக்கு.

இதையும் தாண்டி தசரதன், "என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கோ !" அப்படின்னு சொல்றானாம். 

இல்லை....இல்லை....பயமுறுத்துறானாம்.

கைகேயி " ஹ.....இது பனங்காட்டு நரி..இந்த சலசலப்புக்கு அஞ்சாது." என்று நினைத்திருப்பாளோ.

தசரதனுக்குப் புரிந்தது இவள் மசியவில்லை என்று. 

அடுத்து   negotiation tableற்குக் கூப்பிட்டுப் பார்க்கிறானாம்...

அவளிடம் ," உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஓகே ! பரதன் நாடாளும் வரம்-தந்து விடுகிறேன். இன்னொரு வரம் என்று ஒன்று கேட்டாயே! அதை மட்டும்... ப்ளீஸ்.... விட்டு விடேன் கைகேயி." என்று கெஞ்சுகிறானாம்.

அவனால் 'ராமன் காடு புகும் வரம்' என்று சொல்லக் கூட முடியவில்லை பாருங்கள். 'இன்னொரு வரம் 'என்று மட்டுமே சொல்கிறானாம்.

(என்னைக் கேட்டால் ,'ராமன், சீதை, லக்‌ஷ்மணன் 14 ஆண்டுகள் காட்டில் கஷ்டப்பட்டதற்கு, கைகேயி காரணம் இல்லை தசரதா! நீயும், உன் வரங்களும் தான் காரணம்' என்று சொல்வேன்.)

கம்பன் எவ்வளவு அழகாக இந்த சீனை நாலே வரியில் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்...
 அயோத்யா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்  1611.
'கண்ணே வேண்டும் என்னினும்
ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும்
இன்றே உனது அன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!
பெறுவாயேல்
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
மற' என்றான்

'பெண்னாகப் பிறந்தவளே! வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே! என் கண்களே வேண்டும் என்றாலும் நான் உனக்குக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன். எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை விரும்பினாலும், இப்பொழுதே உன் வசமல்லவா? வரத்தையே பெற விரும்புவாயானால் நாட்டை மட்டும் பெற்றுக் கொள்கொள்வாய். மற்றொரு வரத்தை மட்டும் மறந்து விடு' என்றான்.

ஒரு மன்னன் எவ்வளவு கீழே இறங்கி கெஞ்சுகிறான் பாருங்கள். 

தேவையா தசரதா உனக்கு இது? யோசி....

 நன்றி...வேறொரு கம்பனின் பாடலுடன் சந்திக்கிறேன்.


Monday, 28 October 2019

கம்பனும், Award ம் (கம்பன் என்ன சொல்கிறான்?-8)


Image by Ramachandra Madhwa Mahishi, Illustrated by Balasaheb Pandit Pant Pratinidhi [Public domain]

"கம்பனும் தையல் மெஷினும்" படிக்க இங்கே க்ளிக்கவும்.
'டிங் டாங்'

கதவைத் திறந்தேன். கொரியர் வந்திருந்தது.

கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு உள்ளே திரும்பப் போனேன்.

"ஹலோ மாமி" எதிர் வீட்டு விஜய் கையசைக்க நானும் ஒரு ஹலோ சொல்லவும்,

"யார் அது " இவர் கேட்டுக் கொண்டே வந்தார்.

"எதிர் வீட்டு விஜய் தான். ஆபீஸ் போறான் போலிருக்கு. எனக்கும் அப்படியே ஒரு ஹலோ...."
சொல்லி விட்டுத் தொடர்ந்தேன்....

" விஜயை ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரொம்பவும் நல்ல பையன். ஒரு கெட்டப் பழக்கம் இருக்கணுமே .... ம்ஹூம்... அவன் குணத்தில் ஒரு தப்பு சொல்ல முடியுமா பாருங்கள். இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல பையன்! "

 "ராஜி! முதலில் எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்து விட்டு உன் 'விஜய் அவார்ட்' ஃபங்க்‌ஷனை வைத்துக் கொள். ஒரு ஹலோ சொல்லிட்டுப் போய்ட்டானாம். இவளுக்குத் தாங்க முடியல. அவார்ட் ஃபங்க்‌ஷனுக்கு தேதி குறித்து விட்டாள்." கிண்டலடித்தார் .

அந்த வார இறுதியில் 'Forum Mall' போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். சிக்னலில் கார் நிற்க ...ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில்

 "யார் அது? விஜய்யா?" 

அவரும் பார்க்க," ஆமாமாம்... நீஅவார்ட் குடுத்த ரொம்ப நல்ல பையன் தான்"


"ஆனா... உன் அவார்ட்டை அவனுக்குக் குடுக்க முடியுமான்னு தெரியலையே! என்ன செய்கிறான் பார்.."

"என்ன? " கேட்டுக் கொண்டே நான் அவனைப் பார்க்க, அவனோ"புஸ்....புஸ்....புஸ்.." வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

அதற்குள் சிக்னல் விழவும், நாங்கள் நகர்ந்தோம்.   
நான் அமைதியாய் உட்கார்ந்திருக்க,இவர் கண்ணை ரோட்டில் வைத்துக் கொண்டே," என்ன மேடம் அமைதியாகி விட்டீர்கள்? விஜய் அவார்ட் ஃபங்க்‌ஷன்  கேன்சல்ட்டா? " நக்கலாக சிரித்தார்.

"ராஜி ! அவன் ஹாஸ்டலில் படித்தவன் ....  இந்த பழக்கமெல்லாம் அவன் ஃபெரண்ட்ஸ் உபயமாகத் தான் இருக்கும் . அவன் இப்பவும் நல்ல பையன் தான் ராஜி.நீ உன் அவார்டைக் குடுக்கலாம்." இவர் என்னை சமாதானப் படுத்த ...

என்னால் ஒத்துக் கொள்ள் முடியவேயில்லை. "Fair Weatherஇல் Good Peopleஆக!"  இருப்பது என்ன பெரிசு...சொல்லுங்கள்...

ராமாயண கைகேயியும் இந்த ரகம் தான் போலிருக்கு.

ராமனுக்கு முடி சூட்டு விழா தீர்மானித்து விட்டு, கைகேயி மாளிகைக்குத் திரும்புகிறான் தசரதன்.

" கைகேயி...கைகேயி " என்று சந்தோஷமாகக் கூப்பிட்டுக் கொண்டே  நுழைகிறான் தசரதன்.

ஆனால் பேரமைதியாக இருக்கிறது மாளிகை.

என்னமோ தப்பாக இருக்கே! நினைத்துக் கொண்டே  கைகேயியைத் தேடுகிறான் தசரதன். 

படுக்கையறையில் அவனுடைய இனிய ராணி கீழே விழுந்துக் கிடக்கிறாள். உடல் நலக் குறைவோ ...இல்லை யாராவது இவளை அவமதித்திருப்பார்களோ...

பதறிப் போய் கூப்பிட்டுப் பர்க்கிறான்... பதில் வரவில்லை. 

அவள் தான் கை தேர்ந்த நடிகையாச்சே! சொல்லியா தர வேண்டும்... கிட்டே வந்து, தட்டி எழுப்புகிறான். அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும், கிளசரின் போட்டாற் போல் கண்ணீர் மாலை மாலையாக வருகிறது.

அவள் சந்தோஷப் படுவாள் என்று நினைத்து," உன் ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம்" என்று சொல்லவும்...
இன்னும் வேகமாகத் தேம்புகிறாள் கைகேயி...

'எதுக்கு இப்ப அழற...?'   கெஞ்சிப் பார்க்கிறான்.

"மானே! தேனே! கைகேயிக் கண்ணே " கொஞ்சிப் பார்க்கிறான்.

பல கெஞ்சல் , கொஞ்சல்களுக்குப் பிறகுத் தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள் கைகேயி...

எப்படி இருந்திருக்கும் தசரதனுக்கு," இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? "
"ராமா! ராமா! " என்று இவள் கொஞ்சும் ராமனையா காட்டுக்குப் போக வேண்டும் என்று இவளே  சொல்கிறாள்?

"என்ன ஆச்சு இவளுக்கு ?" 

"கைகேயி ! நீ தானே ராமனுக்கு விற் பயிற்சி, போர் பயிற்சி என்று சொல்லிக் குடுத்தவள்.. என் ராமன்! என் ராமன் ! என்று கொண்டாடியவள். நானும், கொசல்யாவும் ராமனிடம் காட்டியப் பாசத்தைப் போல் பன்மடங்கு காட்டியவள் ஆச்சே நீ. நீயா இப்படி சொல்வது? நம்ப முடியவில்லையே!"

கைகேயிற்கு இன்னும் ராமனை வளர்த்தப் பாசம் மேலோங்கி தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ராமன் காடு போக வேண்டும் என்று தானே அவள் வரம் கேட்க வேண்டும். அப்படி அவளால் கேக்க  முடியல. ராமன் காடு போக வேண்டும் என்று சொல்லாமல்  ,"சீதைக் கேள்வன்(சீதையின் கணவன்) " காடு போக வேண்டும் என்று சொல்கிறாளாம்.

கைகேயி கொஞ்சம் சொல்லேன்," நீ நல்லவளா? கெட்டவளா?" 

கைகேயின் பதில் இதுவாகத்தான் இருக்கணும்," நான் 'Fair Weather-Good People' ரகத்தை சேர்ந்தவள் .

கம்பருக்கும் நம்மைப் போலவே கைகேயி மேல் சரியான கோபம் வந்திருக்கும். 
அவரும் "இந்தா உனக்கு ஒரு அவார்ட் "என்று கைகேயிற்கு  கோபத்துடன்  அவார்ட் குடுக்கிறார் பாருங்கள்... 
"தீயவை யாவினும் சிறந்த தீயாள்" என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அவார்ட் .
'கெட்டவளிலேயே சிறந்த கெட்டவள்' விருது. சிம்பிளா சொல்லனும்னா 'சிறந்த வில்லி' அவார்ட்.
(மிக சரியான அவார்ட் தான் கொடுத்திருக்கிறார்.)

கம்பர் எப்படி சொல்கிறார் பார்ப்போமா...
அயோத்தியா காண்டம் . கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண் 1593

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது:சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; எனப் புகன்று நின்றாள்;

தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும் மேம்பட்ட கொடியவளான கைகேயி,"நீ கொடுத்த இரு வரங்களுள், ஒரு வரத்தினால் என் மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும். மற்றொன்றினால் சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்" என்று  சொல்லி மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.

இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தசரதன் எப்படி எதிர் கொண்டான்?
அடுத்தப் பதிவில் பார்ப்போம்...










Friday, 18 October 2019

கம்பனும், தையல் மெஷினும்.(கம்பன் என்ன சொல்கிறான் -7)



Image courtesy: Wikkimedia Commons



கம்பனும் Hidden Agendaவும் படிக்க இங்கே க்ளிக்கவும்.


"விநாச காலே விபரீத புத்தி " என்று சும்மாவா சொன்னார்கள்.  கையடக்கமான தையல் மெஷினை, கையடக்கமான விலையில் ஆன்லைனில் வங்கியாச்சு.

உடனே 'கட கட' வென்று போனது வந்தது என்று எல்லாம் தைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப என் புது புடைவை ஓரம் அடிக்கப் போகிறேன்" சொல்லிக் கொண்டே மெஷினில் புடைவையை ஓரம் மடித்து தைக்க ஆரம்பித்தேன்..

சில வினாடிகள் தான்.... சத்தம் ஒரு மாதிரியாக வர..பார்த்தால் தையல் விழவில்லை. பதறிப் போய் என்னவென்று பார்த்ததில்....பாபினில் நூல் காலி.

மெஷினிலும் பாபினில் நூல் சுத்தும் வசதி வைக்கவில்லை என்பது எனக்குப் புரிய ஒரு மணி நேரம் ஆச்சு.

மெஷினை வாங்கும் முன்பு இந்த பாபின் விஷயத்தை நான் கவனித்திருக்க வேண்டாமோ?  விட்டு விட்டேனே.என் மூளைக்குக்கு எட்டவில்லையே! என்னை நானே திட்டிக் கொண்டேன்...

கைகேயியும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டாள் என்பதை மந்தரை எடுத்து சொன்ன பிறகு தான் புரிந்திருக்கிறது அவளுக்கு.

எப்படின்னு பாக்கலாம் வாங்க...

ராமனுக்கு முடி சூட்டு விழா என்று மந்தரை சொன்னது கைகேயிடம் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.மாறாக சந்தோஷப் படுகிறாள். (அவள் தான் ஒரு Hidden Agenda வைத்திருந்தாளே. அது என்ன? என்று கேட்பவர்கள் இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.)

மந்தரைக்கு கைகேயின் மகிழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்தியது. அவளும் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாள்...

பரதன் உனக்கு மகன் தானே! அவன் நலனில் உனக்கு அக்கறை இல்லையா? கௌசல்யாவிற்கு ஏவல் செய்யப் போகிறாயா? 
மூத்தவனுக்குத் தான் மணி முடி என்றால் , தசரதன் இருக்கும் போதே எதற்கு ராமனுக்கு மணி முடி? - இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்து கைகேயியை அசைக்கப் பார்க்கிறாள் மந்தரை.

கைகேயி மசியவில்லையே!

மந்தரைக்குப் புரிந்து விட்டது. இவள் இப்படியெல்லாம் சொன்னால்  மசிய மாட்டாள். என் முதுகைக் காயப்படுத்திய ராமனுக்கு மணி முடியா? எப்படியாவது தடுக்க வேண்டுமே...யோசித்தாள் மந்தரை...

அம்மா வீட்டு sentiment தான் இதற்கு சரியான வழி என்று தீர்மானித்து, " இதைக் கேள் ராணி... இத்தனை நாள் சீதையின் அப்பா ஜனகன் , உன் அப்பா கேகய மன்னனுடன் சண்டைக்குப் போகாமல் இருந்ததுக்கு யார் காரணம். தெரியுமா?"

"உன் ஆம்படையானுக்கு (தசரதனுக்கு) பயந்து தான்."

"ராமன் ராஜாராமன் ஆகி விட்டால்... . ...அவ்ளோதான்......ஜனகனுக்கு நல்லாவே குளிர் விட்டுடும். சொல்லிட்டேன். மாமனார் பின்னாடியே,  ராமனும் வில் அம்புடன் புறப்பட மாட்டான்னு என்ன நிச்சயம் சொல்லு?

ஆக... உன்னாலான உபயத்தை உன் பிறந்த வீட்டுக்கு செய்யப் போறே ! ஓகே! நான் யார் அதைத் தடுக்க.."

இதைக் கேட்டதும், கைகேயி சட்டென்று மந்தரையைப் பார்த்தாள்.

தன் செயலால்  தன் அம்மா வீட்டிற்கு ஒரு துண்பம் என்றால் எந்தப் பெண் தான் அதை செய்வாள்.

இந்த அம்மா வீட்டு செண்டிமெண்ட் 'பசக்' என்று பிடித்துக் கொண்டது .

இது தான் சமயம் என்று இன்னும் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் , " அது மட்டுமா ராணி. இன்னும் கேள்...ராமன் மன்னன் என்றால் லஷ்மணனுக்கு சரிசமமான மரியாதை கிடைக்கும். ஆனால் பரதனுக்கு அது கிடைக்குமா?" என்று கேட்டாள்.

இதை மட்டுமா கேட்டாள்? 

" நாளை ராமனுக்கு குழந்தைகள் பிறந்தால், கௌசிப் பாட்டி...கௌசிப் பாட்டி ன்னு கௌசல்யாவைக் கொண்டாடுமா?உன்னையா? யோசிச்சிக்கோ. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனிமேல் உன் இஷ்டம்." என்று சொல்லியிருப்பாள். 
(கம்பன் சொல்லவில்லை இதை . என் யூகம் இது.)

அதனால் தான் கைகேயி மனம் மாறியிருக்க வேண்டும்.  
" ஆமாம் இல்ல... இதெல்லாம் விட்டு விட்டேனே.என் மூளைக்கு தோணவேயில்லையே! நல்ல வேளை இப்பவாவது மந்தரை சொன்னாளே" என்று மனம் மாறிய கைகேயி

மந்தரையிடமே இதற்குத் தீர்வும் கேட்கிறாள்.
 அதற்கு மந்தரை ," உன்னிடம் தான் தசரதன் குடுத்த இரண்டு வரம் இருக்கே  . அதை இப்ப கேட்காமல் அப்புறம் எப்ப கேட்க போறே ராணி."

"பரதன் நாடாள - ஒரு வரம்..
ராமன் காடு புக  - ரெண்டாம் வரம்.அவ்ளோ தானே.சகல பிரச்சினையும் முடிஞ்சுடும் .இல்லையா ராணி." 

நம்மைப் போலவே கைகேயியும் குழம்பியிருக்க வேண்டும்.

பரதன் நாடாளும் வரம் ஓகே...
ராமன் காடு புகும் வரம்- Why Mantharai? Why?

அங்க தான் மந்தரையின் சூழ்ச்சி தெரிகிறது. ராமன் அயோத்தியிலேயே இருக்க, பரதன் ஆட்சி செய்தால் என்ன ஆகும்?
மக்களின் "Sympathy wave" ராமனுக்குக் கிடைத்து விடுமே.அது பரதனுக்கு ஆபத்தாக முடியலாம்.
ராமன் காட்டிற்குப் போனாலும் 'sympathy wave' இருக்கத் தான் செய்யும். ஆனால் சில நாட்களில் மக்கள் ராமனை  மறந்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். மக்கள் ராமனை சுத்தமாக மறக்க ஓரிரு வருடங்கள் போதாது. நிறைய நாட்கள் தேவைப்படும். கேட்கறதுன்னு ஆச்சு..  பதினான்கு வருடங்கள் ராமனுக்கு வனவாசம் என்றால் சரியாயிருக்கும் என்று நினைத்திருப்பாள் மந்தரை..அதனால் தான் இந்த உபாயம் சொல்கிறாள் என்று நினைக்கிறேன்.
(என்னா வில்லத்தனம்! என்னா வில்லத்தனம்!)

கம்பனின் கவியைப் பார்ப்போமா...
அயோத்யா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம். பாடல் எண்:1577

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் 
பெரு வனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால், செழுநிலம் எல்லாம் 
ஒருவழிப் படும்உன்மகற்கு, உபாயம் ஈது என்றாள் 

அவ்விரண்டு வரங்களுள் ஒரு வரத்தால் அரசாட்சியை உன் மகனதாக ஆக்கிக் கொண்டு, மற்றொன்றினால் ராமன் பெரிய காட்டின் கண் பதினான்கு ஆண்டுகள், அயோத்தியிலிருந்து நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலைய செய்வாயாக. அப்படி செய்தால், உன் மகனாகிய பரதனுக்கு வளப்பமான உலகம் முழுதும் அடங்கி நேர்படும். இதுவே உபாயமாகும்.

இதை கைகேயி எப்படி செயல் படுத்தினாள் என்று கம்பன் சொல்வதை அடுத்தப் பதிவில் பார்ப்போமே...

நன்றி.


Thursday, 10 October 2019

கம்பனும்,Hidden Agenda வும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-6)

image courtesy : Wikkimedia Commons.

நானும், அவரும்,  பக்கத்து  வீட்டுப் பெண் ஜானுவின் திருமணத்திற்கு சென்றிருந்தோம்.

திருமணம் முடிந்த பின்பு, விருந்துண்ண டைனிங் ஹாலுக்கு சென்றோம்.
அத்தனையும் அருமையோ அருமை. அந்த பதர் பேணி..... ஆஹா....என்ன ருசி....என்ன ருசி....( இன்னும் பதர் பேணி ருசி நாவிலேயே இருக்கு)

நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து இள நீர் பாயசம் பரிமாற ...
எனக்கு எதை சாப்பிடுவது... எதை விடுவது என்று தெரிய வில்லை. 

என் மனசாட்சி வேறு," ராஜி... சர்க்கரையாய் உள்ளே தள்ளுகிறாய்? ஜாக்கிரதை...நீ சுகர் பேஷண்ட் .நினைவிருக்கிறதா?" எச்சரிக்க...

"மட நெஞ்சே! நீ கொஞ்சம் சும்மாயிருக்கிறாயா? " என்று மனதிற்கு ஒரு அதட்டல் போட்டு விட்டு....

மனம் சொன்னது காதிலேயே விழாதது போல் அவரிடம்,
"இளநீர் பாயசம் என்ன அருமை." சொன்னேன் .

உடனே அவர், பரிமாறிய அன்பரிடம்," இங்கே பாருங்கள்....இந்த மேடமிற்கு இன்னும் கொஞ்சம் பாயசம் விடுங்கள்." என்று சொல்லவும்,..

பரிமாறுபவர் சட்டென்று முதலில் என் கணவர் இலையில் தாராளமாக பாயசத்தை பரிமாறினார். பின்னர் தான், என் இலைக்குப் பரிமாறினார்.

என்னவரிடம்," ஓ...இது தான் பகக்த்து இலைக்குப் பாயசம் என்பதோ! நல்ல Hidden Agenda!" என்று சொன்னேன்.

அப்படித் தான் கைகேயிக்கும் ஒரு hidden agenda இருந்திருக்கிறது.

விளக்கமாக சொல்கிறேனே .....
கைகேய நாட்டின் இளவரசி கைகேயி. அவள் வைத்தது தான் அங்கே சட்டமாயிருந்திருக்கிறது.

தசரதனை மணந்தாள். தசதரதனின் மனதிற்குப் பிடித்த இனிய ராணி. அவள் விருப்பதிற்கு அயோத்தியிலும் மறுப்பில்லை. ஆக...அயோத்தியிலும் அவள் வைத்தது தான் சட்டமாக இருந்தது.

எல்லாம் சரியகத் தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் ராமன் பிறந்ததும், முதல் மைந்தன் என்ற பாசத்தால்  தசரதன் சற்றே தடம் மாற ஆரம்பித்திருப்பான்.

"Power தன் கையிலிருந்து கௌசல்யாவின் கைக்கு மாற ராமன் காரணமாகி விடுவானோ?"
Smartஆன கைகேயி அதை உணர்ந்து விட்டாள்.

ராமன் தானே, தசரதனை கௌசல்யாவின் அந்தப்புரத்திற்கு இழுப்பது? 

ஓகே! இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. ராமனை நம் மாளிகையிலேயே வளர்ப்போம்.  தன் மகன் பரதன் வேண்டுமானால் கௌசல்யாவிடம் வளரட்டும். என்று தீர்மானித்தாள்.

உடனே செயல் படுத்தியும் விட்டாள். அவள் நினைத்தபடியே தசரதன் கைகேயியின் மாளிகையிலேயே தங்க ஆரம்பித்தான். 

மனதை மகிழ்விக்கும், ராணியும், பிரிய மகனும் இருக்கும் இடத்தில் தானே மன்னனும் இருப்பான். அதுவே நடந்தது.

கைகேயி தான் நினைத்ததை முடித்துக் கொண்டு விட்டாள்.

நாளை ராமனுக்கு முடி சூட்டு விழா !

ஆத்திரத்துடன் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க... மந்தரை  ஓட்டமும், நடையுமாக கைகேயின் மாளிகைக்கு  வருகிறாள்.

கைகேயி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளாம். உலுக்கி எழுப்பி, கோபத்தில் சொல்கிறாள் மந்தரை ," உங்களுக்கு பெரிய அநீதி இழைக்கப் பட்டிருக்கிறதை அறியாமல் தூங்குகிறீர்களே ராணி ."

"எனக்கு அநீதியா? அதுவும் அயோத்தியிலா? என்னடி உளறுகிறாய்? "

"ஆமாம் ! நாளை ராமனுக்கு முடி சூட்டு விழாவாம். சொல்லிக் கொள்கிறார்கள். 
அப்படியென்றால்  உங்கள் மகன் பரதனுக்கு மன்னர் பட்டம் இல்லையா? ராமன் மன்னன் என்றால் கௌசல்யா தானே ராஜமாதா . அப்பொழுது உங்கள் நிலை என்ன?"


"ஹா...ஹா...ஹா... தாதியான உனக்குத் தெரிவது, ராணியான எனக்குத் தெரியாதா?அதற்குத் தானேடி  ராமனை  நான் வளர்த்தேன். என்னிடம் வளர்ந்த பாசத்தால், ராமன் என் பேச்சை எப்பவுமே மீற மாட்டான். 'Proxy' ஆட்சி செய்து விட்டுப் போகிறேன்.(அப்பவேவா?)ராமன் ஆட்சிப் புரிந்தாலும், கட்டளையிடுவது நானாகத் தானே இருப்பேன்.  என் கட்டளை தானே சாசனம்."

என்று மனதில் நினைத்துக் கொண்டே மந்தரையிடம்,"ராமனுக்கு முடி சூட்டு விழாவா! எத்தனை மகிழ்ச்சியான செய்தி சொல்கிறாய் மந்தரை! இந்தா ரத்தின  மாலை ." என்று கழுத்தில் கிடந்த விலையுர்ந்த ரத்தின மாலையை மந்தரைக்கு அளிக்கிறாளாம் கைகேயி.


(ஆமாம். நான் கம்ப ராமாயணம் முழுவதும் படித்து விட்டேன். இப்படியெல்லாம் எங்கேயும் கம்பர் சொல்லவில்லையே." என்கிறீர்களா?
நான் தான் hidden agenda என்று ஏற்கனவே சொல்லி விட்டேனே.  எல்லாவற்றையுமா  கம்பர் சொல்லிக் கொண்டிருப்பார்? நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். 
இதையும், நானாக சொல்லவில்லை.
கம்பன் சொல்வதை வைத்து,  இப்படி....இப்படி என்று புரிந்து கொண்டேன்.)


இப்ப கம்பனின் கவியைப் பார்ப்போமா?

அயோத்யா காண்டம். மந்திரப் படலம். பாடல் எண் 1547.
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஒர் மாலை நல்கினாள்


தூய்மையான கைகேயிக்கு, பேரன்பு என்கின்ற கடல் ஆரவாரித்து மேல் கிளம்ப, களங்கமில்லாத முகமாகிய சந்திரன் பிரகாசித்து, மேலும் ஒளியடைய, மகிழ்ச்சி எல்லை கடக்க, மூன்று சுடர்களுக்கும் தலைமைப் பெற்றது போன்றதாகிய ரத்தின மாலையை மந்தரைக்குப் பரிசாக அளித்தாள்.

கைகேயிக்குத்  தான், தன் hidden agenda வேலை செய்யும் என்கிற நம்பிக்கை இருக்கே. அப்புறம் ஏன் அவள் ராமனைக் காட்டுக்கு  அனுப்ப வேண்டும் என்கிற சிந்தனை வருகிறதா?

அதற்கும் கம்பனிடம் பதில் இருக்கு...

அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்...


Monday, 23 September 2019

கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-4.)



image courtesy:Google.

கம்பனும், சாம்பாரும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

வாசலில்  இரண்டு மயில்கள், கழுத்தை ஒய்யாரமாக திருப்பி பார்த்துக் கொண்டிருந்தன....மாக்கோலத்தில்... 

யார் போட்டிருப்பார்கள்? நாத்தனாராய் இருக்குமோ.....
கூறைப் புடவை சரசரக்க....புது மஞ்சள் சரடும்,....மாலையுமாய்.... அவரின் கரம் பற்றி இல்லம் புகுந்தேன்...

சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தேறிய பின்னர்...வந்து உட்கார்ந்தேன்....இல்லையில்லை உட்கார வைக்கப்பட்டேன். 

ஆமாம்....கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தான் இருந்தது. எல்லோருமே புது முகம் என்னவர் உட்பட.... திரு திரு என்று முழித்துக் கொண்டு...என்னை சுற்றி நடப்பதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

"அந்த ஜமுக்காளத்தை இங்கே போடு."

" இலை வாங்க சொன்னேனே கணேசா ...வாங்கிட்டியா?"

"அக்கா ....சாம்பாரில் உப்பு சரி தானே! பாத்து சொல்லுங்களேன்."

இப்படி வீடே பரபரத்துக் கொண்டிருந்தது. குனிஞ்ச தலை நிமிராமல் நானும், என்னை அவ்வப்போது பார்க்கும் அவரும்....அமர்ந்திருந்தோம்.

ஒரே அமர்க்களமாய் இருந்த கல்யாண வீடு..சட்டென்று அலர்ட் ஆனது.

தெருவிலிருந்து உறவினர் ஒருவர் வந்து," அத்தை வராங்க! அத்தை வராங்க!" என்று கட்டியம் கூறுவது போல் சொல்லவும்,

அடுக்களையிலிருந்து பெண்கள் , கூடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்கள் என்று எல்லோரும்,"வந்தாச்சா...அத்தை வந்தாச்சா!" என்று கேட்டதிலிருந்து, அவர்கள் எல்லோரும், பதட்ட நிலைக்கு செல்வது புரிந்தது.

அவரின் தூரத்துப் பெரியம்மா அருகில் வந்து," அத்தை வந்ததும், உடனே ஆசீர்வாதம் வாங்கி விடுங்கள்" என்று எங்களைப் பார்த்து சொல்லவும், 

"ஏன் உடனே கிளம்பி விடுவாங்களா?" வெடுக்கென்று கேட்க நினைத்ததை, அப்படியே முழுங்கினேன்.
( அவசியமில்லாமல், வாயைத் திறக்காதே!இது நீ வாழப் போகும் இடம்.என்று மைண்ட் வாய்ஸ் எச்சரித்தது.)

அந்த வி.ஐ.பி அத்தையை எல்லோரும்,என் மாமியார் உட்பட தடபுடலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். என்னவர் 'அத்தை அத்தை' என்று தனி மரியாதை காண்பிக்கவும்.....

பிறகு ஒரு நாள் தனிமையில் ,"அந்த அத்தை என்றால் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமோ?" நான் கேட்க....சின்னதாய் ஒரு ஸ்மைல் செய்து விட்டு," அப்படியும் வைத்துக் கொள்ளலாம். "என்றார்.

"அப்படினா" நான் கேட்க...

"போகப் போகத் தெரியும்" என்று அவர் சொல்ல ...அதன் அர்த்தம் ஒரு சில மாதங்களிலேயே புரிந்து போனது.

" வி.ஐ.பி அத்தை மிகப் பெரிய ட்ரபிள் ஷூட்டர்" 
(அந்த வி.ஐ.பி அத்தையிடம் நான்  வசமாய் சிக்கி மீண்டது மிகப் பெரிய கதை)

சிக்கி மீண்ட பின் " அத்தையிடம் ஜாக்கிரதையாய் இரு" என்று என்னை அன்றே நீங்கள் அலர்ட் செய்திருக்கலாமே " என்று அவரிடம் கேட்டதற்கு,

அவர்," அத்தை நல்ல மனுஷி தான். எப்பவாவது கொஞ்சமே கொஞ்சம் எடக்கு மடக்கா ஏதாவது சொல்வார் அல்லது செய்வார்." என்று அலட்சியமாக சொல்ல...

விட்டுக் கொடுக்காமல் பேசும் அவரைத் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை வருடங்களாகியும், இப்பக் கூட அவர் சொன்னதையேதான் சொல்கிறார் (வி.ஐ.பி அத்தை பற்றி ) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த ஆண்களே இப்படித் தான் போலிருக்கு....இந்தக் காலம் என்றில்லை...கம்பர் காலத்திலிருந்தே இப்படித் தான் என்று நினைக்கிறேன்.

பின் என்ன? கம்பன் சொல்வதைப் பாருங்களேன்...

சீதா கல்யாணம் முடிஞ்சாச்சு..திவ்ய தம்பதியர் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்!

இப்ப கவனிங்க..

முதல்ல தசரதன் காலில் விழுந்தாச்சு. 

ஆச்சா?

இப்ப யார் கால்ல விழனும் ராமனும், சீதையும்? சொல்லுங்க...

வரிசைப் படி கோசலை கால்ல தானே! 

அதான் இல்லையாம் ...சீதை கரம் பற்றி அழைத்து நேரே போய்  கைகேயி காலில் விழுகிறானாம்  ராமன்.
(கோசலை...பாவம் என்ன நினைத்திருப்பாள்? )

அப்புறம் தான் கோசலையிடம்  ஆசீர்வாதம் வாங்குகிறானாம்.

அதற்குப் பிறகு சுமித்திரை... 

எதற்கு ராமன் (காலில் விழும்)ஆர்டரை மாற்றினான் என்றால்," கைகேயிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்." என்பதை சீதைக்கு சொல்லாமல் சொல்கிறானாம் ராமன் .

கொஞ்சம் வாயைத் திறந்து ராமன் சொன்னால் தான்  என்னவாம். "கைகேயி அம்மா ட்ரபிள் ஷூட்டர். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்."என்று வெளிப்படையாக சொல்லியிருந்தால் சீதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கைகேயிக்கு  'ஐஸ்' வைத்திருப்பாள் இல்லையா. காட்டிற்குப் போக வேண்டிய நிலையே வந்திருக்காது அல்லவா? 

அதனால் தான் சொன்னேன் ராமன் , கம்பன் முதல்  இன்றைய ஆண்கள் வரை தங்கள் வீட்டு உறவினரை விட்டே கொடுக்க மாட்டார்கள்...

கம்பன் எப்படி அதை சொல்கிறான் பாப்போமா?

பால காண்டம். கடி மணப் படலம் . பாடல் எண் 1339

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.



இராமன் சீதையுடன், கேகய மன்னனின் மகளான கைகேயியின் ஒளி மிகுந்த திருவடிகளை, தன்னைப் பெற்ற தாயான கோசலையினிடத்துக் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும், மிகுந்த அன்புடனே வீழ்ந்து வணங்கி,பின்பு தன்னைப் பெற்ற தாயான கோசலையின் இணைடிகளைத் தலைக்கு அணியாக சூடி, அதன் பின்பு உளத் தூய்மை மிக்கவளான சுமித்திரையின் திருவடிகளை வணங்கினான்.

கம்பனின் ராம காவியம் படிக்கப் படிக்க வியந்து போகிறேன்.
நீங்களும் தான் இல்லையா?

மீண்டும் ஒரு கம்பனின் பாடலுடன் சந்திப்போமா?



Wednesday, 28 August 2019

கம்பனும் செல்போனும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-1)

Image courtesy : Wikkimedia Commons
நேற்று  காலை, அப்பொழுதுதான் வந்து அமர்ந்தேன். ஒரு கையில் நியூஸ் பேப்பரும், இன்னொரு கையில் என் செல் போனுமாய்....

என்னவர் அவருடைய செல்போனைப் பார்த்துக் கொண்டே...."இன்று இட்லியும், சாம்பாரும் சூப்பர் ராஜி." என்றாரே பார்க்கலாம்.

எனக்கு நிஜமாகவே "கனவா? நிஜமா?" என்கிற சந்தேகம் வந்தது.  என்னாச்சு இவருக்கு? நானாக அவரிடம் வலிந்து வலிந்துக் கேட்டாலும், ஒற்றை வார்த்தையில்  " நன்றாக இருந்தது" என்பாரே தவிர ... வேறு ஒரு பாராட்டும் வராது. இன்றென்ன ஒரு நாளும் இல்லாத திருநாளாய் பாராட்டித் தள்ளுகிறாரே நினைத்துக் கொண்டே அவரையே பார்த்தேன்.

என் சிந்தனையைக் கலைப்பது போல் ,

" டிங் டாங்"  வாசல் மணி .

அந்தப் பாராட்டிலிருந்து மனதை திசைத் திருப்ப மனமில்லாமல் ,
"கொஞ்சம் யாரென்று பார்க்கிறீர்களா?" அவரிடமே கேட்டேன்.

அவரோ," உனக்குத் தான் இருக்கும். அமேசானில் ஏதாவது ஆர்டர் செய்திருப்பாய்." என்று விட்டேத்தியாய்  சொல்ல..
சரி. இவர் எழுந்திருக்க மாட்டார் என்று புரிய... அவசர அவசரமாக எழுந்தேன் பாருங்கள்...

"டொப்" சத்தம்.

பார்த்தால் என் செல்போன் கீழே அனாதையாய் கிடந்தது.

அதற்குள் இன்னொரு "டிங் டாங்"

இப்பொழுது என்னவர் " செல் போனைப் பார்" சொல்லிக் கொண்டே கதவைத் திறக்க எழுந்தார். (முதலிலேயே செய்திருந்தால் என் செல் போனாவது பிழைத்திருக்கும். நினைத்துக் கொண்டே என் போனை நாடிப் பிடித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

" பரவாயில்லை பிழைத்தது." நான் சொல்லி முடிப்பதற்குள் என்னவர் என்னை பார்த்து ," கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு" என்று சொல்லவும் காத்திருந்தாற் போல் நான், " இப்ப எழுந்து கதவைத் திறந்ததை அப்பொழுதே செய்திருந்தால் ...."
நான் முடிப்பதற்குள்,"ஆக நான் தான் காரணம்னு  சொல்லு...நீ செல் போனை கீழே போட்டதற்கு?" அவர் கோபத்துடன் சொல்ல,

நானோ," இல்லை....இல்லை....நீங்கள் இல்லை அந்த டெலிவரி மனிதர் தான் காரணம்"

என்னவர்," எல்லோரையும் சொல்வாய். ஆனால் நீ கீழே போட்டாய் என்று ஒத்துக் கொண்டால் தான் என்ன?" சொல்லி விட்டு நகர்ந்தார்.

"சரி. ஒத்துக் கொள்கிறேன். என் விதி தான் காரணம் "

" ஒத்துக் கொள்ல மாட்டாயே." இப்பொழுதும் உன் விதி தான்.. நீயில்லை." என்று நக்கலடித்து விட்டு போனில் எதையோ படிக்க ஆரம்பித்து விட்டார்.

எனக்கு சட்டென்று கம்பன் பாட்டு ஒன்று நினைவில் வந்து மோதியது.

ராமன் பதினான்கு ஆண்டுகள் காடு போக வேண்டும். பரதன் நாடாள்வது என்கிற முடிவு அரண்மனையில் எல்லோர் காதுகளையும் எட்டியது. இளைய பெருமாளான லக்‌ஷ்மணன் காதை எட்டியது தான் தாமதம்,  கைகேயி மீதும், பரதன் மீதும் கோபம் கொப்பளித்துக் கொண்டு வருகிறதாம் லக்ஷ்மணனுக்கு.

ஆனால், ராமன் அவன் கோபத்தை அடக்கி விடுகிறார். எப்படி?

கம்பன் சொல்கிறான் எப்படி என்று....

"நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!"

என்றும் நீர் உள்ள ஆற்றிலே சில சமயங்களில்  நீர் இல்லாமல் வற்றிப் போகலாம்.. அது ஆற்றின் பிழையில்லையே! அது போல் தான்  என்னைக் காடு போக சொன்னது, தந்தை குற்றம் இல்லை..நம் தாயாகிய கைகேயின் குற்றமும் இல்லை... என்கிறானாம் ராமன்.

லஷ்மணன் மனதில் இப்படித் தோன்றியிருக்கலாம்." ஒரு வேளை ராமன் அண்ணா பரதன் தான் குற்றவாளி  என்கிறாரோ" என்று சிந்திப்பதற்குள் , "கைகேயின் மகனாகிய பரதன்  மேலும் குற்றம் இல்லை" என்று ராமன் சொல்லி விடுகிறார்.

(அப்ப ராமன் அண்ணா என்ன தான் சொல்ல வருகிறார்? என்று லஷ்மணன் குழம்பி நின்றிருப்பானோ)

"விதியால் விளைந்த குற்றமேயாகும். அதனால் நீ யார் மேலும் கோபம் கொள்ளாதே  " என்று ராமன் சொன்னதாக நம் கம்பன் முடிக்கிறார்.

காடு போகச் சொன்னாலும், ராமன் யாரையும் குற்றம் சொல்லாமல் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாரே!  என்று லஷ்மணனுக்கு மட்டுமில்லை நமக்கும் கூடத்தான் தோன்றுகிறது .இல்லையா!

ஆமாம். எங்கே நீ கம்பன் பக்கமெல்லாம் போகிறாய் என்று ஆச்சர்யப் படுகிறீர்களா? கம்பனின் ராமாயணம் தித்திக்கும் தமிழில் மனதைக் கொள்ளையடிக்கிறது. அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.. நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எதையாவது தவறாக சொல்லியிருந்தால்...தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்..  திருத்திக் கொள்கிறேன். சரியா?

மீண்டும், இன்னொரு கம்பன் பாடலுடன் சந்திப்போமா?(விடுவதாக இல்லை, உங்கள் எல்லோரையும்)

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்