Showing posts with label சீதை. Show all posts
Showing posts with label சீதை. Show all posts

Monday, 24 August 2020

கம்பரும், ஐஸ்வர்யா ராயும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-25)

Image Courtesy:DeviRajaraman.
"கம்பனும், மிளகாயும்" படிக்கலாம் இங்கே..

பக்கத்து வீட்டு ஜானுவின் திருமண வரவேற்பு.

நானும், என்னவரும் ஆஜர்.

மேடையில் பெண்ணும், மாப்பிள்ளையும் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்க நின்று கொண்டிருந்தனர்.

"ஆமாம்.. அது யாரது. ஜானுவின் பக்கத்தில்? தெரிந்த முகமாய் இருக்கு." சட்டென்று நினைவிற்கு வரவில்லை." மனம் குழம்பியது.

சில வினாடிகள் தான். கண்டு பிடித்து விட்டேன்.

ஜானுவின் அம்மா பட்டுப் புடைவை சரசரக்க , என்னருகில் வந்து ," வாங்கோ!" என்று சொன்னவுடன் , சிரித்துக் கொண்டே ,ஜானுவின் அருகில் நிற்பது உங்கள் தங்கை சுபா தானே. அடையாளமே தெரியல " என்றேன்.

சாதரணமாகவே நல்ல அழகு தான் இந்த சுபா. இப்ப மேக்கபின் கை வரிசையில் தேவதையாக ஜொலிக்கிறாள்.

மணப்பெண்ணுக்கு மட்டுமில்ல...இப்ப உறவினர்களுக்கும் பார்லர் பெண்மணி தேவையாயிருக்கு போலிருக்கு. 

இதெல்லாம் உலக அழகி திருமதி ஐஸ்வர்யா ராய் உபயம். காஸ்மெடிக் இண்டஸ்ரிக்கு நல்ல பிஸினஸ் நம் நாட்டில். நினைத்துக் கொண்டேன்.


"மேக்கப் " கலை ஒன்றும் நமக்குப் புதிது இல்லை. ராமாயணக் காலத்திலேயே இருந்திருக்கிறது.
இங்கே நான் சீதையைப் பற்றிப் பேசவில்லை. நான் சொல்வது சூர்ப்பணகைதான்.

சூர்ப்பணகை மேக்கப் போட்டுக் கொண்டேன் என்று உன்னிடம் வந்து சொன்னாளா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார். எப்படி என்று பார்ப்போமா?

காட்டில் ராமனைப் பார்க்கிறாள் சூர்ப்பணகை. ராமனின் அழகில் மதி மயங்கி எப்படியாவது ராமனைத் தன் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறாள். 
"ஆனால்,திருமகளின் வடிவமான சீதையோ ராமனின் பக்கத்திலேயே இருக்கிறாளே.
இவ்வளவு அழகான சீதையை விட்டு விட்டு அரக்கியான என் பக்கம் ராமன் எப்படித் திரும்புவான்." நினைத்துக் கொண்டவள் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறாளாம்.

அரக்க குலத்திற்கு  உருவத்தை மாற்றிக் கொள்வது பெரிய விஷயமா என்ன... நினைத்தவுடன் அழகிய பெண் உருவெடுக்கிறாள் சூர்ப்பணகை. மேக்கப் போட்டுக் கொண்டிருப்பாளோ? 

அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு, எப்படி நடக்கிறாளாம்?

டங்...டங் என்று பூமியே அதிரும்படி அரக்கியாக  நடப்பாளா என்ன?

இல்லையாம். 

மெல்ல...மெல்ல ஒயிலாக நடந்து வருகிறாளாம்.

அவள் நடந்து வருவது, வின்னுலகில் இருந்து இறங்கி வரும் தேவ கண்ணிகைப் போல் (ஒப்பனை செய்து கொண்டு) வருவதைப் போலிருந்தது என்று கம்பர் சொல்கிறார். 

செம்பஞ்சும், தளிரும் நாணும்படி இருந்ததாம் அவள் பாதங்கள். தாமரை மலர் போன்ற பாதங்களை மெல்ல அடியெடுத்து வைத்து, மயில் போல்..அன்னம் போல்... என்று வர்ணித்துக் கொண்டே வந்த கம்பரை யாரோ தடுத்து நிறுத்துவது போல் தெரிகிறது.

"யார் என் சிந்தனையக் கலைப்பது? என்று உற்று கவனிக்கிறார் கம்பர்.

அட.. அவரின் மைண்ட் வாய்ஸ்.

அவரின் மைண்ட் வாய்ஸ், "கம்பரே...ஸ்டாப்...ஸ்டாப்.... கொஞ்சம் ஓவரா சூர்ப்பணகையை வர்ணிக்கிறாப் போல் தெரிகிறதே.  அவள் வில்லி என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா.. இல்லையா?" கேட்டிருக்கும்.

சட்டென்று சுதாரித்துக் கொள்கிறார் கம்பர்.." ஆமாம்...ஆமாம்.. சூர்ப்பணகையை ரொம்பவும் வர்ணித்து வைத்து விடப் போகிறேன். அங்கு ராமன் உட்கார்ந்திருக்கிறான். ராமன் ஏகப் பத்தினி விரதன் ஆயிற்றே.கொஞ்சம் அடக்கி வாசிப்போம்." நினைத்துக் கொண்டார்.

வர்ணிப்பை  off-set செய்ய வேண்டுமே...என்று மனம் நினைத்தவுடன்...அவருக்கு வார்த்தை வந்து விழுகிறது. மனம் நினைப்பதை,எழுத்தாணி கொண்டு செலுத்துகிறது. 

"நஞ்சம்"- என்கிற வார்த்தையைப் போடுகிறார். இத்தனை அழகான சூர்ப்பணகை, கொடுமையான விஷம் போல் வந்தாள் என்று சொல்லி முடித்து விட்டால் போதுமே!  ஆனால் அவர் மனம் ஒப்பவில்லைபோலும். இன்னும் கடுமையாக சூர்ப்பணகையை சாட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

கம்பர் ஆச்சே...

"வஞ்ச மகள் " என்று சொல்லி வஞ்சனை நிறைந்தவளான சூர்ப்பனகை நடந்து வந்தாள் என்று முடிக்கிறார்.


அவரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்.

செம்பஞ்சும், விளங்குகின்ற மிகச் செழித்த தளிர்களும் நாணும்படி, சிறந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள் ஆகி, அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும்,
அன்னம் போலவும்,விளங்குகின்ற வஞ்சிக் கொடி போலவும், கொடிய விடம் போலவும், வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.
அவர் எழுதிய அந்த நான்கு வரிகளையும், சற்றே வாய் விட்டுப் படித்து, சந்த நயத்தை அனுபவியுங்கள்.  ஓசை நயம் சூர்ப்பணகை அடி எடுத்து வைப்பது போலவே இருக்கும்.




சந்தத்தையும், பொருளையும், சூர்ப்பணகை நடந்து வருவதையும் பார்த்துக் கொண்டிருங்கள். வேறொரு கம்பன் காவியப் பாடலுடன் வருகிறேன்.

நன்றி.

Thursday, 26 March 2020

கம்பனும், வளையலும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-21)



கம்பனும், நழுவிய கோப்பையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


ஒரு சின்ன ப்ளாஷ் பேக்...

மணமேடையில் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தேன்.

அவர் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பாரா? இல்லை கண்டுக்காதது போல் உட்கார்ந்திருக்கிறாரா? தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தாலும் ....

அவரை திரும்பிப் பார்க்க முடியவில்லை.   லேசாக சற்றே தலையைத் திருப்பியிருந்தாலும்,  பக்கத்திலிருந்த கல்லூரி தோழிகள் என் மானத்தை வாங்கி விடுவார்களே!

ஆனால் கம்பராமாயண சீதையைப் பாருங்கள்....என்னா டெக்னிக் ? பக்கத்திலிருந்த ராமனை எப்படி கள்ளத்தனமாகப் பார்க்கிறாள் என்று கவனியுங்கள்..

ஜனகனின் சபைக்கு திருமகளின் வடிவமான அழகு சீதையை, மேலும் அலங்கரித்து அழைத்து வருகிறார்கள்.

நாணத்தால் தலைக் கவிழ்ந்திருக்க, 
'தொம் தொம்' என்று சத்தம்.
 சீதையின் இதயத் துடிப்பு 'ஸ்டெத்' எதுவுமில்லாமல் அவளுக்கே கேட்க...

அவள் மனம் விரும்பிய ராமனே வில்லை முறித்து , அவள் கரம் பற்றப் போகிறான். அப்புறம் எதற்கு இத்தனைப் பதட்டம்??
சீதையின் எண்ண ஓட்டத்தைக் கவனிப்போமா?
அருகிலிருக்கும் தோழி நீல மாலையைப் பார்க்கிறாள் சீதை..

"என்ன?" என்பது போல் நீல மாலை புருவத்தை உயர்த்த...

" அவர் தானே?" சீதை கண்களால் கேட்க...
"எவர்?" நீலமாலை கண்களில் குறும்பு கொப்பளிக்க பார்க்க..
" ஏய்! சும்மா இருடி. சரியாகப் பார்த்து சொல் அவர் தானே." மீண்டும் கண்களால் சீதை ஆனையிட..
நீல மாலை சபையை ஒரு முறை கண்களால் ஸ்கேன் செய்து விட்டு...
" ஆமாம்... ஏன் என்னைக் கேட்கிறாய்? நீயே பார்க்க வேண்டியது தானே. பாத்துக்க." என்பது போல் கண்களால் சொல்ல...

"போடி! வெட்கமாயிருக்குடி. ப்ளீஸ்...கொஞ்சம் சரியாய் பாத்து சொல்லேன்.."

" சரி. சொல்றேன்..ரொம்பவும் அவஸ்தைப் படாதே.... இரு ...இரு... அவர் போலத் தான் இருக்கு. அவரே தான் என்று நினைக்கிறேன்.."

இப்ப சீதை, "எவரே தான்?" கண்களால் பேச 

"ம்ம்ம்ம்......"நீலமாலை பொய்க் கோபம் காட்ட..

"ஓகே...ஓகே..ப்ளீஸ்...ப்ளீஸ்" சீதை கண்களால் கெஞ்ச..

"அப்படி வா வழிக்கு. சொல்றேன்...நீ எறிந்த பூப்பந்து விழுந்த தோளுக்கு சொந்தக் காரர் தான். அந்தக் கரிய செம்மல் தான். போதுமா?" கண்களால் சொல்ல...

"அப்பாடி.." என்றிருந்தது சீதைக்கு.

ஒரே ஒரு கணம் தான். 
"நீலமாலை சரியாகத் தான் சொல்கிறாளா" மீண்டும் சீதைக்குக் குழப்பம்.

தாமரையாய் மலர்ந்திருந்த அவள் முகம், குழப்பத்தில் தவிப்பதைப் பார்க்க முடிந்தது.

"நானே பார்த்தால் தான் எனக்குத் திருப்தியாய் இருக்கும். பார்க்கலாம் என்றால் நாணம் தடுக்கிறது. எப்படிப் பார்க்கலாம்?" நிலைக் கொள்ளாமல் தவிக்கிறாள் சீதை.

அவள் தன் தந்தை ஜனகன் அருகில் அமர வைக்கப் படுகிறாள்.

ஜனகன் ஒரு தந்தையின் பெருமிதத்துடன், சீதையைப் பார்க்கிறான்.
"என் செல்லப் பெண், இந்தப் பொற் சித்திரம் என்னை விட்டு அயோத்திக்கு போய் விடுவாளே." மனம் லேசா விசனப் பட...

சீதையோ , அப்பாவின் மன ஓட்டத்தை அறியாமல் ராமனை எப்படிப் பார்க்கலாம் என்று அலை பாய்கிறாள்.
(பெண் குழந்தைகளே இப்படித் தான். காதலனும், கரம் பற்றியவனும் தான் எல்லாம் அவர்களுக்கு)

சட்டென்று அவள்  "மைண்ட் வாய்ஸ்",
"சீதை ! ஒரு ஐடியாடி."
"என்ன?"
"கைகளில் எத்தனை எத்தனை பொன், வைர, வைடூரிய வளையல்களைப் போட்டிருக்கே."
"ஆமாம். அதுக்கென்ன?"
"அதை சரி செய்யறாப் போல...." சொல்லி முடிக்கவில்லை மைண்ட் வாய்ஸ்....
"நல்ல ஐடியாவா சொல்றியே! வெரி குட்!"
சந்தோஷமாக செயல் படுத்துகிறாள் சீதை.
கைவளையலை பார்த்து சரி செய்வது போல், தலையை மிக மிக லேசாகத் திருப்பி, கடைக் கண்ணால் தன் கரம் பற்றப் போகும் ஶ்ரீராமனை ஆசைத் தீரப் பார்த்து விடுகிறாள். "அன்று என்னைப் பார்த்து என் இதயத்தைத் திருடிக் கொண்டு சென்றவன் தான்" என்று உறுதி செய்து மகிழ்கிறாள்.

சீதை கள்ளத்தனமாகப் பார்ப்பதை, ராமனும் கவனித்து விடுகிறான்.சட்டென்று மின்னலாய் ஒரு புன்னகை அவன் முகத்தில் தோன்றி மறைய...

நீல மாலை இந்த கண நேர காதல் நாடகத்தைக் கவனித்து, சீதையை லேசாக கைகளால் இடிக்க..

'அட..இத்தனையும் நடந்ததா ஜனகனின் சபையில்? '

கம்பனின் பாடலைப் படித்ததில் கற்பனையில் நான்  கண்ட காட்சி தான் மேலே சொன்னது..

இதோ அந்தக் கம்பராமாயணப் பாடல்
பால காண்டம். கோலங்கான் படலம் .எண் 1238

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.

மெய் விளைவு இடத்துமுதல் ஐயம் விடலுற்றாள்.

ஐயனைஅகத்து வடிவே அலபுறத்தும்.

கைவளை திருத்துபுகடைக் கணின் உணர்ந்தாள்

இலக்கையுடைய வில்லை வளைத்ததையும், அதனை முறித்ததையும், (பலர் வாயிலாக) உரைக்கக் கேட்டு விட்டாள். உண்மை முடிவாகத் தெரிதலால் கன்னி மாடத்தில் கண்டவனோ வேறு  ஒருவனோ வில் முறித்தவன் என்று தெருவிற் கண்ட முதற் காட்சி காரணமாக எழுந்த ஐயத்தை ஓரளவு நீக்கி விட்ட பிராட்டி,தலைவனாகிய இராமனை அன்று முதல் தன் அகமாகிய மனத்திலே நிலை நிறுத்திய வடிவத்தால் கண்டு களித்து வந்தவள், வெளியேயும்(அவன் வடிவத்தைக் கண்னாரக் காண) பெண்மையின் இயல்பான நாணம் தடுத்தலால், நேராக நோக்காது கை வளையல்களை சரி செய்வது போல் கடைக் கண்ணால் ரசித்து ,  அவன் தான் இவன் என்று அறிந்து மகிழ்ந்தாள்.






Friday, 13 March 2020

கம்பனும், நழுவிய கோப்பையும். ( கம்பன் என்ன சொல்கிறான்?-20)




கம்பனுக்கும் சண்டைக்கும் என்ன சம்பந்தம்? இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

ஹாலில் டிவி உச்சஸ்தாயில் அலறிக் கொண்டிருந்தது.

நாலு ballல் , இரண்டு run எடுத்தால் வெற்றிக் கோப்பை 'விராட்' கையில் இருக்கும் என்கிற நிலையில் , இந்தியாவே டிவிக்குள் மூழ்கிக் கிடந்திருந்தது.

 'விராட்' பதட்ட நிலையில் பெவிலியனில் நின்றுக் கொண்டிருந்தார்.

இப்ப...2 balls 2 runs.
இந்தியாவே மயான அமைதி.


Bowler வேகமாக ஓடி வந்து பந்தை வீசவும்,  அது நேராக 'மிடில் ஸ்டம்ப்'ஐ  இடித்துத் தள்ளி விட்டு, விக்கெட் கீப்பர் கையில் சமர்த்தாய் போய் செட்டில் ஆனது.

போச்சு... 

இப்ப 1 பால், 2 ரன்..

கடைசி ball.
புது பேட்ஸ்மேன்.
இரண்டு ரன். 

எல்லோரும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்க bowler ம் மேலே வானத்தை ஒரு முறை பார்த்து (கடவுளிடம் வேண்டிக் கொண்டு)  பந்து வீசவும், பந்தை அடிப்பதாய் நினைத்துக் கொண்டு, பேட்ஸ்மேன் காற்றைக் கிழிக்கவும், பால் இப்ப லெஃப்ட் ஸ்டம்பை பேர்த்து வீசி எறிந்தது.

போச்சு... 'கப்' போயே போச்.....

இப்படியா கடைசி நிமிடத்தில் வெற்றிக் கோப்பைக் கை நழுவும்?

There is many a slip between the cup and the lip  என்று சும்மாவா சொன்னார்கள்.

ராமாயணக் கைகேயியும் இது போன்ற ஒரு தருணத்தை எதிர் கொண்டாள்.

அது அவளை அவள் மைந்தனிடம் இருந்தே பிரித்து விட்டது எனலாம்.

வாருங்கள்  கைகேயி மாளிகைக்கு செல்வோம்...(கற்பனையில்)

கைகேயியும் மந்தரையும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

" மந்தரை! நீ சொன்னபடி ராமனைக் காட்டுக்கு அனுப்பியாகி விட்டது. இனிமேல் சிம்மாசனம் பரதனுக்குத் தான். ஆனால்..."

'ஆனால்...என்ன ராணி?'

" என் ஆருயிர்க் கணவன் மறைந்து விட்டாரே! கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்தார் போல் கொட்ட ஆரம்பித்தது."

" அழுவதை நிறுத்துங்கள் ராணி.இப்ப என்ன ஆச்சு? நீங்களா அவரைக் கொன்றீர்கள்?  கொடுத்த வரத்தை கேட்டதால் உயிரை விட்டு  விட்டார். ஊர் என்ன வேண்டுமானாலும் பேசும். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். உங்கள் மகனுக்காக நீங்கள் செய்த மிகப் பெரிய தியாகம் இது. நீங்கள் தான் இனிமேல் ராஜ மாதா." மந்தரை சொல்லி முடிப்பதற்குள்..

" ராஜகுமாரர்கள் பரத, சத்ருக்ணர்கள் வந்து விட்டார்கள்" செய்தி வந்து சேர்ந்தது. 

"மந்தரை! பரதன் வரவில்லையடி. சிம்மாசனமே என்னை நோக்கி வருகிறது. என் வார்த்தையே இனி கட்டளை. என் கட்டளையே சாசனம்." புளகாங்கிததுடன் பேசுகிறாள் கைகேயி.(தசரதன் இறப்பை மறந்து விட்டு)

"ஜாக்கிரதை மஹாராணி ! ஜாக்கிரதையாக பரதனிடம் பேசுங்கள்." என்று மந்தரை எச்சரிக்கவும்....

புயலெனப் பரதன் உள்ளே நுழையவும் சரியாயிருந்தது.

வந்து தாயை வணங்கிய பின்னர், "அயோத்தி நகரம் எதையோ இழந்தாற் போல் தோன்றுகிறது தாயே."

கைகேயி அமைதிக் காக்க...
பரதன் தொடர்ந்தான்," தாயே! தந்தையும், தனயனும் கண்ணில் தென்படவில்லையே!! அவர்களையும் போய் நான் வணங்க வேண்டுமே!" 

கைகேயி இப்பொழுது தான் வாய் திறந்தாள்."இருவரும் இங்கில்லை மகனே!"

"அப்படியென்றால்....."

"உன் தந்தை வானுலகம் சென்று விட்டார்."

அதிர்ச்சியில் உறைந்தான் பரதன்.

அந்த அதிர்ச்சியிலிருந்து பரதன் மீள்வதற்குள் அடுத்த குண்டை போடுகிறாள் கைகேயி.

"உன் தமையன் ராமன் வனத்திற்கு சென்று விட்டான். அவனுடன் சீதையும், இலக்குவனும் சென்று விட்டார்கள்."

"ஏன் இப்படி அடுக்கடுக்கான துன்பம் ஏற்பட்டது? " பரதன் குரல் உடைந்து கேட்க...

"தானாக ஏற்படவில்லை . நான் தான் ஏற்படுத்தினேன்." வெற்றிக் களிப்புடன் சொல்கிறாள்  கைகேயி.

"என்ன? நீங்கள் காரணமா?"

"ஆமாம் . அதுவும் ..உனக்காகவே செய்தேன்.
 உன் தந்தை எனக்குக் கொடுத்த இரண்டு வரங்களை உனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டேன். 
ஒரு வரம்- நீ நாடாள
இன்னொன்று - ராமன் காடாள..
உன் தந்தை வானுலகம் சென்றது நம் துர்பாக்கியம்."

கைகேயி என்ன செய்திருக்கிறாள் என்பது புரிய பரதனுக்கு , கோபம் தலைக்கேறியது . கோபத்தின் டிகிரி உச்சத்தை எட்டியது.

கைகேயியைப் பார்த்து, பரதன் கண்ணும், முகமும் கோபத்தில் ஜிவு... ஜிவுக்க,  " தந்தை வான் புக... தமையன் வனம் புக.... உன் மகன் பரதன் நாடாளுவான்  என்று கனவு கண்டாயோ? " 

"நீ செய்த அநியாயங்களுக்கு நான் துனை வருவேன் என்று எப்படி உன்னால் நினைக்க முடிந்தது? கெடுதல் எல்லாம் செய்து விட்டு, அதைப் பெருமையாக சொல்லும் உன் வாயைக் கிழிக்க விடாமல் என்னை எது தடுக்கிறது என்று தெரியவில்லையே " தன்னையே நொந்து கொள்கிறான்.

தாய் என்றும் பாராமல் அவளைத் திட்டி விட்டு ,"நான் கோசலைத் தாயைப் பார்த்து வணங்கி, மன்னிப்புக் கேட்கப் போகிறேன். பிறகு நான் வனம் சென்று ராமன் அண்ணாவை பார்த்து வணங்கி, அவர் திருவடிகளை பணிந்து அழைத்து வரப் போகிறேன். உன்னால் நின்ற ராம பட்டாபிஷேகம், என்னால் நிறைவு பெறப் போகிறது. " கோபத்தில் சொல்லி விட்டு வேகமாக கோசலை மாளிகையை நோக்கி சென்றான்.

யோசித்துப் பாருங்கள் ....கைகேயிற்கும், மந்தரைக்கும் எப்படி இருந்திருக்கும். கைகேயி கண்ட ராஜமாதா கனவு என்ன? நிமிட நேரத்தில் அந்தக் கனவு தகர்ந்து பொடிப் பொடியாய் உதிர்ந்து போயிற்றே. 

A slip between the cup & lip. Absolutely True.

நம் எல்லோருக்குமே கைகேயி மேல் கோபம் கொஞ்சமில்லை, நஞ்சமில்லை. கம்பர் தன் கோபம் எல்லாவற்றையும், பரதன் வழியாக தீர்த்துக் கொள்கிறார் பாருங்கள்.

பரதன் தாயைத் திட்டுவதாக நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்றை இப்ப பார்ப்போமா?

நோயீர் அல்லீர்; நும் கணவன்தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே!



 உம் கணவனது உயிரைக் குடித்தீர். நோய் போன்று நின்று நிதானமாக உயிரைப் போக்கவில்லை. சட்டென்று தந்தையின் உயிரை வாங்கி விட்டீர். ஆகையால் நீர் பேய் போன்றவரே.  இத்தகைய நீர்கணவன் இறந்த பிறகும் இன்னமும் உயிருடன் வாழ்வதற்குரியவர் ஆவீரோ? (உரியரல்லீர்). இறந்து போக மாட்டீரோ.குழந்தையாய் இருந்தபொழுது பால் கொடுத்து வளர்த்தீர். ஆகையால் நீர் என் தாயார்தான். இளைஞனாய் இருக்கின்றேன். இப்பொழுது, அழியாத கொடும்பழி கொடுத்து என்னைக் கெடுத்தீர். எதிர்காலத்தில் என்னவெல்லாம்  தரப்போகின்றீரோ?’

நாம் கைகேயியை என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைக் கம்பன் செய்கிறார் பாருங்கள்.

பரதனின் Character நம்மை அசர அடிக்கிறது அல்லவா? 
அதனால் தான், கம்பர் வேறொர் சமயத்தில் அவனைக் கோடி ராமர்க்கு நிகர் என்று சொல்கிறார்..

வேறொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.
நன்றி.


Saturday, 22 February 2020

கம்பனும், காதலும்-3.(கம்பன் என்ன சொல்கிறான்?-18)






கவிதை என்றாலே நயம் தான்... அதில் சந்தேகம் வேண்டியதே இல்லை... அதிலும் கம்பன் பாடல் என்றால் கேட்கவே வேண்டியதில்லை .

சொல்ல மறந்து விட்டேனே....
 மிதிலையை விட்டு வர மனமில்லாமல் அங்கே தான் இருக்கிறேன். எப்ப நீ மிதிலைக்குப் போனே என்று கேட்பவர்கள்  "அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!" க்ளிக் செய்து பார்க்கவும்.

என்னவரோ,"போகலாம் வா! ஃப்ளைட்டிற்கு நேரமாச்சு. கிளம்பு...கிளம்பு " சொல்வதைக் காதிலேயே வாங்கிக்காமல் வைத்த கண்ணை எடுக்காமல் ராமனையும், சீதையையுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன காதில் விழுகிறதா? மீண்டும் அவர் கோபத்துடன் கேட்க...

"இதயம் இடம் மாறுகிறதே! அங்க பாருங்க.." நான் சொல்லவும்...

அவர் என்னைப் பார்த்தப் பார்வை இருக்கிறதே ! "இவளுக்கு சுத்தமாக மறை கழண்டு விட்டதோ" மாதிரி இருந்தது.

"நான் லட்சியம் செய்யவில்லையே!"
எத்தனை அருமையான காட்சி..
'Let us first enjoy this divine love scene.' மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

ராமன் சீதையைப் பார்க்க ...சீதை ராமனை வைத்த கண் வாங்காமல பார்க்க ... 

இவர் வேறு." போகலாம்" என்று மீண்டும் மீண்டும் நச்சரிக்க....

அங்கே பாருங்கள்...."இருவரும் அவர்கள் படை பலத்தைக் காட்டி ஒருவரை ஒருவர் கொள்ளையடிக்கிறார்கள்" நான் சொல்ல 

"படை பலமா?" இவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு," எனக்குத் தெரிந்து இங்கே போர் ஒன்றும் நடக்கவில்லையே. உனக்கு ஏதோ ஆகி விட்டது ராஜி. உனக்கு  further damage ஆகாமல் இருக்க வேண்டுமென்றால் இப்பவே  பெங்களூருக்குப் போக வேண்டும்." சற்றுக் கண்டிப்புடன் அவர் கூற....

அட... நான் சொல்லும் போர். வேறெதுவுமில்லைங்க.....காதல் போர்.. கம்பரின் வார்த்தைகளிலேயே சொல்கிறேனே...

"ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நாழிகையிலேயே....இருவரின் உள்ளமும்  ஒன்றி விட்டது. " நான் சொல்ல..

அவர் கவனிப்பது போல் பாவனைக் காட்ட...

அலட்சியம் செய்த நான் தொடர்ந்தேன்...
"வரி சிலை அண்ணலும் வாள் கண்
 நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்."
நான் சொல்லவில்லை. கம்பரின் வேலை இது...

அண்ணலின் கையில் வில்லைக் கொடுத்த கம்பர், சீதைக்கும் எதாவது ஆயுதம் கொடுக்கணுமே." யோசித்திருப்பர்.... அதன் விளைவு....சீதைக்கு வாளைக் கொடுத்து விட்டார். கையில் இல்லை...கண்ணில் ...' வாள் கண் நங்கை ' ஆக்கி ரசிக்கிறார் . 

என்ன ஒரு நயம்.  !

ராமனுடைய வில்லைப் பார்ப்பதா? 
சீதையின் வாளழகைப் பார்ப்பதா? 
ஒன்றுடன் ஒன்று போட்டிப் போடுகிறதே!

படிக்க படிக்க சுவையாய் இருக்கிறது கம்பர் காட்டும் காதல் கதை....சினிமா டைரக்டர்கள் கம்பரிடம் கொஞ்ச நாள் அஸிஸ்டண்ட் ஆக இருந்திருந்தால் நமக்கும் நல்ல காதல் படங்கள் கிடைத்திருக்கும். ம்ம்ம்.....நமக்குக் குடுத்து வைக்கல... What can we do?

கம்பர் டைரக்ட் செய்த காட்சியைப் பார்ப்போமா...

  பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.

தமக்குள் ஒருவரது அழகை ஒருவர் விழுங்கிய கண் பார்வை என்னும் கயிற்றால் கட்டி ஒருவரை மற்றொருவரது மனம இழுத்து நின்றதால் , கட்டமைந்த வில்லுடைய இராமனும்,வாள் போன்ற கண்களையுடைய ,பெண்களில் சிறந்த சீதையும் ஆகிய இருவரும் ஒருவர் மனத்துள் ஒருவர் மாறிப் புகுந்து அடைந்தார்கள்.

உங்கள் மனக்கண்ணிலும்  இந்தக் காதல் காட்சி விரிந்திருக்குமே...இருவருடைய படை பலத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்

இருவரிடமும் இருக்கும் குணங்கள் ஒன்றை பார்த்தோம்.

இருவரிடமும் இல்லாத charecteristics பற்றிப் பார்க்க வேண்டாமா?
 பரம் பொருளிடம் இல்லாத நலங்களா? திருமகளிடம் காணாத குணங்களா? இருக்கே...
கம்பர் சொல்கிறாரே! 
அடுத்தப் பதிவில் பார்ப்போமா?


நன்றி.
















Friday, 7 February 2020

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்! ( கம்பன் என்ன சொல்கிறான் -17)


Image Courtesy : Google.
கம்பனும், கருத்து சுதந்திரமும் படிக்க இங்கே க்ளிக்கவும்.



பண்டிகை நாட்கள் என்றால் டி.வி. காரர்களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

"10 மணிக்கு, 1 மணிக்கு, மாலை 5 மணிக்கு, இரவு 11 மணிக்கு என்று  சினிமாவாய் போட்டுத் தள்ளி விடுவார்கள்.

அதிலும் அந்த சினிமாக்களுக்கு அவர்கள் கொடுக்கும் 'ஹைப் இருக்கே' .... அருமையான காதல் கதை.....காதலையே ஓவியமாய் தீட்டிய படம் என்று.... காதைக் கிழிக்கும்  ம்யூசிக்குடன் ....சொல்லி மாளாது.

காதலை உருகி உருகி எடுக்கப்பட்டதாய் சொல்லிய படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது..
அப்படியொன்றும்  அசத்தலாய் இல்லை படம். என்ன இருந்தாலும் நடிப்புதானே அது..

ஆனால் கம்பர் எழுதிய காவியத்தில், ராமனும், சீதையும் உண்மையில் காதல் வயப்படுகிறார்கள். அதனால் தானோ என்னவோ அந்தத் திவ்யக் காதல் நம் மனதில் ஆழமாய் பதிந்து விடுகிறது.

கம்பனின் கைவண்ணத்தைப் படித்த பின் இவரையும், அழைத்துக் கொண்டு  மிதிலைக்கே சென்று விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உன்னுடன் அவரும் வந்து விட்டாரா என்று யாரும் கேட்க வேண்டாம்."அண்ணலும் நோக்க அவளும் நோக்கியக் " காட்சியைக் காண என்னுடன் அவரில்லாமலா?

மிதிலைத் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

" அறுபத்து மூவர் திருவிழா போலல்லவா இருக்கிறது கூட்டம்." அவரிடம் நான் சொல்ல...

எப்பவும் போல்," தொணத் தொணன்னு பேசாமல் அங்கே பார்.." அவர் காட்டியத் திசையில் பார்த்தேன்.

ஒரே மக்கள் வெள்ளம்.. "எதைப் பார்க்க சொல்கிறீர்கள்? "

அங்கே பார்," ராமன் தெரியவில்லை . அருகில் இளைய பெருமாள் ." 

மக்கள் கூட்டத்தின் நடுவில் நான் கண்களால் துழாவிப் பார்க்க, ராம தரிசனம் கிடைக்க ,சொல்லி மாளா மகிழ்ச்சி...கைகளால் உடனே கண்ணத்தில் போட்டுக் கொண்டேன்." யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு தரிசனம்." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

திடீரென்று ஒரே சலசலப்பு ...

"என்ன ஆச்சு? "

 பக்கதில் இருந்த ஒருத்தர் " அரண்மனை உப்பரிகையிலிருந்து  பூப்பந்து விழுந்து விட்டதாம். ராஜகுமாரி சீதை விளையாடிக் கொண்டிருந்த பந்தாகத் தான் இருக்க வேண்டும்." சொன்னார்.

அதற்குள் " அங்கே வா... ராம தரிசனம் நன்றாகக் கிடைக்கும்." என்று சற்று மேடானப் பகுதிக்கு என்னவர் அழைத்து சென்றார்.

ஆமாம்..இங்கிருந்து பார்த்தால் ராமன் கைகளில் பூப் பந்துடன் நிற்பது தெரிந்தது. மீண்டும் கை கூப்பி வணங்கிக் கொண்டேன். 

"உப்பரிகையில் பார் சீதை" இவர் சொல்ல...

பார்த்தால்...அருமையான் திவ்ய காதல் நாடக  அரங்கேற்றத்தைக் காணும் பேறு கிடைத்தது.


ராமன் தோள் மேல் தான் அந்தப் பூப் பந்து விழுந்திருக்கிறது. 

யார் போட்டிருப்பார்கள் என்று கையில் பந்துடன் சுற்று முற்றும் பார்க்கிறான் ராமன். யார் என்று புரிபடுவதற்குள்....

" நீல மாலை ....உன்னால் தானடி.. நீ சரியாகப் போட்டிருந்தால் இப்படி ஆகியிருக்குமா?" என்கிற குரல் வந்த திசையில் பார்க்கிறான்.

அரண்மனை உப்பரிகையிலிருந்து தான் இந்தப் பந்து விழுந்திருக்கிறது என்று ராமனுக்குப் புரிய ...அண்ணாந்து பார்க்க...

சீதையோ ," யார் மேல் பந்து விழுந்ததோ?" என்கிற அச்சத்துடன் கீழே பார்க்க...

இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

(இதல்லவோ "கண்டவுடன் காதல்.")

அதோடு நிற்கவில்லை... இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டன.இருவரும் பார்த்துக் கொண்டால் சட்டென்று பார்வை நகர சாத்தியக் கூறுகள்  அதிகம். அதனால் தான் கம்பர், இருவர் பார்வைகளும் கவ்விக் கொண்டன என்று சொல்லி விட்டார். பார்வைகள் விடுபடவேயில்லையே.
(ஆமாம்...நேரே பார்த்தாற் போல இப்படி விரிவாக சொல்கிறாயே? என்று கேட்க வேண்டாம். கம்பன் வரிகளைப் படித்தால் இந்தக் கற்பனை தானாய் உஙகள் மனக் கண்ணிலும் விரிந்து விடும்.அதற்கு நான் கியாரண்டி.)

அதற்குள் நீலமாலை," ராஜகுமாரி என்ன ஆச்சு ? ஏன் அங்கேயே நின்று கொண்டு பார்க்கிறீர்கள்?" கேட்க...

"ராஜகுமாரி......ராஜகுமாரி!" மீண்டும் மீண்டும், சீதையின் தோழிகள் கூப்பிட்டாலும் சீதை திரும்பவேயில்லையே. 

அவள் பார்வையைத் தான் ராமன் திருடிக் கொண்டு விட்டானே.பார்வையை மட்டுமல்ல சீதையின் இதயத்தையும் அல்லவா திருடி விட்டான். 

"அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள் " காட்சியை என்னமாய் படமெடுத்திருக்கிறார் கம்பர் பாருங்கள்..

எண் அரும் நலத்தினாள்
    இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
    கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
    உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
    அவளும் நோக்கினாள்.

அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை, நின்ற பொழுது, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கவர்ந்து உண்ணவும்,இருவரது அறிவும், நிலைப் பெற்று இருக்காமல்  ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், ராமனும், சீதையைப் பார்த்தான்.சீதையும், ராமனைப் பார்த்தாள்.

"எத்தனையோ தடவை இந்தக் காட்சியைப் பற்றி படித்தாகி விட்டதே " என்று நினைக்க வேண்டாம். எத்தனை முறைப் படித்தாலும், திகட்டாத தெள்ளமுது .  நிறைய முறைப் படிச்சாச்சு என்று சொல்லிக் கொண்டே படித்து விட்டீர்களே! அது தான் கம்பனின் கைவண்ணம்....

வேறொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...






Tuesday, 19 November 2019

கம்பனும், காதலும்(கம்பன் என்ன சொல்கிறான்?-11)


'ஜானு.....ஜானு ' இது அம்மா கூப்பிடும் குரல்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு,
மீண்டும்,'ஜானு.....' என்று அம்மா குரல் கொடுக்க ஒரு பதிலும் வரவில்லை.

கையில் சாம்பார் கரண்டியுடன், அம்மா ஹாலுக்குள் எட்டிப் பார்க்க, டிவி மட்டும் அனாதையாய் அழுது கொண்டிருந்தது.

'எங்கே தொலைந்தாள் இவள்.' முணுமுணுத்துக் கொண்டே  அம்மா அறையில் எட்டிப் பார்க்க... அங்கே ஜானு கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன் அழகை தானே ரசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா கூப்பிட்டது ஒன்றும் ஜானு காதில் விழுந்தமாதிரி தெரியவில்லை. 'என்னாச்சு இந்த பெண்ணுக்கு?' அம்மா நினைக்கவும்,  படுக்கை மேல் கிடந்த ஜானுவின் போன் இனிமையாய் ஒலிக்கவும் சரியாயிருந்தது.

போன் ஒலியாலும் ஜானுவின் கண்ணாடி தியானத்தைக் கலைக்க முடியவில்லை போலும்.

அம்மாவிற்குப் புரிந்து விட்டது ஜானுவுக்கு  என்னாச்சுன்னு.

உங்களுக்கும் புரிந்திருக்கும்..இனி ஜானுவாச்சு, அவள் அம்மாவாச்சு....

மேலே சொன்னது டீ.வி சீரியல் ஒன்றின் காட்சி.

கம்பராமாயணத்தில் சீதையும் இப்படித்தான் இருக்கிறாளாம்.

எப்போலேருந்து?

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதிலிருந்து தான் இந்த வியாதியாம் சீதைக்கு.


சீதையின் நெருங்கிய தோழிகள்,'நம் ராஜகுமாரிக்கு என்னாச்சு?' ஏன் இப்படி விட்டத்தையே வெறித்துப் பார்ப்பதும், தனக்குள்ளே சிரிப்பதும்......ஒன்றும் சரியில்லையே " சொல்லிக் கொள்கிறர்கள்.

சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை  'சீதை! சீதை! என்று கூப்பிட சீதை எதையோ நினைத்து தனக்குள் புலம்புகிறாள்.

நீலமாலை சீதையின் தோளைப் பிடித்து உலுக்கி," என்னடி ஆச்சு உனக்கு. என்னடி புலம்புகிறாய்?" கேட்க....

'எனக்கென்ன ஆச்சு? ஒன்றும் இல்லையே ! ஒன்றும் இல்லையே!' சீதை அவசர அவசமாக உரைத்தாள்.

'ஆனால் எனக்குப் புரிஞ்சு போச்சுடி' நீலமாலை சொல்லவும், சீதை பொய்க் கோபத்துடன்,' என்னடி உனக்கு இப்ப புரிஞ்சு போச்சு.?' முறைத்தாள்.

'நீயும் நானும் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பலேருந்து தான் நீ இப்படி இருக்கிறாய்.' சொல்லிக் கொண்டே சிந்திக்க ஆரம்பித்த நீலமாலை தொடர்ந்தாள்...
'ஆ....தெரிந்து விட்டதடி. விளையாடும் போது வெளியே நடந்து போகும் ஒருவரை நீ  கவனிப்பதையும், அவர் உன்னை பார்த்ததையும் கவனித்து விட்டேனடி சீதை.'

'போடி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் யாரையும் பார்க்கலை.' சீதை பொய்யாக மறுத்தாள்.

'சரி விடு சீதை. நீ ஒருவரைப் பார்த்தாயே...அவர் எப்படி இருந்தாரடி' நீலமாலை கேட்க...

சீதை , "அவரா! நான் எங்கேடி அவரைப் பார்த்தேன். அவருடைய 'கரு கரு' கூந்தலைத் தானே  நான் பார்த்தேன்." முகத்தில் வருத்ததுடன் சொன்னாள்.

"ஓ....அவரைப் பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா? அவருடைய கருமையான கூந்தலுக்கே உன் மனம் அலை பாயுதோ" கிண்டலடித்தாள் நீலமாலை.

"ஆனால் அவருடைய முகம் எப்படி இருந்தது தெரியுமா? பௌர்ணமி நிலா மாதிரி இருந்ததடி. " சீதை வெட்கத்துடன்  தொடர...

'ம்ம்ம்ம்....அப்புறம் ?' நீல மாலை மற்றத் தோழிகளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.

சீதையோ தன்னை மறந்து, 'அவருக்குத் தான் எத்தனை நீளமான கைகள். முழங்கால் வரை நீண்ட கைகள்.' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு , கண்களில் காதலுடன் சொல்ல....

"அப்புறம் இன்னொன்றை சொல்லனும் நீல மாலை . " 

"என்னடி சொல்லனும்?" நீலமாலை ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு சீதையை கேட்க..

"அவருக்கு....அவருக்கு  பெரிய நீலமணி மலைகள் போன்ற தோள்கள் ." என்று சீதை சொல்லி விட்டு ....தன்னை சுற்றிப் பார்த்தாள் . தோழிகள் எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சீதை, வெட்கத்துடன் கைகளால் தன் முகத்தை மறைக்க ....

நீல மாலை, அவள் கைகளை எடுத்து விட்டு, " ஆக...அவருடைய கூந்தல், சந்திர வதனம், கைகள், தோள்கள் .....இவையெல்லாம் தான் உன்னைக் கவர்ந்ததோடீ? " கேட்கவும்,

சீதை சட்டென்று அவசரமாக மறுத்தாள்.'ம்ஹூம்.... இவையெல்லாம் என்னைக் கவர்வதற்கு முன்பாக....' இழுத்தாள்.

"கவர்வதற்கு முன்பாக.....? சீக்கிரம் சொல்லுடி சீதை" நீலமாலை ஆர்வத்துடன் கேட்கவும்,

"அவருடைய புன் முறுவல் என் உயிரை அவருடனேயே எடுத்து சென்று விட்டதடி." சீதை சொல்லி விட்டு வெட்கத்துடன் அங்கிருந்து ஓடவும்...

தோழிகள் ,கொல்லென்று சிரித்துக் கொண்டே சீதையைத் துரத்தவும்..., 

நீ ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல் சொல்கிறாயே. என்று என்னைக் கேட்கிறீர்களா?

நானாக சொல்லவில்லை. ராமனைப் பற்றி சீதை சொன்னதாக கம்பன் சொன்னது அப்படியே கண் முன் காட்சியாய் விரிந்தது. அவ்வளவே.

நீங்களும் படித்து ரசியுங்களேன்.....
பால காண்டம்.மிதிலைப் படலம். பாடல் எண் 619

இந்திரநீலம் ஒத்துஇருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.

இந்திர நீலம் என்கிற மணிக்கு ஒப்பாக கருத்த முடியும், முழு நிலவு போன்ற முகமும், முழங்கால் வரை தொங்கும் கைகளும், அழகிய நீல மணி மலைகள் போன்ற தோள்களும் என்னும் இவையே அல்ல.  அவ்வாறாயின், பின் யாது என்றால், அந்தப் புன்னகை தான் இவை எல்லாவற்றுக்கும் முற்பட்டு என் உயிரை கவர்ந்தது.

படித்தவுடன் உங்களுக்கும் மனதில் காட்சி விரிந்திருக்குமே. காட்சியை ரசித்துக் கொண்டிருங்கள்.

மற்றொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...
நன்றி.


Monday, 28 October 2019

கம்பனும், Award ம் (கம்பன் என்ன சொல்கிறான்?-8)


Image by Ramachandra Madhwa Mahishi, Illustrated by Balasaheb Pandit Pant Pratinidhi [Public domain]

"கம்பனும் தையல் மெஷினும்" படிக்க இங்கே க்ளிக்கவும்.
'டிங் டாங்'

கதவைத் திறந்தேன். கொரியர் வந்திருந்தது.

கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு உள்ளே திரும்பப் போனேன்.

"ஹலோ மாமி" எதிர் வீட்டு விஜய் கையசைக்க நானும் ஒரு ஹலோ சொல்லவும்,

"யார் அது " இவர் கேட்டுக் கொண்டே வந்தார்.

"எதிர் வீட்டு விஜய் தான். ஆபீஸ் போறான் போலிருக்கு. எனக்கும் அப்படியே ஒரு ஹலோ...."
சொல்லி விட்டுத் தொடர்ந்தேன்....

" விஜயை ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரொம்பவும் நல்ல பையன். ஒரு கெட்டப் பழக்கம் இருக்கணுமே .... ம்ஹூம்... அவன் குணத்தில் ஒரு தப்பு சொல்ல முடியுமா பாருங்கள். இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல பையன்! "

 "ராஜி! முதலில் எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்து விட்டு உன் 'விஜய் அவார்ட்' ஃபங்க்‌ஷனை வைத்துக் கொள். ஒரு ஹலோ சொல்லிட்டுப் போய்ட்டானாம். இவளுக்குத் தாங்க முடியல. அவார்ட் ஃபங்க்‌ஷனுக்கு தேதி குறித்து விட்டாள்." கிண்டலடித்தார் .

அந்த வார இறுதியில் 'Forum Mall' போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். சிக்னலில் கார் நிற்க ...ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில்

 "யார் அது? விஜய்யா?" 

அவரும் பார்க்க," ஆமாமாம்... நீஅவார்ட் குடுத்த ரொம்ப நல்ல பையன் தான்"


"ஆனா... உன் அவார்ட்டை அவனுக்குக் குடுக்க முடியுமான்னு தெரியலையே! என்ன செய்கிறான் பார்.."

"என்ன? " கேட்டுக் கொண்டே நான் அவனைப் பார்க்க, அவனோ"புஸ்....புஸ்....புஸ்.." வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

அதற்குள் சிக்னல் விழவும், நாங்கள் நகர்ந்தோம்.   
நான் அமைதியாய் உட்கார்ந்திருக்க,இவர் கண்ணை ரோட்டில் வைத்துக் கொண்டே," என்ன மேடம் அமைதியாகி விட்டீர்கள்? விஜய் அவார்ட் ஃபங்க்‌ஷன்  கேன்சல்ட்டா? " நக்கலாக சிரித்தார்.

"ராஜி ! அவன் ஹாஸ்டலில் படித்தவன் ....  இந்த பழக்கமெல்லாம் அவன் ஃபெரண்ட்ஸ் உபயமாகத் தான் இருக்கும் . அவன் இப்பவும் நல்ல பையன் தான் ராஜி.நீ உன் அவார்டைக் குடுக்கலாம்." இவர் என்னை சமாதானப் படுத்த ...

என்னால் ஒத்துக் கொள்ள் முடியவேயில்லை. "Fair Weatherஇல் Good Peopleஆக!"  இருப்பது என்ன பெரிசு...சொல்லுங்கள்...

ராமாயண கைகேயியும் இந்த ரகம் தான் போலிருக்கு.

ராமனுக்கு முடி சூட்டு விழா தீர்மானித்து விட்டு, கைகேயி மாளிகைக்குத் திரும்புகிறான் தசரதன்.

" கைகேயி...கைகேயி " என்று சந்தோஷமாகக் கூப்பிட்டுக் கொண்டே  நுழைகிறான் தசரதன்.

ஆனால் பேரமைதியாக இருக்கிறது மாளிகை.

என்னமோ தப்பாக இருக்கே! நினைத்துக் கொண்டே  கைகேயியைத் தேடுகிறான் தசரதன். 

படுக்கையறையில் அவனுடைய இனிய ராணி கீழே விழுந்துக் கிடக்கிறாள். உடல் நலக் குறைவோ ...இல்லை யாராவது இவளை அவமதித்திருப்பார்களோ...

பதறிப் போய் கூப்பிட்டுப் பர்க்கிறான்... பதில் வரவில்லை. 

அவள் தான் கை தேர்ந்த நடிகையாச்சே! சொல்லியா தர வேண்டும்... கிட்டே வந்து, தட்டி எழுப்புகிறான். அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும், கிளசரின் போட்டாற் போல் கண்ணீர் மாலை மாலையாக வருகிறது.

அவள் சந்தோஷப் படுவாள் என்று நினைத்து," உன் ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம்" என்று சொல்லவும்...
இன்னும் வேகமாகத் தேம்புகிறாள் கைகேயி...

'எதுக்கு இப்ப அழற...?'   கெஞ்சிப் பார்க்கிறான்.

"மானே! தேனே! கைகேயிக் கண்ணே " கொஞ்சிப் பார்க்கிறான்.

பல கெஞ்சல் , கொஞ்சல்களுக்குப் பிறகுத் தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள் கைகேயி...

எப்படி இருந்திருக்கும் தசரதனுக்கு," இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? "
"ராமா! ராமா! " என்று இவள் கொஞ்சும் ராமனையா காட்டுக்குப் போக வேண்டும் என்று இவளே  சொல்கிறாள்?

"என்ன ஆச்சு இவளுக்கு ?" 

"கைகேயி ! நீ தானே ராமனுக்கு விற் பயிற்சி, போர் பயிற்சி என்று சொல்லிக் குடுத்தவள்.. என் ராமன்! என் ராமன் ! என்று கொண்டாடியவள். நானும், கொசல்யாவும் ராமனிடம் காட்டியப் பாசத்தைப் போல் பன்மடங்கு காட்டியவள் ஆச்சே நீ. நீயா இப்படி சொல்வது? நம்ப முடியவில்லையே!"

கைகேயிற்கு இன்னும் ராமனை வளர்த்தப் பாசம் மேலோங்கி தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ராமன் காடு போக வேண்டும் என்று தானே அவள் வரம் கேட்க வேண்டும். அப்படி அவளால் கேக்க  முடியல. ராமன் காடு போக வேண்டும் என்று சொல்லாமல்  ,"சீதைக் கேள்வன்(சீதையின் கணவன்) " காடு போக வேண்டும் என்று சொல்கிறாளாம்.

கைகேயி கொஞ்சம் சொல்லேன்," நீ நல்லவளா? கெட்டவளா?" 

கைகேயின் பதில் இதுவாகத்தான் இருக்கணும்," நான் 'Fair Weather-Good People' ரகத்தை சேர்ந்தவள் .

கம்பருக்கும் நம்மைப் போலவே கைகேயி மேல் சரியான கோபம் வந்திருக்கும். 
அவரும் "இந்தா உனக்கு ஒரு அவார்ட் "என்று கைகேயிற்கு  கோபத்துடன்  அவார்ட் குடுக்கிறார் பாருங்கள்... 
"தீயவை யாவினும் சிறந்த தீயாள்" என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அவார்ட் .
'கெட்டவளிலேயே சிறந்த கெட்டவள்' விருது. சிம்பிளா சொல்லனும்னா 'சிறந்த வில்லி' அவார்ட்.
(மிக சரியான அவார்ட் தான் கொடுத்திருக்கிறார்.)

கம்பர் எப்படி சொல்கிறார் பார்ப்போமா...
அயோத்தியா காண்டம் . கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண் 1593

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது:சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; எனப் புகன்று நின்றாள்;

தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும் மேம்பட்ட கொடியவளான கைகேயி,"நீ கொடுத்த இரு வரங்களுள், ஒரு வரத்தினால் என் மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும். மற்றொன்றினால் சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்" என்று  சொல்லி மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.

இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தசரதன் எப்படி எதிர் கொண்டான்?
அடுத்தப் பதிவில் பார்ப்போம்...










Thursday, 3 October 2019

கம்பனும்,கஃப்தானும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-5)

Image Courtesy: Google.
கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்-4) படிக்க இங்கே க்ளிக்கவும்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயனித்துக் கொண்டிருந்தோம்.சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணம். 

ஒரு முதிய தம்பதி என் இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்தனர்.

'மைக்'கில்  கஃப்தான் வினய் ( பைலட்) எந்த உயரத்தில் பறக்கிறோம்.... எப்ப போய் சேருவோம்.....இத்யாதி..இத்யாதி... 'கர கர' குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

நானோ"எங்களுக்கு இந்த சங்கதியெல்லாம் தேவையில்லை கஃப்தானே! சென்னையில் பத்திரமாகத் தரையிறக்குங்கள். போதும் ." என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.(மனதில்).

சிறிது நேரத்தில் விமான பணிப் பெண் கொடுத்த ஒரு குட்டியூண்டு சோன்பப்டி, சமோசா, சாப்பிட்டு, காபி என்கிற பேரில் குடுத்ததை உள்ளே தள்ளி விட்டு, எல்லோருமே கண்ணயர ஆரம்பித்திருந்திருப்போம்.

மீண்டும் கஃதான் குரல் எங்களை எழுப்பி விட்டது.
" எல்லோரும் சீட் பெல்டை மாட்டுங்கள். தரையிறங்கப் போகிறோம்."

அதற்குள் சென்னை வந்து விட்டோமா .அப்பாடி...என்று நான் நினைக்க ஆரம்பிக்கவும்...முன் இருக்கை மாமி," சென்னை அதுக்குள்ள வந்துடுத்தா? தூக்கமா வருது " என்று சொல்லிக் கொண்டே பெரிய கொட்டாவி விட்டார்.

"ஆமாம்டி மதுரா ! ராமன் வில்லை ஒடித்த நேரத்தில் சென்னைக்கு  வந்துட்டோம் பாரேன். நீ மிச்ச தூக்கத்தை ஆத்துல போய் தூங்கிக்கலாம்."  என்று மாமா சொல்ல...

எனக்கு கம்பனின் வரிகள் நினைவில் வந்து மோதியது...

விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை ஜனகனின் அரண்மனைக்கு அழைத்து வந்து விட்டார். 

பிறகு, விசுவாமித்திரர்,ராம லஷ்மணர்களைப் பற்றி ஜனகனிடம் விரிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ராமனின் கை வண்ணம், கால் வண்ணம் என்று சொல்லிக் கொண்டே போகிறார்.

எனக்கோ பதை பதைக்கிறது. இந்த விசுவாமித்திர முனிவருக்கு விவஸ்தையே இல்லையோ.
"கை வண்ணம் , கால் வண்ணம் எல்லாம் சொல்கின்ற நேரமாய்யா இது. ராமன், ஜனகனின் மாப்பிள்ளையானவுடன், சீதை தன் அப்பாவிடம் ஆத்துக் காரர் பெருமை சொல்லிக் கொள்ள மாட்டாளா என்ன? . ஆத்துக்காரர் பெருமையை 'டமாரம்' அடிக்க பெண்களுக்கு சொல்லித் தரனுமா ?
அதனால் நீங்கள், முதலில் ராமனை வில்லில் நாணேற்ற சொல்லுங்கள் முனிவரே. வேறு யாராவது முந்திக் கொண்டு விடப் போகிறார்கள்" என்று விசுவாமித்திரரிடம் கத்த வேண்டும் போல் தோன்றியது.

கம்பராமாயணம் படிப்போர் பலருக்கும்  இந்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும்.

ராமன் தானாகட்டும். வந்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல் விசுவாமித்திரர் எப்பொழுது தலை அசைப்பார் என்று காத்து கிடக்கிறானாம்." ராமா! சீதை வேணுமா இல்லையா? எழுந்திரு. இப்படி உட்கார்ந்திருந்தால் ஆகாதப்பா." என்று சொல்லத் தோன்றியது.

ஒரு வழியாக விசுவாமித்திரர் 'பிசினஸ்'க்கு வந்தார்.
ஆமாம்....
 ராமனைப் பார்த்துக் கண்ணசைவாலேயே ," ராமா போ! போய் வில்லை எடுத்து நாணேற்று " ஏன்று சொன்னாராம். 

உடனே ராமன், 'விருட்'டென்று எழுந்து போய் சிவ தனுசை கையில் அனாயாசமாக எடுத்ததைத் தான் எல்லோரும் பார்த்தார்களாம்.

" டமால்....." என்று மிகப் பெரிய சத்தம். எல்லோரும் அலறிப் புடைத்திருப்பார்கள் .

எல்லாம் ராமன் கை வண்ணம் தானாம்.

சிவ தனுசு  முறிந்த ஓசை அது. எல்லோருக்கும் ராமன் வில்லை எடுத்தது தெரியும், பின் முறித்ததைத் தான் கேட்டனராம். நாண் ஏற்றுகிறேன் பேர்வழியென்று  வில்லை முறித்தே விட்டானாம். 
"ராமா...இரு...இரு.. சிவ தனுசை முறித்ததற்கு பரசுராமருடன் ஒரு தனிப் பஞ்சாயத்து காத்திருக்கு."

ஆக.... எல்லோரும் என்ன பார்த்தார்களாம்?

"எடுத்தது கண்டனர்.இற்றது கேட்டனர்."

இதைக் கம்பன் நான்கே வரிகளில் ஒரு வீடியோ பதிவாக்கி விட்டான் பாருங்கள்.

பால காண்டம். கார்முகப் படலம்.படல் எண்:783

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.

ண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்ற யாவரும், ராமன் தன் திருவடியால் அவ்வில்லின் நுணியை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாணேற்றியதையும், ராமனின் செயலின் வேகத்தால், காண முடியாதவராயினர். அன்றியும் மனத்தாலும் இன்னது தான் நிகழும் என்று கருதவும் இயலாதவராயினர். ஆயினும் ராமன் தன் கையால் அவ்வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். பின் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.

 பாருங்களேன்..கம்பனின் காவியம் நமக்கு ராமாயணத்தை கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறது இல்லையா?

மீண்டும் ஒரு கம்பன் பாடலுடன் சந்திப்போம். 



Monday, 23 September 2019

கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-4.)



image courtesy:Google.

கம்பனும், சாம்பாரும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

வாசலில்  இரண்டு மயில்கள், கழுத்தை ஒய்யாரமாக திருப்பி பார்த்துக் கொண்டிருந்தன....மாக்கோலத்தில்... 

யார் போட்டிருப்பார்கள்? நாத்தனாராய் இருக்குமோ.....
கூறைப் புடவை சரசரக்க....புது மஞ்சள் சரடும்,....மாலையுமாய்.... அவரின் கரம் பற்றி இல்லம் புகுந்தேன்...

சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தேறிய பின்னர்...வந்து உட்கார்ந்தேன்....இல்லையில்லை உட்கார வைக்கப்பட்டேன். 

ஆமாம்....கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தான் இருந்தது. எல்லோருமே புது முகம் என்னவர் உட்பட.... திரு திரு என்று முழித்துக் கொண்டு...என்னை சுற்றி நடப்பதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

"அந்த ஜமுக்காளத்தை இங்கே போடு."

" இலை வாங்க சொன்னேனே கணேசா ...வாங்கிட்டியா?"

"அக்கா ....சாம்பாரில் உப்பு சரி தானே! பாத்து சொல்லுங்களேன்."

இப்படி வீடே பரபரத்துக் கொண்டிருந்தது. குனிஞ்ச தலை நிமிராமல் நானும், என்னை அவ்வப்போது பார்க்கும் அவரும்....அமர்ந்திருந்தோம்.

ஒரே அமர்க்களமாய் இருந்த கல்யாண வீடு..சட்டென்று அலர்ட் ஆனது.

தெருவிலிருந்து உறவினர் ஒருவர் வந்து," அத்தை வராங்க! அத்தை வராங்க!" என்று கட்டியம் கூறுவது போல் சொல்லவும்,

அடுக்களையிலிருந்து பெண்கள் , கூடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்கள் என்று எல்லோரும்,"வந்தாச்சா...அத்தை வந்தாச்சா!" என்று கேட்டதிலிருந்து, அவர்கள் எல்லோரும், பதட்ட நிலைக்கு செல்வது புரிந்தது.

அவரின் தூரத்துப் பெரியம்மா அருகில் வந்து," அத்தை வந்ததும், உடனே ஆசீர்வாதம் வாங்கி விடுங்கள்" என்று எங்களைப் பார்த்து சொல்லவும், 

"ஏன் உடனே கிளம்பி விடுவாங்களா?" வெடுக்கென்று கேட்க நினைத்ததை, அப்படியே முழுங்கினேன்.
( அவசியமில்லாமல், வாயைத் திறக்காதே!இது நீ வாழப் போகும் இடம்.என்று மைண்ட் வாய்ஸ் எச்சரித்தது.)

அந்த வி.ஐ.பி அத்தையை எல்லோரும்,என் மாமியார் உட்பட தடபுடலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். என்னவர் 'அத்தை அத்தை' என்று தனி மரியாதை காண்பிக்கவும்.....

பிறகு ஒரு நாள் தனிமையில் ,"அந்த அத்தை என்றால் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமோ?" நான் கேட்க....சின்னதாய் ஒரு ஸ்மைல் செய்து விட்டு," அப்படியும் வைத்துக் கொள்ளலாம். "என்றார்.

"அப்படினா" நான் கேட்க...

"போகப் போகத் தெரியும்" என்று அவர் சொல்ல ...அதன் அர்த்தம் ஒரு சில மாதங்களிலேயே புரிந்து போனது.

" வி.ஐ.பி அத்தை மிகப் பெரிய ட்ரபிள் ஷூட்டர்" 
(அந்த வி.ஐ.பி அத்தையிடம் நான்  வசமாய் சிக்கி மீண்டது மிகப் பெரிய கதை)

சிக்கி மீண்ட பின் " அத்தையிடம் ஜாக்கிரதையாய் இரு" என்று என்னை அன்றே நீங்கள் அலர்ட் செய்திருக்கலாமே " என்று அவரிடம் கேட்டதற்கு,

அவர்," அத்தை நல்ல மனுஷி தான். எப்பவாவது கொஞ்சமே கொஞ்சம் எடக்கு மடக்கா ஏதாவது சொல்வார் அல்லது செய்வார்." என்று அலட்சியமாக சொல்ல...

விட்டுக் கொடுக்காமல் பேசும் அவரைத் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை வருடங்களாகியும், இப்பக் கூட அவர் சொன்னதையேதான் சொல்கிறார் (வி.ஐ.பி அத்தை பற்றி ) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த ஆண்களே இப்படித் தான் போலிருக்கு....இந்தக் காலம் என்றில்லை...கம்பர் காலத்திலிருந்தே இப்படித் தான் என்று நினைக்கிறேன்.

பின் என்ன? கம்பன் சொல்வதைப் பாருங்களேன்...

சீதா கல்யாணம் முடிஞ்சாச்சு..திவ்ய தம்பதியர் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்!

இப்ப கவனிங்க..

முதல்ல தசரதன் காலில் விழுந்தாச்சு. 

ஆச்சா?

இப்ப யார் கால்ல விழனும் ராமனும், சீதையும்? சொல்லுங்க...

வரிசைப் படி கோசலை கால்ல தானே! 

அதான் இல்லையாம் ...சீதை கரம் பற்றி அழைத்து நேரே போய்  கைகேயி காலில் விழுகிறானாம்  ராமன்.
(கோசலை...பாவம் என்ன நினைத்திருப்பாள்? )

அப்புறம் தான் கோசலையிடம்  ஆசீர்வாதம் வாங்குகிறானாம்.

அதற்குப் பிறகு சுமித்திரை... 

எதற்கு ராமன் (காலில் விழும்)ஆர்டரை மாற்றினான் என்றால்," கைகேயிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்." என்பதை சீதைக்கு சொல்லாமல் சொல்கிறானாம் ராமன் .

கொஞ்சம் வாயைத் திறந்து ராமன் சொன்னால் தான்  என்னவாம். "கைகேயி அம்மா ட்ரபிள் ஷூட்டர். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்."என்று வெளிப்படையாக சொல்லியிருந்தால் சீதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கைகேயிக்கு  'ஐஸ்' வைத்திருப்பாள் இல்லையா. காட்டிற்குப் போக வேண்டிய நிலையே வந்திருக்காது அல்லவா? 

அதனால் தான் சொன்னேன் ராமன் , கம்பன் முதல்  இன்றைய ஆண்கள் வரை தங்கள் வீட்டு உறவினரை விட்டே கொடுக்க மாட்டார்கள்...

கம்பன் எப்படி அதை சொல்கிறான் பாப்போமா?

பால காண்டம். கடி மணப் படலம் . பாடல் எண் 1339

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.



இராமன் சீதையுடன், கேகய மன்னனின் மகளான கைகேயியின் ஒளி மிகுந்த திருவடிகளை, தன்னைப் பெற்ற தாயான கோசலையினிடத்துக் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும், மிகுந்த அன்புடனே வீழ்ந்து வணங்கி,பின்பு தன்னைப் பெற்ற தாயான கோசலையின் இணைடிகளைத் தலைக்கு அணியாக சூடி, அதன் பின்பு உளத் தூய்மை மிக்கவளான சுமித்திரையின் திருவடிகளை வணங்கினான்.

கம்பனின் ராம காவியம் படிக்கப் படிக்க வியந்து போகிறேன்.
நீங்களும் தான் இல்லையா?

மீண்டும் ஒரு கம்பனின் பாடலுடன் சந்திப்போமா?



உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்