Sunday 10 November 2019

கம்பனும் 'Cat Walk'கும்.( கம்பன் என்ன சொல்கிறான்?-10)

Image by S. Hermann & F. Richter from Pixabay


திருமதி ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்ததிலிருந்து நம் ஊர் பெண்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.'Make up' போடுவதென்ன? 'Cat Walk' செய்வதென்ன  என்று பாடாய்  படுகிறார்கள்.

"Cat Walk " நமக்கு புதிதே இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்கள்.. 
"ஓ...அது உன் ஆராய்ச்சியின் முடிவா?" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நானாக எதையும் சொல்லலைங்க...
கம்பர் சொல்வதை வைத்து தான் அந்த முடிவிற்கு வந்தேன்...
வாருங்கள் கோசலை நாட்டுக்குப் போனால் புரிந்து விடும்.

Over to Kosalai now...
தூரத்தில் சிவப்பும் வெள்ளையாக தெரிகிறதே... என்னவாயிருக்கும்? கிட்டே போன பின்பு தான் புரிந்தது. சிவந்த கால்களையுடைய அன்னங்களின் கூட்டம்..இவ்வளவு அன்னங்களா? எங்கேருந்து இப்படி படையெடுத்து வந்திருக்கின்றன? வியந்து போனேன்.

'என்ன பாக்குற? ' கோபம் கொப்பளிக்க கேட்டது அன்னம்.
(இதென்ன அன்னம் பேசுதே! வியப்பிற்கு மேல் வியப்பு...)

'ஒண்ணும் இல்ல ...நீங்கள் இப்படி வரிசையாக Cat Walk செய்வது கண் கொள்ளா காட்சியா இருக்கு.' சொன்னேன்

'க்கும்...' தன் அழகிய கழுத்தை இன்னும் ஒய்யாரமாக திருப்பிக் கொண்டது அன்னம்.
'நாங்கள் அழகா நடக்க 'practice' செய்யறோம்.நீ போ அந்த பக்கம்.' என்னை விரட்டியது தலைவி அன்னம்.

திருநெல்வேலிக்கே அல்வாவா? பெண்கள், அன்னத்தின் நடையைப் பழகுவார்கள்-கேள்விப் பட்டிருக்கிறோம்.
ஆனால் அன்னங்களே நடை பழகுமா? ஒரே குழப்பமாயிருந்தது எனக்கு....
'நீங்கள் நடந்தாலே அழகு தான் . அப்புறம் எதற்கு நீங்களே Cat Walk பழக வேண்டும்?' கேட்டேன்..

'நீ தான் சொல்ற எங்க நடை அழகுன்னு. உங்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேற மாதிரில்ல சொல்றாரு..' தலைவி அன்னம் வருத்ததுடன் சொல்ல ...

கம்பர் என்ன சொன்னாரோ தெரியலையே... மீண்டும் எனக்குக் குழப்பம்.. அன்னமே என் குழப்பத்தையும் தெளிவு படுத்தியது..

'கோசலை நாட்டுப் பெண்கள் நடையைப் போல் அன்ன நடை இருக்கு. என்று சொல்கிறார் உங்கள் கவிச்சக்கரவர்த்தி.. அதாவது எங்கள் நடையை விடவும், கோசலை நாட்டுப் பெண்கள் நடை மிக அழகு... என்பது தானே அதற்கு அர்த்தம்? அதைத் தானே கம்பர் சொல்ல வருகிறார்?' அன்னம் மிக்க வருத்ததுடன் கேட்டது.

என்னிடம் பதில் இல்லை... அன்னம் தொடர்ந்தது...' அதற்குத் தான் 'Cat Walk' பழகுறோம் நாங்கள்..உனக்கு இப்ப எல்லாம் புரிஞ்சு போச்சா? '

மண்டையைப் பெரிதாய் ஆட்டி வைத்தேன்... பிறகு கேட்டேன்,'எல்லாம் சரி.....இத்தனை அன்னங்கள் நீங்கள் இங்கே பயிற்சியில் இருந்தால் உங்கள் குழந்தை குட்டிகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?'

வெடுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்த அன்னம்,' உன் கரிசனம் எங்களுக்குத் தேவையேயில்லை. ஆனாலும் சொல்கிறேன், எங்கள் குழந்தைகளை (வயல் சேற்றில் இருக்கும்) தாமரைப்பூ மெத்தையில் படுக்க வைத்திருக்கிறோம்.'

இலவம் பஞ்சு மெத்தைத் தெரியும்.அதென்ன தாமரைப்பூ மெத்தை? மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் கம்பர் மேல் பயங்கர கோபமாக இருக்கும் அன்னத்திடம், மற்றொன்றையும் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தயங்கி, தயங்கி....மெதுவாகக் கேட்டேன்...
'அம்மாக்கள் இங்கே நடைப் பழக...அங்கே குழந்தைகளுக்குப் பசித்தால்.....?

'அதெல்லாம் அங்கிருக்கும் எருமை மாடுகள் எங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி விடும். நீ கவலைப் பட வேண்டாம்.' அன்னம் சொன்னது.

அன்னக் குஞ்சுகளுக்கு எருமைகள் பாலூட்டுமா?(Surprise after Surprise.)
 ஆ...திறந்த வாயை நான் மூடுவதற்குள்..

(Here comes the next shocking surprise...)
'அப்புறம்.... எங்கள் குழந்தைகள் தூங்க...அங்கிருக்கும் தவளைகள் தாலாட்டுப் பாடும். இந்த விவரம் போதுமா? இன்னும் ஏதாவது வேண்டுமா? இப்ப நாங்கள் எங்கள் பயிற்சியைத் தொடரலாமா? ' கோபத்துடன் அன்னம் என்னைப் பார்த்துக் கத்த, நான் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்...

பாவம் கம்பர் இப்படி அன்னங்களை அவமானப் படுத்தியிருக்க வேண்டாம்...

அன்னங்களை வெட்கப்பட வைக்கும் கம்பராமாயணப் பாடல் இதோ...
பால காண்டம். நாட்டுப் படலம்44
சேல் உண்ட ஒண்கணாரில் திரிகின்ற
செங்கால் அன்னம்
மால் உண்டநளினப் பள்ளி, வளர்த்திய
மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் 
 கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை 
  தாலாட்டும் பண்ணை.

மீன் போன்ற கண்களையுடைய கோசலை நாட்டுப் பெண்களைப் போல், திரிகின்ற சிவந்த கால்களையுடைய அன்னங்கள், வயல்களில் இருக்கும், அழகிய தாமரை மலர்களாகிய படுக்கையில் தங்கள் இளம் குஞ்சுகளை கிடத்தியிருக்கின்றன. அவைகளுக்கு, காலில் சேறு ஒட்டிய எருமைகள் (ஊரகத்து உள்ள) தன் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால், தானே சொரியும் பாலை அருந்தும். பச்சை நிறத் தேரைகள் தன் ஒலியால் தாலாட்டுப் பாட அவைகள் உறங்கி விடுமாம்.

கற்பனையில் கம்பனுக்கு இணை கம்பனே!
நன்றி! இன்னொரு கம்பன் பாடலுடன் வருகிறேன்.

1 comment:

  1. இதென்ன கம்ப ராமாயண ஆராய்ச்சி ?

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்