மாலை ஆறு மணிக்கு ' பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் 'என்று திருமதி தேவிகா அழகாய் அபினயத்துடன் ஜில்லென்று குளித்துக் கொண்டிருக்க , அதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் வியர்வையில் நனைந்து கொண்டிருந்தேன் . சரி, கொஞ்சம் காலாற நடப்போம் , காற்றும் கொஞ்சம் வாங்கி வருவோம் என்று செருப்பை மாட்டிக் கொண்டு வெளியில் வந்தேன்.
கேட்டைப் போட்டுவிட்டு தெருவில் நடக்க ஆரம்பித்தேன். " சர் " என்று ஒரு ஆட்டோ என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. பயந்து போய் பின் வாங்கினால் ஒரு குடும்பத்தையே சுமந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் மேல் விழ இருந்தேன்.
நல்ல வேளை அந்த மகானுபவர் "பிரேக் " அடித்தாரோ பிழைத்தேன். நான் மட்டுமா, ஸ்கூட்டர் குடும்பமும் தான் .
இந்த டிராபிக் , வீடுகள் , பிளாட்கள் நிறைந்த தெருவில் தான். மெயின் ரோட்டிற்கு சென்றால் நீங்கள் பார்க்கும் வண்டிகள் தான் எத்தனை, எத்தனை ?
சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்லும் கொரியர்கள் , ஸ்கூட்டரில் செல்லும் மத்திம வயதை எட்டிப்பிடிக்கும் ஆண்கள்,
ஸ்கூட்டியில் துப்பட்டாவால், கண்களை மட்டும் விட்டு விட்டு முகத்தை மூடிக்கொண்டு செல்லும் இளம் பெண்கள். அவர்களைப் பார்க்க முடிய வில்லையே என்ற கோபத்தில் பைக்கின் ஆக்சிலேரடரை ஒரு திருகு திருகும் இளம் வாலிபர்கள், ஹுண்டாய் , மாருதி, இன்னோவா , ஹோண்டா ,நிசான் , இண்டிகா, சுமோ ,நானோ , என்று கார்கள் கூட்டம். இதனிடையே பாவமாய் அங்கங்கே நகரும் அம்பாசிடர்கள்.
பல்லவனின் பெரும் குடும்பத்துடன் போட்டிப் போடும் தண்ணீர் லாரிகள் ,மீன் பாடி வண்டிகள், சிலிண்டர் சுமக்கும் மூன்று சக்கர வாகனங்கள் ,டெம்போக்கள் ...........இத்யாதி இத்யாதி.......ஹப்பா, மூச்சு வாங்குதே சொல்லி முடிப்பதற்குள்.......
இது எல்லாவற்றையும் ஒரு ஓரமாக நிற்கவைத்துவிட்டு முன்னேறும் கொண்டை வைத்த கார்கள் , 108 வண்டி ..........
நினைத்துப் பார்த்தால் ஒரு முப்பது வருடங்கள் முன்பாக இத்தனை வண்டிகள் இந்தியத் தெருக்களில் ஓடும் என்று யாராவது சொல்லியிருந்தால் கண்ண்டிப்பாக வாய் விட்டு சிரித்திருப்போம்.
நம் தெருக்களில் இத்தனை கார்களா? அதெல்லாம் சாத்தியமேயில்லை என்று அடித்து சத்தியமே செய்திருப்போம்.
ஆனால் இன்று ..........
உலகுக்கே சவால் விட்டுக் கொண்டு, குதித்து , உயரும் பொருளாதாரத்தினால் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்பை விட உயரத்தில் தான் இருக்கிறது.
நடுத்தர வர்க்கம் மெதுவாக கார், விமானப் பயணம் என்று முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது.
எல்லா தட்டு மக்களும் முன்பை விடவும் ஓரளவு வசதியாகவே உள்ளார்கள்.
அங்கொன்றும், இங்கொன்றும் தப்புகள் நடக்கலாம். பெருவாரியாகப் பார்த்தால் இந்தியா முன்னேற்றப் பாதையில் போய் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
சரி போதும்'" பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தான் கிட்டேயே என்ன பீற்றல்" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.ஏதோ காற்று வாங்க.......... என்று ஆரம்பித்து விட்டு கேள்விக்கு பதில் தெரியாத மாணவன் மாதிரி எதோ டிராபிக் ஜாம் என்று இழுக்கிறாளே என்று உங்களின் பொறுமையை சோதிக்கிறேனோ?
இந்த டிராபிக்கிற்கு நடுவே நீங்கள் கொஞ்சம் நடந்து வாங்களேன். ஒவ்வொரு வண்டியும் விடும் புகை ,அதில் கலந்திருக்கும் lead எத்தனை விஷமானது என்று உங்களுக்கே தெரியும். என்ன தான் pollution certificate எல்லாம் வாங்கிக் கொண்டு செல்லும் வண்டிகள் தான் என்றாலும் இந்தப் புகை இல்லாமல் நம் தெருக்களை நினைக்க முடிகிறதா? இந்தப் புகைக்கு நடுவில் நிஜமாகவே புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் கொசு மருந்து வண்டிகள் . இதில் எங்கே நல்ல காற்று கிடைக்கப் போகிறது.? காற்றே வேண்டாம் என்று முகத்தை கர்சீப்பினால் மூடிக் கொண்டு செல்பவர்கள் ஏராளம்.
எல்லா வித சங்கடங்களையும், சவால்கலிலும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு வளரும் தொழிற்சாலைகள் அருகில் இருக்கும் குடியிருப்புகளில் கேட்டால் அவர்கள் சொல்வார்கள் சுற்றுச்சூழலினால் அவர்கள் படும் அவஸ்தையை .
இந்தப் பிரச்சினை நம் நாட்டில் மட்டும் என்றெண்ணிக் கவலை வேண்டாம்.
நம் பொருளாதாரத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கும் சீனாவில்
இந்தச் சுற்றுச்சூழல் இன்னும் மோசமாக இருக்கிறதாம்.
நாளிதழ் ஒன்று சொல்கிறது.அங்கு , குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் எப்போதும் புகை பனிமூட்டம் போலவே இருக்கிறதாம்.இதனால் மக்கள் அங்கு முகமூடி அணிந்து நடமாடத்ட் தொடங்கியிருக்கிறார்கள்.
சீன அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் கூட இந்தப் புகை மூட்டத்திலிருந்து பெரிய விடுதலை எதுவும் கிடைத்தபாடில்லை.
இந்த நிலையை உபயோகபடுத்திக் கொண்டு 44 வயதாகும் " சென் குவாங்பியோ " என்ற தொழிலதிபர் காசு பார்க்கிறார் .. எப்படி என்கிறீர்களா?
ஆக்சிஜனைக் கேனில் அடைத்து விற்கறார். ஒரு கேனின் விலை நம்மூர் மதிப்பில் ரூ .40/ . இது வரை 80 லட்சம் கேன்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
" காற்றுள்ள போதே தூற்றிக் கொள் " என்பதை உண்மையாக்கி விட்டார் இந்த தொழிலதிபர்.
தண்ணீர்தான் காசு கொடுத்து வாங்குகிறோம் என்றால் இனிமேல் காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
image courtesy---google.