Monday 4 January 2016

கொத்தங்குடியின் வில் வண்டி -2.

கொத்தங்குடியின்  வில் வண்டி --1 படிக்க இங்கே க்ளிக்கவும் 


google image
 அறிவிப்பு. 
 பழைய நினைவுகளை  அசைபோடுவது மட்டுமே இத்தொடரின்  நோக்கம். இத்தொடரில் என்னுடன் பயணிப்பவர்கள்,  அசௌகர்யமாக உணர்ந்தால் தெரியப்படுத்தவும். பதிவை உடனே நீக்கி விடுகிறேன்.பாதுகாப்புக் காரணங்களுக்காக  பெயர்கள் கற்பனையே!

சரி. வாங்க கொத்தங்குடிக்குப் போவோம்.

கோமலில், பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் எங்களுக்காக ஆவலுடன் காத்திருந்த வண்டி ஓட்டுபவர் எங்கள் சாமான்களைப் பத்திரமாக வண்டிக்குள் ஏற்றியவுடன், மெத்தென்ற  பஞ்சு மெத்தை சீட்டில் நாங்களும் தாவி ஏறி  உட்கார்ந்தோம். 

ஏறியவுடன் விமானத்தில் வரும் அறிவிப்பைப் போல் வண்டி ஓட்டி  ஒரு அறிவிப்பை வெளியிட்டார். "பத்திரமாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள் பசங்களா .வண்டி குலுக்கலில்  கண்டிப்பாக உங்கள் பின்னந்தலை, அல்லது நெற்றி  அடிபடக் கூடும்". மாட்டு வண்டிப் பயணத்தில் பழக்கமானவர்களுக்கு தலையில் இடித்துக் கொள்ளாமல்  பிரயாணம் செய்யும் லாவகம் தெரியும். ஆனால், நாங்களோ  அவருடைய அறிவிப்பை அலட்சியம் செய்தோம். ஒரு சில வினாடிகளில் அதன் பலனை அனுபவித்தோம்.   என் தம்பிக்கு பின் மண்டையில் இடி  என்றால் எனக்கும், என் தங்கைக்கும்  நெற்றியில் . 
சரி .... பார்த்தான் என் தம்பி. . வண்டியை நிறுத்த சொல்லி வண்டி ஓட்டுபவருடன் , முன்னாலேயே உட்கார்ந்து கொண்டு வந்தான். அப்படியே அவரிடம் " எனக்கும் வண்டி ஓட்டக் கற்றுக் கொடுங்களேன்." என்று கேட்க ......


கற்றுக் கொள்ள அது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸா என்று கேட்பவர்களுக்கு, " சற்றுத் தப்பினாலும் குடை சாய்ந்து விடும் அபாயம் இதில் உண்டு. குடை சாய்ந்தால் சேற்றில் புரண்டு வீடு போய் சேர வேண்டும்.அதிர்ஷ்டமிருந்தால் அடிபடாமலும் தப்பிக்கலாம். "

வண்டியில் லாவகமாய் உட்கார்ந்துக் கொண்டு பயணிப்பது ஒரு சுகானுபவம் தான்.  "சிலுசிலு"வென்று  காற்றும்,  பச்சைப் பசேல் நெற்கதிர்கள்  பச்சை வெல்வெட் துணி போல்   காற்றில் அலையலையாய்  பறப்பது..... என்ன ஒரு அழகு. நம்மை " வா வா" என்று அழைப்பது போல் தோற்றமளிக்கும் . ஒற்றையடிப் பாதையில் "ஜல்ஜல்" என்று மாட்டு சலங்கையின் சப்தமும், ஓட்டுபவர்  செல்லமாய் மாடுகளை  அதட்டுவதும் .....

ஆஹா......அந்த நாளும் வந்திடாதோ என்று மனதை ஏங்க  வைக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல் வழியில் தென்படுபவர்களின் அன்பான விசாரிப்பு  சென்னை வாசிகளான எங்களை ஆச்சர்யப்படுத்தியது.. மெதுவாக எங்கள் வண்டி , வீடு போய்  சேர்ந்தது. சட்டென்று  கீழே குதித்தோம்.  நான்கைந்துப் படிகள் ஏறினால் வருவது  ஆலோடி /ஆளோடி . 
 மிக நீளமாக இருக்கும் அந்த ஆலோடியில் எண்ணிக்கையிலடங்கா முறை ஓட்டப்பந்தயம் நாங்கள் நடத்திக் கொண்டிருந்திருப்போம். 

ஒலிம்பிக்ஸில்  பங்கேற்பது போல் தான் தினமும் அதில் ஓட்டப்பந்தயப் பயிற்சி  நடக்கும், ஆனால் இதுவரை  நாங்கள் யாரும் மெடல் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கவில்லை. 

பார்க்கலாம்......... வருங்காலத்தில் எங்களில் ஒருவர் அந்த அதிசயத்தை  நிகழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவ்வளவுப் பயிற்சி எடுத்திருக்கிறோம். 

அதற்குப் பிறகு எதிர்படுவது இரண்டுப் பக்கமும் பெரிய திண்ணை. பிறகு உள்ளே நுழையும்  வாசல். வாசலில் இரண்டுப் பக்கமும் விளக்கு வைக்கும் மாடம் மிக நேர்த்தியாக  அழகாக வடிவமைக்கப் பெற்றிருக்கும்.

என்னுடன் நீங்களும் உள்ளே வாங்களேன். அட.... ஜாக்கிரதை  தலையை சற்றே குனிந்து வாருங்கள். இல்லை நெற்றிப் புடைத்து விடும். அந்த ஹாலில் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். வீ ட்டிற்குப் போகிற நேரம் பொறுத்துத் தான் காபி கிடைக்கும். இல்லை என்றால் பெருங்காய வாசனைத்  தூக்கலாக இருக்கும் மோர் தான்.

காபி காலையிலும் மாலையிலும் தான் . அதுவும் பால்  படு  ஃ பிரஷ். பால் கறந்த பத்துப் பதினைந்து நிமிடங்களில்  நல்ல திக்கானப்  பாலில் காபி  சாப்பிடலாம். காபி சுவையில்  மெய் மறந்து போனேனே. ஹாலின் இரண்டு பக்கமும்  "காமிரா அறை " என்று சொல்லப்படும்  அறைகள்  இருக்கும். 

ஒரு காமிரா அறைக்குள்   நாங்கள் செல்ல முடியாது. " Right of Admission Reserved."  போர்டு மாட்டாத குறையாய்  இருக்கும். பேரன் பேத்திகள் அனைவருக்கும் அது கொஞ்சம் மர்மம் தான். இன்று வரை அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.  என்ன இருக்கலாம் என்கிற ஊகம்  பிய்த்துக் கொண்டு போகும். அதனுள் இருப்பது,  பாட்டியின் பொக்கிஷங்கள் என்றும், இல்லையில்லை  தாத்தாவின் சொத்துப் பத்திரங்கள் என்றும்  நாங்கள் வாதிட்டுக் கொள்வது வாடிக்கை.
இன்னொரு காமிரா அறையில் தோப்பில் பறித்தத்  தேங்காய்கள்  குவிந்து இருக்கும். 

ஹாலிலிருந்துப் பார்த்தாலே தாழ்வாரம் பிறகு முற்றம் தெரியும் . முற்றத்தை ஒட்டி  ஒரு தொட்டி. அது நிறைய தண்ணீர் நிரம்பி  இருக்கும். நிலா வெளிச்சத்தில் அந்த முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு,  பேரன், பேத்தி அனைவருக்கும் பாட்டி கையில் உருட்டிப் போடும் தயிர் சாதமும், வத்தக் குழம்பின் மணமும் இன்னும் கையில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சித்தி, மாமாக்கள், அவர்களுடைய குடும்பம் என்று இவ்வளவு பேரும் இருப்பதால் கொண்டாட்டத்திற்குக் குறைவேயிருக்காது. கருத்து வேறு பாடுகளும் மிக மிக சகஜம். அதையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதேயில்லை. 

அந்த தண்ணீர் தொட்டி, எனக்கும் என்  தம்பிக்கும் திட்டு வாங்கிக் கொடுத்த நிகழ்ச்சி ஒன்று சட்டென்று  நினைவிற்கு வருகிறது..

ஒரு கோடை விடுமுறை . நாங்களும் , சித்தியின்  குடும்பமும் அங்கு இருந்தோம்.

தங்கை அகிலாவும், சித்தியின் பெண் அம்புஜாவும்  இருவருக்கும் வயது வித்தியாசம் பெரிதாக இல்லை. பார்ப்பதற்கு, ஒரே அளவாக இருப்பார்கள். இருவரும்  ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். தண்ணீர் தொட்டியில் நீர் தளும்பிக் கொண்டு இருந்தது. அதில் பேப்பரில் படகுகள் செய்து விட்டு இருவரும்  விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

" நீயும் நானும்  ஒரே கலர் கவுன் !" என்று ஒருவரையொருவர் கிள்ளிக்  கொண்டே படகுகள் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 நான், என் தம்பி, சித்தியின் பையன் கார்த்திக் 
 எல்லோரும் ஹாலில் அமர்ந்து கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் எல்லோரும் நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பவர்கள். நாங்கள் விளையாடும் இடத்திலிருந்துப்  பார்த்தால் எங்களுக்குத் தண்ணீர் தொட்டித் தெரியும்.

கேரம் சுவாரஸ்யமாகப் போய் கொண்டிருந்தது. பெரியவர்கள் எல்லோரும் அவரவர்  வேலையில் மூழ்கி இருந்தார்கள். நான் சீரியசாக சிவப்புக் காயினிற்கு, ஃ பாலோ  ஆன் செய்ய முனைப்பாக போர்டையே பார்த்துக் கொண்டிருந்த நேரம்.

" தொபுக்கடீர்  " என்று ஒரு பெரிய சத்தம். சட்டென்று கவனம் கலைந்து , திரும்பிப்  பார்த்தேன் . பதறி விட்டேன். அப்படியே ஒரே ஓட்டமாக "அகிலா" என்று கத்திக் கொண்டே முற்றத்தில்  குதித்தோட, என் பின்னாடியே என் தம்பியும், கார்த்திக்கும்    குதிக்க .....
அதற்குள்  சித்தி ஓடி வந்து, தண்ணீர் தொட்டியில் விழுந்தவளைத் தூக்கி விட்டு விட்டார். 

மூச்சுத் திணறி, வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் வடிய, வடிய  தொப்பலாக நின்றுக் கொண்டிருந்தாள் அம்புஜா. தண்ணீர் தொட்டியில் தலைக் குப்புற விழுந்தது அம்புஜா. அப்படி என்றால்  அகிலா எங்கே என்று   சுற்று முற்றும் பார்க்க , தாழ்வாரத் தூண்  ஓரமாக " நான் தள்ளி விடலை. நான் அம்புஜாவைத் தள்ளலை " என்று பெரிதாக அழுதுக் கொண்டு நின்றிருந்தாள் .அம்புஜாவிற்கு முதலுதவிகள் செய்துவிட்டு, எல்லோருமாக அகிலாவை சமாதானப் படுத்தினோம் . பயம் நீங்க இருவருக்கும் "கொழு மோர்" காய்ச்சிக் கொடுத்தார் பாட்டி.
 யாரும் தண்ணீர் தொட்டிப் பக்கம் தலை  வைத்துப் படுக்கக் கூடாது என்கிற உத்தரவும்  அமுலுக்கு வந்தது.

விஷயம் ஒரு வழியாய் நல்லபடியாய் முடிந்தது என்கிற திருப்தியில் , அதைப் பற்றி அன்று மாலை  பெரியவர்கள் எல்லோருமாக திரும்பவும் பேசிக் கொண்டிருந்தார்கள் .
நானும் என் தம்பியும், சின்னவர்களாய், லக்ஷணமாய்  வாயை முடிக் கொண்டு இருந்திருக்கலாம். 

ஆனால் விதி யாரை விட்டது? சொல்லுங்கள்......

 சும்மா இல்லாமல் நான் தான் ஆரம்பித்தேன். " முதலில் நான் கூட  பயந்து போய் விட்டேன் . ஒரே கலர் கவுன் வேறேயா.....தண்ணீரில் விழுந்தது அகிலான்னு  பயந்து விட்டேன்.. இல்லடா." என்று என் தம்பியைத் துணைக்கு அழைக்க , அவனோ" விழுந்தது அகிலா இல்லை என்றதும் தான் எனக்கு மூச்சே  வந்தது." என்று ஆமோதிக்கவும் . எங்கள் சித்திக்கு எவ்வளவுக் கோபம் வந்திருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை.

"அபப்டி என்றால் அம்புஜா விழுந்தால் உங்கள்  இருவருக்கும் பரவாயில்லை இல்லையா?அகிலா மட்டும் தான் உங்களுக்குத் தங்கையா? அம்புஜா தங்கை இல்லை . அப்படித்தானே. அக்கா....... பார் எப்படி இருக்கிறார்கள் இவர்கள் இருவரும். சென்னை வாசிகளே இப்படித் தான் சுயநலம் ஜாஸ்தி " என்று எங்கள் அம்மாவிடம் சித்தி வத்தி வைக்க , அம்மா முறைக்க ... நாங்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து அப்பொழுது எஸ்கேப்...

  ஆனால் அதற்காகப் பிறகு  அம்மாவிடமிருந்து 
 லக்ஷார்ச்சனைக் கிடைத்தது தனிக் கதை.

இதை விடுங்கள். இதெல்லாம்  ஜுஜுபி  என்பது போல் நான்   பேயிடமே  அறை  வாங்கிய கதை  ஒன்று இருக்கிறது.. 

பேயறை  இல்லைங்க...... உண்மைப் பேயிடமே அறை  வாங்கியக்  கதை சொல்கிறேன். ............................................................தொடர்ந்து வாருங்கள்.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்