Friday 18 November 2016

பிரியாவும் , ஔவையாரும்

"நீ இந்த புடைவையை எங்கே வாங்கினாய்? " பிரியா  கேட்க ,  நான் சற்றுப் பெருமையுடன்  என் புடைவையைப் பார்த்துக் கொண்டேன்.

" என்  கணவருடன், நான் ஷாப்பிங்  செய்த போது, இந்தக் கலரும், டிசைனும், நன்றாக இருக்கும் என்று அவர் தான் எடுத்துக் கொள்ள சொன்னார் பிரியா.. நான் அரை மனதுடன் தான் எடுத்துக் கொண்டேன், உனக்குத் தான் தெரியுமே . இந்தக் கலரில் நான் வாங்கவே மாட்டேன் என்று." சொல்லி முடிக்கவும்,

google image


சர்வர் நுரை பொங்கும் காபியை எங்கள் முன்னால் வைக்கவும் சரியாயிருந்தது. காபியின் மணம் மூக்கைத் துளைத்தது. இருவரும் பேச்சைப் பாதியில் நிறுத்தி  விட்டு காபியைக் குடித்து முடித்தோம். ஹோட்டல் பில்லைக் கட்டி விட்டு, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம். இருவரும் இருப்பது ஒரே குடியிருப்பு வளாகம். வெவ்வேறு பிளாக்.

என் பிளாக்கைத் தாண்டி தான் அவள் வீட்டிற்கு போக வேண்டும். அதனால் வாயேன் கொஞ்ச நேரம் பேசி விட்டுப் போகலாம் என்று வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும், ஃபேனை  திருப்பி விட்டு உட்கார்ந்தோம்.

பேச்சு அங்கே இங்கே சுற்றி , மீண்டும் என் புடைவைக்கே வந்தது.
பிரியா ,"  என் கணவர் புடவைக் கடைப் பக்கம் திரும்பிப் பார்க்கக்  கூட மாட்டார்."  என்று அலுத்துக் கொண்டாள்.
சட்டென்று அவளுக்கு  ஏதோ நினைவிற்கு வர,

" இவர் போன வாரம் என்ன செய்தார் தெரியுமா? இங்கே முதியோர்கள் எல்லோரும் சேர்ந்து கிளப் ஆரம்பித்திருக்கிறார்கள் இல்லையா?." என்று தொடர்ந்தாள்.

" ஆமாம்."

"அவர்கள் எல்லோரையும்  இவர் வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்தார்."

" அதனால் என்ன? நீயும் உட்கார்ந்து, அவர்களோடு  அரட்டை அடிக்க வேண்டியது தானே பிரியா.." இது நான்.

" என்ன அரட்டை வேண்டியிருக்கு சொல்லு ? அரசியல் பேச எனக்கு முடியாது.  அரட்டையோடு  விட்டாரா இவர்? எல்லோரும் காபி குடித்து விட்டுப் போனால் தான் ஆயிற்று என்று சொல்லி விட்டார். " சொன்னாள் பிரியா.

"காபி தானே பிரியா! நீயோ சமையல் ராணி. இதெல்லாம் பெரிய விஷயமா என்ன உனக்கு?"

"அதெல்லாம் சரி ராஜி. காபி போட பால் வேண்டுமா இல்லையா ? சொல்லு. . எப்பவும் ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா  இருக்கும் . நேற்று ஒரு பாக்கெட்  பால் பிரிந்து போனது. அது இவருக்கும் தெரியும். நாங்கள் இருவர் தானே. இருக்கும் இரண்டு டம்ளர் பாலை வைத்து  சமாளித்துக் கொண்டால் மீண்டும் நாளைக்குப் பால் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருக்கும் இரண்டு டம்ளர் பாலில்  எட்டு   பேருக்குக் காபியா சொல்லு ."

"கஷ்டம் தான் " ஒத்துக் கொண்டேன்.
"ஆண்களுக்கு நம் கஷ்டம் புரியாது பிரியா. எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாமே . என்னிடம் பால் இருந்தது.நான் கொடுத்திருப்பேனே.  ."
" அப்புறம் எப்படி சமாளிச்சே ?" கேட்டேன்.

"இதில் ஷர்மாவும்,  கோபாலும் வேண்டாம்.... எங்களுக்குக் காபி வேண்டாம் என்று கெஞ்சி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் , அதெப்படி  நீங்கள் வேண்டாம் என்று சொல்லலாம் . எங்கள்  வீட்டுக் காபி  ரொம்பவே  நல்லா இருக்கும். பிரியா , நீ காபி போடு. அவர்கள் குடிப்பார்கள்  "  என்று
மகாராஜா, சேவகனைப்  பார்த்து  சொல்வது போல்,எனக்கு ஆர்டர் போட , என்ன செய்வது என்று புரியாமல்   நான் முழிக்க, அதற்குள்  ஷர்மாவிற்கு  வந்த போன் தான் ஆபத்பாந்தவனாய்  காப்பாற்றியது.

"அவசர போன் என்று அவர் கிளம்பி விட அவருடன் இன்னும் இரண்டு மூன்று பேர் போய் விடவும், ஐந்து பேர் தான் இருந்தார்களா....
டீ போட்டு சமாளித்தேன்." என்று முடித்தாள்.

"அப்பாடி.... ஒருவழியாய்  சமாளித்தே பிரியா " நான் பெருமூச்சு விட....

"அப்புறம் நடந்ததைக் கேளு ..."பிரியா தொடர்ந்தாள்.

"எல்லோரும் போன பின்பு, என்றுமில்லாத திருநாளாய்,  இவர்  டீ குடித்த டபரா, டம்ளர் எல்லாம் எடுத்து வந்து சிங்க்கில்  போட்டு,  விம் கொடு .... நானே தேய்த்து விடுகிறேன் என்று என்னிடம் சொல்கிறார். இவர் கிச்சனில் எனக்கு உதவி செய்கிறாரா........ ? அசந்து விட்டேன் ராஜி...பிறகு தான் எனக்குப் புரிந்தது .. என்னை சமாதானப்படுத்துகிறாராம். " கோபத்தோடு சொன்னாள் பிரியா .

பிரியாவின் அன்புக் கணவர்  நிலையை நினைத்து எனக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தேன். நல்ல வேளை . சில நிமிடங்களில்  பிரியா கிளம்பி விட்டாள்.

இத்தனயும்  கேட்டுக் கொண்டு உள்ளிருந்து என்னவர் வெளியே வந்து ," உன்  
பிரண்ட்  ,  அனந்துவை( பிரியாவின்  கணவர்) ஒரு வழி  பண்ணி  விட்டாற் போல் தெரிகிறதே, என்று  சொல்லவும்  நான் அவரிடம் சொன்னேன்,

"இன்று,  நேற்றல்ல ...... விருந்தாளிக்காக  மனைவியிடம்  மாட்டிக் கொள்ளும் கணவர்கள்,  ஔவையார் காலத்திலிருந்தே இருக்கிறார்கள். "

"உனக்கு எப்படித் தெரியும்?'

ஔவையார் சொல்லித் தான் .

" ஓ....ஔவையாரை வழியில் பார்த்தாயா ? அப்பொழுது உன்னிடம் சொன்னாரா  இந்த மாபெரும் தத்துவத்தை.?" கிண்டலடித்தார்  இவர்.

"நான் பார்க்கவில்லை,....."   என்று தொடர்ந்தேன்
" ஔவையாரை, வழியில் பார்த்துத், தன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டால் தான் ஆயிற்று என்று  அழைத்து செல்கிறான்  ஒருவன்.  ஆனால் அதற்காக மனைவியிடம்,  அவன்  முறத்தால்  அடி வாங்கியதை  , பொல்லாத கிழவிப்  பார்த்து  விட்டு ஒரு பாட்டுக்  கட்டி விட்டாள் பாருங்களேன்."என்றேன்.


"இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா டோடத் தான் "


(இப்பாடலை தமிழ் இணையக் கல்விக் கழகம்  பக்கத்தில்  காண இங்கே கிளிக்கவும். நன்றி www.tvu.org)

"ஔவையாரை விருந்தினராக  அழைத்து சென்றவன், உள்ளே தனிமையில் தன மனைவியை தாஜா செய்கிறானாம். எப்படி என்கிறீர்கள்.? மனைவிக்குத் தலையை சீவி, அதோடு   தலையிலிருந்து, ஈர், பேன் எல்லாம் எடுத்து விட்டு, முகத்திற்கு மேக்கப் போட  உதவி செய்து, பின்னர் மெதுவாகத் தயங்கி, தயங்கி  ஔவையார் விருந்துக்கு வந்திருப்பதை   சொல்கிறான்.  அதைக்  கேட்டதும் . அவளுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லையாம்.  கணவனை திட்டித் தீர்த்து . ஒரு ஆட்டமே ஆடிவிட்டாள் என்கிறார் ஔவையார்.
அப்படியும் அவள் கோபம் அடங்கவில்லையாம்.  முறம் , அதுவும் பழைய  முறத்தால்  கணவனை வெளுத்து வாங்கி விட்டாளாம். ஓட ஓட  விரட்டி  அடித்தாளாம். "

என்று  முடிக்கவில்லை நான்......
.
 " இப்பொழுது என்ன சொல்ல  வருகிறாய்? அனந்துவை  ஜாக்கிரதையாக இருக்க சொல்லணுமா ? " என்னவர் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ....

அவரைப் பார்த்து, "பாட்டு சொன்னால் ரசிக்கத் தெரியணும்,  கேள்வி கேட்கக் கூடாது.." சொல்லி விட்டு  நகர்ந்தேன்.


Thursday 3 November 2016

அந்த சில நிமிடங்கள்......


google image
பைக் பள்ளியை நெருங்க நெருங்க வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பற்பல  வண்ணங்களில்  அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.

பள்ளி வாசலில்  இறக்கிவிடப்பட்டேன்.

"பயமாயிருக்கிறது.."
கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

"எதற்கு?"

"ஃபெயிலாயிட்டா ?"

'அப்படி எல்லாம் ஆகாது .தைரியமாய் போ.""

"சரி ...".கால்கள் பின்ன  மெதுவாக நடந்து முன்னேறினேன்.

பள்ளி வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் காற்றில்  அசைய, அதிலிருந்த காகம் கரையத் தொடங்கியது.

'அந்தக் காகமாய் மாறிவிடக் கூடாதா ?' என்கிறத் தவிப்பு மனதிற்குள்

நான்  படித்தது எல்லாம் மறந்து விட்டது போன்ற உணர்வு.

'குருபிரம்மா குரு விஷ்ணு  மகேஸ்வரஹா .....'. மாணவிகளின் கோரஸ் குரல் பளீரெனக் கேட்டது.
இன்னும் பயம் அப்பிக் கொண்டது.

 நானும் கூட சேர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டேன். 'என்னைக் காப்பாற்றுப்பா  ஆண்டவனே .'
திரும்பிப் பார்க்காமல் ஓடி விடலாமா என்று கூடத் தோன்றியது.

இருக்கும் தைரியத்தையெல்லாம் சேர்த்துப் பிடித்துக் கொண்டு , தலைமையாசிரியையின்  அறையை நெருங்கினேன்.

உள்ளே செல்லலாமா என்று யோசிப்பதற்குள்.,
பள்ளி  சிப்பந்தி , "காலை அசெம்ப்ளி முடிந்து, மேடம் வரும் வரை இங்கு அமருங்கள் ." என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

பத்து நிமிடம் ஓடியது. தலைமையாசிரியை  மாணவிகளுக்கு கொடுத்த  அறிவுரைகள் காதில் விழுந்தன. மனம் தான் அதில் செல்லவில்லை.

" இப்பொழுது கூட  நேரமிருக்கிறது  சட்டென்று எழுந்து வாசல் வழியே போய் விடு" என்று மனம்  அறிவுறுத்தியது.

அடுத்த நிமிடமே அதே மனம்," அப்படி பயப்பட என்ன இருக்கிறது? " என்று சமாதனப் படுத்த  இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தேன்.

பள்ளி மாணவிகள் வரிசையாக தங்கள் அறைகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.நானும் அவர்களில் ஒருத்தியாக சட்டென்று மாறிவிடக்  கூடாதா ? என்று மனம்  ஏங்க....

பள்ளி சிப்பந்தி என்னிடம் வந்து, " நீங்கள் உள்ளே செல்லலாம். " என்று சொல்ல ,தலைமையாசிரியை என்னைத் தாண்டி உள்ளே சென்றதைக் கூட கவனியாமல் குழப்பத்தில் இருந்திருக்கிறேன்.

மெதுவாக உள்ளே சென்றேன்.

தலைமையாசியையை என்னை வரவேற்று, "வாழ்த்துக்கள் " சொல்லி விட்டு, பள்ளி  சிப்பந்தியைப் பார்த்து," நல்ல நேரம் முடிவதற்குள் அட்டெண்டஸ்  ரெஜிஸ்டரில்  புது டீச்சரிடம்  கையெழுத்து  வாங்கி விடு. அப்புறம்  நளினி டீச்சரிடம் (AHM) அழைத்துக் கொண்டு போ" என்று சொன்னார்.

என்னுடைய நீண்ட ஆசிரியப் பணியின் முதல் சில நிமிடங்கள் தான் இது வரை நீங்கள் படித்தது.. என்னிடம் படிக்கப் போகும்  மாணவிகளில் பன்னிரெண்டாம்  வகுப்புப் பொதுத் தேர்வு மாணவிகளும் அடங்குவர்.

நான் நல்லபடியாகப் பாடம் நடத்த வேண்டுமே என்கிற பதைபதைப்புடன் இருந்தேன். இது நாள் வரை மாணவியாக மட்டுமே இருந்தவள் , ஆசிரியையாக பொறுபேற்ற போது எனக்குள் தோன்றிய மனப் பதட்டம் .

என்னால் அவர்களின்  வளமான எதிர்காலத்திற்கு  எந்த விதத் தீங்கும் நேர்ந்து விடக் கூடாதே என்கிறக் கவலையுடன் தான் என் பணியை ஆரம்பித்தேன்.

 எனக்கும், என்னவருக்கும் அன்று நடந்த உரையாடல் தான் நீங்கள் மேலே படித்தது.

ஆனால் ,'ஸ்டார்ட்டிங்  ட்ரபிள்' மட்டுமே என்னிடம் இருந்திருக்கிறது என்று எனக்கே புரிய ஒரு சில நாட்களானது..  அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்க  நேரமில்லாமல்  முழு ஈடுபாட்டுடன்  பணியைத் தொடர்ந்தேன்.

மிகுந்த மனத் திருப்தியுடன் பணியிலிருந்து விருப்ப( உண்மையில் மனமேயில்லாமல் தான் ) ஓய்வு பெற்றேன் .

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்