Wednesday 24 December 2014

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-- 1

                                ஹூ  ஆர்  யு?

courtesy--google images

 ராசி அடிக்கும் லூட்டிகளும் ,, அதில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷ்ணுவைப் பற்றியும் " அப்பாவி விஷ்ணு " மின்னூலில் படித்திருப்பீர்கள்.
இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் ராசியிடம் விஷ்ணு மாட்டிக் கொண்டு முழிப் பிதுங்கிப் போனார். அதைப்பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டாமா நீங்கள்? 

விசா வாங்கப் போனதிலிருந்து  ஆரம்பிக்கிறது ராசியின் லூட்டி. அங்கிருந்து ஆரம்பிக்கிறேன்.

ராசி அமெரிக்காவில் , அவள் மகன் வீட்டிற்குத் போகப் போகிறாள். விசாவிற்கு   வேண்டிய எல்லா ஆவணங்களையும் அவன்  அனுப்பி விட்டான்.  மேலே நடக்க வேண்டியவைகளைப் பற்றி ராசி ஆலோசிக்க ஆரம்பித்தாள்.  யாரிடம் தெரியுமா? விஷ்ணுவிடம்...என்று நினைத்தால் அது உங்கள் தவறு. அவருக்கு   என்ன தெரியும் ? அங்குப் பேசும் ஆங்கிலம்  இவருக்கும் தெரியும். அதைத் தவிர வேறென்னத் தெரியும் என்பது போல் விஷ்ணுவை ஒரு பார்வைப்  பார்த்து விட்டு, ஹால் மூலையில்  சாதுவாய் சுருண்டிருந்த போனை நோக்கிப் போனாள். இதற்கு முன்பாக  அமெரிக்கா  சென்று வந்திருந்தத் தன்  தோழிகளுக்குப் போன் செய்து, விசாரிக்கத் தான். .

ஒவ்வொருத்தியும் முதலில்  ராசியைக் கேட்டது ," விசா கிடச்சாச்சா ? "

அதற்குத் தானே  அவர்களிடம் பேசுகிறாள் ராசி. எல்லோரிடமும் விசாரித்து ஏஜண்ட்  பேரை
பேப்பரில்  எழுதிக் கொண்டே வந்தாள் .  பத்து விசா  ஏஜண்சி பேராவது  அவள் கையில் இருக்கும். பக்கத்திலேயே   எந்த ஏஜண்ட்  யார்  பரிந்துரைத்தது  என்கிறக்  குறிப்புடன்  எழுதி ....  போனை வைத்தாள் .

பிறகு  லல்லி, ஜானகி, ஸ்ரீதேவி,  இவர்கள் சொன்ன ஏஜண்ட்  எல்லோரும் கட் .

"ஏன் ? எதுக்கு   எல்லோரிடமும் ஏஜண்ட் பேர் கேட்டு , அப்புறம் எதுக்கு வேண்டாம்னு  அடிக்கிறே ராசி. " விஷ்ணு கேட்டார்.

வேலையத்தவன்   பூனையைக் கட்டி என்னமோ செய்தது போலேல்ல இருக்கு ராசி செய்யற வேலை என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு. சொல்லவில்லை. சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளுவதற்கு விஷ்ணு முட்டாளா என்ன?

" நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது.அவங்க எல்லாம் வயித்தெரிச்சல் பிடித்தவர்கள். நமக்கு விசா கிடைக்காம போகனுங்கறதுக்காகவே சதி செய்தாலும் செய்வாங்க. அதனால் தான் வேண்டாம்னு விட்டுத்தள்ளத் தான் அவங்க சொன்ன பேரையெல்லாம்  எழுதிகிட்டேன். "

" உன்னோட பிரண்ட்ஸ் தானே அவங்க எல்லாம். அவங்க எப்படி சதி......" இழுத்தார் விஷ்ணு.

" பிரண்ட்ஸா இருந்தா..................... பொறாமைப்பட  மாட்டாங்களா?" புருவத்தை உயர்த்தி திருப்பிக் கேள்வி கேட்டாள் ராசி.

" என்னவோ போ. எனக்கு உங்கள் ஃபிரண்ட்ஷிப் பற்றி ஒன்றும் புரியல.  யாராவது ஒரு ஏஜண்ட் கெடச்சா சரி. "


அப்படி இப்படி யோசித்து கடைசியாக ,சுருதி சொன்ன  ஏஜெண்சியை  நாடினாள் . ஏஜண்ட்   ராசியிடமிருந்தும் , விஷ்ணுவிடமிருந்தும்  பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டு  இரண்டொரு நாட்களில்   தொடர்பு கொள்வதாக  சொல்லி விட்டு நகர்ந்தார்.

அப்பொழுதிலிருந்து   ராசிக்கு நிலைக் கொள்ளவேயில்லை.  சமையலறைக்கும், போனிற்கும் ஒரு ஆயிரம் தடவை நடைப் போட்டிருப்பாள். வரும் போன்  எல்லாம்  ஏஜெண்ட்  என்றே  நினைத்துப் பாய்ந்து எடுத்துக் கொண்டிருந்தாள் . 

ராசி அமெரிக்கா போக வேண்டும் என்று நினைத்திருந்தால் என்றைக்கோ போயிருக்கலாம்.

அவள்  மகன் பல முறை அழைத்தும், , மருமகளுடன்  சுமுகமான உறவில்லாததால் ,இவ்வளவு  நாள்  அமெரிக்கா போவதையே தவிர்த்து வந்தாள் .   "பெரிய அமெரிக்கா'  என்று  தோளில் முகவாய்க்கட்டையை இடித்துக் கொள்வாள். இப்ப மட்டும் என்ன  இவள் மருமகள் சமாதானப் புறா பறக்க விட்டாளா என்று யாரும் கேட்காதீர்கள். தீடீரென்று  அவளுக்குத் தோன்றிவிட்டது,," குழந்தைகள் அப்படி, இப்படி தான் இருப்பார்கள் . நாம் தான் விட்டுக் கொடுத்தால் என்ன ?"  என்று சொல்லிக் கொண்டு விசா வாங்க , விழாவிற்குப் போவது போல்  நினைத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள் .பிள்ளைப் பாசமோ என்னவோ?

ஏஜண்டும் ,  எல்லா  பார்மாலிடீஸ்சும் முடித்து விட்டு  , அவர்கள் விசா வாங்குவதற்கானத் தேதியைக் குறிப்பிட்டு , அவர்கள் எடுத்துக்  கொண்டுப் போக வேண்டியதையும், அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று  சொல்லிக் கொடுத்து விட்டு அனுப்பி வைத்தார். சும்மா இல்லை. அவர் ஃபீசை வாங்கிக் கொண்டு தான்.கணிசமாகக் கறந்துவிட்டார். பின்னே ராசி அமெரிக்கா அமெரிக்கா என்று பறந்ததால் , அவரும்  அதை  
சரியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டார்.

விசா வாங்க வேண்டிய நாளும் வந்தது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் மதியம் இரண்டு மணி. 

காலையிலிருந்து ராசியும் விஷ்ணுவும் ஒரு பதட்ட நிலையிலேயே இருந்தார்கள்.  காலை எழுந்ததும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலில்  ஒரு சிதறு  காய் உடைத்தாயிற்று . விசா கிடைத்ததும் அடுத்த காய் உடைப்பதாகஅம்மனிடம் பேரம் பேசி முடித்தாள்  ராசி.

இரண்டு மணி விசா நேர்காணலிற்கு  ஆகாரத்தை பத்து மணிக்கே முடித்துக் கொண்டுப் பதினோரு மணிக்கே விஷ்ணுவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். விஷ்ணு , " இப்பவே போகணுமா? " என்று கேட்டதற்கு, " இங்கே இருப்பதை எம்பசி வாசலில் காத்திருப்போம் " என்று அடித்து சொல்லிவிட்டாள்.,  

ஆட்டோவைப் பிடித்து  அண்ணா சாலை எம்பசி வாசலில் மண்டை வெடிக்கும் வெயிலில்  வந்து இறங்கி, அங்கு நிற்கும் பெரிய வரிசையில் தங்களையும்  ஐக்கியப் படுத்திக் கொண்டார்கள் . 

வரிசை நகர  ஆரம்பித்தது.இவர்கள் முறை வந்ததும்,
செக்யுரிடி ," உங்கள் இன்டர்வியு  லெட்டர் எங்கே ? " என்று கேட்க,

ராசி, பவய்மாக எடுத்து நீட்டினாள். உடனே செக்யுரிட்டி," இரண்டு மணிக்கு ஏன் இப்பவே வந்தீர்கள்  ? போய் அப்படி நில்லுங்கள் " என்று டீச்சர் மாணவனை கிளாசுக்கு வெளியே போகச்  சொல்வது போல் சொல்ல , செக்யுரிட்டி கை காட்டிய இடத்தில்  ஒரு பெரியக் கும்பலே இருந்தது. நம்மைப் போல் இத்தனை பேரா என்று நினைத்துக் கொண்டே இவர்களும் அவர்களுடன்  சேர்ந்துக் கொண்டனர்.

விஷ்ணு அதிக நேரம் நிற்க  முடியாமல் ஓரமாய் கீழே உட்கார்ந்துக் கொண்டார்.பிளாட்பாரத்தில் தான் . பிறகென்ன " சேரா "  போடுவார்கள்?  ராசியையும்  உட்கார சொல்லிப் பார்த்தார். அவள் காதிலேயே வாங்காமல் எட்டி எட்டி  பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்து, " ஏன் ராசி அப்படி  டெண்ஷானாக இருக்கே? அங்கு நிற்பவர்  ஜனாதிபதி ஒபாமா இல்லையே " என்று நக்கலாக சொல்லவும், அருகிலிருந்தவர்கள் சிலர் " களுக் ' என்று சிரித்து  விட, ராசியின் முகத்தில்  எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஒரு முறை முறைத்தாள் விஷ்ணுவைப் பார்த்து....... 

அதற்குள்  ஆபத்பாந்தவனாய் , வந்தது  ஒரு குரல் . ஆமாம் , இவர்கள் நேர்காணல் நேரம் வந்ததாக செக்யுரிட்டி சொல்லவும் , ராசி பாய்ந்துக் கொண்டு  வரிசையில் நின்றுக் கொண்டாள்.

விலை உயர்ந்த கைப்பை முதற்  கொண்டு, கையிலிருந்த  எல்லாவற்றையும்   அனாதையாய்  வெளியே எறிந்து விட்டு,  வெறும் பேப்பர்களுடன் உள்ளே சென்றனர். விஷ்ணுவிற்கு, இப்படிஎல்லாம் அந்த ஊருக்குப் போக வேண்டுமா என்றிருந்தது. ராசி விட்டு விடுவாளா என்ன?

உள்ளே சென்று,  விஷ்ணுவிற்கு வேறு பயம் பிடித்துக் கொண்டது. தனக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் அமெரிக்கர்களின் ஆங்கிலம்(accent)  சட்டென்றுப் புரியாதே.

சமீபக் காலமாக Star Movies, HBO, AXN...... என்று எல்லா சேனல்களையும்  ராசி  பார்த்துக் கொண்டிருந்தாள். ஆங்கிலம் புரிய வேண்டுமே ! அதற்காகத்தான். அவளுக்கு ஆங்கில சினிமாவில் புரிந்தது என்னவோ ஷ் .... ஷ் .....ஷ்  என்ற ஒலி  தான்.  இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று தான்  வந்திருந்தாள்.ஆனாலும் இவர்கள் பேசும் போது பல்லிடுக்கில் அல்லவா பேசுகிறார்கள். என்கிறப் பயம் இருந்தது..வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அதிகாரி இவர்களிடம்,

" ஹாய் ஹௌ  ஆர் யு?" 

ராசி முந்திக் கொண்டு

" ஃ பைன் ..தாங்க் யு " என்று சொன்னதோடு  நிற்காமல் , பதட்டத்தில்  என்ன சொல்கிறோம் என்றுப் புரியாமல வாய் குழற.......

( ஹௌ  ஆர் யு ? என்று திருப்பிக் கேட்பதாக  நினைத்துக்  கொண்டு ),

" ஹூ  ஆர் யு ? "  என்று கேட்டு விட்டாள் .

அந்த ஆறடி உயர அமெரிக்க அதிகாரி  அரண்டு போயிருக்க வேண்டும். 

கோபம் கொப்பளிக்க, சிவந்த முகம் மேலும் ஜிவுஜிவுக்க , " வா....ட்......?" என்றுக் கேட்க

 பதறின விஷ்ணு , அதிகாரியிடம்  மன்னிப்புக் கேட்டு விட்டு ராசியின்  தவறை திருத்தினார் .

 விசா ஆபிசருக்கு  கோபம் சட்டென வந்தாலும்  ராசியின் பதட்டத்தைப் பார்த்து மன்னித்து  விட்டு  , 

" ...............விசிட் ? "  என்றுக் கேட்டார். 

விசிட்    என்கிற  வார்த்தை மட்டுமேப் புரிந்தது இருவருக்கும் .

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்  கொண்டு " எஸ் ..எஸ் ...விசிட் " என்றுத் திருப்பி  சொல்லினர்

அதிகாரி இப்பொழுது ,
" ஹூம் ...ஆர்....யூ ...கோயிங்...டு... விசிட் ? " என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்கவும்.

ராசியும் விஷ்ணுவும் கோரசாக " சன் " என்று சொல்லவும்  . 

" ஓ...கை "( O.K)   

 அதிகாரி " இதென்னடா  நமக்கு இன்று வந்த சோதனை " என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ , இவர்களை முதலில் அனுப்பி விடலாம் என்று தீர்மானித்து , அவர்களுக்கு ஆறு மாத விசாவைக் கொடுத்தனுப்பி விட்டார். இருவரும் வெளியே வந்தார்கள்.

விஷ்ணு ராசியிடம், " சொன்னால் கேட்டால் தானே. ஆங்கிலம் தெரியாது என்றால் தமிழ் பேசும் ஒருவரை வைத்துக் கொண்டு நேர்காணல் செய்திருப்பார்கள். நீதான் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர் நினைத்தால் அதற்காகவே விசா கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று சொன்னாய்"

ராசி சொன்னது தான் டாப்,"அதையெல்லாம் விடுங்கள்.... நான் என்ன தப்பாய் பேசி விட்டேன். " ஹு ஆர் யு ?"  என்று கேட்டால் அது ஒரு தப்பா...அதற்குப் போய் அவருக்கு இவ்வளவு கோபம் வருவானேன்." 
நீங்களே சொல்லுங்க.....

அமெரிக்க எம்பசியில் ,  அமெரிக்க இம்மிக்ரேஷன்  ஆபிசரைப்  பார்த்து "ஹூ ஆர் யு?" என்று கேட்டால் தப்பில்லையாம். தெரிஞ்சிக்கோங்க. 

அமெரிக்காவில் இன்னும் என்னென்ன  கூத்தெல்லாம் ராசி   அடிக்கப் போகிறாளோ...........

பார்ப்போம்.......

Thursday 11 December 2014

உறவுகளுக்கு formula உண்டா?


google images 




திரு. ஜி.எம். பாலசுப்பிரமணியம்  அவர்கள் உறவுகள் என்கிறத் தொடர் பதிவிற்கு  அழைத்திருந்தார். எனக்கு இப்படி சீரியசாக ஒரு பதிவு எழுதிப் பழக்கமில்லை என்று சொன்ன பின்பும் , என்னைத் தப்பிக்க விடவில்லை. ஆக விதி வலியது (எனக்கில்லை, படிக்கும் உங்களுக்கு).

. என்னைத் தொடர் பதிவிடுமாறு அழைத்ததற்கு திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ உறவுகளுடன் நான் வந்து விட்டேன்.நான் எழுத நினைத்ததை ஒருக் கதையாக/சம்பவமாக  உங்கள்  முன் வைக்கிறேன்.. தொடர்ந்துப் படியுங்கள்.........
                                        ---------------------------------------------

தன்  தம்பிக்குத்  திருமணம் கிட்ட நெருங்குவதை நினைக்கும் போது  சற்றே மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஜானகிக்கு . இரண்டே வயதான நித்யாவின்  பட்டுப்பாவாடை, சட்டை , எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி.. படுக்கையறையில் இருக்கும் பீரோவிலிருந்து தன்னுடைய பட்டுப்புடவை, நகைகள் என்று பெட்டிக்குள் திணிக்க முடியாமல் திணித்துக் கொண்டிருந்த போது .....

உள்ளே எட்டிப் பார்த்த அவள் மாமியார்........ க்கும் ......என்றுக் கழுத்தை நொடித்துக் கொண்டுப் போனாள் .
அவள் மாமியார்  எப்பவுமே இப்படித்தான் இருப்பாள் அது பழகி விட்டது ஜானகிக்கு .  மாமியாரின் கோபம்,  சீண்டல்கள்.......... சற்று  வருத்தமளிக்கும். ஆனால் ராஜேஷின் அன்பும் காதலும் , இதையெல்லாம் மறக்கடிக்கும்.அவன் காதலில் இவள் கிரங்கியிருந்தாள்  என்று சொன்னால் தப்பில்லை.


உள்ளே நுழைந்த ராஜேஷ்," மேடம்  தம்பிக் கல்யாணத்திற்குத் தயாராகி விட்டீர்கள்  போலிருக்கிறதே. சரி. இந்தாப் பணம், உன் தம்பி குமாருக்கு திருமணப் பரிசாக  மூன்றுப் பவுனில் செயின் ஒன்று வாங்கி விடு. குமாருக்குப் பிடித்த மாதிரி, அவனை  அழைத்துக் கொண்டு  போய்  வாங்கு. நான் வந்து வாங்க நேரமிருக்காது." என்றான் . காலைப் பிடித்துக் கொண்டு நின்ற மகளை த் தூக்கி....." நித்யா குட்டி... அப்பாவை விட் டு விட்டு ஊருக்குப் போகிறாயா? " என்றுக் கொஞ்சிக்  கொண்டிருக்கும்  போதே  ராஜேஷின் அம்மா தொண்டையைக் கனைத்துக் கொண்டு வந்தாள் .

" ராஜேஷ்......... ஜானகியும்  நித்யாவும் நாளைக்குத் தானே கிளம்புகிறார்கள். இப்பொழுது வா நீ. டிபன் சாப்பிட " என்று சிடுசிடுப்பாக அழைத்துக் கொண்டுப் போனாள் .
சற்று வருத்தமாயிருந்தாலும்  ராஜேஷின் மேலிருந்தக் காதல்  அவள் மாமியாரின் சிடுசிடுப்பை  புறக்கணிக்க வைத்தது. கல்யாணத்திற்குப் பின் வந்தக் காதல் தான்.

மறு நாள்ஜானகி நித்யாவை அழைத்துக் கொண்டு இரவு மெயிலில்  சென்னைக் கிளம்பினாள். ராஜேஷும் அவன் அம்மாவும் திருமனத்திற்கு ஒரு நாள் முன்பாக வருவதாக ஏற்பாடு. சென்ட்ரல் ரயில் நிலையத்தில்அதிகாலை  ஐந்து மணிக்கு நித்யாவுடன் கீழே இறங்கினாள்  ஜானகி . கதவருகிலே காத்துக் கொண்டிருந்த  அவள் அப்பா சிவராமன். நித்யாவை  அப்படியே வாரியணைத்துக் கொண்டார்.

அதற்குள் ராஜேஷிடமிருந்து போன் .  "

"பத்திரமாக  சென்னைப் போய்  விட்டாயா?"

" நான் சென்னை வந்து விட்டேன் .அப்பாவையும் பார்த்து விட்டேன் " என்றாள்  ஜானகி .

" ஹை .... தாத்தா " என்று நித்யாவும் ஒட்டிக் கொண்டாள். ஆட்டோப் பிடித்து வீட்டிற்கு வந்தார்கள். வழியிலேயே   மாப்பிள்ளையின்,  மாமியாரின் குசலம் என்று விசாரித்துக் கொண்டார் சிவராமன்.


வீட்டிற்குள் நுழைந்ததுமே " குமார் மாமா " என்று ஒட்டிக் கொண்டாள் நித்யா.

" என்னடா குமார் ? ஸ்ருதி   என்ன சொல்கிறாள்.  " ஒரு நாளில் எத்தனை போன் பேசுகிறீர்கள்?" என்று தம்பியை  கிண்டலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்  ஜானகி.

தாத்தாவிடமிருந்து பாட்டியின் இடுப்பில் ஏறிக் கொண்டாள் நித்யா. ஜானகி குளித்து முடித்து விட்டு, சுடச்சுட இட்லி , அவளுக்குப் பிடித்த வெங்காயசட்னியுடன் சாப்பிட்டு விட்டு, ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள். குமார் ஆபீஸ் கிளம்பி விட்டான். இன்னும் மூன்று  நாட்கள் கழித்துத் தான் லீவு எடுத்திருக்கிறான் குமார்.


கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடியதும், இட்லி சாப்பிட்ட நித்யா  தூங்கி விட்டாள் . பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

ஜானகி கேட்டாள் " பக்கத்து வீட்டு மீனா அப்புறம் வந்தாளா அம்மா? "

" இரண்டு மூன்று  வாட்டி வந்து விட்டுப் போனாள் .  அவளுக்கென்ன அவள் ஆம்படையான் அவளைத் தலையில் தூக்கி வைத்துக்   கொண்டு ஆடுகிறான். மாமியார், நாத்தனார் யாரும் கூட இல்லை. அவள் வைத்தது தான் சட்டம் மகாராணியாய்  வைத்துக் கொண்டிருக்கிறான். . அப்படியிருக்கும் போது  அவளுக்கென்னக் குறைச்சல் " என்றால் அவள் அம்மா.

சிவராமன், தூங்கிக்  கொண்டிருந்தப் பேத்தியைத் தூக்கி , உள்ளேப் படுக்கையில் போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு ஜானகியைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் மகள் தான் எவ்வளவு அழகு. ராஜேஷ் கொடுத்து வைத்தவன், எத்தனை  பதவிசு இவள் என்று  பெற்ற மனதுப் பெருமைப்பட்டது. ஆனால் அதை, அவள் கணவரும், மாமியாரும்  தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களோ  என்கிறக் கவலையும்   நெருடலாய்  உறுத்தியது அவருக்கு.

மனதில் தோன்றியதைக் கேட்டார் அவர்,
 " ஜானகி .... , மாப்பிள்ளை என்ன சொல்கிறார் ?

"எதைப்பற்றி ?"

சற்றுத் தயங்கி, " உன் மாமியார்  ராஜேஷின் அண்ணன் வீட்டில்  கொஞ்ச நாட்களும்,  உங்கள் வீட்டில் கொஞ்ச நாட்களும் இருக்கலாம் இல்லையா? "

" என் மாமியார் என்னுடன் இருப்பதால் உங்களுக்கு  என்னப்பா கஷ்டம்?"

" இல்லை ஜானகி . உன் மாமியார் எப்பவும் உன்னிடம்  கோபமாக இருப்பதாகவே தெரிகிறது. உனக்கு உன் வீட்டிலேயே  சுதந்திரம் இல்லையோ  என்று கூட  நினைக்கத் தோன்றுகிறது ஜானு.. மாப்பிள்ளை  உன்னிடம்அன்பாகத் தானே இருக்கிறார். " என்று அக்கறையுடன்  கேட்டார் சிவராமன்.

அப்பா... நான் சந்தோஷமாகவே  இருக்கிறேன்  அப்பா. ஏன் கவலைப்படுகிறீர்கள்.  உங்கள் மாப்பிள்ளை  என்னிடம் மிகவும் அன்பாகவே இருக்கிறார்? "  என்று ஜானகி  சொல்லி முடிக்கும் போதே அவள் செல்பேசி சிணுங்கியது. ராஜேஷ் தான்.

போனில் ஜானகி பேச ஆரம்பித்ததும், சிவராமன், நாகரீகம் கருதி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். பேசி முடித்ததும் உள்ளே வந்தார், சிவராமன் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர.

" நீ என் மகள் அம்மா . நீ சந்தோஷமாக இருக்க வேண்டுமே என்கிறக்  கவலை  தான்.. பக்கத்து வீட்டு மீனாவைப் பார். அவளும் நீயும் பால்ய சினேகிதிகள். அவளைப் பார் . நினைத்தால் வருகிறாள். நினைத்தால் போகிறாள். என்ன வேண்டுமோ, நினைத்த மறு கணமே வாங்கி விடுகிறாள்.  " என்று இடைவெளி விட்டார் சிவராமன்.

" அவளைப் போல் உன் வாழ்க்கை அமையவில்லை என்கிறக் குறை தான் உன் அப்பாவிற்கு " என்று சமையலுக்குக் காய் நறுக்கி கொண்டே சொன்னாள்  அவள் அம்மா.

எனக்கென்னக் குறை சொல்லுங்கள் அப்பா?

" உன் மாமியார்  உன்னைப் படுத்துவது,  உள்ளூரில் இருக்கும் நாத்தனார் அடிக்கடி   வந்து மாப்பிள்ளையிடம்  உன்னைப் பற்றிக் கோள் சொல்கிறாளோ  என்கிற சந்தேகம். உன் ஓர்ப்படி எந்தக் கவலையும் படாமல் , குடும்பத்தோடு ஒட்டாமல் நாக்பூரில்  உட்கார்ந்திருப்பது .........  
குருவித் தலையில் பனங்காயை நான் தான் தெரியாமல் வைத்து விட்டேனோ என்றுத் தோன்றுகிறது.  "

" அப்பா..... அப்பா...... என்று சொல்லிக் கொண்டே எழுந்து வந்து சிவராமன் அருகில் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள் ஜானகி . "

" அப்பா .... நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை, நான் கஷ்டப் படுகிறேன் என்பதைத் தவிர. என் மாமியார் சற்று சிடுசிடுப்பாக இருப்பது போல் வெளியேத் தெரியும். ஆனால் அவர்கள் மனது சொக்கத் தங்கம் அம்மா . அன்பை வெளியேக்  காட்டத் தெரியவில்லை அவர்களுக்கு அவ்வளவு தான்."

" சென்ற மாதம் நான் ஜுரத்தில் ஒரு வாரம் படுத்து விட்டேனே. அப்பொழுது என் மாமியார் என்னைக் கவனித்துக் கொண்டதைப் பார்த்திருந்தால் , உங்கள் பயம் அர்த்தமற்றது என்கிற  உண்மை உங்களுக்கும் தெரிந்திருக்கும். "

 " என் மேல் சற்றுக் கோபமாக இருக்கிறார் என்றால் ...... அதற்கும் காரணம் நான் சொல்கிறேன்.  என் மைத்துனர், திருமணமாகி  அவர் மனைவியுடன், நாக்பூரில்  இருக்கிறார். வருடம் ஒரு முறை வந்தாலும்  அவரும் , என் ஓர்ப்படியும் என் மாமியாருடன் செலவிடும் நாட்களை  விரல் விட்டு எண்ணி விடலாம்.  அப்படி இருக்கும் போது , உங்கள் மாப்பிள்ளை தானே அப்பா, என் மாமியாருக்கு ஒரே ஆதரவு. அதனால் நான் எங்கே அவரின் மகனை தட்டிக் கொண்டுப் போய் விடுவேனோ என்கிற பயம் தான் அப்பா. மாமனார் இறந்துப் போனதோ சமீபத்தில். அதனால் தோன்றியுள்ள பாதுகாப்பற்றத் தன்மை எல்லாம் சேர்ந்துக் கொண்டு  என்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொள்கிறார்கள் . அவர்களுக்கு  என்னைப் பற்றித் தெரிய சிறிது காலம்  ஆகும் .அதற்குப் பிறகு   பாருங்கள்  . இப்பொழுதே கொஞ்சம்  சுவாதீனமாக இருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மாமியாருடைய  சிடு சிடுப்பு சற்றுக் குறைந்திருக்கிறது என்று சொல்லலாம் அப்பா."

"என் நாத்தனார்  பற்றி நீங்கள் கவலைப் படுவது தேவையற்றது. அவளுடைய நடவடிக்கை அவளுடைய முதிர்ச்சியின்மையைத் தான் காட்டுகிறது. போதாதற்கு, எனக்கு என் கனவரின் முழு சப்போர்ட் இருக்கிறதே. அவள் என்ன கோள் சொன்னாலும் இவர் நம்புவதில்லை அப்பா. உங்களுக்கு அந்தப் பயமே வேண்டாம் அப்பா.  அவளுக்கும் என்னைப் பற்றி  முழுதாய் தெரிய வரும் போது அவளும் மாறுவாள் அப்பா. எனக்குத் தேவை  இப்பொழுது பொறுமையும் உங்களனைவரின் ஆதரவும் அவ்வளவே."

" நான் பொறுமையாக இருப்பதில் என் சுய நலமும் கலந்திருக்கிறதே அப்பா. இவர்களுடைய நடவடிக்கைகளினால்   நானும் அவரும் இன்னும் அதிக நெருக்கத்துடன் இருக்கிறோம் . அவருடைய அன்பும், காதலும் எனக்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது. சொல்லி முடிப்பதற்குள்  ஜானகியின் முகம், வெட்கத்தினால்  'குப்'பென சிவந்து விட்டது ."

"நீங்களெல்லாம் வந்தால் நான்கு நாட்களுக்கு மேல் இருக்க மாட்டேன் என்கிறீர்கள்?  உங்களை உபசரிப்பதில் என் மாமியார் ஏதாவதுக் குறை வைத்திருக்கிறார்களா  சொல்லுங்கள் அப்பா? சில நாட்கள் இருந்துப் பார்த்தால்   என் வாழ்க்கை எத்தனை இனிமை என்று உங்களுக்கும் புரிந்திருக்கும். " என்று  ஜானகி முடித்ததும்  அவள் அப்பாவும், அம்மாவும், அசந்து போய், திறந்த  வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

" ஆனாலும்,  பக்கத்து வீட்டு மீனா போல் சுதந்திரம் உனக்கு இல்லை என்பதை நீ மறுக்கவே முடியாது." என்று சிவராமன் மீண்டும் ஆரம்பிக்க

"அப்பா..மீனாவிற்குக் கிடைத்துள்ளது சுதந்திரமா என்பதைப் பற்றிய விவாதத்தைப் பிறகு வைத்துக் கொள்வோம். அது வேறு விஷயம். ஆனால்  என் வாழ்க்கையை நீங்கள் ஏன் அவள் வாழ்க்கையுடன் ஒப்பீடு செய்கிறீர்கள். .
கணக்கு ஆசிரியரான நீங்கள் எல்லா வற்றையும் அப்படியே பார்க்கிரீகள் என்று நினைக்கிறேன்.  மாணவர்களுக்கு (a+b)^2  சொல்லிக் கொடுப்பது போல்  நினைத்துக் கொண்டு  a,b  என்கிற இடத்தில் கணவனையும், மனைவியையும் போட்டு விட்டால் இது தான் விடை என்று சொல்கிறீர்கள்.

உளவியல் படித்த என்னால் இதை  ஒத்துக் கொள்ள முடியாது. உறவுகள் வேறு, உணர்வுகள் வெவ்வேறு , தனித் தன்மைகள் ,என்றுப் பல விஷயங்கள்  அடங்கி இருக்கின்றன . நான் ஏன், என் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  "

அவள் அம்மா கேட்டாள் ," ஜானகி   எப்படியடி  இத்தனை முதிர்ச்சியாக நினைக்க முடிகிறது உன்னால். உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக் இருக்கிறது." என்று முடிக்கவும்.

ஜானகி பதில் சொன்னாள் ," அம்மா நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. நீ தான் இதையெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தாய்?"

"நானா....." புரியாமல் விழித்தால் அவள் அம்மா .

"நீ வாழ்ந்துக் காட்டி இருக்கிறாயே.  எனக்குத் தான்  தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, பெரியப்பா என்று......  ஆனால்..உனக்கு, அவர்கள் உன் புகுந்த வீட்டு உறவுகள் . நீ யாரையும் விட்டுக் கொடுக்கவில்லையே.  உனக்கும் அவர்கள் மேல் வருத்தம் உண்டு, கோபம் உண்டு, சண்டை உண்டு, சச்சரவுண்டு...... எல்லாமே எனக்குத் தெரியும்.  ஆனாலும் சமாதானமும் உண்டு என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவள் நீதானே அம்மா ."

அப்பொழுதெல்லாம் நீ சொல்வாயே " குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" அதைத் தானே நானும் செய்கிறேன். இதிலென்ன அதிசயம் என்று சொல்லி முடிக்கவும் , நித்யா தூக்கத்தில் சிணுங்க  ஆரம்பித்தாள் . அவளைத் தட்டிக் கொடுக்க உள்ளே ஜானகி போகவும்.,வெளியே ஆட்டோ  நிற்கும் சப்தம் கேட்டது.

வந்தது காஞ்சிபுரம் அத்தை. " சிவராமா  எனக்கு என்ன புடைவை எடுத்திருக்கிறாய் காட்டு.  பிடித்தக் கலர் இல்லையென்றால்  இப்பொழுதே  மாற்றிக் கொடுக்கணும் . என்ன விலை? " கட்டளை வந்தது.

சிவராமனோ மனைவியைப்  பார்த்து. " மைதிலி,   அக்காப் புடைவையை  எடுத்து வா. நல்லக் கலர் அக்கா.  உனக்குப் பிடிக்கும் "என்று ஐஸ் வைக்கவும்.
உள்ளே ஜானகி  முகத்தில் புன்னகை.
'பரபர' வென்று ஹாலிற்கு வந்தாள்  ஜானகி ,அத்தையை வரவேற்க இல்லாவிட்டால்  அதற்கு வேறு அத்தை கோபித்துக் கொண்டு விடுவாளே .

ஆமாம்.
கோபத்தையும் , அன்பிற்குரியவர்களிடம்  தானே காட்ட முடியும்.

பி.கு : ஜானகிகளையும், மைதிலிகளையும் கவுரப்படுத்தும் விதமாக உங்களுக்குத் தெரிந்த ஜானகி, மைதிலிகளை  பின்னூட்டத்தில் பட்டியலிடுங்கள்.

Thursday 4 December 2014

'சார்' ஆன தாத்தா



google image






பேப்பர் ..... பேப்பர்..... பேப்பர்......

 வாரப் பத்திரிக்கையிலிருந்து,  என் கவனம் பேப்பர்....பேப்பர் என்று கூவிக் கொண்டு செல்பவரை  நோக்கித் திரும்பியது. நரைத்தத் தலை , அழுக்கேறிய லுங்கி,  சாயம் வெளுத்த சட்டை , தலையில் ஒரு கட்டுப் பழைய பேப்பர்  சகிதமாய் ஒரு வயதான மனிதர்   நடந்துக் கொண்டிருந்தார்.  பார்க்கப் பாவமாயிருந்தது.

பழைய பேப்பர் என்னவோ வீட்டில் இருந்தது  போட. ஆனால் இந்த மாதிரி ஆட்களைக் கூப்பிடுவது  சற்றே இப்பொழுதெல்லாம் கொஞ்சம் பயம் தான். பேப்பர் எடுக்கும் சாக்கில்  உள்ளே வந்து திருடுவதற்கு நோட்டம் விட்டாலோ, அல்லது திருடவே வந்து விட்டாலோ என்கிறப்  பயம் தான். நான் அந்த மனிதரைக் கவனிப்பதை அந்த மனிதரும் பார்த்து விட்டார்.

" பழைய பேப்பர் இருந்தாப் போடுங்கம்மா". என்று சொல்லி விட்டு "பிளாஸ்டிக், இரும்பு எல்லாம் கூட எடுப்பேன்"  என்று உபரியாய்   சொல்லவும், உள்ளே டிவிட்டரில்  சுவாரஸ்யமாய் ஆழ்ந்திருந்த என்னவர் , உள்ளேயிருந்து எட்டிப் பார்த்தார்.  தெருவில் போகிறவர்களை  எல்லாம் கூப்பிடாதே . நமக்கு வீ ட்டு வேலை செய்யும் கல்புவிடமே கொடுத்து விடு. அவள் ஏதோ பணம் வாங்கிக் கொள்ளட்டும்.  ,
 " தெருவில் சும்மாப் போகிற வம்பை  கூப்பிட்டு உள்ளே விடாதே " என்கிற  எச்சரிக்கையும் வந்தது என்னவரிடமிருந்து.

பேப்பர் காரரைப் பார்த்து நான், " ஒன்னும் இல்லைப்பா" என்றேன்.

மறு நாளும் அதே நேரத்திற்கு அதே பேப்பர் குரல் .  அதற்கடுத்த  நாளும்.... என்று சலிக்காமல் பேப்பர் எடுப்பவர் எங்கள் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

தினம் காலைப் பத்தரையிலிருந்து பன்னிரெண்டிற்குள்  பேப்பர் குரல் கேட்கும். அதே அழுக்கு உடைகள் தான்.  முதுகோடு ஒட்டிய வயிறு  , என்னை இம்சைப் படுத்தும்.

" பாவம். இந்தப் பேப்பர் எடுக்கும் தொழிலில் எவ்வளவு வந்து விடும்? இந்த மனிதருக்குத் தான் எத்தனை  நம்பிக்கை?  இதில் எப்படித்தான் குடும்பம் நடத்த  முடியும்? விற்கிற விலை வாசியில் என்னத்தை சாப்பிட முடியும்? " என்று என் கணவரிடம் அங்கலாய்க்கவும்,

அவரோ, " ஆமாம். உனக்கு என்னைத் தவிர அத்தனைப் பேரும் பாவம். நானும் சாப்பிட்டு எத்தனை நாளாச்சுத்  தெரியுமா ? "  என்று சொன்னார். என்ன உளறுகிறார் இவர் என்று நான் பார்க்கவும்   "தவலை வடையை  சாப்பிட்டு எத்தனை நாளாச்சு என்று சொல்ல வந்தேன்." எவ்வளவு  நாளாய் கேட்கிறேன்? கேட்டால் டாக்டர், டயட் என்கிறாய்?  " என்று  அவர் குறைப் பட்டுக் கொண்டார்.

தினமும் பேப்பர் காரர்  தெரு வழியாக செல்வது வழக்கமாச்சு  .  நம்பிக்கைத் தளராமல் எங்கள் வீட்டருகில் வந்ததும்  இன்னும் இரண்டுக் குரல் சேர்த்தே கூவுவார்.
 நானும் அவரைப் பார்த்துப் பரிதாபப் படுவதும்  தொடர்கதையானது.

ஒரு நாள் என் கணவர் கேட்டார்," ரொம்பவும்  பரிதாபப் படுகிறாயே. பேசாமல் அவரிடமே  பேப்பரைக்  கொடுத்து எடுத்துக் கொள்ள சொல். ஆனால் நீயே கேட்டருகில் கொண்டு போய் கொடுத்து  விடு என்று சொல்லவும்  , எனக்கும் அது சரியெனப் படவே அவரைக் கூப்பிட்டு, பழைய பேப்பர்  , பால் கவர், பழைய பிளாஸ்டிக் பக்கெட் என்று எல்லாவற்றையும்  அவரிடம் போட்டு விட்டேன் . பேப்பருக்குப் பணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. மற்ற சாமான்களுக்கு ஒரு சொற்பத் தொகைக் கொடுத்து  விட்டுப் போனார்.
ஆனாலும் மனதிற்குப்  பெரியத் திருப்தியாக இருந்தது. ஒரு மனிதருக்கு என்னால் ஆனது ஒரு நாள் சாப்பாடு கொடுத்து விட்டதாக( பெருமையாக ) எண்ணிக் கொண்டேன்.

அன்றிலிருந்து இரண்டு  மாதத்திற்கு ஒரு முறை பழையப் பேப்பர் காலியாகிக் கொண்டிருந்தது.எனக்கும்  பரம திருப்தி. பேப்பரும் காலியாகிறது. என்னாலான  உதவி அந்த வயதான  மனிதருக்கு என்று எண்ணிக் கொண்டேன்.( பேப்பருக்குக் காசு வாங்கிக் கொள்ளவில்லை . அதில்  எனக்குப் பெருமையோ பெருமை. அதை ஓரிருவரிடமும் பெருமையடித்துக் கொள்ளவும்   தவறவில்லை.)

அடிக்கடி  பேப்பர் தாத்தா, வீட்டிற்கு வர ஆரம்பிக்க,  எங்களுடன்  நன்றாகவே  பழக ஆரம்பித்தார்.  வராண்டா வரை அவர்  வர ஆரம்பித்தார். நாளாக  நாளாக அவர் குடும்பக் கதைகளை  அவிழ்த்து விட ஆரம்பித்தார்.
 அவர் மனைவிக்கு அறுவை சிகிச்சை ஆனது,  அவருக்கு அடிக்கடி வரும் நெஞ்சு  வலி ... என்று சொல்லிக் கொண்டிருப்பார்.  அவருக்கு நானும்  மோர் கொடுத்து  உபசரிப்பது வழக்கமானது..

 என்னவரோ"  இந்த மனிதர் இப்படி குறைகளாய் அவிழ்த்து விடுகிறாரே. நம் வீட்டரசிக்குப்   பாவம் தாங்காமல்  இவள் பாட்டிற்குப் பேப்பரையும்  போட்டு,  அதற்குப் பணமும் கொடுத்து அனுப்பி விடப் போகிறாள்  என்று  பயம்.

ஒரு நாள்  பர்சிலிருந்து " இந்தப் போட்டோவைப் பாரும்மா...என் பேத்தி "  என்று காண்பித்தார்.

அந்தப்பெண்  சிவப்பு சூடிதாரில் அழகாகவே இருந்தது.  அலை பாயும் கூந்தலை  இறுக்கி ஒரு ரப்பர் பேண்டிற்குள் சிறைப் படுத்தி இருந்தாள் .காதுகளிலும், கைகளிலும், பிளாஸ்டிக்  அணிகலன்கள் தான் ஆனாலும் வறுமையின் சாயல் தெரியவில்லை. பாவம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்களோ என்றிருந்தது எனக்கு.

" என்னப் படிக்கிறாள்? "

 " B.Sc.., ம்மா "

" பையன் பீஸ் கட்டி படிக்க வைக்கிறாரோ? " என்றேன்.

" ஆமாம்,"

" உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்  தாத்தா? "( இப்பொழுது நான் அவரைத்  தாத்தா என்று கூப்பிடும் அளவிற்கு சகஜமாகியிருந்தோம்.. )

"எனக்குக் குழந்தைகள்  இல்லம்மா..... "

"பின்னே..... இது யாரு? பேத்தின்னு சொல்றீங்களே தாத்தா? "

" அதுவா.....சுமித்ராவோட அப்பா  என்  தத்துப் பிள்ளை."

" சுமித்ரா......? "

" அதான் என் பேத்தி......."

 ஆச்சர்யம் கலந்தக் சுவாரஸ்யமாயிருந்தது எனக்கு.

அதற்குள்  டெலிபோன் மணி ஒலிக்க . "கொஞ்சம் இருங்கத் தாத்தா" என்று சொல்லி விட்டு போனை எடுக்க நான் உள்ளே கிளம்பும் போது .  " நான் நாளைக்கு  வரேம்மா  " என்று சொல்லி, என் சுவாரஸ்யத்தை அதிகமாக்கி விட்டு நகர்ந்தார்.

 சர்வ சாதாரணமாகத் தத்துப் பிள்ளை என்கிறார். பேத்தி என்கிறார். இவருக்கே சாப்பாட்டிற்கேக் கஷ்டம்( என்று நினைத்துக் கொண்டிருந்தேன்).  இந்தக் கஷ்டத்தில் தத்து எடுத்திருக்கிறார். "எத்தனைப் பெரிய மனது இந்தக் மனிதருக்கு "  மனதில் அவர் மேல்  அதிகமான மரியாதைத் தானாக  வந்தது.

அடுத்த முறை வரும் போது இவர் தத்து எடுத்தக் கதையைக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்குப் பிறகு  கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து நாட்கள் ஆளைக் காணவில்லை.  " வீடு  எங்கே என்றுக் கேட்காமல் போனோமே ? " என்று அங்கலாய்த்துக் கொண்டேன்.

" ஏன், வீட்டிற்குப் போய் விசாரிக்கப் போகிறாயா? " கணவர்  நக்கலடித்தார்.

சில நாட்களானது. பேப்பர் காரத் தாத்தாவும் என் நினைவடுக்குகளில் இருந்து மெல்ல நழுவ ஆரம்பித்திருந்தார்.

அன்று காலை ரசத்திற்குக் கறிவேப்பிலைத் தாளித்துக் கொண்டிருந்த போது , லேசாகக் கமறல் வந்தது. கமறலுடன், எங்கோ பேப்பர்  என்கிற சத்தம் கேட்டது போல் இருந்தது. கமறலை அடக்கிக் கொண்டு கவனிக்கையில்  பேப்பர்.... பேப்பர்  ..... என்கிற சத்தம் துல்லியமாய் கேட்டது. கேசை அணைத்து விட்டு

வெளியேப் போய்  பார்த்தால் , அட ..  . பேப்பர் தாத்தா..." தாத்தா... என்ன ஆச்சு உங்களுக்கு? இவ்வளவு நாட்களாகக் காணோமே " என்று விசாரித்தேன்.

" இல்லம்மா ஜுரம் வந்துப் படுத்து விட்டேன். உடம்பு சரியாக நாளாச்சு. .வயசாச்சு இல்லையா  அதான். "

" சரி. உள்ளே வாங்கத் தாத்தா." உடம்பு சரியில்லை என்கிறாரே என்று " இட்லி இருக்கு சாப்பிடுகிறீர்களா  ? " என்று கேட்டு ஒரு தட்டில் நாலு இட்லியும் சட்னியும் வைத்துக் கொடுக்க  " ஆசையாய் சாப்பிட்டார். சாப்பிட்டத் தட்டை வெளியே இருக்கும் குழாயில் கழுவி வைத்து விட்டு அவர் " அப்பாடி  ... " என்று உட்காரவும்.

நானும் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, அவர் தத்துக் கதையை கேட்டுக் கொண்டேன்.  வீட்டருகிலேயே அம்மா இல்லாத பையன் , சித்திக் கொடுமை, அவனுடைய அப்பாவிடம் சொல்லி இவர் வீட்டிலேயே தங்கிப் படித்து  இன்று மாருதி சர்வீஸ் சென்டரில் கார் மெக்கானிக்  . அவனுக்கு இவரே கல்யாணம் செய்து வைத்து  பேரன் பேத்தியும் பார்த்து  விட்டார் இந்தக் கிழவர். ", நீங்கள் ஏன் தாத்தா இந்த தள்ளாத வயதில் பேப்பர் எடுத்துப் பிழைக்க வேண்டும்? பையன் தான் நல்ல சம்பாதிக்கிறானே"  என்று என் ஆதங்கத்தை சொல்லவும்.

" என் கையே  எனக்கு உதவிம்மா. அதோடு வீட்டில் சும்மா உட்கார்ந்து என்ன செய்ய ? " என்கிற பேச்சில் தன்னம்பிக்கை  வெளிப்பட்டது.

இரண்டு மூன்று  மாதம் ஆகியிருக்கும். ஒரு நாள் பேப்பர் தாத்தா வந்தார்,
 " அம்மா  என்னமோ  பான்  கார்டாமே ? அதை எங்கே போய்  வாங்க வேண்டும்.? " என்று தாத்தா கேட்க ,
நானோ அசால்டாக  அவர் ஆதார் கார்டைக் கேட்கத் தெரியாமல் பான்  கார்டு என்கிறார் என்று நினைத்துக் கொண்டு  " ஆதார் கார்டு மையம்  அங்கங்கே இருக்கிறதே. அங்கே  போய் கேட்டால் சொல்வார்களே . அடுத்தத்  தெருவில் கூட ஒன்று இருக்கிறது தாத்தா? " என்று நான் சொல்ல.

" இல்லம்மா... பான்  கார்டு " என்று  மீண்டும் சொன்னார்.

 " பான்  கார்டா , ரேஷன் கார்டா ? " நம்பிக்கையில்லாமல் நான் மீண்டும் கேட்க

அழுத்தம் திருத்தமாகப் பதில் வந்தது அந்த மனிதரிடமிருந்து," பான்  கார்டு "

"அது எதுக்குத் தாத்தா  உங்களுக்கு ? " என்றேன் சர்வ  அலட்சியமாய் .

"இல்லம்மா  எனக்கு இடம் ஒன்னு இருக்கு அதை விற்க வேண்டும். அதுக்கு  பான்  கார்டு வேணுமாம்."

நான் எங்கோ ஒரு ஒட்டப் பிடாரம், அல்லது கரிசல் காடு என்கிற இடத்தில் ஒரு கோவணம் அளவு இடம் இருக்கப் போகிறது  என்று நினைத்துக் கொண்டு.

" அப்படியா.. தாத்தா.... பான்  கார்டு எப்படி வாங்கவேண்டும் என்று எனக்குத் தெரியாதே . ஆமாம் எந்தக் கிராமம் உங்களுடையது. எவ்வளவு  நிலம் இருக்கு ? "  நான் கேட்ட கேள்வியில்  ஒரு ஏளனம் தொனித்தது.

அமைதியாய் அந்த அழுக்கு லுங்கிக்காரர் சொன்னார்," இங்கே தாம்மா ஆவடியில்  நிலம்.  அந்தக் காலத்தில் நான் ரயில்வேயில் தினசரிக் கூலியாக இருந்த போது ,  கடன் வாங்கித்  தான் இடம் வாங்கிப் போட்டேன். அந்தக் கடன் தீர்வதற்கு நான் பட்டப் பாடு எனக்குத் தான் தெரியும் . "

 " ஆவடியிலா?....." ஆச்சர்யம்  தொனித்தது என் கேள்வியில் .

"என்ன விலை இப்பொழுது? '

" ஒரு கோடிக்குக் கேக்கறாங்கம்மா . "
 " ஒரு கோடியா...... " திறந்த வாய், மூட சற்று அவகாசம் தேவைப்பட்டது.

இந்தக் கோடீஸ்வரருக்கா......  நான்  ஒரு வேளை சாப்பாடு போட்டதாக பீற்றிக் கொண்டேன். என்  மேல் எனக்கே  சற்றுக் கோபமே வந்தது. உருவத்தைக்   கொண்டு தப்புக் கணக்குப் போட்டேனே. இவருடைய உழைப்பு போற்றப்பட வேண்டியது . பரிதாபப்பட வேண்டியதில்லை என்கிற உண்மை புரிந்தது.

 அவருக்குத்  தான்   எவ்வளவுப் பெரிய பணக்காரர் என்றுத் தெரியவில்லையா? இல்லை   இளமையில் கஷ்டப்பட்டதின் விளைவாக பணத்தின் அருமை  உணர்ந்ததால்  எளிமையாய்  இருக்கிறாரா?புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

 சட்டென்று சமாளித்துக் கொண்டு

"பான்  கார்டு எங்கே வாங்க வேண்டும் என்றுக் கணவரிடம் கேட்டு சொல்கிறேன் சார். " என்றேன்.

" தாத்தா" சட்டென்று  " சார் " ஆக மாறினார்.(எல்லாம் பணம் படுத்தும் பாடு)

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்