Wednesday 27 February 2013

இளமை ரகசியம்




அன்று     வந்த    லெட்டரைப்    பிரித்துக்      கொண்டே ,  ஜன்னலருகில்      சென்று ,    கண்களிலிருந்து     மிகவும்     தள்ளி     பிடித்துப் ,     படித்துக்  கொண்டிருந்தேன்.   என்னவர்  வந்து  ,  அதை    வாங்கி  ,    இரண்டடி   தள்ளி       நின்று  லெட்டரைப்  பிடித்துக்      கொண்டு   " இப்பொழுது      படி "      என்று    கிண்டலடித்தார்.  

அப்பொழுது      தோன்றியது ,     அடடா.........     நமக்கு     வயதாகிக்   கொண்டே      வருகிறது.    சாளேஸ்வரம்      போலிருக்கிறது   ,   என்று  நினைத்துக்       கொண்டேன்.   ஆனால்     அந்த      நினைப்பே ,   என்    வயதை     இன்னும்      கூட ,     கூட்டியது    போலிருந்தது.

அப்பொழுது   தான்  ,  முக  நூலில்   அலைந்து   கொண்டிருந்த ,  ஒரு  விஷயத்தைப்    படித்திருந்தேன்.

'ரோஸ்'   என்ற    பெண்மணியைப்  பற்றியது  .
இவருடைய  கல்லூரி  நாட்கள் ,  மிகவும்   இன்பமயமானவை.  
பட்டம்   வாங்கும்   முனைப்புடன்   கல்லூரிக்கு  செல்கிறார்.
(எல்லோரும்   பின்பு   எதற்காக  கல்லூரிக்கு  போகிறார்கள்  என்று  நினைப்பது  புரிகிறது.
இருந்தாலும்   பரவாயில்லை.  தொடர்ந்து  படியுங்கள்.)

முதலில் , மற்ற  மாணவ மாணவிகள்   பழகத்   தயங்கினாலும்  (ஏன் ?...... சஸ்பென்ஸ்)
பிறகு  ,  நல்ல    நட்புடன்      பழகுகிறார்கள்   .

எல்லா    மாணவிகளையும்   போல் , விதம் , விதமாய்   அலங்கரித்துக்   கொண்டு ,   கல்லூரிக்கு  வருவது , இவர்   வழக்கம்.  அலங்காரத்தில்  ஒரு குறையும்,  இருக்கக்   கூடாதாம்.

எல்லோரையும்  போல்  கேண்டீன்,  கிளாஸ் கட்  ,  ஒன்றாக  சினிமாவிற்கு   போவது   என்று   கூத்தடிக்கிறார்.
எல்லோருக்கும்,  ஒரு  இனிய  தோழியாய் ,  கல்லூரியில்   வலம்  வருகிறார்.
முனைப்புடன்   படிக்கவும்  செய்கிறார்.

மூன்று   வருடம் , போனது   தெரியாமல்   ஓடி   விடுகிறது. கல்லூரியில்  farewell day   வருகிறது.

எல்லோரும்,  ரோசை   பேச  அழைக்கிறார்கள்.  அவரும்  மேடை  ஏறுகிறார்.
அவரால்  ஏறமுடியவில்லை.  இரண்டு பேர்   துணையுடன்   ஏறுகிறார்.

ஏறும்போது,    தான்  படிப்பதற்காக   எழுதி வைத்திருந்த   பேப்பரில்  ஒன்றிரண்டை , கீழே   வேறு   போட்டு  விடுகிறார்.

ஏன்    இத்தனை   தடுமாற்றம்   ?

அவருடைய  வயது  87.(இது  தான் அந்த  சஸ்பென்ஸ்)

ஆச்சர்யமாயிருக்கிறதா?

இத்தனை  வயதில்   எத்தனை  ஆர்வம். !  எத்தனை   தன்னம்பிக்கை!
எத்தனை  விடா  முயற்சி  !


நாம் இன்னும்  அவர் பேச்சை  கேட்கவில்லை  .கேட்போம்.

மிகவும்  நடுங்கும்  கைகளால்  மைக்கைப்   பிடித்துக்  கொண்டே   தொண்டையை   கனைத்துக்  கொண்டு   பேச  ஆரம்பிக்கிறார்.

குரல்  நடுங்குகிறது.
 அவருடைய  பேச்சு இப்படி செல்கிறது,

"  முதலில்  எல்லோரும்   என்னை மன்னிக்க வேண்டும்.  என் குரல்  நடுக்கத்தை   என்னால்  கட்டுப்  படுத்த முடிய வில்லை.

என்  குரலை   என்னால்  சரி  செய்ய  இயலாது.  ஆனால்  எனக்குத்  தெரிந்ததை  ,  என்  அனுபவத்தை ,  உங்களுடன்  பகிர்ந்து  கொள்ள முடியும். "

என்று  கூறித்  தொடர்கிறார்.

நாம்   வயதாவதால்   விளையாடுவதை  நிறுத்தி  விடவில்லை.  மாறாக  விளையாட்டை   நிறுத்தியதால்   தான்  வயதானவர்களாகி  விட்டோம்..

நம  இளமையை  தக்க  வைத்துக்  கொள்ள  நான்கு  ரகசியங்களைக்  கூறுகிறேன்.  கேட்டுக்  கொள்ளுங்கள்.
 1.  முதலில்    சிரிக்கக்   கற்றுக்  கொள்ளுங்கள்.
தினம்  தினம்  சிரிக்க வேண்டும்.எல்லாவற்றையும்   ஒரு    நகைச்சுவை   உணர்வுடன்    பார்க்கக்   கற்றுக் கொள்வோம்.
சிரிக்க  சிரிக்க  இளமையாய்  உணர்வோம்.

2.  கனவு    காணுங்கள். 
என்று  கனவு    காண்பதை    நிறுத்துகிறோமோ   அன்றே   நாம்  இறக்கத் தயாராகி   விட்டோம்  என்று  பொருள். கனவை  நனவாக்குவதற்கு ,  வயதை  மறந்து   முன்னேறுவோம்.
நம்மை  சுற்றி,  எத்தனையோ  பேர்  நடைபிணங்களாய்  வாழ்கிறார்கள்.  ஏன் தெரியுமா?  கனவு  காண்பதை  நிறுத்தி ,  வெகு  காலமாயிருக்கும்.

3.  வயதாவதற்கும்,  வளர்ச்சிக்கும்   இருக்கும்  மிகப் பெரிய  வித்தியாசம்  என்ன  தெரியுமா/

இப்பொழுது  எனக்கு  87  வயது. ஒரு  வருடம்  ஒன்றுமே  செய்யாமல்  படுக்கையிலேயே  இருந்தால்  கூட   எனக்கு  88  வயதாகி  விடும்.

எதையாவது,  புதிது  புதிதாகக்  கற்றுக்  கொள்வது தான்  வளர்ச்சி.
நாம்  வளர்வதற்கான    சந்தர்ப்பங்களை   நாம்  தேடிக்  கொண்டேயிருக்க வேண்டும்.


4.  எதற்காகவும்   வருத்தப்படாதீர்கள்  .
வயதானவர்கள்,    செய்த  எதற்காகவும்  ,வருந்துவதில்லை. செய்யத் தவறியவைக்காக   ,வருந்துபவர்கள்   தான்   ஏராளம்."

என்று  பேச்சை  முடிக்கிறார்.   

1970களில்  ஹிட்   பாடலான      The  Rose   என்ற  பாப்   பாடலைப் ,  பாடி  முடிக்கிறார்.(இணையத்தில்  இந்தப்  பாடல்  இருக்கிறது. மிகவும்  நல்ல  கவிதை)

வர்   மேலே சொன்ன   அறிவுரைகள்   எல்லாம்   அந்தப்   பாடலின்   விளக்கம்  தான்.

தேர்வு  எழுதி  பாசாகி  விடுகிறார். 
அதற்கு  அடுத்த  வாரம்   உறக்கத்திலேயே  உயிர்  பிரிகிறது.
2000  மாணவர்கள்    இறுதி  யாத்திரையில்   பங்கு  கொள்கின்றனர்.
வாழ்நாள்  இறுதி வரை  எதையாவது    கற்றுக்கொண்டும், உற்சாகமாகவும் ......   அந்த      மாணவர்களுக்கு    ஒரு  நல்ல  உதாரணமாய்    இருந்திருக்கிறார்.

இதைப்    படித்தவுடன்   எனக்குள்ளும்  ,   ஒரு  புது  உற்சாகம்   பீறிட்டுக்   கிளம்பியது.
சாளேஸ்வரம்    தானே  . கண்ணாடி  போட்டுக்  கொண்டால்  ஆயிற்று.
அதற்கு  எதற்காக  வருத்தம்   என்று  என்னையே  கடிந்து  கொண்டேன்.
வயதானால் என்ன ? வளர்ச்சி  நம் கையில்  அல்லவா?

உற்சாகமாகி    என்ன  செய்வது  என்று  யோசித்தேன். 
அதையே    பதிவாக்கி   விட்டேன்.  நீங்களும்  படித்து   விட்டீர்கள் .

வந்ததற்கு   கருத்துக்களை   எழுதிவிட்டுப்   போங்களேன்.


The  Fox   Story  படிக்க  "இங்கே க்ளிக்"கவும்

image  courtesy---google.
   

Saturday 23 February 2013

மாலையில் மெரினா (part 2)


 ஒரு   பௌர்ணமி   மாலையில்    மெரினாவிற்கு   கிளம்பினோம்.
நம்  பர்சை,  பதம்  பார்க்காத  , எல்லாத்   தட்டு   மக்களுக்கும் , ஏற்ற  பொழுதுபோக்கு ,    " பீச் ".

வண்டியைப்    பார்க்  செய்ய   இடம் , தேடி,  தேடி ,  அலைந்து,  ஒரு வழியாக  கலங்கரை    விளக்கம்   அருகில்,    ஒருவர்   காரை  எடுக்க,   உடனே  அந்த  இடத்தில்  நாங்கள்    அவசரமாகப்   பார்க் செய்தோம்.
ஒரு  matrimonial   விளம்பரம்   ,   படித்தது    நினைவிற்கு   வருகிறது.
"   வண்டியை   பார்க்  செய்வதற்கு  தேடினாலும்    இடம்  கிடைக்காது. 
ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு வரன்   கிடைத்து    விடும்.    நாங்கள்   இருக்கிறோமே. "    என்கிற   ரீதியில்     இருக்கும்.

  அது  உண்மை   தான்  என்று    சென்னையில்     வண்டி    வைத்திருப்பவர்கள்     சொல்வது     உறுதி.
     

வண்டியைப்  "  பார்க் "  செய்தபின்   நீண்ட தூரம்    நடந்து    காந்தி  சிலையருகே
வந்தோம்.

 மாலை  நேர   கதிரவன்   மேற்கில்  பயணித்துக்   கொண்டிருந்த   வேளை.

அங்கு  முதலில்    தென்பட்டது    வேலையிலிருந்து    ஓய்வு   பெற்றவர்கள்   நீண்ட    பெஞ்சில்   உட்கார்ந்து   மலரும்  நினைவுகளை    பகிர்ந்து   கொண்டது   தான்.
இவர்களுக்கு  வேறு  வேலையே  இல்லையா?     என்கிற    மாதிரி    அவர்களைப்   பார்த்துக்    கொண்டே      கடக்கும்    இளைய  தலைமுறை.

அங்கிருந்து    சிறிது   தூரத்தில்  பார்த்தால்.....................
நம்ம   சச்சின்  டெண்டுல்கர்   , ராகுல்டிராவிட்   எல்லோரையும்   காணலாம்.
(" எதிர்கால ", என்று   அங்கங்கே    போட்டு  படிக்கவும். ) 

அவர்களைக்   கடந்து ,    மணலில்   காலை   வைத்து    நடந்தேன்.
 எதிரே ,  அட........  குடை   ராட்டினம்.   குதிரை  மேல் ,  குழந்தைகள்   . சுற்றி   வந்து   கீழே   குதித்த  பின்பும்  ,உற்சாகம்    சிறிதும்    குறையவில்லை.
நம்மையும்  அந்த    உற்சாகம்    தொற்றிக்   கொள்ள   மேலே   நடந்தோம்.

டப்............டப்...........டப்............
இது   என்ன?
துப்பாக்கியால்    சுட்டுக்   கொண்டிருந்தார்கள்.       யாரையா?
பலூனைத்   தான்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு    பெருமை   சேர்த்த   "  ககன்   நரங்   "   இந்த    மெரீனாவில்   தான் ,  துப்பாக்கியால்  , முதன்  முதலாக   சுட்டு   பயிற்சியை   ஆரம்பித்திருக்கிறார். ராசியான   கடற்கரை  தான்.
மெடலெல்லாம்    கிடைத்திருக்கிறதே.   .
நிறைய    இளைஞர்கள்    அதற்குத்   தான்    பழகுகிறார்களோ  ? . இந்தியாவிற்கு   ஒலிம்பிக்கில்       நிறைய    மெடல்     உண்டு .
கவலையை    விடுங்கள்.

கொஞ்சம்     கடைகள்    பக்கம்   நடப்போமே  என்று    சென்றோம்.
பஜ்ஜி   வாசனை   மூக்கைத்  துளைத்தது.
 தோட்டா   தரணி   உதவி   இல்லாமல், அங்கே   ஒரு   "  ஹோட்டல்  செட்  "   முளைத்து   இருந்தது  .    இந்த  பீச்   காற்றிலும்    எப்படியோ  அடுப்பை  எரிய  வைக்க   லாவகமாக   தடுப்பு    வைத்திருக்கிறார்கள்.
டாக்டரின்    ஆலோசனைகளை  பீச்  காற்றில்    பறக்க விட்டபடி,     இரண்டு  மிளகாய்  பஜ்ஜி,  கண்ணில்  நீர்    வர,வர   சாப்பிட்டோம்

கிளிஞ்சல்  பொம்மைகள்,  கிளிஞ்சல்  திரைச்சீலைகள்,   கிளிஞ்சலில் எல்லா  மத     சாமிகளும்   அருள்பாலித்துக்  கொண்டிருந்தார்கள்.

பலூன்,  காற்றாடி  விற்பவர்கள்    , எல்லோருக்கும்    உணவை  அளிப்பது   பீச்.

குதிரையில்     யார்  இவர்கள்.?
பிருத்விராஜ்,   சம்யுக்தை    போல்     ஆண்கள்  தங்கள்   ஜோடியை   பத்திரமாகப்    பிடித்துக்    கொண்டு    பெருமிதமாக    பீச்    வலம்  வருகிறார்கள்.

பார்க்க    நல்ல  தமாஷ்.
குதிரை  என்ன  செய்தாலும்  வேகம்  எடுக்காது.  ஒரே   ஏரியாவையே   சுற்றி      சுற்றி   வரும் .   இதெல்லாம்  தெரிந்தும்   இந்த   ஜோடிகள்   போடும்   சீன்   இருக்கிறதே ....  .........ஹப்பா..............தாங்கமுடியாது.

இத்தனை     கலாட்டாக்களுக்கு    நடுவில்  ,  கட்டு  மரங்கள்   மறைவில்   ஜோடிக்   கிளிகளாய்     காதலர்கள்,   இளம்    தம்பதிகள்       கிசு கிசு.

அவர்கள்   தனிமையை ,  சுண்டல்    , வேர்கடலை,   பூ,   முறுக்கு,   காபி,   ஐஸ்கிரீம்    என்று    ஒருவர்  பின்   ஒருவராக  வந்து   கெடுக்க  ........அவர்கள்    முகத்தில்      தோன்றுவது    கோபமா   ,   எரிச்சலா,   பரிதவிப்பா,   .............

குடும்பத்துடன்     வந்தவர்கள்   தங்கள்  குழந்தைகள்  "  பேங்க்  " லோன்  இல்லாமல்  வீடு  கட்டி  மகிழ்வதைப்   பார்க்க   ,  குழந்தைகளோ   கிளிஞ்சல்களை   வைத்து  interior   decoration    செய்து   மகிழ்கிறார்கள்.

திடிரென்று ,  "  உங்கள்   அக்கா  சொன்னால்  ஒன்றுமில்லை.  இதையே   நான்  சொல்லியிருந்தால்   என்ன   ஆகியிருக்கும்."   என்ற  உரையாடல்   காதில்  விழ   திரும்பினால்    நடுத்தர    வயதை  எட்டிப்  பிடிக்கும்   தம்பதியரின்   சின்ன  ஊடல் .இந்த  ஊடலுக்கெல்லாம்  பீச்சில்   ஆயுசு   கம்மி.
இவர்களுக்கும்   தனிமை   வேண்டுமே.
இங்கு  நமக்கென்ன  வேலை  .

பட்டம்     மட்டுமா   பறக்கும்   ? 
தட்டும்  பறக்கும்.
' பறக்கும்  தட்டு '  சிறுவர்கள்   விளையாடிக்   கொண்டிருக்கிறார்கள்.


எல்லாவற்றையும்    தாண்டிப்   போனால்  " ஹோ "  வென்ற    இரைச்சலுடன்
நம்    கதாநாயகி.

சிறுவர்  முதல்   பெரியவர்  வரை  அவள்   வருவாளா  என்று    ஏங்கி  நிற்கிறார்கள்..

மிகப் பெரிய   அலையாக ' ஹோ  '    வெனக்   கிளம்பி   கொஞ்சம்  கொஞ்சமாக
தணிந்து    ஒரு  சின்ன   ' களுக் '   சிரிப்புடன்    நம்   கால்களிடம்    ரகசியம் சொல்லித்    திரும்புகிறாள்.

தன்  புது  மனைவி   கையை   கெட்டியாகப் பிடித்துக்  கொண்டு   அவள்  அலையைப்  பார்த்து   பயப்படும்  அழகை   ரசிக்கும்  கணவனை   ரசிக்கிறாளோ   கடல் கன்னி.

இந்த   அமர்க்களமான   சூழ்னிலையில் அங்கங்கே ஓரிருவர்  எதிலும் ஒட்டாமல்  தள்ளி  அமர்ந்து  எதையோ பறிகொடுத்தவர் போல் அமர்ந்திருந்தனர்.. அவர்களுக்கும்    நல்ல  ஆறுதல்  இந்தக்   கடல்.

நினைப்பவருக்கு  நினைத்த  மாதிரி   கடல்  தன்  குணத்தை   மாற்றிக்  கொள்வாள்  போலும்.

அலைகள்    திடீரென   பெரும்  உற்சாகத்துடன்    உயர  உயர  வீச  ,  என்னவென்று     பார்த்தால்    வட்ட     வெள்ளித்   தட்டு ,   போன்ற    சந்திரனைப்     பார்த்து    தான் ,  இத்தனை    ஆவேசம்     அலைகளுக்கு.

பௌர்ணமி   நிலா  வட்டமாக   மேலெழும்பியது..
நிலவின்    வெளிச்சமும்   கலங்கரை  விளக்கமும்     இருளை  அகற்றத்  துணைபுரிந்த  போதிலும்    ,  கூட்டம்     மெதுவாக    கலையத்   தொடங்கியது.

நாங்களும்     கடலையும்    நிலவையும்    பார்த்துக்   கொண்டே    நகர்ந்தோம்..


நான்  எழுதியது     கொஞ்சமே!  விட்டது    நிறைய  இருக்கும் .
 விட்டதைப்   பற்றி    பின்னூட்டங்களில்   குறிப்பிட  தயங்க வேண்டாம்.




RAMA  STORY   END   PART  படிக்கலாம்   இங்கே.


image  courtesy---google

    

Wednesday 20 February 2013

மெரினா (part 1)




சென்னையில்     பிறந்து,  வளர்ந்த     எனக்கு     மிகவும்     பிடித்த    இடம்,   "மெரினா "   பீச்   தான்.

 பீச்   என்று   சொல்லும்   போதே  " ஜில் "  என்று   மாலைக்     காற்று,    என்   முகத்தில்    வீசுவதைப்     போல்  இருந்தது.

இந்த   பீச்சில்    அப்படி  என்னதான்    இருக்கிறது ?   

எதை   சொல்ல  ?  எதை   விட ?

காலையில்     பீச்சிற்கு      சென்று       பார்க்க        வேண்டும் .   
லேசில்     வாய்க்கவில்லை     எனக்கு .   என்  கணவர்   என்னிடம்    சத்தியம்   வாங்காத  குறை  தான். "   அழைத்துப்    போகிறேன்.    ஆனால்    சீக்கிரம்   வீடு    திரும்ப   வேண்டும்  " என்று    உறுதி  மொழி    வாங்கிக்    கொண்டார்.  . ( சீக்கிரமா............?   அது   தானே   பெரும்   பாடு.   ).       நானும்   என்    மனதிடம்   சொல்லி  வைத்தேன்.   " என்   வார்த்தையைக்    காப்பாற்றி  விடு "   என்று.

ஒரு   விடுமுறை    நாளில்  அதிகாலை    எழுந்து     6  மணி  வாக்கில்    பீச்சிற்குக்    கிளம்பினோம்.
வண்டியைப்    பார்க்   செய்து   விட்டு    அங்கிருந்தே     கடலைப்   பார்த்தேன்.
ஆஹா.............   ஆஹா.......... சூரிய   உதயம்     அப்பொழுது  தான்   ஆரம்பமானது.   கடல்   கன்னியிடம்   அனுமதி  பெற்று   மெதுவாக   எட்டிப்  பார்த்தான்  கதிரவன்..   ஆரஞ்சு    நிறம்  அடித்த    நகத்தை   வெட்டிப்   போட்டது   போல்     சூரியன்     வெளியே  வர   ஆரம்பித்தான்.  பிறகு   கொஞ்சம்  கொஞ்சமாக   ஆரஞ்சு  பந்தாக முழுதாக  வெளியே   வந்த    அந்தக்  காட்சி   ,  சிலிர்த்தது   எனக்கு.

அப்பொழுது   நம்  வங்காளவிரி  குடாவைப்   பார்க்க  வேண்டுமே  .  ஏதோ   வைரத்துகள்களை     கொட்டி    வைத்தது   போல   ஜொலிக்க     ஆரம்பித்து விட்டாள் , நம்   கடல்  என்னும்  கன்னி.  

சூரியன்  கொஞ்சம்  கொஞ்சமாக     தன்  வெள்ளிகிரணங்களை     வீசிக்   கொண்டே  மேலெழும்பினான்.

என்னை  மறந்து   நின்றிருந்த   நான்   சுற்றிப்    பார்த்தேன்.
ஓ.......................மார்னிங்    வாக்கர்ஸ்.

பெரிய  பெரிய   அதிகாரிகள்    ட்ராக்   சூட்டில்    நடை பயிற்சி   மேற்கொண்டிருந்தார்கள்.  ஹாயாக    நண்பர்களுடன்  உறவாடிக்  கொண்டே........

IAS   ஆபீசர்ஸ்,அரசியல்வாதிகள் ,  எல்லாம்  சர்வ  சாதரணமாக   பார்க்க  முடியம்..( ஆனால்   இங்கேயெல்லாம்     மனு    எதுவும்  கொடுக்கக்  கூடாதாம்.....வருத்தம்  தான் )

  
 ட்ராக்   சூட்டில்  அழகழகாய்   இளம்  பெண்கள் ,    உடல்  வெயிட்  பற்றிய   அக்கறையுடன் .   காதுகளிலிருந்து  தொங்கும்  ஓயார்களுடன்     தனியாகப்  பேசிக்கொண்டே    நடந்து  கொண்டிருந்தார்கள்.

இந்தப்   பெண்களைப்    பார்க்காதது    போல் ,   பார்த்துக் கொண்டே    இளைஞர்கள் ,  ( வாக்கிங்   போகிறார்களாம்.)

சற்றே     வயதான     பெண்கள்     காலில்   ஷுவுடன்    தங்கள்  கணவர்களிடம்  " தொண தொண " வென்று    எதையோ   சொல்லிக்  கொண்டிருக்க  கணவர்களோ  வெறும்    உம் ........உம்.........

இன்னும்  சற்றே  வயதானவர்கள்   " முணுமுணு "  வென்று  சுலோகங்கள்  சொல்லிக்  கொண்டேநடக்க

 இன்னும் சிலபெண்கள் , காலை   என்ன    சமைப்பது   என்ற சிந்தனையுடன்    நடக்கிறார்கள்.


இந்தியாவே   நடை  பயில்கிறது    சமீபகாலமாக.....
எல்லாம்  நம்மை  தடுத்தா ட்கொண்டிருக்கும்  "டையாபடீஸ் "  உபயம்.
  

எதிர்கால   ஒலிம்பிக்,  ஆசிய  விளையாட்டுப்  போட்டி  என்று   சர்வ     தேசப்  போட்டிகளில்     வெற்றி  பெறப்   போகும்     வீரர்களும்,     வீராங்கனைகளும்    ஓட்டப்  பயிற்சியில்   ஈடுபட்டிருக்கிறார்கள்.( இப்பொழுதே    ஆட்டோகிராப்  வாங்கிக்கலாம்).

சற்றே  தள்ளி   அந்தப்   பக்கம்  பார்த்தால்   ஹா ......ஹா..... ஹா.......  என்று   ஒரே  சிரிப்பு.
" வாய்  விட்டு   சிரித்தால்   நோய்    விட்டுப்   போகும்   "  இவர்களின்   சிறப்பு.
'ஹுமர்    கிளப்'    நடந்து  கொண்டிருக்கிறது.

இன்னொரு  பக்கம்    ஒரே   யோகிகள்    மயம்.  (யோகா   கிளாசை  சொல்கிறேன்).

இடுப்பு வரை   மணலில்  புதைய ,   நின்று   " பிசியோ  தெரபி "   செய்து  கொள்கிறவர்களும்  உண்டு.

இவர்களையெல்லாம்    பார்த்தபடி    பொக்கைவாய் சிரிப்புடன்    நம்
 தேசத்தந்தை     சிலையாகி    நின்றார்.(உழைத்துக்   களைத்த  காலம்  போய்,
களைப்பதற்காகவே  ,  இந்தியா    நடக்கிறதே  என்ற  சந்தோஷத்தில்) 

நடை   பாதை  ஓரத்தில்    இயற்கை  மருத்துவர்கள் .
அருகம்புல்   ஜூஸ்,    வல்லாரை  ஜூஸ்,  இஞ்சி  டீ,  சுக்கு  டீ.
கொத்தமல்லி  காபி,  சுக்கு  காபி   விற்பவர்களை   சொல்கிறேன்.

எதிர்புறத்தில்     இருக்கும்    senate  house   கடிகாரத்தைப்    பார்த்தேன்.
மணி    9   ஆகப்  போகிறதே !   இவர்  கோபித்துக்    கொள்ளப்  போகிறாரே   என்ற   பயத்துடன்    மெதுவாக  அவரை   திரும்பிப்   பார்த்தேன். 

அவர்    தன்னை    மறந்து    கடல்    கன்னியிடம்    மனதைப்     பறிகொடுத்தார்   போல்   தெரிந்தார்.   இது      என்ன   புது   வம்பு...............?

வாங்க   போகலாம்   !   என்று  இழுத்துக்    கொண்டு   வந்து   விட்டேன்.

பத்து  மணி  வாக்கில் எப்படியிருக்கும்   இந்த   பீச்.?

யோசித்துக்   கொண்டே   நடந்தேன்.   இந்தக்   கடலை    அலட்சியம்   செய்தபடி ,   பீச்   ரோட்டில்   பறக்கும்    வண்டிகள்    .,  தலை   தெறிக்க   எதையோ     நினைத்தபடி     அலுவலகங்களுக்கும்,  கல்லூரிகளுக்கும்   பறக்கும்    மக்கள்   கூட்டம்.

மத்தியான  மண்டை  பிளக்கும்   வெயிலில்  கூட    ,அங்கொன்றும் , இங்கொன்றுமாக    காதலர்கள்    இருப்பார்களாம்.   கேள்விப்பட்டிருக்கிறேன்.

மாலையில்     பீச்    மணலில்   கால்  புதைய    நடந்து  கொண்டே   பார்த்தால்........................................ நடப்போம்    வாருங்கள்.........    அடுத்தப்  பதிவில்.................................................................................................................................................


 image  courtesy-----google.

  RAMA STORY PART 4 படிக்க  இங்கே ' கிளிக்'கவும்

 

Sunday 17 February 2013

துறு துறு சிட்டு


"  ஏய் ,  சிட்டு   பேசாம உட்கார் "  என்ற    மிரட்டும்  பெண்     குரல்
 என்னைத்     திரும்பிப்    பார்க்க  வைத்தது.

நாங்கள்  இருந்தது    ஒரு   ஹோட்டலின்     ஏசி   ரூமில்.  

 சுமார்    முப்பது   வயதுடைய   ஒரு     பெண்      தன்   பெண் குழந்தையை (சுமார்    இரண்டரை   வயது)   மிரட்டிக்      கொண்டிருந்தாள்.   தோசையை     ஆர்டர்  செய்து  விட்டு   காத்திருந்த     போது   தான்    இதைக்   கேட்டேன்.

அந்தப்   பெண்  குழந்தையோ   திராட்சைக்    கண்களால்   அம்மாவை    ஒரு   பார்வைப்     பார்த்துக்    கொண்டே     டேபிளின்    மேல்   இருந்த   ஐஸ்  வாட்டர்
கிளாசை    தன்   பக்கம்   மெதுவாக   இழுத்தது. தண்ணீர்    மேலும்  கீழும்   சிந்தியது. சிட்டுவின்    அப்பாவோ    "வேண்டாண்டா   சிட்டு   "   என்று   தண்ணீர்   கிளாசைத்  திரும்பவும்    இருந்த  இடத்திலேயே   வைத்தார்.

ஒரு  இரண்டு  நிமிடம்  ஆகியிருக்கும்.  மிக  அழகான   ரோஸ்  நிற  கவுனில் இருந்த  அந்த  கொழுக்   மொழுக்    சிட்டு   எங்களையெல்லாம்    கண்களால்   ஒருமுறை   அளந்தது.    பிறகு   திரும்பவும்    தன்   அம்மா   அப்பாவை  ஒரு  முறைப்   பார்த்துக்   கொண்டே   ஐஸ்   வாட்டர்  கிளாசைத்  திரும்பவும்     இழுத்தது.திரும்பவும்  கிளாஸ் அதன்   இடத்திற்கே    கொண்டு  செல்லப்பட்டது.  இந்த  முறை  அவள்  அம்மாவால் .   இந்த  விளையாட்டு  கொஞ்ச   நேரம்  போய்  கொண்டிருந்தது.

கொஞ்ச    நேரத்தில்    சிட்டு   குடும்பம்   ஆர்டர்  செய்திருந்ததை    சர்வர்    கொண்டு  வந்து  வைக்க   நம்  கதாநாயகி  ,  அதாங்க   'சிட்டு'   விற்கு    ஒரே   குஷியாகி   விட்டது.    தண்ணீர்  கிளாசை  விட்டு  விட்டு   " எனக்கு   ஓசை "  என்று   மழலை  குரலில்    கேட்க   சிட்டுவின்  அம்மா   தோசையைப்   பிட்டு   ஊட்ட   ஆரம்பித்தார்.  " எனக்கே    வச்சு  "   என்று  பெரிதாக  அழ   ஆரம்பித்தாள்   சிட்டு.

பெற்றோர்  இருவரும்   ஏதோ      திருட்டுத்  தனம்   செய்வது  போல்  அந்த  ஹாலையே    ஒரு   முறை  அப்படி  இப்படி     சுற்றிப்     பார்த்து     விட்டு  '  சரி  சரி   '     என்று     சொல்லிக்     கொண்டே     தோசைத்    தட்டை   அவள்    பக்கம்    நகர்த்தினர்.

அழுகை  அப்படியே    ஸ்விட்ச்    போட்டாற்    போல்  நின்றது. 
தன்     குட்டிக்    கைகளால்    பன்   கன்னத்தைத்  துடைத்து விட்டுக்   கொண்டே    தோசைத்    தட்டை     தன்     பக்கம்    இன்னும்  கிட்டே  இழுத்துக் 
கொண்டாள்.   பாவம்     குழந்தைக்கு     சாப்பிட   வேண்டும்   போலிருக்கிறது
என்று  நினைத்தால்  தோசையைப்  பிட்டு,   பிட்டு   கீழே   போட்டுக்  கொண்டிருந்தாள்.
அவள்  அப்பாவோ   '  உஸ்................அப்பா............என்று  பெரிய  பெருமூச்சு  விட்டுக்    கொண்டார்.

கொஞ்ச  நேரத்தில்   சிட்டுவுக்கு   என்ன  தோன்றியதோ   "  நீயே    சாப்பு  "  என்று     தோசையை  அப்பா  பக்கம்    தள்ளினாள்.

ஹப்பா  ! அவர்களை  சாப்பிட விட்டாளே   என்று  நினைத்தால்   சர்வர்  யாருக்கோ   எடுத்துக் கொண்டு  போகும் சோலா  பூரி   அவள்    கண்ணில்    பட்டு  விட்டது   போலும்.   

எனக்கு   அது   தான்  வேணும்    என்று   மெதுவாக   சுருதி   கூட்ட    ஆரம்பித்தாள்.   சரி  உனக்கும்  வாங்கி  தருகிறேன்  .  அதுவரை  இதை  சாப்பிடு
என்று  அவள்   அம்மா   பையிலிருந்து     ஒரு  cadbury  எடுத்துக்   கொடுத்ததும்  
கொஞ்சம்    அடங்கினாள்.

இதற்குள்    நாங்கள்      ஆர்டர்   செய்த    தோசையும்  வந்தது.  நாங்கள்  எங்கள் வேலையை      ஆரம்பித்தோம்.   மெதுவாக    தோசையை  சாம்பாரில்   நனைத்து   உள்ளேத்   தள்ளிக்   கொண்டிருந்தோம்.

திடீரென்று  "  சிட்டு    சிட்டு ,      வந்துடு "  என்று    அவள்   அம்மாவும்   ,  அப்பாவும்    கீழே     பார்த்துக்   கெஞ்சிக்   கொண்டிருந்தார்கள்.  "  சித்ரா  , வரப் போகிறாயா   இல்லையா"  என்று  அவள்  அம்மா   கத்த,  இன்னும்  சிறிது நேரத்தில்   அவள்  அம்மாவே  அழுது விடுவாளோ    என்று  பயமாய்  இருந்தது.

" ஊஹும்  .............முதியாது   " .  என்று   அடாவடியாக   சொல்லியது   அந்தக்  குட்டி  சிட்டு.  இந்தக்    குழந்தை    எப்படி    கீழே    போனாள்  என்று    நாங்கள்  யோசித்துக்   கொண்டிருக்கையில் ,  பார்த்த       சர்வரும்  இந்தக்   கேள்வியைக்  கேட்டார்.

அவள்  அம்மா " அவள்   எதை  வேணுமானாலும்    செய்வாள். "  என்று  அலுத்துக்  கொண்டார்.
எத்தனைக்   கூப்பிட்டும்      வரும்   வழியாய்  தெரியவில்லை.   அப்படி  என்ன   தான்   செய்கிறாள்   என்று   குனிந்து  பார்த்தால்   தான்  கீழே     போட்ட   தோசையை  இப்பொழுது   தின்றுக்    கொண்டிருந்தாள்.
வேறு  வழியின்றி   அவள்   அப்பாவே  கொஞ்சமாய்    குனிந்து    தூக்கிக்   கொண்டார்.

அதற்குப்   பிறகு    அவர்கள்    அவசர     அவசரமாய்     பில்லை  செட்டில்  
செய்தார்கள் .  அதற்குள்  ஒரு  முறை    தண்ணீர்     எல்லாம்    கொட்டி  அவள்   அப்பா பேண்டை   நனைத்து  விட்டாள்.  பாவமாய்  இருந்தது,  அந்தப் 
பெற்றோரைப்     பார்க்க.ஒருவர்  முகத்தை  ஒருவர்  பார்த்துக்  கொண்டே  என்னமோ   அவர்களுக்குள்    பேசிக்கொண்டே   சென்றார்கள்.

என்    டேபிளைத்     தாண்டிப்    போகையில்     நான்   அவளைப்    பார்த்து    கையை     ஆட்டினேன்.    பதிலுக்கு     எனக்கு     "  ஹாய்  "  வேறு.

இத்தனை     ஆர்பாட்டம்   செய்தும்    எனக்கு    அவளை  விட்டு  கண்களை  எடுக்க  முடியவில்லை.

இவள்    கொடுத்த    அன்புத்   தொல்லையை     அவள்   பெற்றோர்    மறக்க  முடியுமா?
என்னாலேயே    மறக்க  முடியவில்லை.

அந்த     ஏசி    ஹாலையே     கலகலப்பாக்கியிருந்தாள்.   இல்லையென்றால் , எல்லோருமே  அவரவர்     சிந்தனையில்       ஆழ்ந்திருப்போம்.

சிட்டுவால்    கொஞ்ச  நேரம்    எங்களை  மறந்திருந்தோம்.

இந்தக்  குழந்தைகள்     சுகமான    சுமைகளே.
சுமப்பதும்       இன்பமே!

image  courtesy   ---google.

RAMA STORY    படித்து  கருத்திட   இங்கே  க்ளிக்   செய்யவும்.

Wednesday 13 February 2013

தினம் தோறும் காதல்

 














இளம்  ஆண்கள்  , பெண்கள்,   கையில்  இருக்கும்   சிவப்பு     ரோஜாக்கள்   காதலர்   தினம்  இன்று  என்பதை    முரசடிக்கிறதோ?

 அது     மட்டுமா ?  சாக்லேட்   டப்பாவும்,  நுற்றுக் கணக்கான  ருபாய்    கொடுத்து  வாங்கிய  கார்டையும் ,  கொடுத்து   காதலர்  தினம்  கொண்டாடப்படுகிறது.

ஆனால்,  ரோஜாப்பூ   ,   வாழ்த்து  அட்டை  என்று  எந்த  ஆர்ப்பாட்டமும்     இல்லாமல் ,மணமான   தம்பதியர்      காதலர்  தினம்    நாள் தோறும்   கொண்டாடி வருகிறோம்.   இது  மூன்றாம்     பேருக்குத்   தெரியாது.

அதிகாலையில்  ,  சுடச்சுட  டிகாக்ஷன்   இறங்கியவுடன்   முதல்  டிகாக்ஷன்   தன  கணவனுக்காக  ,என்று  எடுத்து வைத்துவிட்டுத்  தான் தனக்கு    காபி  கலந்து  கொள்ளும்   மனைவியை  வீடு  தோறும்   காணலாம். 

வேலைக்குக்   கிளம்பும்   மனைவிக்கு,  உதவியாக  இப்பொழுதெல்லாம்   கணவர் சமையலிலும்,  குழந்தை    வளர்ப்பிலும்     பெரிய   உதவிக்கரம்   
நீட்டுகிறார்கள்.

மொடமொடக்கும்  காட்டன்  புடவையும்,   கைப்பை , சகிதமாக   கிளம்பும்  மனைவியை   பைக்கில்   பெருமையாக  உட்கார வைத்துக்  கொண்டு  அவள்    அலுவலகத்தில் ,   பத்திரமாக   கொண்டு விடும்    கணவர்கள்   ஏராளம்.

தன்  ருசி,  இரண்டாம்   பக்ஷமாகவும்   கணவருக்கு  பிடிக்குமே  என்று  சமைக்கும்   மனைவியின்    அன்பை  என்னவென்று   சொல்வது.

இருவரில்   ஒருவருக்கு  உடல் நலமில்லை  என்றாலும் தன்   துணைக்காக     டாக்டர்   வீட்டிற்கு  அலைபவர்கள்   நிறைய பேர்.

இதில்  பெண்கள்  ஒரு படி  மேலே போய்  கணவருக்காக  விரதம்  இருப்பது  சர்வ  சாதாரணம்.

புடவைக்    கடையில்    கணவனை உட்கார  வைத்து விட்டு   மனைவி  புடவை   செலக்ட்    செய்து  கொண்டிருப்பாள்  . உண்மையே. 

ஆனால் அதைக்   கணவனிடம்  காட்டி    "எனக்கு   நல்லாருக்குமா?"என்று    கணவர்   விருப்பம்  தெரிந்து  கொண்டு    வாங்காத    மனைவிகளே    இல்லை   எனலாம்.

கணவனும்  தன்  பர்ஸ்  இளைப்பதைப்   பற்றி   சிறிதும்  கவலைப்  படாமல் மனைவியின்     சந்தோஷத்தை    மட்டுமே     அவள்  முகத்தில்  தேடுவான்.

மனைவி  கடையில்    ஆண்கள்  பிரிவில்  நுழைந்து ,   தன்   கணவருக்காக   ஷர்ட்    செலக்ட்  செய்யும்   போது    விற்பனை   ஆளே   கொஞ்சம்  கை  அசந்து  தான் போவான்.  இது  கண்  கூடு.

 எத்தனையோ  வீடுகளில்    மனைவியின்    திறமையை  கண்டுபிடித்து  வளர்க்கும்    ஆசானாய்   கணவன்.

சண்டையே  வராதா   என்கிறீர்களா?  உண்டே!
றுகாய்   தானே   தயிர்  சாதத்திற்கு    சுவை  கூட்டும்.
ஊடலும்    வாழ்க்கையை    சுவையாக்கும்.

இந்த  அன்பெல்லாம்    அறுபது  ஆனாலும்,   மணிவிழா  முடிந்தாலும்   ,
தொடரும்.    இந்த  வயதிற்குப்    பிறகு    தாரமே    தாயாகும்   விந்தையைக்
காணலாம்.

இதிலெல்லாம் என்ன   இருக்கிறது?  இதைத்தான்   தினம்   எங்கள்  வீட்டில்   காண்கிறோமே    என்று   முணுமுணுப்பது    கேட்கிறது.

இதையே   தான்  நானும்  சொல்கிறேன்.  
' ஐ    லவ்   யு '   சொல்லாமல்    ,ரோஜா  இல்லாமல்   தினம்  தோறும்    காதலைக்   கொண்டாடுகிறோம்   என்று.

உண்மை  தானே!!


image  courtesy --   google.

Tuesday 12 February 2013

ஆகாசவாணி


 
"ஆகாசவாணி!  செய்திகள்   வாசிப்பது   சரோஜ்  நாராயணசுவாமி "  இதைப்   படிக்கும்   போது   மனம்         காலை  ஏழே   கால்     மணி    பரபரப்பை    உணர்ந்தது.    அந்த   நேர   ஸ்கூல் ,  கல்லூரிக்கு     செல்லும்    பரபரப்பு  ,   அடுக்களையிலிருந்து  மிதந்து    வரும்    சாம்பார்   கொதிக்கும்     மம்    எல்லாமே     நினைவுக்கு  வந்தன..

' ரேடியோ  "    பொழுது    போக்கு    அம்சத்தை     நம்    வீட்டு     கூடத்திற்கு   கொண்டு வந்தது.  இன்று    தொழில்  நுட்பம்    எத்தனையோ    சாதனங்களை    நம்   கையருகில்   கொண்டு வந்திருக்கலாம்.   அதற்கெல்லாம்   முன்னோடி   'ரேடியோ.'

இன்று    திடீரென்று    ரேடியோவிற்கு    எதற்கு    இப்படி  ஒரு        "   டாம்  டாம்  ".
காரணம்   இருக்கிறது   .பிப்ரவரி  13   , உலக   ரேடியோ     தினமாகக்     கொண்டாடப்படுகிறது  .     நாளிதழில்  படித்ததும்      மனம்    பின்னோக்கி     செல்வதை    தடுக்க  முடியவில்லை. சட்டென்று   சின்னப்  பெண்ணாகி    விட்டாற்  போல்   மனம்   துள்ளியது.

கடிகாரம்    பார்க்க வேண்டிய    அவசியம்  இல்லாமல்   காதால்  நிகழ்ச்சியைக்   கேட்டே    நேரம்   தவறாமல்    காரியங்களை  நடத்திக்  கொண்டிருந்தோம்.

"ஆகாஷவாணி " , " ஆல்     இன்டியா    ரேடியோ "   ஆனது.

நேயர்    விருப்பம்    இன்றும்    எனக்கு    விருப்பமே என்னைப்   போல்   நிறைய  பேர்     உண்டென்றே    நினைக்கிறேன்.

மெட்ராஸ்   A   ,  மெட்ராஸ்    B  ,   திருச்சி   என்று  பல  ஸ்டேஷன்களை    மாற்றி   மாற்றி   கேட்டிருக்கிறேன்.

ரேடியோ    சிலோன்  ல்    வரும்    பிறந்த நாள்  வாழ்த்து     நிகழ்ச்சி   பலரும்   விரும்பிக்   கேட்கும்   ஒன்று   ஆகும்.
"வாழ்த்துகிறவர்கள்    அம்மம்மா,  அப்பப்பா,   மாமி,    மாமா ....... "  என்று  நீண்டு     கொண்டே  போகும்  லிஸ்ட்டை யே    ரசிப்பவர்கள்   நிறைய  பேர். 

வீட்டில்    ரேடியோ   வாங்கிய   அன்று    எப்படி   ஒரு   சந்தோஷத்தில்    மிதந்தோம்    .அப்படியே   நினைவில்  இருக்கிறது.   

 திருச்சி  ஸ்டேஷனும்     ரேடியோ    சிலோனும்  கேட்பதற்காக     ஒரு    பெரிய    ஏரியல்    ஹாலில்    நீளமாகக்     கட்டியும் ,    ரேடியோ    சிலோனில்    TMS ம்  , சுசீலாவும்   தொண்டைக்   கட்டு   வந்தது    போல்   தான்  பாடிக்  கொண்டிருந்தார்கள்.

விவித்பாரதி ,   நாம்  வணிகமயமாகப்    போவதை   முன்கூட்டியே    நம்  வீட்டிற்குள்    வந்து   அறிவித்தது.    அதில்     வரும்   தேன்கிண்ணம்   நிகழ்ச்சிக்கு      அப்போதெல்லாம்     பெரும்      ரசிகர்      பட்டாளம்   உண்டு.   சினிமாப்    பாட்டுக்கு   மட்டுமல்ல ,  அதில்   வந்த   விளம்பரங்களுக்கு   கூடத்தான்   ரசிகர்கள்.     சாரிடான்    ,    அர்ச்சனா   ஸ்வீட்ஸ்,  நரசுஸ்   காபி    விளம்பரம்.,   இது    போல்     நிறைய   ......... .மனதைக்    கொள்ளையடிக்கும்.
சினிமா   பாட்டு  மட்டுமல்ல,   கர்நாடக   சங்கீதமும்,  இசைவிழா,   நாடக   விழா        எல்லாமே    காதிற்கு    விருந்து      தான்.  

கிரிக்கெட்  மேட்ச்    கமெண்டரி   மறக்க முடியுமா.? கிரிக்கெட்  க்ரௌண்டை   கண்ணால்  பார்க்காமலே     mid on  ,  midoff,  covers   எல்லாமே    கற்பனையில்..........   நாம்    நினைக்கின்ற இடம்  தான் .     .Pataudi    catch   பிடித்தது   அப்படியே    மனக்  கண்ணில்    விரிய  வைக்கும் ,  கமெண்டேடர்    சாமர்த்தியம்.

இது  மட்டுமா,   கும்பாபிஷேகங்கள்,   பெரிய  தலைவர்களின்   மரணச்செய்தி,  எல்லாமே    சட்டென்று  வீடு  வந்து சேர்ந்து விடும்  . வானிலை அறிக்கையும்     வந்தடையும்.    

அதன்    படி    மழையெல்லாம்    வருமா?   

உஷ்.......... அதெல்லாம்    கேட்கக்   கூடாது.

அதற்குப்  பிறகு    transistor  வந்தது.  பார்ப்பதற்கும்   ரேடியோவின்  சிஸ்டர்   தான்.   டேப்    ரெகார்டர்    வந்தும்    ரேடியோவின்    மவுசு   குறையத்தானில்லை.

தற்போது    FM    களின்   ஆட்சி    . கைபேசியிலேயே   கேட்டுவிடலாம். ஆகவே    இப்பொழுது   ரேடியோ  அவசியமில்லை  என்ற  நிலைக்கு   வந்துவிட்டோம்.  

சட்டென்று  ஒரு  குரல்    "இன்றைய    தலைப்புச்  செய்திகள்."
ஓ!   நான்      இப்பொழுது    "டிவி"   முன்னால், கையிலோ   " ஐபேட் " 

டிவியும்  ,  இணையமும்  , சேர்ந்து    ரேடியோ   ரசிகர்களை   கடத்திக்  கொண்டு  போய்     விட்டது   என்று    நினைத்தால்......   

இல்லை  , என்கிறது  புள்ளிவிவரம்*.உலகளவில் 1,00,000 ற்கு   மேல்   ரேடியோ  ஸ்டேஷன்களும் , 2,00,000  கோடி   ரேடியோக்களும்,  அதற்கான  ரசிகர்களும்   உள்ளார்களாம்.

நம்மை  மகிழ்விக்கும்,  ரேடியோவைக்   கண்டுபிடித்துக்   கொடுத்த   ' மார்கோனி 'க்கு 
" hats  off ".


என்னுடைய   ஆங்கிலப்  பதிப்பு  RAMA STORY  
இங்கே  க்ளிக்  செய்து   படியுங்களேன்.கருத்தும்  எழுதுங்கள்.

*young world dt 12th feb
 courtesy -- google  

Saturday 9 February 2013

நிறைந்த காதல்.
















" எவ்வளவு   நேரம்  உனக்காகக்    காத்திருக்கிறது? " 

"சீக்கிரம்   தான்    கிளம்பினேன்.      டிராபிக்கினால்   தான்   லேட்டாகிவிட்டது."

இந்த   உரையாடலைக்   கேட்டதும்    'பார்க்'கில்     நடைப்   பயிற்சி    செய்து    கொண்டிருந்த     நான்   சட்டெனத்    திரும்பிப்     பார்த்தேன்.

கண்களில்     தீப்பொறி     பறக்க,    துப்பட்டாவை   சரி  செய்து  கொண்டே ,   அந்தப்   பெண்   தன்னை   நோக்கி     வந்து    கொண்டிருந்தவனிடம் வார்த்தைகளை          வீசினாள்.  " உன்  மொபைல்  என்ன  ஆச்சு?  sms  ஆவது  செய்தாயா? "அந்தப்    பையனை   பார்க்கவே    பரிதாபமாக    இருந்தது.    லேட்டாக    வந்த    ஸ்கூல்    பையனைப்   போலவே  திரு  திரு   முழியுடன்......... 

இது        மாதிரி        நிறைய,  அவ்வப்பொழுது   பார்க்கில்   கண்டு  ரசிக்கலாம்.   

இந்த     காதலர்கள்  இடையில் ,      அன்னப்பறவையாய் ,   மாட்டிக்   கொண்டு   பாடாய்   படுவது     கைக்கடக்கமான     மொபைல்கள்    தான்.  

என்னதான்     பேசுவார்களோ  தெரியாது? பேசி  கொண்டே...........................இருப்பார்கள்.   

ஆனால்  ஒவ்வொரு    ஜோடியைப்   பார்க்கும்  போதும்    இவர்கள்    காதல்    திருமணத்தில்     முடிய    வேண்டுமே   என்று    நான்  வேண்டிக்  
கொள்வேன்  .

என்னோடு    நடக்கும்    தோழி     சொன்னாள்.

"  உன்    வேண்டுதலை    அத்துடன்     நிறுத்திக்    கொள்ளாதே.  அந்தத்       தம்பதியர்     மணமுறிவில்லாமல்       நீண்ட   நாள்   சேர்ந்தே    இருக்க    வேண்டும்     என்றும்    வேண்டுதலை   நீட்டிக்   கொள்."

உண்மை   தான்.    இப்பொழுதெல்லாம்    பெரும் பாலான   காதல்  ,  திருமணத்தில்   தான்    முடிகிது.

ஆனால்  திருமத்திற்குப்   பின்.....................................

காதலிக்கும்   போது     நிறைகள்    மட்டுமே  தெரியும்   துணைக்கு,    திருமணத்திற்கு    பிறகு    குறைகள்   மட்டுமே    பூதாகரமாகத்   தெரிகிறது.

நான்  சொலவதில்  உண்மை  இல்லை  என்றால்,   குடும்ப  நல  நீதி மன்றங்கள்  என்றைக்கோ   மூடு  விழா   கண்டிருக்கும்.

சின்ன  சின்ன   விஷயங்களிற்கு   கூட  , விட்டுக்   கொடுப்பது   குறைந்து  கொண்டே  வருகிறது.

எல்லா     காதலர்களையும்  ,  தம்பதிகளையும்   இந்த   லிஸ்டில்   சேர்க்க  முடியாது.  சிலர்   தான்  இப்படி......   கோர்ட்   படி  ஏறுகிறார்கள்.  

இந்த  சமயத்தில்   ' O Henry '   ன்  கதை  ஒன்று   நினைவிற்கு  வருகிறது.
நிறைய  பேருக்கு  இது  தெரிந்திருக்கலாம்.

அதன்   தமிழாக்கம்   இதோ.........

வறுமையில்     வாடும்    கணவன்   மனைவி  .ஒருவருக்கு  ஒருவர்   கொடுத்துக்     கொள்வதற்கு     அன்பைத்     தவிர     வேறெதுவும்  பெரிதாக  எதுவும்     இல்லை.

மனைவி     தன்     நீண்ட   அழகிய      கூந்தலை    சீவி  முடித்து  கொண்டையிடும்போது    ஒரு       " ப்ரூச் "    இருந்தால்    அழகாக   இருக்குமே  என்று  நினைக்கிறாள்  .    அவள்  நினைப்பது    அவள்  கணவனுக்குத்  தெரியும்  .
ஆனால்  என்ன   செய்வது?.........................................

சரி   .    கிறிஸ்துமஸ்   பரிசாகவாவது    குடுக்க   முயல்வோம்  என்று    நினைக்கிறான்.

கிறிஸ்துமஸ்    வருகிறது...........
 மனைவிக்கு    அவள்    கணவனிடம்    இருக்கும்  பாரம்பர்யமான   வாட்ச்   பற்றித்  தெரியும்.       அதற்கு    தங்க  ஸ்ட்ராப்   வாங்கி    கொடுக்க    நினைக்கிறாள்.  கிளம்புகிறாள்.

கணவனோ     இவள்   கூந்தலிற்கு  ' ப்ரூச்  '   வாங்கக்   கிளம்புகிறான்.

இருவரும்    பணத்திற்காக    அலையோ     அலை   என்று    அலைகிறார்கள்.
கிடைக்கவில்லை.

மாலை  இருவரும்   வீடு   திரும்புகிறார்கள்.   மனைவி    வாட்ச்   ஸ்ட்ராப்புடனும்,   கணவன்   'ப்ரூச்'சுடன் .

வீடு   திரும்பிய   இருவருமே     அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
கணவன்    தன்னுடைய     பாரம்பர்ய     வாட்சை   விற்று     ப்ரூச்   வாங்கியிருக்கிறான்.

மனைவியோ     தன்     கணவருக்காக    அழகிய    நீண்ட   கூந்தலை   ' விக்'  செய்யும்    கடைக்கு    விற்று விட்டு  வாட்ச் ஸ்ட்ராப்  வாங்கி வந்து விடுவாள்.


இருவருக்கும்  புரிகிறது   தாங்கள்    வாங்கி   வந்தது     இனிமேல்    உபயோகப்படாது    என்று   .

 கண்கள்   குளமாகின்றன  .
 காதலோடு   மனைவியை   இழுத்து   அணைத்துக்   கொள்கிறான்.    

அங்கு    வார்த்தைகளே   இல்லாமல்        காதல்    உணரப்பட்டது.

வறுமையின்    உச்சத்திலும்    காதல்    வளமாக  இருக்கிறது   இல்லையா?

 உண்மைக்    காதல் ,  துணையை     அவர்களின்     குறைகளோடு  ஏற்றுக்கொள்ளச்    செய்யும்  என்பதில்  சந்தேகமேயில்லை.

காதலர்கள்    அனைவரும்   படிக்க  வேண்டிய  கதை   தானே  இது.





PAATTI   STORIES    படிக்க    இங்கே 'க்ளிக்'  செய்யுங்கள்

Wednesday 6 February 2013

அழகோ அழகு










நம்   நாட்டிலிருந்து   Miss  world, Miss Universe       எல்லாம்    வந்த பிறகு   நம்  ஊர்    பெண்களின்  மனமோ   அழகு  நிலையங்களை   சுற்றியே       வட்டமிட   ஆரம்பித்தன.
முன்பெல்லாம்    அழகு     நிலையங்களை   மேல்தட்டுப்     பெண்கள்  ,   நடிகைகள்    ஏகபோக    உரிமை     கொண்டாடி    வந்தார்கள்.    ஆனால்    இப்பொழுது    நடுத்தர     வர்க்கப்   பெண்களும்    
" பார்லர் "   சென்று  தங்களின்   அழகை   மேலும்   மெருகூட்டிக்    கொண்டிருக்கிறார்கள்.

தெருவுக்குத்     தெரு     காளான்கள்     போல்   முளைத்திருக்கும்   அழகு    நிலையங்களே   அதற்கு     சாட்சி.

அழகு    அவர்களின்    தன்னம்பிக்கையைக்    கூட்டுகிறது.    நல்ல    விஷயம்    தான்.

சில    சமயம்    தரமற்ற    நிலையங்களுக்கு    சென்று     வம்பை  விலைக்   கொடுத்து   வாங்குவதும்    அங்கங்கே    அரங்கேறிக்   கொண்டுதானிருக்கின்றன.

வம்புகளில்  மாட்டிக்   கொள்ளாமல்      இருக்க   இயற்கை   அளித்த   அழகு    சாதனம்   ஒன்றைப்   பற்றிப்   பார்ப்போமா?

வேறென்ன?   .     நம்   பொக்கிஷம்    வேம்பு   தான் .ஒவ்வொரு   வேப்ப  மரமும்   ஒரு  beauty   parlour  தான்.

இணையத்தில்    உலா   வந்துக்   கொண்டிருக்கும்   வேம்பைப்   பற்றிய  ரகசியம்
இதோ

தினமும்    இரண்டு   அல்லது     மூன்று     வேப்பிலைகளை    கண்ணை    மூடிக்  கொண்டு    மென்று     தின்று    விடுங்கள்.   உங்கள்    உடம்பிலுள்ள   அசுத்தங்களை     நீக்கும்    நல்ல    டிடர்ஜன்ட்.  (நன்றாகவே    கசக்கும்.
கண்ணை   மூடினால்  கசப்பு    குறையலாம்  அல்லது  இரண்டு   நாட்களில்   கசப்பு   பழகிவிடும்) 

அப்புறம்  என்ன ,   அகத்தின்    அழகு     முகத்தில்     தெரியும்    பாருங்கள்.

வேப்பிலைகளை   தண்ணிரில்    கொதிக்க வைத்து   அதை  நீங்கள்   குளிக்கும்     நீரோடு   கலந்து  விடுங்கள்.  ஒரு  நல்ல    de-odorant   ஆக  நம்   உடலிற்கு    துர்நாற்றத்திலிருந்து   விடுதலை   கிடைக்கும்.

அழகி    கிளியோபாட்ரா    கழுதைப்    பாலை    பாத்  டப் பில்   நிரப்பி   குளித்தாள்   என்று    கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாம்    வேப்பிலை    நீரில்    குளிப்போமே?

தோல்  அலர்ஜிக்கு    மிகச்சரியான   மருந்து    இந்த  வேப்பிலை.  வேப்பிலையை    அரைத்து    தோல்  அலர்ஜி   இருக்கும்    இடத்தில்    தடவி    வாருங்கள்.  இரண்டு  மூன்று   நாட்களில்   பலன்  தெரியும்.
இப்பொழுது    நிறைய  பேருக்கு  வருகின்ற    sun  allergy   துண்டைக்   காணோம்   துணியைக்    காணோம்    என்று   ஓடிவிடும்    .

இளம்   பெண்களின்   மிகப்  பெரிய   பிரச்சினையே   பருக்கள்   தான்.
அழகிய    பருவ  மங்கையான   உங்கள்   வீட்டுப்    பெண்களை   வேப்பிலை  பேஸ்ட்   face mask    போட்டுக் கொள்ளச்    சொல்லுங்கள்.

அப்புறம்   பாருங்கள்.  கன்னமா?   தங்ககிண்ணமா?  என்று  உங்கள்  கண்ணே   பட்டு விடும்  .ஜாக்கிரதை.


வேப்பெண்ணை    கூட  ஒரு    மிகப்    பெரிய   கிருமிநாசினி     தான்.   இதை     முகத்தில்    தடவினால்    பருக்கள்    வந்து    சென்ற   தடயமே   இல்லாமல்      இன்ஸ்டன்ட்    ஆக    முகம்  வசீகரிக்கும்.   வெட்டுக்காயம்   தீப்புண்ணிற்கும்    மிகப்பெரிய    ஆறுதலளிக்கும்   இது.


பற்கள்    பளபளக்க  வேண்டுமா?   
கைவசம்    இருக்கவே  இருக்கிறது    வேப்பங்குச்சி..பிறகென்ன ........
பற்களைப்   பார்த்து  முகம்  திருத்திக்  கொள்ளலாம்.

வேப்பிலையைக்    காய   வைத்து   பொடி  செய்து   சின்ன    சின்ன   துணிப்பைகளில்   புடவை  பீரோவில்    போட்டு    வைத்தால்   ,அது     உங்கள்  பட்டுப்    புடவைகளை     பூச்சி      அரிப்பிலிருந்து    காப்பாற்றிக்    கொடுக்கும்     செக்யூரிட்டி     ஏஜன்ட்.  

இதையெல்லாம்     மனதில்     வைத்து     தான்     நம்   முன்னோர்கள்     வேப்பிலையை     தெய்வமாய்     கொண்டாடும்      பாரம்பர்யத்தை      விட்டுச்
சென்றிருக்கிறார்கள்.

அமெரிக்கர்களும்,      ஜப்பானியர்களும் , ஐரோப்பியர்களும்      கூட      வேம்பைப்     பற்றி   தெரிந்து      வைத்திருக்கிறார்கள்.  
அவர்களுக்கெல்லாம்      விட்டுக்     கொடுக்காமல்   நாமே      வேம்புப்      பொருட்களின்    ஆராய்ச்சியில்   முந்திக்  கொண்டு patent  rights   வாங்கிவிட்டால்   நல்லது.


PAATTI   STORIES படித்தீர்களா?
இங்கே   படித்து    நிறை குறை  சொல்லுங்கள். 

image courtesy--google 

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்