Monday 29 June 2020

கம்பனும், கொரோனாவும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-22)


Image Courtesy ; Google.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது, கண்ணிற்குத் தெரியாத ஒரு எதிரி. 
ஆமாங்க... கொரோனா தான். 
நம்பிக்கையுடன் தக்கப் பாதுகாப்புடன் இருப்போம். 
இதுவும் கடந்து போகும்.

அதே சமயம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவைகள் நம்மைக் காப்பாற்றும்.

இப்பல்லாம் வீட்டுக்குள்ளே வரும் போது, முதலில் மாஸ்க்கைக் கழட்டி எறிந்த பின், கையுறை கழட்டி, ஸ்பெக்ஸ், செல் போன் எல்லாவற்றையும்  sanitiserல் குளிப்பாட்டி விட்டு,..." வெறுங்கையுடன் வீட்டுக்குள் நுழைகிறோம் 

ராவணனும் இதையே தான் செய்தானாம். (கொரோனாவுக்காக நாம் செய்வது போல்)

எப்படி? எங்கே? 

போர்க்களத்தில் ராமன்," இன்று போய் நாளை வா" என்று ராவணனிடம் சொல்லவும், ராவணன் இலங்கைத் திரும்பிய காட்சியை கம்பர் படமெடுத்திருக்கிறார் பாருங்கள்..


அரசச் சின்னமான மணிமுடி பத்து, சிவபெருமான் கொடுத்த வாள், எப்பொழுதும், அவனுடனேயே இருந்த வெற்றித் திருமகள், வீரத் திருமகள் என்று அனைவரையும் விட்டு விட்டு வெறுங்கையுடன் இலங்கைத் திரும்பினான் இலங்கை வேந்தன். என்று சொல்கிறார் கம்பர்.

அவர் வடித்த வரிகள் இதோ...

கும்பகர்ணன் வதைப் படலம். பாடல் எண் 7272


வாரணம் பொருத மார்பும்,
    வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
    நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
    சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
    வெறும் கையோடு இலங்கை புக்கான்

திசை யானைகளின் எதிர் சென்று போரிட்டுத் தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாய மலையை அள்ளி எடுத்த வலிமிகு தோளும், நாரத முனி பாராட்டி ஏற்குமாறு, சாமவேதத்தை இசை நயத்தோடு பாடிய நாவும்,பத்துத் தலைகளில் அணிந்திருந்த அரசச் சின்னமான மணிமுடி பத்தும், தவ ஆற்றல் கண்டு சிவபெருமான் கொடுத்த வாளும், தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும், போர்க்களத்திலே போட்டு விட்டு,தன்னிடமிருந்த பொருட்கள், உறுப்புகள், ஆகியவற்றை இழந்து, வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டும் போனான்.

இதைப் படிக்கும்போது "நாம் இந்தக் கொரோனா காலத்தில் வீட்டுக்குள் நுழைவதைப் போல் அல்லவா ராவணன் இலங்கைக்குத் திரும்பியிருக்கிறான்." என்று நீங்கள் நினைப்பது மிகவும் சரியே.

படித்துக் கொண்டிருங்கள்...

மீண்டும் வேறொரு கம்பன் பாடலுடன் வருகிறேன்.


Tuesday 23 June 2020

குலசேகராழ்வாரும், Total Surrenderம்


குலசேகராழ்வார் கேட்டப் பிறவிகளை எல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்து விட்டு  வருவோமா?

கொக்கு, மீன், பொன் வட்டில், பாரிஜாதம், மலை, சுழித்து ஓடும் ஆறு, நடக்கும் பாதை, என்று ஒன்று மாற்றி ஒன்று கேட்டுக் கொண்டே வந்தவர், "படியாய் கிடந்து பவள வாய் காண்பேனே" என்று கேட்கவும்,

வேங்கடவனும் ," இதை விட ஒரு நல்ல பிறவி இருக்க முடியுமா. குல சேகரனும் என்னருகில் இருப்பான். நானும் அவனருகில் இருப்பேன்." என்று பெருமாள் பெருமூச்சு விடுவதற்குள்....

குலசேகராழ்வார் மீண்டும் மறுதலித்து விடுகிறார்.
ஏன் ?
படியாய் கிடக்கலாம். ஆனால், யாராவது தங்க முலாம், வெள்ளி முலாம் பூசுகிறேன் பேர்வழியென்று செய்து விட்டால்.... அப்புறம் நான் எப்படி பெருமானது செம்பவள வாயைக் காண்பது? என்று யோசித்து அப்பிறவியும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.

"பிறகு என்ன பிறவி தான் இந்த குலசேகரான் கேட்கப் போகிறான்?" வேங்கடவன் புதிருடன் ஆழ்வாரைப் பார்க்க....

ஆழ்வார், வரம் என்று எதுவும் கேட்காமல், " வேங்கடவா! பெருமாளே! எனக்கு திருமலையில் ஏதாவது ஒரு பிறவி கொடுத்து விடேன். உனக்குத் தெரியாதா  எனக்கு எது நல்லது என்று."

பெருமாள் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு," குலசேகரா! இப்பொழுது நீ total surrender செய்து விட்டே இல்லையா? இனி நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு எது நல்லதோ அதை நானே செய்கிறேன்." என்று அருள் செய்திருப்பார்.

உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே


ஒரு கொற்றக் குடையின் நிழலிலே அரசாண்டு, அழகிய ஊர்வசியையே அடையப் பெறினும்,அதனை நான் விரும்ப மாட்டேன்.சிவந்த பழம் போன்ற வாயையுடைய எனது அப்பனுடைய திருவேங்கடமென்கிற அழகிய திருமலையின் மேல் ஏதேனும் ஒன்றாகப் பிறக்கக் கடவேன்.

நாமும் பெருமாளிடம் total surrender செய்து கொண்டால், தீர்ந்தது பிரச்சினை. நமக்கு எது நல்லதோ அதை வேங்கடவனே செய்து விடுகிறான். கோவிந்தா!கோவிந்தா!

இறுதிப் பாசுரம் இதோ:

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

கூர்மையான வேலாயுதத்தையுடைய  குலசேகராழ்வார், நிலைப் பெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வட வேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பெருமானது, பொன் போன்ற சிறந்த சிவந்த திருவடிகளை சேவிப்பதற்கு ஆசைப் பட்டு வணங்கி, அருளிச் செய்த தமிழ் பதிகத்தை கற்று வல்லவர் அப்பெருமானது திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்.

இத்தொடருடன் பயணித்த/பயணிக்காத  அனைவரும், எல்லா நலங்களும், வளங்களும் பெற திருவேங்கடவனை வேண்டுகிறேன்.



Sunday 7 June 2020

குலசேகராழ்வாரும், குலசேகரப்படியும்.














திருமலையிலேயே சுழித்து ஓடும் ஆறாய்ப் பிறந்தால் வேங்கடவன் பாதத்த்தின் அடியிலேயே கிடக்கலாம் என்று நினைத்தவர் அதிலும் குறை கண்டு.....

என்ன குறை கண்டிருப்பார் என்று தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்கவும்.

 வேறென்ன பிறவி கேட்கலாம்? யோசிக்கிறார் ஆழ்வார்.


"நான் இத்திருமலையில் ஒரு பாதையாகக் கிடந்து விடுகிறேனே. உன் பக்தர்கள் உன்னைத் தரிசிக்க நடந்து வருகின்ற போது, அவர்களுடைய பாதம் படும் பாக்கியத்தையும் , உன் அருகில் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றவனாவேன் . " வேங்கடவனிடம் வேண்டிக் கொள்கிறார்.

அப்பாடி..... "2 in 1" வேண்டுதலை  முடித்து விட்டோம்  என்று பெருமூச்சும் விட்டிருப்பார்.

பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே.

இளம் பிறையை உடைய ஜடா முடியைக் கொண்ட சிவனும், பிரமனும், இந்திரனும், செய்கின்ற யாகங்களின் பயனாக, அவர்களின் கோரிக்கையை தீர்த்து வைப்பவனும், வேதங்களில் பரம்பொருளாய் கூறப் படுகின்ற எம்பெருமானுடைய , திருவேங்கட மலை மேல் (போகிற) வழியாய் கிடக்கின்ற நிலையை உடையவனாகக் கடவேன்.

ஆனால் இந்த 2 in 1  வேண்டுதலும் அவருக்குத் திருப்தி தரவில்லை போலும்.

"வேண்டாம்! வேண்டாம்!  பெருமாளே ஒருவேளை உன் பக்தர்கள் தாங்கள் நடந்து வரும் பாதையை மாற்றிக் கொள்ளலாம். அல்லது, அரசாங்கத்தார் பாதையையே அடைத்து விடக் கூடும்.. அப்பொழுது நான் உன்னை விட்டுப் பிரிய நேரிடுமே பெருமாளே. அதனால் இப்பிறவியும் வேண்டாம் ."

என்று யோசிக்கிறார்.யோசித்து ஒரு முடிவுக்கும் வந்து விடுகிறார்.

பக்தர்கள் கால் படும் படி கிடக்க வேண்டுமென்றால் ஏன் மலை மேல் இருக்க வேண்டும் ? வேங்கடவன் அருகிலேயே இருந்து விட்டுப் போகிறேன். .  தேவர்களும், ஞானியர்களும், ரிஷிகளும் , பக்தர்களும் , "கோவிந்தா! கோவிந்தா!" என்று கோஷமிட்டுக் கொண்டே மிதிக்கும்,உன் சன்னிதியின் உள் வாயிற் படியாய் கிடந்து விடுகிறேனே. பக்தர்கள் பாதங்கள் படும் பாக்கியமும் கிடைக்கும். உன் செம்பவள அதரத்தை தரிசித்துக் கொண்டேயிருக்கும்  பாக்கியமும் எனக்குக் கிடைத்து விடும் என்கிற நோக்கில்...

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

செடி போல் அடர்ந்து மண்டிக் கிடக்கின்ற பாவங்களைப் போக்கும் திருமாலே, பெரியோனே, வேங்கடவா! உன் கோயிலின் உள் வாசற்படியில், பக்தர்களும், தேவர்களும், அப்ஸரஸ் போன்ற ஸ்திரீகளும், இடைவிடாது சஞ்சரிக்கப் பெற்ற படியாய் பொருந்தி உன் செம்பவழம் போன்ற அதரத்தைக் காண்பேனாகக் கடவேன். 

ஆனால், இந்த வேண்டுதலிலும் அவருக்குத் திருப்தியாகவில்லை என்று அவருக்கே புரிய வர," வேண்டாமப்பா...வேண்டாம்" என்று சொல்லி விடுகிறார்.

ஏனாம்?

"அதான் உபயதாரர்கள் ரெடியாக இருப்பார்களே. வாசற்படிக்கு பொன் முலாம் , வெள்ளி முலாம் பூசுகிறேன் பேர்வழியென்று படியை மூடி விட்டால்...நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறதே! அருகில் இருந்தும் உன் தரிசனம் கிடைக்காமல் போய் விடுமே. அதனால் எனக்கு இதுவும் வேண்டாம்."

(நல்ல வேளை.அவர் சந்தேகப்பட்டது போல் எதுவும் நடந்து விடவில்லை. பெருமாள் கோவில்களில் முலாம் பூசப்படாத 'குலசேகரப்படி'யை இன்றும் காணலாம். திருமலையிலோ 'குலசேகர துவாரம்' என்கிற நாமத்துடன் ஒரு வாயில் விளங்குகிறது.)

பெருமாளுக்கும் சலிக்கவேயில்லை போலும். நீயாச்சு உன் வேண்டுதலுமாச்சு என்று சலித்துக் கொள்ளாமல் பொறுமையாய் மாறாப் புன் முறுவலுடன் சேவை சாதிக்கிறார்.

அடுத்து என்ன?                                                        (தொடரும்)


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்