Monday 23 September 2019

கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-4.)



image courtesy:Google.

கம்பனும், சாம்பாரும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

வாசலில்  இரண்டு மயில்கள், கழுத்தை ஒய்யாரமாக திருப்பி பார்த்துக் கொண்டிருந்தன....மாக்கோலத்தில்... 

யார் போட்டிருப்பார்கள்? நாத்தனாராய் இருக்குமோ.....
கூறைப் புடவை சரசரக்க....புது மஞ்சள் சரடும்,....மாலையுமாய்.... அவரின் கரம் பற்றி இல்லம் புகுந்தேன்...

சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தேறிய பின்னர்...வந்து உட்கார்ந்தேன்....இல்லையில்லை உட்கார வைக்கப்பட்டேன். 

ஆமாம்....கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தான் இருந்தது. எல்லோருமே புது முகம் என்னவர் உட்பட.... திரு திரு என்று முழித்துக் கொண்டு...என்னை சுற்றி நடப்பதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

"அந்த ஜமுக்காளத்தை இங்கே போடு."

" இலை வாங்க சொன்னேனே கணேசா ...வாங்கிட்டியா?"

"அக்கா ....சாம்பாரில் உப்பு சரி தானே! பாத்து சொல்லுங்களேன்."

இப்படி வீடே பரபரத்துக் கொண்டிருந்தது. குனிஞ்ச தலை நிமிராமல் நானும், என்னை அவ்வப்போது பார்க்கும் அவரும்....அமர்ந்திருந்தோம்.

ஒரே அமர்க்களமாய் இருந்த கல்யாண வீடு..சட்டென்று அலர்ட் ஆனது.

தெருவிலிருந்து உறவினர் ஒருவர் வந்து," அத்தை வராங்க! அத்தை வராங்க!" என்று கட்டியம் கூறுவது போல் சொல்லவும்,

அடுக்களையிலிருந்து பெண்கள் , கூடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்கள் என்று எல்லோரும்,"வந்தாச்சா...அத்தை வந்தாச்சா!" என்று கேட்டதிலிருந்து, அவர்கள் எல்லோரும், பதட்ட நிலைக்கு செல்வது புரிந்தது.

அவரின் தூரத்துப் பெரியம்மா அருகில் வந்து," அத்தை வந்ததும், உடனே ஆசீர்வாதம் வாங்கி விடுங்கள்" என்று எங்களைப் பார்த்து சொல்லவும், 

"ஏன் உடனே கிளம்பி விடுவாங்களா?" வெடுக்கென்று கேட்க நினைத்ததை, அப்படியே முழுங்கினேன்.
( அவசியமில்லாமல், வாயைத் திறக்காதே!இது நீ வாழப் போகும் இடம்.என்று மைண்ட் வாய்ஸ் எச்சரித்தது.)

அந்த வி.ஐ.பி அத்தையை எல்லோரும்,என் மாமியார் உட்பட தடபுடலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். என்னவர் 'அத்தை அத்தை' என்று தனி மரியாதை காண்பிக்கவும்.....

பிறகு ஒரு நாள் தனிமையில் ,"அந்த அத்தை என்றால் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமோ?" நான் கேட்க....சின்னதாய் ஒரு ஸ்மைல் செய்து விட்டு," அப்படியும் வைத்துக் கொள்ளலாம். "என்றார்.

"அப்படினா" நான் கேட்க...

"போகப் போகத் தெரியும்" என்று அவர் சொல்ல ...அதன் அர்த்தம் ஒரு சில மாதங்களிலேயே புரிந்து போனது.

" வி.ஐ.பி அத்தை மிகப் பெரிய ட்ரபிள் ஷூட்டர்" 
(அந்த வி.ஐ.பி அத்தையிடம் நான்  வசமாய் சிக்கி மீண்டது மிகப் பெரிய கதை)

சிக்கி மீண்ட பின் " அத்தையிடம் ஜாக்கிரதையாய் இரு" என்று என்னை அன்றே நீங்கள் அலர்ட் செய்திருக்கலாமே " என்று அவரிடம் கேட்டதற்கு,

அவர்," அத்தை நல்ல மனுஷி தான். எப்பவாவது கொஞ்சமே கொஞ்சம் எடக்கு மடக்கா ஏதாவது சொல்வார் அல்லது செய்வார்." என்று அலட்சியமாக சொல்ல...

விட்டுக் கொடுக்காமல் பேசும் அவரைத் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை வருடங்களாகியும், இப்பக் கூட அவர் சொன்னதையேதான் சொல்கிறார் (வி.ஐ.பி அத்தை பற்றி ) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த ஆண்களே இப்படித் தான் போலிருக்கு....இந்தக் காலம் என்றில்லை...கம்பர் காலத்திலிருந்தே இப்படித் தான் என்று நினைக்கிறேன்.

பின் என்ன? கம்பன் சொல்வதைப் பாருங்களேன்...

சீதா கல்யாணம் முடிஞ்சாச்சு..திவ்ய தம்பதியர் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்!

இப்ப கவனிங்க..

முதல்ல தசரதன் காலில் விழுந்தாச்சு. 

ஆச்சா?

இப்ப யார் கால்ல விழனும் ராமனும், சீதையும்? சொல்லுங்க...

வரிசைப் படி கோசலை கால்ல தானே! 

அதான் இல்லையாம் ...சீதை கரம் பற்றி அழைத்து நேரே போய்  கைகேயி காலில் விழுகிறானாம்  ராமன்.
(கோசலை...பாவம் என்ன நினைத்திருப்பாள்? )

அப்புறம் தான் கோசலையிடம்  ஆசீர்வாதம் வாங்குகிறானாம்.

அதற்குப் பிறகு சுமித்திரை... 

எதற்கு ராமன் (காலில் விழும்)ஆர்டரை மாற்றினான் என்றால்," கைகேயிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்." என்பதை சீதைக்கு சொல்லாமல் சொல்கிறானாம் ராமன் .

கொஞ்சம் வாயைத் திறந்து ராமன் சொன்னால் தான்  என்னவாம். "கைகேயி அம்மா ட்ரபிள் ஷூட்டர். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்."என்று வெளிப்படையாக சொல்லியிருந்தால் சீதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கைகேயிக்கு  'ஐஸ்' வைத்திருப்பாள் இல்லையா. காட்டிற்குப் போக வேண்டிய நிலையே வந்திருக்காது அல்லவா? 

அதனால் தான் சொன்னேன் ராமன் , கம்பன் முதல்  இன்றைய ஆண்கள் வரை தங்கள் வீட்டு உறவினரை விட்டே கொடுக்க மாட்டார்கள்...

கம்பன் எப்படி அதை சொல்கிறான் பாப்போமா?

பால காண்டம். கடி மணப் படலம் . பாடல் எண் 1339

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.



இராமன் சீதையுடன், கேகய மன்னனின் மகளான கைகேயியின் ஒளி மிகுந்த திருவடிகளை, தன்னைப் பெற்ற தாயான கோசலையினிடத்துக் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும், மிகுந்த அன்புடனே வீழ்ந்து வணங்கி,பின்பு தன்னைப் பெற்ற தாயான கோசலையின் இணைடிகளைத் தலைக்கு அணியாக சூடி, அதன் பின்பு உளத் தூய்மை மிக்கவளான சுமித்திரையின் திருவடிகளை வணங்கினான்.

கம்பனின் ராம காவியம் படிக்கப் படிக்க வியந்து போகிறேன்.
நீங்களும் தான் இல்லையா?

மீண்டும் ஒரு கம்பனின் பாடலுடன் சந்திப்போமா?



Thursday 12 September 2019

கம்பனும், சாம்பாரும்.(கம்பன் என்ன சொல்கிறான் -3)

Image Courtesy : Wikkimedia Commons


கம்பனும், ஜன்னலும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

இன்றைக்கு என்ன சமையல் ? கேட்டுக் கொண்டே அவர் டேபிளில் அமர... என் இரண்டு  வாண்டுகளும் எதிர் எதிராக உட்கார ... எங்கள் வீட்டு டைனிங் டேபிள் களைக் கட்டியது.

"இன்றைக்கு வெண்டைக்காய் சாம்பாரும்,உருளைக் கிழங்கு  ரோஸ்ட் "என்றதும், வாண்டுகள் ஜாலியாக டேபிளில் தட்ட ஆரம்பித்தனர்....

குழந்தைகள் இருவருக்கும் உருளைக் கிழங்கு ரோஸ்ட் மிக விருப்பமான ஒன்று.

அதற்குப் பிறகு நடந்தது தான் சூப்பர்.

சுடச் சுட சாதத்தை பரிமாறியதும், சாம்பார் பாத்திரத்தை டேபிளின் நடுவில் நகர்த்தி விட்டு , தண்ணீர் ஜக் எடுக்க உள்ளே சென்றேன்.

"அம்மா சாம்பார்" மகன் குரல் கொடுக்க ,

"அங்கேயே டேபிள் மேல இருக்கு பார்"

"ஓ! இது சாம்பாரா?" என் மகள் குறும்பாகக் கேட்க....

"அதானே! இதுக்குப் பேர் சாம்பாரா?" என்னவரும் சேர்ந்துக் கொள்ள...

எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று நான் எட்டிப் பார்த்தேன்.

"அம்மா நான் ரசம்னு நெனச்சேன்" எங்கள் வீட்டு ராஜகுமாரன் கிண்டலடிக்க...

ராஜகுமாரி மட்டும் லேசுபட்டவளா என்ன?  "இது ரசம் இல்லடா. Two in One.  " அவள் சொல்லி சிரிக்க..

"இது சாம்பாரும் தான், ரசமும் தான்..."அவளுடைய நக்கல் தொடர்ந்தது...

இவரோ," இப்ப ரெண்டு பேரும் என்ன சொல்ல வரீங்க... "

"இது சாம்பாரா? இல்லை ரசமா? "

"இப்ப என்ன பட்டி மன்றமா நடக்குது இங்கே...பேசாம சாப்டுட்டு போய் படிங்க" என்று நான் அதட்ட....

இதெல்லாம் நடந்தது கிட்டத் தட்ட முப்பது வருடம் ஆகியிருக்கும். இன்று நினைத்தாலும் தேனாய் தித்திக்கும் நினைவுகள்.

அதுக்கு இப்ப என்ன வந்தது என்கிறீர்களா?

கம்பன் ராமனை வர்ணித்ததைப் படிக்கும் போது, எனக்கும் மலரும் நினைவுகள் .

அப்படி என்ன கம்பன் சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசையா...

இதோ கம்பன் என்ன சொல்கிறார் பார்ப்போமா....

ராமன், பின்னோடு சீதை, அவர்கள் பின்னால் இலக்குவன் என்று காட்டு வழியாகப் போய் கொண்டிருக்கிறார்களாம்.  அப்பொழுது ராமன் மேல் வெயில் படுகிறதாம். ஆனால் ராமன் மேனியின் பளபளக்கும் கருநீல ஒளியில்  சூரிய ஒளியே  மங்கி விட்டதாம். (என்ன உவமை!என்ன உவமை!) .

இத்துடன் நின்றாரா கம்பர். அவருக்கு அதில் திருப்தி இல்லை.

ராமனின் வண்ணம்.....மையோ?  கண் மை போன்ற கருமையோ! 

இல்லையில்லை, கரும் பச்சை நிறமான மரகதமோ!

ம்ஹூம்.....

மையோ! மரகதமோ! என்று சொல்லிக் கொண்டிருந்தவர். ....இல்லையில்லை... கடலின் கருநீலம் போலலவா இருக்கிறான் நம் நாயகன் என்று நினைத்து, மறி கடலோ என்று வர்ணிக்கிறார்.


ஆனால் கடலின் வண்ணமும், பரந்தாமனின் வண்ணத்தை முழுமையாக சொல்லவில்லை என்று தோன்றவே...

மழை தரும் கருமேக வண்ணம் என்று  சொல்லிப் பார்க்கிறார்.

ஆனால் அதுவும், அவருக்கு சரியாக படவில்லைப் போலிருக்கிறது.
எதை உவமையாக சொன்னாலும், அதற்கு ஒப்பாக மாட்டேன்கிறானே இந்த ராமன்.... எதைத் தான் உவமையாக சொல்வது என்று அசந்த கம்பன்....

" ஐயோ! அவனுடைய ஒப்பற்ற அழகை என்னன்னு சொல்றது " என்று கை தூக்கி சரணடைகிறார் போலும்.

(கவிச் சக்கரவர்த்தியையே அசரடித்து விட்டானே இந்த ராமன் !)

இத்தனைஅழகான ராமன், இடை என்ற ஒன்று இல்லாத சீதையுடனும், இலக்குவனோடும் காட்டு வழியே செல்கிறானாம்.

இதோ அந்த கம்பன் பாடல்..

வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!


அயோத்தியா காண்டம் ; கங்கை படலம். பாடல் எண் 1926

கண்ணுக்கு இடக் கூடிய மையோ! பச்சை நிற ஒளிக் கல்லாகிய மரகதமோ!அலைகள் மறிக்கின்ற கடலோ!பெய்யும் கார் மேகமோ! ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் இந்த ராமன்.சூரியனது ஒளியானது தன் திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் மறைந்து விடும்படியான நிறத்தையுடைய ராமன், இல்லையோ என்று சொல்லத்தக்க மெல்லிய இடையினையுடைய சீதையோடும், தம்பியாகிய இலக்குவனோடும் காட்டு வழியே நடந்து செல்லலானான்.

பாடலின் சந்தமும் நம்மை அசர அடிக்கிறது பாருங்களேன். 

கம்பனுக்கு ஒரு வேளை ராம தரிசனம் கிடைத்திருக்குமோ என்று தோன்ற வைக்கிறதல்லவா இந்தப் பாடல். 

 இருந்தாலும் இருக்கும்....

மீண்டும் இன்னொரு பாடலுடன் வருகிறேன்...

Sunday 1 September 2019

கம்பனும் , ஜன்னலும் .( கம்பன் என்ன சொல்கிறான்?-2)

Image courtesy :http://www.bhagwanbhajan.com


கம்பனும்,செல்போனும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

பக்கத்து வீடு அமளி துமளி பட்டுக் கொண்டிருந்தது. ஜானுவை  பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னார்கள்.
ஜானுவின் மாமா, அத்தை, சித்தி , பெரியம்மா , எல்லோரும் அவரவர் குடும்பத்துடன், வீடு நிறைக்க வந்து விட்டார்கள். குஞ்சு, குளுவான்கள் லூட்டியடித்துக் கொண்டிருந்தனர்.

"அந்த ஜமுக்காளத்தை இங்கே விரி."பெரியம்மாவின் குரல்.

"சிவதனுசை முறிப்பதை விடவும் மாப்பிள்ளைக்கு  பெரிய சோதனை வெயிட்டிங்....." ஜானகியின் தம்பி சொல்ல,

"அது என்னடா? " சித்தி கேட்டாள்.

"நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்த சொஜ்ஜி பஜ்ஜியை மாப்பிள்ளை சாப்பிட்டால் தான் ஜானுவை அவருக்குக் கல்யானம் செய்து கொடுப்பாராம். அப்பாவுடைய கண்டிஷன்."

சித்தி சிரித்துக் கொண்டே அவனை அடிக்கக் கையை ஓங்கவும், ஜானுவின் அம்மா" வேலை எதுவும் இல்லையாடா உனக்கு " என்று முறைத்தாள்.

வீடே களைக் கட்டியது.

நேரம் செல்ல செல்ல எனக்கும் இங்கே இருப்புக் கொள்ளவில்லை. மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சான்னு  என் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ராஜி, பேசாமல் நீ அவர்கள் வீட்டிற்கே போய் விடேன். இப்படி ஜன்னலுக்கும், சோபாவிற்கும், நடையாய் நடக்கிறாய்" அவர் கிண்டலடிக்க...

" சும்மா ஒரு ஆர்வம் தான்... நான் பார்த்து வளர்ந்த பெண் ஜானு. அவளை மணக்கப் போகும் பையன் எப்படின்னு ஆர்வம் இருக்காதா?

சிறிது நேரத்திற்கெல்லாம் சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. மாப்பிள்ளை வீட்டினர் தான். மீண்டும் நான் எட்டிப் பார்க்க.... மாப்பிள்ளை.... . ஜானுவிற்கு ஏத்த ஜோடி தான் என் மனம் கணக்குப் போட்டது.

அவள் ஃபெர்ண்ட்ஸ்  வெளியே எட்டிப் பார்க்க,  ஜானுவின் உறவினர் எல்லொருடைய தலையும்,  எட்டிப் பார்ப்பது புரிந்தது.

பக்கத்து வீட்டு ஜானகிக்குத் திருமணம் என்றாலே , இவ்வளவு பேர் கூடும் போது, மிதிலாபுரி ஜானகி சுயம்வரம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க ஆர்ம்பித்தேன்... அன்று கூட்டம் எப்படி அலைமோதியிருக்கும்!

ஒரு நடை, மிதிலாபுரிக்குப் போகலாமா? பைசா செலவில்லாமல் கம்பன் அழைத்து சென்று விடுகிறார். வாங்க போகலாம்....

இதோ மிதிலாபுரி....

"மன்னன் ஜனகனின் மகள் ராஜகுமாரி ஜானகிக்கு சுயம் வரம்" எல்லா பக்கமும் செய்தி பறந்தது.

சுயம்வரத்திற்கு மன்னர்களும், அரச குமாரர்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

மக்கள் எல்லோரும்," முனிவர் விசுவாமித்திரர், அயோத்தி ராஜகுமாரர்களை அழைத்து வருகிறாராம். கரிய செம்மல் ராமன் சிவ தனுசை நாண் பூட்டி நம் சீதைக் கரம் பற்றப் போகிறாராம்." சொல்லிக் கொண்டிருந்தனர்.(மேட்ச் ஃபிக்சிங்?)

ராம லஷ்மணர்கள் வரவை எதிர் பார்த்து கூட்டம் கூட்டமாய், தெருவெங்கும் மக்கள், உப்பரிகை எல்லாம் மக்கள் வெள்ளம், கன்னில் தெரியும் ஜன்னல்கள் எல்லாம் தலைகள்.

அட...நீலா ....கலா வீட்டுக்குள்  போறாளே.( நீலா, மாலா, கலா நான் சூட்டியப் பெயர்கள்)

நாமும் அவளைப் பின் தொடர்வோம்.

"கலா, மாலா ....உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமாடி? நம் சீதையை மணக்கப் போகும் ராமன் வரப் போகிறாராம்." நீலா சொல்ல

"எங்களுக்கும் தெரியும். பெரிய ராணுவ ரகசியம் சொல்ல வந்துட்டாள். ஊருக்கே தெரியும்.எங்களுக்கு மட்டும் தெரியாதா?"

"ஆமாம் நீங்க ரெண்டு பேரும் ஏண்டி ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு நிக்கிறீங்க..?"

"ராமனைப் பாக்க தான்." கலாவும், மாலாவும் கோரஸாகக் கத்தினார்கள்.

"அப்படியா! " 
கண்கள் விரிய நீலா " நானும் இங்கேருந்து பாக்கட்டுமாடி?" கெஞ்சிக் கேட்க..

"உனக்கெல்லாம் இடம் கிடையாது. ரெண்டு பேருக்கு மட்டும் தான் இங்கே இடமிருக்கு" அழுத்தமாக பதில் வந்தது கலாவிடமிருந்து.

"கொஞ்சம் எனக்கும் வழி விடேண்டி. நான் பார்க்க வேண்டாமா நம் சீதை மணாளனை?"

" உனக்கு வழி விட்டால் நான் எப்படி பார்ப்பதாம்?"இது கலா.

" நீயாவது எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுடி மாலா. நானும்  ராமனைப் பார்க்கிறேனடி."நீலா கெஞ்சினாள்.

அவர்கள் மசிந்தால் தானே....

'நாங்கள் எப்பலேந்து இங்கே காத்திருக்கிரோம். இவள் இப்ப வருவாளாம். நாங்கள் பிடித்த இடத்தை இவளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமாம். போடி போ...வேறு ஆளைப் பாரு." என்று இருவரும் திரும்பித் தெருவில் ராமன் வருகிறானா? என்று பார்க்கத் தொடங்கி விட்டனர்.

நீலா எட்டிப் பார்க்கிறாள்...ம்ஹூம்...ஒன்றுமே தெரியவில்லை. சற்றே குதித்துப் பார்க்கிறாள்... இப்பவும் கண்ணுக்கு எதுவுமே எட்டவில்லை. பின் என்ன தான் தெரிகிறதாம் இவளுக்கு?

" இவர்களுடைய கூந்தலும், இடுப்பு மேகலையும்  தான் எனக்குத் தெரிகிறது " என்று நொந்து கொள்கிறாள்.

சட்டென்று அவளுக்குத் தெருவும், தெருவில் போகும், ராமனின் தரிசனமும் கிடைத்து விடுகிறதாம். 

எப்படி என்று கம்பன் சொல்கிறார்...பாருங்கள்..

ஜன்னலை  மறைத்துக் கொண்டு நின்றிருந்த பெண்களின் வளைந்த இடைகள் கொடுத்த இடைவெளி ஒரு ஜன்னலாக மாற, அந்த இடுக்கில் பார்க்க , ராம தரிசனம் கிடைத்து விட்டதாம்.

இதை விளக்கும் கம்பன் பாடல் இதோ...

பால காண்டம்( உலாவியற் படலம்)
பாடல் எண் 1079


கருங்குழல் பாரம்................
..............................................
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர்
நீக்கு இடம் பெறாது, விம்மும்
பெரும் தடம் கண்ணி, காணும்
பேர் எழில் ஆசை தூண்ட,
மருங்குலின் வெளிகள் ஊடே,
வள்ளலை நோக்குகின்றாள்.

பொருள்:

தனக்கு முன்னே வந்து இராமணைக் காண இடம் பிடித்துக் கொண்டுள்ள  மாதர்களின் கரிய கூந்தல் தொகுதியும், மேகலை சூழப் பெற்ற இடை சார் பகுதியும், நெருக்கம் உற்றனவாய் (இராமன் திருமேணி காணாதவாறு) மறைத்து நிற்றலால், இராமனைக் காண இவையற்ற இடம் இல்லாமையால், வருந்தி மறுகுகிறாளாம் மிகப் பெரிய கண்களையுடைய ஒருத்தி. (அவள் கேள்வியுற்ற இராமனது) பேரழகு, அவனைப் பார்த்தாக வேண்டும் என்னும் ஆசையினைத் தூண்டுதலால், முன்னே மறைந்து நிற்கும் மகளிரின் இடையின், இடைவெளிகளிடையே வள்ளலாகிய இராமனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

பரந்தாமனைப் பர்க்க தள்ளு முள்ளு நடப்பது புதிதா என்ன? "ஜருகண்டி!ஜருகண்டி!" உங்களுக்கும் காதில் விழுமே இப்போது... அதையே தான் கம்பனும் சொல்கிறார். அவருடைய கற்பனையை என்னன்னு சொல்றது !

திரும்பத் திரும்ப படிக்கத் தோணலை இந்தப் பாட்டை? படிச்சிட்டே இருங்க...

வேறொரு கம்பன் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்....
நன்றி...

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்