Friday 26 April 2013

விஷ்.........விஷ்.........விஷ்............





 ராசி  மணியைப் பார்த்துக் கொண்டே  சாம்பார்   தாளித்துக் கொண்டிருந்தாள் கடுகு வெடிப்பதன் மணமும், கறிவேப்பிலை  மணமும் சேர்ந்து  வீடே  சாம்பார்  மணத்தில்  மிதந்து கொண்டிருந்தது.
தயிர் வடைக்கு , கொத்தமல்லி   நறுக்கி  வைத்துக் கொண்டாள். சாப்பிடும்  முன்பாக  போட்டுக் கொள்ளலாம் என்று  நினைத்துக்கொண்டே   கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்..
" பார்க்க சகிக்கவில்லை இப்பொழுது "  என்று நினைத்துக் கொண்டாள்.
"எப்பொழுது நீ பார்க்கும்படியாக இருந்திருக்கிறாய் " என்று கேட்ட மைண்ட் வாய்சை  அலட்சியம்  செய்தபடி  லைட்  மேக்கப்புடன்,  வந்து டீவி  முன்னால்  அமர்ந்தாள் .

ஜன்னல்  வழியாக, விஷ்ணுவின் கார்   வருகிறதா என்று டிவியில் ஒரு கண்ணும், வெளியே ஒரு  கண்ணுமாக இருந்தாள் .
விஷ்ணு தன்  நண்பர்களை  மாலை தேநீருக்கு  அழைத்து  வருவதாக  சொல்லியிருந்தார்.(விஷ்ணு  ராசியின் கணவர்  என்பது  
முந்தைய பதிவைப்   படித்தவர்களுக்குத் தெரியும் )
அதற்குத் தான் ராசி  தயார் செய்து காத்திருந்தாள் .
  டிவியின்  "முந்தானை முடிச்சில் " அவள் சிக்கியிருக்கும் போது. ,கார் ஹாரன் சத்தம் கேட்டது.
டிவியின் " அழுகையை " நிறுத்தி விட்டு  கதவைத் திறந்தாள் .

உள்ளே விஷ்ணுவும்  அவர் நண்பர்களும் நுழைந்தனர்.
எல்லோரும் சக அலுவலர்கள்.  இரண்டு ஆண்கள்  இரண்டு பெண்கள்.
எல்லோரையும்   ராசிக்கும் , ராசியை எல்லோருக்கும், அறிமுகப் படுத்தி வைத்தார் விஷ்ணு .

எல்லோருக்கும் , ஐஸ்   வாட்டர்  எடுத்து  வர  உள்ளே சென்றாள்  ராசி. இரண்டு பெண்களும்  அவள் பின்னோடியே  வந்தனர்.
"ஷைபி , நீ இதை எடுத்து வா"  என்று  டம்ளரை பிரியா கொடுத்தாள்.

உன் பேர்  என்ன  சொன்ன ?   விசாரித்தாள்  ராசி.
ஷைபியா , ஆனால் எல்லோரும் என்னை  ஷைபி என்று தான் செல்லமாக கூப்பிடுவார்கள்  ஆண்டி(aunty)  என்றாள்   அவள்.
(அத்துடன் அவள்  நிறுத்தியிருக்கலாம். விதி விளையாட ஆரம்பித்தது  அவள் நாவில்.)

ஏன்   "விஷ்  " சார்   கூட   அப்படித் தான்  கூப்பிடுவார்  என்ற போது

 ராசி      "ஓ ..........."
நான் ஆண்டி(aunty) .......  ஆனால் அவர்..... "விஷ் " ....... ஷாமே........ " விஷ் ".

ஷைபியாவை  சற்றே  உற்றுப் பார்த்த  ராசிக்கு கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது. பருவப் பெண். அழகாக இருக்கிறாள்  என்று நினைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்திற்கு முன்பாக"  பாக்க சகிக்கலை "என்று சொன்ன மைண்ட் வாய்ஸ், இப்ப  சமாதானப் படுத்தியது , பருவத்தில் எல்லாமே அழகு தான் .நீயும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்தாய் என்று.

 பெண்ணிற்கே உரிய ஜாக்கிரதை உணர்வு ,சற்று தூக்கலாகத் தெரிய ஆரம்பித்தது  ராசியிடம்
  .
எல்லோரும் சிறிது நேரம் உரையாடிக்  கொண்டிருந்தனர்.

ராசி எல்லோர்  குடும்பங்களையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்  .

"ஷைபி "  உன்  கணவர்  எங்கே வேலை பார்க்கிறார் ? --  ராசி 

 ஏதோ  ஜோக்கைக்  கேட்டது போல்  விழுந்து விழுந்து சிரித்து விட்டு
"தெரியாது. கேட்டுத்  தான் சொல்ல  வேண்டும் "என்றாள்  ஷைபி

ஓ .............இன்னும் திருமணமாகவில்லை , நினைத்தாள்   ராசி.(அதற்கென்ன  இவ்வளவு சிரிப்பு)

அதற்குள் பிரியா  "இவள் இப்படித்  தான் .எப்பவுமே ஒரே "கல கல" தான்.ஒரே சிரிப்பு தான். இவள் கூட  இருந்தால்  நேரம் போவதே தெரியாது " என்று பிரியா சொன்னதை ராசி அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது விஷ்ணுவிற்கு  புரிந்து விட்டது.

எதையாவது சொல்லி அவர் சமாளிப்பதற்குள்  ஷைபியா  தொடர்ந்தாள் ."நானும் பார்க்கிறேன். ஒருவர் கூட மாட்டுவதாகத் தெரியவில்லை  .ஏன் " விஷ் "ஷிடம் கூட என்  லவ்  அப்ளிகேஷன்   இருக்கிறது.  ஆனால் அவர் தான்  ஏக  பத்தினி  விரதத்தை  முறிப்பதாக இல்லை என்று தோன்றுகிறது."என்றாள் .


விஷ்ணு ராசி முகத்தைப் பார்க்கத் தாயாராகவேயில்லை.
புயல் சின்னம்  மையம் கொண்டிருப்பதை  அவரால் உணர முடிந்தது.

" விஷ்  சார் ,, நீங்கள் இப்ப சொல்லுங்கள்  நான் ரெடி " இது ஷைபியா .

" உஷ்......உஷ்........ "  இது பிரியா.

" அதெல்லாம் ஆண்டி(aunty ) தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்."  மீண்டும் ஷைபியா .

"சரி ,  எல்லாம்   ரெடி செய்து வைத்து விட்டு  சொல்கிறேன்.  சாப்பிடலாம் " என்று சட்டென்று உள்ளே சென்றாள்   ராசி.

உள்ளே சென்று, எல்லோருக்கும்  மசால் தோசை , சுடச்சுட  ரெடி செய்து விட்டு  எல்லோரையும்  சா ப்பிடக் கூப்பிட்டாள் .

"aunty"   உங்கள் சாம்பார் வாசனை , சும்மா கமகம , என்று ஊரையே  தூக்கியடிக்கிறதே  என்று சொல்லிக்  கொண்டே  எல்லோரையும் முந்திக் கொண்டு ஷைபியா   டேபிளில் உட்கார்ந்தாள் .

எல்லோரும் மெல்லிய உரையாடலுடன்  சாப்பிட , ஷைபியா   மட்டும்   வெங்கலக் கடையில்  யானை  புகுந்தாற்போல்   ஒரே  சத்தம்.


எல்லோரையும் பேர் சொல்லி சார் என்றாள் .

யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

ஆனால் ராசிக்கு என்னவோ  அவள் மூச்சுக்கு  முன்னூறு  முறை" விஷ்  விஷ் "என்று சொல்வதும்  எல்லோரும் அவளை "ஷைபி  ஷைபி " என்று கூப்பிடுவதும் , என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு   என்று தான் தோன்றியது  ராசிக்கு.

விஷ்னுவிற்கு  தெரியும்  இன்று  ராசியிடம்   மையம் கொண்டிருக்கும் புயல் கரையை கடக்க  இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று.  

எல்லோரும்  அவள்  சிற்றுண்டியை  வானளாவ புகழ்ந்து தள்ளி விட்டு விடை பெற்றனர்.ராசி மிச்சம் இருக்கும் வேலையெல்லாம் முடிக்க  போனாள் .

" டமால் டமால் " என்று ஒரே சத்தம்.

விஷ்ணு கண்டுகொள்ளவேயில்லையே.சைனாவில்  ஏற்பட்ட  பூகம்பத்தின்  aftershocks  ம் வீடு  வரை  இருக்குமோ  என்னமோ!

துலக்க வேண்டிய பாத்திரங்கள் தான்   பெரும் சத்தத்துடன்  சிங்கில்  விழுந்து கொண்டிருந்தது.
யார்  மேல் கோபித்து கொள்வது என்று  புரியவில்லை.

விஷ்  ....விஷ்...... என்று விசிலடித்தார் போல்,   பேசிய ஷைபியா வை கோபித்துக் கொள்வதா  அல்லது விஷ்ணுவையா? 
சாமான்கள்   "விஸ்....  விஸ்......"  என்று  பறந்தன

இப்பவும் ஒரு ரியாக்ஷனும்  இல்லை,  கணவரிடமிருந்து.

நேராக  ஹாலிற்கு வந்தாள் .
டிவியிலிருந்து  கண்ணை  எடுக்காமலே

" என்ன சொல்லு ?" என்றார்.

"ஒன்றும் இல்லை.  ஏன்  ஒருத்தரும் உங்கள் ஆபிஸில்  அந்தப் பெண்ணை கண்டிக்க மாட்டீர்களோ?"

' இப்படித் தான்  "விஷ் விஷ்" என்று விசிலடித்துக் கொண்டிருப்பாளோ?'

"ஐயோ !.... அவள் சும்மா  கல கல என்று பேசுவாள். மற்றபடி நல்ல பெண் ," என்று சர்ட்டிபிகேட்  கொடுத்தது தான்   தாமதம் , தொம் தொம் என்று குதித்தாள்   ராசி.(வார்த்தையில் குதித்ததை நிஜமாகவே குதித்தால்.......நினைத்தாலே நடுக்கமாயிருந்தது விஷ்ணுவிற்கு )

அவள் நல்லவள் என்றால்...............அப்ப,  நான்.. என்று முறைத்தாள் 

நான்  ஒன்றும்  பேசவில்லை, என்று  எழுந்து போய் விட்டார்  விஷ்ணு .

மறு நாளிலிருந்து  வீட்டில்   மௌன  யுத்தம்  ஆரம்பமானது.

காபி  டேபிளிற்கு வந்தது. ஒரு" நங்  "
(நீராகாரமாயிருந்தது. ஈ விழுந்தால்  சுதாரித்து எழுந்து ' கேட் வாக் ' செய்யும்.)

சிறிது நேரத்தில் இன்னொரு" நங்". இட்லியும் சட்னியுயம்.
சாப்பிட்டால் காது  மூக்கிலிருந்தெல்லாம் நீர் வந்தது.(சட்னியில் ராசியின் கோபம்  காரமாயிருந்தது)

அவருக்கு பிடிக்காத  பாகற்காய், வாழைத்தண்டு .. இத்யாதி......... சமையலில்.இது  சாம்பாரா , இல்லையில்லை ,ரசம்....இல்லை.....
பட்டிமன்றமே  நடத்திவிடலாம் ! 

மயான அமைதி வீட்டில்.

ஒரு விதத்தில்  இது   விஷ்ணுவிற்கு  சௌகர்யமாயிருந்தது.

இது தான் சாக்கென்று அவர் பாட்டிற்கு  ஆபீஸ் ,டிவி, பேப்பர்  என்று நிம்மதியாக இருந்தார் .

 ராசிக்கோ கோபம்  கொஞ்சமும் குறைவதாய் இல்லை.

எப்படி சமாதானம் செய்வது, என்றே புரிய வில்லை ,விஷ்ணுவிற்கு
இத்தனை வயதிற்கு மேல் இதென்னடா தொல்லை  என்று தோன்றியது
அவருக்கு.

இவ்வளவு வருடங்களாகியும்  இவளைப் புரிந்து  கொள்ள முடியவேயில்லையே  என்று தன்னையே கடிந்து கொண்டார்.

இந்த  கண்ணாமூச்சி  ஆட்டம் ஒரு வாரம் ஓடியது.

ஞாயிற்றுக் கிழமையும் வந்தது.  கொஞ்சம்  வீடு  சகஜ நிலைக்குத் திரும்பும் போலிருந்தது.

காலை ஒரு எட்டு மணியிருக்கும் .போன்  சிணுங்கியது . எடுத்தது  ராசி.
எதிர் முனையில்  ஷைபியா .

"ஆண்டி  எப்படி இருக்கீங்க.
 நான் இப்ப  அங்கே வரணுமே  என்றாள் ."விஷ்  சார்" இருக்கிறாரா " என்று  கேட்டு ராசியின் BP யை  எகிற வைத்தாள் .

ம் ம் .........ராசி சொன்னது.

"அப்படிஎன்றால் கதவை திறங்கள்."

ஓ ..............  வந்தே விட்டாளா? என்று நினைத்துக் கொண்டே போய் கணவரிடம்
உங்கள் " விஷ்..... "(அழுத்தமாக)  வந்திருக்கிறாள்  "என்று கடுகடுத்து விட்டு  உள்ளே சென்று விட்டாள் .

விஷ்ணு தான் போய் கதவை திறந்தார்.

புயலாக  நுழைந்தாள்  ஷைபியா .

"ஆண்டி" எங்கே சார் ?.இருவரும் ஒன்றாக நில்லுங்கள்.நமஸ்காரம் செய்ய  வேண்டும்  "என்று கூறிக் கொண்டே கல்யாணப் பத்திரிக்கையை நீட்டி  விட்டு  "சஸ்பென்சாக இருக்கட்டுமே என்று தான் யாரிடமும் சொல்லவில்லை.உங்களுக்குத்தான் முதல் இன்விடஷன்"  என்று   அவள்  சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,

ராசி உள்ளேயிருந்து எட்டிப்பார்த்து  கூலாக   "ஒரு நிமிடம் இரும்மா .இதோ  வருகிறேன் "  என்று உள்ளே சென்றவள்  வெற்றிலை பாக்கு ஒரு ப்ளவுஸ்பிட்  சகிதம்  தாம்பூலம் கொடுத்து  ஆசீர்வதித்தாள் .

பத்திரிக்கையை  படித்து , கண்டிப்பாக கல்யாணத்திற்கு வருகிறேன் என்று சொன்ன  ராசியை  ஆச்சர்யமாகப் பார்த்தார் விஷ்ணு.

" விஷ்  சார் நான் கிளம்புகிறேன் "என்று சொன்ன ஷைபியாவிற்கு  ராசி " பாத்து ஜாக்கிரதையாக   போய்ட்டு  வாம்மா "  என்று சொன்னதும் விஷ்ணுவிற்கு மயக்கம்  வராத குறை தான்.

அவள்போனவுடன்  ராசி ரொம்பவும் சகஜமாக" சரி வாங்க சாப்பிடலாம்  என்றாளே  பார்க்கலாம்  ,,,,விஷ்ணு கீழே விழாமல் இருக்க  சுவற்றை பிடித்துக் கொண்டார்.

இப்ப " விஷ் "  டர்ன் .
முறைத்துக் கொண்டார்.

என்னை நம்பாமல் தானே இத்தனை  கலாட்டா செய்தாய்"

"இதற்கு பெயர்  வெறும் "  possessiveness "  உங்களுக்குப் புரியவேயில்லை "விளக்கம்  கொடுத்தாள்  ராசி.

இதற்கெல்லாம்  மசியவேயில்லை   விஷ்ணு . 

முகம் கொடுத்தும்   பேசவேயில்லை  .
ஆனால் மனதிற்குள் "ஆமாம்.  புரியவேயில்லை தான் . கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் ........." சொல்லிக் கொண்டார்.


 இந்த  ஊடல் எப்ப   முடியும்?

இன்னொரு பதிவில்  நாம்  ராசி தம்பதியை சந்திக்கும் போது  கண்டிப்பாக ராசியாகி விடுவார்கள் .

அடுத்த கலாட்டா  என்னவாயிருக்கும்...........



பி .கு.  விஷ்ணுவின்  மேல் பரிதாபப் பட்டு யாரும்   அவருக்கு  அனுதாப மன்றம்  ஆரம்பிக்க   வேண்டாம்.
விஷ்ணுவும் ராசியும் கற்பனை கதாபாத்திரங்களே.

image courtesy-----google.

Tuesday 16 April 2013

ராசி--டீக்கடை


 



" ராசியின் டீக்கடை " என்றதும்  ராசி எதோ டீக்கடைக்கு போய் சண்டை  எதுவும் போட்டு விட்டாளோ , அதைப் பற்றியோ, என்று தானே
 நினைத்தீர்கள்.   கரெக்டாக சொல்லி விட்டேனா?   ஆனால் அது தான் இல்லை.

ராசி coffee shop  எதுவும் ஆரம்பிக்கிறாளோ?
அதுவும் கிடையாது.

தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும் .

ராசி என்றைக்கும் போல், அன்றும் சாப்பிட்டு முடித்தவுடன் ,கிச்சன் வேலை  முடித்து , கதவு எல்லாம்  பூட்டியிருக்கிறதா , என்பதை ஒருமுறைக்கு இருமுறை,  நன்றாக பூட்டில் தொங்கி  விட்டுப்(பூட்டியிருக்கிறதா  என்பதை செக் செய்கிறாளாம்) படுத்துக் கொண்டாள்.  வாரப் பத்திரிகை கையில் .. டிவியில் அவள் கணவர்  IPL பார்த்துக் கொண்டிருந்தார். டிவியில் ஒரு கண்ணும், புக்கில் ஒரு கண்ணுமாக இருந்தவள்  அப்படியே தூங்கி விட்டாள் .

திடீரென்று  முழிப்பு தட்டியது.  லைட்  அணைந்திருந்தது. மேட்ச்  முடிந்து விட்டது  போலிருக்கிறது,  என்று நினைத்துக் கொண்டு கணவரைப் பார்த்தாள் .அவரோ   நித்திராதேவியின்  ஆதிக்கத்தில்  .. மீண்டும் தூங்கப் பிரயத்தனப் பட்டாள் .  ஆனால் வந்தால் தானே ! வயதாவதாலோ என்னவோ ஒரு முறை  விழிப்பு  வந்தால்............  அவ்வளவு  தான். லேசில் தூக்கம்  வருவதில்லை. அன்றும் அப்படித்தான்.

 கிர் ............................................... என்ற   ஏசியின்  சத்தம்  ரூமை  நிறைத்தது. எழுந்து லைட்டைப் போட்டு புக் படிக்கலாமா ? வேண்டாம்  ......கணவர் தூங்குகிறாரே  என்று நினைத்துக் கொண்டு பேசாமல் படுத்திருந்தாள் . மெல்ல  தூக்கம் வரும் போலிருந்தது.   கர .....கர .....கர் கர் ....என்று  ஏதோ சத்தம்.  யாரோ  கதவு  தாழ்ப்பாளை  திறப்பது போல் ........ அரைத் தூக்கத்திலிருந்த  ராசி இப்பொழுது  நன்றாகவே  முழித்துக் கொண்டாள்.

யாராவது   திருடனாயிருக்குமோ?
மெதுவாக  கணவரைத்   தொட்டாள் . திடுக்கிட்டு முழித்த அவர்   ," எத்தனை  வாட்டி  சொல்வது?  நான்  மாத்திரை எல்லாம் சாப்பிட்டு விட்டேன்.பேசாமத் தூங்கு "என்று  சொல்லி  விட்டு  திரும்பிப்  படுத்து  விட்ட இடத்திலிருந்து  தூக்கத்தைத்  தொடர்ந்தார்.

திரும்பவும்  அதே சத்தம்  " கர்  கர்  " என்று.

ராசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.நிச்சயமாக திருடனாகத்தானிருக்கும்   என்று தீர்மானித்து  விட்டாள் .  பேசாமல்   போலிசிற்கு  போன் பண்ணி விடலாம்  என்று  தீர்மானித்தாள்.எதற்கும் ஒரு முறை தன கணவரை கேட்டு விடலாம்  என்று தீர்மானித்தாள் .

இப்படித் தான் முன்பொரு முறை தன  voterr id cardஐக்  காணோம் என்று  நேராக போலீசில் கம்ப்ளெயின்ட்  கொடுத்த கதையெல்லாம் நினைவிற்கு வந்தது.அன்று அவள் வாங்கிய திட்டு இருக்கிறதே அது இந்த ஜென்மத்திற்கு போதும் .

என்ன வேண்டுமானாலும், திட்டி விட்டு போகட்டும். "என் கணவர் என்னைத் தானே திட்ட முடியும்."  என்று நினைத்துக் கொண்டு அவரை எழுப்பினாள் .

" திடுக்  " என்று என்று முழித்துக் கொண்ட அவர் இன்னும்  தூக்க மாத்திரை ஆதிக்கத்திலிருந்து  முழுதும் விடுபடவில்லை. ராசிக்கோ பதட்டம்.
கத்திப் பேச வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு   "ஹஸ்கிடோன்"இல்   திருடன்  போல் தெரிகிறது. போலிஸ்...........என்று முடிக்கவில்லை.

அவ்வளவு தான்  விஷ்ணுவோ (அதாங்க அவள் கணவர் பெயர்)

" என்னது  போலீசா "

"இந்த நேரத்திலா?" என்று பெரிய குரலில் பதறினார்.அவர் குரலை அடக்கி விட்டு உன்னிப்பாக கவனிக்க சொன்னாள்  ராசி.

'ஏ சி' யின் " கிர் "  சத்தத்தைத் தவிர  வேறெதுவும் கேட்கவில்லை, இப்போது.

"பார் , ஒன்றுமேயில்லாததற்கு  எல்லாம் போலிசை கூப்பிடுவது  உனக்கு பிழைப்பாகப் போய் விட்டது." என்று கத்தி விட்டு,  விஷ்ணு திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்கினார்.

சரி ஒரு வேளை   எலியாக இருக்குமோ ? ஆனால் வீட்டில் எலியே இல்லையே .இன்று புது வரவோ  என்று நினைத்து அமைதியாக படுத்தாள்  ராசி..

'ஏ சி' சத்தத்துடன், கணவர்" கொர் " சத்தமும் இப்பொழுது சேர்ந்து கொண்டது. ஒரு விதத்தில்  இந்த  சத்தம்  அவளுக்கு  கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது  எனலாம்.

ஒரு நிமிடம் தான்  .திரும்ப  கர்.......  கர்............
இப்பொழுது மெல்லிய குரலில்  யாரோ பேசுவது கேட்டது. எங்கேயிருந்து வருகிறது  என்று  கவனிக்க ஆரம்பித்தாள் .
கிச்சனிலிருந்து தான்  வருகிறது  என்று புரிந்தது.  கிச்சனில் யாரோ இருக்கிறார்கள்   என்று பயந்து   " பர பர "என்று முழித்துக் கொண்டே படுத்திருந்தாள் .

அவள் கணவர் திரும்பி படுத்தவர் இவளுடைய பேய்  முழியைப் பார்த்து ,"இன்னும் தூங்கலையா?" என்றார்.

" இல்லை . யாரோ கிச்சனில் இருப்பது போல் தெரிகிறது "--ராசி

" கிச்சனிலா?  ?அங்கே என்ன இருக்கிறது? சாபிடக்கூட  ஒன்றும் உருப்படியாக இல்லை. எனக்குத் தான் தலைஎழுத்து  .திருடனுக்கு என்ன வந்தது? அவன் ஏன்  உன் சாப்பாட்டை   சாப்பிடுகிறான்.அதுவும் மீதி தான், பிரிட்ஜ்ஜில் இருக்கும் ." என்று நிலைமையின் தீவிரம் புரியாமல்  அந்த நேரத்திற்கு  ஜோக் அடித்தார்.

ராசிக்கோ  கோபம். அதற்கு மேல் பயம் வேறு.

விஷ்ணுவிற்கு  ராசியைப் பார்த்தால்  பாவமாக இருந்தது போலிருக்கிறது.
சரி. எழுந்து வா. கிச்சனில் போய் பார்க்கலாம்  என்றார்.
இவளுக்கோ  அவரைத் தனியாக அனுப்பவும்  பயம் .கூட போகவும் பயம்.

தைரியத்த வரவழைத்துக்  கொண்டு , கையில்  எதையாவது   எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்தாள் (திருடனை அடிக்கத்  தான்).அருகில் விசிறி கிடந்தது. அதை எடுக்கப் போனாள் .

விஷ்ணுவோ "விசிறி எதுக்கு. அவனுக்கு விசிறவா?பேசாமல் வா."என்றார்.

நல்ல வேளையாக  இரண்டு நாட்களுக்கு முன்னால்  ப்ளம்பர்   வேலை செய்தது  நினைவு வர  கட்டிலடியில் இருந்த   GI  பைப் (பிவசி  பைப் இல்லை)
துண்டு ஒன்றை  எடுத்துக்  கொண்டு விஷணு  பின்னாடியே  சென்று கதவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
"இந்த வீரத்திற்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை"  என்று  சலித்துக் கொண்டே விஷ்ணு  கிச்சன் கதை திறக்க  இவள்  பைப்பை ஓங்கி அடிக்க அது பெரும் சத்தத்துடன்  தரையில் விழுந்தது."(நல்ல வேளை டைல்ஸ் பிழைத்தது)

"நல்லா  பாத்துக்க " ஒருத்தரும் இல்லை. சும்மா " :தொண தொண " ன்னு தூக்கத்தை கெடுக்கக் கூடாது  என்றார் விஷ்ணு.

ராசி  கேஸ் சிலிண்டருக்கருகில் குனிந்து பார்த்தாள் .மேலே பரணில் கண்களை நன்றாக ஓட விட்டாள் .


விஷ்னுவோ ," எதுக்கும் பிரிட்ஜிலும்   ஒரு பார்வை பார்த்து விடு "  என்று நக்கலடிக்க , ராசி அவரை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு போய்  படுத்துக் கொண்டாள்.

ஆனாலும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது ,"கொஞ்ச நேரத்திற்கு முன் யாரோ பேசினார்கள்." என்று.

மொபைலில் மணி பார்த்தால் . இரவு மணி ஒன்று.
  தூக்கம் அவுட் .
விஷ்ணு தூங்கி  பத்து நிமிடம்  ஆகியிருக்கும்.
திரும்பவும்  பேசும் சத்தம் கேட்டது. விதி விட்ட வழி என்று  பேசாமல்  இருக்கலாம் என்றால் இந்தப் பாழாய் போன பயமும் பேப்பரில் படிக்கும்  கொள்ளை சம்பவங்களும்  ராசியைப் பாடாய்  படுத்தின.

அப்ப பார்த்தா இந்த  கரண்ட்டும் போய் தொலைய வேண்டும்.

இப்ப எங்கும் நிசப்தம். கதை தீட்டிக் கொண்டாள்  ராசி. ஆனால்   தலை வரை  போரத்தின  போர்வையை மட்டும் எடுக்க இல்லை. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அரை மணி ஆகியிருக்கும். கரென்ட் வந்தபாடில்லை. போர்வையை எடுக்கலாம் என்றால்  பயமாய் இருக்கிறது.

இத்தனைக்கும் விஷ்ணுவோ கும்பகர்ண தூக்கம் .
எவளவு  நேரம் போர்த்திக்கொண்டு இருப்பது? கரெண்ட் வேறு இல்லை. வியர்வையில் குளித்துவிட்டாள் ராசி.

தைரியத்தையெல்லாம்   திரட்டிக் கொண்டு  மெதுவாக போர்வையை விலக்கினால்  .........இது என்ன  தன்  கால் மாட்டில்   யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதைப், போல் தலை மட்டும்  தருகிறது. கண்ணெல்லாம்  காணோம்.  டிவி யில்  பார்த்தது போல்  ஏதாது பேயாய் இருக்குமோ?

வீட்டிற்கு பக்கத்தில் ,ஒரு வயதான பெண்மணி இரண்டு நாட்களுக்கு முன்பாக இறந்தது நினவிற்கு வந்தது.(எதெல்லாம் நினைவிற்கு  வரக்கூடாதோ அதெல்லாம் தான் நினைவு வந்து தொலைக்கிறது)

நிஜமாகவே பேயறைந்தாற்   போல் இருந்தது   ராசிக்கு. நல்ல வேளையாக விஷ்ணுவிற்கு  முழிப்பு வந்தது.  "பகலில்  கரெண்ட் கட் செய்வது போதாது என்று இப்ப ராத்திரியிலுமா ? உஸ்.......ஹப்பா ..... என்னமாய் வியர்க்கிறது " என்று சொல்லிக் கொண்டே  டக்கென்று ராசியின்  கால்மாட்டில் கட்டிலில் சொருகி  வைத்திருந்த  விசிறியை உருவினார் விஷ்ணு.
.
அட..சீ......விசிறியா என்னை பயமுறுத்தியது  !  என்று சலித்துக் கொண்டாள்  ராசி மனதில்.
அரண்டவன்  கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்  ---உண்மையானது.

கொஞ்ச நேரத்தில் கரெண்டும் வந்தது. ஏசி   எல்லாம்   வேலை  செய்ய ஆரம்பித்தது.

மெதுவாகத்  தூக்கம் கண்ணை இழுத்தது ராசிக்கு. திரும்பவும்  சத்தம் . இப்பொழுது  கட்...கட்....கர் .....என்று கூடவே  யாரோ  ஒரு பெண் குரல்  வேறு
ராகம் போட்டு  அழுவது  போல்.

ராசிக்கும் பயத்தில் அழுகையே வந்தது. ஏதோ  பேய்  தான் என்று  உறுதியாகி விட்டது  ராசிக்கு.  காலையில் எழுந்ததும்  பக்கத்து கோவில் குருக்களைக்  கூப்பிட்டு  ஒரு கணபதி ஹோமம்   செய்ய வேண்டியது தான் என்று  தீர்மானித்துக் கொண்டாள். இப்போதைக்கு.......காக்க காக்க கதிர்வேல் காக்க ,
நோக்க நோக்க நொடியில் நோக்க.........  என்று சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தாள்.  அப்படியே உறங்கியும் போனாள் .

ராசி  எழுந்திருக்கிறாயா?  என்று அவள் கணவர் எழுப்பியதும் தான்  அவளுக்கு முழிப்பே வந்தது. (பின்னே விடியற்காலை மூன்று  மணி வரை  பேய்  உரையாடல்  கேட்டு பயந்து கொண்டிருந்தால்  இப்படித்  தான் 7 மணி வரை தூக்கம் வரும் )

அவசர அவசரமாக  எழுந்து வாசல் தெளித்து கோலம்போட்டு  , காபி போட்டுக் கொண்டிருக்கும் போது  விஷ்ணு வந்து டேபிளில் உட்கார்ந்து Hindu  பேப்பரை விரித்தார்.திடீரென்று  " அன்பே  சுகமா......." என்று fm ல் அருமையான  பாட்டு வழிய ஆரம்பித்தது.

விஷ்ணு  உடனே  ," உன் டீக்கடை  ரேடியோவை  அதற்குள் போட்டு விட்டாயா. தினம் இந்த டைனிங் டேபிளை   ஒரு டீகடை பென்ச்  மாதிரி ஆக்கி விடுகிறாய் " என்று புலம்பினார்.

நாம் ஒன்றும் ரேடியோவை ஆன் செய்யவில்லையே என்று ராசி குழம்பும் போதே  அதுவே " டக் "  என்று நின்றது. ஓ   லூஸ்  காண்டாக்ட் ..........
சட் என்று மீண்டும்   " உன்   வீட்டுத் தோட்டம் சுகமா" என்று குசலம் விசாரித்தார்   திருமதி  சாதனா சர்கம்   ரேடியோ  வழியாக.

விஷ்ணு டக்கென்று பிடித்தார். "உன் வேலை தான். நேற்று ராத்திரி ரேடியோ ஆப் செய்யாமல் படுத்திருக்கிறாய். லூஸ் காண்டாக்ட்டில்  உன்  தூக்கம் என் தூக்கம்  எல்லாம்  கெட்டது." 

 விஷயம் புரிந்ததும்  ராசிக்கு  அப்பாடி.......என்றிருந்தது.

இப்பொழுதெல்லாம்  ராசி கதவெல்லாம் செக்  செய்யும் பொது ரேடியோ  off செய்திருக்கா? என்றும்  பார்க்கிறாள்.


image courtesy---google
paatti stories இல் இப்போது Harichandran




Saturday 13 April 2013

விஜய வரவேற்பு.



 ஏப்.14ல் விஜய தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆனாலும், ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் மிர்தயோக 
வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்திலேயே பிறந்து விடுகிறது. புத்தாண்டு பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், ஆண்டு முழுதும் நல்லமழை 

பொழியும் என்றும், விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர் என்றும் பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டு அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். 


சுபகிரகமான குரு, இந்த ஆண்டின் ராஜாவாக இருக்கிறார். 
 குருவும், சந்திரனும் பலமாக இருப்பதால் இவ்வாண்டில் ராஜயோகம் பெறுபவர்கள் 

எண்ணிக்கை உயரும்.

புத்தாண்டில் என்ன நடக்கும்?

*பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
*குருவும் சந்திரனும் சம்மந்தப்படுவதால் தட்பவெப்பநிலை சீராக இருக்கும்.
*ஆடி முதல் மார்கழி வரையில் நல்ல மழையும், தைமுதல் ஆனிவரையில் சுமாரான மழையும் பெய்யும்.
*மக்களிடம் தெய்வபக்தி மேலோங்கும்.
*பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறும்.
*ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சிறப்பாக நடக்கும். ரியல் எஸ்டேட் வியாபாரம் வளர்ச்சி பெறும். நிலமதிப்பு அதிகரிக்கும்.
*தங்கம், வெள்ளி விலை ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் இருக்கும்.
*மளிகை, தானியம், அரிசி, இயந்திரம், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை உயரும். வாசனை திரவியங்களின் விலை குறையும்.
*மணல் பற்றாக்குறை நீங்கும்.
*வங்கி கடனுதவியால் மக்கள் நல்வாழ்வு காண்பர்.
*தொழிலாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*அதிகாரிகள் கருப்பு பணத்தை அதிகளவில் கண்டுபிடிப்பர். 
*ஏழை மக்களுக்கு அரசு சலுகைகளை வாரி வழங்கும்.
*வனவளம் அதிகரிப்பதால் விலங்குகள் நிம்மதியாக வாழும்.
*அயல்நாட்டு மோகம் குறையும். மீனவர்களின் பிரச்னை தீர அரசு நடவடிக்கை எடுக்கும்.


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thanks to
வேம்பு சந்திரசேகரன் நன்னிலம் 

image courtesy ----google.

Thursday 11 April 2013

சம்மர் கேம்ப்






 சம்மர் கேம்ப் என்றதும் நான் எதோ சம்மர் கேம்ப்  
ஆரம்பிக்கிறேன் , அதைப் பற்றி எழுதுகிறேன் என்றோ  இல்லை எங்கோ கேம்ப் அடிக்கப் போகிறேன்  என்றோ யாரும்  அவசரப்பட்டு   யோசிக்க வேண்டாம்.

நான்  சம்மர் கேம்பிற்கு சென்று கற்றுக் கொண்டு அனுபவித்து  ஆனந்தித்தது பற்றி தான் இந்தப் பதிவு.

 குழப்பம்  அதிகமாயிருக்குமே! நான் சொல்வது   என் சிறு வயது நினைவுகளை.
விடுமுறை விட்ட  அன்று,   பள்ளியிலிருந்து  வீட்டிற்குள் நுழையும் போதே  புத்தகப்பை  மூலையை நோக்கிப்  பறக்கும். அதற்காக முதுகில்  அடியும்  பழுக்கும்.   பின்னே, புக்கைஎல்லாம் எறிந்தால்.............

மறுநாள்  காலையிலிருந்து  தெருவில் சிறுவர் சிறுமியர்  படை  கூடும்.    ஒவ்வொரு நாளும்   இன்றைக்கு எந்த வீட்டை  அதகளம்  பண்ண வேண்டும்  என்பதை  முடிவெடுப்போம்........ ஹூம் ....... அதற்குப்  பிறகு   அந்த வீட்டில் இருப்பவர்கள் தான் பாவம்.!


பெரும்பாலும்   பக்கத்து வீட்டு  விஜி வீடு தான் ,டார்கெட் .காலை   பத்து மணிக்கு  விஜி வீட்டிற்குள் நுழைவோம். விஜி அவள் அண்ணன் முரளி,நாங்கள் மூன்று பேர் , அடுத்த வீட்டு இந்து ,அதற்கடுத்த வீட்டு பிரேமா , இன்னும் பிற.......எழுதிக்கொண்டே தான் போகணும்.  எல்லோருமாக   விஜி  வீட்டில்  கூடுவொம்.

அதற்குப் பிறகு  களை  கட்டி விடும்  அவர்கள் வீடு. ஒரு பக்கம் கேரம் போர்டு
கன  ஜோராய்   நடக்கும். காணவும் ஜோர் தான். நன்றாக  விளையாடிக் கொண்டேயிருப்போம். திடீரென்று   "முரளி, நீ போங்கு அடிக்கிறாய் . என்று மெதுவாக சண்டை ஆரம்பித்து அடிதடி சண்டையில் முடியும். அதெல்லாம் சும்மா கொஞ்ச நேரம் தான்.  உடனே சமாதானப் புறாவும் பறக்க விட்டு  உடன் படிக்கையும்    வாயாலேயே      கையெழுத்திடப்படும்.

சரி கேரம் வேண்டாம் ,என்று எல்லோருமாக  ரவுண்டு கட்டி உட்கார்ந்து Trade
விளையாட ஆரம்பிப்போம்.  அது கொஞ்ச நேரம் .நீ  டில்லியில் வீடு வாங்கினாயா? நான்  கௌஹாத்தியில்  வீடு வாங்கி விட்டேன்.  ஓ   விஜி  பாப்பர்.(திவால்) .என்று ஒரே  கூச்சலும் குழப்புமுமாய் ஆகி விடும் .  அவர்கள் வீட்டு மாமியின்  தக்க  நடவடிக்கையின்  பேரில் கூட்டம்   அமைதியாய் பிரிந்து செல்லும். அது சும்மா கொஞ்ச நேரத்திற்கு தான்.

பிரிந்து போவது போல் பிரிந்து ,இந்துவின்  வீட்டில்  கூடும்.அந்த வீட்டு மாமி,"  பசங்களா,  என்ன இன்றைக்கு  நாங்கள் மாட்டிக் கொண்டோமோ? " என்பார்.அவர்கள் வீட்டில் என்ன charm  என்றால்  அவர்கள் வீட்டில் ஹாலில் ஊஞ்சல்  இருக்கும். 
இந்த  ஊஞ்சலையே    கப்பலாக நினைத்துக் கொண்டு  இந்த  சிறுவர் சேனை  "row row row a boat "  கப்பலோட்டிய   தமிழனாவார்கள். பின் அதே ஊஞ்சல்  விமானமாகி " சர் சர் "என்று பறந்து  பறந்து ஆடும். யாராவது ஒருவருக்கு தலை சுற்றி வாந்தி  வரும் வரை ஆடி விட்டு  அந்த மாமியின் திட்டு quota  முடிந்த பின்னர்  எல்லோரும்  அவரவர் வீட்டிற்கு சென்று ,மிச்ச  வசவுகளை வாங்கிக்  கொள்வோம்.

(பெரியவர்கள்  எங்கள்  மேல் பாசமாய்த்தான் இருப்பார்கள். இத்தனைகலாட்டாசெய்தால் திட்டாமல்..... அவ்வளவு தான் )

அப்பொழுதெல்லாம்  ரோடில் மாலை வேளைகளில் கிரிக்கெட்  விளையாட  எந்த தடங்கலும் கிடையாது.  இவ்வளவு டிராபிக் கிடையாது. மூன்று   விறகு கட்டைகள்    ஸ்டம்ப்   ஆகிவிடும் . இதில்  யாராவது ஒருவர்  கமென்ட்ரி வேறு கொடுக்கும் அலப்பறை எல்லாம் நடக்கும்.


பல்லாங்குழி,  நாலு மூலை தாச்சி (இதனுடைய  modern version  தான் musical chair என்று நினைக்கிறேன்), கில்லி,  கபடி, கோ  என்று எதையும்   விட்டு வைத்ததில்லை.
எல்லாம் எட்டாம் கிளாஸ் வரை தான்.

ஆனால் இவை கற்றுத் தந்த  வாழ்க்கைப்  பாடங்கள்   ஏராளம்   ஏராளம்.
வாழ்க்கையின் அரிச்சுவடிகளைக் கற்றுக்  கொடுத்தது  என்றால் மிகையில்லை.
எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள், ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம், வெற்றியைப் போன்றே தோல்வியையும் ஏற்கும்  மன்ப்பாண்மை  எல்லாவற்றையும் விளையாட்டிலேயே கற்றுக் கொண்டோம். 
பல விதமான குணாதிசயங்கள் உள்ள  மனிதர்கள் அவர்களை எதிர்கொள்ளும் பாங்கு எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்தது இந்த   எங்களுடைய  
Summer Camp.  

அப்பாடி........ தலைப்பை   கொண்டு வந்து விட்டேன்.

இந்த  சம்மர் கேம்ப்  ஒரு செலவில்லை. யாரும் அழைத்துப் போக வேண்டாம்.
கலர் பென்சில் வேண்டாம், சார்ட் பேப்பர்  வேண்டாம், பெவிகால் இல்லை,கலர் பேப்பர் இல்லை..........

ஆனால் கற்றுக் கொண்டதோ  அதிகமோ அதிகம். 

இந்த காலத்து சம்மர் கேம்புகளில்  கிடைப்பது என்ன?
குழந்தைகளுக்கு சுமையாகி விட்டதோ?
கொஞ்சம் சொல்லி விட்டுப் போங்களேன்...... 





paatti  stories இல்  இப்போது  Harichandran

image courtesy----google

Saturday 6 April 2013

ராசியின் ரொமான்ஸ் ரகசியங்கள்.

வழக்கம்   போல் இன்றும்   இரவு  ஒன்பது மணிக்கு  டின்னர்   கடையை முடித்து விட்டு  கணினியைத்  திறந்து   மெயில் செக்  செய்ய உட்கார்ந்தேன்.
மிகவும்  மெதுவாக  ,என் பொறுமையை சோதித்தப் பிறகு தான்  மெயில் ஓபன்   ஆனது. எல்லாம் இந்த ரோடு  தோண்டுபவர்கள் உபயம்  internet slow down .

unread  பகுதியில் பார்த்தால்  அமரிக்கையாய் ஒரு மெயில் 
From  Rasi  என்றிருந்தது. தன்  மகன் வீட்டிற்கு   அல்லவா  சென்றிருக்கிறாள்,  என்று நினைத்துக் கொண்டே மெயிலை ஓபன் செய்தேன்.

நல விசாரிப்புகளுக்குப்   பிறகு,  தன்  கணவரின் பிறந்த நாளைப் பற்றி சொல்லியிருந்தாள் . வரும் ஏப்ரல் 8ந்தேதியன்று   அவருக்குப் பிறந்த நாள்  என்றும்  , அதற்குத்  தான்  அருமையான பரிசொன்றும்  அவருக்காக  வைத்திருப்பதாகவும்  சொன்னாள் . ஒவ்வொரு வருடமும் ஏதாவது பரிசு வாங்கிக் கொடுப்பது எனக்கும் தெரியும். அதை மாதிரித் தான் என்று நினைத்தேன். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சஸ்பென்ஸ்  வைத்திருந்தாள் . அடுத்த  மெயிலில்  அதைப் பற்றிய விவரங்கள் இருப்பதாக  சொன்னாள் .
சஸ்பென்ஸ்  ஆயிற்றே! தெரிந்து கொள்ளவில்லையென்றால் மண்டை வெடித்து விடும்  போலிருந்தது.உடனே அடுத்த மெயிலைப் பார்த்தேன்.

அது  என்னவோ  to  Vishnu    என்றிருந்தது. cc இல் என் பெயர்.
இது என்ன என்ற குழப்பத்துடன்  திறந்தால்  ' பிரியமானவருக்கு  "  என்று ஆரம்பித்திருந்தது.

கவனக் குறைவாக  cc இல்  என் பெயர் வந்து விட்டதோ  என்ற நினைப்புடன்   மெயிலை மூடினேன். ,  டீப்பாயில்   பூனைக் குட்டியாய்  படுத்திருந்த    போனை   எடுத்து ராசியின் நம்பரை விரல்களால்  ஒற்றி  எடுத்தேன்.மறு முனையில் ராசி . எடுத்தவுடன் " படித்து விட்டாயா? " என்றாள் .
"நீயென்ன லூஸா? உன்  கணவருக்கு எழுதிய மெயிலில்  எதற்கு என்னை cc இல் சேர்த்தாய்?அது சரி. அவருக்கு மெயில்  அனுப்ப வேண்டிய அவசியமென்ன? அவரும் உன்னுடன் தானே  அங்கிருக்கிறார்? " என்றேன்.

"ஆமாமாம் . அவர் இங்கு தானிருக்கிறார்.உணர்ச்சிகளின்  ஆதிக்கத்தினாலோ, தயக்கத்தினாலோ, எதுவோ ஒன்று போயேன்  , சொல்ல விடாமல் தடுக்கும்  விஷயங்களை  அழகாக கோர்வையாக  எழுதி விடலாம் இல்லையா? " என்றாள் .உண்மைதானே  என்றது மனம்.
" நீயும் படித்துப் பார்.  இது  ஒன்றும்  அந்தரங்கமான காதல் கடிதம் இல்லை."

அவள் சொன்னாலும்  கொஞ்சம் தயக்கத்துடனேயே  படிக்க ஆரம்பித்தேன். ஆனால் போகப்போக  இதுவல்லவோ காதல்  கடிதம்   என்று தோன்ற ஆரம்பித்தது.

நீங்களும் கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்.

ராசியின் கடிதம் இப்படி  செல்கிறது.

" நான் உங்கள்  கரம் பற்றிய பொது எனக்கு  19 வயது தான். அந்த வயதிற்கே உரிய  immaturity  என்னிடம்  fevicol  போட்டு  ஒட்டிக் கொண்டிருந்தது எனலாம் .அதனால்  சில சங்கடங்கள் . 

என்னை அமர வைத்து, உங்கள் தரப்பு நியாயங்களை எனக்கு அழகாய்  சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல் இன்றளவும் கடைபிடிப்பது  என்னை சார்ந்தவர்களிடையே  உங்களை எங்கோ உயரத்தில் வைத்திருக்கிறது .   சில உறவுகள்  என்   மனதை நோகடித்து  வேடிக்கைப் பார்த்த போது  கூட  "இது எல்லோர் வீட்டிலும் உள்ளது தான். யார் உன்னைப் புண்படுத்தினாலும்  நான் உன்னை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டேன் "என்று  எனக்கு இமாலய  நம்பிக்கை கொடுத்து   உற்சாகப் படுத்தியது,  எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

வீடு என்றாலே  வாசற்படி இருக்கத்தானே இருக்கும். அதை  பெரிது படுத்தாமல் இருக்கும்  மனநிலையை  உண்டாக்கியது நீங்கள் . மாமியார், மருமகள்    மாற்று சிந்தனைகளை   நீங்கள் எப்பவுமே  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  பார்ப்பதற்கு நீங்கள் என்னவோ  அம்மாவை  சப்போர்ட்  செய்கிறார் போல் தோன்றினாலும் என்னை  விட்டுக் கொடுத்ததேயில்லை.

என்னைத் திருமணம் செய்தபோது  நான்  B.Sc., இரண்டாம் வருடத்தில் இருந்தேன். உங்களுக்கோ வேலையில் உடனே ஊர்  மாற்றல். நீங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் ,நான் பாதியிலேயே தான் பட்டப் படிப்பை விட்டேன்.

ஆனால் நான் மீண்டும் படிப்பைத் தொடர ஆரம்பித்த போது  உங்களின்  ஒத்துழைப்பைக் கண்டு நான்  அசந்து தான் போனேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு பிறகு   நான் வெற்றிகளாகத் தான் குவித்தேன் என்று தான்  சொல்ல வேண்டும்.

பெயருக்கு பின்னால் பல பட்டங்கள். அருமையான  பள்ளியில் ஆசிரிய உத்தியோகம். அன்பான குழந்தைகள் . அழகாய் கொண்டு சென்றீர்கள் குடுமபத்தை. பொறுப்பான உத்தியோகம். தலைமை வேறு.அந்த அதிகாரம் எதனாலும்  நீங்கள் வழி தவறியதில்லை. நேர்மை ஒன்றே லட்சியமாக  பனி புரிந்ததைப், பார்த்து வளர்ந்த  நம் பெண்ணும் பிள்ளையும்  அப்படியே அவர்கள் வாழ்விலும் கடைபிடிக்கிறார்கள்.. அன்று நம் மருமகள்  என்னிடம், " என்ன மாமி உங்கள் பிள்ளையை  இப்படி  ரூல்ஸ்  ராமானுஜமாக வளர்த்து இருக்கிறீர்கள்." என்று  பெருமையாகக் குறைபட்டுக் கொண்டபோது , நான் சொன்னது," அவனுக்கு எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. நாங்கள்  வாழ்ந்ததைப் பார்த்து வளர்ந்திருக்கிறான்."என்றேன்.

நம்  பொருளாதாரமும்  வளர்ந்தது. கார் ,பங்களா, விமானப் பயணம் எல்லாமே சாத்தியமாயிற்று  உங்களால்   எனக்கு.அது மட்டுமா? பல் மாநிலங்கள், பல மொழிகள் ,பலகலாசாரங்கள்  எல்லாமே அறிமுகமாயிற்று.   wife eats half the cake என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் உங்களால், சமுதாயத்தில்   எனக்கு மரியாதையும்  கிடைத்தது.

எனக்குத் தைரியத்தை  கொடுத்து  வந்தது நீங்கள் தான். எத்தனை பெரிய விஷயமானாலும்   "trial costs nothing" என்று  ஊக்குவித்து  எந்த ஒரு சவாலையும்
எதிர் கொள்ளும்  மனப்பக்குவத்தை  என்னுள்    வளர்த்தது நீங்கள் தான் .

எந்த சவாலையும்  எதிர் கொள்ளும் தைரியம் என்னுள்  இப்போது  இருப்பது உண்மை தான்.

ஆனால், உங்கள் உடல் நிலை  சற்றே பாதிக்கப் பட்டபோது,ஹாஸ்பிடலில்   பெண்,பிள்ளை,பேரன்,பேத்தி எல்லோரும் என்னை சுற்றி இருந்தும் நான் அனாதை ஆனது போல் இருந்தேன்.மீண்டும்   நீங்கள்  வீட்டிற்கு  வந்தபிறகு தான்  நான் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தேன்.

இன்று உங்களுக்கு  பிறந்த  நாள். உங்களை  வாழ்த்துவதோ , பரிசு தருவதோ  
எதுவுமே  எனக்கு சரியாகத் தோன்றவில்லை.அதற்குப் பதிலாக இந்த மெயில்.


சற்றே  திரும்பிப்  பார்க்கிறேன். ஓடிய 36 வருடங்களும்  அவ்வளவும் இனிமை .
வரப் போகும்  வருடங்களிலும்  இந்த இனிமைத் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
 இத்தனை அருமையான ,சந்தோஷமான  வாழ்க்கையை  அமைத்துக்  கொடுத்ததற்கு    நன்றியை  எப்படி சொல்வது? 

எத்தனை பிறவிகள்  எடுத்தாலும்  அத்தனையிலும்  உங்களையே என் கணவராக  அடைய  கடவுளை  வேண்டிக்  கொள்கிறேன்."

  ராசியின் கடிதம்  முடிந்தது.என்னையறியாமல்  கண்களில்  வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு  பதில் எழுதினேன்.

" இந்த இனிய  தம்பதிக்கு  வாழ்த்துக்கள் " என்று மட்டுமே என்னால் டைப் அடிக்க முடிந்தது. 

நீங்களும் உங்கள் எண்ணங்களை , வாழ்த்துக்களை, அல்லது  ஆசீர்வாதத்தை  சொல்லி விட்டுப் போங்களேன்.  ராசி  மகிழ்வாள்.



Paatti Stories இல்  இப்பொழுது  Sage Narada and  a cup of oil.

image courtesy---google

Tuesday 2 April 2013

சரித்திரம் படைத்த ராசி



ராசியின் வரலாறு  என்றதும்  ஏதோ  மீன ராசி அன்பர்களுக்கும், மேஷ ராசி நேயர்களுக்குமான  ராசியை பற்றி சொல்லப் போகிறேன்  என்று  நினைக்கிறிர்களா?

அவசரப் படாதீர்கள்.


இந்த ராசி என்   பள்ளி நாட்களிலிருந்து  எனக்கு  ஆருயிர்த்தோழி .இப்பொழுது திருமணமாகி சென்னையில்  தான் குப்பை கொட்டிக் கொண்டு  இருக்கிறாள் .

அவ்வப்போது சந்திப்பது வழக்கம்.

அப்படித்தான்  அன்று அவள் வீட்டிற்கு சென்ற போது அவளும், அவள் மூன்று வயதுப் பேரனும்  National Geographic  சேனலில்  பிங்குவோடு பிங்குவாக ஒன்றிப்  போயிருந்தார்கள்.

 " அட, உனக்கு  எப்போதிலிருந்து இந்த ஆர்வம்.? "  இது நான்.

" இதில் ஆர்வம் இப்பொழுதான் வந்தது போல் கேட்கிறாய்? "  என்றாள்   ராசி.

" திருநெல்வேலிக்கே அல்வாவா? என்னிடமே உன்  பூகோள  சரித்திர ஆர்வத்தை பற்றி சொல்கிறாயே " என்றதும் சிரித்து விட்டு " இப்ப எதுக்கு அதெல்லாம் "  என்றாள் .

பள்ளியில் நாங்கள்  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் நெருங்கிய தோழிகளானோம்.  ராசி அப்படி ஒன்றும் படிப்பு வராதவள் இல்லை.
கணிதமும்,   அறிவியலும் அவளுக்குத் தண்ணி பட்ட பாடு தான்.

இந்த பூகோளமும் , சரித்திரமும் இருக்கிறதே , அது தான் அவளை பாடாய் படுத்தும் .புற முதுகிட்டு ஓடும். இவளும் விரட்டி விரட்டி தான் பி(ப)டிப்பாள்.அனால்  இரண்டும் அவளை டபாய்க்கும்.
கௌசல்யா டீச்சரும்  எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்தார். ஒன்றும் பலனில்லை.

கௌசல்யா டீச்சர் கிளாசில்  இவள் முக்கால் வாசி நாட்கள்  "கொர் ,கொர் " தான்.அப்புறம் எப்படி  இவளுக்கு அசோகச் சக்கரவர்த்தியைப் பற்றித் தெரியப்போகிறது?
" எப்படி உனக்கு மட்டும்  இப்படி தூக்கம் வருகிறது  கௌசல்யா டீச்சர் கிளாசில் " என்று கேட்டால் "  நான் என்னடி செய்யட்டும் ?     டீச்சர் கிளாஸ் எடுத்தால்  எனக்கு கண்களை  கட்டுதே. " என்பாள் .

பரிட்சை சமயத்தில்,"அசோகர்  மரங்கள் நட்டார்.குளங்கள் வெட்டினார். " என்று உருப் போட்டுக் கொண்டு இருப்பாள் .
மனதில் பதிந்தால் தானே! 
அதில் எரிச்சலாகி," இந்த அசோகரை   யாரடி  மரங்கள் வைத்து  குளம் வெட்டச் சொன்னது? " என்று புலம்புவாள் .அசோகர் அவளுடைய சோகக்கதையைக்  கேட்டால் அவரே  தான் வைத்த மரத்தை வெட்டிதள்ளி விட்டு " இது போதுமா? இன்னும் கொஞ்சம் வெட்டணுமா? " என்று கேட்பார் என்றே தோன்றும் .


கௌசல்யா  டீச்சர்  எப்படியாவது   இவளை  வரலாற்றுப் பேராசிரியையாய்   ஆக்க வேண்டும்  என்று  கங்கணம்  கட்டிக் கொண்டது  போல் அப்ப, அப்ப  கேள்விகள் கேட்டு அவளைப்  படிக்க வைத்து விடலாம் என்று மனப்பால் குடித்தார்.

ஒரு நாள்  அவர்  ஒரு உலக வரைபடத்தை   ஆணியில் மாட்டி விட்டு .
" ராசி இங்கே வந்து  அசோகர்  சாம்ராஜ்யத்தை  இந்த ஸ்கேலால்  தோராயமாக காட்டு "  என்றார்.

உடனே  ராசி " கிடு கிடு " வென்று படம் அருகில் போனாள் . போன வேகத்தில்   ஸ்கேலை எடுத்து  கரெக்டாக சீனாவில் ஒரு முட்டை வடிவம் போட்டு விட்டு திரும்பினாள் .

சீனாவுக்கு  மட்டும் இது தெரிந்தால்  இவ்வளவு நேரம் நம்முடன் ஒரு போரே  உண்டாகியிருக்கும்.பின்னே? அசோகர் சாம்ராஜ்யத்தை சீனாவில் உருவாக்கியது  மட்டுமல்லாது  அங்கே ஒரு முட்டை வேறு, இவள் வரலாற்றுப் பாடத்தில் வாங்குவது போல்.

வந்த கோபத்தில்  ராசியை வகுப்புக்கு  வெளியே  நிற்க வைத்து விட்டார்.
நிற்க வைத்ததில்  அவருக்கே வந்தது கேடு. அந்த சமயம் பார்த்து  தலைமை ஆசிரியர்  அந்த பக்கம் வர ,ராசியைப் பார்த்து ," என் வெளியே நிற்கிறாய்" என்று கேட்க அவள்   வெறும்" திரு திரு ".

கௌசல்யா டீச்சர் வெளியே வந்து விவரத்தைக் கூற ,டீச்சரை தலைமை  ஆசிரியர் கடிந்து கொண்டு "இன்றைய வகுப்பையும் மிஸ் செய்தாள்  என்றால்
என்னாவது என்று கேட்க "  வேறு வழியில்லாமல்  டீச்சர் ராசியை உள்ளே அமர செய்தார்.

இதற்கெல்லாம் ராசி ஒன்றும் அசரவில்லை. அதென்னவோ அவளுக்கு வரலாறும் பூகோளமும்  எட்டிக்காய் தான்.சுட்டுப்  போட்டாலும்  வராது  அவளுக்கு.
குப்தர்கள், மௌரியர்கள், எல்லோருக்கும் ஒருவர் பாக்கியில்லாமல்     சஹஸ்ரனாம  அர்ச்சனை செய்வாள்  ராசி.

அவர்கள் எல்லோரும் பாவம் அவர்கள் போர்களில்  வாங்கிய விழுப்புண்களை விட  அதிகம்  இவளிடம் திட்டு வாங்கியது.

அவளுக்கு  கிழக்கிந்திய கம்பெனி மீது  தான் தாங்கொணா கோபம் ..வாயை மூடிக் கொண்டு இங்கிலாந்திலேயே இருக்க வேண்டியது தானே? யார் இங்கே வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிட்டார்கள் ?

அதனால் தானே இந்திய சுதந்திரப் போராட்டம் வந்தது. அது வரலாற்றுப் புத்தகத்தில் பாதியை அடைத்துக் கொண்டு விட்டதே. அதோடு இந்த வருடங்களை யார் நினைவில்  வைத்துக் கொள்வது? சொல்லுங்கள் .

வட்ட  மேசை மாநாடு  ஒன்றா, இரண்டா. எத்தனை இருக்கிறது?
எந்த எந்த வருடங்கள் ? ஏதோ மேசையில் அமர்ந்தோம், சாப்பிட்டோம் என்று போகாமல் எதையோ  பேசி .வைத்து என் உயிரை வாங்குகிறார்கள்  என்று புலம்புவாள்.

இது மட்டுமா? பானிபட் யுத்தத்தோடு  இவளுக்கும் யுத்தம் தான்.
முதலாம் பானிபட் , இரண்டாம் பானிபட்  வருடங்களை   நினைவில்   வைத்துக் கொள்ள அவள் எவ்வளவோ முயற்சித்தும்  பாவம் தோற்றுத்தான் போனாள் .இதில் சமாதான உடன்படிக்கைகள்  வேறு அவளை குழப்பும்.

மகாத்மா காந்தி கூட  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக  இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டார் என்றே தோன்றும் ,இவள்  நம் இந்திய சுதந்திரப் போராட்ட  வரலாற்றை    படிப்பதைப்  பார்த்தால் .

கௌசல்யா டீச்சர் ஒரு முடிவுக்கு வந்தாற்   போல்   இருந்தார்  அன்று. 
" ராசி   உனக்கு என் மேல் என்ன கோபம். ஏன்  வரலாறு மட்டும்  வரமாட்டேன் என்கிறது?  மற்ற  பாடங்களை  நன்றாகவே படிக்கிறாய். எப்படியாவது பாஸ் செய்து விடு . " என்று பாவமாய்  கெஞ்சினார்.

"நான் என்ன டீச்சர் செய்யட்டும் . நானும்  கசப்பான  வல்லாரை கீரையை  கூட சாப்பிட்டு தான் வைக்கிறேன்.  ஆனாலும்  ........"என்று  கண்களில் நீர் முட்ட , குரல் உடைந்து பேசினாள் .

தேர்வு நெருங்க நெருங்க  ராசியை விட, அவள் பெற்றோர் ,எல்லாரைவிடவும் கௌசல்யா  டீச்சர்   தான்  ஒரே டென்ஷனில் இருந்தார் என்று சொல்ல வேண்டும்.  

தேர்வு முடிவு வந்தது .
ராசிக்கு  தன கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை.
அவள் நம்பர் பேப்பரில் வந்து விட்டது.அப்படிஎன்றால்   சரித்திரத்திலும்  அவள் பாஸ் தானே!

கௌசல்யா டீச்சர்   சொன்னது தான்  பன்ச்  "  ராசி,   நீ வரலாறு பாஸ்  செய்து   சரித்திரம் படைத்து   விட்டாய்  " என்று.

image courtesy---google.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்