Showing posts with label தீர்வு.மெஷின். Show all posts
Showing posts with label தீர்வு.மெஷின். Show all posts

Saturday, 23 March 2013

நூல் விடத் தெரியுமா?




















" இனி மேல்  உன்னிடம் நான் கெஞ்சப் போவதில்லை .
நீ  தைத்துக்கொடுத்தால்இந்த"கர்டனை"ப்  போடுவோம்.இல்லையென்றால்  விடு"  என்று  சற்றுக்  கோபமாகவே  குரல்  வர  ,  கொஞ்சம்   அசந்து  தான் போனேன்.

சரி  வேறு வழியில்லை  என்று   டேபிளடியில்  இருந்த   உஷாவை (தையல்  மெஷின்) இழுத்து   வைத்து    நூலெல்லாம்   கோர்த்து   தைக்க உட்கார்ந்தேன்.

பல   நாட்களாக   நான் கண்டு கொள்ளாததன்  கோபமோ, என்னவோ    உஷா   சரியாக  வேலை செய்யவில்லை.  என்ன செய்வது?  திரு திரு என முழித்தேன். பார்த்தார்   என் கணவர். ' என் இப்படி  முழிக்கிறாய்?  மெஷின்  வேலை செய்யவில்லியா?'   என்று கேட்டதற்கு  பரிதாபமாக         " ஆமாம்  ".  என்றேன்.

"உன்னைப் பற்றித்  தெரியாதா? ப்ளாக்  எழுத  சொன்னால்    நீ பாட்டிற்கு   லாப்டாப்பே   கதி என்று இருப்பாய்.  நான் ஒரு வேலை சொன்னால் செய்ய மாட்டாய் "  என்று அவருடைய  கோபத்தின்   டிகிரி  எகிற  செய்வதறியாது   திணறினேன்.

சரி பக்கத்திலிருக்கும்    டெய்லர்   ஒருவரைக்   கெஞ்சோ கெஞ்சென்று  கெஞ்சி  கூப்பிட்டு   வந்து   மெஷினில் என்ன  ரிப்பேர்  என்று கேட்டதற்கு
ஏதோ    ICU வில்  இருக்கும்  பேஷண்டைப்  பற்றிக்   கேட்டது போல்
உதட்டைப் பிதுக்கி, " ஊஹூம்....  இனிமேல் ஒன்றும்  செய்வதற்கில்லை "  என்று கூறி   என்னை இன்னும்  திகலடையச்  செய்தார்.

வேறு வழியில்லாமல்   அதே தையற்காரரிடம்  என்  "கர்டனை"  தைத்து  முடித்தேன். ஆனாலும்  தையல் மெஷின் ?  அவரிடமே  வந்த விலைக்கு  விற்று விட்டேன்.  சரி,  ஒரு வழியாக  எதாவது தைக்க வேண்டுமென்றால்  இனிமேல்  யாரும்   என் பிராணனை  வாங்க மாட்டார்கள்  என்று திருப்தியடைந்தேன்.

"அப்படியெல்லாம்   உன்னை  விட்டு விடுவேனா " என்று  விதி  மறு   நாள்   பேப்பரில்   வந்த விளம்பரம்   மூலமாக  விளையாட ஆரம்பித்தது.

on line shopping இல் silai  mini sewing machine  என்று விளம்பரம்  இருந்தது.
உடனே பார்வையை  அதன் மேலே ஓட்டினேன். விலை  shipping charges  எல்லாம் சேர்த்து  ரூ.2000  என்றிருந்தது.

நம் உஷாவிற்கு  தான் பிரியா விடை  கொடுத்து விட்டோமே என்று  இதையாவது      வாங்கலாம்  என்று  நினைத்தேன்.(சொந்த செலவில் சூன்யம்  வைத்து கொள்வது  என்பது இது தானோ?) 

மெதுவாக  என்னவரிடம்  விளம்பரத்தைக்  காட்டினேன்.அவரோ  கண்ணாடியை  சரி செய்து கொண்டே" அதுக்கென்ன இப்போ?" என்றார்.

எப்படி இவரை   சம்மதிக்க வைப்பது  என்று  மண்டையைப் போட்டு உடைத்தேன். இரண்டு நாட்கள்  முழுதாக ஆனது. அவரோ   அசைய மறுத்தார்.

ஒரு" ட்ரம்ப்   கார்ட்" ஒன்றை  வீசினேன்.  "உங்கள் லுங்கியெல்லாம்   தைக்க   இருக்கிறது  இல்லியா? இது கையடக்க சைசில்  இருக்கிறது. தைக்க எளிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. "  என்று  ஐஸ் வைத்த பிறகு    இந்த மினி மெஷினை வாங்க சம்மதித்தார்.

உடனே   onlineஇல் ஆர்டர் செய்து விட்டேன்.
புக் செய்து விட்டேனே தவிர கொஞ்சம்  உள்ளுக்குள் உதறல் தான் . 
இது ஒழுங்காக வர வேண்டுமே !
 நான்  உடம்பு   வளைந்து  தைக்க வேண்டுமே!

மூன்று  நாட்கள் கழித்து   சிலை(mini silai sewing machine)  வீட்டிற்கு வந்தாள்.
உஷாவின்    குழந்தை போலிருந்தாள்   சிலை.

பக்காவாக பேக்  செய்திருந்த சிலை மெஷினை   மெதுவாக  பாக்கெட்டிலிருந்து   பிரித்து எடுத்தேன். 
சுடச்சுட  தைக்க ஆரம்பித்தேன்.
நன்றாகவே வேலை செய்தது.
" கட கட" வென்று    போனது வந்தது  எல்லாம்   தைத்து முடித்தாயிற்று.

பட்டனை  தட்டினால்  (இட்லியோ  காபியோ இல்லை )   
நாம் தைக்க வேண்டிய  இடத்தில்  லைட்  வருகிறது.
சாளேஸ்வரம்  இருப்பவர்கள்   எளிதாக  தைக்கலாம்.
தூக்குவது எளிது. வெறும் 1 கிலோ  தான் வெய்ட் . 
எந்த இடத்திற்கு வேண்டுமானாலும்   எடுத்து  வைத்துக் கொண்டு தைக்கலாம்.  காலால் மிதிப்பதற்கு   பெடல் ஒன்று கொடுத்திருக்கிறார்கள்.  பேட்டரி/கரண்ட்
என்று   எதிலும் வேலை செய்கிறது. 
 ஒரே சந்தோஷம் தான்   எனக்கு,

அவருடைய    லுங்கியை   எடுத்து வைத்து தைக்க ஆரம்பித்தேன். நன்றாகவே தைத்துக் கொண்டிருந்த மெஷின்  சத்தம் ஒரு மாதிரியாக  வந்தது
மெஷினை நிறுத்தி விட்டுப்  பார்த்தேன். 
ஓ....... " பாபினி"ல்  நூலில்லை.

பாபினை வெளியே எடுத்தேன்.  நூல் சுற்றலாம்  என்று   மெஷினைப் பார்த்தேன்.  அதற்கு  எங்கே  வசதி?
 மெஷினை திருப்பி  திருப்பி  பார்த்தேன்.

ஊஹூம்  ...... ........தெரிய வில்லை.
சரி  அதனுடன் வந்த புத்தகத்தை  அட்டை   to   அட்டை   படித்து  முடித்து விட்டேன்.  ஒரு தடவை இல்லை , இரண்டு தடவை இல்லை.....பலமுறைப்  படித்து  மணப்பாடமாகவே  ஆகிவிட்டது.

அந்தப் புத்தகத்தில்   " இடம் சுட்டிப் பொருள் விளக்கு " எழுதும் அளவிற்கு படித்தாகி விட்டது.  ஒன்றும் பலன் இல்லை.  

மெஷினில் லைட், நூல்  கட் செய்ய ,கரண்டில்  வேலை செய்ய, பெடல்  என்று எல்லாம் இருக்க  பாபின்  நூல்  சுற்ற  வசதியில்லாமலா  இருக்கும்.?

என்  சிற்றறிவிற்கு  " டேக்கா "  கொடுத்துக்  கொண்டிருக்கிறாள்  சிலை.

என்னவரிடம்  உதவி கேட்டால்  அவர் சொல்கிறார்," ஒரு வேலை செய். உனக்குப் பழக்கமான   உஷாவை   வாங்கி   அதில்   பாபினில்  நூல் சுற்றிக் கொள்  ,அப்புறம்  இதில் தைத்துக் கொள்" என்று நக்கலடித்து விட்டு  " பேப்பரில்  அரசியல் நிலவரம் படிக்கிறேன்....தொந்தரவு  செய்யாதே..........."  என்று மிரட்டல் வேறு.

எனக்கு உதவி செய்யாமல்  என்ன  அரசியல்  வேண்டியிருக்கிறது  சொல்லுங்கள். ஏதோ   அரசியல் வாதிகள் எல்லாம்  இவருடைய  ஆலோசனையை  எதிர்பார்த்து  காத்திருப்பது போல்...............ம்க்கும்.

சரி, என் பிரச்சினை  என்னவாயிற்று என்கிறீர்களா?
இன்னும்  அப்படியே தான் இருக்கிறது .......

"சிலை" சோபாவில்  சிலையாகி  இருக்கிறாள். நீங்களே பார்த்துக் கொள்ளலாம் .போட்டோ போட்டிருக்கிறேன்.
என் பிரச்சினையின்   தீவிரம் புரிகிறதா?
யாரிடமாவது   தீர்வு  இருக்கிறதா?...........

   என்  அருமை " சிலை"யின்   பலவித போஸ்கள்   கீழே  .........


























என் சிலையை அப்படியே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்காவது  , என் பிரச்சினைக்குத்  தீர்வு  தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.  ..................ப்ளீஸ் ...

smiley image courtesy----google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்