Wednesday 24 July 2013

சுவரும் ஒரு கப் காபியும்.




தலைப்பைப் பார்த்து ஏதோ இவள்  வீட்டு சுவற்றில்  கிறுக்கியதைப்  பற்றி  எழுதி  இம்சை செய்வாள் என்று  நினைத்து விட வேண்டாம்.

இது  கொஞ்சம் சீரியஸ்  .
யார் சீரியஸா..........அதானே  வேணாம்கிறது .      சீரியசான  பதிவு என்று சொல்ல வருகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.

 " இங்கே பார், , சரவணபவன் ஹோட்டல் . ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றாள்தோழி.

எனக்கும் ஒரே பசி. தோழியின்  மகளுடைய  திருமணத்திற்கு  ஷாப்பிங்  செய்து கொண்டிருந்தோம்(இரண்டு மாதங்களுக்கு முன்பாக). இந்த சென்னை வெயிலில்  அலைவது கொஞ்சம் .......இல்லை..........இல்லை   ......நிறையவே ,கஷ்டமாயிருந்தது.
சரி... சரவண பவன்  ஏ.சி. ரூமிலாவது அடக்கலாமாவோம் என்று தோழியைத் தொடர்ந்தேன். இந்த ஜன சமுத்திரத்தில்  ஒருவழியாக நீந்தி  சரவண பவனை அடைந்தோம்.  வெளியே வாயிலை அடைத்துக் கொண்டு ஒரு கூட்டம் நின்றிருக்க  , ஒரு வயதான  பிச்சைக் காரர்   அவர்களையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதாவது சாப்பிடத் தர மாட்டார்களா என்று தான்.
ஆனால் யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை .

நானும் என் தோழியும்  கூட  , அந்தப் பிச்சைக் காரரை  அலட்சியம் செய்தபடி உள்ளே சென்று அமர்ந்தோம்.
எதிர் டேபிளில்  இருந்தவர்களிடம் ஆர்டர் பெற்றுக் கொண்டு எங்களிடம் வந்தார்  பேரர்.

ஆளுக்கு ஒரு ரவா தோசை சாப்பிட்டு விட்டு ஏதோ  நினைவில்  3 காபி என்றேன் சர்வரிடம்.
 இல்லை.. இல்லை...
இரண்டு போதும் என்று திருத்தினேன்.

அப்பொழுது தான்  இணையத்தில் உலா வந்து கொண்டிருந்த  " cup of coffee for the wall" நினைவிற்கு வந்தது.

அதைப் பற்றியே நினைத்துக்  கொண்டிருக்க  என் தோழி "ராஜி, என்ன ஒரே பலத்த யோசனை ! காபியைக் குடி " என்று என்னை திசை திருப்பினாள்.

" ஒன்றுமில்லை,  இன்று காலையில்  முக நூலில்  யாரிடமிருந்தோ  வ்ந்திருந்தக்  கதை  பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். '

" கதையா?  சொல்லேன் கேட்கிறேன் " என்று  ஆர்வமாக  சொல்லிக் கொண்டே காபியை டம்ளரிலிருந்து   டபராவிற்கு ஆற்றினாள்.

சரி சொல்கிறேன் கேள்

யாரோ ஒரு முகம் தெரியாத நண்பர்  "வெனிஸ்" நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலிற்கு   காபி சாப்பிட சென்றிருக்கிறார்.

"யார் அவர்  ? இத்தாலியில் தானே வெனிஸ் இருக்கிறது? அங்கே  காபியெல்லாம் கிடைக்குமா?   ஃபில்டர் காபியா?"
என்று கேள்விக்  கணையாகத்  தொடுத்தாள்.

" இதோ பார், பேசாமல் கேட்பதானால் சொல்கிறேன் "என்று சொல்ல உதட்டை சுழித்து  " சரி, சரி, நான் வாயையே திறக்க வில்லை  என்றாள் பவ்யமாக .

" சரி எங்கே விட்டேன்? இது நான்.

"வெனிசில் ஒரு ஹோட்டலில் நண்பரை விட்டிருக்கிறாய் " என்றாள்  பயந்தது போல் நடித்துக் கொண்டே.

ஆமாம்...... வெனிஸீல்  ஹோட்டலில் காபி குடிக்க உட்கார்ந்த நண்பர்  எதிர் டேபிளில்  பேரர்  ஆர்டர் எடுக்கக் கண்டார். 

இரண்டு காபி  என்றார் அந்த டேபிளில்  அமர்ந்திருந்தவர். "ஒன்று சுவருக்கு "
முடித்தார்.

இது என்ன ! . ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கும் போதே 
இன்னொரு டேபிளில் அமர்ந்திருந்த இருவர்   " 3 காபி  ஒன்று சுவரில்  "என்று குரல்  கொடுத்தனர்.

இந்த பேரர் என்ன தான் செய்கிறார் பார்க்கலாம்  என்று நண்பர் பார்க்கத் தொடங்கும் போதே பேரர்  காபியை டேபிளில் வைத்து விட்டு  ஒரு சின்ன ஸ்டிக்கர் பேப்பரில்  ஒரு காபி என்றெழுதி  எதிர் சுவற்றில் ஒட்டி வைத்து விட்டுப் போய் விட்டார்.

இதே போல்  நிறை ஸ்டிக்கர் இருப்பதை கவனிக்கிறார் நண்பர். இது எதற்கு வேண்டாத வேலை.  இரண்டு காபிக்கு பணம் செலுத்தி விட்டு ஒரு காபி தான் குடிக்கிறார்கள். என்ன பழக்கமோ இது என்று யோசிக்கும் போதே...

இந்த ஹோட்டல்  சூழ்நிலைக்கு சற்றும்  பொருந்தாத  வகையில்  ஏழ்மையான தோற்றத்தில் ஒரு நபர் வந்து அமர்கிறார்.

இப்பொழுது இன்னும் வியப்படையும் விஷயம் நடந்தது.

வந்த நபரிடம்  பேரர் ஆர்டர்  கேட்கிறார்  .

" ஒரு காபி சுவற்றிலிருந்து  " என்று ஆர்டர் வருகிறது..

பேரர்  எல்லோரிடமும் எப்படி  மரியாதையுடன் நடந்து கொள்கிறாரோ அதே மரியாதையுடன் தான்  இவரிடமும் நடந்து கொள்கிறார்.

காபி  குடித்து முடித்ததும்  பணம் எதுவும் கொடுக்காமல் சென்று விடுகிறார் அந்த நபர்.

பேரர்  சுவற்றில்  ஒட்டியிருந்த ஸ்டிக்கரை  பணத்திற்கு பதிலாக எடுத்துக் கொள்கிறார்.

இது தான்  "சுவருக்கு  காபி " விஷயம் புரிந்தது நண்பருக்கு.

ஆச்சர்யத்தில் உறைந்தே விடுகிறார் நம் நண்பர்.

யாரை  புகழ்வது என்று புரியவில்லை அவருக்கு.

சுவற்றில் காபி விஷயத்தை அறிமுகப்படுத்தி, தன்னம்பிக்கையை  விதைக்க முயலும்   சமூகத்தையா?,
பரோபகார சிந்தனையோடேயே  அங்கு சாப்பிட வருபவர்களையா?
அதை சிரமேற்கொள்ளும் ஹோட்டல்  நிர்வாகத்தியா?,
சரிவர நிறைவேற்றும்  பேரரையா?

இல்லை இது எல்லாவற்றையும் பிரதிபலித்துக் கொண்டு அமைதியாய்  நின்று கொண்டிருக்கும்   சுவர்  புகழ்ச்சிக்குரியதா ?

 புரியாதது  நண்பருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்" என்று கதை முடித்தேன்..

" இப்ப நீ காபியைக் குடி ஆறிவிட்டது " என்று தோழிக்கு நினவு படுத்தியதும் புரிந்தது   என் தோழிக்கும்  இந்தக் கதை பாதிப்பைக் கொடுத்தது என்பதை.

சாப்பிட்டதற்கான  பில் பணத்தைக்  கொடுத்து விட்டு வெளியே வந்தோம்.

அதே பிச்சைக் காரர்,  அதே இடத்தில்.... நம்மால் முடிந்தது அவருக்கு  ஒரு சில நாணயங்களை  கொடுப்பது தான் என்று நினைத்துக் கொண்டே  கொடுத்து விட்டு சென்றோம்.

வாழ்வில் தோற்றவர்களும்  தன்மானத்தை  இழக்காமல் இருக்க  உதவிய வெனிஸ்  நகர மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அல்லவா !

" ஏற்பது இகழ்ச்சி!   ஐயமிட்டு உண்! "

என்ற ஆத்திச்சூடியின் வரிகள்  மனதில் ஓட , ஷாப்பிங்கைத் தொடர்ந்தோம்.






image courtesy---google.

40 comments:

  1. வாழ்வில் தோற்றவர்களும் தன்மானத்தை இழக்காமல் இருக்க உதவிய வெனிஸ் நகர மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அல்லவா !

    சரியான சமயத்தில் நினைவுக்கு வந்த
    அருமையான கதை ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி முதலாய் வந்து கருத்து பகிர்ந்தமைக்கும், வருகைக்கும்.

      Delete
  2. வெளியில் நின்றிருந்த பிச்சைக்காரருக்காக ஒரு காபி வாங்கி கொண்டு போய் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    பரவாயில்லை. அடுத்த தடவை சரவணா பவனில் நீங்கள் ஒரு ஸ்பெசல் நெய் ரோஸ்ட் சாப்பிடும்போது வாசலில் நான் நின்று கொண்டு இருப்பேன்.

    எனக்கு ஒரு நெய் ஸ்பெசல் ரோஸ்ட் வாங்கி கொண்டுவந்து
    எனக்கு தாருங்கள்.

    தாங்க் யூ வெரி மச்.

    என்பேன் நான்.( சாரி, எப்போ வருவீர்கள், எந்த சரவணா அப்படிங்கறதை அடுத்த பதிவிலோ எனக்கு இ மெயிலிலோ சொல்லவும்)
    . சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்பு ஐயா, உங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும்.

      இதோ இப்பவே சரவண பவனில் நெய் ரோஸ்ட் ஆர்டர் கொடுத்து விடுகிறேன்.

      மாஸ்டர்..........சுப்பு தாத்தாவுக்கு ஒரு ஸ்பெஷா......ல் .........நெய் ரோ...........ஸ்.........ட்.

      அப்பாடி....... ஆர்டர் சத்தம் கேட்கிறது இல்லையா?

      Delete
  3. /யாரை புகழ்வது என்று புரியவில்லை அவருக்கு.

    சுவற்றில் காபி விஷயத்தை அறிமுகப்படுத்தி, தன்னம்பிக்கையை விதைக்க முயலும் சமூகத்தையா?,
    பரோபகார சிந்தனையோடேயே அங்கு சாப்பிட வருபவர்களையா?
    அதை சிரமேற்கொள்ளும் ஹோட்டல் நிர்வாகத்தியா?,
    சரிவர நிறைவேற்றும் பேரரையா?////

    முதலில் சர்வரையும் ஹோட்டல் நிர்வாகத்தினரையும் தான் பாராட்ட வேண்டும் உதவி செய்ய பல மனங்கள் எப்போதும் தயாராக இருந்தாலும் அதை ஒரு நல்வழிப்படுத்தி யாரையும் ஏமாற்றாமல் செய்யும் சேவையை ஹோட்டல் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது

    மிக நல்ல கதையை பகிர்ந்தளித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்

    அப்புறம் சுப்பு தாத்தாவுக்கு நெய் ரோஸ்ட் ஆர்டர் பண்ணும் போது எனக்கு ஒரு ஆனியன் ராவா தோசை ஆர்டர் பண்ணிவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கதையில் எனக்கும் சர்வர் மேல் தான் மிகுந்த மரியாதை ஏற்பட்டது.சரிவர நடத்திச் செல்கிறாரே!அதற்காகத்தான்.

      உங்களுக்கும் சரவன் பவனில் ஆர்டர் கொடுத்து விடுகிறேன்.

      மாஸ்டர்...............MTGக்கு ஒரு ஆனியே.......ன் ரவா.........தோ.......சை .
      நன்றாக இருந்ததா என்று சொல்லுங்கள்.(உங்களுக்கு மட்டும் தான் கேட்டிருக்கிறீர்கள். பூரிக் கட்டை உரிமையாளரை மறந்து விட்டீர்களே!அவர்களிடம் சொல்லட்டுமா?)

      Delete
  4. //அடுத்த தடவை பதிவிடும் போது தலைப்பு இடும் போது மக்களை கவரும் வகையில் இடுங்கள் காரணம் நீங்கள் நல்ல விஷயங்களையும் சொல்வதோடு அழகாகவும் எழுதுகிறீர்கள் அது பல மக்களை சென்று அடைய அது மிக அவசியம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆலோசனையை மனதில் கொண்டு அடுத்த பதிவிற்கு பெயர் சூட்டி விடுகிறேன்.

      உங்களுடை ஆத்மார்த்தமான அக்கறை உங்கள் கருத்தில் வெளிப்படுகிறது.
      நன்றி .

      Delete
  5. மனதைத் தொட்ட பகிர்வு! :)

    சரவணபவன் வாசலில் நின்றவருக்கு ஏதாவது பார்சல் உணவு வாங்கித்தந்திருப்பீர்கள் என நினைத்த்தேன். சட்டென அந்நேரத்தில் இப்படிச் செய்வோம் என்பதெல்லாம் ஸ்ட்ரைக் ஆகியிருக்காது. முடிந்த உதவியைச் செய்திருக்கீங்க, பாராட்டுக்கள் ராஜி மேடம்!

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுதெல்லாம் யாருக்காவது சாப்பிட கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கம். ஒரு சமயம் மாட்டிக் கொண்டேன். அது ஒரு தொட்ட (பெரிய) கதை. விரிவாக எழுதுகிறேன். அதனால் பணத்தைக் கொடுத்து போய் சாப்பிட சொல்லி விடுகிறேன்.
      நன்றி மஹி, உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  6. மிகவும் வியக்க வைத்த, சிந்திக்க வைத்த யோசனை 'சுவரில் ஒரு காபி'!
    நம்மூரில் கூட இப்படிச் செய்யலாம். ஆனால் அதில் எத்தனை ஊழல் வருமோ? எத்தனை ஏமாற்றுவார்களோ?

    நல்ல கதையை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரஞ்சனி நீங்கள் சொல்வது போல் நம் ஊரில் அங்கும் ஊழல் ஆரம்பித்து விடும் அபாயம் உள்ளது.

      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  7. நல்ல கதை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete

  8. நானே இதுபற்றி முன்பு எழுதியதாக நினைவு, தொலைக்காட்சியில் திரு. இறையன்பு அவர்களும் இது பற்றிக் கூறியிருக்கிறார். சில தன்னார்வ நிறுவனங்கள் முயற்சி எடுத்து இம்மாதிரி நம் உணவிடங்களிலும் துவங்கலாம்.நல்ல முன்னுதாரணமாய் இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. GMB சார்,
      இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் கதை தான் . பல பேருக்குத் தெரிந்தது தான். ஆனாலும் பகிர்ந்து கொள்ள தோன்றியது . நம் உணவிடங்களிலும் ஊழல் இல்லாமல் நடத்திக் கொண்டு சென்றால் நன்றாகவேயிருக்கும்.
      நன்றி சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  9. அருமையான பகிர்வு. சிந்திக்க வைக்கும் சிறப்பான விஷயங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  10. ஏற்கெனவே கேள்விப்பட்டதுதான் ஆயினும்
    நீங்கள் சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்றவிதம்
    மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது
    அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  11. உழைக்க வாய்ப்புக் கிட்டியவன் உழைக்க வாய்ப்புக் கிட்டாதவனின் குறைந்தபட்ச தேவைகளையாவது நிறைவேற்றும் சமூகத்தின் கழிவிரக்கம் தான், மக்கள் நம்பும் கடவுள், புண்ணியம் எல்லாவற்றையும் விட அற்புதமானவை.. இன்றையக் காலக் கட்டத்தில் அனைவருக்கும் வேண்டியது சிந்திக்கும் அறிவும், கழிவிரக்க மனோபான்மையும் தான். பசித்தவன் வயிற்றுக்கு உணவிடுவதை விட மிகச் சிறந்த அறம் எதுவுமில்லை, அதிலும் இரப்பவர் தன்மானம் கெடுக்காது கொடுக்கும் மனோபாவமே புதிய உலகுக்கி வேண்டியது. நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. //அதிலும் இரப்பவர் தன்மானம் கெடுக்காது கொடுக்கும் மனோபாவமே புதிய உலகுக்கி வேண்டியது.//
      எத்தனை சத்தியமான வார்த்தைகள்! வாழ்வில் ஏற்கனவே தோற்றவர்களிடம் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்தாலே போதும் இல்லையா.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  12. எழுதிய விதமும் நடையும் அருமை. கதையின் நிறைவில் மனம் நெகிழ்ந்தது.
    பசித்த வயிற்றில் உணவு தெய்வம் என்பார்களே!.. இனிமேல் காபி குடிக்கும் போதெல்லாம் இனி இந்தக் கதையும் நினைவுக்கு வரும்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

      Delete
  13. வாழ்வில் தோற்றவர்களும் தன்மானத்தை இழக்காமல் இருக்க உதவிய வெனிஸ் நகர மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அல்லவா !//

    அருமையானகதை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கோமதி! என்ன ஜெட் லேகிங் தீர்ந்ததா? வலைப் பக்கம் வந்து பாராட்டியதற்கு நன்றி .

      Delete
  14. அட, இப்படி கூட உதவலாமோ!

    ReplyDelete
    Replies
    1. உதவ மனம் இருந்தால் வழிகள் தான் எத்தனை எத்தனை! இதுவம் ஒரு வழியே!
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. மீண்டும் மீண்டும் வருக!

      Delete
  15. இந்த காபி விஷயம் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அதை உங்கள் அனுபவத்துடன் சேர்த்து சொல்லியிருப்பது நன்று.....

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ஜி ஆமாம் ஆங்கிலத்திளிருந்ததைத் தான் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.
      நன்றி பாராட்டிற்கு.

      Delete
  16. Very touching write.The story underscores that the world is full of Good Samaritans.

    ReplyDelete
    Replies
    1. yes. It is indeed a very touching story. thankyou for your appreciation sir.

      Delete
  17. நல்லதொரு பகிர்வு. நம் ஊரில் இப்படி இருந்தால் சுவரில் பில்லே இருக்காது. சர்வர்களால் பணமாக்கப் பட்டிருக்கும். அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும். இதற்காகவே ஒரு கூட்டம் .காத்திருக்கும்..... எவ்வளவு சாத்தியக்கூறுகள்?!! :))))

    ReplyDelete
    Replies
    1. இதைப் போலவே நானும் நினைத்தேன் . நம் ஊரில் எல்லாம் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விகுறி தான் ஸ்ரீ ராம் சார்.

      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும்.

      Delete
  18. கதை! கதையாம்! காரணமாம்! காரணத்தில் ஒரு தோரணமாம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, உங்கள் வருகைக்கும்,கருத்துப் பரிமாற்றத்திற்கும்.

      Delete
  19. அடுத்த முறை நீங்கள் வெனிஸ் நகரம் போகும் போது நானும் வரலாமென்றிருக்கிறேன். ஒரு பொங்கல், வடை, காப்பி போதும். அதிகம் செலவு வைக்கமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே சார் வெனிஸ் நகரம் போகிறேன். பக்கத்திலிருக்கும் ஹோடலிற்கு செல்வதற்கு டாக்டரிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது.

      ஆனால் கண்டிப்பாக வெனிஸ் போனால் உங்களுக்கும் ஆர்டர் செய்து விடுகிறேன்.

      நன்றி செல்லப்பா சார் சகோதர உரிமையுடன் கருத்திட்டமைக்கு.

      Delete
  20. "அதே பிச்சைக் காரர், அதே இடத்தில்.... நம்மால் முடிந்தது அவருக்கு" ___ இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி, 'ஒருகப் காஃபியா?' அல்லது 'டிஃபனா?', என்று நினைத்தேன்.

    மனதில் பதிந்த கதைகளுள் இதுவும் ஒன்று. மகள் மூலமாக இந்தக் கதை அறிமுகமானது. ஆனாலும் நீங்கள் நகைச்சுவையாக சொல்லிச் சென்றது ஈர்த்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் என்னை மிகவும் பாதித்த கதை அதனால் தான் பகிர்ந்தேன்.

      நீங்கள் சொல்வது போல் சாப்பிட யாரிடமும் எதையும் கொடுத்து விட முடிவதில்லை. காரணம் பயம் தான் இப்ப .அதனால் தான் பணத்தைக் கொடுத்து சாப்பிட சொல்லும் வழக்கம்.
      நம் பரோபகார சிந்தனையை எப்படியெல்லாம் திசை மாற்றி கொடுக்க வேண்டிய்ருக்கு பாருங்கள் சித்ரா.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சித்ரா.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்