Sunday 17 February 2013

துறு துறு சிட்டு


"  ஏய் ,  சிட்டு   பேசாம உட்கார் "  என்ற    மிரட்டும்  பெண்     குரல்
 என்னைத்     திரும்பிப்    பார்க்க  வைத்தது.

நாங்கள்  இருந்தது    ஒரு   ஹோட்டலின்     ஏசி   ரூமில்.  

 சுமார்    முப்பது   வயதுடைய   ஒரு     பெண்      தன்   பெண் குழந்தையை (சுமார்    இரண்டரை   வயது)   மிரட்டிக்      கொண்டிருந்தாள்.   தோசையை     ஆர்டர்  செய்து  விட்டு   காத்திருந்த     போது   தான்    இதைக்   கேட்டேன்.

அந்தப்   பெண்  குழந்தையோ   திராட்சைக்    கண்களால்   அம்மாவை    ஒரு   பார்வைப்     பார்த்துக்    கொண்டே     டேபிளின்    மேல்   இருந்த   ஐஸ்  வாட்டர்
கிளாசை    தன்   பக்கம்   மெதுவாக   இழுத்தது. தண்ணீர்    மேலும்  கீழும்   சிந்தியது. சிட்டுவின்    அப்பாவோ    "வேண்டாண்டா   சிட்டு   "   என்று   தண்ணீர்   கிளாசைத்  திரும்பவும்    இருந்த  இடத்திலேயே   வைத்தார்.

ஒரு  இரண்டு  நிமிடம்  ஆகியிருக்கும்.  மிக  அழகான   ரோஸ்  நிற  கவுனில் இருந்த  அந்த  கொழுக்   மொழுக்    சிட்டு   எங்களையெல்லாம்    கண்களால்   ஒருமுறை   அளந்தது.    பிறகு   திரும்பவும்    தன்   அம்மா   அப்பாவை  ஒரு  முறைப்   பார்த்துக்   கொண்டே   ஐஸ்   வாட்டர்  கிளாசைத்  திரும்பவும்     இழுத்தது.திரும்பவும்  கிளாஸ் அதன்   இடத்திற்கே    கொண்டு  செல்லப்பட்டது.  இந்த  முறை  அவள்  அம்மாவால் .   இந்த  விளையாட்டு  கொஞ்ச   நேரம்  போய்  கொண்டிருந்தது.

கொஞ்ச    நேரத்தில்    சிட்டு   குடும்பம்   ஆர்டர்  செய்திருந்ததை    சர்வர்    கொண்டு  வந்து  வைக்க   நம்  கதாநாயகி  ,  அதாங்க   'சிட்டு'   விற்கு    ஒரே   குஷியாகி   விட்டது.    தண்ணீர்  கிளாசை  விட்டு  விட்டு   " எனக்கு   ஓசை "  என்று   மழலை  குரலில்    கேட்க   சிட்டுவின்  அம்மா   தோசையைப்   பிட்டு   ஊட்ட   ஆரம்பித்தார்.  " எனக்கே    வச்சு  "   என்று  பெரிதாக  அழ   ஆரம்பித்தாள்   சிட்டு.

பெற்றோர்  இருவரும்   ஏதோ      திருட்டுத்  தனம்   செய்வது  போல்  அந்த  ஹாலையே    ஒரு   முறை  அப்படி  இப்படி     சுற்றிப்     பார்த்து     விட்டு  '  சரி  சரி   '     என்று     சொல்லிக்     கொண்டே     தோசைத்    தட்டை   அவள்    பக்கம்    நகர்த்தினர்.

அழுகை  அப்படியே    ஸ்விட்ச்    போட்டாற்    போல்  நின்றது. 
தன்     குட்டிக்    கைகளால்    பன்   கன்னத்தைத்  துடைத்து விட்டுக்   கொண்டே    தோசைத்    தட்டை     தன்     பக்கம்    இன்னும்  கிட்டே  இழுத்துக் 
கொண்டாள்.   பாவம்     குழந்தைக்கு     சாப்பிட   வேண்டும்   போலிருக்கிறது
என்று  நினைத்தால்  தோசையைப்  பிட்டு,   பிட்டு   கீழே   போட்டுக்  கொண்டிருந்தாள்.
அவள்  அப்பாவோ   '  உஸ்................அப்பா............என்று  பெரிய  பெருமூச்சு  விட்டுக்    கொண்டார்.

கொஞ்ச  நேரத்தில்   சிட்டுவுக்கு   என்ன  தோன்றியதோ   "  நீயே    சாப்பு  "  என்று     தோசையை  அப்பா  பக்கம்    தள்ளினாள்.

ஹப்பா  ! அவர்களை  சாப்பிட விட்டாளே   என்று  நினைத்தால்   சர்வர்  யாருக்கோ   எடுத்துக் கொண்டு  போகும் சோலா  பூரி   அவள்    கண்ணில்    பட்டு  விட்டது   போலும்.   

எனக்கு   அது   தான்  வேணும்    என்று   மெதுவாக   சுருதி   கூட்ட    ஆரம்பித்தாள்.   சரி  உனக்கும்  வாங்கி  தருகிறேன்  .  அதுவரை  இதை  சாப்பிடு
என்று  அவள்   அம்மா   பையிலிருந்து     ஒரு  cadbury  எடுத்துக்   கொடுத்ததும்  
கொஞ்சம்    அடங்கினாள்.

இதற்குள்    நாங்கள்      ஆர்டர்   செய்த    தோசையும்  வந்தது.  நாங்கள்  எங்கள் வேலையை      ஆரம்பித்தோம்.   மெதுவாக    தோசையை  சாம்பாரில்   நனைத்து   உள்ளேத்   தள்ளிக்   கொண்டிருந்தோம்.

திடீரென்று  "  சிட்டு    சிட்டு ,      வந்துடு "  என்று    அவள்   அம்மாவும்   ,  அப்பாவும்    கீழே     பார்த்துக்   கெஞ்சிக்   கொண்டிருந்தார்கள்.  "  சித்ரா  , வரப் போகிறாயா   இல்லையா"  என்று  அவள்  அம்மா   கத்த,  இன்னும்  சிறிது நேரத்தில்   அவள்  அம்மாவே  அழுது விடுவாளோ    என்று  பயமாய்  இருந்தது.

" ஊஹும்  .............முதியாது   " .  என்று   அடாவடியாக   சொல்லியது   அந்தக்  குட்டி  சிட்டு.  இந்தக்    குழந்தை    எப்படி    கீழே    போனாள்  என்று    நாங்கள்  யோசித்துக்   கொண்டிருக்கையில் ,  பார்த்த       சர்வரும்  இந்தக்   கேள்வியைக்  கேட்டார்.

அவள்  அம்மா " அவள்   எதை  வேணுமானாலும்    செய்வாள். "  என்று  அலுத்துக்  கொண்டார்.
எத்தனைக்   கூப்பிட்டும்      வரும்   வழியாய்  தெரியவில்லை.   அப்படி  என்ன   தான்   செய்கிறாள்   என்று   குனிந்து  பார்த்தால்   தான்  கீழே     போட்ட   தோசையை  இப்பொழுது   தின்றுக்    கொண்டிருந்தாள்.
வேறு  வழியின்றி   அவள்   அப்பாவே  கொஞ்சமாய்    குனிந்து    தூக்கிக்   கொண்டார்.

அதற்குப்   பிறகு    அவர்கள்    அவசர     அவசரமாய்     பில்லை  செட்டில்  
செய்தார்கள் .  அதற்குள்  ஒரு  முறை    தண்ணீர்     எல்லாம்    கொட்டி  அவள்   அப்பா பேண்டை   நனைத்து  விட்டாள்.  பாவமாய்  இருந்தது,  அந்தப் 
பெற்றோரைப்     பார்க்க.ஒருவர்  முகத்தை  ஒருவர்  பார்த்துக்  கொண்டே  என்னமோ   அவர்களுக்குள்    பேசிக்கொண்டே   சென்றார்கள்.

என்    டேபிளைத்     தாண்டிப்    போகையில்     நான்   அவளைப்    பார்த்து    கையை     ஆட்டினேன்.    பதிலுக்கு     எனக்கு     "  ஹாய்  "  வேறு.

இத்தனை     ஆர்பாட்டம்   செய்தும்    எனக்கு    அவளை  விட்டு  கண்களை  எடுக்க  முடியவில்லை.

இவள்    கொடுத்த    அன்புத்   தொல்லையை     அவள்   பெற்றோர்    மறக்க  முடியுமா?
என்னாலேயே    மறக்க  முடியவில்லை.

அந்த     ஏசி    ஹாலையே     கலகலப்பாக்கியிருந்தாள்.   இல்லையென்றால் , எல்லோருமே  அவரவர்     சிந்தனையில்       ஆழ்ந்திருப்போம்.

சிட்டுவால்    கொஞ்ச  நேரம்    எங்களை  மறந்திருந்தோம்.

இந்தக்  குழந்தைகள்     சுகமான    சுமைகளே.
சுமப்பதும்       இன்பமே!

image  courtesy   ---google.

RAMA STORY    படித்து  கருத்திட   இங்கே  க்ளிக்   செய்யவும்.

24 comments:

  1. இந்தக் குழந்தைகள் சுகமான சுமைகளே.
    சுமப்பதும் இன்பமே!

    ரசனையான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் இராஜராஜேஸ்வரி

      Delete
  2. //என் டேபிளைத் தாண்டிப் போகையில் நான் அவளைப் பார்த்து கையை ஆட்டினேன். பதிலுக்கு எனக்கு " ஹாய் " வேறு.//

    குழந்தைகளைக்காண்பதும் அவர்கள் சேட்டைகளை ரஸிப்பதும் மிகவும் இன்பம் தான்.

    //இத்தனை ஆர்பாட்டம் செய்தும் எனக்கு அவளை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.//

    நீங்காத நினைவலைகள் தான்.

    //இவள் கொடுத்த அன்புத் தொல்லையை அவள் பெற்றோர் மறக்க முடியுமா?
    என்னாலேயே மறக்க முடியவில்லை.//

    அது எப்படி அவர்களால் மறக்க முடியும்.? அந்தக்குழந்தையின்அன்புத்தொல்லை அவ்ர்களுக்கு அன்றாடத் தொடர்கதையல்லவோ!

    //அந்த ஏசி ஹாலையே கலகலப்பாக்கியிருந்தாள். இல்லையென்றால் , எல்லோருமே அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருப்போம்.

    சிட்டுவால் கொஞ்ச நேரம் எங்களை மறந்திருந்தோம்//

    நல்ல சுவையான அனுபவப்பகிர்வு..

    //இந்தக் குழந்தைகள் சுகமான சுமைகளே., சுமப்பதும் இன்பமே!//

    ஆம் பெரும்பாலான பெற்றோருக்கு அவை சுகமான சுமைகளே, சுமப்பதும் இன்பமே.


    ReplyDelete
    Replies
    1. ஆமாம் குழந்தைகள் சேட்டைகளை ரசிப்பது பேரானந்தம் தான்.
      எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

      நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வைகோ சார்.

      Delete
  3. ///குழந்தைகள் சுகமான சுமைகளே/// மிக மிக உண்மைதான் அவர்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு அர்த்தமில்லாமல் போய்விடும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி MTG உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  4. மழலைமொழி மாறாமல் சொல்லிய விதம் அருமை.எல்லோருக்குமே பிடிக்குமே

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  5. சிட்டுவை நாங்களும் ரசிக்க வைத்துவிட்டீர்கள்.
    குழந்தைகள் உலகம் தனி உலகம்.

    // எதை வேணுமானாலும் செய்வாள். " என்று அலுத்துக் கொண்டார்.//

    அவள் அம்மா அலுத்துக் கொள்வது போல் குழந்தைகள் எந்தநிமிடம் என்ன செய்வார்கள் என்று தெரியாது அவர்களை கவனமாய் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் சுகமான சுமைகளே.
    சுமப்பதும் இன்பமே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி.
      அவர்கள் உலகம் தனியே தான். அங்கு நமக்கெல்லாம் இடமில்லை.
      அவர்களை சுமப்பதைப் போல் பெரிபம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

      Delete
  6. மழலை மழை நனைந்தது சுகமாய் இருந்தது

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  7. உண்மைதான் குழந்தைகள்தான் வெறுமையை போக்குகிறார்கள். என் (ஒரே)சின்னப்பெண் எப்பவும் தொல்லை(அன்பு) செய்து கொண்டிருப்பாள். போன மாதம் அவளுக்கு பத்து நாட்கள் தொடர்ந்து fever வந்து சோர்வானப்ப.. நான் ரொம்ப கலங்கி போய்விட்டேன். அவதான் எங்க வாழ்க்கையின் அர்த்தமே.கடவுளே இந்த குழந்தைய கஷ்டப்படுத்தறதை விட இந்த ஜூரத்தை எனக்கு கொடுத்துடுன்னு கலங்கிட்டேன்.பத்து நாளா தூக்கம்,பசி மறந்து அவளை கவனித்து அவ நார்மலாகி ஸ்கூல் போக ஆரம்பிச்ச உடன் தான் நான் நானாகினேன். எவ்வளவுதான் பணம், காசு இருந்தாலும் குழந்தைதான் நமக்கு பெரிய சொத்து..சந்தோஷம் எல்லாமே.!

    ReplyDelete
    Replies
    1. ஆமாமாம் . குழந்தைக்கு உடல் நலமில்லை என்றால் தாயும் தந்தையும் ஆடிப் போய் விடுவோம். நிமிடத்திற்கு நிமிடம் நெற்றியில் கை வைத்துப் பார்த்து பார்த்து கலங்குவோம்.
      உங்கள் பெண் நலமாய், பள்ளி சென்று வருவது மகிழ்ச்சி.

      நன்றி உஷா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete

  8. முதலில் ஒரு ரசனையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். குழந்தைகள் சுகமான சுமைகள் என்று கூறுவது தாத்தா பாட்டிகளுக்கு எளிது. என் பேரக் குழந்தைகளின் ஆட்டங்கள் நடவடிக்கைகள் எல்லாம் என் பிள்ளைகள் செய்தபோது ரசித்ததைவிட இப்போது ரசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் பிள்ளைகள் ஆனந்தம் என்றால் பேரக்குழந்தைகள் பேரானந்தம்.

      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      Delete
  9. திரு ஜி.எம்.பி. கூறியதுபோல தாத்தா பாட்டிகளுக்கு குழந்தையின் குறும்புகள் பரவசமூட்டும். ஆனால் வெளியிடத்தில் மானத்தை வாங்கும் குழந்தைகளை சமாளிப்பது பெரிய பாடுதான்!
    'சிட்டு'வின் பெற்றோர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வெளிடத்தில் மானத்தை வாங்குவது போல் தான் நடக்கும்.
      பெற்றோரைத் தவிர எல்லோருமே அந்தக் குழந்தையை ரசிப்பார்கள்.
      பெறோர்கள் தான் பாவம்.
      நன்றி உங்கள் கருத்துக்கு.

      இன்னுமொரு நன்றி ஸ்ரீராம் அவர்களின் தளத்தில் என் ஆகாஷவாணி லிங்க் கொடுத்ததற்கு.
      I feel honoured.
      நன்றி

      Delete
    2. நல்ல விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது எனக்குப் பிடித்த ஒன்று ராஜி. அதைத்தான் செய்தேன்.

      Delete
    3. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
      எல்லோருக்கும் இந்த மாதிரி, ஒரு சக பதிவரை ,(அதுவும் ஒரு புது பதிவாளர்) கௌரவிக்கத் தோன்றாது.

      நன்றி

      Delete
  10. குழந்தைகளைப் பற்றி எவ்வளவு சொன்னாலும்
    படித்துக்கொண்டே இருக்கலாம்.
    சுகமான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

      Delete
  11. சிட்டு புராணம் அருமை. இது ஓரளவு பொறுத்துக் கொள்ளக் கூடிய - மற்றவர்களை பாதிக்காத விஷமம். எங்கள் வீட்டுக்கு 'லச்சு' (லக்ஷ்மி நாராயணன்) என்று ஒரு அழகிய சிறுவன் வருவான். நம் வீட்டுக்கு வந்திருக்கிறானே, திட்டக் கூடாது என்று பார்த்தாலும் அவன் செய்யும் விஷமங்கள் அவன் அம்மாவும் அதிகம் அலட்டிக் வேடிக்கை பார்ப்பதுக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். எதைப் பார்த்தாலும் எடுத்து 'எனக்கு வேணும்' என்று வைத்துக் கொண்டு விடுவது, ஃபிரிஜ்ஜைத் திறந்து சாப்பிட என்ன இருக்கிறதோ அதை 'எல்லாம்' எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுவது, கண்ணாடி டம்ளரை வேண்டுமென்றே கீழே போடுவது... அப்பப்பா... அவன் கிளம்பினால் போதும் என்று ஆகி விடும்!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய சிட்டு போலவே உங்கள் லச்சுவும் சுவாரஸ்யம் தான்.
      லச்சுவின் குறும்புகளை எழுதுங்களேன் .லச்சுவை பார்க்க முடியாவிட்டாலும் படித்து ரசிக்கலாம்.

      நன்றி உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்